கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2025
பார்வையிட்டோர்: 317 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஐயா, தபால்”

ஆபீஸ் பையன் ஒரு கடிதத்தை நீட்டிவிட்டு அப்பால் நகருகிறான். 

பிரித்துப் படிக்கும் நாதனின் கண் மலர்களின் இதழ் கள் ஆச்சரியத்தால் விரிந்தன. அவற்றில் நுண்ணிய குருதிக் குழாய்கள் நிறைந்து தடிப்பேறி ஒளிப்பிளம்பா கின்றன. 

இதயப் பாளையின் வெடிப்பினூடாக, சோகம் எனும் அருவி பொசிகிறது. 

கண்ணால் பார்க்கிறான். ‘கோணல் மாணலாக’ காகித வரிகளைத் தாண்டி நிற்கும் எழுத்து அவனது மனத்தை ஊசிக் குத்தாகிக் குடைகிறது. வைரமான கல் இதயத் தைக் கசக்கிப் பிழிந்து சாறெடுக்கிறது… அந்தச் சாற் றில் மலரும் உணர்வு… இவ்வளவு நாளும், ஒளிந்து மூலை யில் ஒடுங்கிக் கிடந்து இன்று மறுமலர்ச்சியுற்று உடம் புடன் உயிராக மணக்கிறது. கண்மலரில் இருந்து சிந்துவது…? கரிக்கும் கண்ணீர், 

“அண்ணா… 

அம்மாவினால் எழுந்து நடக்க முடியாது. படுக்கையில் தங்களைப் பற்றிய நினைவாகவே பிதற்றிக் கொண்டிருக்கிறாள்… அம்மா மீது கோபமிருந்தாலும் உங்கள் அன்புத் தங்கை கடைசியாக இரந்து கேட்கிறேன். ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போங்களேன். உங்களுக்குத்தான் என் நினைவு கூட அற்றுப் போய் விட்டது. ஏன் உங்கள் மகனை வந்து பார்க்கவில்லை என்றா…? பார்க்க ஆசைதான். அவனுடன் அழைந்து குழைந்து மகிழ வேண்டும்; தலைவாரி விடவேண்டும் என்று கொள்ளை ஆசைதான்… ஆனால் நீங்கள் நம்மிடம் வந்து போகாத காரணத்தால் அம்மா என்னை விட்டால் தானே! உங்கள் மகன் எப்படியிருக்கிறான்? கறுப்பா அல்லது உங்களைப் போலவே சிவப்பாக இருக்கிறானா…? 

தான் செய்தது என்னமோ தப்புத்தானாம் அதற்காகத் தன் மீது ஒரே அடியாகப் பழிவாங்குவதா என்றும்; ஏதோ ஒரு கோபத்தில் சொல்லி விட்டால் வீட்டுப்பக்கமே வராமல் முழுக்குப் போட்டு விட்டீர்களாம் என்று தனக்குள் வருந்திக் கொண்டிருக்கிறாள் அம்மா… 

இப்பொழுது எங்கள் நிலைமையை உங்களிடம் மறைப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. அம்மாவுக்கு மருந்து வாங்கிக் கொடுக்க முடியவில்லை. வேறு இனம் சனம் என்று யார் இருக்கிறார்கள்? துரையப்பா மாமா வீட்டைத் தவிர; எப்பொழுதும் படியளந்து கொண்டிருக்க அவர்களால் எப்படி முடியும்? ஏதோ வருகிறார்கள் போகிறார்கள்; அவ்வளவுதான். அதற்கு மேல் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்? அண்ணியைப் பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. என்ன செய்வது? கண்டிப்பாக வாருங்கள். இந்தமுறை வருவீர்கள் அல்லவா? 

-தங்கை 

ரோகிணியின் விருப்பினால் தாயையே உதறி வந்தது ஒரு வசையில் அவனுக்கு ராசிதான். கைப்பிடித்த அந்த வாரமே பதவி உயர்வு கிடைத்தது. அதை மெச்சாமல் இருக்க முடியாது. அவளது குணம் எவ்வளவு தங்கமானது. 

இதற்கு முன் பலமுறை கேட்டுத் தணிந்த ஆவல்… “உங்கள் தாயை ஒரு முறை பார்த்தாலென்ன?” 

“எனக்கு என்னவோ விருப்பமில்லை. வீட்டு வாசல் படி மிதிக்க வேண்டாமென்று சொன்ன வீட்டுக்குப் போவது நல்லதா? நீயும்கூட வந்திருந்தால் உன்னைப் பற்றி அவர்கள் திட்டியதைக் கேட்டிருந்தால் உண்மையிலேயே அங்கு போக வேண்டுமென்று நீ விருப்பப்பட்டிருக்கமாட்டாய்…!” 

“பெண்களைப்பற்றிப் பெண்களுக்குத்தான் தெரியும். தாய் ஒருக்கால் அடிப்பாள் மறுக்கால் அணைப்பாள்.” 

“தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதே. எது வேண்டுமானாலும் பேசு, ஆனால் இந்த விடயத்தை மட்டும் முன் எடுக்காதே…” 

“சரி உங்கள் விருப்பம். எனக்குப் பட்டதைச் சொன்னேன்…”

“அவள் சொல்லியது எவ்வளவு உண்மை…!” 

மீண்டும் கடிதத்தில் கண்கள் மொய்க்கின் றன. வேதனையின் கோரக் கதிர்களைத் தாங்க மாட்டாது விம்முகிறது நெஞ்சம். முகத்தில் முன்னைய ஒளியில்லை. எல்லாம் ஒரே கருமை. 

கன்னத்தில் கொடுத்திருக்கும் கரம் பாரத்தைத் தாங்க இயலாது சோர்ந்து வெயிலில் வாடிய கீரைத் தண்டாக வீழ்கிறது… 

நினைவுப்பாளை வெடித்துச் சிரிக்கிறது…! 

தாய்… 

பெறாமல் பெற்று வளர்த்த தாய்… என் எதிரில் கறை படிந்த… துருவேறிய இதயத்தைத் துடைத்து வீறிட்டு எட்டிப் பார்க்கிறாள்… 

“அம்மா” 

ஆம் அவள் யார்…? 

அன்புத் தடாகத்தில் நீந்திப் பூரிக்கிறாள்… 

பிள்ளையாரே… குடவயிறா, எப்படியாவது அம்மாவின் நோயைக் குணப்படுத்திவிடு, எழுந்து முன்போல் ஊசாட வழிவிடு. என் அறியாமைக்குப் பிராயச்சித்தமாக என் னால் ஆனதைச் செய்கிறேன்… 

“தாயில்லா எனக்குத் தாயாக இருந்து அவள் கட்டி யெழுப்பிய அன்புக் கோட்டையைத் தகர்த்தெறிந்த எனது கல் மனத்துக்கு…” 

அதன்பின் அவனால் நிற்க முடியவில்லை. உடனே லீவு கோரி எழுதிவிட்டு வீட்டிற்குப் போய்விட்டான். 

2 

நடு இரவு.

ஊர் உறக்கம் என்னும் போர்வையுள் மூழ்கிவிட் டிருந்தது. மாரி காலம் வெள்ளம் வயல்களில் முட்டி வழி கிறது. பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை கீக்…கீக்… கீக்…. என்று அலறுகிறது. தென்னை வட்டுள் இருந்து நத்து “நக். நக்” என்று கத்துகிறது. 

“எடியே புள்ளை, விளக்கைக் கொழுத்தடி; பயமாக இருக்கு… கமலம்… கமலம் …” 

ஈனக்குரல் எழுந்து ஓலமிடுகிறது. 

கமலம் நித்திரையில் தூங்கி வழிந்துகொண்டிருந் தாள். புனிதத்தின் அரற்றல்கேட்டுத் துடித்துப் பதைத்து எழுந்து உட்கார்ந்தாள், 

“என்னம்மா…” 

“எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது. விளக்கைக் கொழுத்தடி…” 

“அப்பா-ஆ -அப்பா …ஆ…” 

புனிதம் வெட்டிப்போட்ட நாக்கிளிப் புழுவாக நெளிகிறாள்… 

கமலம் கண்ணைத் துடைத்த படி கைகளை விளக்கிருந்த பக்கமாக நீட்டித் தட்டுத் தடுமாறி மண்ணெண்ணெய்ப் புட்டி விளக்கை எடுத்து ஏற்றினாள்… 

ஒளி பிரகாசமாக இல்லை. அலைப்பில் காற்றின் நடுங்கி அங்கும்மிங்கும் அசைந்தாடிக்கொண்டிருந்தது. கைவிளக்கு கருமை கலந்த மஞ்சள் நிறச்சுவாலை அணைந்து விடத் துடிக்கிறது. 

கமலத்தின் முகத்தில் களை நிழலாடியது. தாயின் உடலைத் தொட்டுப் பார்க்கிறாள். உடல் அனலாகக் கொதிக்கிறது. 

காய்ச்சலுக்குத் தாய் குடிநீர் போட்டுக்கொடுத்தாள் என்பது நினைவில் வர சுக்கு, மிளகு டப்பாக்களைத் திறந்து பார்க்கிறாள். தகரங்களில் வெறுமை… வேறு யாரிடம் வாங்குவது? பக்கத்தில் வீடுகளில்லை. துரையப்பா மாமா வீட்டிற்குப் போவதற்கு ஒரு பெர்லாங்கு தூரம் நீரில் மிதந்து செல்ல வேண்டும்….. 

வீட்டிலிருந்து வெளியே வந்து பார்க்கிறாள் கமலம்… 

வானத்தில் பேருக்குக்கூட வெள்ளி பூக்கவில்லை. ஒரே இருள்… காற்றில் தென்னோலை இறகுகள் படபடத்துக் கொள்கின்றன… 

“அம்மாடி இந்த இருட்டுகுள்ளாலை எப்படிப் போவது; விடியட்டும் பாப்பம்” என மனதுள் முணு முணுத்துக் கொண்டு திரும்பவும் கொட்டிலின் உள் புகுந்துவிட்டாள்… 

“நாளைக் காலை அண்ணன் வந்திடுவார்… அவர்முன் போல் வரவில்லை என்றால் ..? அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகக் குறைந்தது ஐந்து ரூபாயாவது வேண்டுமே, எங்கே போவது…? ஒரு சதம்கூட கையில் இல்லையே…” 

எண்ணும்போது நெஞ்சு பொருமுகிறது. தாயைத் திரும்பிப் பார்க்கிறாள். அழவேண்டும் போலிருக்கிறது. அந்தச் சிறுமியின் உள்ளத்திற்கூடக் கவலை நெட்டுயிர்க் கிறது… 

தாயின் தலையைத் தன் மடியில் தூக்கி வைத்து “உடம்பை அலட்டாமல் தூங்கம்மா” 

எனச் சொல்லிப் பிஞ்சுக் கரங்களால் முகத்தைத்தடவி விட்டுக்கொண்டிருந்தாள்… 

தன் பிள்ளையின் கரத்தின் வருடலில் புனிதாவுக்கு சற்று நின்மதி பிறந்தது. கமலாவின் கைகளைப் பற்றி நெஞ்சுடன் அணைத்தாள். அந்த அணைப்பில் இன்பத்தை அடைவதாக உணர்ந்தாள்… 

ஆனால்…? 

நாதனைக்காண முடியாதது தாகமாக இருக்கிறது… 

“நாதன் வரவில்லையா?” 

அவள் மௌனமாகத் தலையசைத்து விடையளிக்கிறாள்… 

“அம்மா பிள்ளையென்ற பெயரளவில் என்னாம் எதைச் செய்ய முடிந்தது… என் துர் அதிஷ்டம் உன்ன வாட்டி வதைக்கிறது” 

“மகளே நீயாவது எனக்குத் துணையாக இருக்கிறாயே இதைவிட வேறு என்ன வேண்டும்…”

சற்றைக் கெல்லாம் புனிதா உறங்கிவிட்டாள்… 

3

விடிந்தது…! 

தாய்க்குக் குடிநீர் போட்டுப் பருக்கினாள் கமலம். கிடந்த கிடையில் “மடக்… மடக்” இரண்டு மூன்று மிடறு குடித்தாள். சில விநாடிகள் ஆகவில்லை வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. கமுக்… கமுக் என வாந்தி எடுத்தாள் 

“நாதன் வந்திருக்கிறானா…?” 

“அவரை வரவேண்டாமென்று பேசிப்போட்டு இப்ப வந்தாரோ என்றால்…?” 

அந்த நேரத்தில் இருந்த ஆத்திரத்தில் பேசிப்போட்டேன். அதற்காக என்மீது வெறுப்பா….அவனுக்கு என்மீது உண்மையாகவே அன்பில்லையா…? எனக்கு ஒன் றென்றால் ஒற்றைக் காலில் நின்றானே! குஞ்சியம்மா ஒத்தடம் பிடிக்கவா, காலைப் பிடிக்கவா; தைலம் போடவா… என்ன செய்யவேணும் சொல்லன் என்பானே அப்படிப் பட்ட அவன் இன்றுவரை மறந்திருக்கிறானே… 

அவன்மீது இனம் தெரியாத பிரியம் தளிர்விட்டுக் கிளை பரப்பி வேரூன்றி என் மனதில் பதிந்து நிற்கின்றதே.* அவன் மறந்துவிட்டான். ஆனால் என்னால் மறக்க இயல வில்லையே… நான் செய்த வேலைக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்… தங்கச்சி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை… கண் ஒளி மங்கிவிட்டது. பூமி.சுழல்வது போல் இருக்கிறது… 

“உன் அப்பா கூப்பிடுகிறார் நான் போறன்… நாதன்… நாதன்.” 

வார்த்தை முடியவில்லை ஒரு நெடு மூச்சு, அதன்பின் உடம்பில் அசைவாட்டமில்லை… 

கமலம் அழுதாள் “ஐயோ அம்மா என்னை விட்டிட்டுப் போயிட்டியோ…” 


அப்பொழுதுதான் வளவில் நுழைந்த நாதனுக்கு அழுகுரல் கேட்கிறது. அவனது கையில் இருந்த பார்சல் நழுவி கீழே தொப்பென்று விழுகிறது. ஓடிச் சென்று உள்ளே பார்க்கிறான். 

அங்கே- 

உடலெல்லாம் ஒட்டி உலர்ந்து சதை சுருங்கி ஓடா கிக் கூனிக் குறாவி உயிரற்ற சடலம் முடங்கிக் கிடக் கிறது … 

“அம்மா… அம்மா…” வாய் திறந்து கத்துகிறான். இல்லை – ஓலமிடுகிறான். அந்த ஓலம் வெறுமனே தென் னந் சோலையுள் எதிரொலிக்கிறது… 

“அம்மா… அம்மா…” 

பிள்ளையார்கூட அவனது வேண்டுகோளை நிறை வேற்றவில்லை. அவன் இரங்கலுக்குச் செவிசாய்க்கவில்லை.. 

ரோகிணி கமலத்தைக் கட்டிப்பிடித்துக் கத்துகிறாள். வெம்பி வெம்பி வெடித்துச் சிதறும் அழுகையை முட்டுக்கட்டை போட்டுத் தடுக்க முடியவில்லை. இதயத்தின் ஆழத்தில் பதிந்துவிட்ட அவள் அன்பு எனும் சுனைப் பெருக்கில் ஆத்திரம் தளைவிடுகிறது… 

யாருக்கு யார் ஆறுதல்… 

நாதன் கமலத்தின் கண்களில் வழிந்தோடும் கவலை நீரைத் துடைக்கிறான். 

“அழாதே…” 

நாக்குத் தடுமாறுகிறது. இதயத்தில் ஊறிப் பெருகி வரும் உணர்ச்சி அலைகள் செறிந்த முகத்து விழிகள் கண்ணீர்க் கடலுள்ளே மறைகின்றன. 

– ஈழநாடு, மார்கழி 1964.

– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *