வெயில் மெல்லத் தாழும்
அம்மாவோடு அவள் படியிறங்கினாள். நோயை நினைவுபடுத்தும் டெட்டால் நெடியிருந்து தப்பித்தாயிற்று. வெளிக் காற்றை சுவாசித்ததுமே, விடுதலையாகிவிட்டது போன்ற உணர்வு. என்ன காரணமோ, அவளுக்கு ஆஸ்பத்திரியின் மருந்தும் டெட்டாலும் கலந்த அந்த நெடி உறுத்தும், மெலிதாக இருந்தாலும் மூச்சு முட்டுவது போல.

காய்ச்சல் உடம்புக்கு உறைத்த வெயில் இதமாயிருந்தது. எதிரில் எவற்றையும் உற்றுப் பார்க்க முடியவில்லை. கூசியது. மீறிப் பார்த்தாலோ, கண்ணில் நீர் நிறைந்தது.
தூரம் பார்க்காமல் ப்ரைவேட் ஆஸ்பத்திரிக்கே போயிருக்கலாம். வேலந்தாவளம் ஒன்றும் அத்தனை தூரமாகவும் இல்லை. பஸ்ஸில்தானே! சீக்கிரம் போய் வந்திருக்கலாம்.
இங்கே நர்ஸ் போட்ட ஊசி, முனை மழுங்கியது போல. குத்திய இடத்தில் அப்படி ஒரு தாங்க மாட்டாத வேதனை.
சுனிதா பஃப்லுவை நினைத்துக்கொண்டாள். குழந்தை எந்திரிச்சிருக்குமோ?
இருக்காது. வந்து அரை மணிதான் ஆயிற்று. அவன் யாரும் சத்தமிடாமல் இருந்தால் இன்னும் இரண்டு மணி நேரம் தூங்குவான். நனைக்காமலும் இருக்க வேண்டும். எழுந்திருந்தாலும் ஷீபா பார்த்துக்கொள்வாள்.
விழித்திருக்கும் நேரம் முழுவதும் பஃப்லு சித்தியிடம்தான். உறங்கும்போது தொட்டிலில் அவனது அழுகை கேட்டால், “இதோ, பஃப்லுவோட சித்தி இப்போ வந்தாச்சு. என்னோட மகனுக்கு என்ன வேணும்? எதுக்கு அழற?” என்று வந்துவிடுவாள்.
பஃப்லுவின் டேடி, வியாழக்கிழமையன்று வருவதாக எழுதியிருக்கிறார். மறுநாள் வெள்ளிக்கிழமையாதலால், வியாழனன்றே கிளம்ப வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் சனியன்றுதான் போக முடியும். அவருக்கு வேறு அதிகம் லீவ் போடவும் முடியாது.
தாமோதரனை நினைக்கும்போது அவளுக்குப் பாவம் என்று தோன்றியது. அவள் இல்லாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக ஹோட்டலில் சாப்பிட்டுக் கஷ்டப்பட்டிருப்பார். அவருக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்வதும் இல்லை. இங்கு வந்ததும் அவர் சொல்வார், “டீ, சுனிதே! கோபாலனோட கடைல காஞ்சு போன பரோட்டாவும், பிச்சா வராத ஆப்பமும் தின்னு சலிச்சுருச்சு.”
அம்மாவும் ஷீபாவும் அங்கு இல்லை என்றால் அவள் கேட்பாள்: “அல்லாம கட்டினவளப் பார்க்கணும்னு வந்ததல்ல?”
அப்போது அவர் அவளைப் பக்கத்திலிருந்து தோளோடு சேர்த்தணைத்து இறுக்குவார். “என்னோட தங்கக்கட்டி அங்க இல்லாதது மட்டும் கஷ்டம் இல்லாமலா என்ன?”
சுனிதாவுக்குக் குளிர்வது போலிருந்தது. உடன் உறைத்த வெயிலும். வேகமாக நடந்து சேர்ந்துவிடலாமென்று சொன்னாள். அம்மா இணங்கி நடந்தாள்.
காம்பௌண்ட் சுவரைக் கடந்து போகும்போது பஸ் ஸ்டாப்பில் அவனைப் போலத் தெரிந்தது. பக்கம் நெருங்கியபோது பார்த்தால் அவனேதான்!
விஜயன் பஸ் ஸ்டாப்பை அடுத்த தேநீர்க் கடையின் முன்பு முரளியோடு நின்றிருந்தான். சாயம் வெளுத்த லுங்கியும், கலைந்துபோன தலையும். பெய்ன்ட் உதிர்ந்து இரும்பு நிறம் தெரிகிற அவனது சைக்கிள் பக்கத்திலேயே ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்தது.
அவன் அவளைப் பார்த்துவிட்டான்.
உடனே அதிர்ந்தவனாய் பேச்சை சில விநாடிகள் நிறுத்தி, பிறகு தொடர்ந்தான். அவளைக் காணாதது போல இருக்க முயற்சி. சிகரெட்டை உறிஞ்சி இழுத்தான். முழங்கையை சைக்கிள் சீட்டில் ஊன்றி நின்றவன், புகையை வானத்திற்கு ஊதித் தலையை நிமிர்ந்தான்.
‘இந்தப் புகையிழுப்பை இன்னும் நிறுத்தலையா?’
அவள் துக்கித்தாள். மனசின் அறைக்குள்ளே வேதனையின் மெல்லிய இறகுகளை உடைய தும்பி வழியறியாது வந்துவிட்டது. அது சுவர்களில் முகத்தை மோதி மோதித் தன் இறக்கைகளைப் படபடக்கிறது.
“என்ன சுனிதா, சுகம்தானே?”
நெருங்கியதும் முரளி விசாரித்தான். அம்மாவும் நின்றதினால் அவளுக்கு அவனோடாவது பேச முடிந்தது.
“சுகந்தான். நீங்க எல்லாம் எப்படி இருக்கறீங்க?”
பக்கவாட்டில் நின்ற அம்மா அறியாமல் அவளது கண்கள் வேறு புறம் திரும்பியிருந்த விஜயனைக் குறித்தன. அதை முரளி கண்டுணர்ந்தது அவளுக்குத் திருப்தியாயிற்று.
“என்னத்த சொல்ல? ஒண்ணும் முன்னப் போல அல்ல சுனிதா, காலமும் வாழ்க்கையும். நடப்புக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திகிட்டாத்தான் நல்லது.”
அதை வாழ்க்கை பற்றிய ஒரு தத்துவமெனப் பேசியதாகப் புரிந்துகொண்ட அம்மாவும் ஆமோதித்தாள். அதை ஒட்டி பேசவும் முற்பட்டாள். விஜயன் புகையை ஆழமாக இழுத்துக்கொண்டிருந்தான்.
இப்போது வானத்தை நோக்கி ஊதவில்லை. அம்மாவின் பொருட்டு மரியாதையாக இருக்கும்.
“முரளி முயற்சி பண்ணினா எல்லாம் மாறும் இல்லையா? மாறணும்கறதுதான் என்னோட ஆசையும்.”
சிகரெட்டைக் கீழே எறிந்து நசுக்கிய விஜயன், இப்போது நேராக அவளுடைய முகத்தைப் பார்த்தான். பிடிப்பின் சாரமற்று அந்தக் கண்கள் உலர்ந்துபோயிருந்ததை சுனிதா கவனித்தாள். அவளுக்கு அவனிடம் சொல்ல எத்தனையோ இருந்தன.
“அப்ப, நாங்க போயிட்டு வரும் மக்களே!”
பொதுவாக அம்மா இருவரையும் நோக்கி சொன்னாள். முரளி அம்மாவைப் பார்த்து சிறு புன்னகையோடு தலையசைத்தான்.
“வரட்டுமா முரளி?”
சொல்லிவிட்டு முரளிக்குப் பிறகு விஜயனின் முகத்தைப் பார்த்தாள் சுனிதா. அது இறுகிக் கிடந்தது. அவளைப் பார்க்காமல், வளைந்து திரும்பும் அங்குள்ள ரோட்டை வெறித்துக்கொண்டே.
மீண்டும் தொடர்கிற நடை. முன் போல அவளால் நடக்க முடியவில்லை. மனதோடு உடலும் தளர்ந்துவிடுகிறது.
வெயில் இப்போது குற்ற உணர்வைப் போல அவளது தோலின் ஊடே தாண்டிக் குறுகுறுத்தது.
“ஆவு,… என்ன ஒரு உக்கிரம். சித்திரை மாசம் மாதிரி!” முண்டு உடுத்தியிருந்த அம்மா, தோளில் நீலக் கரையுடன் கிடந்த துண்டில் முகம் துடைத்துக்கொண்டாள்.
சுனிதாவின் களைத்த முகத்திலும், மேல் உதட்டின் மேல் மீசை போலவும் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. அது வெயிலினால் மட்டும்தானா என்று தீர்மானமில்லை.
வீட்டில் ஷீபா இருந்த வேலைகளையெல்லாம் கழித்துவிட்டு, மலையாள மனோரமா தொடர்கதையிலிருந்தாள்.
“குழந்தை எந்திரிச்சுதா?”
“இல்ல.” புத்தகத்திலிருந்து நிமிராமல் பதில் வந்தது.
போய்ப் பார்த்தாள். படுக்கையறையில் அவளின் படுக்கை அருகே தொட்டில் அசைவின்றி இருந்தது. குழந்தை கனவில் பயந்துவிடக் கூடாதென்று அம்மா தொட்டிலின் கீழே பழைய இரும்புத் துண்டைப் போட்டிருந்தாள். குழந்தைகளுக்குக் கனவு வருமா என்பதும், இரும்புத் துண்டு பயத்தைப் போக்கிவிடுமா என்பதும், அவள் கேட்க நினைத்து கேட்காமலேயே போய்விட்ட கேள்விகள். படுக்கையில் சென்று படுத்துக்கொண்டாள்.
“அந்தத் துணியை ஓண்ணு மாத்தினா என்ன?” திறந்த கதவின் அப்பால் அம்மா கேட்டு விலகினாள். சுனிதா பதிலொன்றும் சொல்லவில்லை. எழுந்து சேலையை மாற்றவுமில்லை. தளர்ச்சியாயிருந்தது.
ஜன்னல் உட்புறம் திறந்து வைத்து கொண்டியிடப்பட்டிருந்தது. அதன் வழியே சாய்வான வெளிச்சம் கொஞ்சம் அறையில். காற்று வெம்மை கலந்து வீசியது.
ஜன்னலை நோக்கி சரிந்து படுத்தாள். கொல்லையில் நீண்டு தொங்கும் காய்களுடன் பலா மரம், அவ்வப்போது இலைகளைச் சலசலத்துக்கொண்டு. ஷீபாவுக்குப் பிரியமான டேலியாவும் முகம் வாடத் துவங்கியிருந்தது. வேலிக்குப் புறமாக தார் ரோடு, நடக்க ஆளின்றிக் கிடந்தது.
இந்த ஜன்னலும், ஜன்னலில் தெரிகிற ரோடும், மனசுக்குப் பிடித்தமானவையாக இருந்த ஒரு காலம். இளமையின் பூரிப்பில் மகிழ்ச்சியைச் சூடிக்கொண்டு அவள் பாதையில் கண் வைத்திருப்பாள். அந்தக் காத்திருப்பு அவளுக்குள் இதமான உணர்வுகளைத் தரும். கற்பனைகளையும். நேரம் தாழ்ந்து, வராமலாகிறபோது வாட்டமுற்று வேதனிப்பாள். அதன் பின், வருவது தூரத்திலேயே தெரிந்ததும் பொய்க் கோபம் உண்டாகும். வராமலேயே இருந்துவிட்டால் கேள்விகளுடன் முந்தைய வேதனை மிஞ்சும்.
இப்போது பார்க்கையில் அவளுக்கு அந்தப் பாதை விலகி வெகுதூரம் போய்விட்டது போலிருந்தது. அசதியில் பல்வேறு எண்ணங்களிடையே உறக்கம் வந்தது.
விழித்தபோது தொட்டில் முடிச்சுப்போட்டுக் கிடந்தது. ‘பஃப்லு தூங்கி எந்திரிச்சுட்டானா?’
எழுந்து வெளியேறிப் பார்த்தாள். கூடத்தில் அவன் பொம்மைக் காரை ஓடவிட்டு லைட் எரிவதை வேடிக்கை பார்த்தபடியிருந்தான். சற்றுத் தள்ளி ஷீபா. சுனிதா சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். இரண்டரையாகிவிட்டிருந்தது.
“இவள் எந்திரிச்சதும் எழுப்பலாமான்னு பாத்தேன். அசந்து தூங்கீட்டிருந்ததுனால வேண்டாம்னு விட்டுட்டேன்.”
“சாப்பிட்டானா?”
“ம்…”
பஃப்லு உட்கார்ந்தவாறே அவளை நோக்கிக் கைகளை உயர்த்தினான். சுனிதா எடுத்துக்கொண்டாள். மகன் தனது மார்புச் சேலையை விலக்க முயற்சிக்கவும், சுனிதா பால் கொடுக்க அமர்ந்தாள்.
“இத மொதல்ல நிறுத்து. அதனாலதான் அவன் சோறு சரியா சாப்படறதில்ல.” சமையலறையிலிருந்து வந்த அம்மா.
“இவன் விட்டாத்தானே?”
“வேப்பெண்ணையோ, கொஞ்சம் கத்தாழையோ தடவினாப் போதும். கசந்தாக் குடிக்க மாட்டான்.”
சுனிதா குழந்தையின் தலையை வருடிக் கொடுத்தாள். நெற்றியில் வியர்க்குரு சிவப்புப் புள்ளிகளாக எழும்பியிருந்தது அவனுக்கு.
“என் மகனுக்கு வேர்க்குரு பாரு. இவனோட டேடி வந்ததும் முதல்ல நைஸில் வாங்கச் சொல்லணும்.”
அடுத்த நாள் சுனிதாவைப் பார்க்க தேவகி வந்திருந்தாள். அண்ணன் வீட்டுக்கு விருந்து போனவள், பத்து நாள் இருந்துவிட்டு நேற்றுதான் திரும்பியிருந்தாள். அவளின் அம்மாதான் சொன்னாள், சுனிதா வந்திருக்கிறாளென்று.
“இந்த வருஷம் பி.காமோட படிப்ப முடிச்சுக்கப் போறயா, அல்லது…”
“அப்படித்தான் வீட்டுல சொல்லிட்டு இருக்கறாங்க.”
“உனக்காவது இஷ்டப்பட்ட அளவுக்குப் படிக்க முடியும்னு நெனச்சேன் தேவு…”
“ப்ச்சு…”
அவளுக்குக் கேட்கலாமா வேண்டாமா என்று தோன்றியது. கேட்கலாம். அது கூட செய்யவில்லை என்றால் அதற்கெல்லாம் அர்த்தம் என்ன?
“பின்னே… நேத்து ஆளப் பாத்தேன். காய்ச்சல்னு ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தப்போ, பஸ் ஸ்டாப்பில வெச்சு.”
“பேசினயா?”
“முரளிதான் பேசுச்சு.”
ஒரு குறுகிய மௌனம் சில வினாடிகளை எடுத்துக்கொண்டது. அந்த இடைவெளி இருவருக்கும் தேவைப்பட்டது போல.
சுனிதா தொட்டிலைப் பார்த்தாள். கட்டப்பட்டு லேசாக காற்றில் அசைந்துகொண்டிருந்தது. பஃப்லுவை ஷீபா வெளியே எடுத்துப் போயிருந்தாள்.
“இப்பவும் வேலைக்கொண்ணும் போறதில்லையா?”
“போகணும்னு சொல்லிட்டிருந்துது. எலப்புள்ளியில அவங்க மாமா ஒரு பேக்கரி வெச்சிட்டிருக்கறாராம், அங்கே. ஆனா, இப்ப ஆளு ரொம்ப மோசமாகி இருக்கிறதாக்கும். நல்லா இருந்திருக்க வேண்டியவன்…”
அது தன்னைக் குற்றப் படுத்துவது போலப் பட்டது. “அல்ல தேவு, நான் வேணும்னு உண்டாக்கினதா அது? உனக்குத் தெரியாததா? எனக்கு மட்டும் ஆசையில்லாமலா இருந்தது?”
“போகட்டும் விடு. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாப் போகும். அண்ணன் எப்ப வருவாரு?”
“வியாழக்கிழமை வர்றேன்னு லெட்டர் வந்திருக்கு. அன்னைக்கு சாயந்தரமே புறப்பாடு.”
கொஞ்சம் கழித்து தேவகி கிளம்பினாள். வெளியே போயிருந்த ஷீபாவும் வந்துவிட்டிருந்ததால் அவளிடமும் சொல்லிக்கொண்டாள். பஃப்லு அவளை முத்தமிட்டான்.
தாமோதரன் வந்த அன்று மாலை.
பஸ் ஸ்டாப்பில் திட்டு மேல் சூட்கேஸ். காய்ச்சல் இறங்கி சுனிதா இயல்பாகியிருந்தாள். ஏர் பேக்கைத் தோளிலிருந்து அவள் இறக்கவில்லை. ஷீபா பஃப்லுவை வைத்துக்கொண்டிருந்தாள். இன்றைக்கு வேலைக்குப் போகாததால் அம்மாவிற்கு பதிலாக அப்பா வழியனுப்ப வந்திருந்தார்.
விஜயன் எங்காவது நிற்கிறானா என்று பார்த்தாள். வீட்டில் தங்காமல் இங்கே எங்காவதெல்லாம்தான் அவன் சுற்றிக்கொண்டிருப்பான். இன்று அவனைக் காணவில்லை.
தாமோதரன் மணி பார்த்தார். பஸ் நேரம் ஐந்து நிமிடம் தாண்டியும் பஸ் வரவில்லையே என்று மாமனாரைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
மறுபடியும் இரண்டு பக்க ரோட்டிலும், தேநீர்க் கடையிலும் அவளின் பார்வை சென்றது. அவன் எங்கும் இல்லை.
பஸ் ஹாரன் சத்தம்.
சுனிதா குழந்தையை ஷீபாவிடமிருந்து வாங்கிக்கொண்டாள். அப்போது அவளுக்கு, தான் தேடியது குறித்து வருத்தம் ஏற்பட்டது. கூடவே ஒரு நிம்மதி மூச்சு காற்றோடு கரைந்தது.
தாமோதரன் சூட்கேஸ் பிடியில் கர்ச்சீப் சுற்றி எடுத்துக்கொண்டார். “நாங்க வர்றோம் மாமா. ஷீபா, வரட்டுமா?”
“வர்றோம்ப்பா. ஷீபா?”
அவர்கள் விடை கொடுத்தனர். பஸ் நின்றது. ஆட்கள் சிலர் இறங்கியதும் சுனிதாவை முதலில் ஏறவிட்டு தாமோதரன் ஏறினார்.
“போய்ச் சேர்ந்ததும் காகிதம் எழுதுங்க.”
பஸ் நகர்ந்தது. அதனுள்ளிருந்து கீழே நிற்பவர்களுக்காக ஒரு தாயின் கரமும், குழந்தையின் கரமும் அசைந்தன. வளைவில் திரும்பி பஸ் வேகமானது. அப்பாவும் ஷீபாவும் வீட்டுக்கு நடந்தனர்.
– புதிய பார்வை, 1-15 ஏப்ரல் 1996.