கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 5,152 
 
 

(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

“நான் சிரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணமாக இந்த மாங்கல்யக் கயிற்றை உன் கழுத்தில் கட்டுகிறேன். ஓ, பாக்கியவதி, நீயும் நூறாண்டு காலம் ஜீவித்திரு.” – திருநாண்பூட்டின் அர்த்தம்.


சென்ட்ரல் ஸ்டேஷன். நான்காவது பிளாட்பாரம். இரவு மணி ஏழரை..

ஜன நெரிசலை லட்சியம் செய்யாமல், ஃபாண்ட்டாவை ரசித்து ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் வசு.

கோபி தன்னுடைய பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தாகி விட்டது.

“ஹாய் வசு!” என்ற குரல் கேட்டது.

வசுவும் கோபியும் திரும்பிப் பார்த்தார்கள். “ஹாய் நித்யா!” என்று வசு தன் தோழியின் கையைப் பிடித்தாள். பிறகு, “பாவம், நீ எதற்கு இவ்வளவு தூரம் வந்தே ஸெண்ட் ஆஃப் கொடுக்க!” என்றாள்.

கோபி நீட்டிய ஃபாண்ட்டாவை வாங்கிக் கொண்டே, ”உன் ஹனிமூனுக்கு ஸெண்ட் ஆஃப் கொடுக்கிறதைவிட எனக்கு வேறு வேலை இல்லைன்னு நினைச்சியா?” என்றாள் நித்யா.

“அப்போ உனக்கு இங்கே என்ன வேலை?”

“ஐ ஆம் ஆல்ஸோ டிராவலிங்..வித் டிக்கட்!”

“எந்த ஊருக்கு? டில்லியா? அதோ அந்தப் பிளாட்பாரத்தில் கிராண்ட் டிரங்க் நிக்கறது..சீக்கிரம் போ!”

“இந்திரா காந்தியை அப்புறம் பார்த்துக்கறேன்.. நௌ நித்யா இஷ் கோயிங் டு பொள்ளாச்சி!” சொல்லிவிட்டு, ஒரே மூச்சில் கூல் ட்ரிங்க்கை உறிஞ்சினாள்.

“மெட்ராஸ்லே பெண் பார்க்க வரமுடியாம உன்னைப் பொள்ளாச்சிக்கு இழுக்கிறார்களா?”

“யெஸ். பொள்ளாச்சி ஸப்-ரிஜிஸ்ட்ரார் நல்லவர்.”

“கங்கிராஜுலேஷன்ஸ்,” என்றான் கோபி.

“அவருக்கு வயசு என்ன தெரியுமா? ஒன்லி ஃபிஃப்டி டு..”

“ஏண்டி, அதுக்குப் பொள்ளாச்சிக்குப் போவானேன்! மெட்ராஸ்லே கிழவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்களே!”

காலி பாட்டிலைப் பார்த்துக் கொண்டே நித்யா வசுவைப் பார்த்தாள். அவளுடைய பாட்டி இறப்பதற்கு முன்னால் ஒரு வீட்டையும் நிலத்தையும் அவள் பெயருக்கு எழுதி வைத்திருந்தாள். அது விஷயமாக வக்கீலையும், ரிஜிஸ்திராரையும் பார்க்கத்தான் நித்யா இப்போது பொள்ளாச்சி செல்லுகிறாள்.

விஷயத்தைச் சொன்னாள் நித்யா.

“ஐ ஆம் வெரி ஹாப்பி” என்றாள் வசு.

“ஏண்டி வசு, என் பாட்டி உனக்கு என்ன துரோகம் பண்ணினாள்?”

“உனக்குச் சொத்து வந்தது பற்றி ஹாப்பின்னேன்” என்ற வசு, “அது சரி, நீயும் எங்களோடு எங்க கம்பார்ட்மெண்டில் வாயேன்,” என்றாள்.

“உன் கோபியின் முகத்தைப் பாரு..பேய் அடிச்சமாதிரி ஆயிட்டுது..ஸார், கோபி ஸார்.. பயப்படாதீர்கள்.. இவ கூப்பிட்டாளேன்னு நான் உங்க பெட்டிக்குள்ளே வந்து நந்தி மாதிரி நிற்க மாட்டேன், நீங்கள் ஹனிமூனுக்குப் போகிறீர்கள்!… வசு, வாயேன், என் கம்பார்ட்மெண்ட் வரை..”

“ஓகே!” என்ற வசு, “இதோ வந்து விடுகிறேன். நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள்!,” என்று கோபியிடம் கூறிவிட்டு நகர்ந்தாள்.

“எப்படி இருக்கார்?”

“ஓகே!”

“ரொம்பப் பேசமாட்டார் போலிருக்கு..பூனை மாதிரி இருக்கார்.”

“பாய்ஞ்சா புலியாவும் இருக்கலாம் இல்லையா?”

“உன்மேலே தானே பாய்வார்?”

“பின்னே? உன்மேலே பாய நான் விடுவேனா?”

“ஊட்டியிலே எத்தனை நாள்?”

“ஒன் வீக். பொள்ளாச்சியிலே எத்தனை நாள்?”

“தெரியலை..ஒரு வாரமாவது ஆகும். நீயும் நானும் இல்லாவிட்டால் மெட்ராஸ் என்னவாகும்?”

“மழை பெய்யும்.”

“ஏதோ நம்மால் ஆன காரீயம். ஊட்டியிலே என்ன செய்யப் போறே?”

“உனக்கும் கல்யாணமாகும், அப்போ தெரியும்.”

“நான் விரதம் இருப்பேன்.”

“உன் விரதமும் என் விருந்தும் ஒண்ணுதான்…சரி சரி, இன்னமே போர் அடிச்சா, ரெயில் ஊதாமலே புறப்பட்டுப் போயிடும். நான் போறேன்.”

“ஏன், ரெயில் கிளம்பறத்துக்கு முன்னாலேயே பசியா..உம், போ. அவர் காத்திருப்பார்.”


கோபி ஏஸி பெட்டியில் உட்கார்ந்தான். ஏதேதோ நினைவுகள்.

ஏர் கண்டிஷனில் முதன் முதலாகப் பிரயாணம் செய்யப் போகிறோம் என்ற எண்ணம் அவன் மனத்தில் எந்தவிதமான புல்லரிப்பையும் ஏற்படுத்தவில்லை. காலில் செருப்பில்லாமல் வெய்யிலின் இம்சையை உணராத அவன் இப்போது இந்தக் குளிரின் சுகத்தையும் ரசிக்கவில்லை.

நித்யா பொள்ளாச்சி என்றதும் அவனுக்குத் தன் தாய் ஞாபகம் வந்துவிட்டது.

கோபி, அம்மாவின் முகம் மனத்தில் பதிவதற்கு முன்னாலேயே அவளை இழந்தவன்.

பொள்ளாச்சியில் தங்கம்மாள் ஒரு காலத்தில் சகல வசதிகளுடன் இருந்தவள். ஆனால் அவன் பிறந்தபோது அவளும், அவளுக்கு அவனை அளித்த அவனுடைய அப்பாவும் அன்றாட ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டார்கள். வசதிகள் நிறைய இருந்தவள் எப்படி எல்லா வசதிகளையும் இழந்தாள் என்று அறிவு தெரிந்த நாட்களில் கோபி அடிக்கடி தன்னையே கேட்டுக் கொள்ளுவான். ஆனால் யார் பதில் சொல்லுவார்கள்? சித்திக்குத் தெரிய நியாயமிருந்தது. ஆனால் அவள் ‘தனக்கு ஒன்றுமே தெரியாது’ என்று மழுப்பி வந்தாள். சித்தி மூலமாகத் தெரிந்த கதையெல்லாம், அவன் பிறந்த ஆறு மாதங்களுக்கெல்லாம், கடன் உபாதை தாள முடியாமல் தகப்பனார் வடக்கே ஓடியதும் அதன் பிறகு ஒரு வருடத்துக்குப் பிறகு எலும்புருக்கி வியாதியில் அம்மா போனதும்தான். அதன் பின்னர், பல வருடங்களுக்குப் பின், தகப்பனாரும் ராஜ்கோட்டில் இறந்துபோனார் என்று தெரிய வந்தது.

அம்மாவின் நிலபுலன்களும் வீடும் கடனில் கரைந்து போய்விட்டதாகச் சித்தி சொல்லிக் கேட்டிருந்த கோபி, சொத்தின் பாரம் தனக்கு இல்லை என்ற ஓர் ஏழையின் திருப்தியுடன் வளர்ந்து வந்தான். திருச்சியில் ஈஆர் ஹைஸ்கூலி லும், அதன் பிறகு நேஷனல் காலேஜிலும் படித்த அவன் சென்னைக்கு வேலை தேடிப் புறப்படவும், சித்தி கான்பூரில் இருக்கும் தன் ஒரே பெண்ணுடன் கடைசி நாட்களைக் கழிக்க ரெயிலேறவும் சரியாக இருந்தது.

எட்டு வருடங்களுக்கு முன்னால், பத்தொன்பதாவது வயதில் சென்னை எழும்பூரில் இறங்கிய அவனுக்கு அதிருஷ்டவசமாக மூன்றாவது நாளே, ஒரு பெரிய துணிக்கடையில் பீல் எழுதும் வேலை கிடைத்தது. முதல் வகுப்பில் பி.ஏ.பாஸ் செய்தது இந்தப் பில் எழுதும் வேலைக்குத்தானா என்று அவன் அலுத்துக் கொள்ளவில்லை. நியாயமான வழியில் கிடைத்திருக்கிற வேலையை அவன் ஒழுங்காகச் செய்தால் இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாமே?

மூன்று மாதங்களுக்குப் பிறகு நாகராஜனுடைய பரிச்சயம் ஏற்பட்டது.

இருவரும் திருவல்லிக்கேணியில் ஒரே ஓட்டளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சரியாக எட்டரை மணிக்கு இருவரும் சொல்லி வைத்துக் கொண்டாற்போல சந்திப்பார்கள். சந்திப்பு, பேச்சுக்கு ஒரு ஆதாரமாக இருக்க, பேச்சு இருவர் மனத்துக்கும் ஒரு பாலமாக அமைந்தது. அனாதையான கோபியின் மீது நாகராஜனுக்கு ஒரு தனி அன்பும் அபிமானமும் உண்டாயின.

“உனக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள்?* என்று நாகராஜன் ஒருநாள் கேட்டான்.

“நூறு ரூபாய்..சாயங்காலம் ஒரு கப் காப்பியும் கிடைக்கும்.”

“பி.ஏ.பாஸ் செய்துவிட்டு இந்த வேலையில் முடங்கிக் கிடப்பானேன்?”

“வேறு என்ன செய்வது? எத்தனையோ கம்பெனிகளுக்கு மனுப் போட்டிருக்கிறேன்.”

“எங்க கம்பெனியில் ஒரு லெட்ஜர் கிளார்க் உத்தியோகம் காலியாகப் போகிறது. நான் ஜெனரல் மானேஜரிடம் ஸ்டெனோவாக இருக்கிறேன்.. ஒரு அப்ளிகேஷனையும் எடுத்துக் கொண்டு நாளைக்கு வா.”

“சரி”

“இருநூற்று எழுபது ரூபாய் கிடைக்கும்.”

“ரொம்ப தாங்க்ஸ்.”

இப்படிக் கிடைத்த குமாஸ்தா வேலையில் முன்னேறி, கோபி எழுநூற்று எண்பது ரூபாய் வாங்கும் சூபரிண்டெண்டாக உயர்ந்து விட்டான்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால், திடீரென்று சிவராமன் அவனைத் தேடிக்கொண்டு வந்தார். சிவராமனை ஜெனரல் மானேஜரே அழைத்துக் கொண்டு வந்தார்.

அன்று மாலை சிவராமனை கோபி அவருடைய கம்பெனியில் சந்தித்தான். தங்கம்மாள் கொடுத்த கடனை வைத்துத்தான் அவர் பிஸினஸ் ஆரம்பித்ததாக கூறினார்.

“கோபி..நான் எத்தனை வருஷமாக உன்னைத் தேடித் தேடி அலைந்தேன் தெரியுமா?” என்றார்.

அதன் பின் பலமுறை இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். தன் தாயார் செய்த உதவியால் சிவராமன் இன்று ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கிறார் என்று பெருமைப்பட்டான் கோபி.

ஒரு நாள், அவர் அவனைத் தம் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தார். மனைவி ராஜலட்சுமியையும் பெண் வசுவையும் அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

வசுவினுடைய உருவம், பள பளக்கும் மேனி, சிரித்து விளையாடும் கண்கள், உடலில் துள்ளித் ததும்பும் பெண்மை எல்லாம் ஒரு கணம் கோபியை மயங்க வைத்தன.

“எந்தக் காலேஜில் படித்தாய்?” என்றான்.

“எத்திராஜ். தென் லா.”

“ஓ! டபிள் கிராஜுவேட்!”

”யெஸ்… ஹௌ அபவுட் யூ?” என்று கேட்டாள் வசு.

“நேஷனல் காலேஜ், ட்ரிச்சி. பி. ஏ..”

“எகனாமிக்ஸ்?”

“கரெக்ட்.”

சாப்பாட்டு மேஜையில் அவள் சாப்பிட்டுக் கொண்டே அனாயாமாகப் பேசினாள். ஸ்பூன் அவளுடைய விரல்கள் இழுத்த இழுப்புக்கு வளைந்தது. இதெல்லாம் பணம் கொடுக்கும் பயிற்சி என நினைத்த கோபி திணறினான். கறியைச் சாம்பாருடன் இணைத்து ஸ்பூனால் சாப்பிட முடியவில்லை.

“நான் என் வழக்கப்படி சாப்பிடப் போகிறேன்!” என்ற அவன் கையால் பிசைய ஆரம்பித்தான்.

“தட் இஸ் குட்!” என்ற வசுதா “யார் யாருக்கு என்ன பழக்கமோ, அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். வாட்டு யூ ஸே, டாடி?” என்றாள்.

“யூ ஆர் நெவர் ராங், வசு!”

அன்று, இந்த வசுதா தன்னுடைய எதிர்கால மனைவி என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

ஏ.ஸி. கோச்சில் உட்கார்ந்தபடி, எதிர்காலத்தைப் பற்றிய யோசனையில் அவன் ஆழ்ந்தான்.

பங்களா வாழ்க்கையைவிட்டு வசுதா அவனுடன் ஒரு சிறு வீட்டில் இருக்க வேண்டியிருக்கும். முதலில் சிரமமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளுவாள். ஒரு சிறு நல்ல வீடு கிடைக்காமல் போகாது. அதுவரை அறையை வைத்துக் கொள்ளலாம். சிவராமன் ஆட்சேபிப்பார். ஆனால் தொடர்ந்து மாமனார் வீட்டில் இருக்கத் தான் விரும்பவில்லை என்பதை உணர்த்தினால் அவர் புரிந்துகொள்ளுவார்.

ரயில் திடீரென நகர்வதை உணர்ந்த கோபி திடுக்கிட்டுப் பார்த்தான். வசு, ஜன்னல் ஓரமாக உட் கார்த்து அவனையே பார்த்துப் புன் முறுவலித்துக் கொண்டிருந்தாள்.


ஊட்டிக்கு வந்த வசுவும் கோபியும் ‘தமிழக’த்தில் தங்கினார்கள். வசதி நிறைந்த அறை, சுற்றிலும் பூச்செடிகள். யூகலிப்டஸ் மரங்களின் மணம். குளிர்ப் போர்வையில் உறைந்த ஊட்டியில் அந்த முன்னான் மகாராஜாவின் அரண்மனையில் இளவரசி வசுவுடன் வந்திருப்பதான பிரமை கோபியின் மனத்துள் எழுந்தது.

தொடபெட்டாவுக்கு சிகரத்திற்கு ஒரு நாள் சென்றார்கள்.

“இதோ, இந்த டைரக்ஷனில்தான் மைகுர் இருக்கிறது. இப்படித் திரும்பிப் பார்த்தால் கோயமுத்தூர்..அதோ, அப்படிப் பார்த்தால்…”

“என்னால் எதையுமே பார்க்க முடியவில்லை, வசு..”

“ரொம்பக் குளிர்றதா!”

“அபத்தமா ஒரு கேள்வியைச் கேட்கிறாயே..உதடு தாளம் போடறது.”

வசு சிரித்தாள். பிறகு, அவனுடைய கையை எடுத்துத் தன் தோளின் மேல் போட்டுக் கொண்டாள். அவனது கை அவளுடைய வலது கன்னத்துக்குப் போய் அங்கேயே நின்றது.

பட்டு புடவையை இடுப்புவரை மறைத்த இளம் நீலநிற முழுக்கை ஸ்வெட்டர். நிம்மதியாகத் தூங்கும் குழந்தையைப் போல, அவளுடைய மார்பகம் ஸ்வெட்டரினுள் அடங்கி ஓடுங்கி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய தலையைச் சுற்றிக் கட்டியிருந்த கிரீம் நிற மப்ளர் நெற்றிக் குங்குமத்தின் சிவப்பை எடுத்து வீசியது.

“வந்து மூணுநாள் ஆச்சு. ஆனா நினைச்சபடி முதுமலைக்குப் போக முடியலை.” என்றாள் அவள்.

“லேக்கிலே சுற்றியாச்சு கூனூரிலே ஸிம்ஸ் பார்க் பார்த்தாச்சு. தினம் தினம் இரண்டு வேளை பொட்டானிகல் கார்டன்ஸ்லே உட்கார்ந்து தீர்த்தாச்சு…எஞ்சாய் பண்ணிமா இல்லியா!”

”இல்லேன்னு யார் சொன்னது? முதுமலையிலே யானைகளைப் பார்க்கலாம். அதிருஷ்டம் இருந்தால் புலிகளைக்கூடப் பார்க்கலாம்… அப்பா ஸ்பெஷலா ஃபாரெஸ்ட் ஆபீஸருக்கு எழுதியிருக்கிறார்.”

“நாளைக்குப் போவோம்,”

“சாரிங் கிராஸிலே சூடா காபி சாப்பிட்டுவிட்டுத் தமிழகத்துக்கு நடந்தே போகலாம்.”

“இரண்டு மைலுக்கு மேலே இருக்கும். வசு..”

“ஊட்டியிலே நடந்து கொண்டே இருக்கணும், இல்லாமப் போனா குளிர் கொன்னுடும்.”

“அதாவது, நடந்தாத்தான் உடம்பிலே ஒரு கதகதப்பு ஏற்படும் என்று சொல்றே!”

“கரெக்ட்,”

“நீயும் நானும் இப்படியே இருந்தாலே குளிர் போயிடுமே.” அவளை அணைத்துக் கொண்டான்.

“இதுக்கு முன்னாடி நீங்கள் ஊட்டிக்கே வந்ததில்லையா?”

“ஹனிமூனுக்குத்தான் ஊட்டியைப் பார்க்க வருவேன்னு ஒரு சங்கற்பம்…” என்றான் கோபி. பிறகு, “நீ எத்தனை தடவை வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

“வருஷத்துக்கு ஒரு தடவை.”

“அப்போ இருபத்துமூணு.”

“இல்லை, பதினெட்டு.”

“ஏன் வயசைக் குறைக்கிறே?”

“அஞ்சு வருஷம் மிஸ் ஆயிட்டுது.”

“இப்போ மிஸஸ் ஆயிருக்கே! இனிமே மிஸ் ஆக முடியாது.”

“கொஞ்சம் இருங்கள். உங்க ஜோக்குக்கு சிரிக்க முடியுமான்னு ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்…”

“நான் அதுவரையில் தூங்கட்டுமா?”

“தலையணை இல்லாமத்தான் தூங்கணும். இப்போ என் மடியிலே உங்க தலை பட்டா, பட்டுப் புடவை யெல்லாம் எண்ணெயாகிவிடும்.”

“அப்போ, தமிழகத்துக்குப் போய் விடுவோம்..அங்கே புடவையை மாற்றிக் கொள்ளலாம்.”

“என்ன அவசரம், மெதுவாகப் போவோம்.”

“மணியைப் பார்…”

“நாலு.”

“அதுக்குள்ளே இருட்டற மாதிரி இருக்கு.”

“நான் சூரியனை நிறுத்தறேன்.”

“அதை நளாயினி செய்தாச்சு..முடியுமானா, குளிரை நிறுத்து.”

“குளிரை நிறுத்த முடியாது. வேணும்னா உட்கார வைக்கிறேன்.”


தமிழகத்தை அடைந்த போது மணி ஐந்தரை.

அறையைத் திறந்ததுமே, ஒரு கடிதம் கீழே கிடப்பதைக் கண்டாள் வசு. அதை எடுக்க அவள் குனிந்தபோது, “வசு, கடிதத்தை அப்புறம் படிக்கலாம்…” என்று முணு முணுத்துக் கொண்டே கோபி அவளை இழுத்தான். கட்டில் வெகு தூரத்தில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

“கொஞ்சம் இருங்கள்…” குனித்து கடிதத்தை எடுத்த வசு, பிரித்தாள்.

படித்தாள்.

மீண்டும் ஒரு தடவை படித்தாள்.

“யார் கடிதம்?.”

“நித்யா…. பொள்ளாச்சியிலிருந்து எழுதியிருக்கிறாள்..”

“என்னவாம்?”

அவள் பதில் சொல்லவில்லை.

அத்தியாயம்-5

விவாகத்தில் ஊஞ்சல் ஒரு விசேஷ நிகழ்ச்சி. லட்சுமியும் மகாவிஷ்ணுவும், பார்வதியும் ஈசுவரனும் இப்படி ஊஞ்சல் ஆடியதாகப் பாடி, அவர்களைத் தம்பதி நினைவில் கொள்ளவேண்டும்.

ஊஞ்சலின் இன்னொரு தத்துவம்:

மேலே இருக்கும் தெய்வத்தை விட்டு பூமிக்கு இறங்கி இருக்கிறோம் என்பதைத் தொங்கும் சங்கிலிகள் காட்டுகின்றன. ஊஞ்சல் முன்னும் பின்னும் செல்வது, நமது வாழ்க்கை அலைபோல சஞ்சலமானது என்பதை உணர்த்துகிறது.

ஊஞ்சல் அசைவற்று நிற்கிறது. அதைப்போல ஸ்திரமான ஒரு லட்சியத்தைத் தம்பதி பின்பற்ற வேண்டும்.

-சம்ஸ்காரங்களிலிருந்து.


இரட்டைக் கட்டிலில் சுவர் ஓரமாக ஒடுங்கிப் படுத்திருக்கும் வசுவை மங்கிய விளக்கின் ஒனியில் பார்த்த கோபியின் எரிச்சலும் ஆத்திரமும் இன்னும் அடங்கவில்லை…அன்று மாலை தொட்டபெட்டாவிலிருந்து தமிழகத்துக்குத் திரும்பியதும் அவளுக்கு வந்த கடிதம் அவளை வெகுவாக மாற்றி விட்டது. அது என்ன கடிதம், யாரிடமிருந்து வந்திருக்கிறது. என்று கூட அவள் முதலில் சொல்லவில்லை. அவன் கேட்ட கேள்விக்கு, ‘நித்யா எழுதியிருக்கிறாள்’, என்று சொன்னாளே தவிர, வேறு ஒன்றும் பேசவில்லை.

அதன் பிறகு அவள் எதிலும் ஒரு சுவாரசியத்தைக் காட்டவில்லை. கடந்த மூன்று நாட்களாகச் சிரித்துக் கும்மாளமிட்டு, சப்பாத்தியை ருசித்துச் சாப்பிட்டு, பாலை உறிஞ்சிக் குடித்த அவள் இன்று ஒரு யந்திரமாக நடந்து கொண்டாள். தொட்டபெட்டா விலிருந்து திரும்பியபோது அவளுக்கு இருந்த பரபரப்பும் ஆர்வமும் திடீரென்று மறைந்து விட்டன.. அவனுடைய ஆண்மையின் அவசரத்தில் அவன் அவளுடைய கைகளைப் பற்றிய போது அவள் தன்னை விடுவித்துக் கொண்டாள். அவளுடைய பிணக்கை அவனால் மன்னிக்க முடியவில்லை. ஆர்வத்தோடு அவன் காத்திருந்தான். அவள் உதாசினம் செய்தாள். அதுவே ஏமாற்றத்தையும் அதைத் தொடர்ந்து எரிச்சலையும் ஏற்படுத்தியது.

அவள் முதலில் படுத்துக் கொண்டாள். அவன் விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலுக்கு வந்த போது, அவள் சுவரைப் பார்த்தவளாய்க் கிடந்தாள். முந்தின மூன்று இரவுகள் இப்படியா கழிந்தன?

இப்போது அவன் தன் எரிச்சலையும் ஆத்திரத்தையும் மறந்து அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசித்தான். ‘தானாக் கனியாததைத் தடி கொண்டு பழுக்க வைக்க முடியாது’ என்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும், முயற்சி செய்தான்.

”வசு…”

“உம்…”

“ஏன் தள்ளிப் படுத்துக் கொண்டிருக்கிறாய்?”

“தலைவலி.”

“திடீர்னு வந்துவிட்டதா?”

“ஆமாம்.”

“நான் நம்பணுமா?”

“உங்க இஷ்டம்.”

“வசு!”

“உம்.”

“நாம் எவ்வளவு ஆர்வமா அவசரமா வந்தோம்?”

“எனக்கு இப்போ தூக்கம் வருகிறது.”

”தலைவலியில் தூக்கம் வருமா, வசு?”

”தூக்கத்தில் தலைவலி போய்விடும்.”

“அப்படியா?”

“ஆமாம். குட்நைட்.”


மறுநாள் காலையில் கோபி எழுந்தபோது மணி ஆறு. வசு இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். முந்தின இரவின் ஏமாற்றம் இன்னும் அவனைக் குத்திக் குத்திக் கொண்டிருந்தது.

அவன் பல்லைத் தேய்த்து விட்டு மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே வந்தான். தமிழகத்தைச் சுற்றியுள்ள மரங்களையும், செடிகளையும் பனிப் படலம் ஒரு போர்வையாக உரு எடுத்து மூடியிருந்தது. முகத்தைக் குளிர் ஊசி ஊசியாகக் குத்தித் தாக்கியது. ஆனால் அவனுடைய கொதிக்கும் மனத்தைக் குளிர் குத்தவில்லை.

மீண்டும் அறைக்குள் பிரவேசிக்க விரும்பாமல், அவன் மாடிப்படி வழியாக இறங்கிக் கீழே வெராந்தாவுக்கு வந்தான். அரசாங்க ஜீப்புகளும் கார்களும் பனியில் ஒடுங்கிக் கிடந்தன. பால் சப்ளை பண்ணுகிறவன் சைக்கிளில் வந்து இறங்கினான். அவனுடைய கோலத்தையும் அவதியையும் மனத்துள் எண்ணிக் கொண்டே மெதுவாக நந்தவனத்தில் நடக்கலானான்.

நந்தவனத்தின் ரோஜாக்களும், அங்கங்கே ஓங்கி வளர்த்திருந்த யூகப்லிடஸ் மரங்களும் கோபியின் கண்களுக்கு அழகாகத் தோன்றவில்லை. ஆண்மை இழந்தவனாய்ச் சூரியன் தோன்றினான். அங்கங்கே பனிப் படலம் சற்றே விலகினாலும் போர்வை இன்னும் கலையவில்லை. மேட்டுப் பாதையில் வெகுநேரம் நடந்த அவனுக்குத் திடீரென்று கால் வலிப்பதாகத் தோன்றவே, தமிழகத்தை நோக்கித் திரும்பினான்.

அறை வாயிலில் வசு நின்று கொண்டிருந்தாள். கோபி வந்ததும், “எங்கே போயிருந்தீர்கள்?” என்று கேட்டாள். அவள் ‘மூட்’ கொஞ்சம் மாறியிருந்தது.

“வாக்கிங்.”

“என்னையும் எழுப்பியிருக்கக் கூடாதா?”

“நீ தலைவலியோடு தூங்கிக் கொண்டிருந்தாய்.”

“தலைவலி போய்விட்டது.”

“எனக்கு யாரும் சொல்லவில்லையே?”

“காப்பி சாப்பிடலாமா?”

“ரெடி.”

“ராத்திரி நான் அப்படி நடந்து கொண்டதில் கோபம்தானே?”

“ஆமாம் என்றால் உடனே ‘ஸாரி’ன்னு சொல்லப் போகிறாக்கும்?”

வசு சிரித்தாள்.

“உங்கள் எரிச்சல் எனக்குப் புரிகிறது. ..வாருங்கள் சூடாகக் காபி சாப்பிடலாம் …சரியாக ஒன்பதரை மணிக்கு ஜீப் வரும். இப்பத்தான் என் அப்பாவின் சினேகிதருக்குப் போன் பண்ணினேன்.”

“ஓ, முதுமலைக்கா?”

“ஆமாம். ஜீப்பை ஒன்பதரை மணிக்கு அனுப்பறேன்னு சொன்னார்.”

கோபி பேசாமல் அவளுடன் நடந்தான். டைனிங் ஹாலில் யாருமே இல்லை. காப்பியை அருந்திக் கொண்டிருக்கையில், ரிசப்ஷனில் இருக்கும் குமாஸ்தா திடீரென்று கையில் ஒரு காகிதத்துடன் வந்தான்.

“மிஸ்டர் கோபி,” என்ற அவன் காகிதத்தை நீட்டினான்.

அதைக் கோபி வாங்கிப் படித்துக் கொண்டிருக்கையில், “ராத்திரி பத்தரை மணிக்கு ட்ரங்க் கால் வந்தது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பவேண்டாம் என்றார்கள். செய்தியை எழுதிக்கொள்ளச் சொன்னார்கள்,” என்றான் குமாஸ்தா.

“தாங்க்ஸ் . . காப்பி சாப்பீடுகிறீர்களா?”

“நோ தாங்ஸ்..நான் இப்ப தான் சாப்பிட்டேன்… வரேன்.”

வசு கோபியையே பார்த்தாள். குமாஸ்தா போன பின்பும் அந்தக் காகிதத்தை அவன் மீண்டும் மீண்டும் படிப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள்.

கோபி மூன்றாம் தடவையாகப் படித்து விட்டு, காகிதத்தை பாண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

காப்பியைக் குடித்த பின்; “போகலாமா?”” என்று கேட்டான்.

“ஓ” என்ற வசு, “என்ன மெஸேஜ்?” என்று கேட்டாள்.

“ஆபீஸிலிருந்து ஜெனரல் மானேஜர் கொடுத்திருக்கிறார்.”

மேற்கொண்டு அவன் விளக்கம் சொல்வான் என்று அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவன் எதுமே சொல்லவில்லை.

புரிந்துகொண்ட ரீதியில், “டிட் ஃபர் டாட்டா?” என்று கேட்டாள்.

“உனக்கு அப்படித் தோன்றினால் அது என் தப்பு இல்லை.” கோபி எழுந்தான்.

“மணி எட்டரை ஆயிட்டது. குளித்து டிபன் சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் ஜீப் வந்து விடும்.”

“முதுமலை டிரிப்பைக் கான்ஸல் பண்ண வேண்டும், வசு.”

“ஏன்.. எதுக்காக?” ஒரு கணம் அயர்ந்து போய்க் கேட்டாள்.

“நாம் இன்னிக்கே மெட்ராஸ் திரும்பறோம் வசு.. வேறு வழியில்லை.”

“ஏன்?”

“எனக்கு அஸிஸ்டண்ட் மானேஜரா பிரமோஷன் ஆகியிருக்கு. நாளைக்கே பதவியை ஒப்புக்கொள்ளப் போகிறேன்.”

“கங்கிராஜுலேஷன்ஸ். ஆனா ஏன் அவசரப்பட வேண்டும்?”

“முடியுமானால் உடனே வந்து சேர் என்று ஜெனரல் மானேஜர் சொல்லியிருக்கிறார்.”

“எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் இந்தக் கம்பெனியை உதறிவிட்டு அப்பாவின் கம்பெனிக்கு இன்னும் உயர்ந்த பதவிக்கு வரப் போகிறீர்கள். ஏன் வீணா மனசை அலட்டிக் கொண்டு அவசரப்படுகிறீர்கள்? ‘அடுத்த வாரம் வருகிறேன்,’ என்று தந்தி கொடுங்கள். வேண்டுமானால் நான் அப்பாவுக்குப் போன் பண்ணி, உங்க ஜெனரல் மானேஜரிடம் சொல்லச் சொல்லுகிறேன்.”

“தாங்க்ஸ்!” என்ற கோபி, “நீ நினைக்கிறது போல நான் அவ்வளவு எளிதாக எனக்கு எட்டு வருஷமா பிழைப்பு அளித்த கம்பெனியை உதறி எறிஞ்சுட்டுப் போய்விட முடியாது, வசு. இப்போ பிரமோஷன் வேறு கொடுத்திருக்கிறார்கள். என்னை மதித்து நடத்தும் கம்பெனியை நான் அவமதிக்க மாட்டேன்… என் ஜெனரல் மானேஜர் என் மேலே அபிமானம் வைத்திருக்கிறவர்,” என்றான்.

“அப்போ?”

“ஸாரி, வசு.. வீ ஹாவ் டு கான்ஸல் முதுமலை, அண்ட் வீ ஹாவ் டு ரிடர்ன் டு மெட்ராஸ்.”

“ஆனால் இன்னொரு தடவை ஹனிமூன் வருமா?”

“ஒரு அதிருஷ்டத்தை இன்னொரு அதிர்ஷ்டம் துரத்திவிட்டது.”


இருவரும் கோயமுத்தூரை அடைந்த போது மாலை மணி நான்கு.

கொச்சின் மெயிலில் சென்றால், காலை ஆறு மணிக்கே சென்னையை அடைந்து விடலாம் என்று நினைத்தான் கோபி.

”வசு, முதல்லே காரை உங்க கம்பெனி பிராஞ்ச்சிலே சேர்த்து விடுவோம்,” என்றான் அவன்.

“மணி நாலுதானே ஆறது? கார் நின்றதும் முதல்லே ஸ்டேஷனுக்குப் போய் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யலாம்..”

கோயமுத்தூர் ஸ்டேஷனில் இறங்கிய கோபி, பின் ஸீட்டிலிருந்த பெட்டிகளை எடுத்தான்.

“உங்க பெட்டியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றாள் வசு.

”ஏன், உன் பெட்டியை நான் தூக்கக்கூடாதா? பெண்டாட்டி பெட்டியைத் தூக்கினால் புருஷன் குறைந்து போய்விடுவானா என்ன?”

“இல்லை. உயர்த்துதான் போவார்,” என்று சொல்லிச் சிரித்த வசு, “நான் இன்னிக்கு மெட்ராஸ் வரலை,” என்றாள்.

“என்ன!” – கோபி திடுக்கிட்டான்.

“நீங்கள் போய் உங்கள் உதவி மானேஜர் பதவியை ஒப்புக் கொள்ளுங்கள்..நான் பொள்ளாச்சிக்குப் போறேன்.”

“பொள்ளாச்சிக்கா! எதற்கு?”

“இரண்டு மூன்று நாள் நித்யாவுடன் நிம்மதியா இருந்துட்டு வரேனே?”

அவன் முகம் கறுத்தது.

“இந்த எண்ணம் இப்பத்தான் தோன்றிற்று. இல்லே ஊட்டியிலிருந்து புறப்படறபோதே ஏற்பட்டதா, வசு?”

“எப்பத் தோணினா என்ன? நீங்கள் நிம்மதியாகப் போங்கள். நான் மெதுவாக வரேன். பிராஞ்ச் மானேஜர்கிட்டே சொல்லி, அப்பாவுக்கு ராத்திரியே போன் பண்ணச் சொல்றேன். கார்த்தாலே சென்ட்ரலுக்குக் கார் வரும்.”

“தேவையில்லை. உன் அப்பாவைத் தொந்தரவு செய்வானேன்? நான் ட்ரிப்ளிகேனுக்குப் போகிறேன்..”

“ஓட்டல்லேயா சாப்பிடப் போகிறீர்கள்?”

“எட்டு வருஷமா அங்கே தான் சாப்பிட்டேன்,” என்றான் அவன் காரமாக.

அவன் நடந்தான்.

அவள் காரை ஸ்டார்ட் செய்தாள்.

அத்தியாயம்-6

“பெண்ணே, பூஷா என்கிற தேவன் என் மூலமாக உன் கையைப் பிடித்து அக்னியின் அருகே அழைத்துச் செல்லுகிறான். ஓமங்கள் முடிந்த பின், அசுவினி தேவர்கள் உன்னை என் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். பிறகு, வீடு உன்னுடையது. நீயே அதற்கு எசமானி. அந்த பாக்கியத்தைப் பெற நீ என்னுடன் சேர்ந்து கர்மங்களைச் செய்வாயாக… ” – கல்யாணத்தில் மாப்பிள்ளை சொல்லும் பூஷா என்கிற மந்திரத்தின் அர்த்தம்.


கோயமுத்தூர் ரெயில் நிலையத்தினுள் செல்லும் கோபியை மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று உள் மனம் ஒரு வினாடி நினைத் தாலும் வசு தன்னையே அடக்கிக் கொண்டு பொள்ளாச்சியை நோக்கிக் காரைச் செலுத்தலானாள்.

அவள் எத்தனை ஆர்வத்துடன், எவ்வளவு ஆசையுடன் முதுமலைக் காடுகளைப் பார்க்சுக் காத்திருந்தாள்! கோபியும் அவளும் ஒரே யானை மீது உட்கார்ந்து, கோரைப் புல் புதர்களிடையே பவனிவர அவள் எப்படித் துடித்துக்கொண்டிருந்தாள்! யானை மேல் இருந்தபடியே மான்களையும் வித விதமான பறவைக் கூட்டங்களையும் காட்டு எருமைகளையும் பார்க்கலாம் என்றிருந்த அவளுடைய ஆசையை அவன் ஒரே அடியாக முறியடித்துவிட்டான். ஒருவர் உடலை ஒருவர் அறிந்துகொள்ள மட்டும்தானா தேனிலவு? அவன் அவளுடைய மனத்தைப் புரிந்து கொள்ளாமல் தேனிலவின் சுருதியையே கலைத்துவிட்டான்.

கோபி மேல் இதுவரையில் அவள் உணர்ந்தறியாத ஒரு கோபமும் ஆத்திரமும் அவளுள் தோன்றின.

மணிக்கூண்டு எதிர்ப்படவே வசு மணியைப் பார்த்தாள், பன்னிரண்டில் முன் நின்றுபோயிருந்தது. தன் கைக் கடியாரத்தை நோக்கினாள். சரியாக ஐந்து. இந்த வேகத்தில் போனால் இருபத்தாறு மைல்களைக் கடக்க ஒன்றரை மணி நேரம் ஆகும் என்று மனம் கணக்குப் போட்டது. ஒரு மணி நேரத்தில் போய்விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, அக்ஸலரேடரை அழுத்தினாள்.

என்ன இருந்தாலும் கோபிக்குப் பண்பாடு போதாது என்று அவளுக்குத் தோன்றிற்று. நித்யாவிடமிருந்து அவளுக்கு வந்த கடிதத்தில் அவனைச் சிறிதே கலக்கிய ஒரு செய்தி இருந்ததால்தான் கடிதத்தைப் பற்றிக் கோபியிடம் அவள் ஏதும் சொல்லவில்லை. அவனிடம் அவள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று அவன் எப்படி எதிர்பார்க்கலாம்? என்னதான் கணவன் மனைவி என்றாலும், ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை தனி தானே? அதைப் புரிந்து கொள்ளாமல், பிரமோஷன் பற்றி அவனுக்கு வந்த டெலிபோன் செய்தியை அவன் வேண்டுமென்றே அவனிடம் சொல்லவில்லை.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, அவன் திருவல்லிக்கேணி அறைக்கே போகப் போவதாகக் கூறியது, அவளை அவன் வேண்டுமென்றே அவமானப் படுத்தச் சொன்னது போலத் தோன்றியது. எட்டு வருடங்களாக ஓட்டலில் சாப்பிட்டதை ஒரு பெருமையாக, ஐம்பமாக ஏன் குறிப்பிட வேண்டும்? அவள் வீட்டுச் சாப்பாட்டைவிட, இரண்டு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கும்பலோடு கும்பலாக உட் கார்த்து சாப்பிடும் சாப்பாடு உசத்தியா? அவளுடைய அம்மாவும் அப்பாவும் அவ்வளவு பெரிய பங்களாவில் இருக்கும்போது கோபி திருவல்லிக்கேணி அறைக்குப் போவது விவேகமா? நாகரிகமா?

திடீரென்று குளிர்ந்த காற்று அவள் கன்னத்தில் அறைந்தது. சாலையில் ஒரு பெரிய மஞ்சள் பலகையில், ‘கிணத்துக்கிடவு’ என்ற பெயர் எழுதியிருந்ததை அவள் கவனித்தாள்.

பாதையில் ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. எதிரே ஒரு பாரவண்டி மெதுவாக வரவே, காரை பஸ்ஸுக்குப் பின்னால் நிறுத்தினாள். பஸ் அருகே ஒருவன் ஒரு கூடையுடன் ‘சுண்டல்’ ‘சுண்டல்’ என்று கத்திக் கொண்டிருந்தான்.

சுண்டலின் விசேஷத்தைப் பரிட்சை பார்க்க ஒரு நிமிஷம் சபலம் தோன்றினாலும், மறு நிமிடமே, சுண்டல் விற்கிறவனின் அழுக்கு வேட்டியும் கூடையின் அசிங்கமான தோற்றமும் அதை விரட்டிவிட்டன. அதே நேரம் நித்யாவின் ஞாபகம் வந்தது. அவள் காரில் மட்டும் இருந்திருந்தால் உடனே நிறுத்தச்சொல்லி ஒரு ரூபாய்க்கேனும் கண்டல் வாங்கினால்தான் ஆயிற்று என்று அடம் பிடித்திருக்க மாட்டாளா?

வசு பெருமூச்சு விட்டாள். நித்யா ஊட்டிக்கு எழுதியிருந்த கடிதம் அவளுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது. அதில் அவளைக் கலக்கிய வரிகள் மீண்டும் கண்முன் தோன்றின.

“…என் பாட்டி எனக்குத் தன் சொத்தையெல்லாம் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாள் என்று அன்னிக்கே சொன்னேன் இல்லியா? இன்னிக்கு ஒரு கிரயப் பத்திரத்தைப் படித்துப் பார்த்தேன். இருபத்தெட்டு வருஷம் முன்னாலே பதிவான டாக்குமெண்ட். அதிலே மரக்கடை குமாஸ்தா ஒருவர் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்தார், அதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அயர்ந்து போய் விட் டேன். ஏன் தெரியுமா? அவர் பெயர் கே.ஆர்.சிவராமன்! எவ்வளவு வேடிக்கையான கோயின்ஸிடன்ஸ் பார்த்தாயா? அதிருக்கட்டும், ஹனிமூனெல்லாம் எப்படி இருக்கிறது? அனுபவி, ராணி, அனுபவி…”

அவள் அப்பா ஒரு முன்னாள் மரக்கடை குமாஸ்தாவா! கடிதத்தை முதலில் படித்தபோது அதிர்ந்துபோனாள் வசு. பிறகு அவளுக்கே சிரிப்பு வந்தது. உலகத்தில் ஒரே ஒரு கே.ஆர்.சிவராமன்தான் இருக்க முடியுமா என்ன? இதே பெயர், இதே இனிஷியல் எத்தனையோ பேர்களுக்கு இல்லையா? ஆனால் உள்ளுக்குள் ஒரு சந்தேகம் அடிக்கொருதரம் தலை காட்டிக் கொண்டே இருந்தது. நித்யா குறிப்பிட்ட பத்திரத்தில் அந்தக் கையெழுத்தைப் பார்த்தாலொழிய அது தீர வழியில்லை.


பொள்ளாச்சியில், பாலக்காடு ரோடில் வலதுபுறமாக இருக்கும் மகாலிங்கபுரத்தில் இருந்த நித்யாவின் தாத்தா வீடு, சென்னை அண்ணா நகர், அசோக் நகர் போல பெரிதாக இல்லாமலிருந்தாலும், காலனி நேர்த்தியாக இருந்தது.

“யார் இது? வசுவா!” என்றாள் நித்யா. “என்னடி பூதம் மாதிரி இப்படித் திடீர்னு வந்து என்னைக் கலக்கறே…வா வா ….தாத்தா! தாத்தா! நான் அடிக்கடி சொல்லுவேனே, அவள் கந்தர்வப் பெண் மாதிரி பூமியிலே குதிச்சு வந்து நிக்கிறாள்….”

உள்ளே ஓட முயன்ற நித்யாவை வசு பிடித்து நிறுத்தினாள். “ஏண்டி பறக்கறே..? பேசாம இரு.”

“அது சரி. எங்கே உன் அவர்? வாசல்லேயே நிறுத்தி வைச்சிருக்கியா? உள்ளே அழைச்சிட்டு வாடீ! ஆமாம், ஏன் அதற்குள் வந்துவிட்டீர்கள்? ஊட்டி ஒத்துக்கலையா? குளிர்னா உங்க ரெண்டு பேருக்கும் குஷியா இருக்கணுமே…போர்வைகூட வேண்டாம்..”

“பேசாம இருடீ மண்டு. உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”

“அப்போ அவர்? ஊட்டியிலேயே அம்போன்னு விட்டுவிட்டியா?”

“அவர் மெட்ராஸ் போயாச்சு.”

“ஏண்டி? ஏன்? அவர் மட்டும் மெட்ராஸுக்குத் தனியா போயிட்டார்னா என்னடி காரணம்? சண்டையா? யுத்தத்துக்கு முன்னாலே – அதாவது குடும்ப வாழ்க்கைக்கு முன்னாலே நிலவுகிற போர் ஓய்வு காலம் தானே ஹனிமூன். ஹனிமூன்லேயே யுத்தம் ஆரம்பிச்சுட்டுதா…”

“ஏண்டி வளவனன்னு பொரிஞ்சு தன்றே…அவருக்கு ஆபீஸிலிருந்து அவசரமா ஒரு மெஸேஜ் வந்தது. பிரமோஷனாகியிருக்கு… அவர் உடனே புறப்பட்டுப் போகணும்னு சொன்னார். அங்கே அவர் ஆபீஸுக்குப் போனா, நான் மத்தியானம் பூரா மொட்டு மொட்டென்று உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிக்கணும். சரி, உன்னோடுதான் இரண்டு மூணு நாள் இருக்கலாமேன்னு இங்கே வந்தேன். முதல்லே எனக்கு ஒரு கப் காபி கொடு. போ-“

“இருடி..ஒரே நிமிஷம்.” நித்யா ஓடினாள்.

நித்யா கொண்டு வந்து கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டிருக்கையில்தான், நித்யாவுக்குப் பின்னால் ஒரு பெரியவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான் வசு. உடனே எழுந்து நின்றாள்.

“தாத்தா, இவள்தான் என் டியரஸ்ட் ஃபிரண்ட் வசுதா. இவளுக்குக் கூடக் கல்யாணமாயிட்டுது தாத்தா!” நித்யா கேலியுடன் குழைந்தாள்.

“உனக்கும் ஆகும், கவலைப்படாதே!”என்ற அவர், “உட்கார்ந்து சாப்பிடும்மா!” என்றார்.

பிறகு சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அது நித்யாவுக்குப் பொறுக்கவில்லை.

“பிரண்ட் வந்திருக்கிறாளே. அவளும் பேத்தியும் பேசிக் கொண்டிருக்கட்டும், நாம் கீதைக்குப்போவோம்னு தோணாம, என்ன தாத்தா..” என்று சிணுங்கினாள்.

“பார்த்தாயா அம்மா, இவளுக்குப் பாட்டியின் சொத்து வந்திருக்காம், என்னையே துரத்தறாள். நாளைக்கு என்னுடைய சொத்தும் வந்துவிட்டால் இன்னும் என்னென்ன செய்வாளோ!” என்று சிரித்துக் கொண்டே அவர் நகர்ந்தார்.

அவர் சென்ற பிறகு வசுவும் நித்யாவும் அரட்டை அடிக்க நிறைய அவகாசம் கிடைத்தது.

பேச்சோடு பேச்சாக வசு கேட்டு வைத்தாள்.

“அந்தப் பழைய பத்திரத்தைக் கொஞ்சம் காட்டேன். கோத்துக் கோத்து, நுணுக்கி நுணுக்கி எழுதியிருப்பார்கள் இல்லையா..”

”அது எதுக்கு இப்போ?”

“சும்மா பார்க்கத்தான்.”

“என் சொத்தின் மதிப்பு என்னன்னு தெரிஞ்சுக்க ஏண்டி இப்படி ஒரு யத்தனம் பண்றே, வசு!” என்று சிரித்த நித்யா, “வா, உன்னை அந்தக் கிட்டு மாமாகிட்டே மாட்டி விடறேன். பத்திரம் அவர் கிட்டேதான் இருக்கிறது. இன்னிக்கு சர்க்கார்லே எது நல்லது செய்தாலும், ‘அதை அன்னிக்கே நான் சொன்னேன்’ என்பார். வா, போவோம்.”

“சிரமமானால் வேண்டாம், நித்யா!” என்றாள் வசு. தனக்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டிக் கொள்ள அளவுக்கு மீறி மனம் துடித்தது.

“சரித்தான் வாடீ!”, சாட்சிக் கையெழுத்து விஷயத்தை நித்யா அறவே மறந்துவிட்டிருந்தாள். அது வசுவுக்கு ஒரு வகையில் நிம்மதியைக் கொடுத்தது.

கிருஷ்ணமூர்த்தி தம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நித்யாவைப் பார்த்த அவர், ”வாம்மா, மெட்ராஸ் கேர்ள்!” என்று சொல்லி எழுந்தார்.

“இவள் என் ஃபிரண்ட், வசுதான்னு பேரு..மெட்ராஸ்லேருந்து வந்திருக்கிறாள்.”

“பார்த்தாலே தெரிகிறதே! வெரிகுட்.. என் பெயர் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி, வயசு அறுபத்திரண்டு. என் பிள்ளையாண்டான் நான் இல்லாமலே என் சஷ்டி யப்த பூர்த்தியை டில்லியில் கொண்டாடினதாக லெட்டர் போட்டான். அந்த லெட்டரை நான் கண்ணில் ஒத்திக் கொண்டு கிழிச்சுப் போட்டேன். நாப்பது வருஷமா வித்து, டாகுமெண்ட் எழுதிக் கொடுத்து, வயத்தைக் கட்டி வாயைக் கட்டி அவனைப் படிக்க வைச்சு ஆளாக்கினேன். பெரிய இடத்திலே கல்யாணம் ஆச்சு. அவ்வளவுதான். கத்திரிக்காய் விக்கறவனும் ஸ்டாம்பு விக்கறவனும் ஓண்ணுன்னு என்னை உதாசீனப்படுத்தறான். போகட் டும், என்னை இவன் அலட்சியப் படுத்தினால், இவனுடைய பிள்ளை இவனை அலட்சியப்படுத்த மாட்டானோ? ஆமாம், நான் என்னைப்பத்தியே பேசிட்டிருக்கேனே… என்னம்மா செய்திட்டிருக்கிறே மெட்ராஸ்லே?” என்றார் கிட்டு மாமா.

“அவளுக்கு இப்பத்தான் கல்யாணமாச்சு…ஏன் மாமா, நகல் எடுத்தாச்சா?”

“எடுத்து மூணு மணி நேரமாகிறது. நானே கொண்டு வரணும்னு இருந்தேன். பரம்பிக்குளம் என்ஜீனியர் சுந்தரம் வந்தான். இங்கே ஒரு வீடு வாங்கறானாம். இரு, கொண்டு வரேன்…”

அவர் உள்ளே போனதும், “இவர் பிள்ளையைப்பற்றி யார் கேட்டார்கள்? இப்படித்தான், சொந்தக்காரர்களைப் பற்றி ஏதாவது தூஷித்துக் கொண்டே இருப்பார்… இல்லாமல் போனா, பரம்பிக்குளம், அலியார் திட்டத்தைப்பற்றி ஆரம்பித்து ஓயாம போர் அடிப்பார்,” என்றாள் நித்யா.

“யார் யாரை அடிக்கிறா?” என்று கேட்டுக் கொண்டே வந்த கிட்டு மாமா டாகுமெண்ட்டைத் தந்தார்.

அதை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

பத்திரத்தை வசுவிடம் கொடுத்துவிட்டு நித்யா உள்ளே போனதும், வசு படபடக்கும் உள்ளத்துடன் கடைசிப் பக்கத்துக்குத் தாவினாள்.

இரண்டு சாட்சிகளில் ஒருவர் கே.ஆர்.சிவராமன், கணியூர் ராமனாதனுடைய மகன் என்றிருந்தது. கையெழுத்து அவளுடைய அப்பாவின் கையெழுத்துத்தான். சந்தேகமேயில்லை. விலாசத்தைப் பார்த்தாள்.

‘குமாஸ்தா, ஆனைமலை மரக்கடை, பொள்ளாச்சி’, என்று இருந்தது.

– தொடரும்…

– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *