பூக்கள் பூக்கும் ஓசைகள்
காய் அரிந்துகொண்டு உள்ளே இருந்தவளிடம் பேசியபடி சியாமளா வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீநிதி. வடக்கு பார்த்த வீடு அதுவும். எரவாரத்து நிழல், வாசலில் இருந்து படிகள் ஏற வந்துகொண்டிருந்தது.

தெருவில் குழந்தைகளின் விளையாட்டு. வெயில் உறைக்குமோ உறைக்காதோ அவைகளுக்கு! இரண்டு மூன்று குழுக்களாக வெவ்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கின்றன. எதிரெதிர் வரிசைகளில் வீடுகள் கதவு சாத்தியோ திறந்தோ கிடக்கின்றன. பெரியவர்களை அதிகம் வெளியில் காண முடியவில்லை. இந்த வரிசையில் இவளைப் போலவே படிக்கட்டில் அமர்ந்தவாறு வாசலில் நடை பயிலும் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தாள் ரஞ்சித் வீட்டுப் பாட்டி. எதிர் வரிசையில் மரகதம் வீட்டுத் திண்ணையில் அவளது கணவரும் பாலாஜி அப்பாவும்.
சியாமளா வீட்டுக்கு முன்பாக தண்ணீர்த் தொட்டி இருக்கிறது. அதன் மறைப்பினால் அவன் வந்தது ஸ்ரீநிதிக்குத் தெரியவில்லை. அவள் மேற்குப் பார்த்து அமர்ந்திருந்தும் கூட. “அண்ணா…” என்ற ஏதோ குழந்தைக் குரலும், தொடர்ந்து எழும்பிய கோரஸான கூச்சலும்தான் தெரிவித்தன. பேச்சை நிறுத்தி எட்டிப் பார்ப்பதற்குள் அமர்க்களமாகிவிட்டது. விளையாட்டை விட்டு குழந்தைகள் விவேக்கைச் சூழ்ந்திருந்தன. வலது கையை ஒன்று, இடது கையை ஒன்று பற்றி இழுத்தன.
முன்புறம் இரண்டு மூன்று சேர்ந்துகொண்டு கையை உயர்த்திக் கத்தின. பின்புறம் ஒரு பையன் சட்டையைப் பிடித்து இழுத்தான். “ஏய்ய்…” என்று உற்சாகித்தபடி விவேக் இரண்டு கைகளையும் மடக்கி உயர்த்த, கையைப் பிடித்திருந்த இரண்டும் கைகளைக் கோர்த்துத் தொங்கின. சற்றுத் தள்ளி விளையாடிக்கொண்டிருந்த ஆர்த்தி, அவனது பின்புறமாக ஓடிவந்து முதுகில் அறைந்தது. விவேக் திரும்பிப் பார்த்தான்.
“ஏய், மொறைப் பொண்ணு…”
ஆர்த்தி விறைப்பாக நின்று தன் பெரிய கண்களில் முறைப்பது இங்கிருந்தே தெரிந்தது.
கைகளில் தொங்கியவர்களை விட்டு, ஆர்த்தியை கக்கத்தில் பிடித்து சுற்றினான். அவளை இறக்கி விடுவதற்குள் ‘அண்ணா என்னைய’ என்று ஒவ்வொன்றும் கேட்டன.
“யாரு ஸ்ரீநிதி?”
“விவேக் அண்ணனுங்க்கா.”
ஸ்ரீநிதி திரும்பவும் முன் போல உட்கார்ந்த பிறகு, எட்டிப் பார்த்துவிட்டு சியாமளாவின் தலையும் உள்ளிழுத்துக்கொண்டது. விட்டதிலிருந்து பேச்சைத் தொடரும்போது குழந்தைகளின் கூச்சல் அதிகரித்திருந்தது. மூன்றாம் படியில் இருக்கும் தன் பாதங்களைத் தொட வரும் வெயிலைப் பார்த்து காலைச் சுருக்கிக்கொண்டாள் ஸ்ரீநிதி.
விவேக் வரும்போதெல்லாம் இப்படித்தான். முதலில் குழந்தைகள் சூழும். அவைகளைத் தூக்கி வைத்துக்கொண்டும், சுற்றியும், விசாரித்தும் முடிந்த பிறகே பெரியவர்களைக் கவனிப்பான். இந்தக் கூச்சல், உள்ளிருப்பவர்கள் கூட ஓரிருவர் வந்து எட்டிப் பார்க்கும்படியாக இருக்கும். இவன்தான் எனத் தெரிந்ததும், ‘வாப்பா விவேக்’ என்றோ, ‘எப்பப்பா வந்த?’ என்றோ பேச்சுத் துவங்கும். பதில் சொல்லியபடியே ஏதேனும் ஒரு வீட்டுக்குப் போவான். அப்புறம் ஒவ்வொரு வீட்டினரையும், உள்ளே சென்றோ அல்லது வெளியில் நின்றபடியோ விசாரித்துவிட்டு வருவான்.
பத்து நிமிஷமாவது பேசாமல் ஒரு வீட்டிலிருந்து இறங்கிவிட முடியுமா? அதுவும் விவேக்கை யார்தான் சீக்கிரம் பேசி அனுப்புவார்கள்? சந்திரகுமார் வீட்டுக்கோ முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கோ போனால் அவன் வர இன்னும். கூடுதல் நேரமாகும். முஜிபுரும், விவேக்கும் பாலிடெக்னிக்கில் படித்தவர்கள். சந்திரகுமார் ஜி.டி.சி.யில் படித்தவன். இவர்களுக்கும் பெரியவன் என்றாலும் ‘டா’ போட்டுப் பேசுகிற பழக்கம் அவர்களுக்குள். இந்தத் தெருவுக்கு வந்துவிட்டால் விவேக் வீடு திரும்ப எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகிவிடும்.
விவேக் வந்ததும் தெருவே களைகட்டிவிடுகிறது. மற்ற நேரங்களிலும் ஒவ்வொரு வீடுகளில் கலகலப்பாகவே இருக்கும். அவன் வரும்போது அது தெருவுக்கே பொதுவாகிவிடுகிறது. ராத்திரி நேரமாக இருக்க வேண்டும். படிக்கட்டிலோ வாசலில் நாற்காலி, ஸ்டூல்களைப் போட்டோ பேசிக்கொண்டிருப்பார்கள் ஆண்கள். வீட்டு வேலைகள் முடிந்திருந்தால் பெண்களும். விவேக் அது மாதிரி சமயங்களில் மரகதம் வீட்டில் உட்கார்ந்திருப்பான். அவளது வீட்டுக்காரரான கோவிந்தராஜுடன் இவனும் சேர்ந்துகொண்டால் பேசுவதற்கும், சிரிப்பதற்கும் கேட்கவா வேண்டும். அவர் சிரிக்காமல் கண்டலடிப்பார். இவனோ எந்த விஷயத்துக்கும் சிரிக்காமல் இருப்பதில்லை. விவேக் பேசினாலே வார்த்தை பாதி, சிரிப்பு பாதியாக இருக்கும்.
அம்மா கூட சொல்வாளே, “எப்படி இவனால எந்த நேரமும் சிரிச்சிட்டே இருக்க முடியுது?” என்று.
சிரிப்பதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டாம்தான். காரணங்கள் வேண்டுமல்லவா? தெரிந்தவர்களைப் பார்க்கும்போது சிரிக்கலாம். தமாசுக்கு சிரிக்கலாம். “என்ன ஸ்ரீநி, உங்க பப்பாளி மரத்துல நாலஞ்சு பழம் பழுத்துக் கெடக்குது?” என்பதற்குமா சிரிப்பது?
எப்போது வந்தானென்று கோவிந்தராஜ் கேட்பதும், விவேக் பதில் சொல்லியபடியே அங்கே போவதும் தெரிந்தது. அவர் தனது வீட்டினுள் பார்த்து, ”தனு… ஒரு தடுக்கு எடுத்துட்டு வாம்மா… ” என்று வேறு உபசரித்தார். ௮வன் வெள்ளை வேட்டி கட்டியிருந்ததனால் போலும்.
சந்தானலட்சுமி இடது கையில் மருதாணிப் பூச்சுகளுடன் வலது கையில் தடுக்கைக் கொண்டு வந்து கொடுத்துச் சென்றது.
சியாமளா காயை அரிந்து முடித்திருந்தாள். அவள் இனி சமையலைத் துவங்க வேண்டும். ”நீங்க வேலையப் பாருங்க. நான் வீட்டுக்குப் போறேன்” என்று எழுந்தாள் ஸ்ரீநிதி.
வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறக்கும்போது ஒரு தடவை பார்த்தாள். விவேக்கின் பின்புறத் தோற்றமும் மற்ற இருவரின் பக்கவாட்டுத் தோற்றங்களும் தெரிந்தன. அவளை இன்னும் அவன் கவனிக்கவில்லை.
இங்கேயும் வருவான். வர நேரமாகும் என்பது நினைவில் வரும்போது பார்வை தானாக முன் அறையின் மூலையில் சுருட்டி வைக்கப்பட்ட பாயின் மீதும், கவிழ்த்து வைக்கப்பட்ட டம்ளரோடிருந்த வட்டலின் மீதும் சாய்ந்தது. ‘ச்சே, இந்த நேரம் பாத்து வந்திருக்குதே இது’ என்று சொல்லிக்கொண்டாள்.
அவளது டேபிளும் நாற்காலிகளும் இருந்த இடம் உள்ளிட்டு எல்லாமே கந்தரகோலமாகக் கிடப்பதாகத் தோன்றியது. ஏதேதோ காகிதத் துணுக்குகளும், சற்றைக்கு முன் தர்பூசணி வண்டி வந்தபோது வாங்கிச் சாப்பிட்டதில் வெளியே எடுத்துப் போடாமல் விடுபட்ட கருத்த விதைகளுமாக குப்பை சேர்ந்திருந்தது. சீமாறு உள்ளே கிடக்கும். அம்மா இருந்தால் கூட்டச் சொல்லலாம். விவேக் என்ன, வேறு யார் வந்தாலுமே இப்படிக் கிடப்பது நன்றாகவா இருக்கும்?
காகிதத் துணுக்குகளையும் தர்பூசணி விதைகளையும் பொறுக்கி வெளியே வாசலுக்கப்பால் இருக்கும் குப்பைமேட்டில் போட்டு வந்தாள். டேபிளை சற்று உள்ளே தள்ளி நகர்த்தினாள். ஜன்னலைத் திறந்து விட்டதும் அறைக்குள் வெளிச்சம் சேர்ந்தது. அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியவில்லை. தனியே இருக்க சலித்தது. இந்த வார குமுதம், விகடன் இரண்டுமே படித்து முடித்து மாப்பெட்டி மீது கிடந்தன. மற்ற சமயங்களிலாயின் எங்காவது போகலாம். இப்போது இது வேறு தொல்லை. இங்கேயே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது.
விவேக்கைப் பார்க்க மரகதம் வீட்டுக்காவது போகலாமா என யோசித்தாள். வேண்டாம், ௮வன் இங்கேயே வரட்டும். அவனைப் போய்ப் பார்ப்பதாவது? இல்லை, அவள் மரகதத்தைப் பார்க்கவென்றே போனாலும் விவேக் தன்னைப் பார்க்க வந்ததாகத்தானே நினைப்பான்! தேவையென்றால் அவன் வரட்டுமே! நேற்றே வந்துவிட்டவனுக்கு இப்போதுதானா இங்கே வர முடிந்திருக்கிறது? அவனுக்கே அப்படி இருக்கும்போது நாம் எதற்கு அவ்வளவு அக்கறைப்பட வேண்டும்?
விவேக்கிற்கு குன்னூரில் சிவில் எஞ்சினீயர் வேலை. மாதம் ஒரு தடவையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையோ வந்துவிட்டுப் போவான். வந்தால் இந்தத் தெருவுக்கும் வராமல் போவதில்லை. அவர்கள் அடுத்த தெருவுக்குக் குடிமாறி ஓரிரு வருடங்கள்தான் ஆயிற்று. அதற்கு முன்பு சம்சுதீன் இப்போது குடியிருக்கிற வீட்டில் குடியிருந்தார்கள். அந்த வீடு தனி பாதீரூம், லெட்ரீன் வசதிகளுடன் இருந்தாலும் அவர்களுக்கு ராசியில்லை.
விவேக்கின் அம்மாவுக்கு ஒன்று போக ஒன்று உடம்புக்கு வந்துகொண்டே இருந்தது. தவிர அவளுக்கு மனநிலையும் சற்று சரியில்லை. அதனால் வீடு மாறிவிட்டார்கள்.
இந்தத் தெருவுக்குக் குடிவந்தபோது விவேக் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தான். அப்போதெல்லாம் அவனுக்கு எவ்வளவு கூச்ச சுபாவம்! யாருடனும் பேசக்கூட மாட்டான். நல்ல பையன் என்று நினைத்துக்கொண்டிருந்தால்… இப்போது இப்படி! ச்சே, ரொம்பவும் மோசமாகிவிட்டானே! இதை யாரிடமாவது சொன்னால் இப்போதுகூட நம்புவார்களா? அவனது சிரிப்பும், வெகுளித்தனம் மாதிரியான பேச்சுமல்லவா மற்றவர்கள் அறிந்தது. அவளது முகத்தில் பருக்களைப் பார்த்துவிட்டு சாதாரணமே போல, “முகப்பரு ஏன் வருதுன்னு தெரியுமா?”’ என்று கேட்டது அவளுக்குத்தானே தெரியும்.
இங்கிருந்தபோது அவன் எல்லாருக்குமே ஒத்தாசையாக இருந்தான். கரண்ட் பில் கட்டப் போனால் பக்கத்து வீட்டினரதையும் சேர்த்து வாங்கிப் போவான். ரேஷனுக்குப் போனால், “ஏப்பா, எங்க கார்டுக்கும் பில் வாங்கி வெச்சர்றயா? நான் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தர்றன்’ என்று கார்டும் பணமும் கொடுத்தனுப்புவார்கள். வீட்டில் ஏதாவது சிறிய காரியங்களுக்கும் அவனது உதவி தேவைப்படும். யார் சொன்னாலும் மறுக்காமல் செய்வான்.
அவளுக்குக்கூட அவன் எவ்வளவு செய்திருக்கிறான். ‘விவேக்கண்ணா… இந்த நோட்டுக்கு அட்டை போட்டுக் குடுங்ணா’ எனக் கேட்ட வயதிலிருந்தே. அவளே அட்டை போடப் பழகிவிட்ட காலத்தில் கணக்கும் இங்கிலீஷ் கிராமரும் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தாவணி போடத் துவங்கிய பிறகு அவள் யூனிஃபார்ம் தவிர எது எடுத்தாலும் அவனிடம் அபிப்ராயம் கேட்காமல் இருப்பதில்லை. முன்பெல்லாம் பச்சை, கருநீலம், அரக்கு நிறம் என்று அடர்ந்த நிறங்களையே விரும்புவாள்.
“உன்னோட கலருக்கு லைட் கலர் ட்ரஸ் போட்டாத்தான் எடுப்பா இருக்கும் ஸ்ரீநி்” என்றதோடு, அவளது கருப்பு நிறத்துக்குத் தகுந்ததாக எது மாதிரி எடுக்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்தான்.
போன தடவை வந்திருந்தபோது அவள் சொல்லாமலேயே ப்ளஸ் டூ மாதிரி வினா விடைப் பகுதிகளை தினமலரிலிருந்து கிழித்தெடுத்து வந்து தந்தான். இந்த முறையும் கொண்டு வந்திருப்பானோ என்னவோ!
ஜன்னல் பக்கமாக நகர்ந்து தெருவைப் பார்த்தாள். எதிர் வீடும் அதற்கு இடதுபுறமிருந்த வீடும் தெரிந்தன. பார்வை நகர்ந்து போனது. கோவிந்தராஜ் வீட்டுத் திண்ணை ஆளின்றி இருந்தது. தடுக்கு மட்டும் ஒரு ஓரத்தில். விவேக் எங்கே? குழந்தைகளின் சத்தம்கூட ஓய்ந்துவிட்டது. விளையாட்டு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஞ்சித் கொட்டாங்குச்சியில் மணலை அள்ளிக் கொண்டு போகிறான். சம்சுதீன் வீட்டு வாசலில் அவரது மகள் ராஃபியா மணலைக் கோடுகள் போட்டுக் கட்டிய வீடு. பக்கத்தில் உருவாகிக் கொண்டிருப்பது ரஞ்சித்தின் வீடாக இருக்கலாம். கருத்த நாயொன்று வேலிக்குள் புகுந்து வீடுகளின் சந்துக்குள் ஓடுகிறது. எதையோ நினைத்துத் தலையாட்டிக் கொண்டிருக்கிறது சியாமளா வீட்டு வேம்பு.
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடியிருந்தாள். சுவாரஸ்யம் தரக்கூடியதாக ஒன்றும் இல்லை. வீடுகளின் பின்புறத் தோற்றமும் உறைந்த காட்சி. வெயில், நிழல், வெம்மையடிக்கிற காற்று. வெயில் காலம் துவங்கிக்கொண்டிருக்கிறது. பனியும், குளிரும் இன்னும்கூட முழுக்க விட்டபாடில்லை. காலை நேரங்களில் ஆறரை, ஆறே முக்காலுக்குக்கூட குளிர். பச்சைத் கண்ணீரில் கை வைக்க முடியாது. குளிப்பதற்கு வெந்நீர் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம். இங்கேயே இப்படி இருந்தால் ஊட்டி, குன்னூரில் எல்லாம் எப்படி இருக்கும்?
“தூங்கி எந்திரிக்கறதே எட்டு, எட்டரைக்குத்தான். அதுக்கப்புறம்தான் சூரியனே தெரியும். அதுவரைக்கும் ஒரே பனிமூட்டமா இருக்கும். குளிர்ல கை காலெல்லாம் நடுங்கும். பல்லு டைப்படிக்கும். அதோடவே ஸ்வெட்டரயும் போட்டுட்டு டீக்கடைக்குப் போவோம். கொதிக்கக் கொதிக்கக் குடிச்சாலும் சூடு தெரியாது. நைட்டும் அப்படித்தான். சீக்கிரமே இருட்டிருமா,… பனியும் எறங்க ஆரம்பிச்சிடும். இங்க மாதிரி பத்து, பதினோரு மணி வரைக்கெல்லாம் ஊரச் சுத்தீட்டிருக்க முடியாது. நேரத்துலயே படுத்துத் தூங்க வேண்டியிருக்கும். அந்தக் குளுர்ல யாரு நடுங்கிச் சாகறது இல்லன்னா?” என்றிருந்தான் விவேக் அப்போதே.
இதைப் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவன் அதையும் சொன்னான். கட்டிட வேலைக்கு வருகிற, பதினெட்டு வயதிருக்கக் கூடிய சித்தாள் பெண் ஒருத்தி, அவனிடம் குழைந்து குழைந்து பேசுவாளாம். சாப்பிட அழைப்பாளாம். அவன் தங்கியிருக்கிற அறைக்கு எதிர்த்தாற்போல் உள்ள வீட்டில் ஒரு மலையாளி குடும்பம் இருக்கிறது. அந்த வீட்டு சேச்சி, துணி காயப் போடுகிற சாக்கில் இவர்களின் அறைக்கு நேரே வரும்போது அவனை வம்பிழுக்காமல் போவதில்லையாம். விடுமுறை நாளில் அவன் அறையில் தனித்திருந்தாலும் வந்துவிடுவாளாம்.
“ஆமா, இவரு பெரிய ஆணழகன்! பொண்ணுங்கெல்லாம் பின்னாடியே சுத்தறாங்க. உங்க மூஞ்சிக்கு இன்னும் எத்தன பேரு வழியறாங்க அங்க?” என்றாள் ஸ்ரீநிதி.
அவன் அடிப்பதற்காகக் கையை ஓங்கினான். ஸ்ரீநிதி கட்டிலின் மேலும் அவன் டி.வி. பக்கமாக ஸ்டூலிலும் அமர்ந்திருந்தனர். அவனுக்கு அவளை விலாப் புறத்தில் அடிப்பதே வாகாக இருக்கும். அதற்குத்தான் அவன் கையை ஓங்கியதும்கூட. உடனே ஸ்ரீநிதி இரு கைகளையும் இடது பக்கவாட்டில் உயர்த்தித் தற்காத்தாள். அடிக்க ஓங்கிய கை நின்றதைக் கவனிக்க இயலாதவாறு சிரிப்பு வந்திருந்தது அவளுக்கு. அவன் நோக்கத்தை மாற்றிக் கொள்வான் என்று கண்டாளா? இடது முழங்கையருகில் அவனது விரல்கள் பட்டதை உணரும்போதே கிள்ளியும் முடித்துவிட்டான். வலியில் கண்ணீரே வந்துவிடும்போல இருந்தது.
“வலிக்குதுங்ணா…” என்றாள் சிணுங்கலுடன்.
“நான் வேண்ணா தேச்சுவிடறேன்” அடிக்குரலில் சொன்னவனது கை மீண்டும் கிள்ளிய இடத்தில் ஊர்ந்தபோது குறுகுறுப்பாக இருந்தது. வருடி
நகரும் கையைத் தன் இரு கைகளாலும் பொத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும் போலவும். அப்படித் தோன்றியதுமே அவளுக்கு பயம் வந்தது.
சமையல்கட்டில் அம்மா இருக்கிறாள் என்ற உணர்வுடன் அவனது கையைத் தட்டிவிட்டு முகத்தைக்கூடப் பாராமல் எழுந்து வெளியேறிவிட்டாள். ஸாரி ஸ்ரீநிதி, ஸாரி ஸ்ரீநி என்று அவன் பின்னாலேயே வந்தான். அவனது முகம் ரொம்பவும் பரிதாபமாக இருந்தது அப்போது. ஆவளுக்கு அதைக் கண்டதும் இன்னும் அவனைச் சீண்ட வேண்டுமாய் இருந்தது. இதோ, இப்போது டேபிள் இருக்கிற இடத்துக்கு சற்று அந்தப் பக்கமாக கீழே உட்கார்ந்து, முட்டிக் கால்களை உயர்த்தி முகத்தைப் புதைத்தபடி சுவரில் சாய்ந்துகொண்டாள். கைகளையும் முழங்காலோடு சேர்த்துக் கட்டிக்கொள்ளவும் அவன் பாடு அதிகமாயிற்று.
“ஸாரி ஸ்ரீநி. ரொம்ப வலிக்குதா?” பக்கத்தில் குத்தவைத்து அமர்ந்தவாறு அவளை உலுக்கினான். அவனது புலம்பல் அம்மாவுக்கும் கேட்டுவிட்டது. அவள் அங்கிருந்து வந்து விசாரித்தாள்.
“கம்மா, கிள்ளினேன். அதுக்கு அழுகறா” என்றான் அவன்.
“அவ கெடக்கறா விடு. தொட்டாப் போதும். முணுக்குனு அழுகாச்சி வந்துடும் அவளுக்கு. வலிச்சுட்டா அழுகறா இப்ப?”
அம்மா போனபிறகு நிமிர்ந்து ‘வெவ்வெவ்வெவ்வே’ காட்டியதற்குப் பிறகே அவனிடமிருந்து நிம்மதி மூச்சு எழுந்தது.
விவேக்கிடம் ஒரு பழக்கம். வந்ததுமே அவளை ஒரு அடி கொடுத்துவிட்டுத்தான் பேச ஆரம்பிப்பான். அம்மா இருந்தாலும்கூட அது நிற்காது. அப்பா இருந்தால் மட்டும் இந்த சேட்டைகள் இல்லாமல் இருப்பான். அப்பாவின் குணம் எதிலும் பட்டுக்கொள்ளாதது. வீட்டுக்கு வருவதும் வேலைக்குப் போவதும் தவிர அவர் பிற காரியங்களை கவனிப்பதில்லை. சம்பாதித்துத் தருவதோடு முடிகிறது அவரது ஸ்தானம். ஏதொன்றும் செய்வதாயின் அம்மாவே செய்ய வேண்டும். வீட்டுக்குத் தேவையான காரியங்கள் முதற்கொண்டு, வெளியில் எங்காவது போய் வருவதானாலும் கூட. இன்றைக்கும் அப்படி அம்மா ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கிறாள். சொந்தக்காரர்களினுடையதாக இருந்திருந்தால் அப்பாவும் போயிருப்பார். இது தெரிந்த வகையில். ஆகவே, அம்மா தனித்துப் போயிருக்கிறாள். பத்தரைக்கு முகூர்த்தம். அது முடிந்து அவள் வீடு திரும்ப மதியம் ஆகிவிடும்.
ஸ்ரீதிதிக்கு டாய்லெட் போக வேண்டுமாயிருந்தது. கதவைச் சாத்திவிட்டு வீட்டைச் சுற்றிவந்து. பின் கதவைத் திறந்து போக வேண்டியிருந்தது. போகும்போதும் பார்த்தாள். அவனை வெளியில் எங்கும் காணோம். வரும்போதும் இல்லை. குழந்தைகளும் தெருவில் குறைந்துவிட்டன. ரஞ்சித்தின் பாட்டியும் அவனது தங்கையான நடை பயிலும் குழந்தையும் அவர்கள் விட்டின் முன்பு இல்லை. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக சிலர் குறுக்குத் தெருவில் வடக்கே போய்க்கொண்டிருந்தனர். சிலரின் கையில் சூட்கேஸ், கூடை முதலியவை இருப்பதைப் பார்த்தால் விருந்துக்கு வருவது போலிருந்தது. கேன்வாஸ் ஷூ அணிந்திருந்த சிறுவன்
எல்லோருக்கும் முன்பாக கைகளை வீசி நடந்துகொண்டிருந்தான். அவர்கள் மறைகிறவரை பார்த்துவிட்டு உள்ளே வந்தாள்.
இப்போது அவன் வருகிற மாதிரி இல்லை. வரும்போது வரட்டும். அது வரையில் பாடத்தையாவது படிக்கலாம். வெறுமனே உட்கார்ந்துகொண்டிருந்து என்ன ஆகப்போகிறது? புத்தகப் பையிலிருந்து இங்கிலீஷ் கைடை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். நேற்றுப் படித்து மனப்பாடமாகிவிட்ட பகுதிகளை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு வைத்தாள். வேறு பாடங்கள் எதுவும் நாளைக்கு அவசியம் படித்துக்கொண்டு போக வேண்டியவைகளாக இல்லை. ரெக்கார்ட் எழுதுவதில் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது. சில படங்களும் வரைய வேண்டும். எல்லாம் மதியத்துக்கு மேல் பார்த்துக்கொள்ளலாம். இப்போது வரவிருக்கற அவனை சரிக்கட்ட வேண்டுமே, அதற்கு என்ன செய்வது?
சாதாரண நாட்களில் விவேக் வந்தாலே, கெளரி அக்கா சொல்கிற மாதிரி ‘எடங்கா முடங்கா’ன்னு எதையாவது செய்வான். இப்படியான சமயத்தில் வந்தால் சொல்லவே வேண்டாம். வந்ததுமே ‘இது’ அவனுக்குத் தெரிந்துவிடும். தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டான். எப்போதும் போல அவளை அடிக்க வரும்போது அவள் சொல்லிவிடுவாள். “அண்ணா, தொடாதீங்ணா.”
“என்?”
“தொடக்கூடாது.”
“அதான் ஏன்னு கேக்கறேன்?”
“அய்யோ… போங்ணா… நான் தொடக் கூடாது.”
“நீதான தொடக்கூடாது. நான் தொடறேன்” என்று அவளைத் தொடுவான். ஸ்ரீநிதி தலையில அடுத்துக்கொள்வாள். மீறி சொன்னால், ஸ்கூலுக்குப் போனின்னா யாரையும் தொட மாட்டயா, பஸ்ல போகும்போது யார் மேலயும் படமாட்டயா என்றெல்லாம் கேள்வி வரும். இப்படிக் குதர்க்கம் பேசுகதிறவனை என்ன செய்ய புபடியும்? இந்தச் சமயத்திலும் இப்படி அவன் செய்வது அம்மாவுக்குத் தெரியாது. தெரிந்தால் மற்ற விஷயங்களில் அவனை ஏற்பது போலவோ, தடை சொல்லாதது போலவோ இருக்க மாட்டாள். சொல்லப்போனால் விவேக் என்பதனால் அவளை இந்தளவுக்குப் பழக அனுமதித்திருக்கிறாள். மற்ற பையன்கள் யாரோடும் அவள் அவசியமின்றிப் பேசிக்கொண்டிருக்க முடியாது.
இது விவேக்கிற்கும் தெரியும். தெரிந்தாலும் அவன் செய்வதைச் செய்து கொண்டு தானே இருக்கிறான் இன்னமும். ஸ்ரீநிதி விலக்காக இருக்கிறபோது சாப்பிடுகிற சமயத்தில் அவன் இருந்தாலும் அப்படித்தான். அம்மா சாதம் பரிமாறிவிட்டு குழம்பு, பொரியல் என்றுள்ளவைகளையும் கொடுத்துவிட்டுப் போய்விடுவாள். இடையில் தண்ணீர் தீர்ந்து அம்மாவைக் கேட்டால் அவனே கொண்டு வருவான். டம்ளரில் சொம்பு படுகிற மாதிரி தாழ்த்துவான்.
“டம்ளர்ல படாம தூக்கி ஊத்துங்ணா” என்றால், ரொம்ப உயரமாகத் தூக்கி ஊற்றுவான். தண்ணீர் சிதறி அவள் மேலும் தரையிலும் தெறிக்கும்.
“அம்மா வந்தறப் போறாங்க” என்றால், ”வந்தா எனக்கென்ன? நீதான தூக்கி ஊத்தச் சொன்ன” என்பான்.
அம்மா வீட்டில் இருக்கும்போதே அவளறியாதவாறு இத்தனை ரகளை செய்கிறவன், அவள் இல்லாதபோது என்னவெல்லாம் செய்ய மாட்டான். இருக்கட்டும்: இன்றைக்கு வைத்துக் கொள்ளலாம் அவனுக்கு. ‘ஏடாகூடமாக எதையாவது செய்யட்டும், நாலு சாத்தி சாத்திரலாம்’ என்று நினைக்கும்போதே சிரிப்பு வந்துவிட்டது.
நாற்காலியில் அமர்ந்து, மதியத்துக்கு மேல் எழுதவிருந்த ரெக்கார்டை டேபிளில் எடுத்து வைத்தாள். அதை எழுதியபடியே இடைக்கிடையே ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டுமிருந்தாள்.
விவேக் எதிர் வரிசையில் இரண்டாவது வீட்டுக்கு வரவே நேரமாகிவிட்டது. அவனுடன் சந்திரகுமாரும் இருந்தான். அந்த பூட்டிய வீட்டின் படிக்கட்டிலிருந்த வேம்பின் நிழலில் அமர்ந்திருந்தனர். காலையில்தான் அந்த வீட்டுப் பூங்கொடியும் அவளது அம்மாவும் ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். பூங்கொடிக்கு இது எட்டாவது மாசம். உட்காரவும் நடக்கவும் அவள் சிரமப்படுவதைப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது. இதோடு அவளது மூன்று வயசுக் குழந்தையின் தொல்லை. எந்த நேரமும் சிணுங்கிக்கொண்டே இருக்கும்.
தெருவில் குழந்தைகளுக்கு விளையாட்டு சலித்துவிட்டது போலும். வீட்டுக்குத் திரும்ப எடுத்துப் போக வேண்டியவைகளைக் கொண்டுபோய்விட்டிருந்தன. விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் மணலின் கோடுகள் கலைந்திருந்தது. சாணம் மெழுகிக் கெட்டித்திருந்த வாசலிலும் இலைகள், சிறிய கற்கள், செம்பருத்திப் பூக்களின் இதழ்கள், தண்ணீருடன் கலக்கிய மண் போன்றவை இறைக்கப்பட்டிருந்தன. தின்பதற்கானதா என அவற்றை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது ஒரு நாய். ஏதும் கிடைக்காமல் விலகி ஓடி சுவர்ப் பக்கம் கால் தூக்கிற்று.
விவேக் ஒரு தடவை இந்தப் பக்கம் பார்த்தது போல இருந்தது. உடனே திரும்பியும் விட்டான். “மாமா… மாமா…” என்றபடி ஆர்த்தி விவேக்கின் பக்கம் போய் உட்கார்ந்தது. சந்திரகுமாரிடம் ஏதோ பேச்சு மும்முரத்தில் இருந்தவன் ஆர்த்தியைப் பார்க்காமல் இருந்தான்.
“அண்ணா…”’ என்றது ஆர்த்தி.
உடனே அவன் கவனம் திரும்பி, ”ஏய், என்ன அண்ணாங்கற? ஒழுங்கா மாமான்னு கூப்புடு” என்றான்.
ஆர்த்தியும், “மாமா… நாங்க சினிமாவுக்குப் போறமே…” என்றது.
“எப்போ?”
“அப்பறமாப் போவோம். நானு, எங்கப்பா, எங்கம்மா, எங்க அண்ணன் எல்லாரும் போறம்.”
“நானும் வரட்டுமா?” என்று கேட்டு அவளுடன் விவேக் கொஞ்ச நேரம் பேசி அனுப்பினான்.
ஆர்த்தி விவேக்கை மாமா என்றே அழைப்பாள். அவள் அண்ணா என்று அழைத்தால் அவனுக்குப் பிடிக்காது. ‘உன்னைக் கட்டிக்கப் போறது நான்தான்டி. அண்ணான்னு கூப்படாத. மாமான்னு சொல்லு. இல்லன்னா மச்சான்னு சொல்லு!’ என்பான். எலக்ட்ரீஷியன், ‘உனக்கெல்லாம் எம் பொண்ணக் குடுக்கறதில்லப்பா’ என்பார்.
“நீங்க என்ன குடுக்கறது. நாங் கூட்டிட்டுப் போயிருவேன். இல்லன்னா உங்க பொண்ணே என்னை இழுத்துட்டு ஓடிடுவா. வேணும்னாக் கேட்டுப் பாருங்க அவகிட்ட.”
கேட்டால் அவளும் அப்படியே சொல்வாள். எலக்ட்ரீஷியனின் மனைவி அவனை மாப்பிள்ளை என்று அழைப்பது இன்னும் மாறவில்லை. ஆர்த்தியும் மாமா என்று அழைப்பதை மாற்ற மாட்டாள். அவன் அவளை கவனிக்காமல் போகும்போதோ, தன்னிடம் பேசாமல் வேறு யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போதோ அவனது கவனத்தைத் தன் வசம் திருப்ப அண்ணா என்று அழைப்பாள். உடனே அவன் திரும்பி அவளிடம் பேசத் தொடங்கிவிடுவான்.
தனது விருப்பத்தைச் சொல்லவும், நினைத்ததை சாதித்துக்கொள்ளவும் குழந்தைகளுக்கு முடிகிறது என்பதை ஸ்ரீநிதி எண்ணிக்கொண்டிருந்தபோது அவன் வந்திருக்க வேண்டும். செருப்புச் சத்தம் கூடக் கேட்கவில்லை. வேட்டியை இறக்கிவிட்டபடி, ”என்ன, படிப்புல ரொம்ப அக்கறை வந்துருச்சு?” எனறதும்தான் நிமிர்ந்து திகைத்தாள். வருவான், வருவான் என்று காத்துக்கொண்டிருந்தால் அப்போது வராமல் திடுமென்று வந்து நிற்பானா இப்படியும்.
சமாளித்துக்கொண்டு, ”வாங்கண்ணா…” என்றாள். அவனது பார்வை அவளுக்குப் பின்னணியில் போனது. சிரிப்புடன் அவனே உள்ளே போய் ஸ்டூலை எடுத்து வந்து டேபிளுக்கு எதிரே கதவுக்குப் பக்கமாக வைத்து அமர்ந்து கொண்டான். ஸ்ரீநிதி ரெக்கார்டையும் பேனாவையும் மூடி எடுத்து வைத்துக்கொண்டாள்.
“அம்மா, அப்பா யாரும் இல்லையா?”
“அம்மா கல்யாணத்துக்குப் போயிருக்கறாங்க. அப்பா சின்னியம்பாளையம் வரைக்கும் போயிட்டு வர்றேன்னுட்டுப் போனாரு.”
அவளது படிப்பு பற்றியும், தெருவில் நிகழ்ந்து முடிந்த மற்ற காரியங்களைப் பற்றியும் பொதுவாக விசாரித்துக்கொண்டான்.
“மாடல் கொஸன் பேப்பர் கொண்டு வந்திருக்கறன் ஸ்ரீநிதி. அப்பறம் கொண்டு வந்து தர்றன்” என்றவாறு அவளுக்குப் பின்னால் இருந்த மரப்பெட்டியின் மீது கிடக்கும் வாராந்திரிகளை எடுக்க வந்தான். வந்ததுமே
அடிக்கிறவன் அப்படிச் செய்திருக்கவில்லையாதலால் இப்போது தன்னை அடிக்கவோ தொடவோ செய்யக்கூடும் என்று அவள் அவனை எதிர்கொள்ளத் தயாராக நாற்காலியிலிருந்து சாய்ந்து விலகிக்கொண்டாள். அவன் குமுதத்தையும் விகடனையும் எடுத்துக்கொண்டு முன் போல உட்கார்ந்து கொண்டதில் அவளுக்கு ஆச்சர்யம். தூசு நிறைய வருகிறது என்று ஜன்னலை அடைக்கும்போது பூங்கொடி வீட்டுக கதவு இன்னும் திறக்கப்படாமலும், படிக்கட்டு வெறுமனேயும் இருந்தது. சந்திரகுமார் அவன் வீட்டுக்குப் போயிருப்பான். சற்று நேரம் அவள் கேட்டவைகளுக்கு பதில் சொன்னபடியே புத்தகங்களைப் புரட்டி முடித்தான் விவேக்.
“சரி, ஸ்ரீநி. நான் போகட்டுமா?”
“அதுக்குள்ள என்ன அவசரம்? இப்பத்தான வந்தீங்க. வந்ததுமே போறேன்னா?”
“ஆமா… இன்னைக்கு இங்க டீயும் கெடைக்காது. சும்மா இருந்து என்ன…”
“அப்ப… டீக்காகத்தான் இங்க வர்றீங்களாக்கும்” என்றவள், டேபிளில் கைகளை மடக்கி அதன் மீது முகத்தை வைத்துக்கொண்டு அவனையே உற்றுப் பார்த்தாள். கண்களை மேலுயர்த்திப் பார்க்க வேண்டியிருந்தது. சிரித்தபடியே அவளைப் பார்த்தான் விவேக். சிரிப்பு மெல்லத் தேய்ந்த பிறகும் பார்வை அவளது கண்களிலேயே நிலைத்திருந்தது. இருவரும் அசையாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தனர். அவன் முகத்தை எதிர்ப்பக்கம் திருப்பி திறந்திருந்த கதவு வழியே வாசலைப் பார்த்தான். பிறகு யாரும் அற்ற உள் அறையையும். அந்த வெறுமையைப் பார்த்தபடியே அவனது உதடுகள் பிரிந்து அசைந்தன.
“அப்படீன்னு இல்ல.”
“பின்ன?”
அதற்கு பதில் சொல்லாமல், ”சாயந்தரமா வர்றன் ஸ்ரீநி” என எழுந்து கொண்டான். “வரும்போது கொஸன் பேப்பர் கட்டிங்ஸ் எடுத்துட்டு வர்றன்’” என்றபடி கதவுப் பக்கம் போனவன், நிலைப்படியில் நின்று கொண்டு சொன்னான். “வரட்டுமா?”
ஸ்ரீநிதி டேபிளில் கைகளின் மீதே முகத்தைக் கவிழ்த்துக் கொண்டாள். அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ”சாயந்தரம் வரவும் வேண்டாம். எனக்கு எதுவும் கொண்டுவந்து தரவும் வேண்டாம். போங்க.” சொன்ன பிறகும் அவனைப் பார்க்கக் கூடாது என்றிருந்தது. செருப்புச் சத்தம் கேட்கும் என உன்னித்துக் கொண்டிருந்தாள். அதுவும் கேட்கவில்லை. அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.
விலாப்புறத்தில், தொடுகை உணர்ந்து முகத்தை நிமிர்த்தினாள். விவேக் முன்னால் நின்றுகொண்டிருந்தான். இப்போது அவனது கையைத் தட்டிவிடவோ அவனைத் தடுக்கவோ தோன்றவில்லை.
“கோபமா?” என்றபடி ஸ்டுலில் உட்கார்ந்துகொண்டான் அவன். ஸ்ரீநிதி நிமிர்ந்து நாற்காலியில் சாய்ந்துகொண்டாள். அவனை ஏறிட்டபோது சிரிப்பு வந்து, அதை மறைக்கும் விதமாக கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள். விவேக் இனி போவதற்கு ரொம்ப நேரமாகும் என்று பட்டது.
– புதிய பார்வை, 16-30 ஏப்ரல் 1997.
குறிப்பு: இக் கதை ஜோதி விநாயகம் நினைவு பரிசுத் திட்டத்தின் மாதாந்திர விருது பெற்றது.