கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 5,178 
 
 

(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

“துருவனே, நீ அழிவு இல்லாத துருவன்; சத்தியத்துக்குக் காரணமானவன். உன்னைச் சுற்றி இருக்கும் நட்சத்திரங்களுக்கு நீ கட்டுத் தறி போல இருக்கிறாய். சத்துருக்கள் உபாதை இல்லாமல், இவளை உன் போல ஸ்திரமாக இருக்கச் செய்.” – பெண்ணுக்குத் துருவ நட்சத்திரத்தைக் காட்டும் போது சொல்லப்படும் மந்திரத்தின் அர்த்தம்.


சூரியனின் காலைக் கதிர்கள் ஹாலினுள் ஊடுருவி, சோபாவில் கால்களைத் தூக்கி மடக்கி உட்கார்ந்து பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்த வசுவின் மடிமேல் விழுந்தன. இரவு முழுதும் தூங்காத கண்கள் பொங்கி வலிக்க, அவள் தன்னையே வெறுத்துக் கொள்ளும் நிலையில் இருந்தாள். கடிகாரம் எட்டு அடித்ததைக் கேட்டபோது கோபியின் நினைவு மனத்தில் தோன்றியது. காலை ஆறு மணிக்கு அவன் சென்ட்ரலை அடைந்திருப்பான். இப்போது திருவல்லிக்கேணி அறையில் இருப்பான். இன்னும் ஓரிரு மணி நேரத்தில், குமாஸ்தா பதவியிலிருந்து சூபரிண்டெண்டாக உயர்ந்தவன், உதவி மானேஜர் பதவியில் அமர்ந்திருப்பான்.

”என்னடி வசு, கண்ணை மூடிக் கொண்டு பேப்பர் படிக்கிறியா?” நித்யாவின் குரல் அவளைக் கண் திறக்கச் செய்தது. ஏறிட்டுப் பார்த்தாள்.

“எதையோ நினைச்சுட்டு நீ உன்னையே தின்னுட்டிருக்கே!” என்று ஆரம்பித்த நித்யா, “நீ எதைத் தின்பே…கார்த்தாலேயும், ராத்திரியும் பசித்துக் கொண்டே இருக்கு போலிருக்கு, கோபியைக் கடிச்சுக் கடிச்சுத் தின்கறே!” என்றாள்.

“உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போயேன், நித்யா!”

“போயிட்டுத்தான் இருக்கேன். நீயும் புறப்படு. நானும் தாத்தாவும் வக்கீலைப் பார்க்கக் கிளம்பறோம். வா, போகலாம்!”

“நான் வரலை… ராத்திரி சரியாவே தூங்கலை. அசதியா இருக்கு. நீ போனதும், இந்த சோபாவிலே காலை நீட்டிவிடுவேன்…”

நித்யா சிரித்தாள்.

“ரொம்ப சரி. பேப்பரைப் போர்த்திட்டுத் தூங்கு… ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் வந்துடறோம்.”

நித்யா போனபிறகு வசு எழுந்தாள். கால்கள் சோர்ந்து கடுத்தன. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. கண்ணை மூடினால், அப்பா, கோபி, மரக்கடை எல்லாம் சுற்றிச் சுற்றி வருகின்றன.

தீடீரென்று ஒரு யோசனை தோன்றியது. பல ஆண்டுகளுக்கு முன் அப்பா வேலை பார்த்த அந்த மரக்கடைக்குச் சென்று பார்த்தால் என்ன?


பொள்ளாச்சி சந்தை, ரெயில்வே ஸ்டேஷன் எல்லாம் கடந்து வேட்டைக்காரன் புதூர் செல்லும் பாதையில் இருந்தது ஆனைமலை மரக்கடை. அவள் அதை ‘அடையும் போது மணி எட்டே முக்கால்.

கடைக்கு முன்னால் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. பத்து அடி நீளமுள்ள ஒரு தேக்கு மரத்தை நாலைந்து பேர்களாக லாரியிலிருந்து கீழே உருட்டி விடுவதில் ஈடுபட்டிருந்தார்கள். லாரியை விட்டு இறங்க மனமில்லாதது போல அந்த மரம் கிடந்தது. இன்னும் இரண்டு மூன்று பேர் வந்து கை கொடுத்த பின், வேறு வழியின்றி மரம் கீழே உருண்டு விழுந்தது.

லாரி சென்றது. அதைத் தள்ளிய ஆட்களும் வெளியேறிய பிறகு வசு மெதுவாக நோட்டம் விட்டுப் பார்த்தாள்.

ஒரு கிழவன் எதையும் லட்சியம் செய்யாமல் தன் புகையிலையின் ரசத்தில் மெய் மறந்திருந்தான். அவன் அவளைப் பார்க்கவில்லை. அவள் கடையினுள் பிரவேசித்தாள்.

“என்ன அம்மா வேணும்?”

ஒரு சின்னஞ்சிறு அறையிலிருந்து நெற்றி நிறைய விபூதியும் குங்குமமுமாய் இருபத்தெட்டு அல்லது முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் வந்து நின்றான்.

“உங்ககிட்டே என்ன மரம் இருக்கு?” என்றாள்.

“உங்களுக்கு என்ன மரம் வேண்டும்?”

“ரோஸ்வுட் இருக்கா?”

“இல்லேம்மா, உசத்தி தேக்கு இருக்கு. இப்பவெல்லாம் ரோஸ்வுட் வைச்சுக்கறதில்லை.”

“அப்படியா..நீங்க ரொம்ப நாளா இங்கே இருக்கிறீர்களா?”

“முதலாளி எட்டு வருஷத்துக்கு முன்னாலே இந்தக் கடையை வாங்கினார். அதிலேருந்து இருக்கேன்.. ஏன் கேட்கறீங்க…”

“ரோஸ்வுட்தான் இல்லியே. நான் வறேன்…வந்து. இந்தக் கடையிலேதான் சிவராமன்னு ஒருத்தர் ரொம்ப வருஷத்துக்கு முன்னே இருந்தார் போலிருக்கு. உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாதும்மா. எனக்கு ராமனாதபுரம் ஜில்லா. எட்டு வருஷமாத்தான்..கொஞ்சம் இருங்க.. இந்தாப்பா மயில்சாமி, இங்கே வா. அவன் நாப்பது வருஷமா இருக்கான். அவனுக்குக் கண்டிப்பாகத் தெரிஞ்சிருக்கும்.”

மயில்சாமி, தன் புகையிலை மயக்கம் கலைந்து விட்டதே என்ற எரிச்சலுடன் எழுந்திருப்பதாகத் தோன்றியது வசுவுக்கு.

“பரவாயில்லை, நீங்க அங்கேயே இருங்க. நானே வறேன்.”

இரண்டடி நடந்த கிழவன், வசு அருகே வந்ததும், “என்ன?” என்று கேட்டான்.

அவனுடைய சுருங்கித் தொங்கிய தாடையும், நெற்றியின் வயசு மடிப்புக்களும், எழுபது வயது இருக்கும் என்று காட்டின.

“மரம் எடுக்கலாம்னு வந்தேன். அப்படியே சிவராமனைப் பத்திக் கேட்கலாம்னு தோன்றிற்று.”

“எந்த சிவராமன்?”

“முன்னே இங்கே குமாஸ்தாவா இருந்தாராம்…”

“அவரா! நாலு வருஷம் இந்தக் கடையிலேதான், அதோ அந்தப் பிள்ளையாண்டான் மாதிரி இங்கே குமாஸ்தாவாக இருந்தாரு. பிறகு ஒரு நாள் கடைக்கு வரலே. உடம்பு சரியில்லேன்னு நினைச்சோம்…அப்புறம், ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, ஆள் ஊரை விட்டு ஓடிப் போயிட்டார்னு…”

அவளுக்கு நெஞ்சை என்னவோ செய்தது.

“ஓடிப் போயிட்டாரா!”

“ஓடிப் போனாரோ, இல்லே நடந்துதான் போனாரோ, கடையை விட்டுப் போயிட்டாரு. அவ்வளவு தான்…ஆமாம். அவரைப்பத்தி நீங்க ஏன் விசாரிக்கிறீங்க?”

ஏதோ நொண்டிச் சமாதானம் சொல்லிவிட்டு அவள் மகாலிங்கபுரத்தை அடைந்தபோது மணி பத்து. நித்யா இன்னும் வரவில்லை.

சோபாவில் உட்கார்ந்தவள் கண்ணை மூடிக் கொண்டாள்.

“என்ன வசு, ரொம்பக் களைப்பா?” கோபி!

தனக்கே உரித்தான புன் முறுவலுடன் கேட்ட கோபி, சோபாவில் அமர்ந்து, அவளுடைய தோளைத் தொட்டான்.

“நீங்களா? மெட்ராஸ் போகலியா?”

அவளுடைய கன்னத்தை வருடிக் கொண்டே, “ஈரோடிலே இறங்கி, பஸ்ஸிலே ஓடோடி வந்தேன் வசு. எனக்கென்னமோ மனசே எதிலும் ஓடலே… நீ அப்படிப் பிரிஞ்சு போனது முள்ளாய்க் குத்திட்டே இருந்தது”, என்றான் அவன்.

“நீங்கதான் முள்ளாக் குத்த முடியும்னு நினைச்சேன். முள்ளையே முள் குத்தறது ஆச்சரியமாயிருக்கு.”

“நான் என்ன பேசினாலும் உனக்கு அது முள்ளாய்க் குத்தினால், நான் என்ன செய்வேன் வசு… ஆமாம், இது என்ன டாகுமெண்ட், இங்கே கிடக்கு?”

அவன் டீப்பாயின் மேலிருந்த தஸ்தாவேஜை எடுக்கவும், வசு குபீரென்று பாயவும் சரியாக இருந்தது.

“அதை என்கிட்டே கொடுங்க.”

“என்ன டாகுமெண்ட்?”

“என்னவாக இருந்தா உங்களுக்கு என்ன?”

“நான் என்ன இதைச் சாப்பிட்டுவிடவா போகிறேன்?”

அவன் டாகுமெண்டைப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

அவள் ஆத்திரத்துடன் அதை அவனிடமிருந்து பறித்தாள். அவள் பறித்த வேகத்தில், கடைசித்தாள் அவன் கையிலேயே சிக்க, ஓரிரு தாள்கள் கீழே சிதறின.

அவன் கண்களில் வியப்பு மேலிட அவளைப் பார்த்தான்.

“அடே! கே.ஆர்.சிவராமன்! உன் அப்பா அல்லவா? மரக்கடை குமாஸ்தா என்று சாட்சிக் கையெழுத்துப் போட்டிருக்கிறாரே!”

அவள் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வரவில்லை.

“இந்தக் காலத்திலே குமாஸ்தாவுக்கு நானூறு முன்னூறுன்னு சம்பளம் கிடைக்கிறது. உன் அப்பா காலத்திலே முப்பது நாப்பதுக்கு மேலே கொடுத்திருக்க மாட்டாங்க.”

“போதும் நிறுத்துங்க.”

“குமாஸ்தாவாக இருந்தவர் இன்றைக்கு இவ்வளவு பெரிய இண்டஸ்டிரியலிஸ்டாக உயர்வதென்றால்…”

அவள் கண்களில் கண்ணீர் முட்டிற்று.

“ஐயையோ! அழுகிறாயா!” அவன் பரிகாசம் செய்தான். “நீ அழுதால் நான் இப்பவே போய்விடுவேன். நான் போகவேண்டாம்னா அழுகையை நிறுத்து. தன் அப்பா குமாஸ்தான்னு ஒவ்வொரு பெண்ணும் அழ ஆரம்பிச்சா, நம்ம நாட்டிலே பாதிப் பெண்கள் அழுதுட்டுத்தான் இருக்கணும்.”

அவள் வெடித்தாள்.

“உங்க பேச்சுப் புளிச்சுப் போயிட்டுது. நீங்க போகிறதானால் போங்கள்! யாரும் தடுத்து நிறுத்தவில்லை.”

“அதுக்கு முன்னாடி…” கோபி சிரித்தான்.

“சிரிக்காதீங்க…”

“நான் வந்த காரியத்தைச் சொல்கிறேன் வசு…இப்பத்தான் யாருமில்லியே… உனக்குக் கூச்சமா இருந்தா, வாசல் கதவையும் ஜன்னல்களையும் சாத்திடறேன்… நித்யா வர்றத்துக்கு நாழியாகும்.. சோபா நீள அகலமா இருக்கு…” அவன் அவளுடைய கையைப் பற்றி இழுத்தான். அவளுடைய உடல் அவன் மேல் விழுந்தது. புடவை விலகியது. இரு கைகளாலும் அவளுடைய முதுகைச் சுற்றி பின்னிக் கொண்டான். அவனுடைய மார்பை விட்டு விலக முடியாமல் அவள் திணறினாள். தன் உதடுகளை அவனுடைய வாய் கவ்விப் பிடிப்பதை அவள் உணர்ந்தாள்.

“போங்கள் வெளியே!”

வசு தொண்டை கிழியக் கத்தினாள்.

“என்னம்மா, நான் இப்பத்தான் உள்ளே நுழைஞ்சேன். அதுக்குள்ளே வெளியே போன்னு கத்தறியே…”

திடுக்கிட்டு விழித்த வசு, வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தாள்.

ஸ்டாம்ப்வெண்டர் கிட்டு மாமா புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்தார்.

“தூங்கிவிட்டேன், சார்.”

“அதிலே ஒரு சொப்பனம். இல்லே? சொப்பனத்திலே யாரை விரட்டிட்டிருந்தே?”

“ரொம்ப ஸாரி,” என்ற வசு, “தயவு செய்து உட்காருங்கள். இதோ வரேன்,” என்று சொல்லி அவசர அவசரமாக முகத்தை அலம்பிக்கொள்ளச் சென்றாள்.

அவள் மீண்டும் ஹாலுக்குள் வந்தபோதும், அவள் ஓரளவு நிதானம் அடைந்திருந்தாள். அப்பாவைப்பற்றி மேலும் விவரம் அறிய இது ஒரு சந்தர்ப்பம்…

“என்ன, நித்யாவும் தாத்தாவும் இன்னும் திரும்பி வரலையாக்கும்?”

“இல்லை,” என்ற வசு, “உங்க கையெழுத்து ரொம்ப நல்லாயிருக்கு, மாமா… மணி மணியாக இருக்கு,” என்றாள்.

“நீ எங்கே பார்த்தே என் கையெழுத்தை?” என்று கேட்ட கிட்டு மாமா, “தமிழ்நாட்டிலேயே என் கையெழுத்துதான் பெஸ்ட்னு ரொம்பப் பேர் சொல்லுவார்கள்!” என்றார்.

“நித்யா நேத்து ஒரு டாகுமெண்டைக் கொண்டுவந்தாளே அதிலே பார்த்தேன்.”

“ஓ, அதுவா, அது ரொம்ப நாள் முன்னாடி எழுதினது. இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேலே இருக்கும்.”

“அந்த டாகுமெண்ட்லே உங்க கையெழுத்தும், யாரோ மரக்கடை சிவராமன்னு போட்டிருந்ததே அந்தக் கையெழுத்தும்தான் லட்சணமாக இருந்தது.”

“கணியூர் ராமனாதனுடைய பிள்ளை சிவராமனா…அவன் இப்போ இண்டஸ்டிரியலிஸ்ட் அம்மா… உங்க மெட்ராஸ்லேதான் இருக்கான்.”

“அப்படியா! மரக்கடை குமாஸ்தா தொழிலதிபர் ஆனது பெரிய ஆச்சரியம்தான்.”

“என்ன ஆச்சரியம்? ரெண்டும் ரெண்டும் நாலுன்னு எல்லாருக்கும் தான் கூட்டத் தெரியும். ஆனா அதை எப்போ கூட்டறது என்று ஒண்ணு இருக்கே…அதை அவன் நன்றாப் புரிஞ்சுட்டு கூட்டினான். இன்னிக்கு மெட்ராஸ்லே ஓகோன்னு இருக்கான்.”

“எனக்கு ஒண்ணும் புரியவில்லை..”

“இந்த சிவராமனுடைய சிநேகிதனுக்கு ஒரு காண்ட்ராக்ட் கிடைச்சு இருந்தது. ஏதோ ஆர்மி டெப்போவுக்கு என்னமோ சப்ளை செய்யணுமாம். அதுக்குப் பத்தாயிரம் ரூபாய் டெபாஸிட் கட்டத் தேவைப்பட்டது. சிவராமன் எல்லார்கிட்டேயும் சிரிச்ச மூஞ்சியோட பேசுவான். அவன் நினைச்சா, எங்கேயிருந்தாவது கடன் வாங்கிக் கொடுக்க முடியும்னு சிநேகிதன் நினைச்சான்.”

“அப்புறம்? ரெண்டுபேரும் பார்ட்னராகி விட்டார்களாக்கும்.”

“அப்படி ஆகியிருந்தால், சிவராமனுக்கு நான் முட்டாள் பட்டம் கட்டியிருப்பேன். அவன் மேலே பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ஒரு பெண், கூடப் பிறந்த அண்ணனுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி கடன் கொடுத்து உதவினாள்.”

“யார் அந்தப் பெண்?”

“தங்கம்மா என்று பேர். தாயில்லாப் பெண். அப்பா படுத்த படுக்கை. இவன் அவருக்கும் சரி, அவளுக்கும் சரி ஒரு பெரிய தூணாக இருந்தான். பாவம், அவள் பார்க்கறதுக்கு அழகா இருக்க மாட்டாள். வெறும் கறுப்புன்னா பரவாயில்லையே. தார்க்குச்சி மாதிரி இருப்பாள். சிவராமன் எத்தனையோ இடங்களுக்குப் போய் ஜாதகங்கள் வாங்கிட்டு வருவான். பார்க்க வந்தவர்களெல்லாம், சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிட்டதோடு சரி.. அண்ணா அண்ணான்னு அவள் உயிரை விடுவா… தங்கை தங்கைன்னு இவனும் அலையா அலைஞ்சான்.. கல்யாணம் நிச்சயமாறப்போ பணத்தைத் திருப்பிக் கொடுக்கறேன்னு கேட்டான்…அவள் அப்பா கிட்டே கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொடுத்தாள்… அவ்வளவு நம்பிக்கை…”

“உம்..அப்புறம் என்ன ஆச்சு?”

“காண்டிராக்டை அவனே எடுத்துச் செய்தான். முன்னுக்கு வந்துவிட்டான். மெட்ராஸிலிருந்து திரும்பி வரவில்லை. இங்கே அந்தப் பெண்ணின் அப்பன்காரன் பிராணனை விட்டான். ஊரிலேருந்து பெரியப்பா வந்து அவளை ஊருக்கு அழைச்சிட்டுப் போனார். கொஞ்ச நாள்லே கல்யாணமுமாச்சு..”

“தங்கை. கல்யாணத்துக்கு அண்ணன் வரலையா…”

“தந்தி கொடுத்திருந்தான்னு கேள்வி. காண்ட்ராக்ட் வேலையிலே வரமுடியாமல் போயிருக்கும். கெட்டிக்காரன். ஒரு துரும்பு கிடைச்சுது. அதைப் பிடிச்சுட்டு ஒரு மகா சமுத்திரத்தையே தாண்டிவிட்டான்!”

“அந்தப் பெண் இப்போ எங்கே?”

“சிவலோகத்திலே. அவள் ஒரு அற்பாயுசு. ஒரு பிள்ளையைப் பெத்துப் போட்டுவிட்டு போய்ச் சேர்ந்தாள். பேருதான் தங்கம்மா… சாகிறபோது கழுத்திலே மஞ்சள் சரடுதான் இருந்தது.”

“அப்படியா?”

“சரி, நான் உன்கிட்டே பேசிட்டே இருந்துட்டேன். பாவம், உன் தூக்கமும் என்னாலே கலைஞ்சுது. தூங்கு, நான் வருகிறேன்.”

வசு பதில் பேசவில்லை. அவளுக்குக் கோபி மீதிருந்த ஆத்திரம் இரட்டிப்பாயிற்று.

அத்தியாயம்-8

ஓ பெண்ணே! சூரியன் இந்திரன் முதலான தேவர்கள், நான் இல்லறம் நடத்த உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்கள் சாட்சியாக நான் உன்னை மணந்து கொள்ளுகிறேன். நீயும் நானும் முதுமை எய்தினால்கூட, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதபடி உன் கையை நான் பிடிக்கின்றேன். -கல்யாணத்தில் பாணிக்கிரகண மந்திரத்தின் அர்த்தம்.


“வசு.”

“உம்…”

பிற்பகல் மூன்று மணிக்கு நித்யாவும் வசுவும், ஆளியாறு அணையை நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தார்கள். வெய்யிலே தெரியவில்லை.

“கோபி. உன் கன்னத்தைக் கிள்ளியிருக்கிறாரா?”

“உம்.”

“எப்படி? இப்படியா?” நித்யா கிள்ளினாள்.

“டீ…வலிக்கிறது.”

“உன்னை இன்னும் என்னென்ன பண்ணினார்?”

வசு புன்னகை செய்தாள். “வயசு வந்த பெண் கேட்கிற கேள்வியா இது?”

“வயசு வந்த பெண்ணாக இருப்பதால்தான் இப்படி எல்லாம் கேட்கிறேன். இன்னும் என்னென்ன பண்ணினார்?”

“சும்மா இருக்க மாட்டாய்?”

“பூனை எலியைக் கவ்வுவதற்கும், தன் குட்டியைக் கவ்வுவதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு இல்லையா?”

“பேசாமல் வா.”

“வசு…” நித்யா நெருங்கி உட்கார்ந்தாள்.

“இப்படிக் கலாட்டா பண்ணினால் எப்படியடீ கார் ஓட்டுவது?”

”காரை நிறுத்துடீ..ஹூ கேர்ஸ்?”

“உன் ஆராய்ச்சியை வேறு எங்காவது கொண்டு போய் வைத்துக் கொள்.”

‘‘வசு.”

“உம்.”

“எனக்கும் கல்யாணம் ஆகுமுன்…”

“உம்?”

“அதுக்கு முன்னாலே நீ எல்லாம் சொல்லித் தரணும். கோபி நல்ல டீச்சரா?”

“ஏன், உனக்கும் டீச் பண்ணணுமா?”

“அமெரிக்காவாக இருந்தால், நீ டைவர்ஸ் பண்ணிக் கொள், எனக்கு டீச்சர் வேணும்னு சொல்லுவேன்..”

வசு அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. மௌனமானாள்.


ஆளியாறு அணைக்கட்டில் நீர் அப்போது அதிகம் இல்லை என்றாலும், நீர்ப்பரப்பைக் கண்டு வசு வியந்து போனாள். அணைக்கட்டின் மேல் நடக்க நடக்க, உடல் மேல் வீசிய மலைக் காற்றில் அவள் தன்னையே மறந்து கொண்டிருந்தாள்.

தன்னை மறக்கத்தானே அவன் அங்கு வந்ததே?

“டயமாகிறது வசு… மணி ஐந்தரை.. சீக்கிரம் இருட்டிவிடும்,” என்று எச்சரித்தாள் நித்யா.

எட்டத்தில் ஒரு பெரிய படகுக் கார் வந்து நின்றது. அதிலிருந்து ஐம்பது வயது மதிக்கத் தகுந்த ஒருவரும், அவரைத் தொடர்ந்து இரு பெண்களும் இறங்கினார்கள். அவர் புல் தரையில் உட்கார, பெண்கள் எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தார்கள்.

“வசு!”

“என்ன?”

“அவர் யார் தெரியுமா?”

“தெரியாது.”

“ஒரு காப்பி எஸ்டேட், இரண்டு ரப்பர் எஸ்டேட், ஊட்டியிலே, கோயமுத்தூர்லே பங்களாக்கள் எல்லாத்துக்கும் சொந்தக்காரர்..”

“உனக்கு எப்படித் தெரியும்?”

“தாத்தா வீட்டிலே பார்த்திருக்கேன்.”

“அப்படியா?”

“புதுப் பணக்காரர்…”

“அப்படின்னா?”

எட்டு வயசிலே ஒரு வெள்ளைக்காரனுக்கு எடுபிடி ஆளா வந்தார். கூட இருந்து இருந்து, காப்பி எஸ்டேட்களின் துணுக்கங்களையெல்லாம் கற்றுக் கொண்டார். கடைசியிலே எஸ்டேட் மானேஜரானார். அப்புறம் வெள்ளைக்காரன் போகிறபோது, எஸ்டேட்டைப் பிரிச்சு, ஒரு பாதியை இவருக்குக் கொடுத்தான். அதை பலூன் ஊதற மாதிரி ஊதி ஊதி இன்னிக்கு இவ்வளவு பெரிய பணக்காரராக ஆகியிருக்கிறார். ஆனால் ஒன்று. எல்லாம் சொந்த முயற்சி… யாரையும் ஏமாத்திச் சொத்துச் சேர்க்கலை…”

வசுவுக்குச் சுருக்கென்றது.

நித்யா தொடர்ந்து சொன்னது எதுவும் அவளுடைய காதில் ஏறவில்லை. அப்பாவை மறக்க ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று அவள் நித்யாவுடன் வந்தாள். வந்த இடத்தில், நித்யாவே சிவராமனைக் கொக்கி போட்டு இழுத்து அவளுக்கு முன்னால் நிறுத்திவிட்டாள்.

“புறப்படலாமா? டயமாயிற்று என்றாயா?” வசு காரை நோக்கி நடக்கலானாள்.


அங்கலக்குறிச்சி அருகே, கார் ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. சக்கரங்கள் ஆடின. வசு பிரேக்கை அழுத்தினாள். கார் நின்றது.

மீண்டும் ஸ்டார்ட் செய்தாள். இஞ்சின் அலறியது. கியரைப் போட்டாள். கியர் விழவில்லை. முதல் கியரிலிருந்து விடுவிக்கப் பார்த்தாள். சிக்கிக் கொண்டது.

“நித்யா!”

“என்னடீ…என்ன ஆச்சு?”

“கியர் பாக்ஸ் அவுட்.”

“இப்போ என்ன செய்யறது?”

“கார் ஓடாது.”

“அப்போ?”

“இங்கே எங்காவது பக்கத்திலே போன் இருக்குமா?”

ஒரு வழிப்போக்கன் சொன்னான்.

“இன்னும் ஒரு பர்லாங் போனா, ஒரு பங்களா இருக்கும்மா… அமிர்தம்மா பங்களான்னு கேட்டா சொல்லுவாங்க.. அங்கே போன் இருக்கு…”

அவர்கள் அமிர்தம்மா வீட்டை அடைந்தபோது மணி ஆறே முக்கால். போர்ட்டிகோவில் ஒரு சின்னஞ் சிறு கார் நின்று கொண்டிருந்தது.

படியேறிய நித்யா, “அம்மா, அம்மா!” என்று கூப்பிட்டாள்.

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, நாற்பத்தைந்து அல்லது நாற்பத்தெட்டு வயது மதிக்கத் தகுந்த ஒருத்தி அரக்கு கலர் புடவையில் வந்து கொண்டிருந்தாள். அவள்தான் அமிர்தமாக இருக்க வேண்டும் என்று அவளுடைய முகத்தின் பொலிவைக் கண்டு புரிந்து கொண்டார்கள். நல்ல சிவப்பு நிறம். நெற்றியில் குங்குமமும் விபூதிக் கீறலும் மின்னின. கண்ணைப் பறிக்கும் வைரத்தோடு, வைர பேசரி.

அவளுடைய அலட்சிய நிதான நடை அவள் பெரிய பணக்காரி என்று தூக்கிக் காட்டியது.

“நாங்கள் பொள்ளாச்சியிலிருந்து வந்தோம். கார் திடீரென்று ரிப்பேராகி விட்டது.”

“என் காரிலே பெட்ரோல் இரவல் கொடுக்கற அளவுக்கு இல்லை.” மிடுக்குடன் சொன்னாள் அமிர்தம்.

“எங்களுக்குப் பெட்ரோல் வேண்டாம். காரை ஒர்க்ஷாப்புக்குத்தான் எடுத்துக் கொண்டு போகணும்… அதுக்கு எங்க கோயமுத்தூர் பிராஞ்சுக்கு போன் பண்ணினால்தான் முடியும். அவர்கள் இன்னிக்கு ராத்திரியே ஆள் அனுப்புவார்கள்”, என்றாள் வசு.

“டிரங்க் காலா?”

“ஆமாம். பேசி முடிஞ்சதும், என்ன சார்ஜ் ஆச்சுன்னு விசாரித்துப் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்,” என்றாள் நித்யா.

இருவரையும் ஏற இறங்கப் பார்த்தாள் அமிர்தம். அவளுடைய பார்வையைச் சந்தித்தபோது, வசு அவளுடைய கண்களின் கூர்மையைக் கண்டு பிரமித்துப் போனாள்.

இந்த முகமும் கண்களும் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்! எத்தனை உள்ளங்களைக் கிளறித் திணற அடித்திருக்கும்!

அமிர்தம், ”சரி சீக்கிரம் பண்ணுங்கள். டிரங்க் கால் கிடைச்சுப் பண்ண எவ்வளவு நேரமாகும்?” என்றாள்.

“லைட்னிங் காலாகப் போடுகிறோம்,” என்றாள் வசு.

அவளிடம், “நம்பர்?” என்றாள் நித்யா டயலில் கை வைத்தபடி.

வசு நம்பரைச் சொன்னாள். பிறகு, அமிர்தம் பக்கம் திரும்பி, “உங்க பெயர்தானே அமிர்தம்மா?” என்று கேட்டாள்.

அமிர்தம் வாயால் பதில் பேசவில்லை. தலை அசைத்தாள். பிறகு, சோபாவில் அமர்ந்து ஒரு செய்தித் தாளை எடுத்து வைத்துக்கொண்டாள்.

தன்னையும் நித்யாவையும் அவள் உட்காரகூடச் சொல்லவில்லையே என்ற தாபம் வசுவின் மனத்துள் தோன்றினாலும், அவள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. முன்பின் தெரியாத இடத்தில், ஓர் உதவியை நாடி வந்திருக்கிற இடத்தில் உபசாரத்தை எதிர்பார்ப்பது பண்புக் குறைவு என்று அவளுக்குத் தெரியாமலில்லை.

எதிர்பார்த்ததற்கு முன்பாகவே கோயமுத்தூர் லைன் கிடைத்தது.

“சார், நான் அங்கலக் குறிச்சியிலிருந்து பேசறேன். நானும் உங்க கம்பெனி ப்ரொப்ரைட்டர் சிவராமனுடைய பெண் வசுவும் இங்கே மாட்டிக்கிட்டிருக்கோம். கியர் பாக்ஸ்லே ஏதோ கோளாறு…”

நித்யா பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்துக்கொண்டிருந்த வசு சோபாவிலிருக்கும் அமிர்தம் அசைவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

திடீரென அமிர்தத்தின் முகத்தில் ஒரு தனிப் பிரகாசம் பிறந்து விட்டதாக வசுவுக்குத் தோன்றியது. அவள் தன்னையே ஒரு புதுப் பார்வையுடன் பார்ப்பதையும் உணர்ந்தாள்.

பேசி முடித்ததும், “வசு, இப்பவே அனுப்புகிறேன் என்றார் மானேஜர்.. பன்னிரண்டு ரூபாய் ஐம்பது பைசா ஆகியிருக்கு,” என்றாள் நித்யா.

“உட்கார் வசு,” என்ற அமிர்தம், “நீயும் உட்கார்,” என்று நித்யாவைப் பார்த்துக் கூறினாள்.

வசு உட்காரவில்லை. கைப் பையிலிருந்து பணத்தை எடுத்தாள்.

”பரவாயில்லை.பணம் கொடுத்தால்தான் ஆச்சா?”

காதையே நம்ப முடியாதவளாக வசு பார்த்தான். பிறகு, “உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்திருக்கிறோம்… இதை வாங்கிக் கொள்ளுங்கள்,” என்றாள்.

“கொஞ்சம் இருங்கள். காப்பி கொண்டு வருகிறேன்.”

“நேரமாகி விட்டது,” என்றாள் வசு.

“உங்க இரண்டு பேரையும் என் கார்லே பொள்ளாச்சியிலே கொண்டு போய் விடச் சொல்றேன்… உட்காருங்கள்.”

நித்யாவும் வசுவும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

“ரொம்பத் தாங்க்ஸ்… நீங்கள் இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ணினதற்கே நாங்க ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறோம். வா,நித்யா.”

“குங்குமம் வாங்கிக் கொள்ளுங்கள்.”

நித்யாவிடம் குங்குமச் சிமிழை எடுத்து வந்து நீட்டிய அமிர்தம், வசு சற்றும் எதிர்பாராவண்ணம், தன் கையாலேயே அவளுடைய நெற்றியில் குங்குமத்தை இட்டாள். ஏன் இப்படிச் செய்கிறாள் என்பதே வசுவுக்குப் புரியாத விந்தையாக இருந்தது.


காரைப் பத்திரமாக அமிர்தம்மா வீட்டில் நிறுத்திவிட்டு பஸ்ஸில் திரும்பும்போது, “ஏண்டி, அமிர்தம் திடீர்னு அப்படி மாறினாளே, என்ன சொக்குப் போடி போட்டே?” என்று நித்யா கேட்டாள்.

வசுவுக்குப் புரியவில்லை.

“நான் பேசக் கூட இல்லை.”

“பின் என்ன காரணம்?. அவளே உன் நெற்றியிலே குங்குமம் இட்டாள்!”

“சரியா இட்டிருக்கிறாளா?”

“உம்… நன்றாகவே இட்டிருக்கிறாள். பன்னிரண்டரை ரூபாய் டிரங்க் சார்ஜ் கொடுத்ததற்கு, நாம் அவளுடைய காரிலேயாவது வந்திருக்கலாம். இல்லியா?”

“சே போ!” என்றாள் வசு.

அத்தியாயம்-9

“ஓ, பெண்ணே, நீ இந்தக் கல்லின்மீது ஏறு. இல்லறத்தில் என்ன துன்பம் வந்தாலும், இந்தக் கல்லைப்போல் அசையாமல் இரு.” – அம்மி மிதித்தலின் அர்த்தம்.


“வசு, இங்கே இருந்தது தான் இருந்தே, இன்னும் இரண்டே இரண்டு நாள் இரு. நானும் உன்கூட மெட்ராஸ் வந்து விடுகிறேன்!” என்றாள் நித்யா.

ஆனால் வசுவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

“வந்தாச்சு, உன்னைப் பார்த்தாச்சு, பேசியாச்சு… உன் வேலையை யெல்லாம் முடித்துக்கொண்டு அப்புறம் வந்து சேர்,” என்றாள்.

“ராத்திரி கோபி உன்னைத் தட்டித் தட்டி எழுப்பினாராக்கும்? அது தான் அடிச்சுக் கட்டிக் கொண்டு போறியா?”

“அப்படியேதான் இருக்கட்டுமே?”

“மகாராணிக்கு உடம்பெல்லாம் எரிகிறது போலிருக்கு… மகாராஜா சந்தனம் தடவி அணைச்சுப் பார்!”

“பேசாம இருடீ…”

நித்யா கிண்டலைத் தொடர்ந்தாள்.

“நேத்து ராத்திரியே கவனிச்சேன். நீ படுக்கையிலே புரண்டு புரண்டு பெருமூச்சு பெருமுச்சா உதிர்த்திட்டிருந்தே. எனக்குக்கூடப் பரிதாபமா இருந்தது. நான் கோபியா இருந்திருக்கக் கூடாதான்னு ஆசைப்பட்டேன். காதல்னா மைண்ட் மட்டும் வொர்க் பண்ணும். கல்யாணமாயிட்டா…”

“எது எது எப்பப்போ வொர்க் பண்ணனும்னு எனக்குச் சந்தேகம் வர்றப்போ உன்கிட்டே வர்றேன்.”

நித்யா கோயமுத்தூர் வரைக்கும் வந்து, வசுவைக் கொச்சின் மெயிலில் ஏற்றிவிட்டுச் சென்றாள்.


போர்டிகோவில் டாக்ஸி வந்து நின்ற போது மணி ஏழு. வசு கைப் பெட்டியுடன் இறங்கினாள்.

ஹாலில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த சிவராமன், “அட,வசுவா? வரேன்னு ஏம்மா போன் பண்ணவில்லை, காரை அனுப்பி யிருப்பேனே?” என்றார்.

“தோணலை.” மனத்துள் அடங்கி நிற்கும் வெறுப்பு தலை தூக்க அவள் சுருக்கமாகப் பதில் சொன்னாள்.

சிவராமன் டாக்ஸிக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, “கோபி வந்ததும் போன் பண்ணினார், நீ இரண்டு நாள் கழித்து வருவாய் என்று,” என்றார்.

“பொள்ளாச்சிக்குப் போயிருந்தேன் நித்யாவைப் பார்க்க.”

“நித்யாவைத்தான் இங்கே தினம் பார்க்கிறாயே…”

“ஊரைப் பார்க்கலாம்னு போனேன்.”

“பொள்ளாச்சி என்ன, பாம்பேயா இல்லை, கல்கத்தாவா ஊர் பார்ப்பதற்கு?” என்றார் அவர். பொள்ளாச்சி என்ற பெயரே அவருக்குப் பிடிக்கவில்லை என்பதைக் குரலி லிருந்த எரிச்சல் காட்டிற்று. ”இல்லை, மதுரை, தஞ்சாவூர் மாதிரி பெரிய க்ஷேத்திரமா? அங்கே என்ன இருக்கு?”

அங்கே மரக்கடை இருக்கிறது, தங்கம்மாள் இருந்த வீடு இருக்கிறது என்று வெட்டுத் துண்டாகச் சொல்லிவிடத் துடித்தது வசுவுக்கு. அடக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

பூஜை அறையினுள் ராஜலட்சுமி துளசி இலைகளை ஆய்ந்து பூக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

காதுகளில் கமலங்கள் ஒளி வீச, நெற்றியில் குங்குமம் பனிச்சிட, இன்னும் காயாத கேசத்தை ஒரு துவாலையில் ஒளித்து வைத்து, எவ்வித சலனமுமில்லாமல் தன் கைக்காரியத்திலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கும் அம்மாவைப் பார்த்தபோது, அப்பாவைப் பற்றிய விவரமெல்லாம் அவளுக்குத் தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் வசுவுக்கு உதித்தது.

உள்ளுணர்வு யாரோ அருகே நிற்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்யவே நிமிர்ந்து பார்த்தாள் ராஜலட்சுமி.

“ஏன் இதற்குள் திரும்பி விட்டே? பொள்ளாச்சியிலே இன்னும் பாக்கி இடங்களையெல்லாம் பார்த்து விட்டுச் சாவகாசமாக வர்றதுதானே?” என்றாள் சிடுசிடுப்பாக.

“நித்யா அங்கே இருந்தாளேன்னு போனேன் அம்மா,”

“மாப்பிள்ளையுடன் ஊட்டிக்குப் போனவள், திரும்பி வர்றபோது அவரோடு திரும்பிவிட வேண்டியது தானே?”

“அதான் சொன்னேனே. நித்யாவைப் பார்க்கப் போனேன்னு. ஏன் பொரிஞ்சு தள்றே?”

“தாலி ஏறி ஏழு நாள் ஆகவில்லை. புருஷனைத் தனியா அனுப்பி விட்டு, நீ சினேகிதி வீட்லேபோய் உட்கார்ந்திருக்கே…”

“இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே?”

“போய்க் காப்பியைக் குடி. அப்புறம் பேசலாம்.”


மாடிக்குப் போகும்போது, சிவராமன் செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்த காட்சி வசுவின் கண் முன் வந்து நிற்கவே, திடீரென உடலெல்லாம் கோபம் வியாபித்தது. தங்கம்மாள் என்கிற ஒரு பெண்ணிடம் கடன் என்று சொல்லி ஏமாற்றிப் பத்தாயிரத்தை வாங்கிக் கொண்டு ஊரை விட்டே ஓடி வந்தவர், எவ்வளவு நிம்மதியுடன் பேப்பர் படிக்கிறார்? இவருக்கு எப்படித் தூக்கம் வருகிறது? இவரால் எப்படிச் சிரிக்க முடிகிறது?

குளித்துவிட்டுக் கண்ணாடியைப் பார்த்து வகிடு எடுத்துக் கொள்ளுகையில், கண்கள் வெறுப்புக் கட்டிகளாக ஜொலிப்பதை அவளே உணர்ந் தாள். தந்தையும் கணவனும் இரு கண்களின் தாக்குதலுக்கு இரையாகிக் கொண்டிருந்தார்கள்.

அவள் கீழே இறங்கி வந்தபோது, அம்மா அப்பாவுக்குப் பூஜைத் தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர் எழுந்து நின்று பயபக்தியுடன் கரம் நீட்டிப் பெற்றுக் கொண்டார். அவள் விபூதி கொடுத்தாள். இட்டுக் கொண்டார். நைவேத்தியம் பண்ணிய திராட்சைப் கொடுத்தாள். வாயில் பழத்தைக் போட்டுக் கொண்டார்.

வசுவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. எல்லாம் நடிப்பு!

பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது வசு தன் தாயிடம் கேட்டாள்.

“நீ எப்பம்மா கடைசியா பொள்ளாச்சிக்குப் போயிருந்தே?”

“பொள்ளாச்சிக்கா? போனதே கிடையாது,” என்றாள் ராஜலட்சுமி.

“அப்பா அந்த ஊரில் இருந்திருக்கிறாரே?”

“அது கல்யாணத்துக்கு முன்னாடி. அவருக்குப் பூர்வீகமான ஊர் பொள்ளாச்சிக்குப் பக்கம்தான்.”

“பொள்ளாச்சியில் என்ன செய்து கொண்டிருந்தார்?”

“ஆர்மி காண்டிராக்ட் எடுத்தார்.”

“அதுக்கு முன்னால்?”

“தெரியாது.”

பெரிய வெடி குண்டைத் தூக்கிப் போடும் பாவனையில் வசு அறிவித்தாள்.

“ஒரு மரக் கடையில் குமாஸ்தாவாகக் கணக்கு எழுதிக் கொண்டிருந்தாராம்.”

ராஜலட்சுமியிடம் ஒரு சலனமும் இல்லை.

“இருக்கலாம்.”

“என்னம்மா சாதாரணமாகச் சொல்லிட்டே?” ஏமாற்றம் வசுவின் வார்த்தைகளில் கொப்புளித்தது.

“கணக்கு எழுதினால் அதிலே என்ன வசு கேவலம் இருக்கு? யாரையும் ஏமாத்தாமல் இருந்தால், எந்தத் தொழில் வேணும்னாலும் செய்யலாம்.”

வசு பிடித்துக் கொண்டு விட்டாள். “அது கரெக்ட். ஏமாற்றாமல் இருந்தால் எந்தத் தொழிலும் கௌரவமானதுதான் என்று வைத்துக் கொள்வோம். ஆர்மி டெப்போ காண்ட்ராக்டுக்குப் பதினாயிரம் ரூபாய் தேவைப்பட்டிருக்கிறது அப்பாவுக்கு. கடன் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் பதினாயிரம் ரூபாய் வாங்கி, சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டிருக்கிறார்! அது தான் ஒரு கெளரவமான மனிதர் செய்கிற காரியமா?”

“நாக்கை அடக்கிப் பேசு. இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?”

“பொள்ளாச்சியே சிரிக்கிறது. ரொம்ப நாளா இருக்கிறவர்… அவர் சொன்னார்… கிட்டு மாமான்னு பேரு.”

“எவனோ வயிற்றெரிச்சல்காரன் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னால் அதை அப்படியே நம்பிக் கொண்டு அப்பாவைப் பற்றித் தூஷணையாகப் பேசலாமா? உனக்கு வெட்கமாயில்லை? ஆர்மி காண்டிராக்டுக்காக உன் அப்பா கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை… அவர் வாங்கவும் இல்லை…. வாங்கி யிருக்கவும் மாட்டார்.”

வார்த்தைகளினூடேயே, பழைய நினைவுகள் அலைகளாக ராஜலட்சுமியின் மனத்தில் மோதின. காண்டிராக்டுக்கு வேண்டிய பணத்தைச் சிவராமனுக்கு அவன் அண்ணன் ராஜாமணி கொடுத்தது அவளுக்குத் தெரியும். பணம் போடும் கூட்டாளியாக அவள் சகோதரன் ராஜாமணியும், உழைக்கும் கூட்டாளியாக சிவராமனும் இருந்தார்கள். அவர்களுக்கிடையே இருந்த நட்பும் அன்னியோன்னியமும்தான் கடைசியில் ராஜலட்சுமி – சிவராமன் கல்யாணமாகப் பரிணமித்தது.

“இப்படியா நீ நினைச்சிட்டிருக்கே, அம்மா?” என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தாள் வசு.

ராஜலட்சுமி பேச்சைத் திருப்பினாள்.

“அது சரி, மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு வர நீ எப்போ புறப்படப் போறே….”

“அவருக்கு வழி தெரியும்.”

“வாசு… உனக்கு நாலு வருஷம் முன்னாலே டியூஷன் சொல்லிக் கொடுத்தாரே, வாஞ்சிநாதன்? அவரும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள், பெண்ணுக்குக் கல்யாணமாம்.”

“அதுக்கு என்ன?”

”வாஞ்சிநாதன் பிள்ளையும் மாப்பிள்ளையும் ஒரே கம்பெனியில்தானே இருக்கிறார்கள்? அவன் கிட்டேயும் அவள் பெண்டாட்டிகிட்டேயும் மாப்பிள்ளை உன்னைப்பத்தி ரொம்ப உயர்வாகச் சொன்னாராம்.”

“ஓகோ,” என்றாள் வசு மனத்துக்குள் ஒரு குறுகுறுப்பு. கோபி அவளைப்பற்றி உயர்வாக சொன்னாராமா! என்ன சொல்லியிருப்பார்?.

ராஜலட்சுமி சிரித்துக் கொண்டே விவரித்தாள். “பார்க்கிறதற்குக் கர்வமாக இருக்கிறவள் மாதிரி தோன்றும். ஆனால் ரொம்ப நல்ல மனசு என்றாராம்.”

“உம். அப்புறம்…”

“நீ புத்திசாலியாம். வெறும் காலெஜ் படிப்புமட்டுமில்லாமல், எல்லா விஷயங்களையும் நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கியாம்.”

வசுவையும் மீறிக் கொண்டு ஒரு புன்னகை அவள் முகத்தில் பூத்தது. “பரவாயில்லையே, என்கிட்டே நேரடியாச் சொல்லாததை யெல்லாம், ஃப்ரண்டுகிட்டே சொல்லி யிருக்கிறார் போலிருக்கு.”

“இன்னும் கேள். ‘இவ்வளவு அழகான ஒரு பெண் மனைவியாய் வாய்ப்பாள்னு நான் எதிர்பார்க்கவேயில்லை’ என்றாராம்.”

வசுவுக்குப் புல்லரித்தது. “மாடி அறையில் புத்தகங்களும் துணிகளும் கன்னா பின்னாவென்று கிடக்கு..” என்று நகர்ந்தாள்.


அன்று மத்தியானமெல்லாம் அவள் மனத்தில் கோபிதான் சுற்றிச் சுற்றி வந்தான், முதல் இரவு, ஊட்டி ‘தமிழகத்துக்குள்’ பெரிய அறை, அறையில் இருந்த இரட்டைக் கட்டில், கோபியின் உடற்கட்டு, அவனுடைய பரந்த மார்பு, அவனுடைய உதடுகள். கண்களில் பிரதிபலித்த அவசரம், உடம்பின் கொதிப்பு எல்லாம் அவளுள் சுற்றிச் சுற்றித் தட்டாமாலை ஆடின.

படுக்கைக்குப் புது விரிப்புக்களைப் போட்டாள். தலையணைகளுக்கு உறை மாற்றினாள். இரத்தச் சிவப்புப் போர்வைகளை அழகாக மடித்து, கால் மாட்டில் வைத்தாள்.

பால்கனியில் நின்றபடி கடியாரத்தைப் பார்த்தாள். ஐந்தரை. ஐந்து மணிக்கே டிரைவரிடம் சொல்லித் திருவல்லிக்கேணிக்குக் கார் அனுப்பியிருந்தாள்.

இளம் பச்சைப் புடவையில் அவள் மின்னிக் கொண்டிருந்தாள். புருவங்களுக்கு லேசாக மை தீட்டிக் கொண்டிருந்தாள். வலது கன்னத்தில் ரூஜ் அதிகமாகி விட்டதோ என்ற சந்தேகம் முளைத்தது. இல்லை என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அதோ கார் சத்தம்.

பால்கனிச் சுவரில் சாய்ந்து கொண்டு குனிந்து பார்த்தாள்.

டிரைவர் இறங்கிக் காரைச் சுற்றி வந்து பின் கதவைத் திறந்தான். திறந்தவன், வழிவிட்டு யாருக்கும் ஒதுங்கி நிற்கவில்லை. காருக்குள் கை விட்டு, பெரிய பொட்டலம் ஒன்றை எடுத்துக்கொண்டு கதவைச் சாத்தினான். காகிதப் பொட்டலம். லாண்டரியின் அங்க லட்சணங்களோடு இருந்தது.

“டிரைவர்.” என்றாள் வசு, மாடியிலிருந்தபடி.

அவன் நிமிர்ந்து பார்த்தான்.

“பெரிய ஐயாவுடைய துணிகள் அம்மா. லாண்டிரியிலிருந்து வாங்கிட்டு வர்றேன்.”

“அது சரி. அவர் எங்கே?”

“அவர் வரலிங்க. உங்களை அங்கே வரச் சொன்னார்.”

அவளுக்குச் சொரேல் என்றது.

– தொடரும்…

– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *