பசுமரத்தாணி





(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஓசை…
இளமையின் துடிப்பிலே அந்த ஓசை அவனுக்கு எத் தகைய வேடிக்கையை எழுப்பியது.
அடுத்தவீட்டு வேலியைக் பிய்த்துக்கொண்டு தலையை எட்டிப் பார்த்து… முற்றத்தில் நாலு பேர் குந்தியிருந்து அந்த மேளத்தைதட்ட, அண்டை அயலிலுள்ள பெண்கள் எல்லாம் தம்முன் தாமே கட்டியணைத்து நெடுங்குரல் எடுத்து ஒப்பாரி இட்டபோது எத்தனை வேடிக்கையாக – பொழுதுபோக்காக இருந்தது.
கணேசனும் வேறு பையன்களும் அந்தப் பெண்களைப் போல் பாவனை செய்து ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அழுதார்களே… அதெல்லாம் குழந்தைப்பிள்ளை விளை யாட்டுத்தான். அப்படியானால் பறைமேளச் சப்தம் என்பது மனிதன் உள்ளத்தில் தீராத சோகத்தை உணர்த்துவதற் கென்று தருவிக்கப்பட்டதுதானா?
இரு காதுகளையும் பொத்திக்கொண்டான் கணேசன் –
சின்னஞ்சிறு வயதில் விளையாட்டாகப் பட்ட அந்த ஓசை இன்று ..
நினைக்கவும், அந்த ஓசையோடு சம்பந்தப்பட்ட எந்த சம்பிரதாயச் சடங்குகளையும் காணமுடியாதபடி பனித்த கண்கள் திரையாக மாறின. முற்றத்தை அடுத்த பூவரச மரத்தடியில் ஒன்றுந் தோன்றாத பைத்திய நிலையில் இரண்டு அங்கைகளாலும் முகத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான்…
புதிதாக வருவோர்க்கெல்லாம். பறையை முழக்கிக் காட்டி, கூடியிருந்த சுற்றத்தவர்களைக் கைநீட்டி அழுது வரவேற்கச் செய்கிறார்கள் பறை தட்டுவோர்.
அவரவர் திறமையை வெளிப்படுத்திக் குரலை நீட்டி யும், முழக்கியும் அழுகிறார்கள் சிலர். நின்ற நிலையில் மார்பில் கரங்களால் குத்தி அத்துமீறிய சோகத்தில் தம் உடலையே நோக்காடடையச் செய்கின்றார்கள். உரிமை யுள்ள உறவுப் பெண்கள்.
கணேசன் பூவரச மரத்தடியில் இன்னும் இருக்கின்றான்.
சூழ உள்ளவர்கள் செத்துவிட்ட யோகனைப் பற்றி என்னென்னமோ நல்ல தனமாகப் பேசுகின்றார்கள்.
“வாழவேண்டிய சின்ன வயது. வெம்பல்போல பருவத்துக்கு முந்திப் போகவேண்டுமென்று பிரமன் தலை யில் எழுதிவிட்டான். விதியை யாரால் பிடிக்க முடியும்…”
“பாவம் சின்னாச்சி அந்தப் பொடியனை எப்பிடி எப்பிடி வளர்த்தாள்…”
“என்னப்பா, உந்தப் பெடியனுக்கு இருந்தாப்போல் என்ன வந்தது. முந்தநாள் சும்மா உரல் குத்திபோல் நின்றானே. சே! ஆண்டவன் யாரைத்தான் விட்டு வைக்கிறான்.”
தத்துவ, யதார்த்த விளக்கங்கள் விதியின்மீது பாரத்தைப் போடும் ஆஸ்திகப் போக்கு இப்படியெல்லாம் குந்தியிருக்கின்றவர்கள் வெறும் வாயை வைத்திருக்க முடியாமல் எதை எதையோ பேசி செத்துவிட்ட மனிதனுக் காக அல்ல, வந்துவிட்டதால் சாகவேண்டிய நேரத்துக் காக எதையெதையெல்லாமோ பேசித் தொலைத்துக் கொண்டிருந்தார்கள்.
கண்ணில் வடிந்த நீர்த்துளிகளை ஒரு கையால் வழித்து எறிந்து விட்டுக்கொண்டான் கணேசன்…
யார் யார் எதையெதையோ கதைத்துத் தீர்த்துக் கொள்ளட்டும். அவன் மனம் கடந்துவிட்ட காலத்தில் சென்று உயிரோடுள்ள தனது ஒன்றுவிட்ட சகோதரன் யோகனுடன் ஒன்றிக்கொள்கிறது.
ஒன்று இரண்டா?
எத்தனை எத்தனை சம்பவங்கள்… பசுமரத்தாணிபோல் நெஞ்சில் நிறுத்திட்டமாகப் பதிந்துவிட்ட காட்சிகள்… வயதில் இரண்டு பின்தங்கியவனானாலும் யோகன் வளர்த்தி உடல் பருமன் இவற்றில் கணேசனுக்கு ஈடுசோடானவன். ஒட்டிப் பிறவா இரட்டையர்கள் என்று கூடச் சொல்ல லாம், கிராமத்து வாசிகசாலைக் கூட்டங்கள் தொடங்கி கோவில் திருவிழாக்கள் வரை எங்கு சென்றாலும் இருவரை யும் ஒருவராகக் காணலாம்.
“என்னடா நீங்கள் இருவரும் மச்சான் முறையா கொண்டாடுகிறீர்கள், அண்ணன் தம்பியடா” என்று அம்மா ஒரு சில தடவை சுட்டிக் காட்டியிருக்கிறாள்.
உறவு முறையைக் கடந்த தோழமை. ஆனாலும் சம்பிரதாய பூர்வமாக அமைந்த மதிப்பில் எள்ளத்தனையும் குறைவுபட்டது கிடையாது. ‘அண்ணா’ என்று அவன் அழைக்கும்போது அத்தனை அன்பும் அந்த ஒரு சொல்லுக்குள் அடக்கமாகத் துலங்கும்.
“நான் இன்று மற்றவர்களால் இத்தனை கௌரவத் துக்குரியவனாக மதிக்கப்படுகிறேனே அந்தக் கௌரவத் துக்கு அடிகோலியவன் யோகன்”, வாய் வார்த்தைகளை உதிர்த்துக்கொள்ள, அதனூடு உண்டாகிய வேதனை நெடு மூச்சாக வெளிக்கிளம்பியது.
பூவரசமரத்தடியிலிருந்து எழுந்து சென்றான் கணேசன். அவனது சோகம் அவனுக்குள் கட்டுப்படாது பொங்கிப் பிரவகிப்பதை எவர் கண்டனர். யாருடனும் பேசவில்லை. வார்த்தைகளைக் கொட்டி அளந்துவிட்டால் உள்ளத்துத் துன்பம் முடிந்துவிடும் என்று சிலர் கருதலாம். அந்தக் கருத்து கணேசன் வரை அர்த்தமற்றது.
வாசலில் நின்று உள்ளே. கவனித்தான். உடலை வெளியேற்றும் சடங்குகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன…இவனைக் கண்டதும் யோகனின் தாய் கட்டியணைத்துக் குரலெடுத்துத் தனது சோகத்தை மிக அப்பட்டமாக வெளிக்காட்டினாள்.
“புல்லாகிப் பூடாய்
புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப்
பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்..”
“ஊர்வலத்தின் முன்னே நல்ல சரீரசுகம் படைத்தவர்கள் சிவபுராணம் பாடிச் செல்கிறார்கள். புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி, பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாய் கல்லாய் மனிதனாய்…
“மனிதனாய்க் கிடந்தவன் இன்று பிணமாகிவிட்டான் நாயோ நரியோ. கழுதையோ, கோழியோ அத்தனையும் உயிர் போய்விட்டபின் வெறும் பிணம். செத்துவிட்ட பிணத்தை இனிச் சாகும் பிணங்கள் தூக்கிச் சுமக் கின் றன.”
ஊருக்குள்ளே கொஞ்சம் ஆத்திகம் தெரிந்தவர் என்று சொல்லும் ஒருவர் சுடலை ஞானம் பேசுகிறார். அவரைப் பின்பற்றிச் செல்லுபவர் அதற்கு ஒத்துப் பாடிய படி நடக்கிறார் கணேசன் அவர்களுக்கருகில், காலத் தச்சன் வெட்டி முறித்துவிட்ட மரத்தை ஒட்டவைக்க முடியவில்லையே; இதற்கொரு விஞ்ஞான முன்னேற்றம் இல்லையா; என்ற புது உலகச் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடக்கிறான்.
பிரேதம் கோம்பைசாட்டி மணற்பரப்பில் வைத்தா யிற்று. வாத்தியக்காரர்கள், மற்றையவர்கள் நடந்த களைப்புத்தீர மண்டபத்தில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொள்கிறார்கள்.
சொந்தக்காரர் இஷ்டமானாக்கள் வந்து வாய்க்கரிசி போடுங்கவன்,, என கந்தையா சொல்லுகிறார். ஒவ்வொரு வரும் காசும் அரிசியும் எடுத்து விருப்பப்படியே போடுகிறார்கள்.
வரிசையில் அதோ கணேசனும் முன்னேறுகிறான் ஒரு கை சில்லறைக்காசிலும் மறுகை அரிசியிலும் அள்ளிக் கொண்டு நடந்து சென்று யோகனின் வாயருகே கொண்டு போகிறான்.
அவன் போடுமுன் கந்தையா கைகளைத் தட்டிவிடு கிறார். சில்லறைக் காசுகள் மணலில் ஒன்றன் மேலொன்றாய் விழுந்து மோதி ‘சிலிங்’ எனற ஓசையை ஏற்படுத்துகின்றன.
கணேசனுக்கு ஒன்றும் புரியவில்லை, ‘ஏன் கந்தையா என் கையைத் தட்டி விட வேண்டும்? தம்பிக்கு வாய்க்கரிசி போட உரிமையில்லையா? அருகதை அற்றவனா? எனக்காகப் பரிந்து பேசிய அவனுக்கு, அண்ணா அண்ணா என்று தேனொழுக, அன்பு சுரக்க அழைத்து இதயத்தில் தனக் கெனத் தனி இடத்தைப் பிடித்துக்கொண்டவனுக்கு இதை விட என்னால் என்ன செய்ய முடியும்?
கடமையைச் செய்யக்கூடத் தடையா? என்ன கார ணத்துக்காக இவர் தட்டி விடவேண்டும்…?
பலபேர் பக்கத்தில் நிற்கிறார்கள். அவர்கள் ஒவ் வொருவரையும் கணேசன் பார்க்கிறான். எவரும் காரணமோ ஆறுதலோ சொல்வாரில்லை. எல்லோரும் மெளனம் சாதித்து பிடித்து வைத்த பிள்ளையார்போல் நிற்கிறார்கள்…!
என்னை எவ்வளவு அவமானப்படுத்திவிட்டார்! இதற்கு இவரிடம் பழிக்குப்பழி தீர்த்துக்கொள்ளவேண்டும். கண் ணீர் ஓடி முகத்துடன் ஒட்டி உலர்ந்து உப்பு படிந்து விட்டது.
யோகனின் சடலத்தில் தி மூட்டப்பட்டது… எல் லோரும் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவனுக்கு யோகன்மீது பிரியம்தான். என்ன செய்வது? கந்தையா பெரியையாவின் செய்கைக்குத் தகுந்தபடி தாயிடம் சொல்லி ஏச்சு வேண்டிக் கொடுக்கவேண்டும் என்ற கர்வத்துடன் விரைகிறான்.
போனதும் முதல் வேலையாகத் தாயிடம் “அம்மா…அம்மா…நான்..”
“என்னடா?”
“நான் தம்பிக்கு வாய்க்கரிசி போடப் போக…”
“என்ன நீ…!”
“இல்லை, ஒன்றுமில்லை…… அவன் ஏதோ உளறுகிறான்.”
கந்தையா மூடி மறைக்கிறார்….தனிமையில் அழைத்து, “தாய் தகப்பன் இருக்கும் போது வேறு எவருக்கும் வாய்க்கரிசி போடக்கூடாது; இது வழக்கம்…” என்கிறார்.
– ஈழநாடு, கார்த்திகை 1963.
– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.