கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 15,286 
 
 

மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில், அதிகாலை.

இரு வயதான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த படி,

“ஏன் சுந்தரம்? நேத்து இங்க என்னா மீட்டிங் போட்டாங்க?“ என்று மீனாட்சி கேட்டாள்.

“மது ஒழிப்பு. அரசுக்கு எதிரா போராட்டம். மதுவை ஒழிக்க சொல்லி மாபெரும் போராட்டம் நடத்தியது எதிர்கட்சி“ என்று சுந்தரம் கூறினான்.

“மது ஒழிப்பு போராட்டம்னு சொல்ற, இங்க பார்த்தா ஒரு லோடு சரக்கு பாட்டில் கிடக்கு. இத சுத்தம் செய்யவே நேரமாகும் போல!” என்றாள் மீனாட்சி.

“மது ஒழிப்பு போராட்டம் தான், அதான் மதுவ வாங்கி ஒழிச்சிருக்காங்க. போராட்டத்தில் கலந்திருக்க ஒவ்வொருவருக்கும் ஒரு குவாட்டரும், கோழி பிரியாணியும் யாருக்கும் தெரியாம கொடுத்திருக்காங்க. கூட்டம் கூடிருச்சு.” என்று சுந்தரம் கூறினான்.

“சிரிப்பு தான் வருது. பேரு மது ஒழிப்பு மாநாடு, மது குடிக்காத ஆளே இல்லை“ என்று மீனாட்சி நக்கலாக கூறினாள்.

“இந்த மது ஒழிப்பு போராட்டம் நடந்ததால, அக்கம் பக்கத்தில் இருக்கும் அரசு டாஸ்மாக்ல நேற்று 10 லட்சத்திற்கு மேல சரக்கு வித்திருக்கு.“ என்று சுந்தரம் புள்ளி விவர கணக்கிட்டான்.

“என்னப்பா ! சொல்ற சுந்தரம். 10 லட்சத்திற்கு மேல சரக்கு விற்பனையா?“ என்று மீனாட்சி கேட்க ,

“ஆமா மீனாட்சி. ஒவ்வொரு முறையும் அரசை எதிர்த்து போராட்டம் பண்றதால மட்டும் மது ஒழிப்பு சாத்தியமாகுமா! தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் சுய கட்டுப்பாடு இல்லை. நாம ஒவ்வொருவரும் நமக்குள்ள சுய ஒழுக்க போராட்டம் நடத்தனும், இல்லை கடைபிடிக்கணும்.“ என்று சுந்தரம் கூற,

“நீ சொல்றது சரிதான். ஆனா அரசாங்கம் அத விற்பனை பண்றதால தான, வாங்கி குடிக்கிறாங்க“ மீனாட்சி கூறினாள்.

“நீ சொல்றது சரிதான் மீனாட்சி. விக்கிறாங்க என்பதால தான் குடிக்கிறாங்களா, நம் மது பிரியர்கள்?“ சுந்தரம் கேள்வி கேட்க,

“ஆமா. அத விக்காம இருந்தா எப்டி குடிப்பாங்க? அதற்க்கு தான இப்படி ஒவ்வொரு அரசும் மாறி மாறி வரும் போது மது ஒழிப்பு போராட்டம் பண்றாங்க“ என்று மீனாட்சி கூறினாள்.

“எதிர் கட்சி போராட்டம் என்பது அரசியல். எதிர் கட்சிகள் மாறி மாறி வரும் போது இந்த போராட்டம் தொடரதான் செய்யும். அரசியலுக்குள் போக வேண்டாம். நான் சொல்றது தனி மனிதனின் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு“ என்று உறுதியாக சுந்தரம் பேச்சை தொடர்ந்தான்.

“அரசை குறை சொல்வதை தவிர்த்து , நாம் ஒவ்வொருவரும் குடிக்க கூடாது என்று ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கணும். சாமிக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறோம்ல, அந்த மாதிரி. நாம குடிக்கு அடிமையாகிட்டோம் அதான் விஷயம். அதுல இருந்து விடுபட என்ன பண்ணணுமோ அத தான் யோசிக்கணும். அத விட்டுட்டு அரசு விக்கிறதால தான் குடிக்கிறேன்னு சொல்றதெல்லாம் சின்ன பிள்ளை தனம். அரசு எவ்வளோ நல்லது செய்தாலும், அதனை நாம் பாராட்டுவதில்லை. என்னை பொறுத்த வரை மது ஒழிப்பு என்பது அரசால் மட்டும் சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை. மது ஒழிப்புக்கு முக்கிய தீர்வு, தனிப்பட்ட, ஒவ்வொருவரின் சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம்“ என்று சுந்தரம் கூற,

“ஆமா. எங்க நம்ம ஆளுக, எங்க திருந்த. நல்லதுக்கு கெட்டதுக்கு எதும்னாலூம் மது. மது இல்லாத விசேசம் இல்லை. இந்த மதுவால் தான் எத்தனையோ குடும்பங்கள் நடு தெருவில் நிற்கிறது“ என்று மீனாட்சி கூறி கொண்டிருந்த போது,

“அங்க ரெண்டு பேரும் என்ன வேல பார்க்கிற மாதிரி தெரியலே?“ என்று சூப்பர்வைசரின் சப்தம் கேட்க, இருவரும் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

“நமக்கு எதுக்கு வம்பு. என்னம்மோ பண்ணிட்டு போறாங்க. நாம வேல பார்த்தா தான் சம்பளம்.“ என்று நையாண்டியாய் சுந்தரம் கூறி, மது பாட்டில்களை ஒழிக்க (குப்பை அள்ள) ஆரம்பித்தனர்…

# மது ஒழிப்பு என்பது அரசுடன், தனி மனிதனின் ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் சாத்தியமே !

# மதுவினால் எத்தனையோ குடும்பங்கள் நடு தெருவில் இருப்பதை நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

# மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.

மணிராம் கார்த்திக் என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *