கரிப்பு மணிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 2,009 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-13

ராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட் டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை – ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் தோல்வி அவ மான உணர்வுடன் வெளிவரவில்லை. ஒரு எரிமலை வெடிக்கப் போகிறதென்ற உணர்வுடன் அவன் பொன் னாச்சியைக்கூடப் பார்க்கக் காத்திராமல் வெளிவந்தான். நேராகத் தொழிற்சங்கத் தனபாண்டியனைக் காண வீட்டுக்கு விரைகிறான். 

ஒரு காலத்தில் தூத்துக்குடி நகர்ப்புறத்தில் உப்புத் தொழிலாளருக்கென்று பட்டா செய்து கொடுத்த மனைகள் கொண்ட தெரு அது. இந்நாள் அந்த மனையில் உப்பளத் தொழிலாளி ஒருவனும் கட்டிடம் எடுத்துக்கொண்டு வாழ வில்லை, வேலை புதிய துறைமுகத்தில் அலுவலக செய்பவனும், கல்லூரியில் பணியாற்றுபவரும் வாடகைக்கு இருக்கும் வகையில் கண்ட்ராக்ட், வியாபாரம் என்று பொருளீட்டும் வர்க்கத்தார் அங்கே மனைகளை வாங்கி வீடுகள் கட்டியிருக்கின்றனர். பச்சையும் நீலமும் பாங்காப் பூசப்பெற்ற சிறு இல்லங்கள் அழகுற விளங்குகின்றன. “கமான்’ வளைவுகளில் வண்ணப் பூஞ்செடிகளும்,பசுமையான  குரோட்டன்சுகளும் வளர்க்கப்பெற்ற வீடுகளும். இருக்கின்றன. நல்ல வெய்யில் நேரம். இந்த நேரத்தில் அவன் சைக்கிள் சக்கரம் மணலில் புதைய அந்த வீட்டின் முன் வந்து சுற்றுக் கதவைத் திறக்கிறான். 

தனபாண்டியன் உப்பளத்தொழிற்சங்கத் தலைவராக வளர்ச்சி பெற்று வந்திருப்பதை அந்த வீடே அறிவிப்பதாக அவனுக்கு அப்போதுதான் சுருக்கென்று தைக்கிறது. அவன் இத்தனை நாட்களில் அவர் வீட்டுக்கு வந்திராமலில்லை. இருட்டில், மாலை நேரங்களில் அவசரமாக வந்து செல்வான். நான்கு வருடங்களுக்குமுன் இந்த வீடு எப்படி இருந்ததென்று அவன் அறிந்திருக்கிறான். ‘ஓலைக்குச்சு ஒன்று உள்ளே தள்ளி’ இருந்தது. அப்போது அந்தத் தெருவும் இவ்வளவுக்கு வண்மை பெற்றிருக்கவில்லை. முன்புறம் தூண்கள். ங்காரமாக விளங்கும் வராந்தா, மொசைக் தளம். வராந்தாவில் மேற்சுவரில் வரிசையாக அரசியல் தலைவர் களின் படங்கள் விளங்குகின்றன. காமராசர், காந்தியடிகள். நேரு, இந்திரா, அண்ணாதுரை ஆகிய எல்லாத் தலைவர் களின் படங்களும் விளங்குகின்றன. உட்புகும் வாயிலில் ஒரு வண்ணப்பூந்திரை தொங்குகிறது. வராந்தாவில் நான்கு கூடை நாற்காலிகள் இருக்கின்றன. 

அவன் சிறிது குழப்பத்துடன், “சார்…!” என்று கூப்பிடு கிறான். உள்ளிருந்து தொப்பிபோல் முடிவிழும் தலையும், பெரிய பெரிய வில்லைகளாக, தங்க பிரேம், மூக்குக் கண்ணாடியும் கட்டம் போட்ட சட்டையுமாக ஒரு இளைஞன் வருகிறான். 

“அப்பா…அப்பா இருக்காரா? உப்பளத் தொழிலாளி ராமசாமி, பனஞ்சோலை அளம்….” என்று பரபரப்புடன் கூறும் அவனை அவன்  அலட்சியமாக நோக்கிவிட்டு, “அப்பா இல்லையே?…” என்று மறுமொழி கொடுக்கிறான். “அப்பாவை இப்பல்லாம் வீட்டில் பார்க்க முடியாது. சாயங்காலம் எட்டு மணிக்கு வந்தீங்கன்னா இருப்பார்.” 

“ஊரிலதான இருக்காரு?” 

“தெரியாது, திருச்செந்தூர் போறதாகச் சொன்னாங்க. நீங்க சாயங்காலம் வாங்க!” 

