மணற் கயிறு




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கலைமகளின் கண்மலர்வு
குரு சிஷ்ய சங்கமிப்பு,
அறியாமைத் திரை அகல்வு
கலை அருவி பிரவகிப்பு.
பாலாவின் கற்பனைச் சிறகு விரிகின்றது.
கம்பனிலிருந்து பாரதி வரை, நியூட்டனிலிருந்து ஐயன்ஸ்ரீன் வரை, கவிஞர்கள், பேரறிஞர்கள், விஞ்ஞானிகள் எல்லோரும் அவன் சிந்தனைச் சுவட்டில் வந்து போய்க்கொண்டிருக் கின்றனர்.
வெள்ளை வேட்டி, வெள்ளை நாஷனல். வெள்ளை உள்ளம்.
பேராசான் அதிபர் அருணாசலத்தின் ஆளுமையினால் இந்த அறிவில்லம் வளர்ந்தோங்கி விஸ்வரூபமாய் நிற்கின்றது.
இந்தப் பேராசானின் ஆசியுடன், இங்கிருந்து ஆயிர மாயிரம் செயல் வீரர்களை மனித நேயர்களை உருவாக்கி வியாபிக்கச் செய்ய வேண்டுமென்ற லட்சிய வேட்கை பாலா மாஸ்ரருக்கு.
கல்லூரியில் ஜீவத் துடிப்பு.
ஆசிரியர் ஓய்வறை.
பாலா மாஸ்ரரின் விழிகள் அறிவுப் பயிரை மேய்ந்து கொண்டிருக்கின்றன.
சுந்தரம்பிள்ளை ஆசிரியரின் பிரவேசம்.
அமைதித் திரை அகல்கின்றது.
“பரீட்சை விடைத்தாள்கள் எல்லாம் மதிப்பீடு செய்து போட்டியளே பாலா மாஸ்ரர்?”
“ஓம் மாஸ்ரர். நாலு நாளைக்கு முந்தியே நான் மதிப்பீடு செய்திட்டன்.”
“மார்க்ஸ் லிஸ்ட் எல்லாம் தயாரிச்சுப் போட்டியளே?”
ஓ அதுவும் முடிஞ்சுது.
“அப்ப நீர் ஏன் அதை இன்னும் அதிபரிட்டைக் குடுக் காமலிருக்கின்றீர்?”
“ஏன் அவசரப்படுவான்? எல்லாரும் குடுக்கேக்கை நானும் குடுக்கலாம் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறன்.”
“பாலா நீர் ஒரு கையாலாகாதவன். வேலையை முடிச்சி ட்டால், மார்க்ஸ் லிஸ்டை முதலிலை குடுத்த ஆள் நீர்தான் எண்ட நல்ல பெயரை அதிபரிட்டை எடுக்கத் தெரியாத வனாயிருக்கிறீரே.”
“அது எனக்கு அவசியமில்லை. தேவையுமில்லை. ஏன் எனக்கு இப்ப கூடாத பெயரிருக்கோ?”
“அதில்லை பாலா…”
“சுந்தரம் மாஸ்ரர். எனக்கு என்னிலை நம்பிக்கையிருக்கு அப்பேன் நான் அதிபரைக் காக்காய் பிடிக்க வேணும்?’
கொதித்துக் கூறுகின்றான் பாலா.
“மாஸ்ரர் நான் சும்மா ஒரு கதைக்குச் சொன்னனான். கோபப்படாதையும். உம்மடை கடமை உணர்வையும் நேர்மை யையும் பற்றி எனக்கு நல்லாய்த் தெரியும் தானே.”
சமாளிக்கின்றார் சுந்தரம்பிள்ளை.
“நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாயிருக்க வேணும். ஒண்டாய்ச் செயல்படவேணும் எண்டதுதான் என்ரை நோக்கம். “நீர் சொல்லிறது மெத்தச் சரி பாலா. நான் சும்மா பகிடிக்குச் சொன்னனான். அதை நீர் சீரியசாய் எடுத்திட்டீர். சரி விட்டுத்தள்ளும் அந்தக் கதையை.”
பாலா மாஸ்ரரின் கோபம் தணிகின்றது.
“மன்னித்துக் கொள்ளுங்கோ மாஸ்ரர். நான்தான் பிழையாய் விளங்கீட்டன். அதை மறந்திடுங்கோ.
பாலா கனிவுடன் கூறுகின்றான்.
“எங்கை உங்கடை மார்க்ஸ் லிஸ்டை ஒருக்கா தாரு ங்கோ பாப்பம்.”
“ஏன் மாஸ்ரர்?”
“சும்மா ஒருக்கா பாப்பம்’
தன்னுடைய மார்க்ஸ் லிஸ்ரை பாலா கொடுக்கின்றான்.
சுந்தரம்பிள்ளை அந்த மார்க்ஸ் லிஸ்டிலுள்ள பெயர் களை வரிசைக் கிரமமாக எழுதுகின்றார்.
ஜீ.சி.ஈ. சாதாரண தர வகுப்பு மாணவர்களின் தெரிவுப் பரீட்சைக்கான ஐந்து பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பொறுப்பு பாலாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பொறுப்பு சுந்தரம்பிள்ளைக்கு.
சுந்தரம்பிள்ளை ஆசிரியர் ஓர் பட்டதாரி. நீண்டகால கற்பித்தல் அனுபவமுடையவர். அவர் எண்கணிதத்தில் புலி.
பாலசுந்தரமும் ஒரு பட்டதாரிதான். அவன் கலைப் பட்டதாரி. ஆனால் குறுகிய கால அனுபவம் அவனுக்கு.
சமுதாய உணர்வு கொண்ட, மனிதநேயமிக்க மாணவர் களை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை உடைய ஆசிரியன.
கல்வி பணம் பண்ணுவதற்காகவல்ல. மாறாக, கல்வி அறிவுத் தேடலுக்கும், மனித விழுமியங்களை மேம்படுத்தி அவற்றைப் பேணுவதற்காகவே கல்வி என்ற கொள்கையை இறுக்கமாகக் கொண்டவன் பாலா.
பாலாவுடன் படித்த எத்தனையோ பேர் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் அநேகர் தாங்கள் கற்ற கல்வியை தனியார் ‘ரியூஷன்’ கடைகளில் விற்பனை செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
சுந்தரம்பிள்ளை தன் உடல் நலனில் பெரும் அக்கறை கொண்டவர்.
ஒற்றை நாடித் தேகம்.
மிடுக்கான உடற்கட்டு.
சாப்பாட்டுப் பிரியர். மாமிச போசனி. மாமிச வாசனை யின்றி அவருக்கு உணவு இறங்காது. அளவோடுதான் சாப்பிடுவார் அவர்.
“உடல் சூட்டை பனங்கள்ளு தணிக்கும்” என்று கூறிக் கொள்வார்.
தினசரி ஒரு போத்தல் பனம் கள்ளு அவருக்கு கண்டிப் பாக வேண்டும்.
முன்பெல்லாம் அவருடைய வீட்டுக்குப் பின்புறமாக செழிப்பான பனைகள். அவற்றில் ஒரு பனையை கள்ளுக்
கட்டக் கொடுப்பார். தினசரி மாலையில் அவருக்கு ஒரு போத்தல் தனிப்பனைக் கள்ளுக் கிடைக்கும். வீட்டிலிருந்து கொண்டே சுயாதீனமாய் கெளரவமாய்க் குடிப்பார்.
‘கள்ளுக் கோப்பறேஷன்’ வந்த பிறகு, கண்ட நிண்ட வங்களோடை சரிசமமாயிருந்து கள்ளுக் குடிக்க நேர்ந் திட்டுதே என்ற ஆதங்கம் அவருக்கு.
வேட்டி, நாஷனல், சால்வை இவைதான் அவரது நாளாந்த உடை.
சுந்தரம் ஒரு விசித்திரப் பிறவி. சிக்கனம் அவரது தாரக மந்திரம். சிக்கனம் அல்ல அது லோபித்தனம்.
பணச் செலவற்ற பொழுது போக்கைத்தான் அவர் கைக கொண்டுள்ளார்.
கோவிற் திருவிழாக்கள், வண்டிற் சவாரி, நாட்டுக்கூத்து இவை தான் அவருடைய பொழுதுபோக்கு. இவைகள் பார்ப்ப தற்கு எதுவித பணமும் செலவழிக்கத் தேவையில்லையே.
யாழ் குடாநாட்டில் எங்கெங்கு பிரசித்தமான திருவிழாக் கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் அவரையும் அவருடைய பைசிக்கிளையும் தரிசிக்க முடியும்.
நாடகங்களுக்கோ, சினிமாவுக்கோ அவர் ஒரு நாளும் போனது கிடையாது. இவைக்குப் பணம் செலவாகுமே. அத்துடன் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் தான் இவைகளைப் பார்ப்பதில் பொழுதைப் போக்க முடியும். திருவிழாக்கள் அல்லது நாட்டுக் கூத்தென்றால் பணம் செலவழிக்கத் தேவையில்லை. அத்துடன் இரவிரவாக, விடியும் வரை பொழுதைப் போக்கலாமே.
சுட்டிபுரத்திலிருந்து சுளிபுரம் வரை, அளவெட்டியிலி ருந்து அராலி வரை, எந்தெந்தக் கோவில்களில் பிரசித்த மான திருவிழாக்கள் நடக்கின்றன, எங்கெங்கு பிரமாண்ட மான வாணவேடிக்கைகள் நடக்கின்றன என்ற விபரங்கள் அனைத்தும் அவரது கைவிரல் நுனியில்.
யாழ்ப்பாணத்தில் யார் யார் பிரபலமான நாதஸ்வர வித்வான்கள், தவில் வித்வான்கள், பிரபலமானவர்கள் யார் யார் என்ற விபரங்கள் அனைத்தும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அண்ணாச்சாமி, அப்புலிங்கம், ஏன் ஆரம்பத்தில் நீர்வேலி கந்தசாமி கோவிலில் ‘கோயில் மேளமாக இருந்த காரைக்குறிச்சி அருணாசலம் எல்லோருடனும் சுந்தரம் பிள்ளைக்கு நெருக்கமான பழக்கமுண்டு.
பிரபல தவில் வித்வான்களான உருத்திராபதி,கைதடி பெரிய பழனி, சின்னப்பழனி, அளவெட்டி தெட்சணாமூர்த்தி, இணுவில் சின்னராசா போன்றவர்களுடன் நேரடித் தொடர் புண்டு. கோவில்களில் தங்கள் கச்சோரிகள் நடக்கும் பொழுது இந்த வித்வான்கள் சுந்தரம்பிள்ளையை தமதருகில் அமர வைத்துக் கொள்வார்கள்.
வண்டில் சவாரிகளும் நாட்டுக்கூத்துகளும் குடாநாட்டின எந்தெந்தப் பகுதிகளில் நடக்கின்றன என்ற விபரங்கள் அனைத்தும் அவருக்கு நன்றாகத் தெரியும். இவற்றை நடத்து கின்றவர்களுடன் இறுக்கமான தொடர்புகளுண்டு அவருக்கு.
வண்டில் சவாரி பற்றி அவரிடம் கேட்டால், மந்துவில் கறுத்தான்ரை சுட்டியன் சோடி, மல்லாகத்து மாணிக்கத் தின்ரை மாவெள்ளைச் சோடி, அச்செழுவான்ரை நரையன்கள், புத்தூர் செல்லன்ரை செங்காரியள், இருபாலைச் சண்முக நாதன்ரை வடக்கன்கள் என்று அடுக்கிக் கொண்டே போவார் சுந்தரம்.
நாட்டுக் கூத்தென்றால் குருநகராற்ரை ஞானசௌந்தரி, நாவாந்துறையாற்ரை ஆரியமாலா, ஆவரங்காலாற்றை நல்ல தங்காள், மானிப்பாயாற்ரை காத்தவராயன் என்று அவரது பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த வருடத்திலேதான், கொழும்பு ஹண்ரர் அன் கொம்பனியிலிருந்து நேரடியாகவே சுந்தரம்பிள்ளை எடுப்பித்த ‘றலி’ பைச்சிக்கிளில்தான் இன்று வரை திக்விஜயம் செய்துகொண்டிருக்கின்றார்.
சுந்தரம்பிள்ளையின் ‘றலி’ பைசிக்கிள் தரிசிக்காத பிரபலமான கோயில் திருவிழாக்களோ, மாட்டு வண்டிச் சவாரிகளோ, நாட்டுக் கூத்துக்களோ குடாநாட்டில் கிடையாது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணை தேய்த்து சனி நீராடத் தவறமாட்டார் சுந்தரம்பிள்ளை. அதேபோல, ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது பைசிக்கிளுக்கு ‘ஒயில்’ போட்டுத் துடைத்துக் கொள்வார். வருடத்திற்கொரு தடவை தனது பைசிக்கிளை தானே பகுதி பகுதியாகக் கழட்டி, மண்ணெண்னையில் கழுவிப் பூட்டிக் கொள்வார். இதனால் பைசிக்கிள் கழட்டிப் பூட்டுவதற்கான கூலிப்பணம் மிச்சம் தானே.
தனது மார்க்ஸ் லிஸ்டிலுள்ள பெயர்களை சுந்தரம் ஆசிரியர் வரிசைக் கிரமமாகப் பிரதி பண்ணிக் கொண்டிரு ப்பதை அவதானிக்கின்றான் பாலா.
“இதென்ன செய்யிறியள் மாஸ்ரர்?”
“பெயர்களைக் கொப்பிபண்ணிறன்.”
“அது தெரியுது. ஏன் கொப்பி பண்ணிறியள்?”
“பொறுத்திருந்து பாருமன். இப்ப குழப்பாதையும்.”
”என்னண்டு சொல்லுங்கோவன்.”
“கொஞ்சம் பொறும் பாலா.”
விரைவாக எழுதுகின்றார் சுந்தரம்.
பெயர்கள் அனைத்தும் பிரதி பண்ணி முடிந்தது.
“அப்பாடா! ஒரு பெரிய வேலை முடிஞ்சுது”
ஆசுவாசப் பெருமூச்சு விடுகின்றார் சுந்தரம்.
தான் எழுதிய மாணவர்களின் பெயர்களுக்கு நேராக கைபோன போக்கில் ‘மார்க்ஸ்’ போடுகின்றார் சுந்தரம்.
“உதென்ன வேலை செய்யிறியள் மாஸ்ரர்.”
விசனத்துடன் கேட்கின்றான் பாலா.
“மார்க்ஸ் போடுறன்.”
நிதானமாகக் கூறுகின்றார் சுந்தரம்.
“இதெனன அநியாயம்? இப்பிடிப்பட்ட பாழாய்ப் போற வேலையை ஆரும் செய்வினையே? எங்கடை மாணவர் களின்ரை எதிர்காலத்தை நாசமாக்கிறியளே?”
கோபாவேசமாகக் கத்துகின்றான் பாலா.
“சத்தம் போடாதையுங்கோ பாலா. மற்ற வாத்திமாரு க்குத் தெரிந்துவிடப் போகுது.”
“தெரியட்டும். நல்லாய்த் தெரியட்டும் உங்கடை இந்த மோசடி.
“பாலா உங்கடை வேலையை நீங்கள் பாருங்கோ. என்ரை வேலையை நான் செய்யிறன். என்ரை வேலையிலை நீர் தலையிடவேண்டாம்.”
சூடாய்க் கூறுகின்றார் சுந்தரம்.
அவருடைய முகத்தில் விகாரம். பாலாவிற்குப் பேரதிர்ச்சி.
அவன் வாயடைத்துப் போனான். இதை பாலா எள்ள ளவும் எதிர்பார்க்கவில்லை.
இந்த ஈனச் செயலில் தானும் பங்காளியாகிவிட்டேனே என்ற வெப்பியாரம் அவனுக்கு.
சுந்தரம்பிள்ளை ஆசிரியர் நல்ல விவேகி. நன்றாகக் கற்பிக்கக்கூடியவர். ஆனால் அவருடைய ஆற்றல் எல்லாம் அவர் படிப்பிக்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு எள்ளளவும் பயன்படுவதில்லை. அவர் வெறும் சம்பளம் பெறுவதற்கு மாத்திரம் தான் பாடசாலைக்கு வருகின்றார்.
சுந்தரம்பிள்ளை ஆசிரியரின் அடிச்சுவட்டில் இன்னும் பல ஆசிரியர்களும் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
அதிபர் அருணாசலத்திற்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். பாவம் அவரால் என்னதான் செய்ய முடியும். இன்றைய கல்வித் துறையின் போக்கிற்கு எதிராக அவரால் ஒன்றுமே செய்ய முடியாதே. ஆனால் அவர் தன்னால் முடிந்த வரை செயலாற்றிக் கெரண்டுதானிருக்கின்றார்.
சுந்தரம்பிள்ளை தனது திறமையை தான் ஏன் அந்தப் பாடசாலையில் வீணாக விரயம் செய்ய வேண்டும்? அதனால் தான் அவர் தன்னுடைய வீட்டிற்கு பாடம் படிக்க வருகின்ற தகுதியான மாணவர்களுக்கு தன் திறமையை, ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துகின்றார். அதனால் தான் அவர், பாடசாலையில் பெறுகின்ற சம்பளத்திலும் பார்க்க இரு மடங்கு வருவாயை, தனது வீட்டில் தகுதியான மாணவர் களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துப் பெறுகின்றார். இந்த மாணவர்களின் சமூக அந்தஸ்து உயர்ந்தது என்பதனால தான் அவர் இவர்களுக்கு தன்னுடைய வீட்டில் கற்பிக்கின்றார்.
மண்கொத்தியளின்ரை பிள்ளையளுக்கும் மரமேறிய ளின்ரை பிள்ளையளுக்கும் படிப்பென்ன படிப்பு ? பரம்பரை பரம்பரையாய் உத்தியோகம் பாத்தவையின்ரை பிள்ளையள் தான் படிக்கிறதுக்குத் தகுதியுடையவை’ என்று சுந்தரம் அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால், தனது தந்தையும் ஒரு மண் கொத்திதான் என்பதை அவர் மறந்துவிட்டார் போலும்.
மாதாமாதம் அவருக்கு எவ்வளவு பணம் வருவாயாகக் கிடைக்கின்றது என்பது அவருடன் முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகின்ற அவருடைய மனைவிக்கோ அல்லது அவருடைய புதல்வர்களுக்கோ தெரியாது. அது பற்றி அவர் அவர்களுக்கு ஒரு பொழுதும் கூறியது கிடையாது.
“ஒருவருடைய மாதச் சம்பளம் எவ்வளவெண்டோ, அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு வைப்பில் இருக்கிறதெண்டோ, தன்னுடைய பெண்சாதிக்கோ பிள்ளை யளுக்கோ தெரியக்கூடாது. அப்பிடி அவர்களுக்குத் தெரிந்தால், அந்தப் பணம் நிச்சயமாய் கரைந்து போகும். அப்பணத்தை வீண் செலவு செய்து கரையத்தான் அவர்கள் கட்டாயம் வழி தேடிக் கொள்வார்கள்” என்று சுந்தரம் கூறிக் கொள்வார்.
தான் படிப்பிக்கின்ற தனது கிராமப் பள்ளியில் அவருக்கு எள்ளவும் கரிசனை கிடையாது. அதன் வளர்ச்சிக்கு அவர் எந்த விதமான பங்களிப்பும் செய்ததும் இல்லை.
சுந்தரம்பிள்ளை தன் பிள்ளைகள் மூவரையும் தனது ஊரிலுள்ள பாடசாலையில் கீழ் வகுப்பு வரைதான் படிப்பித்தார். ஐந்தாம் வகுப்பின் பின்னர் அவர்களை யாழ் நகரிலுள்ள பிரபலமான கல்லூரி ஒன்றிற்கு அனுப்பி வைத்தார்.
இந்துப் பாடசாலைகளில் ‘டிசிப்பிளின்’ எள்ளளவும் கிடையாது என்ற எண்ணத்தில், அவர் தனது புதல்வர்கள் மூவரையும், நகரத்திலுள்ள, மிஷனரிமார்களினால் நடத்தப்படு கின்ற ஒரு பிரசித்தி பெற்ற கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மூவரையும் இஞ்சினியராகவும் டாக்டராகவும் அக்கவுண்டனாகவும் ஆக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பேராவல். லட்சியம். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக த்தான் நடந்தது.
அவரது சற்புத்திரர் மூவரும் தங்கள் கல்விக்கு இடை நடுவில் தலைமுழுக்குப் போட்டுவிட்டனர். தந்தை அவர் களுக்கு வாரி இறைத்த பணமும், கெட்ட நண்பர்களின் சக வாசமும் அவர்களைச் சீரழித்துக் குட்டிச்சுவராக்கியது. சினிமா, குடி, சூது எல்லாம் சேர்ந்து அவர்களைச் சமூக விரோதிகளாக்கிவிட்டன. இதனால் சுந்தரம்பிள்ளை இடிந்து போனார்
கால கெதியில் இனசங்கார யுத்தம் சுந்தரம்பிள்ளைக்கு கைகொடுத்தது.
இனவாத யுத்தம் ஆரம்பித்த பொழுது, தன்னுடைய புதல்வர்கள் ஏதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்து விடக் கூடும் அல்லது ராணுவத்தினால் கைதாகக் கூடும் என்ற அச்சம் சுந்தரம்பிள்ளைக்கு ஏற்பட்டது. அவர் தன் பண பலத்தைப பாவித்து புதல்வர்கள் மூவரையும் வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவர்கள் மாதாமாதம் டொலர்கள் டொலர்களாக அனுப்பிவைப்பார்கள் என்ற நப்பாசை அவருக்கு. ஆனால் சிறிது காலத்தின் பின் அவரு க்கும் அவரது புதல்வர்கள் மூவருக்கும் இடையிலுள்ள தொடர்பு அறவே அற்றுவிட்டது.
‘மூண்டு ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்தம். ஆனா கடைசி காலத்திலை எங்களுக்குக் கொள்ளி வைக்கிறதுக்கு ஒருதனையாவது எங்களோடை இருக்கவிட்டுதே என்ரை மனிசன்? அவருக்குப் பணம் தான் பெரிசு. அதாலை, மாதா மாதம் அவங்கள் பணம் பணமாய் அனுப்புவாங்கள் எண்ட எண்ணத்திலை, ஏஜன்சிக்காறனுக்கு லட்சக்கணக்காய் காசைக் குடுத்து எங்கடை மூண்டு பொடியளையும் வெளி நாட்டுக்கு அனுப்பி வைச்சுது என்ரை மனிசன். கடைசியா அவர் இப்பென்னத்தைக் கண்டார்? பதினைஞ்சு வரியத்துக்கு மேலையாச்சு. பணமுமில்லை. பிள்ளையளுமில்லை.’
மனம் வெதும்பிக் கொண்டிருக்கின்றாள் சுந்தரத்தின் மனைவி செல்லம்மா
‘ஒவ்வொரு நாளும் அவர் வேலைக்குப் போக முந்தி, காலையிலை அன்றாடச் சிலவுக்கு, சில்லறைச் சாமான்களும் காய்கறிகளும் வாங்குவதற்கு மட்டுமட்டாய்த்தான் காசு தருவார். பின்நேரம் வந்த உடனை காலையிலை தான் தந்திட்டுப் போன காசுக்கு சிலவுக் கணக்குக்கேட்பார். சிக்கனமாய் வாழப் பழக வேணும் எண்டு காசு தரேக்கை சொல்லுவார்.’
‘இவர் பணம் பணமாய்ச் சேர்க்கிறார். அதோடை போதா தெண்டு அறா வட்டிக்குப் பணம் குடுக்கிறார். வட்டிப பணமும் பெருகிக் கொண்டு வருகுது. வெளிநாட்டுக்குப் போன எங்கடை மூண்டு பிள்ளையளும் இனி இஞ்சை திரும்பிவரப் போறதில்லை. ஆர்தான் உந்தச் சொத்தை அனுபவிக்கப் போகினையோ?’
சுந்தரத்தின் மனைவி தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருக்கின்றாள்.
‘ஏன் அவற்றை அண்ணர் கந்தவனம் செத்து, பிரேத த்தைச் சுடலைக்குக் கொண்டு போச்சினை. அப்ப இவர் நான ‘பிரசர்காரன்’ எண்டு சொல்லி பிரேதத்தோடை சுடலைக்குப் போகேல்லை.’
‘கந்தவனத்தாற்ரை மனிசி அழகம்மா இருவது வரிய மாய் அவரை விட்டு பிரிஞ்சிருந்தது. அதோடை பக்கவாதம் வந்து அதாலை நடக்கேலாமை படுத்த படுக்கையாய்க் கிடந்தது. அப்பிடி இருந்தும் அது சாக்கம் மான்ரை காரைப் புடிச்சு சுடலைக்குப் போய் வாய்க்கரிசி போட்டிட்டு ஒப்பாரி சொல்லி அழுது போட்டு வந்தது.
கூடப்பிறந்த என்ரை மனிசன் ‘பிறசர்’ எண்டு சொல்லி பிரேதத்தோடை சுடலைக்குப் போகாதவர், மூண்டாம் நாள் தன்ரை மகன்ரை சயிக்கிள்ளை பின்னாலை இருந்து யாழ்ப் பாணம் போட்டு வந்தது. ஏனெண்டால், இந்தியன் ஆமி வந்த போது இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசாங்கம் இரண்டாயிரம் ரூபா குடுத்துது. அந்தக் காசு எடுக்கத்தான் யாழ்ப்பாணக் கச்சேரிக்கு என்ரை மனிசன் போய் வந்துது. இதைப்பாத்து ஊரே சிரிச்சுது.’
‘காணி பூமியும் பணமும் தான் என்ரை மனிசனுக்குப் பெரிசு; மனிசரல்ல. நாளைக்கு நாங்கள் ஏலாதெண்டு பாயிலை சரிஞ்சால் அயலட்டையோ அல்லது எங்கடை இனசனமோ எங்களை எட்டிக் கூடப் பாக்காது. ஆரைத்தான் இந்தாள் விட்டு வைச்சிருக்குது?’
செல்லம்மா தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருக்கின்றாள்.
‘இவர் என்னைக் காதலிச்சுத்தான் கலியாணம் செய்தவர். ஆனா என்ரை சொத்துக்காகத்தான் என்னைக் காதலிச்சவர் எண்டு பிறகு தான் எனக்குத் தெரிஞ்சுது. இந்தாளைக் கட்டி மூண்டு பிள்ளையளைப் பெத்ததோடை அவருக்குச் சமைச்சுப் போட்டதைத் தவிர வேறை என்ன சுவத்தை நான் கண்டன்?
நெஞ்சுக்குள்ளேயே செல்லம்மாள் மருகுகின்றாள்.
சுந்தரம் ஆசிரியர் தான் தயாரித்த மார்கஸ் லிஸ்ட்ரை அதிபரிடம் ஒப்படைக்கின்றார்.
“சபாஸ்! இந்தத் தடவை மார்க்ஸ் லிஸ்ற்ரை தந்த முதலாவது ஆசிரியர் நீர்தான். எனது கோடி பாராட்டுகள் உமக்கு சுந்தரம்பிள்ளை.”
அதிபர் பரிகாசமாய்க் கூறுகின்றார்.
சுந்தரம் ஆசிரியர் அவ்விடத்தை விட்டகலத் திரும்புகின்றார்.
“சுந்தரம் மாஸ்ரர் கொஞ்சம் நில்லுங்கோ.”
தயங்கி நின்கின்றார் சுந்தரம்.
அதிபர் தமது மேசை லாச்சியைத் திறக்கின்றார்.
“சுந்தரம் மாஸ்ரர், நீர் மார்க்ஸ் லிஸ்ரை முதலிலை ஒப்படைத்ததற்காக இந்தாரும் உமக்கு ஒரு வெகுமதி.”
அதிபர் ஒரு பார்சலை சுந்தரத்திடம் கொடுக்கின்றார்.
இது என்ன வெகுமதியாயிருக்கும்?
சுந்தரம் விழிக்கின்றார்.
அவர் இதயம் படபடக்கின்றது.
“என்னண்டு திறந்து பாரும்.”
அதிபரின் வார்த்தைகளில் கடுகடுப்பு.
பார்சலைத் திறக்க முயற்சிக்கின்றார்.
அவர் முகத்தில் குறி வியர்வை.
கைகால்கள் உதறுகின்றன.
மூன்று வாரங்களுக்கு முன் ஒரு நாள் மாலை பாட சாலைச் சிற்றூழியர் ஆறுமுகம் வேம்படிக் கள்ளுக் கோப்பறேஷனுக்குச் செல்கின்றார்.
ஆறுமுகம் சாவகாசமாகக் கள் குடித்துக் கொண்டிருக்கின்றார்.
ஒரு மூலையில் கிடக்கின்ற ஒரு பார்சல் அவர் கண்ணில் தட்டுப்படுகின்றது.
உன்னிப்பாக அவதானித்த ஆறுமுகம் அந்தப் பார்சலை மெதுவாக எடுக்கின்றான்.
அதை ஆராய்ந்து பார்த்த அவனுக்கு அதிர்ச்சி.
“பொறுப்பில்லாத சென்மமாய்க் கிடக்கு. எத்தினை பேற்றை வாழ்க்கையை நாசமாக்கிற செய்கை இது. வரட்டும். இந்த மண்டுவத்துக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேணும்.”
ஆறுமுகம் மெதுவாகப் பார்சலை எடுத்துச் செல்கின்றான்.
மறு நாள் காலை ஆறுமுகம் அந்தப் பார்சலை அதி பரிடம் ஒப்படைக்கின்றான்.
“நேற்று வந்த பாலாவைப் பார். அவர் எப்பிடிப் பொறுப்பாய் வேலை செய்கின்றார்.”
அதிபரின் கர்ஜனை.
சுந்தரம் பார்சலைத் திறக்கின்றார்.
மதிப்பீடு செய்வதற்காக அவரிடம் மூன்று வாரங் களுக்கு முன்னர் ஒப்படைக்கப்பட்ட விடைத்தாள்கள்!
ரௌத்ரமூர்த்தியாய் நிற்கின்றார் அதிபர்.
– 2005
– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.