நண்பனின் காதலி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 11,511 
 
 

பேக்கரி முன்பாக ஆஸ்பெட்டாஸ் கூரை அடியில் சாமுராயை நிறுத்திப் பூட்டிவிட்டு இறங்கியபோது மூன்றாவதாக உள்ள மருந்துக் கடையில் தற்செயலாக ரோமா தென்பட்டாள். அவளை அப்போது அங்கு காண நேர்ந்தது எதிர்பாராதது எனினும், அதில் ஆச்சரியப்பதற்கு எதுவுமில்லை. ஆர்.எஸ்.புரத்தில் கென்னடி தியேட்டர் பக்கமாக தனது வீடு என்று எப்போதோ அவள் குறிப்பிட்டிருந்தது நினைவு. இப்போது நைட்டி அணிந்திருப்பதால் வீடு மிக அருகாமையிலேயே இருக்க வேண்டும்.

மழைக்கு ஒதுங்கி நிற்கிறவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே மடக்கிய குடையுடன் மருந்து வாங்கிக்கொண்டிருக்கும் அவளை நோக்கி பட்டீஸ்வரன் சென்றான். அவளை எதிர்பாராத ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காக ஏதும் பேசாமலும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலும் அவளுக்குப் பின்னால் அமைதி காத்து நின்றுகொண்டான். மாத்திரைக் கவரோடு மீதிச் சில்லறையைப் பெற்று, தலை குனிந்தவாறு குடையை விரித்து நிமிர்ந்தவள், இவன் எதிர்பார்த்த மாதிரியே, எதிர்பாராத ஆச்சரியத்தை உடல் நலமின்மையின் சோர்விலும் வெளிப்படுத்தி, “பட்டீஸ் அண்ணா…!” என்று கீச்சிட்டாள். “எங்கேங்ணா இந்தப் பக்கம்?” என்றபோது, புருவச் சுழிப்பும் அவளோடு சேர்ந்து கேள்வி கேட்டது.

“என்னங்க இது அநியாயமா இருக்குது! உங்களுக்கு ஒடம்பு சரியில்லேன்னு பாக்கறதுக்கு வந்தா,… எங்க வந்த, எதுக்கு வந்தேன்னு கேக்கறீங்களே…!” என்றான் பட்டீஸ்வரன்.

“ஏ…ங்…” என்று நம்பாதவளாக முகத்தைக் கீழிருந்து பக்கவாட்டில் அசைத்தவள், பின்புலத்தில் அவனது சாமுராயை கவனித்துவிட்டு, “டீ சாப்பிட வந்திருப்பீங்க. என்னைப் பாத்ததும் அப்படியே இந்தப் பக்கம் வந்துட்டீங்க” என்றாள்.

“நீங்க பெரிய புத்திசாலிதான். ஒத்துக்குறேன். உங்களுக்கு என்ன, ஃபீவரா?”

“ஆமாங்ணா. காலைலருந்தே ஃபீவரிஷ்ஷா இருந்துச்சு. அதான் இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்.”

“மழைக்காலம்னாலே இப்படித்தாங்க,… பொண்ணுகளுக்கு காய்ச்சல், குளிர், கெட்ட கனவெல்லாம் வரும்” என்றதும் சன்னமாக முறைத்தாள்.

“சரிங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க” என அவளுக்கு விடை கொடுக்கத் தயாராகையில், “எங்க வீடு பக்கத்துலதாங்ணா” என்றாள்.

“அதான் உங்க மஃப்டி ட்ரஸ்ஸப் பாத்தாலே தெரியுதே…”

“ஐயே…” என்றாள் வெட்கச் சிணுங்கலாக. “நீங்களும் பெரிய புத்திசாலின்னு ஒத்துக்கறேன். வாங்க, வீட்டுக்கு போயிட்டுப் போலாம்.”

“பரவால்லங்க,… இன்னொரு நாள் வர்றேன்.”

“ஏன், இன்னைக்கு வரக் கூடாதா? டீ சாப்பிடத்தான இங்க நின்னீங்க! இன்னும் சாப்பிடல இல்ல? அத எங்க வீட்டுல சாப்பிட்டுட்டுப் போவீங்களாம்.”

ரோமா வற்புறுத்தவே பட்டீஸ்வரன் சாமுராயை இடம் பெயர்த்தி ஸ்டார்ட் செய்தான். அவள் குடை விரிப்போடேயே பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவர்களது வீட்டு காம்பௌண்ட் சுவருக்கு வெளியே இறங்கிக்கொண்டு கேட்டைத் திறந்துவிட்டாள். கலவை வண்ணங்களில் நனைந்து நிற்கும் குரோட்டன்ஸ்களும், பூச்செடிகளும், அலங்காரக் குற்று மரங்களும் கொண்ட தோட்டத்தைக் கடந்து பட்டீஸ்வரன் சாமுராயை வராந்தாவில் நிறுத்தினான். கதவு பூட்டியிருந்தது. கேட்டை உட்புறக் கொண்டியிட்டு வந்தவளிடம், “வீட்ல வேற யாரும் இல்லீங்களா?” என்று கேட்டான்.

“அப்பா ஆஃபீஸ் போயிருக்காருங்ணா. அம்மா வெளிய போயிருக்காங்க.”

மடக்கிய குடையை நீர் வடிய படிக்கட்டோரம் சுவரில் சாய்த்துவிட்டு அவள் கதவு திறக்க, பட்டீஸ்வரன் கோட்டைக் கழற்றி சாமுராயின் மீது போட்டான். கைக்குட்டையால் முகம் துடைத்து, தலையைத் துவட்டிக்கொண்டிருந்தபோது, “வாங்ணா” என்று திறந்த கதவினுள்ளிருந்து ரோமோ அழைத்தாள்.

“வீட்ல வேற யாராவது இருப்பாங்கன்னு நெனச்சேன். நான் வேண்ணா பேக்கரீலயே போய் டீ சாப்ட்டுக்கறேன், ரோமா. நீங்க ஒடம்புக்கும் முடியாம சிரமப்பட வேண்டாம்” என்றபடி ஹாலின் ஸோஃபாவில் பதிந்தான்.

“டீ போட முடியாத அளவுக்கு மோசமாகயிடலங்ணா” என்றவள் மின் விளக்கை எரியவிட்டு, தொலைக்காட்சியையும் இயக்கி, ரிமோட்டை அவனிடம் கொடுத்துவிட்டு, “பாத்துட்டிருங்ணா,… வந்தர்றேன்” என்று திரை விலக்கி, சமையற்கட்டில் மறைந்தாள். வீட்டின் கட்டமைப்பையும் உட்புற அலங்காரங்களையும் கண்ணோட்டமிட்டுவிட்டு பட்டீஸ்வரன் சேனல் தாவல்களில் ஈடுபட்டான். ஒரு தட்டில் பிஸ்கட் வகையறாக்கள், மிக்சர் சகிதம் காஃபி வந்தது.

“ஸாரிங்ணா,… காஃபி சாப்பிட்டா தலைவலி கொஞ்சம் கொறையும்னு காஃபியே போட்டுட்டேன், எனக்கும் சேத்து” என்று முறுவலித்தபடி அருகிலிருந்த நாற்காலியில் பதியமிட்டாள்.

“உங்களுக்கும் சேத்தில்ல; எனக்கும் சேத்துன்னு சொல்லுங்க. நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயட்டும்னுதான என்னைக் கூட்டிட்டு வந்திங்க?” என்றபடி பட்டீஸ்வரன் பிஸ்கட்டைக் கடிக்கலானான். மாத்திரை உறையைத் திறந்து, இரு வித மாத்திரைகளை காஃபியிலேயே விழுங்கிக்கொண்டாள் ரோமா. அவன் வலது கையில் டம்ளரைப் பிடித்தபடி இடது கையில் ரிமோட்டை இயக்குவதிலேயே கவனமாக இருக்கவும், அவள் ரிமோட்டைப் பிடுங்கி டீப்பாயின் மீது வைத்தாள்.

“மொதல்ல இத சாப்பிடுங்க. காஃபி ஆறிடப் போகுது.”

அவனும் முறுவலோடு காஃபியுடன் அவளையும் பருகலானான் .

ரோமாவை இன்று காண இன்னொரு அம்சமாகப் பட்டது. வீட்டுத் தோற்றங்களின் சாதாரணமேதான் எப்போதும் அவளுக்கு. முகத்தின் வட்ட அமைப்புக்கு, கூந்தலை வழித்தோ, நடு வகிடு எடுத்தோ சீவாமல், தளர விட்டிருக்கையிலும், வழக்கத்துக்கு மாறாக வலது வகிடு எடுத்து சீவியுள்ளபோதும் வசீகரமாகத் தோன்றுவாள். இவற்றைவிட சிறப்பம்சம் அவள் எப்போதாவது உதட்டைச் சுழிப்பது. அப்போது அந்த உதட்டிலேயே முத்தமிட வேண்டும் என்ற தூண்டல் பட்டீஸ்வரனுக்கு ஏற்படும். இப்போதோ அவளது நலமின்மையின் மெலிதான சோர்வுக் களை கூட ஒரு வித சோபையுடன் ஆறுதலாகிவிட்டது.

காலி டம்ளரை வைத்தவன், “காஃபி உங்களை மாதிரியே இருக்கு” என்றான்.

“ஏங்ணா, நல்லா இல்லையா?”

“உங்களப் பத்தி நீங்க அப்படியா நெனைக்கறீங்க? பொதுவா பொண்ணுங்க, நாமதான் நம்ம கண்ணாடி பிம்பத்தை விட அழகுன்னில்ல நெனைச்சுக்குவாங்க?”

“ம்க்-கும்” என்று ரோமா உதட்டைச் சுழித்தாள். அப்படி உதட்டைச் சுழிக்க வேண்டாம் என்று சொல்லவேண்டும் போலிருந்தது அவனுக்கு. சொன்னால் அதன்படி நிறுத்திவிடுவாளோ என்று சொல்லவில்லை.

“சுடுதண்ணி, காஃபி – டீ தவிர உங்களுக்கு வேறெதாவது சமையல் தெரியுமா?” என்று பேச்சை மாற்றினான்.

“போங்ணா,… நான் நல்லாவே சமைப்பேன் தெரியுமா? வேணும்னா பாபுவக் கேட்டுப் பாருங்க. அவரு இங்க வந்தப்பக் கூட என்னோட சமையல்தான்.”

“பிற்பாடு அனுபவிக்கப் போற கஷ்டத்தை இப்பவே பழகிட்டான்னு சொல்லுங்க. அது சரி,… அவன் இங்கேயே வர்றான்னா,… உங்க வீட்டுல சம்மதம்தான் இல்லையா?”

“அப்பா உடனே சம்மதிச்சுட்டாருங்ணா. அம்மாவுக்கு மொதல்ல கொஞ்சம் யோசனை – சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்களோ, ஏதாகுமோன்னு. இப்ப அவங்களும் சம்மதிச்சுட்டாங்க.”

ஆனந்த்பாபுவும் வீட்டுக்கு ஒரே பிள்ளை. எனவே, அதிக கெடுபிடிகளை அவனது பெற்றோர்கள் காட்ட மாட்டார்கள் என்பது இவனுடையதுமான கணிப்பு. கூடுமான வரையில் அவர்களது சம்மதத்தைப் பெற்று விடுவது, கிடைக்காத பட்சத்தில் அவர்களை மீறி ரோமாவைத் திருமணம் செய்துகொள்வது என்றிருக்கிறான் ஆனந்த். இப்போதே அவன் திருமண அழைப்பிதழுக்கான நாலைந்து டிசைன்களையும் செய்துவிட்டான்.

அவனுக்குத் தொழில் டிஸைனிங் மற்றும் ப்ரிண்ட்டிங். இன்னமும் ரோமா பணிபுரிந்துகொண்டிருக்கிற நிறுவனத்திலேயே முன்பு அவனும் பணிபுரிந்து கொண்டிருந்தான். அங்கிருந்து வெளியேறி அவன் சொந்தமாக ஏபிடிசி (ஆனந்த்பாபு டிஸைனிங் சென்டர்) துவங்கியதிலிருந்து சாயங்காலம் ஓரிரு மணி நேரங்கள் அனுமதி பெற்று அவனைச் சந்திக்க வருவாள். பட்டீஸ்வரநும் அது சமயம் அங்கே சென்றிருந்தால் வழக்கம்போல இருவரையும் கேலி செய்துகொண்டிருப்பான். அவனது அந்த வேடிக்கைப் பேச்சுகளை ரோமா மிகவும் ரசிப்பாள். அவன் அவளது ரசிப்பை ரசித்துக்கொண்டிருப்பான்.

“ஸ்ஸ்ஸப்பா,… என்னா குளிரு…” ரோமோ எழுந்து போய் கதவைச் சாத்தி மேல் தாழ் இட்டத்தில் மழை இரைச்சலும் குறைந்தது. கைகளை உடம்போடு இறுகக் கட்டிக்கொண்டு வந்தவள், “காய்ச்சல்னால ரொம்பக் குளிருதுங்ணா” என்றாள்.

“இல்லன்னாலும் மத்தவங்களை விட உங்களுக்குக் குளிரு அதிகமா இருக்க சான்ஸ் இருக்கே!”

ரோமாவின் உதடுகளில் ஒரு சுழிப்பு வினாடியில் தோன்றி மறைந்தது. “ஒதைபடுவீங்க!” ஒரு விரல் காட்டி எச்சரித்துவிட்டு, மீண்டும் கைகளைக் கட்டிக்கொண்டாள்.

ஏபிடிசிக்கு இவன் போயிருக்கும்போது அவளும் வந்திருந்து, இவன் கிளம்புகிற நேரத்தில் அவளும் புறப்பட்டுவிட்டிருந்தால் அவளைப் பேருந்து நிலையத்திலோ, வழித்தடங்களில் ஏதேனும் நிறுத்தங்களிலோ ட்ராப் செய்வது வழக்கம். ஒரு முறை அப்படிச் சென்றுகொண்டிருக்கையில் பாதையோரம் முகர்ந்துகொண்டிருந்த நாய், இருந்தாற்போலக் குறுக்கிட்டு ஓடவே, சடன் ப்ரேக் பிடிக்கும்படி ஆயிற்று. உடனே இருவரும் ஸாரி சொல்லிக்கொண்டனர். சாய்ந்த வேகத்தில் முதுகில் இரட்டை முனையழுத்தங்களை உணர்ந்திருந்த அவன், “முதுகுல காயம் ஏதாவது ஆயிருக்குதான்னு பாருங்க” என்றான். ரோமா அவனது முதுகில் செல்லமாகக் குத்திவிட்டு, “ஆனாலும் உங்களுக்கு ரொம்ப லொள்ளுங்ணா” என்றாள்.

“ஏங்க,… ஆம்பளைங்களை டென்ஷன் பண்றக்குன்னே பொண்ணுங்க கவசம் போட்டுக்காம வர்றது மட்டும் லொள்ளில்லையா?”

“போங்ணா, நான் ஒண்ணூம் அப்படியில்ல. ஸம்மராச்சே,… உப்புசம் அதிகமா இருக்குதுங்கறதுனால இப்ப மட்டும்தான் அப்படி” என்றிருந்தாள் வெட்கத்தோடு. ஆனாலும் மற்ற பருவங்களிலும் கூட அவ்வப்போது அவள் அப்படித்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். இப்போது எப்படியோ என்று ஓடுகிற எண்ணத்தைத் தடுத்து, அவன் அவளிடம் விடைபெற்றுக்கொள்ள இருந்தபோது, “வெள்ளிக்கெழமை சாய்பாபா கோயிலுக்கு அம்மாவும் நானும் வந்திருந்தங்ணா” என்றாள்.

“அட…! அவ்வளவு தூரம் வந்திருக்கறீங்க,… அப்படியே எங்க வீட்டுக்கு, ஆனந்த் வீட்டுக்கெல்லாம் வந்திருக்கலாமே…!”

“ஐயோ,… அவங்க வீட்டுக்கா?”

“ஏங்க பயந்துக்கறீங்க? அவன் இங்க வந்து உங்க பேரண்ட்ஸப் பழகி வெச்சுட்ட மாதிரி, நீங்களும் உங்க வருங்கால மாமனார், மாமியாரைப் பார்த்துப் பழக்கப்பட்டுக்கறது நல்லதுதான! முடிஞ்சா மாமியாருக்கு இப்பவே சோப்பு, ஷாம்ப்பு, அரப்பு, சீவக்காய்த் தூள் எல்லாத்தையும் போட்டு வச்சுக்கலாம்.”

“ம்க்-கும்” என்றபடி இப்போதும் ரோமா உதட்டைச் சுழித்தாள். இம் முறை சுழிப்பு சற்று நிலைகொண்டிருந்தது. அவன் அதில் லயித்தவாறே, “இந்த மாதிரி ஒதட்டைச் சுழிக்காதீங்க” என்றான்.

சுழிப்பில் குவிந்த உதடுகள் மெல்ல விரிந்து, “ஏங்ணா?” என்றன.

“ஏன்னு கேட்டா நான் எப்படிச் சொல்றது! ஆனந்த் உங்ககிட்ட ஒண்ணும் சொன்னதில்லையா?”

“அவரு இதப் பத்தி ஒண்ணும் சொல்லலியே! நீங்க அவர்கிட்ட சொல்லியிருக்கறீங்களாங்ணா?”

“அத நான் சொன்னதில்ல. சப்போஸ் அவனுக்கே அப்படித் தோணியிருக்குமோன்னு கேட்டேன்.”

“என்னதுங்ணா?”

“நீங்க இப்படி ஒதட்டச் சுழிக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு மார்க்கமா இருக்கும். அப்படியே லிப் கிஸ் பண்ணனும் போலத் தோணும். அதான்…”

கட்டியிருந்த கைகள் விடுபட ரோமா அதிர்ந்தாள். அவனையே ஒரு கணம் உதடுகள் துடிக்கப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்துகொண்டாள். அங்கிருந்து இடம்பெயர்ந்த அவளின் நடையிலும், படுக்கையறைக் கதவைத் திறந்ததிலும் அதே வேகம்.

தனது தவறுக்கு வருந்தியவன் செய்வதறியாது சற்று நேரம் திகைத்திருந்தான். என்ன ஒரு மடத்தனம் செய்துவிட்டோம்! அதைச் சொல்லியிருக்கக் கூடாது. சொல்லியிருக்கவே கூடாது. சொல்லியாகிவிட்டது. அவளும் அதிர்ச்சி தாளாமல் எழுந்து அப்பால் சென்றுவிட்டாள். இனி என்ன செய்வது? ஸாரி கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை. கேட்டாலும் மன்னிப்பாளா? இதை மறந்து தன்னோடு பழையபடி பழகுவாளா?

உறுத்தும் மனதோடு அவனும் படுக்கையறைக்குச் சென்றான். ரோமா கட்டில் மீது முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்தபடி அமர்ந்திருந்தாள். அழுகிறாளோ?

“ரோமா…” தயக்கத்தோடு அழைத்தான்.

அவள் நிமிரவோ, ஏதும் சொல்லவோ இல்லை.

அருகாமையில் நெருங்கி தோளைத் தொட்டான். நிமிர்ந்து இவனை ஏறிடும் முகத்தில் நல்லவேளையாக அழுகை இல்லை. இருந்தும் ஏதோ ஒரு துடிப்பு. கட்டிலில் இருந்து இறங்கி, அங்கிருந்தும் வெளியேற நடந்தாள். சமாதானப்படுத்தித் தடுத்து நிறுத்த முயன்றான். அவள் இன்னும் விலகி வேகமாக நடக்கவே, அவன் பின்னாலிருந்து அவளது கையை எட்டிப் பிடித்தான். செல்லும் வேகத்தில் தடுமாறித் திரும்பி அவனது நெஞ்சில் வந்து மோதினாள். அதில் அவனும் தடுமாறி விழ இருந்து, சமாளித்து நிற்பதற்காகவும், அவளையும் விழாமல் தடுப்பதற்காகவும், அவளை அணைத்துப் பிடிக்க வேண்டியதாயிற்று. ஏறத்தாழ அவளும் அவனை அணைத்தது போலப் பற்றிக்கொண்டுதான் விழாமல் நின்றிருந்தாள்.

நெருக்கத்தில் அவளது பதற்றத்தை அவன் அறிந்தான். அவனை ஏறிட்டிருக்கும் கண்கள் தவித்தன. அணைப்பில் அவளது உடல் வெதுமை, மழைக் காலச் சாயங்காலத்தின் குளிருக்கு இதமாக இருந்தது. அவளின் இந்த உடம்புச் சூடு காய்ச்சலினால் ஆனதா, தற்போதைய உணர்வுகளால் ஏற்பட்டதா என்பது நிச்சயமில்லை. அதை அறிய முற்படும் விதத்தில் அவன் அவளின் முகம் பார்த்தபடியே நின்றிருந்தான்.

ரோமா இமை தாழ்த்திக்கொண்டாள். அவளது வெளுத்து உலர்ந்த உதடுகளில் மெலிதாக, “வேண்டாங்ணா” என்ற முணுமுணுப்பு.

அவன் தனது பிடியை இறுக்கி மேலுயர்த்தி, அவளின் முகத்தை நெருங்கினான். அந்த உதடுகளில் முத்தமிட்டபோது அவைகளும் அவனது உதடுகளைச் சுவைக்கத் தொடங்கின. நுனிப் பாதங்களில் எம்பி நிற்கும் அவளது கைகளும் அவனது பிடரியில் இறுக்கியிருந்தன.

பின்னர் அவர்கள் இருவரும் கட்டிலுக்கு நகர்ந்தனர்.


ஆறேழு மாதங்களுக்குப் பிறகு ரோமாவின் திருமணம் நடந்தது. பட்டீஸ்வரனுக்கும் அழைப்பிதழை நேரிலேயே கொடுத்திருந்தாள் அவள். அதில் பயன்படுத்தப்பட்டிருந்தது ஆனந்த்பாபு உருவாக்கியிருந்த டிசைன் அல்ல. அவனும் திருமணத்திற்கு வந்திருந்தான். மாப்பிள்ளை ரோமாவுக்குப் பொருத்தமானவனாக அமைந்துவிட்டதாகவும் பட்டீஸ்வரனிடம் சொன்னான்.

– ஆனந்த விகடன், 29.7.2001.

குறிப்பு: இக் கதை ஆனந்த விகடன் இதழில், இருக்கலாம்கள் தவிர்க்க முடியாதன என்ற தலைப்பில் பிரசுரமானது. சிறுகதைத் தொகுப்பில் வெளியானபோது தலைப்பு மாற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *