டைவர்ஸ்






(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
அத்தியாயம்-16
ஒரு பெண் வெகு காலம் விவாகம் செய்துகொள்ளாமல் தவமிருந்தாள். ஒரு தடவை நாரத முனிவரை அவள் விருந்துக்கு அழைத்தாள். விவாகமாகாத பெண்ணுக்கு நற்கதி இல்லை என்றும் அப்படிப்பட்டவளிடமிருந்து விருந்து பெறுவது பாவம் என்றும் மறுத்துவிட்டார் நாரதர். பிறகு அவருடைய யோசனையின்படி, தன் தவத்தில் பாதியைத் தானம் செய்த அவள், ஒருவரை மணந்து நற்கதி பெற்றாள். – ஒரு புராணக் கதை.
சிவராமன் சென்னையில் ஒருநாளும் இரவுச் சாப்பாட்டை ரசித்தது கிடையாது. வாழ்க்கை, இயந்திரம் போன்ற அதன் இயக்கத்தில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும். மத்தியானம் ஒருமணிக்குப் பகல் உணவு, பிற்பகல் நான்கு மணிக்குக் காரியாலயத்தில் ஒரு கோப்பை தேனீர். வீட்டுக்கு ஆறு மணிக்குத் திரும்பினால் ராஜலட்சுமி சும்மா இருக்கமாட்டாள். தட்டு நிறையப் பலகாரத்துடன் வந்து நிற்பாள். இரவுச் சாப்பாட்டை இந்தப் பலகாரம் கெடுத்துவிடப் போகிறதென்று சிவராமனுக்கு உள்ளூற ஓர் எரிச்சல் இருந்தாலும், ராஜலட்சுமியிடம் மறுக்க அவரால் முடியாது. டிபனும் ருசியுள்ளதாக இருக்கும். அடை சேவை, ரவா தோசை என்று ஏதானும் ஒன்று அவரை இழுக்கும். அவ்வளவுதான். இரவுச் சாப்பாட்டைப் பெயருக்குக் கொறிக்க வேண்டிய நிலை.

அங்கலக்குறிச்சியில் அமிர்தம்மாவிடம் இருக்கும் மூன்று நாட்கள், ஒவ்வொரு மாதமும் அவர் எதிர் பார்க்கும் நாட்கள். அவரே அதிசயிக்கும் வண்ணம் அவருடைய உடம்பு கலகலப்பாக இருக்கும். ஒரு புது சக்தி பிறந்துவிட்டாற் போன்ற குதூகலம் தோன்றும். இந்தப் புது சக்திதான் மாதத்தின் மற்ற இருபத்தேழு நாட்களுக்கு உயிர் அளிக்கிறது என்று அவர் எண்ணுவார்.
இதற்கெல்லாம் காரணம் அவருடைய அமிர்தம்மாதான். சிவராமனுக்கு எது எப்போது பிடிக்கும் என்பதிலிருந்து அதை எந்தெந்த நேரங்களில் எப்படி எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதுவரை அமிர்தம்மா ஒரு வேத நியதியாகக் கொண்டிருந்தாள். காலை ஆறு மணிக்கு ஒரு காப்பி. ஒன்பது மணிக்குப் பழரசம். பன்னிரண்டரை மணிக்குச் சாப்பாடு – அதுவும் அவருக்குப் பிடித்த கறி கூட்டுடன். நாலரை மணிக்கு வெறும் தேனீர். இரவு ஏழரை மணிக்குச் சாப்பாடு. பத்து மணிக்குப் பாலும் பழமும்.
அன்று இரவு சாப்பிடுகையில், வழக்கம் போல அவர் அதில் காணும் ஒரு குறையை அமிர்தம்மாவுக்கு உணர்த்தினார்.
“சாம்பார், பொரியல், ரசம் எல்லாவற்றிலுமே உப்பு போதாது அமிர்தம்!”
“இதுக்கு மேலே உப்புப் போட்டால் பிளட் பிரஷர் இன்னும் ஏறும். வயசு ஆச்சுன்னா நாக்கைக் கொஞ்சம் அடக்கப் பழகிக்கணும்,” என்றாள் அமிர்தம்மா.
“அதுக்காக எல்லாம் சப்பென்று இருக்கணுமா என்ன?”
“உங்க ராஜி சமுத்திரத்துக்குப் பக்கத்திலே இருக்காள்…சாம்பாரையும் ரசத்தையும் அந்தத் தண்ணியிலேயே வைச்சு, போதாததற்குச் கடை உப்பையும் வேறு அன்னிப் போடுவாள் போலிருக்கு. அது உங்க நாக்கிலே நன்றாக ஊறி அட்டை மாதிக் ஓட்டிக் கொண்டிருக்கு… வடாம் எண்ணெயிலே பொரிச்சது. அதையே தின்னுட்டிருக்காதீங்க.”
வடகத்தை எடுக்கப்போன சிவராமன் அதை இலையிலேயே போட்டு விட்டு, “அப்பப்பா! இங்கே வந்தால் ஒரே ரோதனைதான். பச்சைக் குழந்தையை நடத்தற மாதிரி என்னை ஆட்டி வைக்கிறே!” என்றார்.
“சரி, சரி… சீக்கிரம் எழுந்திருங்க…ரேடியோவிலே நல்ல பாட்டு இருக்கு. கேட்கலாம்.”
மோர் சாதத்தைக் கையில் எடுத்த சிவராமன் அதை வாய்க்குக் கொண்டுபோகவில்லை. அமிர்தத்தையே பார்த்தார். அவளுடைய வைரத்தோடும் பேசரியும் விளக்கின் ஒளியில் மின்னின.
இந்த முகமும் கண்களும் இன்று நேற்றிலிருந்தா அவரை ஆட்டி வைக்கின்றன? முப்பது வருடங்களுக்கு முன்னால் இதே அங்கலக்குறிச்சியில் முதன் முதலாக அவளைப் பார்த்தது முதல் அவள் அவரை இருக்கை கொள்ளாமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய உடற்கட்டு. அள்ளித் தின்னும் சதை அழகு, முகத்தின் பொலிவு, கண்ணின் தீட்சண்ணியம் இவையெல்லாம் அவரை அன்று என்ன பாடு படுத்தின! எத்தனை நாட்கள், மாதங்கள் அவர் தூங்காமல் இளமையின் வெறியில் தவித்துப் போயிருக்கிறார்! திட்டமிட்டிருந்தபடி அவளை முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய், அவரும் அவளும் ஒரு ரகசிய வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்த பிறகு, நாளடைவில் அலுப்பு ஏற்பட்டுவிடும் என்று தான் அவர் எதிர்பார்த்தார். தேய்க்கத் தேய்க்கச் சந்தனம் கமழ்வதுபோல, நாள் ஆக ஆக அமிர்தம் புதுப் புது வெள்ளமாக, வானமாக மாறிக் கொண்டே வந்தாளே தவிர, ஒரு இயந்திரமாக மழுங்கவில்லை…
திடீரென்று கேட்ட அமிர்தத்தின் குரலில் சிவராமன் திடுக்கிட்டு விழித்தார்.
”என்ன யோசிச்சுக்கிட்டிருக்கீங்க, கையிலே சாதத்தை வைச்சுட்டு? திடீர்னு உங்க ராஜியின் நினைவு வந்து விட்டதா?” அமிர்தம்மா சிரித்துக் கொண்டே கேட்டாள்.
சிவராமனும் சிரித்தார். இத்தனை நேரம் அவர் நினைத்ததெல்லாம் இந்த அமிர்தத்தைப் பற்றி. ஆனால் அவள் நினைக்கிறாள், அவர் ராஜியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததாக.
“மெட்ராஸிலே ஒரு நாள் கூட ராஜி உன்னைப்பற்றி என்னிடம் கேட்டதில்லை, அமிர்தம், கேட்டிருந்தால் என்னாலே பதிலே சொல்ல முடியாது.”
“ஏன்னா, நான் ஒருத்தி இருக்கிறதே அவளுக்குத் தெரியாது.”
அவர் கை அலம்புகையில் போன் அடித்தது. அமிர்தம் எடுத்தாள். ‘சரி’ என்று ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டு வைத்தாள்.
துவாலையால் கையைத் துடைத்துக் கொண்டே, “யார், அமிர்தம்?” என்றார்.
“கோயமுத்தூர் பிராஞ்சிலிருந்து கூப்பிட்டார்கள். மெட்ராஸிலிருந்து உங்க ராஜி போன் பண்ணினாளாம். எதுக்குன்னு தெரியாது.”
சிவராமனுக்குத் துணுக்கென்றது. கோயமுத்தூர் செல்வதாகத் தான் ராஜலட்சுமியிடம் சொல்லிவிட்டு வந்திருந்தார் அவர்.
போன் செய்ய வேண்டிய அவசர சமாசாரம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியைக் காட்டிலும், அவர் கோயமுத்தூரில் இல்லை என்ற விஷயம் அவள் மனத்தில் சந்தேகத்தைத் தூண்டிவிட்டுத் தொலைத்திருக்கப் போகிறதே என்ற கவலை அவரை ஆட்கொண்டது.
சிவராமன் மெட்ராசுக்கு டிரங்க் கால் போட்டார்.
எதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாகவே சென்னை கிடைத்தது.
“ராஜி, நான்தான் பேசறேன்,” என்றார் அவர், பதற்றத்தை மறைத்துக்கொண்டு. “கோயமுத்தூருக்குப் போன் பண்ணினதாகச் சொன்னார்கள். என்ன விஷயம்?”
“இப்போ எங்கே இருந்து பேசுகிறீர்கள்?”
“நான் வந்து.. பொள் ளாச்சிக்குப் பக்கத்திலிருந்து… இங்கே நம்ப கம்பெனிக்காக ஒரு விசேஷமான மெஷினைத் தயார் செய்கிறார்கள். அது விஷயமா இன்னிக்குக் கார்த்தாலே இங்கே வந்தேன்… சரி, எதற்குப் போன் பண்ணினாய்?”
“எல்லாம் நம்ம வசுவைப் பத்திதான்.” அவள் குரலில் வருத்தம் தொனித்தது.
“ஏன், என்ன சொல்றாள்?”
“ஏதானும் சொன்னால் தானே? தன் போக்கிலே போய்க் கொண்டிருக்கிறாள்…கோபிகிட்டே அவள் நடந்துக்கிற விதம் சரியாக இல்லை. நீங்க எப்போ வர்றீங்க?”
அவர் சமாதானப்படுத்தினார். “எல்லாம் சரியாகிவிடும் ராஜி.”
“நானும் அப்படித்தான் இதுவரையில் நம்பியிருந்தேன்…”
“கோபி நல்ல பிள்ளை…”
ராஜலட்சுமி ஆதங்கப்பட்டாள். “அவர் நல்லவர்தான். ஆனால் இவள் ஓட ஓட விரட்டிக் கொண்டே போகிறாளே!”
“எல்லாப் பெண்களும் உன்னைப்போல இருக்கணும்னு நீ எதிர்பார்க்கலாமா, ராஜி? இந்தக் காலத்துச் சிறுசுகளை நம்மாலே புரிஞ்சுக்கவே முடியவில்லை…”
“காலத்திலே ஒண்ணும் கோளாறு இல்லை.”
“வந்து கவனிக்கிறேன்…நாளன்னிக்கு வரேன்… வேறு ஒரு விஷயமும் இல்லியே?”
“வசு ஃபிரண்டு நித்யா இருக்காளே, அவளுக்கு அடுத்த வெள்ளிக்கிழமை கல்யாணம்… பொள்ளாச்சியிலே…”
“ரொம்ப சந்தோஷம், ராஜி. வசு புருஷனோடே ஒற்றுமையாக இருப்பாள். நீ கவலைப்படாமல் தூங்கு…”
“தெய்வம்தான் அவளைக் காப்பாத்தணும்… வைச்சுடட்டுமா?”
“உம். சரி.”
போனை வைத்துவிட்டுச் சிவராமன் திரும்பினார்.
“என்னவாம்?” என்று கேட்டாள் அமிர்தம்.
சிவராமன் பதிலே பேசவில்லை. மனைவியைச் சமாதானப்படுத்தி விட்டாலும், வசுவைப்பற்றிய கவலை அவருக்கும் வந்துவிட்டது.
அமிர்தம்மாள் அவரையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள், ராஜலட்சுமியோடு நாலு வார்த்தை பேசிய மாத்திரத்தில் சிவராமன் தன்னை மறந்துவிட்டார் என்பதைக் காணும்போது அவள் மனம் நொந்துபோனாள்.
திடீரென்று அவள் கண்களில் கண்ணீர் பெருகலாயிற்று.
விசும்பல் ஒலி கேட்டுத் திரும்பிய சிவராமன் திடுக்கிட்டார்.
“அமிர்தம்! என்ன இது!” என்றார்.
அவள் வெடித்தாள். “என் கழுத்திலே நீங்கள் ஒரு தாலியைக் கட்டித் தொலைச்சிருந்தீங்கன்னா, எனக்கும் அந்த மூல விக்ரகம் மாதிரி ஒரு தனி மகத்துவமும் புனிதத் தன்மையும் இருந்திருக்கும்… அன்னிக்கு நீங்களும் கட்டலை. நானும் வெளுத்ததெல்லாம் பால்னு உங்க காலின் கீழேயே கிடந்தேன்… இப்போ எல்லாம் லேட்டாப் போய்விட்டது. விக்ரகம் இல்லாத கோயில்லே நான் ஒரு உடைஞ்ச சிலை போலக் கிடக்கிறேன்…”
அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. அவளை இம்மாதிரிச் சமயங்களில் எப்படிச் சமாதானப் படுத்துவது என்பதைச் சிவராமன் நன்றாக அறிவார்.
அவர் மெதுவாக எழுந்து, அவளுடைய இடையைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டே அவர்களுடைய அறைக்குச் சென்றார்.
திடீரென ராஜியின் முகம் மின்னலடிக்கத் தோன்றியது. இடையில் பதிந்திருந்த கையில் முள் தைத்தாற் போன்ற வலி உண்டாவதை உணர்ந்தார். முள் இருப்பது அமிர்தத்திடமா அல்லது அவரிடமேதானா என்று சிந்திக்க அவருக்குச் சக்தியில்லாமற் போய்விட்டது.
அத்தியாயம்-17
மாப்பிள்ளை குடையைப் பிடித்துக் கொண்டு காசிக்குப் புறப்படுகிறான். பெண்ணைக் கொடுக்கிறவர் குறுக்கிடுகிறார்.
“அலங்காரம் செய்து என் பெண்ணை உனக்குத் தருகிறேன். அவளை மணந்து, அவளையும் அழைத்துக் கொண்டு காசிக்குப் போகலாம். இப்போது என் வீட்டுக்கு வா!” – பரதேசிக் கோலத்தின் முடிவு இல்லறத்துக்கு ஆரம்பம்.
விநாயகர், லட்சுமி, பரமசிவன் முதலான படங்களின் மீது மலர்களைக் கை அர்ச்சித்துக் கொண்டிருக்க, ராஜலட்சுமியின் மனமெல்லாம் தீர்த்தம் வாங்கிக் கொள்ள இறங்கி வரப்போகிற கணவன் மீது நிலைத்திருந்தது.
சிவராமனும் வந்தார். சிரம் தாழ்த்தி, வலது புறங்கையை இடது உள்ளங்கை மேல் வைத்துத் தீர்த்தமும் வாங்கிக் கொண்டார்.
“ராத்திரி ரயிலில் நன்றாகத் தூங்கினீர்களா?”
“ஏதோ தூங்கினேன்,” என்றார் அவர். “வசு எங்கே?”
“நேற்றும் முந்தாநாளும் ஒரே அலைச்சல். நகைக் கடை, புடவைக் கடை, சிநேகிதிங்க வீடுன்னு நித்யாவுடன் அலைஞ்சு தீர்த்துவிட்டாள். நேற்று பூரா வீட்டிலே சாப்பிடவேயில்லை…”
“வசு.”
ஒரு கணம் நின்ற வசு, “என்னப்பா?” என்றாள்.
“நான் இன்னிக்குத்தான் ஊரிலேருந்து வந்தேன்.”
“அப்படியா?”
சிவராமன் சிரித்தார்.
“நல்ல பெண்ணம்மா நீ! நான் மூன்று நாளா வீட்டில் இல்லை. இன்னிக்குத்தான் வந்திருக்கிறேன்… இதைக்கூட நான் சொல்லித்தான் உணரவைக்க வேண்டியிருக்கிறது.”
“நீங்க மாசாமாசம் வெளியூர் போறதும் வர்றதும் சகஜம்தானே? அது சரி, எதுக்கு என்னைக் கூப்பிட்டீர்கள்?”
“உட்கார் வசு.”
வசுவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

“அப்பா, நித்யாவுக்குக் கல்யாணம். வருகிற வெள்ளிக்கிழமை. அம்மா சொல்லியிருப்பாள்னு நினைக்கிறேன்… நான் அவளுடன் ஆயிரம் இடத்துக்குப் போகணும். போய்…”
“உன் அம்மா நித்யாவின் கல்யாணத்தைப் பற்றி மட்டும் சொல்லவில்லை, வசு. இன்னும் என்னென்னவோ சொன்னாள்.”
வசுவின் கண்கள் ராஜலட்சுமி பக்கம் ஒரு தடவை சென்று விட்டுத் திரும்பின.
“என்னென்ன வோ என்றால்?”
“முதலில் உட்கார்.”
வசு உட்கார்ந்தாள்,
“மாப்பிள்ளை ஏன் இங்கே வர்றதில்லை?”
இந்த விஷயமாகத்தான் இருக்கும் என்று அவள் முன்பே ஊகித்திருந்தாள்.
“அவர் காரணம் சொல்லவில்லை.”
அவளது பதில் இவ்வளவு அலட்சியமானதாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. “அவர் பேச்சை நீ கேட்கிறதே இல்லையாம். .அம்மா சொன்னாள். அப்படி இருக்கிறது அவ்வளவு நல்லதல்லம்மா. ஹி இஸ் யுவர் ஹஸ்பண்ட்,” என்றார்.
“ஸோ வாட்?” என்றாள் வசு. “அவர் சொல்ற அசட்டுத்தனத்துக்கெல்லாம் தலையாட்ட நான் ஓன்றும் பூம் பூம் மாடு அல்ல.”
“அசட்டுத்தனமா! அவர் அப்படி என்ன சொல்லிவிட்டார்?”
“எங்களுக்குள் ஆயிரம் பேசிப்போம். அதையெல்லாம் உங்ககிட்டே நான் சொல்லமாட்டேன். நான் சொல்லணும்னு நீங்கள் எதிர்பார்க்கிறதும் நாகரிகம் இல்லை.”
சிவராமன் பொறுமை இழந்தார். “நீயும் கோபியும் வீட்டிலும் சினிமாவிலும் பீச்சிலும் சிரிச்சுக் கும்மாளமடிச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தீங்கன்னா, என்ன கொஞ்சிக்கிறீர்கள்னு கேட்கமாட்டேன். அப்படிக் கேட்டா அது அநாகரிகம் மட்டுமல்ல; முட்டாள்தனமும்கூட. ஆனால் நீங்க ரெண்டு பேரும் வடக்கு தெற்கு துருவங்களாய் நிற்கும்போது உங்களுக்குள் என்ன நடக்கிறது என்று கேட்பது என் கடமை. கேட்காமல் இருப்பதுதான் தப்பு.”
அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீங்கள் கேட்டு நான் சொல்வதாகவே வைத்துக் கொள்வோம். எங்கள் பிரசினை தீர்ந்துவிடுமா?”
“முதல்லே பிரசினையைச் சொல்லு…”
பட்டென்று, “இதை அவரிடமே கேட்கலாமே?” என்றாள் அவள்.
“முதல்லே உன்னிடம் கேட்பதுதான் முறை. நீ என் பெண் இல்லையா?”
“பெண்ணைவிட மாப்பிள்ளைதான் உங்களுக்கு உசத்தி. ரொம்பக் கஷ்டப்பட்டு, ஊரெல்லாம் தேடி அலைஞ்சு அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு என் முன்னாலே நிறுத்தி, ‘இவர்தான் உன் புருஷன்’னு ஆரவாரம் செய்திருக்கிறீர்கள். அவரிடமே முதலில் விசாரியுங்கள்.”
“வசு!” என்றாள் ராஜலட்சுமி. தந்தைக்கும் மகளுக்கும் இடையில் பேச்சு இப்படிப் போகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. சிவராமன் பக்கம் திரும்பி, “ஒன்றுமில்லை. வசுவுக்கு மேற்கு மாம்பலம் போர்ஷன் பிடிக்கவில்லை. வேறு நல்ல பங்களா பாருங்களேன்?”
வசு எழுந்தாள். “தயவு செய்து என் பிரசினையை நானே தீர்த்துக்கொள்ள விடுங்கள். அனாவசியமாக போதனை, உபதேசம்னு உங்கள் ரெண்டு பேருடைய பிஸினஸ் டயத்தையும், பூஜை நேரத்தையும் வேஸ்ட் பண்ணாதீர்கள்.'” முகத்திலடித்தாற்போல் பேசிவிட்டாள் வசு.
சிவராமன் கண்கள் சிவந்தன. “வசு, நீ இருக்க வேண்டிய இடம் உன் புருஷன் வீடு. இதை மறக்காதே,” என்று ஞாபகப்படுத்தினார்.
ஓரடி நகர்ந்த வசு, அப்படியே நின்றாள். பிறகு, அப்பாவைப் பார்த்தாள். “அதாவது எனக்கு இனிமே இந்த வீட்டில் இடமில்லை என்கிறீர்களா?”
ராஜலட்சுமி, “டீ வசு, என்னம்மா இது!” என்றாள். “அந்த அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை.”
“அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்காவிட்டால் சரி. அப்படியே சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. நானும் கொஞ்சம் படித்திருக்கிறேன். வேலை கிடைக்காமல் போகாது. நான் வரேன்.”
சிவராமன் வாய் அடைத்துப் போய் நின்றார். ராஜலட்சுமியின் கண்களில் நீர் முட்டிற்று.
அதைக் கண்டார் சிவராமன்.
“நீ கவலைப்படாதே. ராஜி,” என்று தேற்றினார். “அவளை அவள் வழிக்கே விட்டுப் பார்ப்போம். அவிழ்த்து விட்ட கன்றுக்குட்டி மாதிரி திசை தெரியாம ஓடறா… எல்லாம் சரியாகி விடும்!”
உண்மையாகவே அவர் தம் வார்த்தைகளை நம்பினாரா அல்லது மனைவியைச் சமாதானப்படுத்தும் வகையில் கூறினாரா? அது அவருக்கே தெரியாது.
நித்யாவின் கல்யாணத்துக்காக வசுவும் ராஜலட்சுமியும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள்.
ரயில் அரக்கோணத்தை அடைந்தது. இருவர் மட்டுமே படுக்கக் கூடிய ‘கூப்பே’ பெட்டியில் ‘கீழ் பர்த்தில்’ ராஜலட்சுமி படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். மேல்தட்டில் படுத்திருந்த வசுவுக்குத் தூக்கம் வரவில்லை. தொண்டை உலர்ந்து தாகம் எடுத்தது. ஐஸ் போட்ட பானம் ஏதானும் கிடைத்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும் என நினைத்தாள்.
பிளாட்பாரத்தில் ஒருவன் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தான்.
திடீரென்று தேன்நிலவுக்குச் சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. இதே மாதிரி ஒரு பெட்டியில்தான் அவள் கோபியுடன் கோயமுத்தூருக்குச் சென்றாள், அந்த நாள் ஒரு சந்தோஷ நாள். இன்றும் அவள் ஒரு சந்தோஷம் தரும் நிகழ்ச்சியை-பொள்ளாச்சியில் நடக்கிற நித்யாவின் கல்யாணத்தை-முன்னிட்டுத்தான் போகிறாள். ஆனால் அவள் மனத்தில் மகிழ்ச்சியோ பூரிப்போ இல்லை.
ஐஸ் போட்ட ஆரஞ்சு ஜூஸைச் சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்தாள். கோபி, தண்ணீருக்காக க்யூவில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
“எண்பது பைசா அம்மா,” என்றான் வண்டிக்காரன், அவளிடமிருந்து, காலித் தம்ளரை வாங்கிக் கொண்டே,
ஏதோ ஒன்று அவளை உந்த, “இன்னொண்ணு கொடு அப்பா,” என்றாள் அவள். அவன் கொடுத்தான்.
“நீ போய்த் திரும்பறபோது கிளாஸை வாங்கிக் கொள்…இந்தா முதல்லே பணத்தை வாங்கிக் கொள்.”
தண்ணீருக்காக நின்று கொண்டிருந்த ஏழெட்டுப் பேர்களில் மூன்று பேர்தான் பாக்கி. மூன்றாவது ஆள் நகர்ந்து கொண்டிருந்தான். கோபி இரண்டாவது ஆளுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான்.
“ஹலோ வசு… பொள்ளாச்சிக்குத்தானே?”
“ஆமாம். நீங்கள்?”
“நித்யாவின்.. கணவனும், நானும் ஒரே ஆபீஸ்..நான் வராமலிருக்கக்கூடாது,” என்றான்.
“இந்தாருங்கள். கூல்டிரிங்க்.”
இமைக்கும் நேரம் கோபி தயங்கினான்.
“வேண்டாம், வசு. நீ சாப்பிடு.”
“நான் சாப்பிட்டாச்சு. இது உங்களுக்காக வாங்கியதுதான். நான் உங்களை அப்பவே பார்த்துவிட்டேனே?”
அவன் புன்னகை செய்தான்.
“இது குடிச்சாலும் தாகம் அடங்கப் போவதில்லை. நான் வரட்டுமா. வண்டி புறப்படப் போகிறது. சீக்கிரம் ஏறிக்கொள்…”
கோபி போய்விட்டான்.
வண்டிக்காரன் தம்ளரைப் பெற்றுக்கொள்ள வந்தான்.
“என்னம்மா, இன்னுமா குடிக்கலே… ரெயில் ஊதிட்டதே அம்மா.”
அவள் ஜூஸுடன் தம்ளரைத் திருப்பிக் கொடுத்தாள்.
அத்தியாயம்-18
சப்தரிஷிகளின் பத்தினிகளுக்கு கிருத்திகா என்று பெயர். அவர்களுள் சிறந்தவளாக அருந்ததியை மற்ற கிருத்திகாக்கள் மதித்து ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
அத்தகைய அருந்ததியை மணப் பெண் பார்க்கும் போது, அவள் எட்டாவது கிருத்திகாவாகத் திகழ பெரியோர்கள் ஆசிர்வாதம் செய்கின்றனர்.
நீலகிரி எக்ஸ்பிரஸ் கோயமுத்தூரை அடைந்தபோது மணி ஏழு. பொள்ளாச்சிக்கு அவர்களை அழைத்துச் செல்ல சிவராமனுடைய கம்பெனிக் கார் அவர்களுக்காகக் காத்திருந்தது. ராஜலட்சுமியும் வசுவும் ஏறிக் கொண்டார்கள். சிவராமன் சௌகரியப்பட்டால் பின்னர் வருவதாகச் சொல்லியிருந்தார்.
கார் உக்கடத்தைத் தாண்டுகையில், கோபியை அரக்கோணத்தில் முந்தின இரவு சந்தித்த நிகழ்ச்சியைத் தாயிடம் கூறலாமா என்று வாயெடுத்த வசு, அடக்கிக் கொண்டாள்.
“ஏன் முன்னாடி சொல்ல வில்லை? அவரையும் நம்ம காரில் அழைத்துக் கொண்டு வரவேண்டியதுதானே?” என்று அம்மா நச்சரிப்பாளே.
பொள்ளாச்சியை அடைந்த போது மணி எட்டே கால். நித்யாவின் தாத்தா, சிவராமனுடைய குடும்பத்தின் சௌகரியத்துக்காக, கிட்டு மாமாவின் வீட்டைக் காலி செய்து கொடுக்கச் சொல்லியிருந்தார். அங்கு போய்க் குளித்துவிட்டுக் கல்யாண வீட்டுக்குச் சென்றார்கள்.

வசுவைக் கண்டதும் நித்யாவுக்கு ஒரே உற்சாகம். சதா அரட்டை தான். “நித்யா! உன் குறும்புப் பேச்சையும் கலகலப்பையும் பார்க்கிறபோது நீதான் மணப் பெண்ணா என்று சந்தேகமாக இருக்கிறது!” என்று அவள் தாத்தாவே கண்டித்தார். நித்யா அதையெல்லால் லட்சியம் செய்யவில்லை.
ஜானவாசத்தின்போது மொட்டை மாடியிலிருந்து அவள், “ஏய் வசு!” என்று உரக்க அழைக்கும் அளவுக்கு அவள் கட்டுப்பாடு இல்லாமல் நடந்த கொண்டாள். ஆனால் மாப்பிள்ளை அதைப் பொருட்படுத்தவில்லை. காரிலிருந்தபடி நித்யாவைப் பார்த்துச் சிரித்தான். மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு வசுவும் ராஜலட்சுமியும் தங்கள் ஜாகைக்குத் திரும்பினார்கள்.
ஜானவாசத்தின் போதுதான் ராஜலட்சுமி கோபியைப் பார்த்தாள். “வசு! மாப்பிள்ளை வந்திருக்கிறார்!” என்றாள் உற்சாகத்தோடு.
“அதற்கென்ன இப்போ?” என்றன் வசு அலட்சியமாக.
இரவு படுக்கு முன் ராஜலட்சுமி கேட்டாள். “ஏண்டி வசு, இங்கே இவ்வளவு இடம் இருக்கே மாப்பிள்ளை சௌகரியமா வந்து படுத்துக்கொள்ளலாமே? அவரைப் பார்த்தாயா?”
வசு சிடுசிடுத்தாள்.
“ஏம்மா நீ அவரைப் பற்றியே கவலைப்படுகிறாய்? பேசாமல் தூங்கு.”
அதன் பிறகு ராஜலட்சுமி வாய் திறக்கவில்லை.
மறு நாள்.
கல்யாண ஆரவாரம் பந்தலெல்லாம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தில் மணமேடை அருகே உட்கார்ந்திருந்த வசுவுக்குத் திடீரென்று தலைவலிப்பதுபோல இருந்தது. வெளியே போய்க் கொஞ்சம் நல்ல காற்றைச் சுவாசித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து வெளியே வந்தாள்.
வாசலில் யாரோ ஒரு பெரிய மனிதர் அப்போதுதான் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். வசு வாழை மரத்தின் அருகே தயங்க வேண்டியதாயிற்று.
யாரோ இருவர் பேசிக் கொள்வது அவள் காதில் விழுந்தது.
“யெஸ். அவள்தான் வசு. இண்டஸ்டிரியலிஸ்ட் சிவராமனுடைய பெண். பக்கத்திலே வெள்ளை ஷர்ட் போட்டுக்கொண்டு நிற்கிறானே அவன்தான் அவள் ஹஸ்பெண்ட்.”
ஏற்கெனவே அந்த இடத்தில் கோபி தற்செயலாக வந்து நின்று கொண்டிருப்பது அப்போது தான் வசுவுக்குத் தெரிந்தது.
“பொருத்தமான ஜாடி. அவள் அழகாக இருக்கிறாள். அவனும் லட்சணமாக இருக்கிறான்.”
“இந்தக் கூட்டத்திலேகூட ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிஞ்சு போறதில்லை. பார்த்தாயா?”
வசு, பக்கத்தில் நிற்கும் கோபியைப் பார்த்தாள். அதே சமயம் அவனும் வசு பக்கம் திரும்பினான். மறுவினாடி அவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள, வசு உள்ளே திரும்பினாள்.
மாங்கல்ய தாரணம் ஆனதுமே கூட்டம் முழுதும் சாப்பாட் டுக் கூடத்தை நோக்கிப் படைஎடுத்தது. பந்தலில் அங்குமிங்குமாகச் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். கை விசிறியால் விசிறிக்கொண்டிருந்த வசு உற்சாகத்தோடு ராஜலட்சுமியிடம், “அம்மா!” என்றாள்.
“என்ன வசு?”
“வா. உன்னை அறிமுகப் படுத்துகிறேன்.”
“யாருக்கு?”
“வாயேன்!”
அமிர்தம்மா எட்டத்தில் உட்கார்ந்திருந்தாள். எதிர்பாராமல் அவளைப் பார்த்ததில்தான் வசுவுக்கு அத்தனை பரபரப்பு.
“சௌக்கியமா? உங்களை நான் எதிர்பார்க்கவேயில்லை,” என்றாள் வசு. அமிர்தம்மாள் நிமிர்ந்து பார்த்தாள், “வசு!” என்றாள் முகம் மலர.
வசு சொன்னாள்.
“நித்யா வீட்டாரையோ, பிள்ளை வீட்டாரையோ உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியாது.”
“நித்யாவைத் தெரியாதே தவிர அவள் தாத்தா எங்களுக்கு ரொம்ப நாளாகப் பழக்கம்.”
“அப்படியா!” என்ற வசு தன் அம்மாவின் இடது கையைப் பிடித்தவளாய், “இவங்கதான் என் மதர்.. அம்மா, நான் அங்கலக் குறிச்சியிலே கார் ரிப்பேர் ஆனப்போ ஒரு வீட்டுக் குப் போய்க் கோயம்புத்தூருக்குத் தகவல் கொடுத்தோம்ணு சொன்னேன் இல்லையா? இவர் வீட்லேதான். அமிர்தம்மான்னு பேரு,” என்றாள்.
“ரொம்ப சந்தோஷம்.”
மதிக்க வேண்டியவர்களிடம் வசு மரியாதை காட்டவில்லை என்ற காரணத்தால், அவளால் மதிக்கப் படுபவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது என்று உள்ளுணர்வு சொல்லிற்றோ என்னவோ, அமிர்தம்மாளிடம் ராஜலட்சுமிக்கு ஈடுபாடு ஏற்படவில்லை.
“சாப்பிட்டாச்சார்” என்றாள் வசு.
“இல்லை. இனிமேத்தான்.”
“அடுத்த பந்தியிலே உட்காருவோம். சேர்ந்தே சாப்பிடுவோம்.”
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்றாள் ராஜலட்சுமி.
“முருகன் அந்த பாக்கியத்தைக் கொடுக்கலை.”
“அவர் என்ன செய்கிறார்?”
அமிர்தம்மாள் சற்றுத் தயங்கினாள்.
“வியாபாரம்.”
“நீங்க மெட்ராஸ் வர்துண்டா?”
“அவசியம் நேரும்போது வருவேன்.”
“நீங்கள். அடுத்த தடவை வரும்போது எங்க வீட்டுக்கு அவசியம் வரவேண்டும்”, என்றாள் வசு. ராஜலட்சுமி பேசாதிருந்தாள்.
சிவராமன் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தார். அவரை எட்டத்தில் கண்டதும் ராஜலட்சுமி அவரிடம் எழுந்து சென்றாள்.
அம்மா போனதும், வசு, “எப்படி என் அம்மா?” என்று கேட்டாள்.
அமிர்தம்மா பொதுப்படையாக, “உன் அம்மா இல்லியா?” என்று சிரித்தாள்.
வசுவும் சிரித்தாள்.
“அம்மா ரொம்ப நல்லவள்,” என்றாள் வசு.
“பார்த்தாலே தெரிகிறது.”
“ரொம்பக் கர்னாடகம். புருஷனுடைய நிழலைத் தொட்டு வணங்கற அளவுக்குப் பதிபக்தி.”
ராஜலட்சுமியிடம் வசுவைப்பற்றிச் சிவராமன் ஏதும் விசாரித்திருப்பார் போலும். அவள் ஏதோ சொல்ல, அவர் திரும்பிப் பார்த்தார். வசுவும் அமிர்தம்மாவும் பேசிக்கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது.
“ராஜி, பேசிக்கொண்டி ருங்கள், இதோ வந்து விட்டேன்.” என்று உள்ளே விரைந்தார். சில நிமிடங்களில் வெளியே கிளம்பி விட்டார்.
இரவு ரயிலில் வசுவும் ராஜலட்சுமியும் சென்னை திரும்ப வேண்டும். இடையில் மூன்று நான்குமணி நேர சாவகாசம் இருந்ததால், ஆழியாறு அணையைப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டார்கள்.
“வேறு யாரானும் வருகிறார்களா?”
“உனக்கு மனசு இருந்தா மாப்பிள்ளையைக் கூப்பிடு. அவரும் பார்க்கலாம்.”
“அவருக்கு இதெல்லாம் பிடிக்காது.”
ராஜலட்சுமிக்குக் கோபம் வந்துவிட்டது.
“என்னடி, இன்னும் ரெண்டு நாள் சேர்ந்தாப்பலே வாழலே. அதுக்குள்ளே எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு உனக்குப் புரிஞ்சுட்டுதோ?” என்றாள்.
“சரிம்மா, இந்தக் கல்யாண வீட்டிலேயுமா என் பிரச்னையை அலசணும்? இதோ பார், இப்போ மணி இரண்டு பத்து. மூணு மணிக்கு அளியார். நாலு மணிக்கு புறப்பட்டு வந்த வழியிலே, அமிர்தம்மா வீட்டுக்கும் போய் வருவோம்… என்ன!”
“அது சரி, உன் அமிர்தம்மா வீட்டுக்குப் போகலாம்னு சொல்றியே, அவள் இங்கேயிருந்து போயாச்சா?”
“சாப்பாடு ஆனதும் போனார்களே.. உனக்குத் தெரியாதா?”
“என்கிட்டே சொல்லிக்க நிற்க முடியல்லே போலிருக்கு.”
“அவள் ரொம்ப லட்சணமாயிருக்கா இல்லியா, அம்மா?”
“உடம்பிலே பட்டுப்புடவை. காதிலேயும் மூக்கிலேயும் வைரம். நெத்தியிலே பெரிசா குங்குமம். லட்சணத்துக்கு எப்படிக் குறைச்சல் இருக்க முடியும்?”
”கண்ணைப் பார்த்தாயா. எவ்வளவு கூர்மை. மேலுங் கீழுமாகப் பார்த்தே ஒரு ஆளை எடை போட்டு விடுவார்கள் போலிருக்கு.”
“என்னை எப்படி எடை போட்டாளோ?”
“நீ அப்பாவைப் பார்க்கப் போனப்போ, உன்னைப் பத்திச் சொன்னேன். என் அம்மா நல்லவள்னு பார்த்தாலே தெரிகிறது” என்றாள்.
ராஜலட்சுமிக்குச் சிரிப்பு வந்தது.
“நீ சர்ட்டிபிகேட் கொடுத்துட்டே உன் அம்மாவுக்கு, அவளும் ஆமோதிச்சுட்டா.. இனிமே என்ன குறை?”
ஆழியாறு அணையை அடையும் வரை வசு கல்யாணத்தில் நடந்த வேடிக்கைகளைப் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டே வந்தாள். கல்யாணம் நடக்கையில் கிட்டு மாமா அரை மணிக்கு ஒரு தடவை சமையற் கட்டுக்குச் சென்று காப்பியும் டிபனுமாகத் தின்று தீர்த்தது, மாப்பிள்ளை நித்யாவுடன் அட்டை போல ஒட்டிக் கொண்டது, ஒரு தடவை நித்யா பகிரங்கமாக அவனைக் கிள்ளியது எல்லாம் அவள் வாயிலிருந்து மழையாகக் கொட்டின.
ஆழியாறு நீர்த்தேக்கமும் நீர்த்தேக்கத்துக்கு அப்பால் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் மலைகளும் இனிய காட்சிகளாக விளங்கின.
ஆழியாறிலிருந்து திரும்பினார்கள்.
திடீரென்று வசு, “அதோ பார் அம்மா அந்த மேட்டிலே ஒரு வீடு தெரியறதே உள்ளே தள்ளி, அதுதான் அமிர்தம்மா வீடு,” என்றாள்.
ராஜலட்சுமியின் உள்ளம் ஏனோ துணுக்குற்றது.
அவர்கள் கம்பெனிக் கார் உள்ளே இருப்பது அவள் கண்ணில் பட்டது.
சிவராமன் அதிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.
– தொடரும்…
– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.
– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.