தவறு
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பச்சைப் பால்போல் நிலவு, அந்ந நிலவைக் கண் இமைக்காமல் வெறித்துக்கொண்டு இருந்தாள் அவள்! அவள் முகத்தில் ஒருவித சோகம் நிழலாடியது. கண்களில் குழுமையில்லை. உதடுகள் நீர்ப்பிடிப்பற்று உலர்ந்து விட்டன. வீசிய காற்று வெண்ணிலாக்கூட அவளுக்கு ஒரு குழுமையைக் கொடுக்கவில்லை. மனத்தைச் சாந்தப் படுத்தவில்லை. அதற்கு மாறாக வேதனையைக் கொடுத்தது. வேதனையில் நெற்றிப் புருவங்கள் மேலுங் கீழுமாக நெளிந்து நிமிர்ந்து கொண்டு இருந்தன. அப்படியென்ன வேதனை என்று எவருக்கும் சொல்லவும் முடியவில்லை. அதை அடக்கிக்கொள்ளவும் முடியவில்லை. அவள் மார்பகம் மேலும் கீழுமாக உயர்ந்து தாழ்ந்தது. அடி மனதில் இருந்துவரும் எண்ணங்களெல்லாம் பெருமூச்சு ரூபத்தில் பாட்டம் பாட்டமாகக் கிளைத்தெழுகிறது.
அவள் மனதில் எழுபவை கண்டிப்பாக இவைதான்.
என் அத்தான் என்னை ஏமாற்றிவிட்டார். கள்ளங் கபட உள்ளமற்றவர் என்றெண்ணியது எவ்வளவு பொருத்தமற்றது. அவருக்கு மற்றவர்கள் மன்னிப்புக் கொடுத்தாலும் என்னால் மன்னிக்கவே முடியாது. எவ்வளவோ ஆசைகாட்டி என் உள்ளத்தில் தாங்க முடியாத நெருப்பை அல்லவா மூட்டிவிட்டிருக்கிறார். அவருக்குத் தான் திருமணமாகி மூன்று நாட்களாகிவிட்டனவே. என் னுடன் இணைந்து வாழத்தான் கொடுத்துவைக்காவிட்டா லும் என் மனதுக்காகுதல் ஒரு ஆறுதல் கூறக்கூடாதா? அதற்குக்கூடவா அவர் மனம் இடங்கொடுக்கவில்லை? இவ்வளவு நாட்களும் இனிய மொழி பேசி என்னைச் சுற்றி சாந்தா சாந்தா என்று வருவாரே. எவ்வளவோ கதைகள் கற்பனை ரூபத்தில் ஒரு எழுத்தாளன்கூடக் கற்பனை செய்ய முடியாதபடி சொல்லுவாரே. அவருக்காக என் மனதில் கோயில் அமைத்துவிட்ட பிறகு கண்டுங் காணாதவர்போல் இருக்கிறாரே. ஐயோ தெய்வமே நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன். இப்படி நிம்மதியற்று வாடி வதங்கவா…?
இதை வாங்கிச் சென்ற காற்று அவனுக்குச் சொல்லி நினைவுபடுத்தி விட்டதோ தெரியவில்லை. “ஏன் இன்னும் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர். போய்த் தூங்குமேன்” என்று சொல்லிக்கொண்டே வந்தான். கணேசன்.
அவளால் எதையும் சொல்ல முடியவில்லை அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் இவ்வளவு நேரமும் எழுந்த நினைவுகள் கரைந்து கண்ணீர் ரூபத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. கணேசனுடைய மனமும் கரைந்தது. தான் செய்ததவறு நினைவுக்கு வந்தது.
“சாந்தா நான் உனக்குத் துரோகம் செய்யவேண்டு மென்று நினைக்கவில்லை.
நான் மன்னிப்புக் கேட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டாய் என்று தெரியும் என் நிலையில் நீ இருந்தால் தான் அது உனக்குப் புரியும். என்மீது உனக்கிருக்கும் கோபத்திற்கு அளவேயில்லை. இதை உன்னிடம் சொன்னால்தான் சாந்தி பிறக்கும் என்ற ஒரே எண்ணத்தில்தான் இங்கு வந்திருக்கிறேன். நீ நம்பினா லென்ன நம்பாவிட்டாலென்ன இதைச் சொல்லித் தொலைத் தால்தான் என் மனச்சுமை சற்றுக் குறையும். உனக்குத் துரோகமும் செய்துவிட்டுக் கதையும் அளக்கிறேன் என்று நினைக்கலாம். அது என்மீது குற்றந்தான். அதற்காக உன்னிடம் ஆயிரம் தடவை மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டேன். சற்று நிதானமாய் இதைக்கேள்:-
கொழும்புக்கு வந்த புதிதில் நான் தங்குவதற்கு இடந்தேடித் திரிந்தேன். எவரும் எனக்கு அறை கொடுக்க முன்வரவில்லை. பல சாட்டுப் போக்குச் சொல்லி எல்லோரும் கைவிரித்தார்கள். சோர்ந்த முகத்தோடு திரும்பிய என்னை அடுத்தவீட்டுக் கனகசபை “என்னதம்பி வேண்டும்” என்று கேட்டார். இவரையும் கேட்டுவிடு வோம் என்று துணிந்து அறை ஒன்று வாடகைக்குவேண் டும் என்றேன். அவரும் இல்லையென்று சொல்லிவிடு கிறாரோ என்ற ஏக்கத்தில் அவரைப் பார்த்தேன்.
“எங்களுக்கு அறை கொடுக்க வசதியில்லைத்தான். ஆனாலும் உனக்கு இல்லையென்று சொல்லவும் மனமில்லை. வேண்டுமானால் எங்களது அறையொன்றைக் கொடுக் கிறோம்” என்றார். அப்பொழுது எனக்கு உயிர் வந்தது.
அந்த வீட்டில் வந்த சில நாட்களில்தான் உன்னைக் காணும் வாய்ப்பேற்பட்டது. உன்மீது எனக்கு ஆசை பிறந்தது. உன்னையே என் வருங்கால வாழ்க்கைத் துணையாக அமைக்க வேண்டுமென்ற எண்ணம் என் நெஞ்சில் அலைமோதியது. உன் எண்ணத்தை அறியத் துடித்தேன்.
“அப்பொழுதுதான் உன் அக்காள் மகன் சிவா எங்கள் வீட்டுக் கனகசபையின் மகனுடன் விளையாட வந்தான். அவன் உன் தம்பி என்று நினைத்துக்கொண்டு “உன் அக்காவின் பெயரென்ன?” என்று கேட்டேன். அவன் ‘புனிதா’ என்று சொன்னான். அவனிடமே ஒரு கடிதத்தை எழுதி அக்காவிடம் யாருக்கும் தெரியாமல் கொடுக்கும்படி சொன்னேன். அவன் அதை உன் அக்காவிடம் கொடுத்துவிட்டான்.
இளமையிலேயே கணவனை இழந்திருந்த அவள் உணர்ச்சி வசத்தால் உனக்கென்று எழுதிய கடிதத்தைப் பார்த்ததும் கருகிய மரமாகி இருந்த அவள் மனம் தளிர் விடத் தொடங்கியது.
தனக்கு வாழ்வளிக்க ஒரு ஆடவன் விரும்புகிறான் என்றறிந்த அவள் மனதில் தனது இளமை இன்னும் மடிந்துவிடவில்லையென்ற எண்ணம் தலைதூக்குகிறது. தனக்குப் புதுவாழ்வு வரவேண்டுமென்ற ஆர்வத்தில் அவள் எனக்குப் பதில் எழுதினாள்.
“எனக்கு இவ்வளவு காலமும் வாழ்க்கை கசந்திருந்தது. எனக்காகப் பரிந்து இரங்கி ஒருவர் வாழ்வு கொடுப்பதானால் எனக்கு மிகவும் விருப்பம்” என்றாள் அவள் நீதான் விருப்பம் தெரிவித்துவிட்டாய் என்ற சம்மதத்தில் நானும் என்னென்னவெல்லாமோ எழுதினேன். அவளும் எழுதினாள். எழுத்து மூலம் எங்கள் காதல் வளர்ந்தது. உண்மையை உன்னிடம் வினாவிய போதுதான் உன் பெயர் சாந்தா என்பதும் அச் சிறுவன் உன் அக்கா மகன் என்றும் நீ அக்கா என்று கூப்பிடுவதைப்போல அவனும் தன் தாயை “அக்கா” என்று கூப்பிட்டதனால் நான் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதில் மாறுபட்டு விட்டது என்பது தெரிய வந்தது.
அதன் பின் நான் கடிதம் எழுதுவதை விட்டுவிட்டேன்.
ஆனால் அவள் தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருந்தாள். அந்த நேரத்தில் எனக்கு அவற்றை வாசிக்காமல் விடமுடியவில்லை. உன்னிடம் சொல்லிக்கொள்ளவும் என்மனம் இடம் கொடுக்கவில்லை.
கடைசியாக ஒருநாள் வந்த கடிதம் என்னையே என்ன செய்வதென்றே தெரியாமல் செய்துவிட்டது. அதில் எழுதியிருந்தாள் “நீங்கள் ஏன் என்னிடத்தில் மடிந்து கிடந்த உணர்ச்சிகளையெல்லாம் கிளைத்தெழச் செய்துவிட்டு இன்று மௌனம் சாதிக்கிறீர்கள். உங்களுடன் இணைந்து வாழ முடியாவிட்டால் என்னால் ஒருகணம்கூட இனி வாழ முடியாது. என்னைத் திருமணம் செய்ய முடியுமா முடியாதா என்பதை வெகு விரைவில் தெரிவிக்கவும்.” என்று எழுதியிருந்தாள்.
என் தலையே சுற்றியது. தற்செயலாக நடந்த ஒரு தவறுக்காக நான்படும் வேதனைகள் என் மண்டையை அரித்துவிடும்போல்பட்டது. சற்றும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
கடைசியில்…
நீண்ட மனப்போராட்டத்துக்குப் பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தேன் சாந்தா. தற்செயலாக நடந்த தவறு தான் என்றாலும் என்னால் ஒரு உயிர் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அல்லாமலும் உன்னுடைய வாழ்க்கைக்கு வேறொரு நல்ல துணைவனை நீ தேடிக்கொள்ள முடியும். ஆனால் உன் அக்காவுக்கு என்னை விட்டால் வேறு கதி இல்லை என்ற நிலைமையல்லவா? அவள் என்னை முழு மனதுடன் காதலிக்கிறாள். நான்….சாந்தா நானும் இனி அவளையே காதலிப்பேன்!… நீ என்னை மறந்துவிடு. மறந்துவிடுவாயல்வலா?
ஒரு சிறு தவறு. இந்த மூவருடைய வாழ்க்கையிலும் எத்தகைய புரட்சியை உள்ளடக்கிவிட்டதென்பதை இப்போது சாந்தா உணர்ந்தாள்.
கணேசனால் ஏற்பட்ட வடு நெஞ்சிலே கரைந்து மறைவது போன்ற உணர்வில் அவள் சிரித்தாள்.
– புதினம், புரட்டாதி 1962.
– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.