திரவியம்
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சட்டைக்குள் வலக் கையை விட்டு, கழுத்தில் தொங்கிய சிலுவையை வெள்ளத்தில் அடித்துக் கொண்டிருந்தவன் கிடைத்ததைப் பற்றிக் கொள்ளும் அழுத்ததோடு பற்றியிருந்தார். ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டுப் புதிதாகப் பார்ப்பதைப் போல என்னை வெறித்துப் பார்த்த படியேயிருந்தார். கத்தரிப்பூ நிறத்தில் பூப்போட்ட பேண்டும், அடிக்க வரும் சிவப்பு நிறத்தில் பெண்களணியும் சட்டையும் உடுத்தியிருந்தார். முகம் முழுவதும் தோலின் சுருக்கங்களுடன் கவலையின் ரேகைகள். வெள்ளிக்கிழமை. அன்று தான் தாமஸுக்கு வாரத்தின் வேலையில்லாத ஒரே நாள்.
அலுத்தவுடன் நிராகரிக்கும் விலையுயர்ந்த பணக்கார பெண்களின் உடைகளைத் தான் அவற்றின் அளவைப் பொருட் படுத்தாது எப்போதும் அணிவார் தாமஸ். அவர்கள் அரைகுறையாக உபயோகித்து எறியும் கேசச்சாயப் புட்டியிலிருந்து எடுத்துத் தன் தலையில் தடவிக் கொள்வார். பல வகையான பழுப்பு, கருப்பு என்று அவ்வப்போது அவரது முடி நிறங்களில் மாற்றம் கண்ட படியிருக்கும். அதில் அவருக்குக் கடுகளவுக் கூச்சமும் கிடையாது. முதன் முதலில் பார்ப்பவர்க்கு அடக்க முடியாமல் சிரிப்பு வரலாம்.
‘கிறுக்கோ?’ என்று ஜாடை மாடையாகச் சிலர் பேசிச் சிரிப்பது அவரைத் துளியும் தொந்தரவு செய்யாது. பழகிய பிறகு தான் தெரியும் அவர் தன் சொற்ப வருமானத்தில் தனக்கென்று உடைகளே வாங்குவதில்லையென்பது. என்ன பெரிய வித்தியாசம் லா? ‘ஜெண்ட்ஸ் ‘ஜெண்ட்ஸ்’ பாண்டுக்கு முன்னாடி ஜிப்பிருக்கு, இதுக்கு சைட்ல ஜிப்பிருக்கு. கொஞ்சம் கலர் கலரா பூவெல்லாம் போட்டிருக்கு. எனக்கு இது பிடிச்சிருக்கு லா. மத்தவங்க சிரிக்கிறதால எனக்கொண்ணும் கவலையேயில்ல. அவங்களா லா எனக்குத் துணி வாங்கித் தரப் போறாங்க”, என்பார் தீவிரத் தொனியுடன்.
பல முறை தாமஸின் முதலாளி அவரை மருத்துவரிடம் போகச் சொல்லிச் சலித்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட தாங்க முடியாத வறட்டு இருமல் வந்து மிகவும் அவதிப்பட்டு விட்டார் தாமஸ். கூட்டிக் கொண்டு போய் எங்கள் அறையில் வைத்திருந்தோம் நான்கு நாட்களுக்கு.
கதிரேசன் வெற்றிலைக் கஷாயம் வைத்துக் கொடுத்தான். இருமல் சற்று குறைந்ததும் அரட்டையடிக்கத் தொடங்கி விட்டார். கையில் தமிழ் முரசை வைத்துக் கொண்டு, “சம்முவம், இப்ப கொழந்த பெத்துக்கறவங்களுக்கு தான் சிங்கப்பூருல நிறைய சலுகை. பேசாம இந்தூருக்காரிய கட்டி கிட்டு, வரிசையா கொழந்த பெத்துக்கோ லா”, என்று என்னைச் சீண்டினார். ஐயோ, அண்ணே, ஆள விடுங்க. நா எப்படா ஊருக்கு ஓடலாம்னு இருக்கேன். இதோ, கதிரேசன் இருக்கான். அவனுக்குத் தான் இந்த ஊர விடவே மனசில்ல”, என்றதுமே, கதிரேசன்,” நா ரெடி. ஆனா, இந்தூரு பொண்ணுக்கு என்னைப் பிடிக்கணுமே. காதுல வளையமில்ல,. பின்னாடிக் குடுமியில்லன்னா? பேசாம நீங்க ஒரு பொண்ணப் பாத்து கட்டிக் கங்கண்ணே”, என்றான்.
உடனே சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, “வேணாம்பா பேசாம சம்பாரிச்சு கிட்டு, ஊரப் பாக்கப் போய்ச் சேருங்க. மொதல்ல பெத்துக்காதன்னுவான், அப்பறம் திடீர்னு பெத்துக்கோன்னுவான். இதென்ன, வாழ்க்கையா இல்ல ஃபாக்ட்ரியா,..ம்?”, என்று சொன்னார். அந்தக் காலத்தில் பெற்ற ஒரே பிள்ளையைப் பிரிந்து படும் துயர் அவர் முகத்தில் அன்று கவிந்திருந்தது. இருமல் குணமாகித் தன் இருப்பிடத்திற்கே திரும்பினார்.
அடுத்த வாரமே சொந்த வேலையும் ஒதுக்கி விட்டு ஒரு நாள் அவரது இருப்பிடத்திற்குப் போனேன். முதல் நாளே சொல்லியிருந்தும், கதவு பூட்டியிருந்தது. வெள்ளிக்கிழமை எங்கு போயிருப்பார் என்ற யோசனையுடன் காத்திருந்து விட்டு வீடு திரும்பி விட்டேன். மறுபடியும் மாலையில் போன போதும் வீடு பூட்டியே இருந்தது. கவலையுடன் இரவில் போன போது, உள்ளே மின்விளக்கு எரிவது ஜன்னல் வழியே தெரிந்தது. கதவைத் தட்டியது திறந்தார். “எங்கண்ணே போயிட்டீங்க?”, என்றதுமே, “இங்க தானே இருந்தேன்”, என்றார் என் முகத்தைப் பார்க்காமலே. “ரெண்டு வாட்டி வந்தனே. டாக்டர் கிட்ட போகணும், ரெடியா இருங்கன்னேல்ல நேத்திக்கே.”
“செக் கப்பெல்லாம் வேணாம், சம்முவம். ஏதாவது கோளாறுன்னு சொல்லிட்டா,..”
“அப்ப, பயந்து கிட்டு தான் எங்கியோ போயிட்டீங்க, இல்ல?”
“ஆமா லா, செந்தோசாவுக்குப் போனேன்”, என்று ஒத்துக் கொண்டார். எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. மருத்துவப் பரிசோதனைக்கு பயந்து பக்கத்துத் தீவுக்கு ஓடிப் போகும் முதியவரை அவர் வழியிலேயே விட்டு விடுவது தான் சரியென்று அன்று தோன்றியது.
குப்பைகளைச் சேகரித்து மறுபயனீட்டுக்கு அனுப்பும் சிறு நிறுவனத்தில் தாமஸுக்கு ஊழியம். சின்ன பிக்கப் வண்டியில் தெருத் தெருவாகச் சென்று வீடுகளில் வேண்டாமென்று களையும் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வருவது தான் வேலை. வாரத்தில் ஆறு நாட்களும். முதலாளி கொடுத்த அறுநூறு வெள்ளி சம்பளம் அவருக்குக் கைக்கும் வாய்க்குமாகவே இருந்தது. உடல்நிலை சரியில்லாமல் வேலைக்குப் போக வில்லையென்றால் கருணையே இல்லாமல் ஒரு நாளைக்கு நாற்பது வெள்ளி வெட்டப் படும். இதற்கு பயந்து புகைக்கும் சிகரெட்டினூடே, கல்கல்லென்று வெண்கல இருமல் இருமிக் கொண்டே தாமஸ் வேலைக்குச் சென்ற நாட்கள் மாதத்தில் பாதியிருக்கும்.
சற்று உரிமையோடு, கொஞ்சம் கோபமும் கலந்து, “என்னாண்ணே, சின்னைப் புள்ள மாதிரி இப்பிடி அடம் பிடிக்கறீங்க?”, என்றதுமே வலக்கையை சிலுவையிலிருந்து அகற்றாமல், என் மீது பதித்திருந்த பார்வையை மட்டும் ஜன்னல் வழியாக வெகு தூரத்திற்கு அனுப்பினார். கூப்பிடுவது தான் அண்ணன் முறை வைத்து. மற்றபடி, கிராமத்தில் இருக்கும் என் பெரியப்பாவின் வயதுடையவர். இருக்கும் கிட்டத் தட்ட அறுபதுக்கு மேல். “சரி, பசியாறிட்டுப் போவோம், உங்க பர்ஸ எடுத்து கிட்டீங்களா? ம், ம் கிளம்புங்க சீக்கிரம்”, மனமேயில்லாமல் தன் உடலை வலுக் கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினார். சாவியை வாங்கிக் கதவைப் பூட்டினேன்.
படியிலிறங்கிய படியே அவரது கவனத்தைத் திசை திருப்ப மறுபடியும் நானே பேச்சுக் கொடுத்தேன். ‘அண்ணே, இந்த வாட்டி கிருஸ்துமஸுக்கு உங்களுக்கு ‘ஆஃப் உண்டு இல்ல? ‘புலாவ் உபின்’ போவோமாண்ணே. அலி கூட வரேன்னிருக்கான்”, என்றதும் முகத்தில் கொக்கியாக ஒரு கேள்வியைத் தேக்கிக் கொண்டு பார்த்தார். “அதாண்ணே, அந்த பங்களாதேஷி, எங்கூட்டாளி”, என்ற படி திரும்பிப் பார்த்தேன். செரியென்றோ,வேண்டாமென்றோ அனுமானிக்க முடியாத லேசான சலிப்பு கலந்த ஓர் இரண்டுங்கெட்டான் உணர்ச்சியையே அவரின் முகம் பிரதிபலித்தது. முன்னால் உலகை மறந்து ஒட்டிய படிவந்து கொண்டிருந்த சீன ஜோடியின் மீது மோதி விடாது கொஞ்சம் ஒதுங்கி நடந்தேன்.
காலை நேரப் பரபரப்பு சாலையோரக் கடை ஊழியர்களிடமும் தொற்றிக் கொண்டிருந்தது. “சம்முவம், எனக்கு ‘தேத்தண்ணி’ மட்டும் போதும். ரொட்டி கிட்டி வாங்கிடாத”, காலையிலிருந்து முதல் முறையாக வாயைத் திறந்தார். தாமஸின் கவலையும் பயமும் ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் பரிதாபமே மிகுந்தது. அவர் எப்போதும் குடிக்கும் பால் சேர்க்காத தேநீரும் எனக்கு சர்க்கரை சேர்க்காத பாலும் சொல்லி விட்டு மேசையை அடைந்தேன்.
மறுபடியும் யோசனையுடனான தூரப் பார்வையில் லயித்திருந்தார். தொந்தரவு செய்ய வேண்டாமென்ற தீர்மானத்துடன் நாற்காலியில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கவாரம்பித்தேன். தேநீரும் பாலும் கொண்டு வந்து வைத்த சீனப் பெண், தாமஸின் வழக்கத்திற்கு விரோதமான மௌனத்தைக் கண்களாலேயே மௌனமாய்ச் சில நொடிகள் ஆராய்ந்து விட்டு அகன்றாள். தாமஸ் தன்னிச்சையாக தேநீரைப் பருகத் தொடங்கினார்.
சாலையின் எதிர் புறம் பிக்கப் வேனின் பின்புறம் மற்றவர்களுடன் ஏறிக் கொண்டிருந்த அலி என்னைப் பார்த்துக் கையசைத்தான். தேநீரைக் குடித்து முடித்த தாமஸ் எழுது கொண்டே, ‘அவஞ்சரியில்ல, ஒடம்பம்புட்டும் பொய்யி”, என்றதும் சிரித்துக் கொண்டே, “வாங்கண்ணே போவோம், அந்த ‘ஆசோ’ கிழவி சொன்னத வச்சி கிட்டு நீங்களும் அதையே சொல்லி கிட்டிருக்கீங்க. அவம்பொய் சொல்லல்லண்ணே, நடந்ததத் தான் சொல்லியிருக்கான். சரி, இப்ப அதெல்லாம் எதுக்கு, வாங்க இப்பவே லேட்டாயிடிச்சி”, என்று கூறி நடையை விரைவாக்கினேன். கூடவே நடந்த தாமஸின் முகத்தில் தற்காலிகமாக மறைந்திருந்த கவலை மீண்டும் பரவியது.
தாமஸுக்குப் பூனைகளைக் கண்டால் அலாதியான பிரியம். தெருவில் தெருவில் அலையும் பூனைகள், கண்களை உருத்தும் அவருடைய உடைகளை வைத்துத் தெரிந்து கொள்ளுமோ, இல்லை மோப்பமோ, பசித்தால் அம்மாவிடம் உணவு கேட்கும் குழந்தைகளைப் போல தாமாஸைப் பின் தொடர்ந்து வரும். அவரும் பாலோ மீன்சோறோ வாங்கிக் கொடுத்து விட்டுத் தானும் உண்பார். அப்படிச் செய்வதால் பூனைகளைத் தொந்தரவு என்று நினைத்து வெறுத்த பணக்காரர்கள் பார்வையில் அவை பல்கிப் பெருகி சுற்றுப் புறத்துக்குத் தொந்தரவாகின. பலமுறை சொல்லியும் தாமஸ் அலட்சியப் படுத்தவே, போலிஸில் சொல்லிவிட்டனர். பூனைப் பிரியையான கிழவி தான் தாமஸுக்காகப் போலிஸிடம் பேசி அவரை வெளிக் கொணர்ந்தாள். அப்போதிலிருந்தே கிழவியின் பேச்சு தாமஸுக்கு வேதவாக்கானது. பூனைகளுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தினார்.
திலோக் ப்ளாங்கா வட்டாரத்தின் பணக் காரர்கள் வசிக்கும் ஒரு தரை வீட்டில் வசித்த சீமாட்டியின் தாய் தான் இந்த ‘ஆசோ’ கிழவி. மற்ற இளைய தலை முறையை ஒப்பு நோக்க அவளுக்குக் கொஞ்சம் இரக்ககுணமுண்டு. ‘தாகா’ வை அடுத்து இருந்த ஒரு சிறிய கிராமத்தில் அலியின் குடும்பம் இருந்தது. சென்ற வருடம் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த கிராமத்திலிருந்து வேறொருவனுக்குத் தகவல் வந்தது.
உடனேயே அலி தன் குடும்பத்தினரை காப்பாற்றி விடும் வேகத்தில் ஊருக்குக் கிளம்ப நினைத்தான். சிறுகச் சிறுக டிக்கெட்டுக்குப் பணம் சேகரித்தான். ஒன்றும் இரண்டுமாகக் கொடுத்தவர்களிடையே அலியின் கதையைக் கேட்டு விட்டு மனமிளகி அப்போது முள்ளங்கிப் பத்தையாக ஐம்பது வெள்ளியைக் கொடுத்தவள் அந்தக் கிழவி. நண்பர்களின் உதவியும் கிடைத்தது. மறுநாள் காலையில் கிளம்பவிருந்தான். ஆடுமாடுகளையும் சேர்த்து குடும்பத்தோடு எல்லோரையும் ‘பிரமபுத்ரா’ விழுங்கி விட்டது என்ற செய்தி பின் மாலை நேரம் எட்டிய போது உடைந்து போனான்.
கதறியவனைத் தேற்றி ஊருக்குக் கிளம்பச் சொல்லியும் அவன் கிளம்பச் சொல்லியும் அவன் கேட்கவேயில்லை. இனிமேல் ஊருக்குப் போய் என்னதான் செய்வது என்று ஒரே புலம்பல். அவனது ஊர்காரர்களும் வந்து ஆறுதல் சொல்லி அவனைக் குடிக்க வைத்தனர். குடித்துக் கொண்டிருந்தவனை கிழவி பார்த்து விட்டு, பொய் சொல்லிப் பணம் சேர்த்திருக்கிறான் என்று வட்டாரத்தில் வசித்த எல்லோரிடமும் பரப்பி வந்தாள்.
மருத்துவமனையும் வந்து விட்டது. தாமஸை எக்ஸ்ரே, ரத்தம் மற்றும் சளி போன்ற பரிசோதனைகளுக்கு உள்ளே அனுப்பி விட்டு வெளியே காத்திருக்க முடிவு செய்தேன். “அண்ணே, நா அரமணி நேரமிருப்பேன். அதுக்கப் புறம் வேலக்கிக் கெளம்பிடுவேன்”, என்றவனைப் பார்த்து சரியென்று தலையசைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார், தேர்வுக் கூடத்திற்குள் நுழையும் பள்ளிச் சிறுவனின் பயத்தை முகத்தில் சுமந்து கொண்டு.
தாமஸுக்கு வேலை கிடைத்தே இரண்டு வருடம் தான் ஆகியிருந்தது. அதற்கு முன்னால், சரியான வேலையில்லாமல் அலைந்து திரிந்து உணவகங்களில் தட்டு கழுவும் வேலை போன்று கிடைத்த சின்னச் சின்ன வேலையைச் செய்து வந்தார். முதல் முறையாக நான் அவரைப் பார்த்தது புகித் மேரா வட்டாரத்தில். சிநேகிதன் ஒருவனைப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஐந்தாவது மாடியின் சுவரில் ஓர் ஆள் நிற்பது தெரிந்தது. தடுமாற்றமும் இருந்தது.
மளமளவென்று மாடிப் படிகளில் ஏறிப் போய் பார்த்தால், இந்தியர் ! குடித்திருந்தார். மனைவியும் பிரிந்து, வேலைமில்லாததால், ஐந்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் பார்த்தாராம். வயதான அந்த உடம்பில் ஊனத்தை நினைத்துப் பார்க்கவே நடுங்கியது. மெதுவாகப் பேசிக் கீழே அழைத்து வந்தேன். போதையில் தன் கதையைப் புலம்பினார்.
அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் லீவெடுத்ததால், கையில் இருந்த வேலையும் போயிற்று. கடைசியாகக் கையிலிருந்த காசில் குடித்து விட்டு சைனா டௌன் வட்டாரத்தில் குடிபோதையில் சுற்றுப் பயணியிடம் ஏதோ பேசப் போக, அந்த வெள்ளைக்காரர், அவரின் அழுக்கு படிந்த ஆடையை வைத்து பிச்சையெடுக்கிறார் என்று நினைத்து இரண்டு வெள்ளியை இவர் கையில் திணித்திருக்கிறார்.
இதைப் பார்த்த நீலச்சட்டை ஆசாமிகள் இவரைக் கொண்டு போய் லாக்கப்பில் இரண்டு நாட்கள் வைத்திருந்து அனுப்பியிருந்தனர். வேலை ஒன்று நிரந்தரமாகக் கிடைத்து விட்டால் அவரது பிரச்சனை தீரும் என்று தெரிந்தும் என்னால் பரிதாபம் மட்டுமே படமுடிந்தது. அதன் பிறகு வந்த நாட்களில் எங்களிடையே நட்பு வளர்ந்தது.
“சைனா டௌன்’லனதும் அரெஸ்ட் பண்ணினாங்க. இதே சிரெங்கூன்லன்னா, சும்மா கண்டிச்சு விட்டிருப்பாங்களோ. கூண்டுல கிளிய வச்சி கிட்டு சிரெங்கூன்ல ஜோசியம்ன்ற பேருல நெஜமாவே நா பிச்சையெடுத்தாலும், ‘கலாசாரம் வளக்கறோம்னு சந்தோசமா ஆதரிச்சிருந்தாலும் ஆதரிச்சிருப்பாங்க இல்ல?”, என்று அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் விரக்தியுடன் கேட்பார்.
சங்கிலியாகப் புகைத்த சிகரெட்டை வேண்டுமானால் விட்டு விடுவதற்கு முயல்வாராம். மாலையில் குடிப்பதை மட்டும் விட முடியாதாம். கேட்டால், வரிசையாகக் காரணங்கள். வேலையில் சேர்ந்த புதிதில் தன் சொற்ப சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுப்பதை அவரால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவருடைய முதலாளி தான் அடுக்கு மாடிக் கட்டடத்தில் வாடகைக்கு அவர் எடுத்திருந்த ஓரறையில் தங்கிக் கொள்ளும் படி கூறினார். அங்கே தான் ‘கோடௌன்’ மாதிரி தற்காலிகமாகத் தரையிலிருந்து கூரை வரை பழைய பேப்பரும், பழைய டீவீ, ரேடியோ, பாத்திரம், பண்டம் என்று சகல விதமான உயிரற்ற பொருள்களையும் குவித்து வைத்திருந்தார்.
அவ்வப்போது அகற்றப் பட்டதுமே மேலும் குவியும். குவிந்திருக்கும் குப்பை கூளங்களிலிருந்து கிளம்பிய நெடியும் நாற்றமும் ஆரம்பத்தில் அவரைத் தூங்க விடாது துரத்தின. சில சில வேளைகளில் சீமாட்டிகளின் வாசனைத் திரவியங்கள் கிடைத்தும் விடுவதுமுண்டு அவருக்கு. பொருட்களை ஒதுக்கி ஆறடிக்கு மூன்றடி இடம் செய்ய வேண்டும். உரிமையுடன் கூளங்களிடையே உலவிய கரப்பான் பூச்சிகளுடன் பழைய மெத்தையொன்றை விரித்து உறங்கச் சீக்கிரமே பழகினார். அவ்விடத்தில் உறங்க வேண்டுமென்றால், உழைப்பில் வந்த உடலசதி மட்டும் போதாது. நுகரும் புலன் தற்காலிகமாகவேனும் சாக வேண்டும். குடிப் பழக்கம் அவருக்கு ஓரளவிற்கு உதவியதென்று சொல்லி கொள்வார்.
“ஏம்பா, ரீசைக்கிளிங்க் சாமானமெல்லாமே இந்த நாத்தமடிக்குதே, தினப்படி குப்பை அள்றாங்களே பங்களாதேஷி ஆளுங்க, எப்பிடித் தான் சகிச்சுக்கறாங்களோ”, என்று வியப்பார். குழந்தைகளின் காலைக் கடன்களை ஏந்திய டையப்பர்கள், அழுகிய முட்டை, ஊசிப்போன இறைச்சி சமையல், பெண்களின் மாதந்திர சமாசாரங்கள் என்று உலகில் உள்ள அத்தனை துற்நாற்றங்களையும் கலவையாகக் கொண்ட குப்பைகளை அள்ளும் பங்க்ளாதேஷிக்களுக்கு நாளடைவில் பழகியது போலவே தாமஸுக்கும் பழகி விட்டது. வேலையின் தேவை அவரைப் பழகும் நிர்பந்தத்திற்குத் தள்ளியது.
திறந்த வெளியில் சேகரிக்கும் போது இருந்த நாற்றம் அறைக்குள் நூறு மடங்காகிப் போகும் அதிசயத்தைச் சொல்லிச் சொல்லி வியப்பார் தாமஸ். முதல் முறை அங்கு போன போது நிற்க முடியாமல் திரும்ப ஓடி வந்து விட்டேன். ஒரு முறை தாமஸைக் கூப்பிட வந்த ஆசோ’ கிழவி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மருத்துவ முகமூடிகளணிந்தே வந்தாள். கையை ஆட்டி சைகையால் கூப்பிட்டு விட்டு ஓடியே போய் விட்டாள்.
மருத்துவச் சோதனைகள் அதிக நேரமெடுக்கவே நான் என் வேலைக்குக் கிளம்பினேன். ஒரு வருடமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருக்கிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய முதலாளி மிகவும் வேண்டிக் கொண்டதால், மாலையில் போய் பேச்சையெடுத்ததுமே,” வேணாமே…ஏதாவது கோளாறுன்னு சொல்லிட்டா? குடிக்கறேன்ல, லிவர் போச்சுன்னுவான், இல்ல சிகரெட் பிடிக்கறேனா, டீபீன்னுவான். மொத்ததுல மொதலாளி என்னைத் தூக்கிட்டு வேற ஆளப் போட்ருவாரு. எனக்கு வேல போயிடுமே சம்முவம், அப்பறம் என்ன செய்ய சொல்லு, எனக்கென்ன ஸீபீஎஃப் (CPF) இருக்கா? பேருதாஞ் சிங்கப்பூரு, ஒரு தேத்தணி வாங்கணும்னாலும்… நாயாபேயா ஒழைக்கணும் லா. சாவறதுக்கு முன்ன கூட என்னோட பாலுக்கு ஒழைச்சு வச்சிட்டில்ல லா நா சாவணும், அத எடுத்து ஊத்த ஒரு சொந்தமுண்டா, பந்தமுண்டா”, என்று கலங்கிய கண்களுடன் வழக்கமான பல்லவியையே பாடினார்.
“எதுக்கு இப்ப உணர்ச்சி வசப்படறீங்க, இப்ப நாங்கல்லாம் இல்ல. இதுக்குப் போயி இவ்வளவு கவலப் படறீங்களேண்ணே, ஒருவேல போனா இன்னோண்ணு, முடிப்பதற்குள்,
“ஒரு பய வேல் தர மாட்டான். ஒனக்கெங்க புரியும். இந்த ஊர விட்டா ஒங்க ஊருக்குப் போயிடுவீங்க, ஆனா நாங்க”, குரலில் பொறாமை தெரிக்கும்.
“நீங்கதா மெச்சிக்கணும், ஊர்ல மழையே இல்லண்ணே. காஞ்சி கெடக்குதாம் பூமி. வெள்ளாமையெல்லாம் இல்லாம ஒரே கஷ்டமாம். அப்பா சொல்லி ரொம்ப வருத்த பட்டு கிட்டாரு.
“கஞ்சோ கூழோ, பஞ்சமோ வெள்ளமோ, சொந்த ஊர்னு ஒண்ணு இருக்குல்ல, எனக்கு அப்பிடியா? சொல்லு லா”
“ம், எப்பவுமே இக்கரக்கு அக்கர பச்ச தான்னு வைங்க.”
“என்ன ஒண்ணு, சின்ன வயசுல படிக்காம இருந்துட்டேன், அதத் தவிர நாஞ்செஞ்ச குத்தமென்னன்னுதான் எனக்குந் தெரியல்ல லா”, தன் பெரிய கண்களில் சோகம் கவியச் சொல்லும் போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே ! கிடைக்காத பண்டத்துக்கு ஏமாற்றமும் ஏக்கமும் கொள்ளும் சிறு குழந்தையைப் போலிருக்கும். கேரளாவின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இன்றும் தூரத்துச் சொந்தங்கள் இருப்பதாக அவ்வப்போது சொல்லிக் கொள்வார்.
வேலை முடிந்து மாலையில் தாமஸைப் பார்த்து சோதனை முடிவுகள் எப்போது வரும் என்று கேட்டேன். ஒரு வாரமாகும் என்றார். முகத்தில் காலையில் கவிந்திருந்தகவலை அதிகரித்திருந்தது போலத் தான் தெரிந்தது. தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் பள்ளி மாணவனைப் போலத் தெரிந்தார். “சம்முவம், கிருஸ்துமஸுக்குள்ள ரிசல்ட் வந்துடும். எல்லாமே சரியா இருந்தா, நீ சொன்ன மாதிரி ‘புலாவ் உபின் போவோம், ஓகேவா”, என்றார் எனக்காகச் செயற்கையாக வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன். சிறிது நேரம் பொதுவாகப் பேசி விட்டுக் கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன்.
நண்பனொருவன் விடுமுறையில் இந்தியாவிற்குப்போய் விட இரண்டு ‘ஷிஃப்ட் செய்ததில் அடுத்த நான்கு நாட்களுக்கு நானும் போய்ப் பார்க்கவேயில்லை. வேலையில் நாட்டமேயில்லாமல் மருத்துவச் சோதனையின் முடிவு பற்றிய கவலையிலேயே அடுத்த சில நாட்களைக் கடத்தியிருக்கிறார். எப்போதும் அவரிடமிருந்த கலகலப்பு முற்றிலும் விடைபெற்றிருந்தது. விடமுடியாமலிருந்த சிகரெட்டைக் கூட வாங்க மறந்திருந்தார்.
மாலைகளில் ‘தண்ணீர்’ மட்டும் தொடர்ந்த படியிருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு கதிரேசன் தான் தகவலைக் கொண்டு வந்தான். தாமஸ் மாரடைப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். இரண்டு நாட்கள் மூக்கிலும் வாயிலும் குழாய்கள் மாட்டப் பட்டுக் கிடந்தார்.
வெள்ளியன்று மருத்துவச் சோதனை முடிவுகள் வந்தன. புகைத்தலையும் குடித்தலையும் மட்டும் விடும் படி டாக்டர் ஆலோசனை கூறியிருந்தார். மற்றபடி ரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல் எதிலும் எந்த விதமான பிரச்சனையுமின்றி சாதாரணமாகவேயிருந்தது.
சோதனை முடிவை அறிந்து கொள்ளாமல் தன் முடிவைத் தழுவிக் கொண்டு விட்டார். முடிவைப் பற்றிய உளைச்சலில் மன அழுத்தத்திற்குத் தான் தாமஸ் இறுதியில் பலியாகியிருந்தார்.
– பின் சீட் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, நிலா புக்ஸ்.