பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால்





“நேத்துலருந்தே இந்த நாத்தம் அடிக்குது. இன்னைக்குக் கொஞ்சம் அதிகமாயிட்டாப்ல தோணுது” என்றாள் பாமா. “எங்கிருந்து வருதோ தெரியல. வீட்டுக்கு வெளிய போனாலே கொமட்டுது. இன்னைக்கு முழுக்க கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடி வெக்க வேண்டியதாயிருச்சு.”

முதலில் அது சாக்கடை நாற்றமாக எண்ணப்பட்டது. பிறகு, காலனிக்கு வெளியே எங்காவது கொட்டி வைத்திருக்கிற பழைய குப்பைகளின் அழுகல் நாற்றமாக இருக்கும் என்ற யூகம்.
“தொழில்பேட்டை ஃபேக்டரி ஏதாவதுலர்ந்து வர்ற வேஸ்டேஜோட ஸ்மெல்லா இருக்கும்” என்றான் ப்ருத்வி, அடுத்த அறையிலிருந்து. மேஜை மீது வைத்து எதையோ எழுதிக்கொண்டிருந்தான் அவன். வீட்டுப் பாடமோ என்னவோ. கோடை விடுமுறையை ஊர் சுற்றிக் கழிக்க விடாமல் ஸம்மர் கோர்ஸில் சேர்த்துவிட்டது பாமாவின் யோசனை.
“இங்கதான் கொஞ்சம் சுகாதாரத்தோட இருக்கறமேன்னு நெனச்சிட்டிருந்தோம்.” பாமாவின் சலிப்பு.
அவளுக்கு குறுகலாள சந்து, வீதி அகத்தம், நெரிசலான வீடுகள், அடைசலான அறைகள் ஆகியவற்றில் மிகுந்த ஒவ்வாமை. முந்தைய வீடு, அப்படியான பகுதி ஒன்றில், அத்தகைய குறைகளோடு இருந்தது. அதனாலேயே, வாடகை சற்று அதிகமானாலும் பரவாயில்லை என்று, இங்கே குடி மாறியிருந்தனர்.
“ரொம்ப டீசண்ட்டான ஏரியா ஸார். உங்கள மாதிரி ஆஃபீஸர்களுக்குத் தகுந்த எடம்.” புரோக்கர் சொன்னது உண்மைதான். இந்த ஒன்றரை வருட காலமாக நடப்பில் அதை உணர்ந்திருக்கிறார் ரவீந்தர்.
நகர எல்லை என மாநகராட்சி குறிப்பிடுவதற்கும் தள்ளி, ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கே.கே. நகர். தெற்கு வடக்காக மொத்தம் பதினோரு முக்கிய வீதிகள். அவற்றைக் கிழ மேற்கில் குறுக்கு வெட்டும் தெருக்கள் நான்கு. இரண்டாவது குறுக்குத் தெருவுக்கும் மூன்றாவதுக்கும் இடைப்பட்டு, ஆறாவது வீதியில் ரவீந்தரின் ப்ளாட் உள்ளது.
எந்த நேரமும் தண்ணீர் வசதி. அடிப்படைத் தேவைகள் பலதுக்கும் அருகிலேயே வாய்ப்பு.
“இந்த மாதிரி எடம் அமையணுமே” என்கின்றனர் அலுவலக நண்பர்கள்.
அவர்களும் நாகரீகமான இடங்களில் வசிப்பவர்களே. முன்பு அவர்களைத் தனது வீட்டுக்கு அழைக்க இவருக்குத் தயக்கமாக இருக்கும். விருந்து முதலான விசேஷங்களில் கூட அவர்களை அழைக்காது தவிர்த்து விடுவார். காரணம், அவர் அப்போது வசித்த பகுதி அப்படிப்பட்டது.
அங்கே எப்போதும் இரைச்சலும், அனாவசிய சத்தங்களுமாக இருக்கும். பெண்களின் அண்டை வீட்டு வம்பளப்பு, குழாயடிச் சண்டை, ஆண்களுக்கு மனைவிகளுடன் தகராறு. பகலில்தான் இப்படி என்றால், ராத்திரியிலும் தொல்லை. சாப்பிட்டு முடிந்த பிறகு, வெட்டியான வாசல் பேச்சு. தெரு விளக்கு ஒளியில் அவரவர் வீட்டுப் படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொள்வார்கள். நாற்காலி, பெஞ்ச் ஆகியவையும் வாசலில் போடப்படும். சண்டை சக்கரவுகளை மறந்துவிட்டோ, காட்டிக் கொள்ளாமலோ, ஒன்று கூடி பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள் – சிறுவர், பெரியவர் பேதமில்லாமல். தூங்கச் செல்ல பதினொன்றரை ஆகிவிடும். அதுவரையிலான அவர்களின் சத்தத்தால் வீட்டுக்குள் இவர்களுக்கும் உறக்கம் கெடும்.
“போயும் போயும் இங்க வீடு பாத்தீங்களே” பாமா கரித்துக்கொட்டுவாள்.
போதாக்குறைக்கு தெருவாசிகள் இவர்கள் வீட்டிலிருந்த டி.வி.யைப் பார்ப்பதற்கென்றும் வந்து, அறைகளுக்குள் நிரம்பி வழிவார்கள். நிம்மதியாக ஒரு நிகழ்ச்சியையும் பார்க்க முடியாது. இந்த சிரமத்தினாலேயே கலர் டி.வி. வாங்கப் போறோம் எனச் சொல்லிவிட்டு, அந்தக் கருப்பு வெள்ளையை விற்றார் ரவீந்தர். கலர் வாங்கியது, இங்கு வந்த பிறகுதான்.
இங்கு தவறாமல் எல்லா வீடுகளிலும் டி.வி.யும், கேபிள் இணைப்பும் உள்ளன. அவரவர் வீட்டோடு, அதனதன் காம்பௌண்ட் சுவர்களுக்குள் அடங்கிவிடுகின்றனர். சாதாரணமாகவே, தேவையில்லாமல் யாரும் யார் வீட்டோடும் போக்குவரத்து வைத்துக்கொள்வதில்லை. குடும்ப விசேஷங்களுக்கு சம்பிரதாயமாக அழைக்கப்பட்டால், சம்பிரதாயமாகப் போய் தலையைக் காட்டிவிட்டு வருவதோடு சரி.
ஆண்களுக்கு தங்களது தொழில், வியாபாரம் அல்லது அலுவலகம் என்பதாக நேரம் கழிந்துவிடுகிறது. பெரும்பாலும் பெண்களும் வேலைக்குப் போகிறவர்களே. வீட்டு மனைவிகளாக உள்ளவர்களும் தங்களது குடும்பத்தைக் கவனிப்பதோடு நின்றுவிடுகின்றனர். ஒழிந்த வேளையில் சிலருக்கு அழகு நிலையம், தோட்டப் பராமரிப்பு, மாதர் சங்கம், இத்யாயி.
கே.கே. நகரின் சூழலே அமைதியானது. பரபரப்பற்ற மண் வீதிகள். அதிக நடமாட்டம் காணாது. வாகனங்கள் வந்து போகிற ஓசைகள் மட்டும் அவ்வப்போது கேட்டு மறையும். காய்கறி விற்கிற தள்ளு வண்டிக்காரன், பால்காரன் ஆகியவர்களின் குரல்கள்தான் பகலில் உரத்துக் கேட்கக் கூடியவை. இரவுகளில் கூர்க்காக்களின் விஸிலும், தடியைத் தட்டி எழுப்புகிற ஓசைகளும்.
இவற்றோடு சேர்ந்து இரண்டு நாட்களாக இந்த நாற்றம். காற்றின் திசையில், மேற்கே இருந்துதான் வருகிறது என்பது மட்டுமே உறுதியான கணிப்பானது.
அடுத்த நாள் காலையில் கொல்லைப்புறத்தில் நின்று பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது, காற்றில் அந்தத் தூர்நாற்றம் அதிகரித்திருப்பதை ரவீந்தர் உணர்ந்தார். பாதாளச் சாக்கடை உடைப்பு, தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவையும் இப்படி நாற்றமடிக்கக் கூடியதே என்றாலும், இது அதுவல்ல. ஏதோ அழுகிய வாடை.
“நாயோ பூனையோ செத்துக் கெடக்கும்னு நெனைக்கறேன்.” பக்கத்து ப்ளாட் ஜெகதீஷ், கழிவறைக்குத் தண்ணீர் பக்கெட்டுடன் நகர்ந்துகொண்டே, யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
பூக் கூடையுடன் செம்பருத்திச் செடியருகே நிற்கிற அவனது அம்மா பிறகு தட்டுப்பட்டாள்.
“செக்கண்ட் க்ராஸ் ஸ்ட்ரீட்டுக்கு அந்தப் பக்கம் இல்லையாம்டா. கடைக்குப் போயிட்டு வந்ததும் தாத்தா சொன்னாரு.”
அப்படியென்றால் இது பக்கத்தில் எங்காவதிருந்துதான் வருகிறது போலும் என்று பட்டது இவருக்கு.
ஸ்கூட்டரில் அலுவலகத்திற்குச் செல்லும்போது, ஜெகதீஷின் அம்மா சொன்னபடி, இரண்டாவது குறுக்குத் தெருவுக்கு அப்பால் அந்த நாற்றம் இல்லாததையும் கவனித்தார்.
சாயந்திரம் அதே வழியில் வீடு திரும்பி வரும்போது அனிச்சையாக அவரது முகம் மேற்கே பார்த்தது. இரண்டாவது குறுக்குத் தெருவில், அனுமந்த் ராவின் ப்ளாட்டிற்கு முன்பாக போலீஸ் ஜீப் நின்றிருந்தது. அவரது ப்ளாட்டில் போலீஸ்காரர்களோடு இங்குள்ள சிலரும் கூடியிருந்தனர். ப்ருத்வியும் அங்கே இருந்தான்.
வீட்டுக்கு வந்தபோது உள்ளே சாம்பிராணிப் புகை வாசம். பாமா, நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் போட்டாளாம்.
“எங்கிருந்து நாத்தமடிக்குதோன்னு பேசிட்டிருந்தமே,… அது ராவ் ப்ளாட்டிலிருந்துதான் வந்திருக்கும் போல. அங்க கீழ் போர்ஷன்ல குடியிருந்தாங்கல்ல,…”
“ஆமா,… ஸ்கூல் மாஸ்டரோட ஃபேமிலி தானே!?”
“அவங்களும் இருக்கறாங்க. அதுலயே மூணு ரூம் தனியா இன்னொருத்தருக்கு வாடகைக்கு விட்டிருக்கறாங்களே,… கதிரேசன்னு ஒரு வழுக்கைத் தலைக்காரர்.”
“ம்,… பாத்திருக்கறன்.”
பழக்கம் அவ்வளவாக இல்லாவிட்டாலும், அவரை ரவீந்தருக்குத் தெரியும். இவர் அலுவலகம் போகும்போது, நெற்றியில் விபூதிப் பட்டையோடு
பேருந்து நிறுத்தத்தில் நிற்பார். சற்றே மாறு கண் ஆசாமி. ஒரே ஒரு மகள், கான்வென்ட்டில் படிக்கிறாள். அந்தச் சிறுமிக்கு ஐந்து வயதிருக்கையில் கதிரேசனின் மனைவி விவாகரத்து வாங்கிக்கொண்டதாகவும் கேள்வி. யாரோ பெண்களின் மூலமாக அறிந்து பாமா சொன்னதுதான் அதுவும்.
“அவங்க ரூம்லருந்துதான் அந்த நாத்தம் வருதுன்னு தெரிஞ்சிருக்குது. கதவு பூட்டியிருக்குதாம். ராவ், போலீஸுக்குத் தகவல் சொல்லி வர வெச்சிருக்காரு. என்னன்னு தெரியல. ப்ருத்வியும் அங்கதான் போயிருக்கறான்.”
“பாத்தேன்” என்றவர், குழப்பத்துடன் பேன்ட்டிலிருந்து லுங்கிக்கு மாறினார். “நானும் போயிப் பாத்துட்டு வந்தறட்டுமா?”
‘போயிட்டு சீக்கிரம் வந்துருங்க. ப்ருத்வியையும் கூட்டிட்டு வாங்க. வேடிக்கை பாத்துட்டு அங்கேயே நின்னுடப் போறான்.”
ரவீந்தர் போலீஸ் ஜீப்புக்குப் பக்கமாகவே நின்று கவனித்தார். போலீஸ்காரர்கள் கதவைத் திறக்கிற முயற்சியில் இருந்தனர். இவருக்குப் பக்கமாக நின்றிருந்த ஜெகதீஷின் அப்பாவை விசாரிக்கவே, கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை எனவும், உட்புறமாகத் தாழிடப்பட்டிருக்க வேண்டுமெனவும் சொன்னார்.
பள்ளி ஆசிரியர் கண்ணாடியைக் கழற்றி வேட்டி நுனியில் துடைத்தவாறே இவரைப் பார்த்துப் புன்சிரித்தார். “ஷாலினிய வெகேஷன் லீவுக்காக தங்கச்சி ஊருக்குக் கூட்டிட்டுப் போகணும்னு எங்கிட்ட கூடச் சொன்னாருங்க. அதுக்கப்புறம்,… அவங்க ரெண்டு பேரும் கௌம்பிப் போனதையும், எங்க வீட்ல பாத்திருக்கறாங்க. போயி ஒரு நாலஞ்சு நாள் இருக்கும். கதவும் பூட்டித்தானே இருக்குதுன்னு விட்டுட்டோம். இப்ப,… இங்க இருந்துதான் ஸ்மெல் அடிக்குதுன்னு தெரிஞ்சு, பாக்கப்போனா,… கதவ வெளிய பூட்டல. கொண்டில பூட்டு பூட்டியிருக்குது. தாழ்ப்பாள மேலாப்புல வெறுமன சாத்தியிருக்குது. பாக்கறதுக்கு கதவப் பூட்டுனாப்புல ஒரு தோற்றம்.”
“எங்களுக்கே சாப்பிட முடியாத அளவுக்குக் கொமட்டிட்டிருந்துதே. நீங்க இவ்வளவு பக்கத்துல இருந்துட்டு, எப்படி ஸார் தாங்கிட்டீங்க?”
“என்ன – ஏதுன்னு எங்களுக்கும் விபரம் தெரியாதில்லையா? வீட்ட சுத்தியும் பினாயில், டெட்டால்னு தெளிச்சுவிட்டோம். இந்த ரெண்டு நாளாவே வீட்டுக்குள்ள அந்த நெடிதான்.” கண்ணாடி மறுபடியும் முகத்தில் பொருந்திக்கொண்டது.
ப்ருத்வி இவரைப் பார்த்துவிட்டு அருகே வந்து நின்றுகொண்டான். மூக்கைக் கைக்குட்டையால் மறைத்துக்கொண்டே ஆண்கள் சிலர் இன்னும் அனுமந்த் ராவ் ப்ளாட்டிற்குள் நின்றிருந்தனர். மேல் மாடியின் பால்கனியில் ராவின் மனைவியும், மகள்களும். சலனமற்ற முகத்துடன் அவர்கள் கீழே பார்த்துக்கொண்டிருந்தனர். இடையிடையே அனுமந்த் ராவை அவரது
மனைவி குஜராத்தில் ஏதோ கேட்டாள். நிமிர்ந்து நிமிர்ந்து, பீடா வாயில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.
இரண்டு கான்ஸ்டபிள்கள், “திருடனுக மாதிரி நாமளும் கதவ ஓடைக்க வேண்டியதாப் போச்சு” என்றவாறே ஜீப்பிற்கு வந்து, கடப்பாரை மாதிரியான ஆயுதங்களை மேலும் எடுத்துக்கொண்டு சென்றனர். எஸ்.ஐ., கைக்குட்டையால் மூக்கைப் பொத்தியவாறே, இன்னொரு கையில் லாட்டியுடன் மற்ற போலீஸ்களை ஏவிக்கொண்டிருந்தார்.
கதவு பெயர்த்துத் திறக்கப்பட்டது. கதிரேசன் அறையின் கதவைத் திறந்து உள்ளே போலீஸ் நுழையவே, அனுமந்த் ராவும் பின்தொடர்ந்தார். என்ன ஆயிற்றோ, சட்டென வெறும் கையில் மூக்கையும் வாயையும் அழுத்திப் பொத்தியவாறு வேகமாகத் திரும்பிவிட்டார். காம்பௌண்ட் சுவருக்கு அந்தப்புறமாக, கீழே குனிந்த வசத்தில் அவர் காறித் துப்புவதும், ஓங்கரிப்பதும் தெரிந்தது.
பால்கனி மனைவி பதற்றமாய் குஜராத்தியில் என்ன ஏதெனக் கேட்டுக் கொண்டிருந்தாள். ராவின் வலது கை மட்டும் உயர்ந்து ‘ஒன்றுமில்லை’ என்பதான பாவனையில் ஆடியது. எனினும் அவள் கீழிறங்கி வரக் கூடிய அறிகுறிகள் காணப்பட்டன.
“நீ இங்கயே இரு.” ப்ருத்வியிடம் சொல்லிவிட்டு ரவீந்தர் உள்ளே சென்றார். போலீஸ் நுழைந்த அறைகளுக்கு, மூக்கைப் பொத்தியவாறே தயங்கி நடந்தார். முதல் அறையில் வித்தியாசமாக ஒன்றையும் காணோம். அடுத்த அறைக்குள் எட்டிப் பார்த்தார். போலீஸ்காரர்களின் இயக்கத்திற்கிடையே, படுக்கைக்குக் கீழே தாறுமாறாக அது அசையாமல் கிடந்தது. குப்புற விழுந்த மாதிரியும் இருந்தது. ஈயும் எறும்பும் மொய்த்து, உடல் வீக்கம் கண்டிருந்தது. முகம் தெரியாவிட்டாலும், அந்த வழுக்கைத் தலையை வைத்தே கதிரேசன் எனச் சொல்லிவிட முடியும்.
“அது என்னன்னு பாருங்க.” எஸ்.ஐ.யின் லாட்டி கான்ஸ்டபிளிடம் சுட் டும் திசையை ரவீந்தரும் பார்வையிட்டார். பழுப்பு நிறத்தில் சிறிய பாட்டில். கான்ஸ்டபிள் ரேகை படாமல் அதை எடுத்துக் கொடுத்தபோது, உள்ளே இருப்பவை மாத்திரைகள் எனத் தெரிந்தது.
இவருக்குப் பின்பாகவும் முன்பாகவும் வந்திருந்தவர்கள் சுவாசிக்க முடியாமல் நல்ல காற்றுக்கு வெளியில் வரவே, ரவீந்தரும் வெளியேறினார். அனுமந்த் ராவைத் தோளணைத்துப் பிடித்தபடி ஓரமாகக் கூட்டிச் சென்று நிறுத்தியிருந்தாள் அவரது மனைவி. வெளியிலேயே நின்றுவிட்டவர்கள் உள்ளிருந்து வந்தவர்களை விசாரிக்கத் தொடங்கினர். பார்த்தவர்கள் தங்களுக்குள்ளும் பேசிக்கொண்டனர்.
“அந்த பாட்டில்ல இருந்தது என்னவா இருக்கும்? தூக்க மாத்தரையா?”
“இருக்கலாம். இல்லன்னா, வேற ஏதாவது மருந்து. அவரு ஒரு ஹார்ட் பேஷன்ட்டா இருந்து, திடீர்னு அட்டாக் வந்திருக்கலாம். தொணைக்கு மகளும்
இல்ல. அவரே எந்திரிச்சு, மாத்திரை எடுத்து சாப்பிடறதுக்குள்ள, தவறி விழுந்திருக்கலாமே!”
“ஒருவேளை ‘கிக்’ல கூட நிதானம் இல்லாமப் போயிட்டதால…”
யூகங்கள் ஸ்ட்ரெக்சர் வரவால் தடைபட்டன. யூகித்தவர் விலகினர். கதிரேசன், வெள்ளைத் துணி போர்த்தி, ஒரு நாற்றச் சதைக் குவியலாக ஆம்புலன்ஸிற்குள் செலுத்தப்பட்டார்.
வெளியே போலீஸின் விசாரணை மற்றும் சடங்குகள்.
“எப்படி டேடி செத்திருப்பாரு அவரு?” ப்ருத்வியின் கேள்விக்கு போலீஸைக் காட்டினார் ரவீந்தர். “அவங்க போஸ்ட் மார்டம் பண்ணி முடிச்சதுக்கப்புறம்தான் அது தெரியும்.”
பள்ளி ஆசிரியர் தன் வீட்டினரோடு போய் நின்றுகொண்டிருந்தார். போலீஸ் அவர்களிடமும், ராவ் குடும்பத்தாரிடமும் விசாரித்து, குறிப்பு எழுதிக்கொண்டது. மற்றவர்கள் ஒவ்வொருவராக விலகி, தெருவுக்கு வர ஆரம்பித்தனர்.
“பாவம், அந்தப் பொண்ணுக்கு இனி எப்ப தகவல் கெடைக்குமோ? கடைசியா அப்பா முகத்தைப் பாக்கக் கூட முடியாமப் போயிருச்சு அதுக்கு.” கிழவர் ஒருவர் தன் போக்கில் சொல்லிக்கொண்டு போனார்.
ப்ருத்வி எதையோ கேட்க வாயெடுக்கும்போதே உள்ளிருந்து வந்தவர்களில் ஒருவர் இவர்களை நெருங்கினார். ரவீந்தரை உன்னித்துப் பார்த்துவிட்டு, “எக்ஸ்க்யூஸ் மீ. நீங்க ஈ.பி.லதான ஒர்க் பண்றீங்க?” என்றார்.
“ஆமா…”
“அதானே பாத்தேன்!” என்று சிரித்தார் அவர். “உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு, அப்பப் புடிச்சு யோசிச்சுட்டே இருந்தேன். நான் உங்க ஏ.ஓ. மிஸ்டர் செல்வராஜைப் பாக்க வருவேன் ஸார். அவர் என்னோட ஃப்ரென்ட். பை த பை,… ஐ’ம் ஈஸ்வரமூர்த்தி. ட்வாட்ல எஞ்சினீயரா இருக்கேன். உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“ரவீந்தர்” என்றவர், யோசனையாக, ”நீங்க எப்படி இங்க?” என்றார்.
“நான் இங்கதான் குடியிருக்கறேன்.” குறுக்குத் தெருவின் எதிர்த்த வரிசையில் சற்றுத் தள்ளியிருந்த வீட்டைக் காட்டினார். “அதுதான் எங்க வீடு. உங்க வீடும் இங்கதானா?”
ரவீந்தரும் தனது வீட்டைக் காட்டினார்.
ஆம்புலன்ஸும் ஜீப்பும் புறப்பட்டன. கிளம்பிய புழுதிக்கு கைகளால் முகம் மறைத்தவாறே, “உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்” என்று கை குலுக்கிவிட்டு விடைபெற்றார் ஈஸ்வரமூர்த்தி.
ரவீந்தர் வீட்டை நோக்கி நடக்கையில் ஞாபகம் வந்தவராக, “ஆமா,… கொஞ்ச நேரம் முந்தி நீ ஏதோ சொல்ல வந்தயே. ஈஸ்வரமூர்த்தி வந்ததும் நிறுத்திட்ட. என்ன விஷயம்?” என்றார் ப்ருத்வியிடம்.
“அது வந்து டேடி,… இனிமே ஷாலினிய யாரு கவனிச்சுக்குவாங்கன்னு கேக்க வந்தேன்.”
ரவீந்தர் அவனைக் கனிவுடன் பார்த்தார். தன் பக்கமாக அவனைச் சேர்த்து அணைத்துக்கொண்டே, மெதுவாகச் சொன்னார்: “நமக்கு எதுக்கப்பா அதெல்லாம்?”
– தினமணிக் கதிர், 10-08-97.
குறிப்பு: இக் கதை தினமணிக் கதிர் இதழில், நகரவாசிகள் என்ற தலைப்பில் பிரசுரமானது. சிறுகதைத் தொகுப்பில் வெளியானபோது தலைப்பு மாற்றப்பட்டது.