தாலி சிரித்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 1, 2025
பார்வையிட்டோர்: 4,076 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படுக்கை இதமளிப்பதற்குப் பதில் என்னை உழல வைத்சது. உடம்பில் அசதியின் சுமை இருந்தபோதும் உள்ளம் குமுறிக் குமுறி கொந்தளித்தது. இதயம் வெறு மிதயமாக இல்லை. அதனுள் ஒன்றி ஒளித்து விளையாடும் அந்த நினைவுகள்; காலமெனும் கட்டுள் அடங்காமல் வெடித்துச் சிதறுகிறது கனவுகளாகி இதயத்துள் மலர்ந்த நினைவுகள் வாடிக்கருகி நிலத்தில் விழுகின் றனவா…? காதல் வெறும் கண்துடைப்புத்தானா…! அதன் உண்மை நிலையை உணர முடியவில்லை. மரகதம் தான் சுய உணர்வில் எழுதினாளா…? அல்லது அந்த நிலைக்கு நிற்பந்திக்கப்பட்டாளா…? எனது மனம் பிரளய மாகிக் கொந்தளித்தது. 

குறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கைத் தூண்டி அந்தக் கடிதத்தில் மீண்டும் ஒருமுறை கண்களை மேய விட்டேன்… ஆனால் அந்தர ஆத்மா திருப்திப்பட்டதாக இல்லை. இருளை விலக்க பிரயத்தனமாகி உள்ளம் விரிவ தற்குப் பதில் ஒளியை ஏற்றுவதற்கு மறந்து எதை எதையோ நினைவிற் கொண்டுவந்து நிறுத்துகின்றது 

அவளுடன் பழகிய நாட்களை மறக்க முடியவில்லை. சங்கிலித் தொடராகி மனக் கண்ணுள் நீர்க்குமிழி மலர்வதுபோல; அலை பாய்ந்துவரும் அந்தச் சுவடுகள் தெரிகின்றன. 

சென்ற கோடை காலம் நாய்க்குட்டி வாய்க்காலில் நடந்த மாட்டுச் சவாரி நேரத்தில்தான் மரகதத்துடன் நான் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆடி – ஆவணி மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இவை அமர்க் களமாகிவிட்டிருந்தன. 

நாய்க்குட்டி வாய்க்கால்; சரவணைச் சந்தியை அடுத்து பல மைல்களுக்குப் பரந்து கிடக்கும் கானல் வெளி மணற் புழுதி காற்றில் எற்றுண்டு புகையாகிக் கிளம்பி விழுகின்றது. பிரதான வீதி; அதன் இருமருங்கும் பூவரச மரங்கள் கருகியும் கருகாமலும் குறை உயிருடன் வானத்தை நோக்கி நீருக்காக ஏங்கித் தவங் கிடக்கின் றன. சில சருகுகள் காற்று வீச்சில் அதன் நிழல் பரப் பில் சரசரத்த வண்ணமாகி விழுகின்றன. 

மாடுகள் வெண்டயங்களைக் குலுக்கித் தமது வெற்றி யைப் பகிர்ந்துகொள்ளத் துடிக்கின்றன. வாளிப்பும் வழு வழுப்புமுள்ள சில காளைகள் தமது ஏரிகளை நிமிர்த்தித் தலையை ஆட்டிக் கால்களைத் தூக்கிப்போட்டுக்கொள் வதில் அவைக்குப் பெருமை… 

வெண்டய மணிகள் கலகலவென ஒலிக்கின்றன. எல் லார் மனதிலும் உற்சாகம் குதிர்போடுகிறது. மகிழ்ச்சி ஆரவாரம்… 

கிராமத்தில் உள்ளவர்களில் பெரும் பகுதியினர்கள் பலரகத்தவர்கள் சாதிமத பேதமின்றி எல்லோரும் ஒன்று பட்டு நிற்கின்றனர். 

நானும் முண்டியடித்துக்கொண்டு முன் சென்றேன் வவுனியாவில் இருந்துகூட ஒரு சோடி மாடுகள் போட்டிக் காக வந்திருந்தன. இதைப் புளியங்கூடல் சுப்பிரமணி யத்தார் கூடுதலாகக் காசு கொடுத்து வாங்கி வந்ததாக வும் பக்கத்தில் நின்றவர் சொன்னார். 

முதல் நாலு சோடி பந்தயத்துக்கு வந்து நின்றன. 

“மாவெள்ளைச் சோடிதான் வெல்லும் ஒருவரின் குரல். மற்றவர் இல்லை கொட்டவாலன் சோடிதான் பந்தயமென்ன?” 

“இல்லைச் செங்காரிச் சோடிதான்…” மெல்லிய குரல் தொனித்தது. அது யாருமல்ல என்னுடன் பாடசாலையில் படித்த மரகதத்தின் குரல். அவள் என்னைக் கண்டாளோ என்னமோ…! 

நான் அவளை இனம் கண்டு கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை… கருமை நிறமாக ஊதிவிட்டால் விழுந்து விடக்கூடிய நிலையுமாக அன்றிருந்த மரகதம். இன்று பருவ அழகு மலர… காலத்தின் மாறுதலில் இளமைக் கோடுகள் துலங்கி மலர்ந்து காணும் இறுக்கம்… தசை யின் மெருகு அலைபோல அவள் உடலின் யாவண்ணத்தும் அழகை அமைத்து மனதை… கவரும் மதமதப்பு… நிறம் சிவப்புமில்லை வெளுப்புமில்லை… இதழ் ஓரங்கள் … சாயம் தீண்டாமலே சிவப்பு நிறம் பிறந்த உதடுகள்…! முல்லை மெல்லரும்பு போன்ற பற்களின் அமைப்பு… நெற்றியை முத்தமிட்டு காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் சுருள் மயிர் சுற்றைகள்; முகத்திற்குத் தனிச் சோபை ஊட்டுகின்றன. மினுமினுப்பான தேகம்; வாழைத்தண்டு போன்று உருண்ட கவர்ச்சி… 

என்னுடன் வலியவந்து மல்லுக்கு நிற்பதில் திருப்தி காணும் அவள் இன்று மிரள மிரள கருமணிகளை ஓரத் துக்குத் தள்ளி என்னை ஓரப்பார்வையில் பார்க்கிறாள். 

“என்னைத் தெரியுமா…?” 

“யாரை மறந்தாலும் உங்களை மறந்துவிடுவது முடியுமா…!” 

“அப்படியா…?” 

ம்..அவள் நிமிர்ந்துபார்த்தாள். அவளது கண்மடல்கள் வண்ணாத்திப் பூச்சியின் இறகுகளாகி படபடத்ததேன்… பார்வையின் நெருடலில் எவ்வளவு உணர்ச்சி பிரதிபலிபபு; அது மனிதனுடன் கூடப்பிறந்த ஒன்று அதற்கு நான் கூடப் புறம்பானவனா…? ஏதோ ” எலெக்ரிக்ஸ்பாக் அடித்ததுபோன்ற உணர்வு; இனம் தெரியாத இன்பமயக் கம்; இதுவரைக்கும் அடைந்திராத புது நிலை. எங்கோ அந்தரத்தில் பறப்பது போன்ற பிரமை… உள்ளம் லேசாகி பஞ்சுச் சுமையாகி இழகிப் பறக்கிறது. இதைச் சொல் லால் விளக்க முடியவில்லை. மேனி சிலிர்த்துக் குலுங்குகிறது. 

அவள் விழிகள் பூமாதேவியை நாடி நின்றன. முகம் நாணத்தால் சிவந்து மலர்ந்து பூவாகி… குலுங்க… குனிந்த குனிவில் தன்னுடன் படித்த மற்றவர்களை பற்றி விசாரித்தாள். அதன் இடையிலும் கூர்ந்து பார்த்தாள். அதன் பொருள்தான் என்ன…? 

மாட்டுச் சவாரி ஆரம்பமாயது. அதில் அவள் சொல் லிய ஜோடிகள் ஜெயிக்கவில்லை. 

“உன் ஊகம் பொய்த்துவிட்டது. இந்த வரிசையில் எந்த மாடுகள் வெல்லும் சொல்லு பார்ப்போம்…” 

கரம்பன் கணபதிப்பிள்ளையினுடைய மாடுகள்’ 

“இம்…கும்… அந்த நரையன் சோடிதான்… பந்தயமென்ன?” 

“அப்படியே பந்தயத்தில் தோற்றுவிட்டால்…” 

“தோற்றுவிட்டால் என்னவாம்…” மரகதம் நிமிர்ந்து பார்த்துக் கேள்விக் குறியை நிறுத்தினாள். 

நான் உங்கள் அன்புக்கு அடிமையாய்விடத்தானே காத்திருக்கிறேனே பிறகு எதற்குப் பந்தயம் என்பது போல் அந்தப் பார்வையின் அர்த்தம் தொனித்தது. 

யார் பக்கம் வெற்றி…? அவள் பக்கம்தான். மனதில் எனக்கென இடம்பிடித்துவிட்ட அவளைப் பார்ப் பதற்காக அன்றிலிருந்து மாட்டுச் சவாரியை நாடி என் இதயம் ஓட்டம் எடுப்பதற்கு என் உடலும் ஒத்து ஊது கிறதா? 

அவளும் என்னைத் தன் நெஞ்சைச் சிறையில் அடைத்து விடத் துடித்தாள். 

பகற் பொழுதில் காய்ந்த வெயில் தாக்கத்தில் வாடி அதிகாலைப் பொழுதில் பனிபட்டுக் குளிர்ந்து நிற்கும் செடியாகி அவள் அன்பெனும் குளிர் ஊத இந்த நேரங் களில் பொலிவு பெறுவேன். அவள் வரவை இதயம் விரும்பியது. 

காலமெனும் கட்டுள் அன்பின் இழையில் பிணைந்து தொங்கவேண்டியதாயிற்று. 

கடைசிப் பந்தயம் இன்று…! 

மரகதத்தின் உற்சாகம் குன்றியதில் ஒளியை மூடி மறைத்து இருள் திரையாகிவிட்ட முகம்… மனதில் இனம் தெரியாத பெலயீனம்; இதயக் கதவம் படபடக்கிறது. ஏக் கம் தொனிக்கும் சொற்கள்; அதை அவள் வெளிப்படுத் தாமல் இருந்துவிடவும் கூடுதில்லை. 

“எனி உங்களை சந்திக்கப்போகிறேனோ ..” 

உள்ளத் தாமரையில் மலர்ச்சியின் சுமை தளர்ந்து இனம் புரியாத ஏக்கம்… என் உருவத்தை இதய அறையில் நிறைந்துவிடும் அர்த்த புஸ்டியான பார்வை 

” ராஜன்…” 

அவள் உள் மனதில் எழுந்த ஆசையின் அலைப்பில் வார்த்தையாகி குவிகிறது. மரகதத்தின் அன்பு மழையில் நனையத் துடிக்கும் நான் நிமிர்ந்து பார்த்தேன். என்ன என்பதுபோல் கண்களின் பாளைகள் நடுங்கின… முகத் தில் புது ஒளி… மின்னல் தாக்குதலில் நான் முகம் மலர நின்றேன். 

அவள் சொல்லத் துடிக்கிறாள். நாணமென்ற திரை வார்த்தையாகவிடாமல் மறைக்கிறது. மூகம் சிவக்கிறது. என் கழுத்தில் கைகளை வளைத்துக் கட்டிக்கொண்டு மடிமீது புரளும் குழந்தையாகித் தனது கொடிபோன்ற உடலை என் நெஞ்சில் புரளவிட வேண்டும்போன்ற தூண்டல் துடிப்பு உள்ளத்தின் நிழலில்… 

“ராஜன் இந்தப் பூவையின் இதயமும் அதன் கதவு களும் உங்களுக்காகவே காத்திருக்கும் இந்த ஏழையை நடுக்கடலில் தத்தளிக்க விட்டுவிடாதீர்கள்” 

உணர்ச்சி ததும்பிய நீலோற் பல விழிகளில் நீர் முத்துக்கள்… கோர்த்தன. மூகத்திலே குழுமையில்லை. நடுப்பகற்பொழுதில் வெம்மை தாங்காது வாடிவிட்டிருக் கும் புகையிலைக் கொழுந்துபோல் முகம் மாறிவிட் டது. வீசிய காற்றுக்கூட அனலாகக் கொதித்தது. இதயத்தின் ஆழத்தில் மலரும் அன்பின் தகிப்பில் அர்த்த மற்ற வாட்டம் நிழலில் நிற்கும்போது பெண்ணின் உடல் குளுமையாயும் தொலை வில் நான் பிரிந்து போகிறேன் என்றதும் இதயம் சுடுகிறது. மரகதத்தின் கண்களின் ஒளியாகி நிற்கும் என்னைப் பிரியும் ஆற்றாமை தவிர்க்க முடியாத தவிப்பு; மீண்டும் ஒருமுறை என்மீது ஒவ்வொரு அங்கமாகப் பார்வையின் இறகுகளை பறக்கவிடுகிறாள். மனதை என்னிடமே நிறுத்திவிட்டு அவள் நடந்தாள்… திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நடந்தாள்… நான் கண்களிலிருந்து மறையும் வரை நோக்கிக்கொண்டே இருந்தேன். ஆனால் மனதில் தவிர்க்க முடியாத தவிப்பு; அவள் கடிதம் வரும் நாளை எதிர் நோக்கி நின்றேன். குறைந்தது கிழமைக்கு ஒன்றாவது எழுதாமல் இருக்கமாட்டாள். என்னைமட்டும் பதில்போட வேண்டாம் என வேண்டிக்கொண்டாள். அவள் கடிதங் களிலே தன் தவிப்பை வெளிக்கொட்டியிருந்தாள். 


சில மாதங்களின் ஒரு வெள்ளிக்கிழமை என்தாய் கோயிலுக்குப் போய் வந்தாள். இன்று என் அன்னை முகம் ஏனோ வாடிவிட்டது. என்றும்போல் அன்பொழுகக் கூப்பிடவில்லை. 

இதைக் கண்டு நான் வலித்து எங்கு போய் வருகிறாய் என்றேன். மாரியம்மன் கோவிலுக்குப் போய் அரிச்சனை செய்துபோட்டு வாறன் எனக்கு ஒரே ஒரு ஆசை உனக்கு நல்ல இடத்தில் சம்மந்தம் செய்து எண் கண்குளிரப் பார்க்கவேண்டும். என் மருமகளின் கையால் சாப்பாடு தின்னவேண்டும் என்ற ஆசை… அத னால் பூக்கட்டிப் பார்த்திட்டு வாறன் நல்ல காலம் நான் நினைத்தபடி வெள்ளருளிப் பூத்தான் வந்தது சீக்கிரம் நான் இறந்துவிடுவன் என்ற ஏக்கந்தான். சரிசரி வாணை சாப்பிடுவம் என்று இலை முன் குந்தினேன். ஆனால் எனக்கு உணவு உண்ண மனமிருந்தால்தானே…! 

“என்னடா தம்பி வரவரச் சாப்பாட்டைக் குறைக் கிறாய் உன் உடம்புக்கு என்ன? என்னும் கொஞ்சம் போடவா…?” சிரித்தபடியே கேட்டாள். அவளது இன் றைய சிரிப்பில் இயற்கையில்லை. வலிந்து சிரிக்கிறாள். மனதில் உள்ளதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனி நடிப்பாகவேதான் அது தெரிந்தது. புதுக் கவலை வந்து குடிபுகுந்திருந்தது. சிலவேளை நான் கீழ்சாதியிற் பிறந்த ரகதத்துடன் பழகியதாக வேறு எவராவது அவள் காதில் போட்டு வைத்தார்களோ. மேலும் பல கேளவிக் குறிகள் மனதின் ஓட்டத்தை விரைவுபடுத்துகின்றன. என்மனதை எல்லாம் சேர்ந்து குடைந்தன. எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு, போய் மேசையில் உட்கார்ந்தேன் மனதின் போக்கை அந்த குரங்கு மனத்தைக் கட்டுப்படுத்த சாந்தி பிறக்க நின்மதிக் காக… மேசையில் கிடந்த கதைப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் தெஞ்சுள் அவள் முகம் ஒளியுடன் உறவாடுவது போன்ற நினைப்பு… 

தபால்காரன் விசில் அடித்துக் கூப்பிடும் ஓசை மெல் லியதாகக் கேட்டது. நான் துள்ளி எழுந்து போய்க் கடி தங்களை வாங்கினேன். அதில் ஒன்று மரகதத்தினுடை யது. என்பதை மேல் விலாசத்திலிருந்து தெரிந்தது. மனநிலையை மாற்றும் மருந்து வந்துவிட்டதென எண்ணியவண்ணம் கவரைப் பிரித்தேன் அங்கு எழுதி யிருந்தது ஏனோ மேலும் கலக்கத்தையே உண்டுபண்ணி யது. அது இதுதான். 

அன்புள்ள ராஜனுக்கு, 

என்னை மன்னிக்க வேண்டும். இதைப் படிக்கும் நேரம் எனக்குத் திருமணம் நடந்தேறியிருக்கும். எனக் கும் உங்களுக்குமிருந்த தொடர்பு இன்றுடன் அற்று விட்டது. நீங்கள் நல்ல நிலையிலிருப்பவர்கள். எனக்கும் உங்களுக்கும் பலபடிகள் வித்தியாசம். நானோ மரம் ஏறும் குலப் பெண். உங்கள் குலமோ உயர் குலம். அன்பு. பண்பு எல்லாவற்றிலுமே உங்களுக்கு நிகர் நீங் களே. நீங்கள் காட்டிய அன்பை என்னால் மறக்க முடிய வில்லை. அவை என்றும் சகோதர உருவிலே நிலைநிற்கும். 

உங்கள் வாழ்வை இழிவுபடுத்த விரும்பவில்லை. இதை விட என்னைக் காத்து வளர்த்த மாமாவின் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டி இருக்கிறது. மீண்டும் ஒருமுறை தங்களிடம் மன்னிப்பு வேண்டி நிற்கிறேன். மேற் கொண்டு எவ்வளவோ எழுத நினைக்கிறேன் ஆனால் முடிய வில்லை……. 

இப்படிக்கு
அன்பின் சகோதரி 
மரகதம் 

தலை வலிக்கிறது என அம்மாவிடம் சொன்னேன். அவள் சுக்குப் போட்டு கசாயம் கொண்டுவந்து தந்தாள். என் நிலையைச் சமாளிக்க இதையும் குடிக்க வேண்டி ஏற்பட்டது. அவ்வளவு கசாயத்தையும் ஒரே மூச்சில் உறிஞ்சித் தீர்த்தேன். அப்பொழுதும் என் மனதில் அமைதியில்லை. புயல் வீசியது. அலைகள் வந்து மோதி யடித்தன. இடிஇடித்தது. அன்பை மறந்துவிடு என்று ஒரு நொடியிற் கூறிவிடலாம். ஆனால் அந்தக் கிளு கிளுப்பை ஊட்டும் சந்திப்பை மறந்துவிட முடியுமா…? உள்ளமென்ன ஜடப் பொருளா…! 

விடியும் வரை உறக்கம் வரவில்லை. விடிந்ததும் மரகதத்தின் வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன். மனதில் விழுந்துவிட்ட கீறலைப் போக்க விரைந்து சென் றேன். கொட்டுமேளம் கொட்டப்படவில்லை. பொங்கி எழும் அலைகளின் ஓசை சர்சர் என இரைவது காதுகளில் கேட்டுக்கொண்டேயிருந்தது. உயிரற்ற உருவம்போல் நடந்தேன். மக்கள் கூட்டம் அவள் வீட்டில் இல்லை. திருமணப் பந்தல் இன்னும் கழட்டப்படவில்லை. அவை என் மனதிற்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தன. இப் பொழுது அவள் வீட்டினுள் போய்விட்டேன். அங்கே கண்டகாட்சி என்னை மேலும் புண்படுத்தியது. மணமக்கள் இருவரும் இருந்தார்கள். மரகதம் என்னைக் கண்ட தும் சிரித்தாள். அவள் முகத்தில் எதுவித சலனமுமில்லை என்னைத் தன் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவன் கரம் கூப்பி வரவேற்றான். நானும் பதிலுக்குக் கையைக் குவித்தேன். ஆனால் என் மனம் அந்த வர வேற்பை முழுவதாக ஏற்கவில்லை. கண்களில் கண்ணீர் முத்துக்கள் சிலிர்த்தின. அவர்களுக்குக் காட்டிக்கொள் ளாமல் கைக்குட்டையால், துடைத்துவிட்டு சிரிக்க முயன் றேன் முடியவில்லை. அழத்தான் வேண்டுமா…? அதற் கும் தர்மசங்கடம். மரகதத்தைப் பார்த்தேன் தாலிச்சரடு நெஞ்சில் கிடந்து என்னைப் பார்த்தது. அதன் மங்கள மான ஒலியில் அவள் மகிழ்ந்துபோய்ப் பொலிந்து நின் றாள்… நான் வெறு மனிதன்…! 

என் ஊமை உள்ளம் அழுகிறதா…! அது அழுது அழுது… எனி என்னாவது..? 

இதயம் பழைய நினைவுகளில் அலைக்கப்படுகிறது. உள்ளத்தில் நான் சொல்லிக்கொள்வதை அவள் கழுத்தில் கிடந்த தாலி கேட்டதோ என்னவோ அது சிரித்தது. 

“அவள் என் கரம் பற்றி இருக்க என் நெஞ்சின் உள்ளே நிலைத்து நிற்க வேண்டியவள் இன்று இன்னொரு வனின் உடமை… நானும் என் நினைவும்தான்… மிஞ்சுகிறதா…?” 

ஆம் அது சிரிப்பதில் அர்த்தம் இருக்கிறது. காதல் என்பதைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டேன் என்று என்னைப் பார்த்துக் கேலி செய்தது. என் மனதிலே படை படையாகக் குமிறி எழும் இந்த அலைகள் எப்பொழுதுதான் ஓயுமோ…? 

– விவேகி, தை 1962. 

– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *