நன்றி





வெள்ளை படு உஷாரானது.

நெல்லி மரத்தடியில் அது பறித்த குழியில் படுத்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிற போதும், அனக்கம் கேட்டால் விழித்துக்கொண்டு தலை உயர்த்தி, காதுகள் விடைக்கப் பார்க்கும். தெரிந்தவர்கள் என்றால் வாலை அப்படியே சன்னமாக ஆட்டிவிட்டுத் தூக்கத்தைத் தொடர்வது. அறியாத முகமென்றால் அவ்வளவுதான். அடித்துப் பிடித்து எழுந்தோடி ஒளையோ ஒளை என்று ஒளைத்து, ஆளை அப்பால் இப்பால் நகர விடாமல் பண்ணிவிடும்.
ரோட்டில் ஒரு வாகனம் வரப் போகப் பாங்கில்லை. பின்னாலேயே துரத்திக் கொண்டு ஓடும். நாய்களுக்கு வாகனங்களிடம் அப்படி என்ன பகையோ! கார், பைக் எதுவானாலும் அதுகளின் வேகத்துக்குக் கூடவே ராஞ்சுகிறதுகள். சைக்கிளைப் பற்றி அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால், இவை எதுவாயினும் நிறுத்தப்பட்டிருந்தால், போய் மோந்து பார்த்துவிட்டு காலைத் தூக்கி மள்ளுவதில் பேதம் கிடையாது.
வெள்ளையும் அப்படித்தான்.
என்றாலும் அதனிடம் அதில் ஒரு வித்துவேசம் உண்டு.
ஊருக்குள் இத்தனை டீ.வி.எஸ்.ஸுகள் புழங்குகிறதே… அத்தனையிலும் முருகானந்தனின் டீ.வி.எஸ்.ஸை சப்தம் கேட்டே அடையாளம் கண்டுபிடித்துவிடும். சப்தம் முக்குத் திரும்பும்போதே ‘க்கூங்… க்கூங்…’ என்று கொனிந்து வாலை அதிவேகமாக ஆட்டிக்கொண்டு தெருவுக்கு ஓடி, அவரை எதிர்கொண்டு கூடவே துள்ளோட்டமாய் வரும்.
வண்டியை நிறுத்தியதும் சுற்றி வந்து குதியாட்டம் போடுவதென்ன, நெஞ்சுக்குத் தொத்துக்கால் போடுவதென்ன…
அவர் சித்தெ நேரமாவது அதனுடைய தலையை வருடிக் கொடுத்தால்தான் திருப்தி. அலுப்பாயிருந்து பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் வாசப்படியில் நின்றுகொண்டு ஏக்கமாக உள்ளே பார்த்துக்கொண்டிருக்கும்.
காத்தாட திண்ணையில் ஓய்வெடுக்கிறபோதும் அவரது காலடிக்கு வந்துவிடும். முருகானந்தன் தலையிலிருந்து முதுகு முடிய நீவுவார். அதற்கு வாகாக உடம்பை நீட்டிக் குறுக்கிக் கொடுத்துக்கொண்டே கண்களை மூடிச் சொக்கும்.
“நாயிக்கு அப்படி சொகுசு கேக்குது” என்பாள் செங்கமலம். வெள்ளைக்கு தன்னைத்தான் என்று தெரியும். அதைக் காட்டிக்கொள்ள, அப்பவும் வேறு தினுசாய் வாலை ஆட்டிக்கொள்ளும்.
குட்டிக்கு வெள்ளைதான் குருதை. அதன் மேல் ஏறிக்கொண்டு ‘டகுடிக்கு டகுடிக்கு’ என்று குரலெழுப்பி காதுகளையும் பிடித்து முறுக்குவான்.
“ஓடு குரதே… ஓடு குரதே…” என்றால் அதற்குத் தெரிவதில்லை. அப்படியே நிற்கும்.
இரண்டு பக்கமும் கால்களை ஊன்றி உந்தித் தள்ளுவான். வெள்ளை முரண்டு பண்ணும். அவனும் விடாமல் மேலும் முறுக்குவான். வலி பொறாமல் ‘க்கை-க்கை…’ எனக் கதறுமது.
“அடக் கட்டீத்தீனி பையனே…! அத இப்புடி வாதிக்கறயே,… கடிச்சுக் கிடிச்சு வெச்சுருச்சுன்னா என்னத்துக்காகறது? குஞ்சாமணில இருவத்து நாலு ஊசி போடோணு அப்பறொ” என குட்டு மிரட்டு மிரட்டுவாள் செங்கமலம்.
பிறகுதான் அவனும் விடுவான்.
வெள்ளை உடனிருப்பது ஆம்பளைத் துணைக்குச் சமானம்.
அது நடந்து ரெண்டு, ரெண்டரை வருசமாயிற்று. அன்று முருகானந்தன் வீட்டில் இல்லை. சோலியாகப் போனவர் அசலூரில் ராத்தங்க வேண்டிய நிலைமை. “முடிஞ்சுதுன்னா ரவைக்கே வந்தர்றன். இல்லீன்னா நாளைக்கு சாவகாசமா வந்தாப் போதுமல்லொ” என்று ரெண்டு அர்த்தமாகச் சொல்லிக்கொண்டு போயிருந்தார்.
குழந்தைகள் நேரமே சாப்பிட்டுப் படுத்துவிட்டன. செங்கமலம் பத்தரை வரை காத்திருந்த பிறகே சாப்பிட்டுவிட்டு மிச்சத்தில் தண்ணி ஊற்றினாள்.
அவளும் படுத்து, கண்ணசருகிற நேரம் வாசலில் வெள்ளையின் இடைவிடாத குரைப்பு. எதையாவது பார்த்து ஒளைப்பதுதானே என்று விட்டுவிட்டாள்.
பின்பு அது வாசப்படிக்கே வந்து கதவைப் பிறாண்டியது. எப்பவும் அப்படிச் செய்யாதே, இப்போது என்ன ஆச்சு என்று அவள் வியப்போடுதான் எழுந்து வந்தாள். ராந்தலைத் தூண்டிவிட்டுப் பார்த்தால் நெரசலோரம் கருகருவென நெளிந்து ஊருகிறது.
அப்போது வீடு ஓலைச் சாளையாயிருந்தது. நெரசலடியே இடுக்குகளில் தவளைகள் சிலது பதுங்கியிருக்கும். அதை இரையெடுக்க வந்தது போலும். வெள்ளை அது பற்றி எச்சரிக்கத்தான் கதவைப் பிறாண்டியிருக்கிறது என்பது புரிகிறபோதே, அவளுக்குப் பாம்பைக் கண்ட பதற்றமும் உண்டாகிவிட்டது. பாம்பைத் தடுக்க வௌளை முனைந்தாலும் அது நெரசலுக்குள் புகுந்துவிட்டது.
பக்கத்து வீடுகளுக்குப் போய் ஆம்பளைகளைக் கூட்டி வரலாமென்றால் அவகாசமில்லை. இரவு நேரமானதால் இங்கிருந்தே சப்தம் போட்டுக கூப்பிடவும் தயக்கம்.
முதலில் உள்ளே தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தைகளை எழுப்பிப் பாதுகாக்க வேண்டும் என்கிற அவுதியில், ஓடிப்போய் பாயில் கிடக்கும் கலாவதியை உலுக்கி எழுப்பிவிட்டு தொட்டிலுக்கு நகர்ந்தாள். குட்டி அப்போதும் கீழே படுக்காமல் தொட்டிலில்தான் படுத்துக்கொள்வான். அவனைத் தூக்கம் கலைக்காமல் எடுத்துக்கொண்டாள்.
அதற்குள் நெரசலிலிருந்து ஒரு தவளை வீட்டுக்கு உள்ளே தவ்விக் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பாம்பும்.
கலாவதி அதைப் பார்த்துவிட்டு, “அய்யோம்மா…” என வீறிட்டாள். அந்தச் சப்தத்தில் குட்டியும் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு அழுதான்.
வெளியே போகலாமென்றால் கதவுக்கு நேராக பாம்பு. ஒரு கையால் குட்டியை இடுப்பில் வைத்துக்கொண்டு, மறு கையால் கலாவதியைத் தன்னுடன் அணைத்துக்கொண்டாள்.
பாம்பு படமெடுத்து நிற்கவும்தான் நாகன் என்பது நிச்சயமானது. அது தவளையையும் இவர்களையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. கலாவதி பயத்தில் குரலெடுத்து அழத் தொடங்கிவிட் டாள்.
வெள்ளை உடனே வீட்டுக்குள் பாய்ந்து வந்துவிட்டது.
பாம்புக்கும் அதற்கும் ஆக்ரோஷமான சண்டை. வெள்ளை பாம்பைக் கடிக்கத் தோது பார்ப்பதும், பாம்பு அதைக் கொத்த முயல்வதுமாக…
“அய்யோ… வேண்டாம் வெள்ள. பாம்பு கொத்திரும். அக்கட்டால போயிரு” என்று கலாவதி கத்தினாள்.
வெள்ளை விட்டு விலகவில்லை. ஓரிரு பாய்ச்சல்களின் பிசகல்களை அடுத்து, சரியாகப் பாம்பின் கழுத்தைக் கவ்விவிட்டது. கண்ணிமைக்கிற கணத்தில் ஒரு உதறு உதறியதுதான் தெரியும். மறுகணம் பாம்பின் தலை துண்டாகிக் கிடந்தது.
கூச்சல் கேட்டு விழிப்புற்றிருந்த அண்டை வீட்டுக்காரர்கள் அதற்குப் பிறகுதான் வந்து சேர்ந்தனர். வெள்ளையின் செயல்களைக் கேட்டு அவர்களுக்குமே ஆச்சரியம்.
மறுநாள் ஊர் திரும்பிய முருகானந்தனும், “மூணு உகருகளக் காப்பாத்திக் குடுத்துட்ட” என்று வெள்ளையை அணைத்து நெகிழ்ந்தார்.
பின்பும் வெள்ளையின் இயல்புகளில் எந்த மாற்றமும் இல்லை. யாரையும் கடிக்கவோ, ஊடுமுட்டவோ செய்யாது. திண்ணையில் கறியே வைத்துவிட்டு அப்பால் போனாலும் வாய் வைக்காது. அதற்கென உள்ள பழைய பீங்கான் வட்டலில் உணவிட்டால்தான் தின்னும்,
தாமத இரவுகளில் தெரு வழியே அதை மீறி நடந்து போக முடியாததுதான் மற்றவர்களுக்குத் தொல்லை. இவர்கள் இல்லாத சமயம் அன்னியர் எவரும் வீட்டுக்கு வெளியே உள்ள எந்தவொரு சாதாரணப் பொருளையும் எடுத்துவிட்டால் பாய்ந்துவிடும். நாய்க் காவல் என்பதே அதுதானே!
சாமத்து நடமாடிகள் சிலர் வெள்ளையால் அவதிப்பட்டு, அந்த எரிச்சலில் குச்சியிலோ கல்லெறித்தோ ஓரிரு தடவை அடித்திருக்கிறார்கள். சிறிய அளவில் காயம்பட்டு கால் நொண்டிக்கொண்டிருந்தது.
அப்போதே செங்கமலம், “எந்தக் கொள்ளையில போறவன் நாய அடிச்சானோ அவன் நாசமாப் போக! நெருமோளமாப் போக!” என்று வாய் நிறைய சபித்தாள். நொண்டிய காலுக்கு முட்டிக்குளங்கரை எண்ணெய் போட்டு நீவிக் கட்டிவிடவும் செய்தாள். சிக்கிரமே குணமாகிவிட்டது.
இப்போது பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பு மறுபடியும் உச்சந்தலையில் காதோரமாகக் காயம். அது அரிவாளால் வெட்டியது. ஓங்கியவுடன் வெள்ளை விலகியதோ, குறிதான் தவறியதோ, கழுத்து துண்டாகாமல் தப்பித்து, முனை மட்டும் ஆழமாக இறங்கியிருந்தது.
வெடியக்காலம் கதவு திறந்ததுமே வாசப்படியில் தலைவைத்து, ரத்தம் ஒழுக அனத்திக்கொண்டிருக்கிறது வெள்ளை. “சாமி கடவுளே…” என்று செங்கமலம் பதறினாள்.
“…………… மக்கொ! வாயில்லாத சீவன்னு பாக்காம வெட்டியிருக்கறானுகளே! வெட்டுன கையி வௌங்காமப் போகோணும், மாரியாத்தா…!”
முருகானந்தனை எழுப்பி, ரத்தப் போக்கை நிறுத்த துணியால் கட்டப்பட்டது. “கருப்பராயா…! உனக்கு கோளியறுத்துப் பொங்கலு வெக்கறன். நாய் வெட்டுனவன் ஆருன்னு, எண்ணி எட்டு நாளைக்குள்ள எனக்கு அறிகுறி காட்டோணும்” என்று செங்கமலம் நேர்ந்துகொண்டாள்.
காயத்துக்கு மருந்திட இங்கே மிருக ஆஸ்பத்திரியும் இல்லை. முருகானந்தனும் கிருஷ்ணசாமியண்ணனும் வெள்ளையை டீ.வி.எஸ்.ஸில் எடுத்துக்கொண்டு பொள்ளாச்சிக்குப் போய் சிகிச்சை செய்து வந்தார்கள்.
இம்முறை வெள்ளைக்குக் குணமாகவில்லை. தினசரி மருந்து வைத்துமே காயம் ஆறாமல் சீழ் பிடித்துக்கொண்டிருந்தது. ஓடித் திரிதல் முடக்கம், சரிவர உணவு கொள்ளாமல் உடல் மெலிவு என்றானது.
இந்த நிலையிலும் படுத்தபடியேவாவது அன்னிய வரவுகளை உறுமலால் எதிர்த்தது; தான் விரும்பாத அத்துமீறல்கள் நிகழ்ந்தால் ஒளைத்து மிரட்டியது; முருகானந்தனின் டீ.வி.எஸ். சப்தத்துக்குத் தடுமாறி எழுந்து நின்று, கொனிந்து வரவேற்றது.
புண் மிகவும் பெரிதாயிற்று. வெள்ளை தாங்க முடியாமல் ஓலமிடும். நிலைகொள்ளாமல் துடித்துப் புரளும். முருகானந்தன் திண்ணையில் சாய்ந்தபடி அதை ஆற்றாமையோடு பார்த்துக்கொண்டிருப்பார்.
ஊரில் நாய்த் தொல்லைகள் அதிகமாகிவிட்டதென்று நாய் பிடிக்கும் வண்டி வந்தது. அதைக் கண்டதிலேயே பல நாய்கள் சந்து பொந்துகளில்
முட்டி ஒளியலாயின. சிலவற்றை அதன் வளர்ப்பாளர்கள் வீட்டுக்குள் கட்டி வைத்துக் காத்துக்கொண்டனர். முருகானந்தன் நாய் பிடிப்பவர்களை வீட்டுக்கு அழைத்துவந்தார்.
– கல்கி, 18.12.2002.