பின்னணி
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலா அழைக்காமலேயே அவன் எதிரில் வந்து உட்கார்ந்தாள். அழைப்புக்கு அவசியம் இல்லைதான். ஒரே வீடு அண்ணன்-தங்கை பாசம், உரிமை, பந்தம் என்று எவ்வளவோ இருக்கிறது.
இருந்தாலும் காலையிலேயே தங்கைக்கு முன்னறிவிப்பு கொடுத்திருந்தான் அருண்.
“சாயந்தரம் ஒரு பத்து நிமிஷம் பேசவேண்டியிருக்கு. வெளிவேலை எதுவும் உனக்கு இருக்காது, இல்லையா?” என்று வேலைக்குப் புறப்படும்போது சொல்லி வைத்தான் அவள் சைகையினால் அப்போதே சம்மதித்தாள்.
சனிக்கிழமை, அரை நான்வேலை. மதிய சாப்பாட்டுக்குக் கூட வீட்டுக்குக்கு வந்துவிடலாம். கலா அப்படித்தான் வந்து கொண்டிருந்தாள், முன்பெல்லாம். அண்மைக்காலத்தில் சில மாற்றங்கள் அவள் வயதிலுள்ள சிங்கப்பூர் இளம்பெண்களும் இளைஞர்களும் சனிக்கிழமை பிற்பகலை வீணாக்குவதில்லை.
முன்னிரவில் சிலமுறை வீடு திரும்பியபோது கலா விசாரணை இன்றியே விளக்கம் தந்துவிடுவாள். தேசிய நூலகம், தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சி, தோழியர் வீடு என்று அவள் சொல்லும் காரணம் பொருத்தமாக இருக்கும், தொலைக்காட்சி தமிழ் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் கலாவின் முகத்தைப் பார்க்கலாம். முதல் அல்லது இரண்டாவது வரிசையில் உட்கார்ந்து கைதட்டி மகிழ்ச்சி தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது.
இன்றைக்கு அப்படி எங்காவது போய்விடக் கூடாதும் என்பதற்காகத்தான் கலாவிடம் சொல்லி வைத்தான் அருண்.
தமையன் பேச்சைத் தட்டாமல் அதோ எதிரே உட்கார்ந்திருக்கிறாள் அவள். அண்ணியும் பிள்ளைகளும் வருவார்களா என்று பார்த்தாள். தலைகாட்டவில்லை. ஆக. அண்ணன் ஒரு விசாரணைக்கு அல்லது நீண்ட உபதேசத்துக்கு ஒத்திகை பார்த்து வைத்திருக்கிறார் என்று முடிவு செய்தாள் கலா.
நெஞ்சில் குறுகுறுப்பு இல்லாமல் போகவில்லை.
அருண் பேச்சு தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பது தங்கைக்குப் புரிந்தது.
“நான் ஒரு சாமானியன். இரண்டாயிரம் வெள்ளி சம்பளம் வாங்கும் சராசரி, ஆனால், நாணயம், நேர்மை, நம்பகம் இவையெல்லாம் எந்த நேரத்திலேயும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். என் அப்பா சொல்லிக் கொடுத்த மந்திரம் அது.”
இப்படி அவன் சொல்லாத நாள். இல்லை கலாவுக்கு அது தெரியும் ஆனால் அதை அண்ணனுக்குச் சொல்லிக்கொடுத்த அப்பாவைத்தான் அவளுக்கு நன்றாக நினைவில்லை. சிறுவயதிலேயே அவரை இழந்துவிட்டாள். நினைவு தெரிந்த காலத்திலிருந்து அருண் அருண் என்கிற அருணாசலம்தான் அவளுக்கு அப்பா, அண்ணன். அன்பு, பாசம் எல்லாமே.
“நான் ஒரு சாமானியன்… சராசரி குடும்பஸ்தன்… இப்படித் தான் இதுவரைக்கும் எல்லார்கிட்டேயும் சொல்லி வந்திருக்கிறேன் ஆனால் இப்ப நான் மானஸ்தன் அப்படீங்கறதையும் சேர்த்துக்க வேண்டியிருக்கு கலா!”
ஆரம்பமே பலமான அஸ்திவாரமாகத் தோன்றியது.
“ஒரே வீட்டிலே இருக்கிறோம் ஆனால் பல விஷயத்திலே நான் கவனம் செலுத்தத் தவறியிருக்கேன். அதுவும் உன் விஷயத்திலே..” என்றான் அருண்.
கலா மௌனமாகவே இருந்தாள்.
“என் வயசிலே உனக்குப் பாதி.. அதாவது இருபது முடிஞ்சி இப்ப இருபத்தொன்று. இல்லையா கலா?”
“இப்ப எதுக்கு வயசைப் பத்தி?” என்று தங்கை முணு முணுத்தாள்.
அப்பா அம்மா இருந்திருந்தால் கல்யாணம் காட்சி நடந்திருக்கும்… அண்ணனும் அண்ணியும் அதைப்பத்தி நினைக்கிறதாவே தெரியலே.. அப்படீன்னு நீ நினைக்க மாட்டேங்கிறது என்ன நிச்சயம்? நீ வயசுக்கு வந்த பெண். சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கே. சமவயதுப் பெண்கள், பையன்கள் எப்படியிருக்கிறாங்க அப்படீங்கிறது உனக்குத் தெரியும். நல்லாவே புரியும்!”
அவள் பேசவில்லை.
“இந்த விஷயத்திலே உன் மனத்தில் எது இருந்தாலும் ஒளிவு மறைவு இல்லாம நீ சொல்லணும்னு எதிர்பார்க்கிறேன். கலா. நான் உனக்கு அண்ணன் மட்டுமில்லே, அப்பா ஸ்தானத்திலேயும் இருக்கிறேன்.
அதை மறுக்க முடியுமா? இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் அருணும் அண்ணியும் கலாவைத் தான் தலைச்சனாகக் கருதி அக்கறையோடு வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். அண்ணி இன்றுவரை அவளிடம் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசியதில்லை.
இந்த மூன்று நான்கு மாதங்களில் என்னனென்ன நடந்திருக்கிறது என்பதை விசாரிக்கும் தோரணையில் தான் அருண் தன்னை அமர்த்தி வைத்துப் பேசுகிறான் என்பதை கலா உணர்ந்து கொண்டாள்.
நடந்ததையெல்லாம் சொல்லலாமோ? மூடிமறைத்தால் என்ன ஆகும்? சாமானியன், சராசரி என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அருணை அப்படிக் கருதுவதில்லை, நண்பர்களும், தெரிந்தவர்களும் உருப்படியான யோசனை பெறவேண்டுமானால் அருணாசலத்திடம் போகவேண்டும் என்று சொல்கிறவர்களை கமலாவுக்குத் தெரியும்.
“பின்னணி தெரியாமல் எதையும் பேச்கூடாது. ஒரு விஷயம் என்றால் அதுக்கு நாலு பக்கம் பக்கம் உண்டு. அவ்வளவையும் ஆரத்தீர ஆலோசனை செய்துதான் முடிவுக்கு வரவேண்டும். இது அப்பா சொல்லித் தந்த மந்திரம். அந்தக் காலத்திலே அப்பா பி.யூ.பி.லே. அதாவது பப்ளிக் யுட்டிலிடி போர்டில் இருந்தப்ப, சீனங்க, மலாய்க்காரங்க, நம்மவங்க எல்லோரும் அப்பாகிட்டேதான் எதையும் ஆலோசனை கலப்பார்களாம் பின்னணியோட வாங்கப்பான்னு அப்பா சொல்வாராம்!” என்று அருண் பேசுவதை கலா கேட்டிருக்கிறாள்.
இப்பொழுது ஒரு பின்னணியை வரவழைப்பதற் காகத்தான் தன்னை அழைதிருக்கிறான் என்பது வெளிச்சம், கலாவுக்கு.
அவள் மூடி வைத்திருக்கிறாள். வித்தில்லாமல் முளை வருமா? அருணுக்குத் தெரிந்திருக்கிறது. அண்ணிக்கும் தெரியாமல் போக நியாயமில்லை. கலாவின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பார்களா?
வழக்கத்திற்கு மாறாக அவள் அடிக்கடி டெலிபோனில் உட்கார்ந்து வந்தாள். வீடியோ கேசட் ஒன்றை அடிக்கடி போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சி ஒலி-ஒளி நிகழ்ச்சியின் பதிவு அது. இது ஒன்றே போதும் கலாவைக் காட்டிக் கொடுக்க இன்னும் ஒன்றிரண்டு தடயங்கள். ஒரே வீட்டில் நிழலாக இருக்கும் அண்ணியும் அண்ணனும் சாடைமாடையாகப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்ற குறுகுறுப்பு கலாவுக்கு இருந்தது
அந்த ஒலி-ஒளி நிகழ்ச்சியில் தான் அவளுக்கு அவன் அறிமுகம் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி அது. கலா போயிருந்தாள். நிகழ்ச்சி அறிவிப்பாளர், பாலகிருஷ்ணன் என்னும் அந்த இளைஞன் பாலாவை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பாலா பாடினான் அரங்கையே சிலிர்க்க வைத்துட்டான். கலாவிடம் அந்த பாதிப்பு அதிகம் இருந்தது.
பாலாவை மறந்திருக்க முடியவில்லை. இந்த மூன்று நான்கு மாதங்களில் அவனுடன் மனத்தளவில் நெருக்கம், டெலிபோன் உரையாடலில் ஆரம்பமாகி சந்திப்புகளில் உறவு. வளர்ந்துகொண்டு போகிறது. சனிக்கிழமை பிற்பகலிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முன்போல் அவள் வீட்டில் அதிகநேரம் தங்குவதில்லை!
கலா எந்தத் தடத்தில் போய்க் கொண்டிருக்கிறாள் என்பது அருணுக்குத் தெரிந்து விட்டதா?
பின்னணி இல்லாமல் பேசக் கூடியவன் அல்லவே, அவன்!
“கலா வயசைப்பத்தி இப்ப எதுக்குக் கேள்வி, அப்படீன்னு நீ கேட்டே இல்லையா? அந்தக் கேள்வியை காலங்கடந்து நான் இப்ப கேக்கிறதா தோணுது, முன்னாடியே நான் விசாரிச்சிருக்கணும் பரவாயில்லை. என் தங்கச்சி பேரில் எனக்கு நம்பிக்கை இருக்கு நான் கிழிச்ச கோட்டை நீ தாண்டக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்கிற சுபாவம் எனக்கு இல்லை. அது உனக்குத் தெரியும் அதே சமயம், வரம்பையும் எல்லைக் கோட்டையும் என் தங்கச்சி மீறக் கூடாதுன்னு எதிர்பார்க்கிற கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கு, இல்லையா?”
தொடவேண்டிய பிரச்சினையை அருண் நாகரிகமாகத் தொட்டு விட்டான். இனியும் ஊமையாக உட்கார்ந்திருக்க முடியாது என்பதை கலா உணர்ந்தாள்..
“அண்ணே, நீங்க சொல்றதெல்லாம்..” என்று அவள் இழுத்தாள்.
“நீ சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன், இத்தனை நாளா. சொல்லவே இல்லையே! நாலு இடத்திலே காதும் காதும் வச்ச மாதிரி வேண்டியவங்க சொன்னாங்க முதல்லே நான் நம்பவே இல்லை. காரணம் உன் பேரில் எனக்கு இருந்த நம்பிக்கை. ஆனால் உன் வயசைப் புரிஞ்சிக்கிட்ட பிறகு கேக்கவேண்டிய கடமையை அறிஞ்சி. சரி, இப்ப சொல்லு, கலா.. அந்தப் பையன் பாலாவைப் பத்தி எனக்கு எட்டிய சமாசாரமெல்லாம்.?”
‘உண்மைதான்’ எனும் பாவனையில் கலா தலையசைத்தாள்.
“இதை முன்கூட்டியே என்கிட்டே சொல்லி யிருக்கலாமே. நான் தடை செய்வேன் அப்படீன்னு அச்சமா? பரவாயில்லை. அந்தப் பையனைப் பத்தி எனக்குச் சில பின்னணி தெரியவேண்டும்!”
அருண் தணிவாகவே கேட்டான். அவள் விவரம் தேடும் தோரணையில் மருள மருள விழித்துக் கொண்டிருந்தாள்.
“சரி. அந்தப் பையனுக்கு எங்கே வேலை?”
“ஒரு கட்டுமான இடத்தில்!” என்றாள் கலா.
“உள்ளூர்ப் பையனா?’
”இல்லே…ஊரிலேருந்து வந்து ஒப்பந்தத்தில் வேலை பார்க்கிறார்”
“எத்தனை வருஷ ஒப்பந்தம்? விசாரிச்சிருப்பியே?”
“இல்லை”
“குடும்பத்தைப்பத்தி தெரியுமா?”
“தெரியாது”
“சரி ஒப்பந்தம் முடிஞ்சி பாலா ஊருக்குத் திரும்பிப்போக வேண்டியிருக்கும் இல்லையா?”
‘ஆமாம்’ எனும் பாவனையில் கலாவின் தலையசைப்பு. “அதுமாதிரி ஒருத்தனை உள்ளூர்ப்பெண் கல்யாணம் கட்டிக் கிட்டா அவனோடு போயிடணும். இரண்டுபேரும் இங்கே தங்கி வாழ்க்கை நடத்த முடியாது. இது உனக்குத் தெரியும், இல்லையா?”
‘தெரியும்’ என்பதற்கு மீண்டும் ஒரு தலையசைப்பு,
“நல்லது கலா. நீ ஒரு முடிவுக்கு வந்திருக்கிறே.. அது புரியுது எனக்கு.. இப்ப நீ பார்க்கிற வேலை, இந்த ஊர் குடியுரிமை, வாழ்க்கை வசதி எல்லாத்தையும் விட்டுட்டு அந்தப்பையனோடு வாழ விரும்பறே., அவன் ஊரில்… இல்லையா?”
பளிச்சென்று அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“பயந்திடாதே கலா.. இதுக்கு நான் தடையா இருக்கமாட்டேன். கலாவுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுன்னு சொல்லிட்டுப் போயிருக்கிறார் அப்பா அந்த கடமை எனக்கு இருக்கு. நீ சுகப் படறதுக்கு இந்தக் கலியாணம் தான் வழின்னா உன் பிரிவைத் தாங்கிக் கொள்ள நான் தயார். ஒப்பந்தத்தில் வந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி இந்த ஊர்வாசியாக சந்தர்ப்பம் இல்லே.. அதனாலே அவனுடைய ஊரைத் தேடித்தான் நீ போய்ச் சேரணும்.. என்ன செய்ய முடியும். நீ அவனை விரும்புறியே!”
சில நிமிட அமைதிக்குப் பிறகு அருண் தொடர்ந்தான். “கலா இனி எதையும் தள்ளிப் போடுவதில் அர்த்தம் இல்லை. பாலாவை நான் பார்த்துப் பேசவேண்டும். சில பின்னணி எனக்குத் தெரிய வேண்டி இருக்கு. நாளை ஞாயிற்றுக் கிழமை. நீ அவனைச் சந்திக்கலாம். இங்கேயே பாலாவை அழைத்தால் நானும் பேசின மாதிரி இருக்கும். அழைக்கலாம் இல்லையா?”
கலா ஒப்புக்கொண்டாள். அவள் நிம்மதியடைந்த வளாகத் தோன்றினாள் அருண் அவளைக் கவனித்துவிட்டு, “கலா பின்னணி, பின்னணின்னு நான் அடிச்சிக்கிறேன்னு உனக்கு எரிச்சலாகக் கூட இருக்கும். அதுக்குக் காரணம் என் வயது.. அப்பாவுடைய அறிவுரை காதல், கல்யாணம் என்பதெல்லாம் வாழ்க்கையிலே பெரிய விஷயம். சுயமா முடிவு செய்கிற உரிமை இருக்கலாம். ஆனால் மூத்தவர் களுடைய ஆலோசனையும் அதில் ரொம்ப முக்கியம்!” என்றான்.
விசாரணை முடிவுக்கு வந்தது. அண்ணி அறையிலிருந்து வெளியே வந்தாள். குழந்தைகள் தலை காட்டினார்கள். டெலிவிஷனைத் திறந்தார்கள், மாலை நேரக் கலகலப்பு திரும்பியது வீட்டில்.
ஞாயிற்றுக் கிழமை விடிந்தது.
கலாவின் எதிர்காலத்தை – திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் நான்.
ஒரு புதிய விருந்தாளியை வரவேற்க இந்த அடுக்கு மாடி வீடு தயாராகிக் கொண்டிருக்கிறது வீடியோவில் பார்த்த இளைஞன். கலாவைக் கவர்ந்த அழகன் வீடு தேடி வரப்போகிறான். “வீடியோவில் பார்க்கிறதுக்கு பையன் அழகாகவே இருந்தான். நேரில் பார்த்துப் பேசினால்தானே எதுவும் தெரியும்” என்று அருணிடம் சொன்னாள் மனைவி.
காலை ஒன்பது மணி இருக்கும்.
பசியாறிவிட்டு உட்கார்ந்திருந்த அருண் கலாவைத் தேடினான் பாலா எப்பொழுது வருவான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளும் ஆவல். மனைவியைக் கூப்பிட்டான், ‘கலா பசியாறிவிட்டாளா?’ என்று விசாரித்தான்.
“இல்லை. அது அறையிலேயே உட்கார்ந்து..
“என்ன செய்கிறாள்?”
“கூப்பிடட்டுமா?” என்றாள் அண்ணி.
கலாவை அவனே அழைத்தான்.
அறையிலிருந்து சந்தடியில்லாமல் வந்தாள்.
“கலா, நீ பாட்டுக்கு அறையிலேயே உட்கார்ந்திருந்தால் எப்படி? பாலாவை எப்பவரச் சொல்லியிருக்கிறே? நேரம் தெரிஞ்சால்தானே அண்ணி பலகாரம் செய்து வைக்க வசதியா இருக்கும்!” என்றான் அருண்.
கலா பேசவில்லை.
“வெட்கமா கலா? பொறுப்பை என்னிடம் விட்டுவிடு கூச்சமில்லாம இப்ப நீ பேசணும்!” என்று ஏக காலத்தில் அண்ணனும் அண்ணியும் கேட்டார்கள்.
பதில் பேசாமல் கையில் வைத்திருந்த அன்றைய பத்திரிகையை அருணிடம் கொடுத்தாள் கலா மடிக்கப்பட்டிருந்த அந்தப் பத்திரிகையில் பளிச்சிட்ட செய்தி அருணின் பார்வையைப் பறித்தது.
‘அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் தங்கிய கட்டுமானத் தொழிலாளிகள் கைது – குடி நுழைவுத் துறை நடவடிக்கை’ என்ற தலைப்பில் பிடிப்பட்ட சிலரின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. பாஸ்போர்ட் சைஸ் படம் ஒன்றுக்குக் கீழ் பாலா என்ற பெயர் காணப்பட்டது.
பரபரப்போடு செய்தியைப் படித்தான் அருண்.
அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் சிங்கப்பூரில் தங்கி கள்ளத்தனமாக வேலை பார்த்து வந்த ஒரு கும்பலை போலீஸ் உதவியுடன் குடி நுழைவுத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய திடீர்ச் சோதனைகளின் போது கைது செய்தனர். அவர்களில் பாலா என்கிற பால கிருஷ்ணனும் ஒருவர். விசா காலா வதியான அவர் பல மாதங்களாக இங்கு சட்ட விரோதமாகத் தங்கி வேலை பார்த்து வந்ததாகக் கூறப்பட்டது. அவர் முன்பு வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.”
விரிவான செய்தியைப் படித்து விட்டு கலாவைப் பார்த்தான் அருண்.
“கலா, பின்னணி தெரியணும்னு நான் சொன்னதை இப்ப நீ ஒத்துக் கொள்வேன்னு நினைக்கிறேன்.
பலருடைய பின்னணி எனக்குத் தெரியும். உன்னை விட வயசிலே நான் மூத்தவன், இல்லையா? இந்தச் செய்தி என் தங்கச்சியைப் பாதிக்கக் கூடாது. இது ஒரு கனவு மாதிரி தான்!” ஆதரவோடு கலாவைத் தேற்றிக் கொண்டிருந்தான் அண்ணன்.
– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.