சிறைப்பட்டிருத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 25, 2025
பார்வையிட்டோர்: 143 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவில் ஒரு சின்னச் சத்தங் கேட்டாலும் நெஞ்சு விறைக்கத் தொடங்கியிடும். இப்ப இருக்கிற நிலமையில பயப்பிடாமலுக்கு இருக்கேலுமே? என்னவும் நடக்கலாம். ஆர் கேக்கிறது? ஒவ்வொரு கட்டத்திலயும் தப்பி வந்து கடேசியா ஏதோவொரு கட்டத்துக்குள்ள சிக்கி சீரழிஞ்சிடுவனோ? ஆருக்குத் தெரியும். எந்தப்பக்கந் திரும்பினாலும் தடுப்புக்கள். அந்தத் தடுப்புக்களுக்குள்ளாலதான் திரிய விதிக்கப்பட்டவளாக நான்! எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமைப்பட்டுத்தான் சொல்லுவா ‘எண்பத்தேழாமாண்டில சனமெல்லாம் இடம் பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந்தனாங்கள். அவங்களால எந்தக் கரைச்சலுமில்லை. அவங்கள் தங்கடைபாடு நாங்கள் எங்கடைபாடு’. அம்மா இஞ்சைவாணை! அப்ப உன்ர பிள்ளைக்கென்ன வயது? ஆறு வயதும் முடியேல்ல. சின்னப்பெட்டை. பெரிசாத் தோற்றமில்லை. இப்ப உன்ர பிள்ளைக்கு என்ன வயது? இருபத்தைஞ்சு நடக்குது. பாக்கிற சனமெல்லாம் உன்ரை மகள் ஒரு வாகனம் மாதிரி வந்திட்டாள் என்கினம். மற்றது அப்ப இருந்த அவங்கள் மாதிரியில்லை இப்ப இருக்கிற இவங்கள். பாக்கிற பார்வையிலயே பிடிச்சு திண்டுடுவாங்கள் போல இருக்கு. வெயிலேறத் தொடங்கினோன்ன பூவரசுகளில் இருந்து இறங்கி ஊர்ந்து திரியிற மசுக்குட்டிகள் கணக்காக இப்ப எங்க பாத்தாலும் இவங்கள்தான். இவங்களின்ரை பார்வையில் இருந்து தப்பேலுமே?!…. ‘ஒரு நாளைக்கு முறையா அகப்பிடு. அப்ப பாரன் என்ன நடக்குமெண்டு’ எண்டு சொல்லுறமாதிரியிருக்கு இவங்களின்ரை பார்வையள். இவங்களைக் கடந்து சைக்கிளில போகேக்க நெஞ்சு பக் பக்கெண்டிருக்கும். ஏதாவது காது கூசிற மாதிரி என்ர அவயவங்களைக் குறிச்சுக் கொச்சைத்தனமாச் சொல்லுறதையே வழக்கமாக வைச்சிருக்கிறாங்கள். நான் செவிடுமாதிரி குனிஞ்ச தலை நிமிராமல் போகவேண்டியதுதான். இதைத் தவிர பாதுகாப்பான வேறை வழியேதுமிருக்கோ?! அப்பா, அண்ணா எண்டு ஆரிட்டையும் சொல்லேலுமே? சொன்னாலும் அவையென்ன செய்யிறது? இவங்கடை கையில படைக்கலங் களிருக்கு. எதுகும் செய்வாங்கள். அதால என்ன நடந்தாலும் பேசாமல் பறையாமல் குனிஞ்ச தலை நிமிராமல் திரிய வேண்டியதுதான். கெம்பஸ் பெட்டையள் எண்டால் இவங்கள் வித்தியாசமாகத் தான் பாப்பாங்கள், ஏதோ நாங்கள் வெடி பொருட்களை கொண்டுதிரியிறம் என்கிறமாதிரி. லெக்சர்சுக்கு றூமிலயிருந்து வெளிக்கிட்டு தனியப்போறத நினைச்சால் பயமாயிருக்கு. நானும் சசியும் இருக்கிற றூமில இருந்து கூப்பிடு தூரந்தான் இவங்கடை முகாமிருக்கு. எப்பிடியும் அதைத் தாண்டித்தான் போக வேண்யிருக்கு. உட்பாதையளெண்டு எதுகுமில்ல. நானும் சசியும் சேர்ந்துதான் லெக்சர்சுக்குப் போறம். நாங்கள் போகேக்க இவங்கள் காத்து நிண்டு சீக்காயடிப்பாங்கள். அல்லாட்டி ஏதும் காது கூசுகிறமாதிரி நொட்டை சொல்லு றாங்கள். நாங்கள் குனிஞ்ச தலை நிமிராமல்தான் போய்வாறம். சசி றூமில நிக்காத நாளில் நான் லெக்சர்சுக்கு போகன்.ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப்போகுதெண்டு உள் மனம் சொல்லுது. இப்ப பலாலி றோட்டால சைக்கிள்ள போகேக்க ஒரு மயானத்துக்குள்ளால போற மாதிரிக்கிடக்கு. முந்தியெண்டா றோட் கலகலப்பாயிருக்கும் எத்தினை வாகனம் போய்வரும். புதிசு புதிசாய் கடையள் திறந்து இரவு பகலாய் ஓயாமல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். இப்ப பாத்தால் எல்லாக் கடையளும் அநேகமாப் பூட்டியிருக்கு. ஒண்டு ரண்டு சைக்கிள் திருத்திற கடையளத் தவிர. இவங்கட வாகனங்கள்தான் வலு வேகமாய் போய் வருகுது. இப்ப கொஞ்ச நாளா ஒரு வழமை என்னெண்டா இவங்கட வாகனத் தொடரணி போய்வாறதுக்காக றோட்டில சனங்களை மறிச்சு வைக்கிறது. மத்தியானம் பன்ரண்டு மணிக்கும் பின்னேரம் நாலுமணிக்கும் றோட்டில அடிக்கொருதனா நிக்கறவங்களில ஒருத்தன் விசில் ஊதுவான். அதுக்குப் பிறகு ஆரும் அசையேலாது. நிண்ட இடத்தில் நிக்கவேண்டியதுதான். சில நேரம் ஒருமணித்தியாலத்துக்குமேல நிக்க வேண்டிவரும். இவங்கட வாகனத் தொடரணி போய் முடிஞ்சாப்போலதான் சனம் போகலாம். இதால நானும் சசியும் கன லெக்சேர்ஸைத் தவறிவிட்டிருப்பம். என்ன செய்யிறது? எது நடந்தாலும் பேசாமலிருக்க வேண்டியதுதான். லெக்சேர்சும் முந்தின மாதிரி கலகலப்பாயில்லை. ஏதோ செத்த வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப் போய் வாற மாதிரியிருக்கு. லெக்சரர்மார் தொடக்கம் பொடியள், பெட்டையள் எண்டு எல்லாரின்ரை முகங்களும் இறுகிப்போய் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கவும் பயந்து…..இப்பிடியே காலங்கழியுது. சிலநேரம் சசி வடமராட்சியில இருக்கிற தன்ர வீட்டுக்குப் போகிடுவாள். றூமில நான்தான் தனிய இருக்க வேண்டிவரும். வீட்டுக்கார அன்ரி இருக்கிறாதான். அவ வேளைக்கு லைற்றை நூத்திட்டு படுத்திடுவா. படுக்கிறதுக்கு முதல் ஒருக்கா றூமை எட்டிப்பார்த்து,”பிள்ளை கெதியா லைற் ‘ஓவ்’ பண்ணிப்போட்டுப் படும். படிக்கிறதெண்டா காலமை எழும்பிப்படியும். நான் படுக்கப்போறன்” எண்டிட்டுப் போகிடுவா. மனுசி படுத்ததுதான் தாமதம் குறட்டை விடத் தொடங்கியிடும். அன்ரிக்கென்ன கவலை. வயதும் அறுவதைத் தாண்டியிடுத்து. பிள்ளையள் மூண்டும் வெளிநாட்டில். புருஷன்காரன்ர பென்சனும் கிடைக்குது. அதுக்குள்ளை எங்கடை வாடகைக் காசும். அவ படுத்தோண்ண குறட்டை விடுகிறதுக்கு என்னக்குறை? இது நான் தனிய றூமுக்குள்ள முடங்கினபடியே யன்னலையும் கதவையும் பூட்டியிட்டு இருள் விழுங்கின அறைக்குள்ள புழுங்கி அவிய கண்ணோடு கண் மூடேலாமல் பயந்து செத்தொண்டிருப்பன். வெளியில ஆரோ கனபேர் நடக்கிறமாதியிருக்கும். நாயள் வலு மோசமாக் குலைக்கும். முத்தத்து பிலா உதிர்க்கிற சருகுகள் நொருங்குகிற மாதிரியும் சத்தம் கேக்கும். இண்டைக்கு நான் துலையப்போறன் எண்டு நினைப்பன். என்ன நடந்தாலும் ஆருக்கும் தெரியாது. கதவு தட்டுற சத்தம் ஏதும் கேக்குதோ எண்டு காதைத் தீட்டிக்கொண்டு நெஞ்சுக்குள் தண்ணியில்லாமல் உடல் விறைக்க அங்கால இங்கால அசையவும் பயந்து மல்லாந்து கிடப்பன். இரவு எனக்கு பாதகமாக நீண்டுகொண்டிருக்கும். வெளியில கேக்கிற சின்னச்சத்தமும் பீதியைக் கிளப்பும். பிலாமரத்தால ஏறி ஓட்டில நடந்து திரிய பூனை. ரீய்ய்ய… எண்ட சத்தத்தோட தொடர்ந்திரைய நிலக் கறையான். எங்கையோ இருந்து தேக்கம் பழங்களைக் கவ்விக் கொணந்து ஓட்டுக்குமேல விழுத்தியிட்டு படக் படக்கெண்டு செட்டையடிச்சொண்டு போற வவ்வால். கிடைக்கிறதுக்கிதமா முத்தத்து மண்ணை வறுகிற அன்ரியின்ர செல்லப்பிராணி ‘ரொமி’நாய். எல்லாம் எளிய மூதேசிகள். திட்டம் போட்டுத்தாக்கிற விரோதியளப் போல இருள் விழுங்கியிருக்கிற இரவின்ர கனத்தைக் கூட்டி என்னை வெருட்டிச் சாக்காட்டிக் கொண்டி ருக்குங்கள். ஒரு கோழித்தூக்கம் மாதிரித்தான் என்ற நித்திரை. இடையில கெட்ட கனாக்களும் வரும். கண் முழிச்சா நான் ஆஸ்பத்திரிப் பிரேத அறைக்குள் கிடக்கிற மாதிரியிருக்கும். நெஞ்சு வேகமா அடிச்சுக் கொண்டிருக்கும். போதாக்குறைக்கு அன்றி விடுற குறட்டைச் சத்தம் இன்னும் பயத்தைக் கிளப்பும். றோட்டில் வாகனங்கள் இரையிற சத்தம் கேக்கும். என்ர உடம்பு தன்பாட்டில விறைக்கத் தொடங்கியிடும். பிறகு பாத்தா வாகனங்கள் வீட்டைநோக்கி வாற மாதிரியிருக்கும். இனியென்ன அவங்கள் வந்து கதவைத் தட்டப்போறாங்கள். ஐசியைப்பாத்திட்டு ‘நீ வன்னியில இருந்தா வந்தனி? உன்னில் எங்களுக்கு சந்தேகம் வலுக்குது. உன்னை விசாரிக்கோணும். கெதியா வா! என்பாங்கள். போகவேண்டியதுதான். நடந்தது ஆருக்குத் தெரியும். நான் துலைஞ்சு போகிடுவன். பிறகு பேப்பரில நியூஸ் வரும்- என்னைக் காணேல்லையெண்டு. வரிக்கு வரி கடிதத்தில பிள்ளை கவனம்! பிள்ளை கவனம் எண்டு எழுதுற அம்மா தவிச்சுப்போவா. எதுக்கும் அன்ரியை எழுப்புவோமா? அப்பிடி நினைச்சாலும் தொண்டைக்குள்ளால சத்தம் வெளிக்கிடாது. இப்பிடியே கிடந்து துலைய வேண்டியதுதான். எடியே! சசி! உனக்கினி வைதேகி எண்டொரு சிநேகிதி இல்லையடி. அவள் துலையப போறாள்.நடக்கப்போற அசம்பாவிதம் உனக்குத் தெரியாது. நீ உன்ரை அம்மாவோட நிம்மதியா உறங்கிக் கொண்டிருக்காய்! எனக்கு முடிவு நெருங்கிக்கொண்டிருக்கு…. 

நான் தனிச்சுப்போய் ஒடுங்குகிற இரவுகளில் இப்பிடித்தான் எப்பவும் தவிர்க்கேலாமல் செத்துக் கொண்டிருக்கிறன். பகல் தொடங்கினால் எந்தக் கணத்தில என்ன நடக்குமோ? எண்டு மனம் தவிக்கத் தொடங்கியிடும். எல்லாம் உலரத் தொடங்கியிடும். வெக்கை தோலைக் கருக்கத் தொடங்கும். ஒரு சொட்டு மழை வந்து இந்த இறுக்கத்தைக் குலைக்காதா? எண்டு மனம் ஏங்கும். மழை வாறதுக்கான எந்த அறிகுறியும் தென்படாமலிருக்கு. ஹர்த்தால், கடையடைப்பு நாள்களில பகல் முழுக்க றூமுக்குள்ளதான் ஒடுங்க வேண்டியிருக்கும். உடம்பெல்லாம் வேர்த்தொழுக வெறுந்தரையில மல்லாந்து கிடக்க வேண்டியதுதான். எதும் நோட்சை எடுத்துப் படிக்கிறதும் ஏலாது. மனதில எப்பிடிப் பதியும்? கண்கள் எழுத்துக்களில் தாவிக்கொண்டிருக்க மனதில பயந்தருகிற காட்சியள் ஓடிக்கொண்டிருக்கும். முகத்தைக் கறுப்புத் துணியால மறைச்சுக்கட்டிக்கொண்டு நிக்கிற அவங்கட உருவங்கள் அடிக்கடி வரும். வெறிபிடிச்சு அலையிற நாயளாக அவங்கள் சனத்தை வெட்டியும், சுட்டும் கருக்கிக்கொண்டிருப்பாங்கள். சனங்கள் எல்லாம் அவங்களால அடிச்சு நொருக்கப் படவும், சுட்டுக் கொல்லப்படவும் பிறந்ததுகள் மாதிரி தலையைக் குனிஞ்சு கொண்டு நிக்குங்கள். 

கொஞ்ச நாளைக்கு முன்னம் மதியந் திரும்பினாப்போல நானும் சசியும் லெக்சர்ஸ் முடிஞ்சு வாறம். அண்டைக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து அவங்களில் இரண்டு பேர் செத்திட்டாங்கள். பலாலி றோட்டால் வந்த ஒரு பஸ்சை மறிச்சு இளந்தாரியன இறக்கி கேபிள் வயறுகளாலையும், துவக்குச் சோங்குகளாலையும் நாலைஞ்சு பேர் வெறிபிடிச்ச நாயள் மாதிரி மாறி மாறி அடிச்சுத் துவைச்சுக்கொண்டிருந்தாங்கள். அப்பத்தான் நான் முதல் முதலா அவங்கள் அடிச்சுத் துவைக்கிறதைப் பாத்திருக்கிறன். இப்பிடித்தான் என்னையும் சசியையும் போல பெட்டையள் தனியப்போய் அகப்பட்டால் சட்டையளக் கீலங் கீலமாக் கிழிச்சு வாயால சொல்லேலாத வேலையள் எல்லாம் செய்வாங்கள் எண்டு நினைச்சோண்ண எனக்கெண்டால் தலை விறைக்கத் தொடங்கியிடுத்து. ஒருமாதிரி தப்பித் தவறி றூமுக்கு வந்து சேந்தாப் போலயும் எனக்கு உடம்பு நடுங்கிக் கொண்டிருந்துது. அண்டைக்கு இராமுழுக்க அவங்களட்ட நானும் சசியும் இன்னும் சில பெட்டையளும் தனிய அகப்படுறதும் அவங்கள் எங்களைக் குழறக் குழற இழுத்தொண்டு போய் சட்டயளக் கிழிச்செறிஞ்சிட்டு சின்னாபின்னப் படுத்திறதுமா ஏதோ கனவெல்லாம் வந்து நான் படுக்கையில குழறியிட்டன். அடுத்தநாள் ‘சசி என்னடி இரவிரவாக் கத்திக்கொண்டிருந்தாய்’ எண்டு விழுந்து விழுந்து சிரிச்சாள். எனக்கு உண்மையில கோபந்தான் வந்தது. ‘பேய்ச்சி! இன்னும் நிலமை விளங்காமல் செல்லங் கொட்டுறாள் எண்டு. இவளமாதிரித்தான் இங்கை கன பெட்டையளுக்கு நிலமை விளங்கிறதில்ல. நாளுக்குநாள் நிலமை மோசமாகிக் கொண்டு வருது. இனிமேல் பெண்ணாப் பிறந்தனாங்கள் என்ன செய்யப்போறம்? எண்ட அச்சத்துக்குரிய பெரிய கேள்வியொண்டிருக்கு. ஆரிட்டையும் இந்தக் கேள்விக்கு விடையில்லை. திறந்த வெளியில திரியிற செம்மறியாடுகள் மாதிரித்தான் எங்கடை நிலை. ஆரும் குளிருக்கு போர்க்க எங்கடை மயிரைக் கத்தரிக்கலாம் அல்லாட்டில் இறைச்சிக்காக எங்களைக் கொல்லலாம். நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமலுக்குத் தலையைக் குனிஞ்சு கொண்டு திரிவம். அவ்வளவுதான். நான் அடிக்கடி நினைப்பன் இந்த கம்பஸ் படிப்பை விட்டுட்டு ஊரில போய் இருப்பமெண்டு. பிறகு மூண்டு வருசமாக் கனக்கக் காசு செலவழிச்சாச்சு. இன்னும் ஒரு வருசங்கிடக்கு. பல்லைக்கடிச்சொண்டு பேசாமல் இருப்பம் எண்ட முடிவுக்குத்தான் வாறன். என்ன செய்யிறது? எங்கை சண்டை தொடங்கினாலும் எங்களைப்போல பொம்பிளையளுக்குத்தான் ஆபத்துக் காத்திருக்கும். ஆக்கிரமிக்கிறவங்களின்ரை மிருகத்தனமாக உணர்ச்சிகளுக்கு இரையாகிறதெல்லாம் நாங்கள்தான். அவங்கள் மாமிசத்தை நுகர்ந்த நாயள் கணக்காக அலைஞ்சு திரிவாங்கள். எப்ப சந்தர்ப்பம் வாய்க்குதோ அப்ப கடிச்சுக் குதறிப் போட்டுப் போவாங்கள். பேப்பருகளில் பெரிசாச் செய்தியள் வரும். பலர் கண்டனம் தெரிவிப்பினம். மருத்துவ அறிக்கையைப் பலரும் ஆவலோட எதிர்பார்த்திருப் பினம். பாலுறுப்புகளில நிகக்கீறலும், கடிகாயமும் அவதானிக்கப்பட்டிருக்கிறதா அறிக்கை வெளியாகும். வழக்குப்பதிவு நடந்து விசாரணையள் தொடங்கும். சாட்சியங்கள் பொதுவாக இருக்காது. ‘சம்பவத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை வழங்கப்படும்’ எண்டொரு கூற்று வெளியாகும். கொஞ்ச நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது. பிறகு அவங்கள் பழையபடி தங்கடை வேலையளத் தொடங்கியிருப்பாங்கள். காலப்போக்கில அறிக்கை வெளியிட விரும்புற சிலர் எழுதுவினம் ‘ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் இப்படி நடக்கத்தான் செய்யும். கொங்கோவைப் பாருங்கோ, வியட்நாமைப் பாருங்கோ, ஈராக்கைப் பாருங்கோ இதெல்லாம் தவிர்க்கேலாது’ எண்டு கனக்க ஆதாரங்கள் காட்டி விளக்குவினம். இதெல்லாத்தையும் நாங்கள் வாசிச்சுக் கொண்டு செம்மறியாடுகளாகத் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரியவேண்டியதுதான். என்னைப்போல பெட்டையளில அக்கறையுள்ள ஒரு கடவுள் இருந்தால் அவர் கனவில யெண்டாலும் வரோணும். வந்தால் நான் கேட்கிற வரம் இதுதான். ‘எங்களுக்கு மேல உண்மையில அக்கறையுள்ள கடவுளா நீர் இருந்தால் எங்களை உடன கிழவியாக்கிவிடும். இல்லாட்டில் பால்குடிக்குழந்தையள் ஆக்கிவிடும். உம்மில நாங்கள் விசுவாசமானவளுகளாக இருப்பம். இதுகும் முடியாட்டில் எங்களைக் கல்லாக்கிவிடும். அல்லது சாக்காட்டி விடும். உமக்கு புண்ணியங் கிடைக்கும். நாங்கள் நிம்மதியில்லாமல் எவ்வளவு காலத்துக்கு செத்துக் கொண்டிருக்கிறது? கடவுளே கருணை காட்டும்! 

– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.

– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

கார்த்திகா பாலசுந்தரம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த கார்த்திகா பாலசுந்தரம் 1977ல் பிறந்தவர். கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க நூலகத்தில் நூலகராகப் பணிபுரியும் இவர், நூலக விஞ்ஞானமாணி தரம் -1 தகைமை யுடையவர். சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் எழுதிவரும் கார்த்திகா, விபவி இளம் எழுத்தாளர்களுக்கான படைப்பாற்றல் போட்டியில் (2004) முதற்பரிசு, நமது ஈழநாடு இரண்டாவது ஆண்டு நிறைவுச் சிறுகதைப் போட்டியில் (2004) முதற்பரிசு பெற்றுள்ளார். காலச்சுவடு சஞ்சிகையில் இவரது கட்டுரை வெளிவந்துள்ளது. 

முகவரி :- ‘மூப்பியா வளவு’, விக்னேஸ்வரக் கல்லூரி வீதி, கரவெட்டி மேற்கு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *