வயதான காலத்தில் வந்ததே ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 2,001 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகல் மணி பதினொன்று இருக்கும்.

நோயாளிகள் குறைந்த நேரம். நான் இருக்கையில் அமர்ந்தபடி கைகளை உயர்த்தி நெட்டி முறித்துவிட்டு, ஸ்டெதஸ்கோப் எனப்படும் துடிப்பறிமானியை மேசை மேல் வைத்தபடி எழுந்தேன்.

‘எத்தனைவகை மனிதர்கள், எத்தனைவகை நோய் கள், அடேயப்பா’ என்று மெல்ல எனக்கு நானே சொல் லிக்கொண்டு ஆய்வறையைவிட்டு மருந்து கலக்கும் அறையை நோக்கி நடந்தேன்.

மருந்தறைக்குள் சென்றதும், “ஓவல் கொண்டுவரச் சொல்லட்டுமா” என்று கேட்டபடி எழுந்தாள் தாதி. நான் “வேண்டாம்” என்று சொல்லிவிட்டு மருந்துகள் ஒழுங்காக அடுக்கியிருக்கின் றனவா என்று நோட்டமிட் டேன். எல்லாம் ஒழுங்காகவும், கவர்ச்சியாகவும் அடுக் கப்பட்டிருந்தன.

மீண்டும் ஆய்வறைக்குள் சென்று அமர்ந்தபடி சித் தர் மருத்துவம் எனும் நூலை எடுத்தேன்; பக்கங்களைப் புரட்டினேன்.

அப்பொழுது கதவு திறக்கும் ஒலிகேட்டது. தாதி முன்னும், முன்பின் அறியாத முதியவர் ஒருவர் அவள் பின்னுமாக அறைக்குள் நுழைந்தனர். முதியவர் முழுக் கைச் சட்டையும், தோளில் நான்கு முழத்துண்டும் போட்டிருந்தார். தும்பைப்பூ நிறத்தில் சலவை மடிப்புக் கலையாத வேட்டி கட்டியிருந்தார். தலைமுடியை நேர் வகிடெடுத்து சீவியிருந்தார். நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்திருந்தார். அவர் நடுத்தரக் குடும்பத் தினர் போல் தோற்றமளித்தார்.

உள்ளே வந்ததும் இருக்கையைச் சுட்டிக்காட்டி “இப்படி அமருங்கள்” என்றேன். அவர் “நன்றி” என்று சொல்லிவிட்டு என்னையும் என் பக்கத்தில் வந்து நின்ற தாதியையும் பார்த்தபடி எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்.

நான் அவரை நோக்கி, “உடம்புக்கு என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “நோய் நொடி ஒன்றுமில்லை. நல மாகத்தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு…” என்று இழுத்தார்.

“சும்மா சொல்லுங்கள்” என்றேன்.

“ஐம்பத்தைந்து வயதைத்தாண்டிய நான் இன்று தான் மருத்துவர் ஒருவரைக் காணுகிறேன் என்றால் நீங்ககூட நம்ப மாட்டீர்கள்” என்றார் பல்லெல்லாம் தெரிய.

நான், “அப்படியா? மிக்க மகிழ்ச்சி! உடம்பை மிகவும் கண்ணும் கருத்துமாகத்தான் பேணி வந்திருக்கிறீர்கள்” என்றேன்.

“நீங்கள் சொல்வது உண்மைதான். உணவில், உடையில் எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாகத்தான் இருக்கிறேன். எது எக்கேடு கெட்டாலும் புதன், சனி எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தவறமாட்டேன்” என்றார்.

“நீங்கள் உணவு உடையில் கவனஞ் செலுத்துவது நல்லதுதான். ஆனால், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஒரு நன்மையுமில்லை” என்றேன்.

“அது எப்படி. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடம்பிலுள்ள சூடு தணியுமல்லவா?” என்று சொல்லிய படி மாசிபடர்ந்த கருவிழிகளால் என்னைக் கூர்ந்து நோக்கினார்.

நான், “அதெல்லாம் சும்மா சொல்வது. எல்லாம் பழக்கந்தான்” என்றேன்.

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று வியப்போடு கேட்டார்.

“ஆமாம் எண்ணெய் தேய்த்துக்கொண்ட பிறகு சிகைக்காய் போட்டு எண்ணெய்யைக் கழுவிவிடுகிறோம். இதனால் உடம்புக்கு என்ன நன்மை இருக்கிறது? ஒன்றுமே இல்லை பணமும், நேரமும்தான் பாழாகிறது” என்றேன்.

பெரியவர் மெல்லச் சிரித்துவிட்டு, “அப்படியென்றால் மழையில் நனைந்த பின் உடனே உடம்பிலும், தலையிலுமுள்ள நீரைத் துடைத்துவிடுகிறோம் துடைத்தபின் ஏன் தடுமன், சளி பிடிக்கிறது?” என்று என்னை நோக்கிக் கேட்டார்.

நான் என்ன சொல்வது. இதற்கு ஆதாரம் என்ன? விளக்கம் கொடுத்தாலும் அதே விளக்கத்தை திருப்பி யடித்து என்னை மடக்கிவிடுவார் என்று எண்ணி, “அது கிடக்கட்டும். நீங்கள் வந்ததைப்பற்றிச் சொல்லுங்கள்” என்றேன்.

“பேச்சில் அதை மறந்துவிட்டேன்” என்று சொல்லியபடி தாதியை வெளியே போகச் சொல்லுமாறு என்னிடம் சாடைக் காட்டினார்.

நான் தாதியை வெளியே போகச் சொல்லிவிட்டு, “என்ன?” என்று முதியவரைக் கேட்டேன்.

தாதி வெளியில் செல்லும்வரை அவளையே பார்த்து விட்டு. என்னை நோக்கி, “நான் பருவத்தில் கொஞ்சம் கூடுதலாக அனுபவித்தவன் தான். இருந்தாலும் எனக்கு இன்னும் அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த இன்பத்தைத் துய்க்க எவ்வளவு ஆசைப்படுகிறேனோ அதற்குத் தகுந்தாற்போல் அது கிடையாது. அதற்கு நீங்கள்…” என்று இழுத்தார்.

“சும்மா கூச்சப்படாமல் சொல்லுங்கள். மருத்துவர்களிடம் உண்மையை மறைக்கக் கூடாது” என்றேன்.

“எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிவிட்டது. முடியும் நரைத்து விட்டது. நரைத்த முடியை மையின் மூலம் மாற்றி விட்டேன். ஆனால் என் முதுமையைப் போக்க முடியவில்லை. இளமையிலிருந்த அந்த வீரியத்தை, ஆண்மை உணர்ச்சியைப் பெறவழி தெரியவில்லை” என்றார்.

அவர் இப்படிச் சொல்லுவார் என்று சற்றும் எதிர் பார்க்காத நான் வியப்படைந்தேன். “புலன்கள் ஒடுங்கியும் அவருடைய பொல்லாத மனம் இப்படி ஆசைப்படுகிறதே. இவர் இந்த வயதில் இப்படி நினைக்கிறாரே! இளைஞர்கள் என்ன நினைப்பார்கள்! எப்படியெல்லாம் நடக்கத் துடிதுடிப்பார்கள்” என்று எண்ணியபடி!

“ஐயா, இந்த வயதிலா உங்களுக்கு ஆண்மை வேண்டும்?” என்று வெளிப்படையாகக் கேட்டேன்.

“ஒருவனுக்கு முதுமையில் இளமையும், இளமையில் முதுமையும் இருக்க வேண்டும்’ என்று ஓர் அறிஞர் கூறியது எனக்கு நினைவிற்கு வருகிறது. அறிஞரே இப்படிச் சொல்லியிருக்கும்போது நான் நான் என்ன இதற்கு விதி விலக்கா?” என்று அறிஞர்மேல் பாரத்தைப் போட்டார். நான், “அறிஞர் கூறியதன் பொருள் வேறு” என்றேன்.

“அப்படியே இருக்கட்டுமே.” என்றார்.

“உங்களுக்கு மனைவி மக்கள் பிள்ளை குட்டிகள் இருக் கிறார்களா?”

“இருக்கிறார்கள்”

“இருந்துமா நீங்கள் மீண்டும் ஆண்மை உணர்வைப் பெற ஆசைப்படுகிறீர்கள்?”

“ஆமாம் என் மனைவிக்கும் வயதாகிவிட்டது”

“அப்படியென்றால் மறுமணம் செய்துகொள்ளும் எண்ணமா?”

“அதெல்லாம் ஒன்றுமில்லை”

“எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. ஆண்மை பெற வேண்டும் என்கிறீர்கள். மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லையென்கிறீர்களே! தயவு செய்து விளக்கமாகச் சொல்வீர்களா?” என்று கனிவாகக் கேட்டேன்.

“விளக்கமாகச் சொல்லுகிறேன் டாக்டர். எனக்கு வயதாகிவிட்டது உண்மைதான். ஆனால் ஆசை என்னை ஆட்டிப் படைக்கிறது. ஆசைக்கு அளவேது! உடல் பழுத்தாலும் உள்ளம் பழுக்கவில்லையே டாக்டர்.

“நான் பருவமாக இருந்தபோதுள்ள பெண்களுக்கும் இப்பொழுதுள்ள பெண்களுக்கும் எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது டாக்டர். இப்பொழுது உள்ள பெண்கள் உதட்டிற்குச் செவ்வண்ணம் பூசி, இமைகட்கு மை தீட்டி, மார்பகங்களை எடுப்பாகக் கட்டிக்கொண்டு, தொப்புள் தெரிய சேலை அணிந்து கொள்கின்றனர். பின்பக்கம் – முதுகு தெரியத் திறந்தபடியும், இடையை இறுகக் கட்டியபடியும், பிண்டம் பிதிர்ந்துகொண்டு வெளிவருவது போலவும் கவர்ச்சியாக உடுத்திக் கொண்டு பாங்காக நடக்கின்றனர்.

இப்படிக் கவர்ச்சியாகப் பலவகை ஆடைகளை, பல வகைகளில் உடுத்திக்கொண்டு ஒய்யாரமாக நடக்கும் பெண்களைப் பார்க்கப்பார்க்க எனக்கு என்னவோபோல் இருக்கிறது. செம்பவள வாய் திறந்து சிரித்தபடி, இடுப்பை வளைத்து வளைத்து நெளிந்து நடக்கின்றனர். கழுத்தை வெட்டிக் குலுக்கிக் கொண்டும், இடை யிடையே தாவணியைச் சரிசெய்துகொண்டும், காற்றில்

மார்பகத்தில் ஆடை படியுமாறும் நடந்துசெல்லும் இளம்பெண்களைப் பார்க்கப் பார்க்க ஆசை அளவுக்கு மிஞ்சுகிறது டாக்டர். என் மனம் இன்பம் காணத் துடி துடிக்கிறது டாக்டர். கட்டிப்பிடித்துக் கனியிதழ்களில் முத்தமிட்டுக் கன்னத்தைக் கடித்துத் தின்னவேண்டும் போல் தோன்றுகிறது டாக்டர். நான் இளமையாக இருந்தபோது எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்படி ஆசைப்பட்டது கிடையாது டாக்டர்” என்றார் உணர்ச்சியோடு ஆவல் மேலிட.

அவர் கூறியதைச் செவிமடுத்ததும் என் மனம் ஆய்வறையைவிட்டு சிறகடித்துப் பறந்தது.

“நான்கூட இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். உடல் கூறு அறிந்திருக்கும் நானே… கவர்ச்சியாக உடை உடுத்திக்கொண்டு வரும் பெண்களையும், ஆண்களையும்கூடப் பார்த்திருக்கிறேன். முன்பின் அறியாத என்னைப் பார்த்து வெட்கமில்லாமல், நாணமில்லாமல், அச்சமில்லாமல் கண்ணடித்த காரிகையரையும் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் என் மனத்தை கட்டுப் படுத்திக்கொண்டேன்.”

இப்படி என் மனம் ஒருமுறை எண்ணிப்பார்த்தது. ஆனால், நான் கண்ட காட்சிகளை முதியவரிடம் சொல்ல வில்லை. உணர்வுபெற்று, “இப்பொழுது உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி, “டாக்டர் இனியும் நான் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.

“ஆண்மையை மீண்டும் பெறவேண்டும் அப்படித்தானே”

“ஆம் டாக்டர்”

இந்த வயதில் இப்படி ஆசைப்படுவதற்குக் காரணம் நாகரிகமா? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஆம் என்றது என்மனம். நாகரிகம் எது. புதுமை எது. மனிதனுக்குத் தேவை என்ன என்று தெரியாமல் உலகம் தடுமாறுகிறதே! கண்மூடித்தனமாகவும், தான்தோன்றித்தனமாகவும், நாயைப்போல் அலைகின்றனரே என்று எண்ணியபடி சற்று நேரம் அமைதியாக இருந்தேன்.

என் நிலையைக்கண்ட முதியவர், “டாக்டர் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

நான், “ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தபடி இருந்தார். நான், “நீங்கள் இந்த வயதில் இப்படி ஆசைப்படக் கூடாது” என்றேன்.

“கூடாதுதான். அதை மறந்துவிடலாம் என்று முயன்றேன். ஆனால் கணிகையர் மீண்டும் மீண்டும் என் கண்களில் படுகின்றனரே கவர்ச்சியுடையால் காமத் தைத் தூண்டுகின்றனரே” என்றார்.

எனக்கு அவர் கூற்று என்னவோபோல் இருந்தது. ஒதுங்கி வாழச் சொன்னாலும் கேட்கமாட்டார் என்பதை நன்குணர்ந்தேன். அவர் நினைப்பது சரியாக இருந்தா லும், தவறாக இருந்தாலும் டாக்டர் என்ற முறையில் நான் என் கடமையை ஆற்றுவதுதான் சரி எனும் முடிவில் துடிப்பறிமானியை எடுத்தேன்.

நரை முடி மண்டியிருந்த அவர் நெஞ்சில் துடிப்பறி மானியை வைத்து இதயத்துடிப்பைக் கணித்தேன்.

பிறகு முதியவரை ஏற இறங்கப் பார்த்தேன். சிறு வருவாய் பெறக்கூடிய இவர் இதற்குரிய மருந்தை எப்படி வாங்க முடியும் என்று எண்ணியபடி இரக்கத்தோடு பார்த்தேன்.

அவர் ஒன்றும் பேசாமல் நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை எதிர்நோக்கியவராய் அமர்ந்திருந்தார்.

நான், “ஐயா இதற்கு மருந்திருக்கிறது. ஒரு மாத்திரையின் விலை நூற்றைம்பது வெள்ளி. அதுவும் இங்கில்லை. பிரான்சிலிருந்து தருவிக்கவேண்டும். தருவித்து இடைவிடாது உட்கொண்டு வந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும்” என்றேன்.

அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சியில் என்னைப் பார்த்துச்சிரித்துவிட்டு தோளில் போட்டிருந்த துண்டை யெடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார். துண்டை மீண்டும் தோளில்போட்டுக்கொண்டு நெற்றியில் கையை வைத்தபடி, “முதலில் நூறு மாத்திரைகள் தருவியுங்கள்” என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. “ஒரு மாத்திரையின் விலை நூற்றைம்பது வெள்ளி” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

“இருந்தாலென்ன? நூறு மாத்திரைகள் தருவிக்க ஆவன செய்யுங்கள்” என்றார்.

எனக்கு எப்படியிருக்கும். ஒன்றும் புரியாத நிலையில் “உண்மையாகவா?” என்று கேட்டேன்.

“உண்மைதான். என்ன வந்திடப்போகிறது. பதினையாயிரம் வெள்ளிதானே” என்று அலட்சியமாகச் சொன்னார்.

“ஐயா, பணத்தை இப்படி இந்த வழியில்…” என்னை யறியாமல் சொல்ல நினைத்ததை விழுங்கினேன்.

அவர் கனைத்துவிட்டுச் சிரித்தபடி, “பணம்! பணம்! என்ன பணம்! ஒரு நாள் வருவாய்தானே பதினையாயிரம். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு மளிகைக்கடை முதல் மரக்கடை வரைக்கும் பல கடைகள் இருக்கின்றன. என் கடைகளில் மட்டும் ஏறத்தாழ இருநூறு பேர் வேலை செய்கின்றனர்” என்றார் பெருமையாக.

நான் அயர்ந்தே போய்விட்டேன். உருவத்தைக் கண்டு ஒருவரை எடை போடக்கூடாது என்று எண்ணிய படி அவரைப் பார்த்தேன்.

அவர், “அடுத்தவாரம் வருகிறேன்” என்று சொல்லி விட்டு ஆய்வறையைவிட்டு வெளியேறினார்.

அவர் சென்றாலும் அவர் உருவமும், பேசிய பேச்சும் என் உள்ளத்தைவிட்டு அகலவில்லை. நான் அவரையே சற்று நேரம் நினைத்தபடி அமர்ந்திருந்தேன்,

இரண்டு மூன்று மாதங்கள் இரண்டு மூன்று நாட் களைப்போல் உருண்டன. முதியவர் ஆய்வறைக்குள் வந்தார். நான் முதியவரைக் கண்டதும் முகமலர்ச்சி யோடு, வரவேற்று, “இப்படி அமருங்கள்! உடம்பு எப்படி இருக்கிறது ? என்று கேட்டேன்.

“போனவாரம் நீங்கள் பிரான்சிலிருந்து தருவித்துக் கொடுத்த மாத்திரை மிகவும் சக்தி வாய்ந்தது. இப்பொழுது இளமை முறுக்குடன் இருக்கிறேன். சில சமயம் நான் இருபத்தைந்து வயது இளைஞனைப்போல் சுறு சுறுப்பாகவும் இருக்கிறேன்” என்றார் மகிழ்ச்சி பொங்க!

நான், “அப்படியா, மிக்க மகிழ்ச்சி” என்றேன் சிரித்தபடி.

இருவரும் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து “டாக்டர் மருந்து முடிந்ததும் உங்களை வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நான் என் கடமையில் கவனத்தைச் செலுத்தினேன்.

மறு நாள் மாலை நான் வீட்டை நோக்கி காரில் விரைந்துகொண்டிருந்தேன். வழியில் போக்கு வரத்துத் தடைபட்டு நின்றது. ஒரே கூட்டம்!

சாலையில் யாரும் அடிபட்டிருப்பார்கள் என்றெண்ணிய நான் காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு மருந்துப் பெட்டியுடன் கூட்டத்தை நோக்கி ஓடினேன்.

என்ன வியப்பு! முதியவரை சுற்றிவளைத்துக் கொண்டு ஒரு கூட்டமே நின்றது. ஒருவர் முதியவர் தலையைத் தன் மடியில் கிடத்தி ஒரு துணியால் விசிறிக் கொண்டிருந்தார். கூடியிருந்த கூட்டத்திலிருந்து ஒருவர், “அயோக்கியப்பயல், இந்த வயதில் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறானே! இவன் என்ன, சோறு தின்கிறானா, இல்லை, வைக்கோலைத் தின்கிறானா?” என்று கரித்துக்கொட்டினார். நான் இதைச் செவிமடுத்தும் மடுக்காதவனைப்போல் முதியவரை அணுகிக் காயங்களைப் பார்த்தேன். பலமான காயங்கள்தாம்.

மருந்துப் புட்டியைத் திறந்து காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டுப்போட்டேன். முதியவர் லேசாகக் கண் விழித்து என்னைப் பார்த்தார். நான் அவர் பார்வையிலிருந்தே ஏதோ சொல்லப் போகிறார் என்றுணர்ந்து, “அமைதியாக இருங்கள்” என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் இமைகள் சோரப் படுத்திருந்தார்.

சற்று நேரத்தில் ஆம்புலன்சும், போலீசுக் காரும் வந்துவிட்டன. போலீசார் வழக்குப் பதிவு செய்தார்கள். மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்சில் முதியவரை ஏற்றிக்கொண்டு விரைந்தனர். நான் வீட்டிற்கு விரைந்தேன்.

நான்கைந்து நாட்கள் கழிந்தன. முதியவர் மருந்தகத்திற்கு வந்தார். நான், “அமருங்கள், இப்பொழுது காயங்கள் எல்லாம் எப்படியிருக்கின்றன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “காயங்கள் ஆறிவிட்டன. வழக்கு தான் இன்னும் முடியவில்லை” என்றார்.

“அப்படியா, அதைப்பற்றிப் பிறகு பேசிக்கொள்வோம். அன்று நடந்ததைத் தயவு செய்து சொல்லுங்கள்” என்றேன்.

அவர், “டாக்டர், உங்களிடம் சொல்வதற்கு என்ன? நான் ஐந்தடியில் நடந்து செல்லும்போது என் எதிரே ஒரு இளம் பெண் நடந்து வந்தாள். அவள் செதுக்கி வைத்த செப்புச் சிலையைப்போல் மூக்கும் முழியும். கண்ணும் காதுமாக நல்லா அழகாக இருந்தாள். பொன்னிற மேனி, கொவ்வைப் பழத்தைப் போன்ற செக்கச் சிவந்த இதழ்கள். சுருண்ட முடி. நல்ல தக்காளிப்பழத்தைப் போன்று தளதளவென்று இருந்தாள். சுருக்கமாகச் சொன்னால் அவளுக்கிணை அவளேதான் டாக்டர்.

“இளமை குலுங்க நடந்துவந்த அவளைக்கண்டதும் எனக்கு வெறியே பிடித்துவிட்டது. ஆள்வைத்துக் கொண்டுவரலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் என் மனம் கேட்கவில்லை. அவள் அணிந்திருந்த மெல்லிய ஆடை என் ஆவலை, உணர்வை ஈர்த்தது. கன்னியின் கட்டழகு மேனி என் மனத்தைச் சுண்டி இழுத்தது. நான் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தேன். நான் பிடித்திழுத்து அரவணைத்த வேகத்தில் அவள் அணிந்திருந்த உடைகள் அந்தப் பொது இடத்தில்… சொல்லவே வெட்கமாக இருக்கிறது சார். அவள் ஆடைகூடக் கிழிந்துவிட்டது! அவள் கோவென்று அழுதாள்! இக் காட்சியைப் பார்த்த பொதுமக்கள் என்னை அடித்து சாக்கடையில் தள்ளிவிட்டனர்” என்று ஏதோ ஒருவகை உணர்வால் உந்தப்பட்டவரைப்போல் கனத்த குரலில் சொல்லி முடித்தார்.

நான் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, “ஐயா நீங்கள்…” என்று சொல்லவந்ததையும் மறைத்தேன்.

“டாக்டர் நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்த வயதில் இப்படி அதுவும் மாத்திரையைத் தின்னுவிட்டு நடுத் தெருவில் என்று தானே சொல்ல நினைத்தீர்கள்?” என்றார் சிரித்தபடி. “ஆமாம் ஆமாம்”

“டாக்டர் நீங்கள் சொல்லவந்தது சரிதான். பணத்தால் எதையும் செய்யலாம். ஆனால் ஒன்றை மட்டும் எந்தவழியிலும் பெறமுடியாது. அதுதான், மானம். இழந்த மானத்தைத் திரும்பப் பெறமுடியாது டாக்டர்” என்று சொல்லியபடியே அவர் சட்டைப் பைக்குள் கையைவிட்டு மாத்திரைகளை எடுத்து எனக்கு நேராகப் பிடித்தார். நான் பார்த்ததும் மறுநொடியே மாத்திரைகளைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு, “இனி நான் மனிதனாகவே வாழ்வேன் டாக்டர்; மனிதனாகவே வாழ்வேன்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு விருட்டென்று வெளியே சென்றார்.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *