கோடீஸ்வரப்பிரபுவுடன் ஒரு சந்திப்பு
(1994ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வாழ்க்கை என்பதன் அர்த்தம் என்ன? அது சொர்க்கமும் நரகமும் நிறைந்தது. இந்த நியதியை மாற்றுவதென்பது ஒரு போதும் சோஷலிஸ்டுகளோ முடியாத காரியம். அதனை மாற்றி அமைக்க முடியும் என அடித்து கூறுகிறார்கள். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?”
இப்போதுதான் நான் மனம் வெளுக்கச் சிரித்தேன்.
என் நக்கரித்த சிரிப்பின் அர்த்தத்தை நான் யூகித்தவாறு புரிந்து கொண்ட தோரணையில் அவர் முகபாவம் இருக்கவில்லை. இவர் ஓர் அப்பாவி என்று ஒருவேளை அவர் என்னைக் கணித்தாரோ என்று தோணிற்று. நல்லதொரு முட்டாள் தன்னை மேதாவி என்று அபிநயத்துக் கொண்டு அநாயாசமாகப் பார்ப்பது போல் நெற்றியைச் சுருக்கிக் கைப்புடங்கால் முகத்தை அழுத்திய அவர், சற்றும் எதிர்பாராத கேள்வியொன்றைத் தூக்கிப் போட்டார்.
“கலாசாராம் என்று நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?”
1
ஒரு பீடிகை.
நெடிய வரலாற்றினைக்கொண்ட உலகப் பிரச்சினைகளை மனசிருத்தியபோது நீண்டகாலமாக என்னோடு கலை இலக்கிய அரசியல் சம்பந்தமாகச் சர்சைப்படும் ஒரு மனிதர் என்னில் உருவகமானார். அவரோ ஒரு கோடீஸ்வரப் பிரபுவாக என் மனக்கண்ணில் தோன்றினார். அவ்வாறு தோன்றிய இந்தப் பிரபு நீண்ட காலமாகவே என்னோடு ஈடுபாடு கொண்டவர்போல் திகழ்ந்தார். இவர்தம் பராக்கிரமங்கள், வீரதீர சாகசங்கள், மதிநுட்பத் தர்க்கங்கள், கலை, இலக்கியம், அரசியல், விஞ்ஞானம், வரலாறு, சட்டம், உளவியல், பாலுறவு, மனோ தர்மம், மொழி, இலக்கணம் ஆகிய துறைகளில் மேதாவியாகத் திகழ்கிறார். அன்றாடம் அவர் பற்றி இப்படியான செய்திகளும் அடிபட்டவண்ணம் இருந்தன.
உலகத்தின் தலைவிதியை மாற்றி அமைக்கும் தகைமைசான்ற புரட்சிகரச் சித்தாந்த மேதைகளையெல்லாம் நினைவிற் கொணர்ந்தேன். அத்தகையவர்கள் போல் இவரும் ஒரு மேதையாக இருப்பாரோ என்று அலசிய போது மனசு நெருடிற்று.
அந்த அறிவுலக மேதைகள் புதிய உலகத்தைச் சிருஷ்டிப்பதற்காக மகத்தான தியாகங்கள் புரிந்தவர்கள் என்பதை அறிவேன். ஆனால், இந்த மனிதரோ கோடீஸ்வரப் பிரபுவாகவிருப்பதால், சகல சௌகரியங்களும் உடையவராக இருப்பாரென்றும், இவர்தம் உணவு, உடை, வாழ்விடம், வாழ்க்கை யாவும் இவரை ஒரு தந்தக் கோபுரவாசிபோல் ஆக்கியிருக்கும் என்றும் கற்பனை பண்ணியபோது இவரை ஒரு சாதாரண மனிதராகக் கணிக்கவும் மனசு மறுத்தது. இவர் ஓர் அமானுஷ்ய மனிதராக இருப்பரென்றும், இவர் தோற்றம் நமது புராண இதிகாசங்களில் வரும் பூதகணமாக இருக்குமென்று அனுமானித்தேன். இப்பேர்ப்பட்ட மனிதரை என்னால் அண்டமுடியுமா? என்ற ஐயம் என்னைக் குடைந்தது.
பல்லாண்டு காலமாக உலகத்தின் தலைவிதியைக் காலடியில் வைத்துச் சாம்ராஜ்ஜியம் நடத்திய ஆதிபத்தியத்தின் வாரிசான இந்தக் கோடீஸ்வரப் பிரபுவின் சொத்துக்கள், இருபது ஆண்டுகளாகப் பத்துக்கோடி மக்கள் சொகுசாக வாழப் போதுமானவை. இந்தக் கோடீஸ்வரப் பிரபு பதின்மூன்று தொழிற்சாலைகளுக்கு அதிபதியாக இருக்கிறாரெனவும், பதினாறு விமானங்கள் வாடகைக்கு விமானங்களில் மூன்றைத் தவிர ஏனைய விடப்பட்டவை என்றும், சுமார் அரைலட்சம் தொழிலாளர்கள் இவரின் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள் என்றும், அந்தரங்க ஆலோசகர்கள் பதின்மூன்றுபேர் தவிர, நவீன யந்திரசாதனங்களில் விற்பனைக்காக விசுவாசம் மிக்க தரகர்கள் எழுநூறு பேர் நாடுபூராவும் பரந்திருக்கிறார்கள் என்றும் அறியமுடிகிறது.
ஒரு மனிதனின் மூளையைத் திணறவைக்கும் இந்தச் ஒரு சொத்துடமைகளை இந்தப் பிரபு எப்படித்தான் ஆண்டனுபவிக்கின்றாரோ? என்று வியப்புத் தெரிவித்த ஒரு பத்திரிகையாளனுக்கு. முன்னேற வேண்டும்மென்ற ஆசையை விட அவற்றை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் தான் முக்கியமானது என்று ஒழிவு மறைவின்றிப் பதிலளித்திருக்கின்றார். ஆக, இந்தப் பிரபுவை மட்டுக்கட்ட எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்ல.
இப்பேர்ப்பட்ட மனிதரான இந்தக் கோடீஸ்வரப்பிரபுவை இன்று சந்திக்கப் போகிறேன் என்று முடிவு எடுத்த பின்தான் எனது அறிவு, ஆற்றல், சாமர்த்தியம், சாணக்கியம், தந்திரோபாயம் என்பன அவருக்கு ஈடுகொடுக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது. கூடவே நடுக்கமும் எடுத்தது. இந்தச் சந்திப்புக்காக நான் செய்த ஏற்பாட்டைக் காட்டிலும், அவர் இதற்காக ஒரு நாளை ஒதுக்கி அனுமதி அளிப்பதால் அவருடைய லாப வருமானத்தின் இழப்பு அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை என்பதும் நம்பமுடியாத செய்திதான். சில மனிதர்களைப் பொறுத்தவரை நம்ப முடியாத செய்திகளையும் ஜீரணிக்கவே வேண்டியிருக்கிறது. அந்த ரகத்தில் இந்தப் பிரபுவைச் சேர்த்தியாக்குகிறேன்.
2
கொடுகி விறைத்துப்போன என் சடல விறைப்பு இன்னும் எடுபடவில்லை., மெல்லிய ஊதற்காற்று மேனியுள் சிலாம்புகிறது. சீதளப் பனிப்புகார் காற்றுடன் கலந்து காதுக் கணுக்குகளுள் புசுபுசுத்தது. நந்தவனத்தைச் சுற்றி அமைந்த வர்ணப் பூக்களின் வாசனை மூக்கிற் கமழ்ந்து நறுமணம் வீசிற்று. முற்றிலும் மலர்ச்செடிகளால் எழுப்பப் பட்ட மதிற் சுவர்கள் பங்களாவரை செங்குத்தாக நீண்டு செல்கின்றன. கோபுர வாசல்வரை கோடுகள் போல் பஞ்சுப் பொதிகளாகத் திகழும் பூமதில்கள் அடர்ந்துள்ளன.
நிலைகுத்தி நின்று தலைநிமிர்ந்து பார்த்தேன்.
வானளாவிய கோப்பிசம். அந்தப்பங்களாவின் மூன்று மாடிகளிலும் பக்கவாட்டு நிலையங்களிலும் எந்தச் சலனத்தையும் காணவில்லை. ஒரே அமைதி. சற்று வேளை ஊமை கண்ட கனவினன் போல் மிலாந்தி நின்றேன்.
அதிர்கின்ற வெடிமுழக்கங்களை விட அமைதியான சோகநிலை மிகப் பயங்கரமானது என்பதை அது உணர்த்திற்று.
இந்தப் பெரிய பிரமாண்டமான பங்களாவில் சூல்கொண்ட அமைதியான ஊமைத்தனம், மயான பூமிபோல் ஒரு பயப் பிராந்தியை ஊட்டிற்று.
ஒரு வேளை இடம் மாறி வந்துவிட்டேனா?
அழைப்பு மடலைப் பார்த்தேன். இம்மியும் பிசகில்லை. சாட்சாத் இதே பங்களாதான். வாசல் முகப்பு வரை நகர்ந்து நாலாபக்கமும் பார்த்த என் கண்ணில் எந்த மனித நடமாட்டமும் தெரியவில்லை. இருந்தும், வெகு பவ்வியமாக வாசற்படிகள் தாவி ஏறி நின்று அழைப்புக் குமிழை அழுத்தினேன்.
“ஆம், உள்ளே வாருங்கள்” என்ற இதமான குரல் திடுக்கிட வைத்தது. எனினும், என் மனசு குதூகலத்தில் ஆழ்ந்தது.
உள்ளே சென்றதும், இத்தனை தடல்புடல்களுக்குப் பிறகும் அவர் பணியாள்தான் என்ளை வரவேற்பதா? என்று என்னுள் எழுந்த ஆதங்கத்தையும் ச கொள்ளாமல் சாடையாகச் சிரித்தேன். அவர் பதிலுக்குப் புன்மு பூத்தபடி சாந்தமான குரலில், “அதோ அந்தப் பூந்தோட்டத்தில் உள்ள கடைக் கோடியில் ஒரு சிறு குடிசை தெரிகிறதே . அதுதான் அவர் வசிப்பிடம். அவர் தங்களை அங்கே அனுப்பி வைக்குமாறு எனக்குப் பணித்துள்ளார். தயவு செய்து நேரே அங்கு செல்லுங்கள்” என்று சைகை காண்பித்தார்.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
என்ன அதிசயம், என்ன வேடிக்கை, என்ன விந்தையான மனிதர்? இந்தப் பெரிய கோடீஸ்வரப்பிரபு பெரும் பிரமாண்டமான பங்களாவை விட்டு ஒரு சிறுகுடிசையை வசிப்பிடமாக்கிக் கொண்டாரா?
கற்பனை பண்ணவே சிரமமாக இருக்கிறது. ஒரு வேளை சித்தப்பிரமைபிடித்த மனிதராக இருப்பாரோ? என்று ஓர் ஐயம் என்னுள் எழுந்தது.
எனது வருகையை அவர் பணியாள் தொலைபேசியில் அறிவித்திருக்க வேண்டும். அந்த மனிதர் வாசலில் என்னை எதிர்கொண்டு நின்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நினைவுகளையும் கனவிற் காண்பதில் நான் விண்ணன். அந்த விண்ணத்துவமே அவரைக் கண்டதும் அடியோடு மறைந்துவிட்டது. ஒருசிறு அம்சம்கூட நான் கற்பனைபண்ணிய மனிதராக அவர் உருவம் இருக்க வில்லை.
ஆளை வறுகி எடுத்தாலும் பத்துச்சிறங்கை சதை தேறாது. புடங்குகளின் என்புக்கூடுகளில் விறைப்பான தசைச்சோணங்கள் திட்டுத்திட்டாக தொங்கிக் கிடக்கின்றன. புடைத்துக் கிடக்கும் நரம்புகள் தேகமடங்க வியாபித்துத் தெரிந்தன. வலிச்சலான தேகம். நரைத்துப்போன செம்மயிர்க்கற்றைகளை வாரிவிட்டிருந்தார். காதுகளில் கெம்பிய மயிர் பூஞ்சணமாகச் சிலிர்ப்புக் கொண்டிருந்தது. அறுத்துப்போட்ட பன்றி இறைச்சி மாதிரி அவர் சதிரம் குங்குலி ரத்தமாகத் தொளதொளத்துப் போய்கிடந்தது. எனினும், ஒரு வாலிப மிடுக்குத் துள்ளிற்று.
அவர் வயோதிபம் தெரியவில்லை. கருநீலவிழிகள் கமண்டலத்துள் இரு கண்ணாடிப் பேழைகள் போல் பளிச்சிட்டன. நெடிதாக ஒட்டி உலர்ந்த வலிச்சல் உடம்பு மிகக் கெட்டியாக இருக்கிறது. தேகத்தில் நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன. ஏறுநெற்றியின் கீற்றுக் கோடுகள் கமண்டல உச்சி வரை தாவிக் கிடந்தன. ஒரு காத்திரமான சிரு ஷ்டிஇலக்கியகர்த்தாவைப் போல் அவர்தம் பார்வை குண்டூசி மாதிரி என்னிற் பாய்ந்தது. சுமார் அறுபது வயசைத் தாண்டியிருப்பார். என்றபோதும், அவரின் கச்சிதமாய் சுறுசுறுப்பான கிருத்தியங்கள் ஒரு விடலைக்குரிய பாவனைகளை நினைவுட்டின.
“நீங்கள் மதுபானம் அருந்துவதுண்டா?”
இந்தப் பெரிய பிரபுவிடமிருந்து எடுத்த எடுப்பிலேயே இம்மாதிரி ஒரு கண்ணியம் மிக்க வினாவுடனான உபசரிப்புக் கிடைக்குமென நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நாணங்கலந்த உணர்வுடன் சொன்னேன்.
“இருந்துவிட்டு எப்போதாவது அருந்துவதுண்டு”
கலகலத்துச் சிரித்தார். அவர் சிரிப்பு என் பதிலில் திருப்தி கொள்ளாதவராகக் காட்டிற்று.
கொஞ்சம் வெட்கமாக இருந்தது. நான் சமாளித்துக் கொண்டதை அவர் கவனித்தபோதும் அதனைக் காட்டிக் கொள்ளாமல் மறுபடி சிரித்தார்.
“உண்மையைச் சொல்லப்போனால் மது, மாது, சூது இந்த மூன்றையும் தீண்டாத எந்த மனிதனும் உலகத்தில் இல்லை. மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் நாம் இவற்றை யதார்த்த நிலைப்பாடோடு கணித்து இதனை ஒரு மேன்மைக்குரிய செயலாகவும், இதனால் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லையென்றும் கருதுகிறோம்…”
நான் ஏதும் சொல்கிறேனா என்று கவனித்துவிட்டுச் சொல்கிறார்.
“உண்மை என்னவெனில், தங்களைப் போன்ற கீழைத்தேய மனிதர்கள் இவற்றை வெறுக்கத்தக்க கிருத்தியங்களாகவும், இவற்றால் தங்கள் வாழ்க்கை மாசுப்படுத்தப்படுகிறதாகவும் கருதுகிறார்கள். இவர்கள் இப்படிக் கருதுவதால் தங்களுக்கு இயல்பாக உண்டாகும் ஆசைகள், உணர்வுகள், ஆசாபாசங்கள் யாவற்றையும் இழந்தவர்கள் போல் பாசாங்கு காட்டிக்கொண்டே இதே செயல்களில் நாசுக்காக இறங்கிவிடுகிறார்கள். இந்த கிருத்தியங்களே அவர்கள் வாழ்க்கையில் இப்போது சம்பிரதாயங்களாகிவிட்டன. இவை பாவத்தின் வாசல் என்று சொல்லிக் கொண்டே இந்தப் பாவத்துக்குத் தம்மை அன்றாடம் உட்படுத்தாத
மனிதர்களை நீங்கள் எங்கேயாவது கண்டதுண்டா?”
“இவ்வளவு யதார்த்தபூர்வமாகப் பேச இவர் எங்கே கற்றுக்கொண்டார்?” என்ற வியப்பில் ஆழ்ந்தே போனேன்.
அவர் தொடர்ந்து சொன்னார்.
“உண்மையில் வாழ்க்கை சம்பிரதாயம் அல்ல, சம்பிரதாயம் வாழ்க்கையுமல்ல. சம்பிரதாயம் வாழ்க்கையானால் அந்த வாழ்க்கை முழுக்க முழுக்கப் போலியாகிவிடுகிறது. இந்தப் போலி வாழ்க்கை எங்களிடமிருந்து எப்போதோ தொலைந்து போய்விட்டதால்தான் நாங்கள் உலகிலேயே நாகரிகத்தின் உச்சத்திற்கு வந்திருக்கிறோம்…”
கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமின்றி வாழ்க்கையைப் பச்சையாகச் சொல்லும் திராணி இந்த மனிதரிடம் எப்படி உண்டாயிற்று? நான் நினைத்ததைப் போல் இவர் அப்படியொன்றும் சோமாறிப் பேர்வழியல்லர் என்று தெரிகிறது.
‘இன்றைய சந்திப்பில் நான்தான் முட்டாள்தனமாக நடந்துகொள்ளவேண்டி வருமோ?’
கிலி எனக்குள் சூல்கொண்டது. என்றாலும், நான் கொண்ட தத்துவபோதத்தின் நிபுணத்துவம் என்னை உசப்பிற்று. எனவே, சித்தாந்த மேதைபோல் சிரித்துக் கொண்டு அதே வேளை வெறும் பேயன்போல் பாவனை காட்டியவாறு சம்பாஷணையில் ஈடுபடலானேன்.
‘மது போதையூட்டும் வஸ்து. மங்கை இன்பம் துய்க்கும் ஊற்றுக்கண். சூது மன ஆவலைத்தூண்டி வாழ்வை அழிக்கும் நச்சிரம். இவற்றை இடம், பொருள், ஏவல் அறிந்து கையாளும் வாழ்க்கைமுறையின் பண்பாடே எங்கள். கீழைத்தேய நாகரிகம்’
இவ்வாறெல்லாம் எடுத்து விளக்கி வைக்க எத்தனிக்கையில், அவர், “மன்னிக்கவேண்டும். நீங்கள் புகை பிடிப்பதுண்டா?” என்று கேட்டுக்கொண்டே, மதுப்புட்டிகள் மத்தியில் உள்ள டம்பரில் ஊதிய சிகரட் சாம்பலை நுனி விரலால் தட்டினார்.
“புகை பிடிப்பதுண்டு. ஆனால், அதற்கு அடிமையானதில்லை?” என்றேன்.
அவர் அதன் அர்த்தத்தைப் புரிந்தவராக சிரித்துக் கொண்டு, “நான் அதற்கு அடிமைப்பட்டவனாக தெரிகிறேனா?” என்று விடுத்துக் கேட்டு என் முகத்தைப் பார்க்க, நான், “ஆமாம் அப்படித்தான் தெரிகிறது” என்பது போல் தலையாட்டினேன்.
எனது கூற்றுக்குப் பதிலுத்தாரமாக அவர் சொன்னார்.
“ஒன்றைக் கவனியுங்கள். ஒரு மனிதனால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு வாழ்க்கையில் கிடைக்கும் சகல இன்பங்களையும் அனுபவித்து விட வேண்டும். இது அவன் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்று. இதற்காகத்தான் நாம் மக்களுக்குக் கங்குகரையற்ற சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றோம். இந்த உரிமைகளை மனிதர்களிடமிருந்து பறிப்பது கட்டுப்படுத்துவது சுதந்திரமோ ஜனநாயகமோ அல்ல. இதற்காகவே நாங்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றி உலகம் பூராவும் அடிக்கடி உரத்துச் சொல்வதோடு அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருவதற்கான அரசுகளையும், அந்தந்த அரசுகள் மூலம் சட்டங்களையும் வகுத்திருக்கிறோம். விவகாரம் இப்படியெல்லாம் இருக்க. நீங்கள் இந்தச் சின்ன விசயத்திற்கே அடிமைத்தனம் என்ற வாக்கைப் பிரயோகிக்கிறீர்கள். சுதந்திரம் என்பது எல்லையற்றது, எந்த ஒரு மனிதன் மட்டிலும் அதனை ஒரு வரையறை செய்து வைத்து அனுபவிக்க முடியாது. அதனால்தான் எந்த ஒரு மனிதன் வாழ்க்கையில் மட்டுமல்ல, எதிலும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்குவதில் முன்னிற்கிறோம்”
எனக்கு மெய்யாகவே மூளை கலங்கிற்று. நான் எதையோ சொல்ல, இந்த மனிதர் எதையோவெல்லாம் சம்பந்தமில்லாமல் அழகான வார்த்தைகளை அர்த்தமில்லாமலே அடுக்கிச் செல்கிறார். இவர் பேச்சில், சிக்கல் உண்டே. தவிர, விளக்கமோ வழிமார்க்கமோ இருப்பதாக தெரியவில்லை. இப்படிச் சிக்கற்படுத்துவதுதான் சாணக்கியமா?’ என்ற சந்தேகம் எழுந்தது.
“சுதந்திரம் ஜனநாயகம் பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று என்னிடம் கேட்க மாட்டாரா?” என்கிற எதிர்பார்ப்பில் இருந்த என்னை அவரின் அடுத்த கணை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
“மதுபான ரசத்தையோ, மங்கைகளையோ, சூதாட்டக் களியாட்டங்களையோ அனுபவிக்கும் சுதந்திரம் வழங்கப்படாதவிடத்து உங்களுக்கு இந்த மனோபாவம் ஏற்பட்டதா? உங்கள் மனோநிலை அறிந்து இத்தகைய இன்பசுக லாகிரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதா? இந்தச் சுகானுபவங்களை அனுபவிப்பதற்கு ஏற்ற பக்குவம் இல்லையென்று கருதப்பட்டதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனவா…?”
இந்த மனிதர் மனோவிகாரம் பிடித்தவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கோடானுகோடி மக்களின் வாழ்க்கை அதள பாதாளத்திலும் ஒருசில மனிதர்களின் வாழ்க்கை உல்லாசபுரியிலும் மேடுபள்ளமாக அமைந்திருக்கிறபோது, அதனைத் தெரியாதவர்போல், அந்த வாழ்க்கையின் கோரத்தைப்பற்றி ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல், அந்த உணர்வே இல்லாமல், ஒரு சில மனிதர்களின் இச்சாபூர்வங்களில் மட்டும் மூழ்கியிருப்பாரா? இவர் கருதும் சுதந்திரமும், ஜனநாயகமும் யாருக்காக?
என் முகத்தில் படர்ந்த வெளுப்பின் சாயலை அவர் கவனித்திருக்கவேண்டும்.
கலகலத்துச் சிரித்துக்கொண்டே, “நான் வாழ்க்கைக்கு வேண்டாத விசயங்களைச் சுற்றி வளைத்துச் சம்பாஷிக்கிறேன் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் வாழ்க்கைக்கு எது தேவையோ. எது முக்கியமோ அதைப் பற்றிதான் நான் பேசுகிறேன். இவற்றை ஒரு சிலரே அனுபவிக்கிறார்கள் என்பதால், இந்தத் தேவை முக்கிய மற்றதாகிவிடுமா” சரி, இது உங்களுக்குப் பிடித்தமில்லை என்று கருதுகில் அதை இன்னோர் கட்டத்தில் பேசிக் கொள்வோம்” என்றார்.
ஒரு காலை மடக்கி மறு கால் மேல் அட்டணமாகப் போட்டுக் கொண்டு மறுபடி கேட்டார்.
“வாழ்க்கை என்பதன் அர்த்தம் என்ன? அது சொர்க்கமும் நரகமும் நிறைந்தது. இந்த நியதியை மாற்றுவதென்பது ஒருபோதும் முடியாத காரியம். சோஷலிஸ்டுகளோ அதனை மாற்றி அமைக்க முடியும் என அடித்துக் கூறுகிறார்கள். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?”
இப்போதுதான் நான் மனம் வெளுக்கச் சிரித்தேன்.
என் நக்கரித்த சிரிப்பின் அர்த்தத்தை நான் யூகித்தவாறு புரிந்துகொண்ட தோரணையில் அவர் முகபாவம் இருக்கவில்லை. இவர் ஓர் அப்பாவி என்று ஒருவேளை அவர் என்னைக் கணித்தாரோ என்று தோணிற்று. நல்லதொரு முட்டாள் தன்னை மேதாவி என்று அபிநயித்துக் கொண்டு அநாயாசமாகப் பார்ப்பதுபோல் நெற்றியைச் சுருக்கிக் கைப்புடங்கால் முகத்தை அழுத்திய அவர், சற்றும் எதிர்பாராத கேள்வியொன்றைத் தூக்கிப் போட்டார்.
“கலாச்சாரம் என்று நீங்கள் எதனை கருதுகிறீர்கள்”
நான் விக்கித்துப்போனேன். இதுகாறும் எமது கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் என்று பேணிப் புகழ்ந்து வந்த கிருத்தியங்கள் எல்லாம் யந்திர வளர்ச்சியால் செல்லாக்காசாகிவிட்டன. வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவதற்கான நாகரிகம் இன்று மாறுபட்டுத் தலைவிரித்தாடுகிற கோலத்தில் தோற்றவிக்கப்படுவதால், அது எத்தகைய அசூசையானது என்பதும், இக்கலாச்சாரம் வாழ்க்கையை முற்றுமுழுதுமான போலியான பழக்க தோஷத்திற்கு இட்டுச் செல்கின்ற மந்திரச் சொல்லாகிவிட்டது என்பதும் புலனாகிற்று.
ஆக, கலாசாரம் என்பதனை, அவர் ஒப்புக்கொள்ளும் விதத்தில் எவ்வாறு அர்த்தபுஷ்டியாக வெளிப்படுத்துவது என்று யோசிக்கலானேன்.
எனது நீண்ட கால அனுபவங்களைப் புடமிட்டுப் பார்க்கையில், கலாசாரம் என்று சொல்வதெல்லாம் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தன்னை மகிழ்விப்பதற்காக, அவனவனே தன்தனக்கு ஏதோ ஒரு வகையில் நிரந்தர மவுசு தேடுவதற்காக தன் தன் வசதிபோல் ஏற்படுத்திக்கொண்ட வைபவங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. மனிதனின் தேவைகளைக் கடந்து மவுசுக்காகவே உண்டான இச்சம்பிரதாயங்கள் பூராவும் அறியாமை பெற்றெடுத்த குழந்தைகளாகும். சில வேளை மனிதனின் விஞ்ஞான அறிவு சான்ற ஆய்வுக்களாக நிகழும் வைபவங்களாகவும் திகழுகின்றன.
இதனை இந்த மனிதருக்கு வகைப்படுத்தி வைப்போமா? என்று அதற்கான ஆதாரங்களை மனசில் உருப்போட்டுக் கொண்டிருந்தேன்.
அவர் சிரித்தவாறு கேட்டார்.
“பல முட்டாள்கள் தங்கள் வாழ்வைச் சீரழித்துக் கொண்டு அந்த அழிவில் நின்று தம்மைச் சுயம்புவாகப்பிரகடனப்படுத்துவதே கலாச்சாரம் என்றாகியபின்னும், தொடர்ந்து அதுபற்றி விஸ்தரிப்பதானது வேடிக்கையான விஷயமாகத் தெரியவில்லையா?”
நான் வாயடைத்து நின்றேன்.
சிறந்த முற்போக்குவாதிபோல் நல்ல கருத்தைச் சொன்ன இந்த அறிவாளி, கலாச்சாரங்கள் அனைத்தையும் ஒரே தன்மையாகப் பார்க்கும் தோரணையை நோக்குகையில், அடிமுட்டாள்தனமாகப் பேசும் சிறுவன் போலவும் இருக்கிறாரே என்று எண்ணியபோது அவர் வினாவும் ஒரு தமாஷாகப் பட்டது.
நான் ஒரு கணை தொடுத்தேன்.
“கலாச்சாரம் வாழ்க்கை நிலையிலிருந்தே வெளிப்படுகிறது. வாழ்க்கையை மனிதன் எப்படி வகுத்துக்கொண்டான் என்பதிலிருந்தே அதற்கு அர்த்தம் உண்டாகிறது. வாழ்க்கையை விஞ்ஞானபூர்வமாகப் பார்க்கின்றபோது கையாளப்படும் கலாச்சாரம் ஒருவிதமாகவும், விஞ்ஞானத்தை நிராகரித்துப் பார்க்கின்ற போது கையாளப்படும் கலாச்சாரம் வேறுவிதமாகவும் அமைந்துவிடுகிறது. இதில் ஒன்று பொய்மையான தோற்றத்தோடு மனிதனை ஆட்டிப் படைக்கிறது. சிக்குண்ட மனிதன் தன்னைத்தானே சீரழிப்பதோடு அடுத்தவனையும் அதற்குள் தள்ளிவிட முனைகிறான். இதற்கெல்லாம் காரணம் அவன் தான் பார்க்கிற உலக அறிவைப் பெறுவதற்குப் பதிலாக, பார்க்காத பரலோகத்தைப் பற்றிப் பீற்றிக்கொள்வதுதான். படைப்புகள் பற்றியும், படைப்பாளன் பற்றியும் அறியவேண்டிய மனிதன் இவற்றை அறியும் திராணி அற்று வாழ்க்கை நிலையைக் கண்டு பிரமித்துப் போய் சித்தங்கலங்குவதோடு, பயப்பிராந்தியால் தனக்கே புலனாகாத வேறு உலக மனசால் படைத்துவிடுகிறான். இவனுடைய அறியாமை பெற்ற குழந்தையே இவனை ஆட்டிப் படைக்கிறது. இதில் சுகங்காணத்திரியும் மனிதன், கானல் நீரில் தாகம் தீர்க்க அலையும் மானினம் போல், தானும் அலைந்து அடுத்தவனையும் அலையச் செய்ய மாய்கிறான். அதனால் வாழ்க்கை துன்பக் கேணியாகிவிடுகிறது. இந்தத் துயரங்களைப் போக்க இவன் கற்பிதம்பண்ணிய அநாசாரங்களையே கலாச்சாரங்களாக்கிக் கொள்கிறான். இந்தக் கலாச்சாரங்களே இன்று வாழ்க்கையை அர்த்தமற்றதாக கேலிக் கூத்தாக மிலேச்சத்தனமாக ஆக்கிவிட்டிருக்கிறது. இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
மூளை மயங்கியவர் போல் திக்பிரமைகொண்டு எழுந்து நின்று எதையோ சிந்திக்கிற பாவனையில் இவர் புன்னகைத்த விறுத்தம், என்னிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதைக் காட்டிற்று. எனினும், இவர் ஏனையோர் போல் புரியாத விஷயங்களைப் புரிந்து கொள்வதாகப் பாசாங்குகாட்டும் அபாசப் பேர்வழி அல்ல என்பதில் எனக்கு ஐயம் இருக்கவில்லை. விஷயத்தைக் கிரகிக்கத் துடிக்கின்ற காந்தக் கண்கள் அவர்பால் இருந்தன. ஒருவேளை கலாச்சாரம் பற்றிய விஷயங்களை நான் எடுத்துச் சொன்ன தோரணையில் புரியாமல் பிரமைபிடித்து நிற்கிறாரோ? என்றும் எண்ணத் தோன்றியது.
மனிதனின் உன்னத வாழ்வுக்கான கிருத்தியமே கலாச்சாரம். அப்படியிருக்க, அதனைத் தனக்கே தெரியாத மாயாஉலகின் மோஸ்தராக்கிவிட்ட இந்த மனிதர்கள் மீது உண்டான வெறுப்பைக் காட்டிக்கொள்ளாமலே, இதற்கான காரண காரியத்தை இவர் அறிந்து வைத்திருப்பார். அதனைப் பரிசோதிக்க என் மனசு தூண்டிற்று.
அவர் சரஸ லீலையில் மூழ்கிய ஒரு சல்லாப நங்கையைப் போல் திமிறிச் சிரித்துக் கொண்டு சொல்கிறார்.
“கலாச்சாரம் பற்றி நீங்கள் நாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனால், நாங்கள் இந்தப் பேர்வழிகளை நம்பியே எங்கள் மூலதனங்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். சற்று விரிவாகச் சொல்வதானால், இப்படியான முட்டாள்களை நாங்கள் உற்பத்தி பண்ணவில்லையென்றால் எங்கள் உயர்பீட சாம்ராஜ்ஜியங்கள் எப்பவோ அஸ்தமித்து விடும். அதனால்தான் கற்பனாலோகத்தைப் பற்றியே சிந்தித்தபடி, உலகப்பிரச்சினைகளை முற்றாக மறந்து போகும் பிறவிகளை இத்தகைய கலாச்சாரங்கள் மூலம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் நாம் கையாளும் பிரச்சாரங்கள் மிருக இச்சையைவிட ஆபாசமானதுதான். ஆனால், இவற்றை நெகிழ்த்தினால் எமது நோக்கம் பிசகிவிடும். எனவேதான் நாங்கள் கலாச்சாரத்திலும் இச்சாபூர்வ ஆபாசங்களை வளர்த்துவிடுவதோடு, இவர்களையே, விவேகமுள்ள பெரிய மனிதர்கள் என்றும் பறைசாற்றிக் கொள்கிறோம். ஒன்றைக் கவனியுங்கள். நாம் சிருஷ்டிக்கும் அபூர்வ மனிதர்களுள் நீதபதிகள், டாக்டர்கள், இஞ்சினியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள்கள் என்றெல்லாம் அடங்குவர். இவர்கள் அனவருமே எங்கள் கூலி உழைப்பாளர்களாக இருப்பதை இவர்களே அறியாமல் இருக்க, இவர்களை மாயத்திரை போட்டுக் கட்டிவைக்கும் மந்திரசக்தி எங்களிடம் உண்டு. அதுதான் மதம்….”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
என்னைப் போலவே மதம் பற்றிப் பிசகின்றி அறிந்து வைத்திருக்கும் இந்த மனிதர், தனது வர்க்கக்குணாம்சங்களை இப்படி யெல்லாம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறாரே. குழந்தைத் தன்மையுடைய இந்த மேதாவியால் ஒரு கோடீஸ்வரப்பிரபுவாக இருக்க எப்படி முடிகிறது?
எனது வியப்பினைப் புரிந்துகொண்ட அவர் தொடர்ந்து சொன்னார்.
“ஒருவன் எப்பேர்ப்பட்ட புத்திசாலியாக இருந்தபோதும், விஞ்ஞான ரீதியான வரலாற்றுடன் சமுதாயத்தைப் பார்க்கத் தெரியாவிடின், மதச் சேற்றுள் அமிழ்ந்திப் போய் விடுகிறான். இச்சேற்றுள் புதையுண்டவனின் மேதைத் தனங்கள் எத்தகைய உன்னதமாயினும் அவை அவனை இந்தச் சமுதாயப் பிரச்சினையிலிருந்து முற்றாக நீக்கிவிடுகின்றன. இதே மனிதனால் மதங்கள் லட்சக்கணக்கான தெய்வங்களையும் தோற்றுவிக்கப்பட்ட தோற்றுவித்து யுத்தக் களத்தில் இறக்கிவிட்டுள்ளன. மதங்களின் வரலாறே தெய்வங்களின் யுத்தங்களாக ஆக்கிவிடப்பட்டிருக்கும் போது, அவற்றில் போதனை மூழ்கிப்போன ஒவ்வொருவனும் செய்கிறவனாகிவிடுகிறான். இதனால் மதபோதகர்கள் சமுதாயத்தில் நல்ல மனிதர்கலாக ஊசாடமுடிகிறது. இவர்களை நாம் தெய்வ தொண்டர்களாகவும் போதகர்களாகவும் உற்பத்தியாக்கிடுகிறோம். இவர்களைக் கொண்டு வீணர்களையும், விறுத்தாப்பியர்களையும், உதவாக்கரைப் பேர்வழிகளையும் உற்பத்தியாக்கிவிடுவது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கலை கலாச்சாரங்களே சமுதாயத்தில் வியாபித்திருக் கின்றன. கலை இலக்கியங்கள் பொழுதுபோக்கிற்காக என்ற சுலோகத்தின் பின்னணியும் இதுதான். மதங்களின் வழிப்பாட்டு முறைகளைக் கலாசாரங்களாகவும், இந்த கலாசாரங்களின் வெளிப்பாடாகக் கலைகளையும் ஆக்கிவிடப்பட்டிருப்பதால் புத்தி பேதலித்த ஜனக்குழாமை இலகுவாக உற்பத்திசெய்து விடுகிறோம். இப்பேர்ப்பட்டவர்களை நம்பியே எமது சுரண்டல் அமைப்பைப் பாதுகாததுக் கொள்ள முடிகிறது.. மத ஆசாரங்களால் ஆணாதிக்கத்தை வலுப்படுத்தும் கைங்கரியமாகக் கீழைத்தேச நாடுகளில் பெண்களை மகத்தான உடன்கட்டை ஏற்றி உயிர்க்கொலைபுரிவதை கலாச்சாரமாக ஆக்கி விட்டிருந்தோமென்றால் பாருங்களேன்…”
‘அட சண்டாளா… கொஞ்சமும் ஈவிரக்கமின்றி, உயிர்க்கொலை பாதகத்தையும் கலாச்சாரமாக்கிவிட்டதை வேடிக்கையாகச் சொல்லும் இந்த மனிதன் நெஞ்சுள் இதயமா இரும்புத்துண்டா?’
நீருபூத்த நெருப்பினன் போல் கனன்று அவரை ஏறெடுத்துப் பார்த்தேன்.
அவரோ ஒரு பரமசாது போல் எழுந்து மதுப்புட்டியை எடுத்து வாயிலூற்றிவிட்டுப் பொச்சடித்துக்கொண்டே, “ஒரு டோஸ் அடியுங்களேன்” என்று என்னை மௌடீகமாகப் பார்த்துப் புன்னகைத்தார்.
இப்பேர்பட்ட பாதகச் செயல்களுக்கு வழிசமைத்துக் கொண்டே, உலகத்துக்கு நீதியைப் போதிக்க உங்களால் எப்படி முடிகிறது? உங்கள் நீதி, நேர்மை மனச்சான்று, போதனை யாவும் வெறும் போலிகளல்லவா? என்று சாடி. அவர் வேஷங்களை அம்பலப்படுத்துவோமா என்று யோசித்தேன். ஆனால், அவர் அப்படி ஒன்றும் வேஷதாரியாகவும் தெரியவில்லை. எதையும் பட்டவர்த்தனமாகச் சொல்கிறார். மூளை குழம்பிப்போன நிலையில் அவர் ஆசனத்தில் அமர்ந்து சிகரட் புகையை இழுத்துக் கொண்டு, நான் கூறியவற்றிலிருந்து நீங்கள் என்னை ஒர் ஈவிரக்கமற்ற மனிதர் என்று கொள்வீர்கள், அப்படித்தானே?” என்று வினவி, நெற்றிபுருவம் சுருக்கி என்னை நீவிப்பார்த்தபோது, அவர்மட்டில் என் கணிப்புச் சரியாகவே பட்டது.
வேஷதாரியல்ல. ஆனால், கருமம் என்னவோ நீசத்தனந்தான். எனவே, அவர் சார்ந்த வர்க்கக் குணவியல்புகளையும், மோசடிகளையும், குரூரங்களையும் அம்பலப்படுத்த எத்தனிக்கையில் அவர் தொடர்ந்தார்.
“அப்பட்டமாகச் சொல்வதாயின் நாங்கள் மதங்களாலும், கேளிக்கைக் இலக்கியங்களாலும் உலகத்தில் ஜனங்களை முட்டாள்களாக புத்திசுயாதீனமற்றவர்களாக ஆக்கிவிடுவதற்குக் காரணமே. அவர்கள் மீது நாம் கொண்டுள்ள பாச உணர்வும் நேச உறவுமே தவிர, ஈனச்செயல்களுக்காக அல்ல. இந்த உலக்தின் சுமைகளை நாம் எடுத்துக்கொண்டு, அப்பேர்ப்பட்டவர்களை அதே சுமைகளிலிருந்து நீக்கிவிடுகிறோமல்லவா? அதனால்தான் அவர்கள் நொந்து உழைக்கவும், பொழுது போக்கவும். தன்னிச்சையாக வாழவும் ‘சுதந்திரம்’ வழங்கியிருக்கிறோம். ஒருவர் வாழ்வு இன்னொருவரில் தங்கியிருக்கும் முறையை அவர்கள் சர்வ சுதந்திரமாக அனுபவிக்கும்போது ஜனநாயகவாதிகளான நாம் அதில் தலையிடுவதில்லை. சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பது எங்கள் லட்சியமாதலால், இது ஒரு கடமையாகிறது. எங்கள் இந்தப் போக்கைக் கர்ணகடூரமாக எதிர்ப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும்தான்…”
இந்த கட்டத்தில் அவர் முகம் விகாரித்துக் கொண்டது.
செட்டை கழற்றிய பாம்பின் கோலம்போல் அவரிடமிருந்த விஷம் மெல்ல வெளிப்பட்டபோது, உண்மையில் நான் உள்ளூர மகிழ்ச்சியடைந்தேன். இப்பொழுதுதான் அவர் என் பிடிக்குள் வாறாகச் சிக்கிக்கொண்டார்.
என் கண்கள் அவரை மினவி விழுங்கின.
3
யந்திர சாதன வளர்ச்சியற்ற ஆதிப்பொதுவுடமை அமைப்பிலிருந்து அடிமை, பிரபுத்துவ, சமுதாயங்களைத் தாண்டிய உலகில் பல்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் புரிந்து வந்த அமைப்பின் முரண்பாட்டைத் தக்க விதமாக இயக்கி, முதலாளித்துவத்தை உலுப்பிச் சோஷலிச அமைப்பைத் தோற்றுவிக்கவே, இச்சமுதாயத்தை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து சகல கொடுமைகளிலிருந்தும் மக்களை விடுவிக்கப் போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள். இதைத் தெரிந்தும், ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் அவர்கள் எதிரிகள் என்ற தோரணையில் பேசும் இந்த மனிதர் இதுகாறும் தெரிவித்த கருத்துகள் கொஞ்சமும் தர்க்கவியலுக்குப் பொருந்தாதன.
“முதலாளித்துவ ஜனநாயகத்தில் மக்களுக்குள்ள சுதந்திரம் என்ன?” என்று ஒரு கொக்கியைப் போட்டேன்.
அவர் நிலைதடுமாறி ஒருகணம் திகைத்து நின்றார்.
தொழிலாளர்களின் உழைப்பையும் உணர்வுகளையும் அன்றாடம் நசுக்கிச் சுரண்டிக் கோடீஸ்வரப் பிரபுவாக உயர்ந்திருக்கும் இந்த மனிதர்கள், ஜனநாயகம், சுதந்திரம், மனிததர்மம் என்றெல்லாம் பேசுவதற்கு உரிமையற்றவர்கள். இப்பேற்பட்ட இந்த மனிதருடன் ஆழமாகச் சம்பாஷித்து இவர் வேஷத்தைக் கலைப்பதோடு இவர்தம் வர்க்கக் குணவியல்களை இவர் வாயாலேயே கக்க வைக்கத் திடங்கொண்டேன்.
“உங்கள் தொழில் ஸ்தாபனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நீங்கள் ஒருநாளைக்கு வழங்கும் ஊதியம் எவ்வளவு?”
அவரது உயிர் மூச்சான மூலஸ்தானத்தைத் தொடுகின்ற இந்தக் கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்க வில்லை.
“எந்தத்தொழிலாளியும் ஒரு நாள் முழுக்க வேலை செய்வதில்லை. அப்படியிருக்க, ஒரு நாள் ஊதியத்தை எப்படிக் கறாரானகச் சொல்வது?
சுரண்டற்பேர்வழிகள் விஷயத்தை வழக்கமாகச் சிக்கற்படுத்தி வேறு விஷயத்திற்குத் திசை திருப்பி அதில் குளிர்காயும் தோரணை அவர்தம் அர்த்தமற்ற மழுப்பலில் ருசுவாயிற்று.
“சரி, தொழிலாளி ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார்?”
“எட்டு மணி நேரம்”
“அவர் எட்டு மணி நேரம் வேலை செய்வதற்காக ஒரு நாள் செலவிடும் நேரவிரயம், இருப்பிடம், போக்குவரத்துச் சாதனங்களால் அதிகரிப்பதை நீங்கள் கணக்கில் எடுப்பதுண்டா?”
“இல்லை”
“ஏன்?”
“அது எங்கள் விவகாரம் அல்ல”
“ஆனால், ஒரு தொழிலாளி எட்டுமணி நேரம் வேலை செய்வதற்காகப் பிரத்தியேகமாச் செலவிடும் நேரத்தை அவர் பொறுப்பில் விடுவதோடு வைத்திய லீவு. கட்டாய லீவு. தற்காலிக லீவு, காலங்களில் ஊதியம் வழங்காமல் விடுவதானது, அவர் ஓய்வே இன்றி வருஷம் பூராவும் யந்திரமாக இயங்க வேண்டும் என்று நீங்கள் மறைமுகமாக நிர்ப்பந்திருக்கிறீர்கள் என்றாகிறது. அப்படித்தானே?”
இவ்வாறான சூட்சுமத்தை நான் வெளிச்சமாகிய போது அவர் முகத்தில் நெய் வளிந்தது. வெலவெலத்துப் போன அவர் கண்கள் மோக லாகிரிகொண்ட வேல்விழியாள்போன்று வெளிறின. ஆயினும், இவற்றைக் காட்டிக் கொள்ளாமல் அசைவற்று நின்றார்.
தொடர்ந்து பேச்சை ஆரம்பித்தேன்.
“எட்டுமணிநேரம் வேலைசெய்யும் ஊழியருக்கு நீங்கள் வழங்கும் ஊதியம் என்ன?”
“இது ஊழியரின் வேலைநேரத்தைப் பொறுத்தல்ல, அவர் செய்யும் வேலையைப் பொறுத்தது”
“உதாரணம்…?”
“ஒரு விரிவுரையாளர், ஆசிரியர், விஞ்ஞான ஆய்வகர், டாக்டர், இஞ்சினியர் ஆகியோரை எடுத்துக்கொள்வோம். அவர்களும் ஊதியம்பெறுகின்ற ஊழியர்கள்தாம். அவர்கள் சேவை மூளை உழைப்பாதலால் அவர்கள் உடல், உள்ளம், மனம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். வேறு எந்தச் சிந்தனையிலும் சிக்காத வாழ்க்கை முறை அவர்களுக்கு வேண்டியிருப்பதால் ஊதியமும் அவர்களைச் சிக்கற்படுத்தாதவரை வழங்கப்படுகின்றன. உடலுழைப்பாளர்களின் நிலை அப்படியில்ல..”
எனக்குச் சிரிப்பு வந்தது.
அவர் நேரடியாக பதிலிறுக்காமல் மழுப்புவதையும், அவரின் மன அவசம் அவரையறியாமலே வெளிப்படுவதையும் அவதானித்த நான், அவர் மனம் கோணாமல் பிசகின்ற அவரே ஒப்புவிக்கும் படியான கேள்வியைச் சரமாரியாகத் தொடுத்தேன்.
“ஒரு தொழிலாளியின் எட்டு மணி நேர வேலைக்கான ஊதியத்தைக் கேட்டேனே தவிர, தொழில்களின் தாற்பரியங்களையோ தராதர அந்தஸ்துப் பற்றியோ அல்ல. நீங்களோ, மூளை உழைப்பாளர்கள், உடல் உழைப்பாளர்கள் என்று பேதப்படுத்திப் பிரித்துப் பேசுகிறீர்கள். டாக்டர்கள், இஞ்சினியர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என்கிற புத்திஜீவிகளும், உடல் உழைப்பாளிகளான தொழிலாள விவசாயப் பாட்டாளி மக்களும் ஒரேவிதமான மூளை உழைப்பாளர்கள்தாம். இந்த உலகத்தில் சகல பெண் ஆண் உழைப்பாளர்களும் புத்திஜீவிகள் தாம். அவர்களின் மூளைகளிருந்தே சிந்தனைகளும், உணர்வுகளும், கருவூலங்களும் தோன்றுகின்றன. மலசலகூடத்தைச் சுத்தஞ்செய்யும் வேலையாளும், டாக்டரும் தொழிலாளர்கள்தான். இவர்கள் செய்யும் தொழில் வினைப்பாடுகளும் உணர்வுகளும் வேறுபடலாம். ஆனால், இருவரும் தொழிலாளர்களே. நான் கேட்பது, உங்கள் தொழிற்சாலைகளில் எட்டுமணி நேர வேலைபார்க்கும் தொழிலாளிக்கு நீங்கள் வழங்கும் ஊதியம் என்ன?” என்பது தான்?”
இருந்தவாக்கில் அவர் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார். நெற்றிப்புருவத்தைக் கைப்புடங்கால் அழுத்தினார். முகத்தில் அப்பிய சோகை மீள ஒரு வரட்டுச் சிரிப்பை உதிர்த்தார். இதற்கு மேல் அவரால் பாசாங்குசெய்ய முடியாது என்று யோசிக்கையில், நான் எதிர்பாராத ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்.
“நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட்டா?”
நான் கேட்டேன்.
“நீங்கள் எப்படிக் கணிக்கிறீகள்?”
அவர் பாணியில் நானும் நேரடிப் பதில் சொல்லாமலே அப்படிக் கேட்டு வைத்தேன்.
அவருக்கு விஷயம் வெளித்திருக்க வேண்டும் இல்லாவிடில் இம்மாதிரிக் குழப்பியடித்திருக்கமாட்டார்.
மனிதகுலம் இன்பமாக வாழும் தர்ம முறையை, சமதர்ம சாமாஜ உலகை, சகல கொடுமைகளிலிருந்தும் மக்கள் மீள்வதற்கான மார்க்கத்தை, அதனோடு பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தை, கருச்சிதைவு ஏற்படாமல் மருத்துவிச்சிபோல் உயிர்ப்பிக்கின்ற புரட்சிகர கம்யூனிஸ்டுகளாகவிருப்பதில் உள்ள மன நிறைவும் பெருமைக்குரிய விசயமும் வேறுண்டா?
ஆனால், அவர் என்னை “ஒரு கம்யூனிஸ்ட்டா?” என்று கேட்டவிதம் வேறு வகையாகத் தோணிற்று.
கலை, இலக்கியம், கலாச்சாரம், விஞ்ஞானம், சமுதாயம் பற்றியெல்லாம் விஷயஞானத்தோடு வெளுத்து வாங்கியதெல்லாம் முழுப்போலியானது என்று நான் தெரிந்துகொண்டே தன்னுடன் சம்பாஷித்தேன் என்பதை அவர் யூகிப்பதாக எனக்குப்பட்டது. அவர் பேச்சின் மழுப்பலும் விவகாரத்தை வேறு திசைக்குத் திருப்பும் அவர்தம் வர்க்க சுபாவமும் இதனை அர்த்தப்படுத்தின.
தொழிலாளர்களையே வஞ்சித்து சொகுசாக வாழும் செல்வச் சீமான்கள் சமதர்மவாதிகள் போல் தொழிலாளர்களுடன் சல்லாபித்துச் சம்பாஷித்தாலே, முதலாளிகள் மிக நல்லவர்கள் என்று தங்களை மேலும் சுரண்டுவதற்கு வழிசமைத்து நிற்கும் வர்க்கக் குணாம்சம் இழந்து தொழிலாளர்கள் கருதுவதால்தான் இத்தகைய வார்த்தையை என்னிலும் பிரயோகித்தாரோ?
எனினும், நான் விடவில்லை.
“பிகு பண்ணாமல் நேரடியாகச் சொல்லுங்கள். எட்டுமணி நேர வேலைக்கு நீங்கள் கொடுக்கும் ஊதியம் எவ்வளவு?”
“ஏன் ஊதியம் என்று கேட்கிறீர்கள், சம்பளம் என்று கௌரவமாகச் சொல்லலாமே?”
உண்மையில் கூலி எவ்வளவு? என்றே நான் கேட்டிருக்க வேண்டும். வேலை நேரம், அதற்கான உடல் உழைப்பு, உற்பத்திப் பொருட்களின் தேவை, அவற்றின் தரம் அளிக்கும் வேதனம், முதலாளி பெறும் லாபம் என்றெல்லாம் வகைப்படுத்திப் பார்க்கையில் அது கூலியே தவிர, சம்பளம் அல்ல. எனினும், இதனையே தனது கௌரவமாகக் கருதும் இந்தப் பிரபுவின் மனோபாவத்தை நினைத்து எனக்குள் சிரித்துக்கொண்டேன்.
“சரி, உங்கள் பாஷையில் கேட்கிறேன். மழுப்பாமல் நேரடியாகச் சொல்லுங்கள். எட்டுமணி நேர வேலைக்கு ஒரு ஊழியர் உங்களிடம் பெறும் சம்பளத்தொகை எவ்வளவு?”
“இருநூற்றி ஐம்பது பிராங்.”
“ஆக, ஒரு மாதத்திற்கு அந்த ஊழியர் ஐயாயிரம் பிராங்கிற்கே பெருமதியாகிறார். அதைவிட அவருக்கு எந்தப் பாத்தியதையும் கிடையாதா?”
“இது எனக்குப் புரியவில்லை”
“ஒரு தொழிலாளியின் எட்டுமணி நேர உழைப்பால் நீங்கள் பெறும் லாபம் எவ்வளவு?”
“என்ன, அவர்கள் உழைப்பால் எங்களுக்கு ஆதாயமா? முழு உற்பத்திச்சாதனங்களும் எங்களுக்கே சொந்தமாக இருக்கும்பொழுது எங்கள் வருமானமும் அவற்றிலிருந்தே கிடைக்கின்றன. இது உங்களுக்கு தெரியாதா?”
“ஆனால், நீங்கள் கடின உழைப்பாளி அல்லவே?”
‘நாங்கள் ஏன் உழைக்கவேண்டும்? மூலப்பொருள் எங்களுடையதாயிற்றே?”
“அதுதான் இல்லை. உற்பத்திச்சாதனங்கள் உங்களுக்கு எப்படிச் சொந்தமாக வந்தன என்ற வரலாற்றிற்கு இழுத்துச் செல்வதை ஒதுக்கிவிட்டுக்கேட்கிறேன். உற்பத்திச் சக்திகளான தொழிலாளர்களின் உறவின்றி உங்களால் ஓரடிக்கூட நகரமுடியுமா? அவர்கள் கரங்கள் பாவாமல் எந்த உற்பத்திச் சாதனங்களோ கருவிகளோ உலகில் இயங்க முடிந்ததா?”
சகல கலாவல்லவன் போல் சம்பாஷித்த பிரபு இப்போது பதிலேதும் சொல்ல வக்கின்றித் தறுதருத்து முழிசலானார். அவர் பார்வை, “என்ன சவத்துக்கு இந்த நபருடன் கனமான விஷயத்தில் வாய் வைத்தேன். தயவுசெய்து வேறு விஷயங்களைப் பேசுவோமா?” என்று கெஞ்சுவது போல் இருந்தது.
எனினும், அவர் இறுதிவரை போரில் தோற்றுப்போன வெள்ளடிச் சேவல்போல் தேகத்தை உலுப்பிக்கொண்டு சொல்கிறார்.
“வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும். தற்போதைய யதார்த்த உலகிற்கு வருவோம். தொழிற்சாலைகள், உற்பத்திச்சாதனங்கள் அனைத்திற்கும் உரிமையுள்ள எங்கள் தயவின்றி, எந்த உழைப்பாளியாவது வாழமுடியுமா? வாழத்தான் முடிகிறதா? எங்கள் தயாள குணத்தை நீங்கள் ஏன் சிந்தித்து பார்ப்பதில்லை…?”
“தொழிலாளர்களது உழைப்பின்றி ஓருநாள்கூட உங்களால் வாழமுடியுமா? இதனை நீங்கள் ஏன் உணர்ந்து கொள்வதில்லை?”
“முதலாளிகள் இல்லாமல் தொழிலாளர்கள் வாழ முடியாது. இதை நீங்கள் ஏன் தெரிந்து கொள்வதில்லை?”
இதையே நான் திருப்பிக் கேட்கலாம். ஆனால், நான் அப்படிக் கேட்கவில்லை.
என்னைச் சிறுபிள்ளையாகவும் தன்னை மேதாவியாகவும் கணித்து, இந்தக் கேள்வியைப் போட்டு என்னை மடக்கிவிட்டதாக அவர் தன்னுள் பெருமிதங்கொண்டு என்னைப் பார்த்தார். வக்கரித்துப்போன பத்தாம்பசலித்தனமான அவர்தம் வாதம் எனக்கு எரிச்சலை மூட்டிற்று.
சரித்திர ஓட்டத்தில் இருந்து வாழ்க்கைச் சுவடுகளைப் பிரித்து நிகழ்வுகளையே அவற்றின் விளைவுகளோடு நோக்கும் யந்திர அரசியல்.- பெரிய மேதாவிகளையே நிலை குலைத்திருக்கும்போது வெறும் வாய்ச்சவடால்வாதியாய் கோடீஸ்வரரான இந்த மனிதர் எம்மாத்திரம்?
அவர் வரித்த சுரண்டும் வர்க்கத்தின் கேடுகெட்ட தன்மைகளை விளக்கி அம்பலப்படுத்துவதோடு, அவரை விரோதி, எதிரி, துரோகி என்று என்னுள் ஆசுவாசப்படுவதை விடுத்து, அவர் சார்ந்த சித்தாந்தங்களைத் தோற்கடித்துத் தொழிலாள வர்க்க தத்துவங்களைப் பிரயோகித்து வசப்படுத்தச் சித்தங்கொண்டேன். விரோதி பணியாவிட்டால் என்னசெய்வது? என்பதையும் என்னுள் தீர்மானித்துக்கொண்டேன்.
“மது, மாது,சூது மீது கொண்ட ஆசையை அறுப்பவன்தான் முழு மனிதன்” என்று சொன்ன இந்த மனிதர், பொருள், பொன், ஆசையின் வேரறுக்க முடியாமல் தன் ஆளுமையையும் இழந்து தவண்டையடிக்கும் நிலைக்கு ஆளாக்கியது என்ன என்பதையும் புரியாமலிருக்கும்போது, ஒரு மேதாவி என்று அவரை நான் கணித்தேனே, அது எத்தகைய பேதமை என்று என்னுள் நொந்துகொண்டேன்.
இறுதியாக அவர்தம் வர்க்கசுபாவத்தைத் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்த என் மனசு துடிதுடித்தது.
4
முதலாளித்துவச் சுரண்டல் ஏகாதிபத்தியச்சிகரத்திற்குப் போய் உலகம் முழுவதையும் கபளீகரம் செய்த விறுத்தத்தைத் தொட்டுக்காட்டிவிட்டுச் சுரண்டல்வித்தையை விளக்கியபின், இந்தப் பிரபுவின் சந்திப்புக்கு முத்தாய்ப்பு வைக்கவும் தீர்மானித்தேன்.
சியாங்கேஷேக், சிங்மென்ரி, டல்லஸ், மக்கார்த்தி போன்ற உலகவிழுங்கிகள் கம்யூனிஸத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்ட வெளிக்கிட்ட அபூர்விகள். கம்யூனிஸம் ரஷ்யாவிற்கும், நவசீனத்துக்குமே மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிக்கொடுத்த முதுசம் என்று இவர்களின் குழந்தைத்தன நினைப்பு. வியட்நாமுக்கு இவர்கள் ஏவிவிட்ட ஜனநாயகச் சண்டியர்கள், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற தோரணையில் தப்பிப் பிழைத்த வரலாற்றை இந்தப் பிரபுவுக்கு நினைவூட்டினேன்.
அவர் அசந்தே போனார். தன்னிச்சாவாதப் புளுகுக் கலை இலக்கியக்காரர்போல் அவர் முகம் வெளிறிச் சாம்பியது.
மார்க்ஸிஸ கம்யூனிஸ விரோதிகளுக்கு நவசீனச் சரிவும், சோவியத் ரஷ்ய சிதைவும் வெகு குஷியான சங்கதிகள். இந்தச் சங்கதிகளே மார்க்ஸிஸம் புதிய வீறுகொண்டு உயிர்ப்பிக்க வழிவகுத்துள்ளன. என்பதை இந்தக் கோடீஸ்வர மூளையிலும் தடக்குப்படவில்லை என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல. கோயிற்கோபுரக் கட்டிடங்களில் மெழுகுவர்த்தி கொளுத்துவதே இவர் காணும் சுதந்திரதாகம். கடவுளே, கம்யூனிஸ்டுகள் வலுகெதியாகச் செத்துமடிய வேண்டும் என்று கோயில்களில் நேர்த்திக்கடன் வைத்த பெருமை இந்தப் பிரபுவையும் சார்ந்தது என்றும் ஏலவே அறிந்து வைத்திருக்கிறேன்.
உண்மையில் கம்யூனிஸ விரோதிகள் யுத்தப்பங்கிடாளர்கள். எங்கெங்கே யுத்தம், கலகம், அராஜகம், சுரண்டல், அடிமைத்தனம், ஒடுக்குமுறை உண்டோ அங்கெல்லாம் கம்யூனிஸ காரணர்களாயினர். ஜனநாயகப் போர்வையில் முதலாளித்துவ ஆயுதக் விரோதிகளே கலாசாரத்தை மக்கள் மீது சுதந்திரமாகப் பரப்பியவர்களும் கம்யூனிஸ விரோதிகளே. அண்மைய வளைகுடா யுத்தமும் கம்யூனிஸ விரோதிகளால் நடத்தப்பட்டதே. இன்றைய இலங்கை அரசியலும் கம்யூனிச விரோதிகளால் நடத்தப்படுவதே.
இச்சம்பவங்களையெல்லாம் வரலாற்றுடன் ஆதாரத்தோடு விஸ்தரித்துவிட்டு, “இவற்றையெல்லாம் உங்களால் மறுக்கமுடியுமா?” என்று கேட்டேன்.
இல்லை. என்று மறுக்க அவரால் முடியவில்லை.
“இவை மட்டுமா? இரண்டாவது உலக யுத்தகத்தை நடத்தியவர்களும் கம்யூனிஸ விரோதிகளே” என்று முத்தாப்பு வைத்தேன்….
ஹிட்லர், கொயரிங், முசோலினி போன்ற பாஸிஸ்டுகளின் உருவங்கள் அவர் மனக்கண்ணில் திரைபாவியிருக்கவேண்டும். அவர் முகத்தில் பிரேதக்களை பரவியது.
”உலகச்சொத்தை வறுகி ஏப்பம் விடுவதற்காகவே ஏகாதிபத்தியங்களால் கம்யூனிஸ விரோதம் பரப்பப்படுகிறது. அதே தோரணையில்தான் நீங்களும் அப்பாவித்தனமாகக் கம்யூனிஸ விரோதியானீர்கள்” என்றேன்.
அவர் இதை மறுக்கவில்லை, ஏற்பதாகவும் தெரியவில்லை. மௌனித்துக் கண்களைச் சிமிட்டினார்.
மேற்சொன்ன பாஜிஸ நாஜிகள் மூலம் இரண்டாம் உலகயுத்தத்தைக் கட்டவிழ்த்தவர்களின் வாரிசான இந்தப் பிரபு கம்யூனிஸ்டுகளை நிந்தனை செய்வது ஒன்றும் எனக்கு வியப்பாகத் தெரியவில்லை.
வளைகுடாப் பிரச்சினையை உலகயுத்தமாக்க முனைந்த ஏகாதிபத்தியத்தின் தோல்வியை மறுத்த இவர், துப்பாக்கியிலிருந்து அரசியல் பிறக்கிறது. என்ற தீவிரவாத யுத்தமரபுச் சிந்தனையைத் துதிக்கலானார். யுத்த முஸ்தீப்பு அவர் மண்டை ஏகலும் நிரம்பியதை இது நிரூபிக்கப் போதுமானது. ஆயினும், அவர் ஓர் அப்பாவி போலவே தன்னைக் காண்பித்தார்.
சுரண்டல் முறை என்பது எந்த வகையில் கையாளப்படுகிறது என்பதை விளக்கும்
என் நோக்கத்திற்கு இறுதியில் முறையான அத்திவாரமிடலானேன்.
“ஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளி மாதம் ஐயாயிரம் பிராங் பெறுகிறார். அவரின் வேலை நேரம், உழைப்பு, கூலி, லாபம் எல்லாம் இதில் அடங்குகின்றன. இந்த லாபம் உங்கள் உற்பத்திச் சாதனங்களிலிருந்தே கிடைக்கிறதென்றால், யந்திரவிசையால் அந்தச் சாதனங்கள் இரட்டிப்பு உற்பத்தியை வழங்கும்போது தொழிலாளர்கள் இரட்டிப்புச் சம்பளம் பெறுகிறார்களா?”
‘இல்லை’ என்று அவர் நேர்மையாகச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் சொல்லவில்லை.
“என்ன கேட்டீர்கள்?” என்று அசமந்தமாக மழுப்பலானார். நான் விடவில்லை.
“உற்பத்தி இருமடங்காகிறதே தவிர, தொழிலாளர்களின் ஊதியம். இரட்டிப்பபாவதில்லை அப்படித்தானே?” என்று கேட்டேன்.
அவர் பதிலளிக்கத் தயங்கினார். அநியாயத்தை ஒப்புக்கொள்ளவும் அவர் போக்கிரி மனசு துணியவில்லை.
நானே மறுபடி கிண்டினேன்.
”உங்கள் தொழிற்சாலைகளில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுவதுண்டா?”
“ஆம்”
“அந்தச் செக் ஷனில் எத்தனை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்?”
“ஆயிரத்துக்கும் அதிகம்”
“ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம்”
“சரி”
“ஒரு தொழிலாளி ஒரு மாதம் ஐயாயிரம் பிராங் சம்பளம் பெறுகிறார்?”
“ஆமாம்”
“மேலதிக வேலையுமுண்டு?”
“உண்டு”
“மேலதிக நேர ஊதியத்தை எப்படி நிர்ணயிக்கிறீர்கள்?”
“அவரவர் ஊதியத்தின் வீதத்தைப் பொறுத்து…”
“உதாரணம்…?”
“ஐயாயிரம் பிராங் பெறும் ஒருவருக்கு மணித்தியாலம் ஐம்பது பிராங்கும். ஆறாயிரம் பிராங் பெறும் ஒருவருக்கு அறுபது பிராங் என்றும் ஆகும்”
“மேலதிகநேர ஊதியம் கொடுப்பதைத் தவிர்த்து எட்டுமணி நேர வேலைப்படி நாளொன்றுக்கு மூன்று தொழிலாளர்களை அமர்த்திக்கொண்டு, வேலை இரட்டிப்பாகும்போது மேலும் மூன்று தொளிலாளர்களை வேலைக்கு உட்படுத்தலாம் அல்லவா? இதனால் வேலையில்லாதிண்டாட்டம் குறைகிறது. ஒரு தொழிலாளி எட்டுமணி நேர வேலை ஊதியத்தோடு ஓய்வாகிறார். லாபத்தை உற்பத்தியாளர்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பதுடன், மேலும் வேலைநேரத்தையும் குறைக்கலாம் அல்லவா?”
மலைத்துப்போன பிரபு சற்றுச் சீற்றத்துடன் சிறு குழந்தை போல் பதிலளித்தார்.
“அப்படியானால் நாங்கள் தொழிற்சாலைகளை இழுத்து மூட வேண்டியதுதான்.”
அது தான் நல்லது. தொழிற்சாலைகள் தனி நபர்களிடமிருந்து மாறி உழைப்பாளர்களின் பொதுச்சொத்தாகிவிடும். என்று சொல்ல நினைத்தேன். ஆனால், சொல்லவில்லை.
“இதை நீங்கள் எப்பவோ செய்திருக்க வேண்டும். ஆனால், அது உங்களால் முடியாத காரியம்”
“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”
“தொழிலாளர்களை வஞ்சிக்காமலோ சுரண்டாமலோ உங்களால் ஒரு கணமேனும் உயிர்வாழ முடியாது. உற்பத்திப் பெருக்கம் கூடினால் உங்கள் லாபம் பாதிக்கப்படும். ஆகவே, தொழிலாளர்கள் உற்பத்திப் பண்டங்கள் போல் தொழிற்சாலைகளுடன் அடைப்பட்டுவிட வேண்டும். அப்படித்தானே?”
“புரியவில்லை ?”
“புரியவில்லையா அல்லது நீங்கள் கையாளும் முறை வேறுபட்டதா?”
மீண்டும் மழுப்பலானார்.
முதலாளித்துவ வளர்ச்சியின் பொருளாதார உச்சநிலை உபரி மதிப்பாகும். உபரி மதிப்பை ஏற்படுத்துதல் இந்த உற்பத்தி முறையின் வழி என்பதை விபரித்துக் கூறினேன்.
“அந்த விதி உங்கள் சுரண்டலின் சாராம்சத்தைக் கொண்டது. உங்கள் வர்க்கம் பாட்டாளி வர்க்கத்தின் ஜீவாதார நலன்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அதுதான் உண்மை.”
“இதை நான் முற்றாக மறுக்கிறேன்”
“நீங்கள் தொழிலாளியை உங்கள் யந்திரங்களின் விசையோடு இணைத்துவிடுகிறீர்கள். அவர் தன் மேலதிக உழைப்பை உங்களுக்கே இனாமாக அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார். இல்லையேல் அவர் உயிர் வாழ முடியாது. அவர் உழைப்பதற்கு அவசியமான உற்பத்திச் சாதனங்கள் உங்கள் உடமையாக இருக்கின்றன. இந்த லட்சணத்தில் தொழிலாளி ஒரு நாள் உழைக்கின்ற நேரமானது அவசியமான உபரி நேரம் என்றாகிறதல்லவா?”
தலையிடி வந்தவர் போல் நெற்றியைச் சுழித்துக்கொண்டார்.
நான் விட்டுவிடுவதாக இல்லை.
“தொழிலாளி அவசியமான நேரத்தில் அவசிய தேவையான பொருளை உற்பத்திபண்ணுகிறார். அதன் மதிப்பு அவருடை உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் சமமானது. உபரி நேரத்தில் மேலதிக பொருளையும் உற்பத்தி செய்கிறார். அந்த உபரி மதிப்புப் பொருளுக்கு நீங்கள் கூலி கொடுக்காமல் சுவீகரித்துக் கொள்கிறீர்கள். அது லாபம் என்று உங்கள் வைப்பில் போய்விடுகிறது. இப்படித்தான் உங்களது முழு அம்சங்களும் சுரண்டலையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன, அல்லவா?”மீ”
காற்றுப் போன பலூன்போல் தம் விட்டுப் போயிருந்தார் பிரபு.
“நீங்கள் ஜனநாயகப் பல்லக்கில் ஏறி இருந்து கொண்டு தொழிலாளர்களை இப்படித்தான் ஈவிரக்கமின்றிச் சுதந்திரமாகச் சுரண்டுகிறீர்கள். இதுதான் உங்கள் வர்க்கக் குணாம்சம்”
மயக்கம் தெளிந்து உசார் பெற்றவர் போல் சாங்கோபாங்கமாக சம்பந்தமில்லாத ஒரு குண்டை அவர் தூக்கிப் போட்டார்.
“நீங்கள் ஒரு பத்திரிகையாளரை அனுப்பியிருக்கலாம். சமூகவியல் தத்துவ சித்தாந்த வித்தகரான ஒருவர் என்னைப் பேட்டி காண வந்திருக்கக்கூடாது.”
எனக்கு விஷயம் புரிந்தது, அவருக்கும் புரிந்தது புரியாதவர்கள் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். அதைத் தான் அவர் விரும்புகிறார்.
என்னைச் சபிப்பதுபோல் அவர் கண்கள் என் மீது விழி குத்தி நின்றன.
நான் நீறுகக்க உற்றுப்பார்த்தேன்.
பிரேத விசாரணைக்குட்பட்ட கொலைக் கைதிபோல் அவர் முகம் தேம்பிக் கிடந்தது…..
அவர்கூறும் சுதந்திரமும் ஜனநாயகமும் சுரண்டும் வர்க்கத்தின் கபடத்தனமான கவசங்கள் என்பதை விளக்க எத்தனிக்கையில், அவர் திரை நீவி மறையலானார்.
‘முதலாளித்துவ அத்திவாரமே சுரண்டலாகையால் அது தனக்கே சவக்குழி தோண்டித் தன்னையே மோட்டுத் தனமாக அழிக்கவல்ல வெடிக்குண்டைத் தன்னுள் வைத்திருக்கிறது’ என்று சொல்ல வாயுன்னினேன்.
திரை நீங்கியதாய் இல்லை.
எனினும், குளிர் விடுவாதாயில்லை.
சூரியன் உதிக்கும் வரை….
– நரகத்திலிருந்து… (மூன்று குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1994, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.