விக்டோரிய மகாராணியும் ஐந்தாம் ஜார்ஜும்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,630 
 
 

இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி அவர்கள், தன் பேரன் ஐந்தாம் ஜார்ஜை {பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல்கட்டுந் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார். பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ஐம்பது பவுன் மாதந்தோறும் அனுப்பிக்கொண்டிருந்தார்.

‘தன் செலவுக்கு இந்தப் பணமும் போதவில்லை’ என்று ஐந்தாம் ஜார்ஜு பாட்டி விக்டோரியா மகாராணிக்கு, ‘இனி நூறு பவுனாக அனுப்புங்கள்’ என்று எழுதிக் கேட்டிருந்தார்.

இதனைக் கண்டதும், மகாராணியார் சிந்தனையில் ஆழ்ந்தார். அதிகமாக அனுப்ப விரும்பவில்லை. அனுப்பாமல் இருக்க மனமும் ஒருப்படவில்லை அனுப்பாவிட்டால் பேரன் வருந்துவானே என்ற கவலை ஒருபுறம். அனுப்பினால் பேரன் அதிக செலவாளியாகிக் கெட்டுவிடுவானே என்ற வேதனை மற்றொருபுறம் என் செய்வார்! இந்தக் குழப்பத்திலே அவரால இன்னது செய்வது என்றே புரியல்லை.

பேரனை எண்ணி, கடிதம் எழுதுவார்; அதை அனுப்பாமல் கிழித்துக் போடுவார். எழுதுவதும், கிழித்துப் போடுவதுமாகச் சிலநாட்கள் சென்றன.

இறுதியாக,

‘உலகத்தையாளும் சக்கரவர்த்தினி, தன் பேரனுக்கு (வருங்கால மன்னனுக்கு)பணம் அனுப்ப மறுக்கலாமா?’ — என்று எண்ணிக் கடைசியாகப் பணம் அனுப்பப்போகும் போது, மனம் வரவில்லை; பணத்தையும் அனுப்பவில்லை.

பின், ஒருநாள் கடிதம்—அதில், அவன் பெருஞ் செல்வத்தில் பிறந்து வளர்ந்த குடிமகனாயினும், எப்படிச் இக்கனமாக இருந்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பது பற்றிய விதிகளை, அதற்குரிய வழிகளை எல்லாம் நன்கு விளக்கமாக விவரித்து எழுதி—கடிதத்தை உறையிற் போட்டு, அஞ்சலில் அனுப்பச் சொன்னார்.

அஞ்சலிற் போட்டுவிட்டு வந்தவனை நோக்கிப் பதைபதைத்து—‘அஞ்சல் நிலையத்துக்குச் சென்று, அக் கடிதத்தைத் திரும்பி வாங்கிவா’ என்று, அவனை அனுப்பினார்.

அங்கு போய் வந்த வேலையாள், “அஞ்சல் கட்டு எடுத்தாயிற்று; போய்விட்டது” என்று சொன்னான்.

விக்டோரியா மகாராணிக்குப் பெருங் கவலை—

‘பேரன் என்ன நினைப்பானே? என்ன செய்வானோ? எப்படிக் கஷ்டப்படுகிறானோ?’ — என்ற கவலையினாலே அவ்வாரம் முழுதும் சரியாக உண்ணாமலும் உறங்காமலுங் கூட இருந்து வருந்தினார்.

பேரனிடமிருந்து—

பத்தாம் நாள் கடிதம் வந்தது. அதைக் கண்டதும், பேரன் என்ன எழுதியிருக்கின்றானோ எப்படித் துயருறுகிறானோ? என்ற கவலையால், உடல் நடுங்கி, கைநடுக்கத் தோடு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.

அதில். இந்த நான்கு ஐந்து வரிகள்தான் இருந்தன :

“பாட்டி, இனிமேல் நீங்கள் இந்த ஐம்பது பவுனும் அனுப்ப வேண்டாம். நான் பணம் கேட்கும் போதெல்லாம் எனக்குச் சிக்கன வாழ்க்கைக்கான விவர விளக்கவியல் எல்லாம் எழுதி அனுப்பிக்கொண்டே இருங்கள் . அது போதும்! ‘சிக்கனமாக வாழ்வது எப்படி?’” எனும் புத்தகத்தின் ஆசிரியர் விக்டோரியா மகாராணி என்று— இதனை, ஒரு புத்தக வியாபாரிக்கு ஆயிரம் பவுனுக்கு விற்றுவிட்டேன்.”

இதைப் பார்த்ததும், உலகத்தையாண்ட மகாராணி யின் உள்ளம் எப்படி இருந்தது? எப்படி இருந்திருக்கும்?

இதனைப் படிக்கிற உங்கள் உள்ளம் எப்படி?

எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிற தன் பேரனுக்குப் பாட்டி எண்ணி எழுதியது?—பேரன்—வருங்காலத் தில் சக்கரவர்த்தியாக விளங்கப்போகிறவன் தன் பாட்டிக்கு தெய்தது? இவ் இரண்டையும் பற்றி—

உங்கள் உள்ளம் என்ன எண்ணுகிறது?

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *