மின்னல்





(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரோகினியின் கழுத்தில் சமயாசாரப்படி தாலி ஏறி இன்னும் நான்கு நாட்கள் ஆகவில்லை.
அந்தத் தாலி நாலாவது நாள்…?
தாலியைக் கட்டியவன் சாய்ந்துவிட்டான். மார் பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து நெடுங்குரல் எடுத்து அழுதார்கள்.
காலத்தச்சன் வெட்டிய மரத்தை வீட்டிலா வைத்திருப் பார்கள்? சுடலை விறகுடன் விறகாகச் சுட்டெரித்தார்கள். வீட்டில் சூன்யம். அவளுள்ளத்திலும் சூன்யம்.
சூன்யத்தை உடைத்துக்கொண்டு நெடுமூச்சுக் கனலாக வீசுகிறது. அந்த மூச்சின் ஏற்ற இறக்கத்துக் கமைய நெஞ்சு விம்மித் தணிகிறது.
அரும்பு பூத்துக் குலுங்குவதற்கு முன்னே அந்தக் கிளையை வெட்டித்தள்ளிவிட்டால்-? அழகையோ நறு மணத்தையோ எதிர்பார்த்துவிட முடியாதே ! கைம்மை யின் கோலம் அவளை வந்து ஒட்டிக்கொண்டது. நெற்றி யில் பொட்டு இல்லை. பல வர்ண ஆடையில்லை. அணி இல்லை. துல்லியமான வெள்ளைப் புடவையை உடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். உடுத்துக்கொண்டாள்.
வெள்ளைப் புடவை, அதற்கேற்ற ரவிக்கை – அத் தனையும் சிறைபிடித்துக்கொண்டிருக்கும் அந்த உடல்… உடலுடன் ஒன்றிவரும் உணர்ச்சி அது வெறும் ஜடமாக இல்லையே. இன்னமும் அதில் உயிர்ப்பு இருக்கிறதே?
மணவாழ்வின் இன்பம் என்ன என்பதை ஒரு கணம் கூட துய்க்க விதியற்று அவள் இந்தக் கோலத்துக்கு வந்துவிட்டாள். பருவத்தின் வனப்பு இன்னும் கட்டுக் குலையவில்லை. கைம்மைச் சிறையின் விலங்குகளை உடைத்து எறிந்துகொண்டு எட்டிப் பார்க்கிறது இளமை. உணர்ச்சிகள்…… இப்பொழுதுதான் கிளை பரப்பித் தளிர் விடுகின்றன. கடல் அலைபோல் குமுறிக் குமுறி ஓல மிட்டெழுந்து எங்கும் சிதறி, சிறகிழந்த பறவையாகத் துடிக்கின்றன; மனதில் எங்கேயோ வெகு ஆழத்தில் புதையுண்டு. அசுரவேகத்தில் தொழில்படுகின்றன. ஆனால் முடிவு எதுவுமில்லை. அதை நினைக்கும்போது தாமரை இலையில் மழைத்துளிகள் பட்டு உருளும் வெள்ளி மணி கள்போல் கண்களிலிருந்து சில முத்துக்கள் உதிர்ந்தன.
மனிதனின் வாழ்வும் தாழ்வும் இந்த உணர்ச்சியின் எல்லையில்தானே!
அவளுக்கு என்றும் ஒரு துணை தம்பிராசா. ரோகினி யும் தம்பிராசாவும் ஒரே செடியில் மலர்ந்த இரு மலர்கள். முன்னையது அவள். அவன் அரும்பி பத்து ஆண்டுகள் ஆகிறது.
அக்கா தினம் கண்ணீரைச் சிந்துவதும் மூக்கைச் சீறிக்கொள்வதும் பார்க்கப் பொறுக்கவில்லை. கூடப் பிறந்த அவன் இதயம் அவளுக்காக ஏங்கும். அவ னுக்கு என்ன தெரியும்?
ஏன் அக்கா எப்ப பார்த்தாலும் ஒரே அழுகைதானா? கொஞ்சநேரமானாலும் சும்மா இருக்கக்கூடாதா? அவள் கண்ணீரைத் துடைக்கக் குனிந்து கைகளைக் கண்ணுக் குக் கிட்டக் கொண்டு சென்றான்
“சீ என்னையேன் இப்படிச் சித்திரவதை செய்கிறாய், சனியன்! இதுவந்து எனக்கு சகோதரமாய் பிறந்துதே. இது பிறந்து நாலு மாதத்தாலே அம்மாவைச் சமைச்சுது.. ஆறு வருடங்களில் இங்கு காலடி எடுத்து வைத்த உட னேயே அப்பாவையுஞ் துலைச்சுப் போட்டுது. போதாக் குறைக்கு இந்த நிலுவைச் சனியனாலே என் வாழ்வே நாச மாய்ப் போச்சு!”
அதன்பின் அவன் அவளுக்காகப் பரிந்துபேசுவ தில்லை. அவளுக்கு ஆறுதல் சொல்லப்போய் ஆத்திரத் தைக் கிளறிவிட அவன் விரும்பவில்லை. பாடசாலை முடிந் தால் ஒரே விளையாட்டுத்தான். அதிக நேரந் தங்குவதில்லை.
காலச் செடியில் மாதங்கள் என்ற மலர்கள் உதிர்ந்து சருகாகின….
வீட்டின் வெளிக்கதவை ஒருச்சாய்த்துப் பிடித்துக் கொண்டு வெளியே உலகை நோக்குகிறாள். இந்த உல கம் அனைத்தும் இன்பத்துள் திளைப்பது போலவும் தான் மட்டும் கிடையாத ஒன்றுக்காக ஏங்கிக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோன்றுகிறது.
நாகரிகத்தின் வாரிசாக நீண்ட காற்சட்டையும்,றெடி மேட் சேட்டும் அணிந்து தனது அமெரிக்கன் யங்கித் தலையைத் தட்டிக்கொண்டு, இவள் நிற்கும் திக்கை நோக்கி வருகிறான் ஒரு வாலிபன்.
அவளது பட்டாம் பூச்சி விழிகள் சிறகடித்துக்கொள்கின்றன.
அது யார்? கூர் குறிப்பாக அவனைப் பார்க்கிறாள். “ஓ மிஸ்டர் பாலு நீங்களா?” வார்த்தைகள் அவள் வாயி லிருந்து சிதறிவிடுகின்றன.
அவன் திரும்பி உன்னிப்பாக அவளைப் பார்க்கிறான். இதழ் கடையில் விஷமப் புன்னகை அரும்புகிறது.
“நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?”
“யாழ்ப்பாணத்தில் பாங்கில் வேலை. இரண்டு மாதந்தான் ஆகிறது. பாக் றோட்டில் எனது நண்பன் வீட் டில் தங்குகிறேன்.!” சொல்லிக்கொண்டே அவளை வடி வாகப் பார்த்தான். பருவத்தின் வாசற்படியில் நிற்கும் அவள் முகத்தில் சூன்யம் நிலவுகிறதை உணர்கிறான்.
“ஏன் இங்கு நிற்கிறீர்கள்?”
‘இதுதான் எங்கள் வீடு” பதிலுடன் பெருமூச்சும் சேர்ந்து வருகிறது. “சரி வருகிறேன்” என்று அவன் கூற “வாருங்களேன் உள்ளே” என்றாள். சுற்றுப் புறத்தைப் பார்த்தபடி உள்ளே சென்று சாய்வுக் கட்டி லில் உட்காருகின்றான். சாய்மனக் கட்டிலின் எதிரே சுவரில் மாட்டியிருந்த தம்பதிகளின் படமொன்றை எழுந்து பார்க் கிறான். அதில், மணப்பெண் ரோகினிதான். பக்கத்தில் நிற்பவன்? விஷயம் புரிகிறது.
“உங்கள் அவர்……..!”
அவள் முகம் சுறுக்கிறது.
பாலைவனத்தில் நீர் கிடைக்குமா? பசுஞ்சுனையைத் தேடியலையும் அவள் மனதுக்கு அது கிடைத்துவிட்டதா?
அவள் கண்களில் நீர் முத்துக்கள் உருளுகின்றன.
பாலு இப்பொழுதுதான் நிமிர்ந்து உன்னிப்பாக அவளைக் கவனிக்கிறான்.
பருவத்தின் நெகிழ்ச்சி கோடிட்டிருப்பது தெரிகிறது. பருவக் கொளிப்பு முழுவதையும், வரிந்து கட்டி வைத்து விட்டதைப் போல் அவள் ஈரவுக்கை’ அவள் மேனியை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. அதனூடு விம்மி நிற்கும் வடிவமைப்பு அவள்மீது மேலும் அழகை வாரிச் சொரிகிறதே! ஆ காலன்தான் எத்தகைய கொடியவன். அவளது புற அழகைவிட அகத்தழகு ரோசாப்பூவின் இதழ்கள் போன்றது. நையப்புடைத்து மென்மையாக்கிய பஞ்சு போன்றது. அப்பழுக்கற்றது. இவளா விதவை பாவம்?
அவனால் நிற்க முடியவில்லை.
“நேரமாகிறது ஒரு வேலை இருக்கிறது போகவேண்டும்’ என்று அவசரப்படுகிறான்.
“ஏன் அவசரப்படுகிறீர்கள்?”
“அடல்ற்ஸ் ஓன்லி” பார்த்தாக வேண்டும்.
“அப்படி யென்றால்?”
“அது ஒரு இங்கிலிஸ் படம் வயது வந்தவர்கள் மட்டும் தான் பார்க்கலாம். சரி நேரமாகிறது வரட்டுமா?”
அவள் ‘சரி’ என்பதற்கு அடையாளமாகப் பொம்மை போல் தலையாட்டினாள். அத்துடன் நெடுமூச்சும் பெரு மூச்சாக எழுந்தது. அதைப் பாலு கவனிக்கவில்லை. போய்விட்டான்.
அவளது பார்வை எதனை எதிர்நோக்கி ஏங்குகிறது? தினமும் பாலுவைச் சுற்றியே அவள் நினைவு ஓடுகின்றது. அந்த நினைவில் அழும்போது எத்தனை திருப்தி….
“எனக்குத்தான் எவ்வளவு அற்ப ஆசை!” பெண் பேதை! அவள் நெஞ்சில் எத்தனை கேள்விகள்? நெஞ்சில் ஒருவித வலி ஏற்படுகின்றது. வீதியைப் பார்த்தாள்.
கண்களில் தெரிபவன் அவனா? அவளது விழிகள் விகர்ச்சித்தன. பாலு வந்தான். அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அவள் மனதில் எழுந்த கேள்விகளுக்கு முற்றுப் புள்ளியாக அமைகிறது.
“என்ன உங்களை இந்தப் பக்கமே காணவில்லை?”
“சென்ற சில நாட்களாக ஒழியாத வேலை. நான் வர முடியவில்லை…”
நீங்கள் வரவில்லை என்றதும் பயந்து போய்விட்டேன்”
“ஏன்?”
தன் உணர்ச்சிப் போராட்டத்தை எப்படிச் சொல்லு வாள். எப்படியோ சிலமணி நேரம் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவளது விழிக்கோணத்தில் குறும்பு நெளிகிறது இதழ்பாளை வெடிக்கப் பற்கள் தெரிகின்றன.
“அடல்ற்ஸ் ஓன்லி” பார்க்கப் போகவில்லையா? இப்படி நையாண்டி செய்தாள். அதில் ஒரு ஆவலும் தொனித்தது. சொல்லிவிட்டுப் பாலுவைப் பார்த்தாள். நெஞ்சின் வரட்சியில் மழையை விரும்பும் ஆவல் அதில் இழையோடுகிறது. “அடல்ற்ஸ் ஓன்லி” தானே இப்பொழுது பார்க்க வாய்ப்பில்லை. இன்னுமொரு நாளைக்குப் பார்த்தால் போகிறது…!
“உங்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி இருக்கிறேன்”
“ஏன் அழகாய்த்தான் இருக்கிறாய்”
அழகு என்று சொல்லிவிட்டாலே போதும் பெண் களுக்கு அதைவிடச் சந்தோஷமிருக்காது. மேலும் அது வும் ஒரு ஆண் சொல்லிவிட்டால் அப்பப்பா கேட்கவா வேண்டும்.
அதைவிட இன்பமென்ன?
தன்னை மறந்த ஒரு நிலை. எதையும் பிரித்தறிய முடியாத பலவீனம்.
முன்பு எட்ட நின்று பேசிக்கொள்ளும் அவள் இன்று கிட்ட நெருங்கினாள். “உங்கள் கையா என் கையா பெரிது?’ பூனையின் பார்வையைத் தவிர்க்க முடியாது. எலி தன்னை மறந்து ஓடிவரும் பரிதாபநிலை இது.
தனது கையை அவனுக்காக நீட்டுகிறாள்
“அக்கா”
வாசலிலிருந்து தம்பிராசாவின் குரல் கேட்கிறது. அவசரமாக ஒரு கடுதாசியைக்கொண்டு அங்குவருகிறான் சிறுவன். ‘அக்கா’ இந்தப் படத்தைப் பார்த்தாயா?
“என்னடா அது?”
இந்த முரடன் இந்தப் பொம்பிளையைப் பற்றி இழுத்து.. படத்தை அவள் வாங்கிப் பார்த்தாள்.
பலியாடு பலிபீடத்தின் முன்னே நின்று நடுங்கும் நிலையில் அந்தப் படத்தில் ஒரு பெண் நின்றாள். பலவந்த மாக அவளை அணைக்க அவன் முயலுகிறான்.
பெண்மையின் மென்மையை இணைக்க அவன் முரட் டுத்தனம் விழைகிறது.
அந்தப் பெண் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முனைகிறாள்.
இங்கே ஒருத்தி.. ? தனது மென்மையை இழந்து விடத் தவியாகத் தவிக்கிறாள். அந்தக் கடதாசி, ஒரு சினிமா விளம்பரம். அதிலும் “அடல்ஸ்ற் ஓன்லி” என்று எழுதப்பட்டிருக்கிறது.
அடல்ற்ஸ் ஓன்லி என்றால் பெண்களைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்து அணைத்து…
இவ்வளவு!
கீழ்த்தர உணர்ச்சி.
தன்னை இழந்து தன்னையே முழுதும் அர்ப்பணித்து விட அவளால் இப்பொழுது முடியவில்லை. தன்னைவிட்டு எங்கோ சென்றுவிட்ட மானம் என்ற உணர்ச்சி… கீழ்த் தர எண்ணங்களைப் புதைகுழி தோண்டிப் புதைத்துவிட்டு விஸ்வரூபமாக வியாபித்துக்கொள்கிறது.
பாலு எழுந்து போகிறான்.
அவனை அவள் தடுக்க முடியவில்லை.
உடலில் மின்னல் தாக்குகல்… அதன் கணப்பொழுது ஒளிவீச்சில் கால்களே நிலைபெயர்ந்துவிட்டதுபோல்… நல்லவேளை… மீண்டும் இருளில் அவள் சோர்ந்து போய் சாய்மனக் கட்டிலுக்குள் விழுகிறாள்…… சூனியம் நீண்டு விரிகிறது.
பழைய பத்திரிகை காற்றின் தாக்குதலைத் தாங்க மாட்டாது துடிக்கும் சிட்டுப்போல் யன்னல் ஓரத்தில் பக் கங்களைப் புரட்டிக்கொள்கிறது.
எழுந்து சென்று அதனைப் புரட்டுகிறாள்.
“விதவைகள் விவாகஞ் செய்வதைத் தடுப்பது பாவம். ஆனால் அந்த விதவைகள் விவாகஞ் செய்யாது இருப்பார் களேயானால் அது இச்சமுதாயத்துக்கே புண்ணியமாகும்”
அறிஞர் ஒருவரின் அருமையான வாக்கியமிது! விதவைகள் மணமுடித்து வாழ்வது பாவமல்ல. ஆனால்…
அவள் வாழ்வை வேண்டாது இருப்பாளேயானால் தனது சமூகத்துக்கே உயர்வைத் தருபவள் ஆவாள்!
பாரம்பரியம் புகட்டிய தர்மத்துக்கு அவள் தலை வணங்குகிறாளா? மணக் கோலத்தில் இருக்கும் கணவனை எதிர்நோக்கிய விழிகளில் இரு சொட்டுத் திவலைகளாக மாறி அந்தப் படத்தின் அடிப்பகுதியில் உருண்டன.
அவளது மனப் போக்கைப் புரிந்துகொள்ள முடியாத பலவீனத்துடன் தம்பிராசா அசைவற்று நின்றான்.
– ஈழநாடு, பங்குனி 1963.
– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.