ராமசாமி வெளியில் திரும்பப் போகிறான், சண்முகக் கங்காணியிடம் கூறலாமா என்று நினைக்கிறான். தனக்கு வேலை போனதை இழப்பாகக் கருதி எவரிடமும் புலம்பி முறையிட அவனுக்கு அப்போது 

அப்போது பிடிக்கவில்லை. எனவே பொறுத்திருந்து மாலை ஏழுமணி சுமாருக்கு தனபாண்டி யனைத் தேடி வருகிறான். அந்த நேரத்தில் வீட்டுச் சுற்றுக்குள் யார் யாரெல்லாமோ தலைவருக்காகக் காத்து நிற்கின்றனர். நீலச்சட்டைபோட்ட இளைஞன் ஒருவன் ஒரு நரைமுடிக்காரரிடம், “அஞ்சு மணிக்கி வாங்கன்னாரு இந்நேரமாச்சு, காணம்’ என்று கூறிக்கொண்டிருக்கிறான். 

ராமசாமி அருகில் சென்று, “நீங்க எந்த அளக்காரரு?’ என்று விசாரிக்கிறான். 

இளைஞன் குனிந்து பிடரியைச் சொறிந்து கொள் கிறான். 

“பீங்கான் கம்பெனி…” 

“”உப்பளக்காரரில்லையா?” 

“இல்…ல.” 

“அதுக்கும் இவருதாந் தலைவரா?” 

‘ஆமா…”. 

“தொழிலாளர் தகராறா?” 

“தகராறுதா. அதில்லாம இங்க ஏன் வாரம்?…” என்று நரைத் தலை கேட்கிறான். 

சற்றைக்கெல்லாம் தலைவர் சைகிளில் வருகிறார். சைகிளைப் பாங்காக நிறுத்துமுன் ஒரு ஆள் வந்து வாங்கித் தள்ளிக் கொண்டு செல்கிறான். புதிய குஞ்சங்கள் கறுப்பும் சிவப்புமாக அலங்கரிக்கும் ஆசனமும் பளபளக்கும் மின் விளக்குமாக அந்தச் சைகிள் அலங்கரிக்கப் பெற்ற புதுமணம் பெண் போல் நிற்கிறது. அவன் தனது துருப்பிடித்த பழைய சைகிளைப் பார்த்துக் கொள்கிறான். சைகிள் வைத்துக் கொண்டு, படிப்பகத்தில் சென்று பத்திரிகை படிக்கும் வித்தியாசமான உப்பளத் தொழிலாளியாக இருந்த. ராமசாமி… அவனுக்கு இப்போதும் ஒரு குறைவும் வந்து விட வில்லை என்று நினைத்துக் கொள்கிறான். தலைவர் நீலச் சட்டைக்கார இளைஞனிடம் பேசிவிட்டுத் திரும்புகையில் ராமசாமி வராந்தாவில் ஏறி நின்று வணக்கம் தெரிவிக்கிறான். 

“என்ன ராமசாமி? ஆளையே காணம்? அம்மா சொகமா…” என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கு நிற் காமல் மேல் வேட்டி விசிற, திரையைத் தள்ளிக் கொண்டு. அவர் உள்ளே நுழைந்து விட்டார். அவர் நுழைந்ததும் அந்த ஆட்களும் தொடர்ந்து செல்கின்றனர். 

ராமசாமி சற்றே பிரமித்தாற் போல் நிற்கிறான். வராந்தாவில் அழகிய இளஞ்சிவப்புக் கூடுபோட்ட விளக்கு ஒளியைச் சிந்துகிறது. 

அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும் போது அவன் உள்ளே செல்வது பண்பல்ல என்று நிற்கிறான். பணம் பிரித்துச் செலவு செய்து, துண்டுக் கடிதாசிகள் அச்சிட்டு அவன் பரப்பிய போது அந்தத் தலைவரிடம் கேட்க, காட்ட… வந்திருக்கிறான். அது படிப்பகச் சந்திப்புத் தான். 

வீட்டுக்கு வந்தாலும் முன்புற முற்றத்துக்கப்பால் வராந்தாவைக் கடந்து அவன் சென்றவனல்ல. 

தனது ஆவேசக் கொந்தளிப்பு ஏமாற்றமாகிய சிறு பாறையில் பட்டு உடைந்து சக்தி இழந்து போனாற் போல் தோன்றுகிறது. எச்சிலை விழுங்கிக் கொள்கிறான். 

தலைவருக்கு இந்தச் செய்தி தெரிய வேண்டியதுதான் தாமதம்; உடனே ஆயிரம் பதினாயிரம் உப்பளத் தொழி அவர் ஒன்று சேர்த்து விடுவார். மிகப் பெரிய தோர் பிரளயத்துக்குக் கருவானதோர் எழுச்சியை அந்த முதலாளிகளும் கணக்கப்பிள்ளைகளும் எதிர் நோக்கிச் சமாளிக்க வேண்டும் என்றதோர் உறுதி, கொடிக் கம்பமாய் அவனுள் எழும்பியிருந்தது. அந்தக் கொடிக் கம்பத்தில் தலைவர் போராட்டக் கொடியை ஏற்றி விடுவார் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால்… ஆனால்… 

என்ன ஆயிற்று? 

ஒரு நிமிடம் ஒரு யுகமாகப் போகிறது. 

அவர்கள் பேசி விட்டு, பேசிக் கொண்டு வெளியே வருகின்றனர். தனபாண்டியனும் வருகிறார். அவர்கள் சென்ற பிறகுதான் ராமசாமியின் மீது அவர் பார்வை விழுகிறது. 

“ஏம்ப்பா, ராமசாமி, வெளியே நிக்கே?….ஆளவே காணம் ரொம்ப நாளா ! நோடீசு கொண்டு போட்டுட்டுப் போன சுப்பையா வீட்டில பேசக் கூப்பிட்டா! நா வரதுக்கில் லாம போச்சி…” 

“சொல்றதுக் கொண்ணுமில்ல, அண்ணாச்சி, சீட்டக் கிழிச்சிட்டாங்க!” ராமசாமிக்குக் குரல் படீரென்று உடைந் தாற் போல் வருகிறது. 

கண்கள் நிலைக்க அவர் வியப்பை வெளியாக்கு கிறார். 

“என்ன! சீட்டைக் கிளிச்சிட்டாகளா? ஒனக்கா?” 

‘ஆமாம். நாயம் கேட்டே. ஒண்ணில்ல அண்ணாச்சி அந்தத் தடியன் நாச்சப்பன், கணக்கப்புள்ள, இவனுவ பண்ணுற அக்குரவம் ஒண்ணா, ரெண்டா? தாய்க் குலத்துக்கு துரோகம் செய்யிறானுவ. பாத்திட்டு எப்பிடி இருக்க முடியும்? நம்ம ஒடம்புல ரத்தம் ஓடல? அளத்தில் ரெண்டு மாசமுன்ன ஒரு பொண்ணு புள்ள பெத்திட்டா. அவ உப்புச் சேத்து மண்ணுல விழுந்து கெடக்கா. இவனுவ ஏசுறானுவ. அவளுக்கு ஒரு ஒதவி, ஒத்தாசை செய்யணுமின்னு தொழிலாளிக்குத் தொழிலாளியே ஈரமில்லாம பயந்து சர்வுறா. நான் அப்பவே ஒரு முடிவெடுக்கணுமின்னு வச்சிட்டே…” 

அவனுக்கு எதை முன்பு சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று நிதானம் புரியவில்லை. மோதியடித்துக் கொண்டு சொற்கள் வருகின்றன. 

“நீ சொல்ல வந்த விசயத்தச் சொல்லு ராமசாமி, சீட்ட கிளிக்க இப்ப என்ன வந்தது? அதில்ல முக்கியம்? நீ மாசச் சம்பளக்காரனாச்சே?'” 

“ஒண்ணில்ல அண்ணாச்சி, ரொம்ப நாளாவே அந்த நாச்சப்பனுக்கு எம்மேல காட்டம். அளத்துல ஒரு பொண்ண வளச்சிட்டுக் கேடு செய்யப் பாத்தா. அது கொஞ்சம் ஒசந்த பண்புள்ள பொண்ணு. இவெ அல்டாப்புக்கு மசியல நாவேற கண்காணிச்சிட்டே இருந்தே. அவனுக்கு அது புடிக்கல. சங்கம், தொழிலாளர் ஒத்துமைன்னு பேசுறேன்னு துரை ஏஜண்டுக்கும் கோபம். வீட்டக்காலி பண்ணுன்னா; அது ஒரு மாசமாவது, பெறகு, நேத்துக்காலம் முதலாளி என்னைக் கூப்பிடுறான்னு கணக்கப்புள்ள வந்தா.நா மொதலாளி முகத்தயே பார்க்குறதில்ல…” 

“ராமசாமி, உனக்குச் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லத் தெரியல. ஒன்ன வேலய விட்டு ஏன் நிப்பாட் டினாங்கறதச் சுருக்கமாச் சொல்லு. நான் ஏழரை மணிக்கு ஆத்தூரில் ஒரு மீட்டிங்குக்குப் போவணும்” என்ற தலைவர் கடியாரத்தைப் பார்க்கிறார். 

“சுருக்கந்தா. முதலாளி கூப்பிட்டனுப்பினா. நாச்சப்பன் இருந்தான். சோலைப் பயல் வேற குடிச்சுப் போட்டு நின்னான். திட்டமிட்டு எல்லாம் செய்தாப்பல என்ன அவமானம் செய்யவே எனக்குக் கோவம் வந்திரிச்சி. பொண்டுவகிட்ட அவன் நடக்கிறதச் சொன்னே. ஒண்ணும் உளுமாந்திரம் இல்லாம இவனுவ எனக்கு அம்பது ரூபா சம்பளத்து எதுக்கு ஒசத்தறாங்க.” 

“சம்பளம் ஒசத்தினாங்களா?” 

“ஆமா அண்ணாச்சி. ஒனக்கு சம்பளம் அம்பது ரூ ஒசத்தியிருக்கே, இந்த வளவில இருந்துக்கன்னா. இந்த எரையை வச்சு எதுக்கோ என்னை இழுக்கறாங்கன்னு தோணிச்சி. நா அப்ப நாயம் கேட்டே.” அவர் முகத்தைச் சுளிக்கிறார். 

“ஏம்பா, சம்பளம் அதிகம் கொடுக்கிறோமின்னா தூண்டில் இரைன்னு சொல்லுற? குடுக்காட்ட எதுவுமில் லன்னுறிய, நீங்களும் ஒரு வழிக்கு வரணுமில்ல? சொல்லப் போனா, நியாயமா, ஒன்னைப் போல தொழிலாளிங்க வாய் திறக்க ஒண்ணில்லே,வார்முதல் பண்ணுறவ. பெட்டி சுமக்கிறவன் அன்னாடக் கூலியில் மாயிறான். அத்தையும் கங்காணி புடிச்சிட்டுக் கணக்கப்பிள்ளைக்கு லஞ்சம் குடுக்கான். அவனையும் சொல்லிக் குத்தமில்ல், அவன் முதலாளியிடம் ஈவுகாட்ட வேண்டியிருக்கு. நாம ஒட்டு மொத்தமா சேத்துப் பார்க்கணும். அம்பது ரூபா அதிகச் சம்பளம் போட்டுத்தாரேன்னா நீ ஒத்துக்க வேண்டியது தானே?” 

ராமசாமி குழம்பிப் போகிறான். பதில் வரவில்லை. 

“எப்போதும் வருமம் வச்சிட்டே எதையும் கண் ணோட்ட மிட்டுப் பயனில்லை தம்பி. சரி, பிறகு என்ன நடந்தது? உங்க வேலையும் வேண்டாம், எதுவும் வேண் டான்னு உதறி எறிஞ்சிட்டு வந்திட்டியா?” 

“அப்படி எதுவும் சொல்லல. இது சூழ்ச்சின்னு மனசுக்குப் பட்டிச்சி. நான் கண்ட்ராக்ட் அக்குரமம் பண்ணுறதச் சொன்னே. முதலாளி நான் குடிச்சிருக்கேன்னு ஏசுனா. சோலைப் பயல் என்னை வெளியே தள்ள வந்தான். உண்மையைச் சொன்னதுக்கு இந்தக் கூலி அண்ணாச்சி, அவமானம் பண்ணினா, கூப்பிட்டனுப்பி; நீங்க சொல்லுங்க நாயம்… 

ராமசாமிக்குக் குரல் தழுதழுத்து விடுகிறது. 

“ஏன்ல பொம்பிளபோல அழுவுற? உன்னைப் போல ரெண்டுங்கெட்டான் பயலுவதா காரியத்தைக் கெடுத்துக் குட்டையக் குழம்புறிய, தொழிலாளர் சங்கம்னு ஒரு அமைப்பு, அதுக்கு ஒரு தலைவன்னு இருக்கறப்ப, நீ விசயத்த அப்பவே ஏங்கிட்டல்ல வந்து சொல்லணும்? கூப்பிட்டனுப்பினா; வீட்டக்காலி பண்ணச் சொன்னா, இல்ல, இந்த வளவில் வந்திருன்னு சொன்னா கூலி அதிகமாக் குடுத்தா இதெல்லாம் ஏங்கிட்ட வந்து சொல்லி யோசனை கேக்காம, முதலாளி மொகத்துக்கு நேர எதுத்துப் பேசுனா எப்படி? அவங்க காங்கரீட்டுக் கோட்டை. பத்துநூறு ஆனைபலம்கூட இடிக்க முடியாது. அப்படி இருக்க, பேசத் தெரியாதவன்லாம் போயி என்னேனும் சொல்லிடறிய. இப்பப்பாரு, ஒருபயல், அமைச்சர் கலந்துக்கற கூட்டத்தில் போயி ஏறுமாறாப் பேசிட்டா. ஊழல் மலிஞ்சிருக்கு, இவன் லஞ்சம் கேட்டான்; அவன் வாங்கிட்டான்னு எடுத்து விட்டிருக்கா. இந்தப் பயகளுக்கு மரியாதையாப் பேசத் தெரியலன்னு அரசுச் சார்புப் பத்திரிக்கை பத்தி பத்தியா திட்டறா,. நாம் போயி மன்னாப்புக் கேக்கணும். முதலாளிமாருங்ககிட்ட அவனுவ வாழப்பழத்தில் ஊசிவய்க் கிறாப்பல நாமும். பேசணும், அது ஒரு கலை. சரி…. இப்ப மணி ஏழாச்சி,நான் போவணும், நீ நாளக்கி வந்து என்னப் யாரு. நான் அவங்களை நல்லவிதமா காண்டாக்ட் சேஞ்சி, உனக்கு ஏதும் ஏற்பாடு செய்யிறேன். திரும்ப வேலைக்கு எடுத்துப்பாக…” 

தலைவர் முடித்து விடுகிறார். 

ராமசாமிக்கு உருப்புரியாத உணர்வுகள் வந்து குழம்பி அவனைப் பந்தாடுகின்றன. 

இவன் தலைவனாக வேண்டுமென்பதற்காக அவன் எத்தனை பேரிடம் பேசி ஒன்று கூட்டினான்? 

தலைவர்…தலைவர்…. பெரிய வீடு கட்டி விட்டான். பளிங்குத் தரை, திரை, சோபா…அது இது என்று மேலேறிப் போகிறான். சே! 

மண்ணை வாரி எறிய வேண்டும் போலிருக்கிறது. 

அவன் மீண்டும் துப்பிய எச்சிலை விழுங்குவது போல அங்கு வேலை செய்ய அவர் எடுத்துச் சொல்வாராம்? 

சைகிளைத் தள்ளிக் கொண்டு அவன் தெருவில் திரும்பி வரும்போது தெரு இருட்டாக இருக்கிறது. ஆனால் அங்கே வீடுகளிலிருந்து வெளிச்சம் வழிகிறது. 

இந்த அநியாயத்தைக் காரணமாக்கி ஓர் போராட் டத்துக்கு வழி வகுக்க வேண்டுமென் றல்லவோ கொதித்து வந்தான்? என்ன மோசமான தலைவர்! 

ஒரு குறியில்லாமல் அவன் நடந்து செல்கிறான். விரிந்து கிடக்கும் முட்செடிப் புதரைத் தாண்டி மணல் தேரியில் தெருக்கள் கூரையும் சார்ப்புமாக இடிந்து சுவரும் ஓட்டைப் பந்தலுமாக, வேலிப்படலும் மண் முற்றமுமாகத் தொழி லாளர் வீடுகள் நிலவு மஞ்சளாக வந்து குலுகுலுவென்று முற்றங்களில் விளையாடும் குழந்தைகளைப் பார்க்கிறது. தெருவோரம் கிழவர் ஒருவர் பனஓலை சுமந்து செல்கிறார். நடையிலிருந்தே அவனைக் கண்டு கொள்கிறார். கண்களைச் சரித்துக் கொண்டு கேட்கிறார். 

“ஐட்ரா தம்பியா?” 

“ஆமா தாத்தா. இங்கியா ஒங்க வீடு?” 

“ஆமா. அதா கடாசில. இப்பத்தா வார, ஓலை வாங்கிட்டு… எங்க ஓல கெடக்கிது? ரெண்டு ரூவாக்கி வாங்கின முங்கில் பதினஞ்சி ரூபா விக்கிது. *பெரணி தாரு.’ *’ஈரக்கிளி’ எல்லாம் வெலகுடுத்து வாங்கி வைக் கிறாப்பலியா இருக்கு? காயித பாட்டரிக்காரன் அள்ளிட்டுப் போறா. ஒரு சுசய்ட்டின்னு வச்சா, அத்த மொதலாளிய நாலாள விட்டுப் பிரிச்சிவிட்டிடறா….” 

ராமசாமி எதுவும் பேசாமல் நிற்கிறான். எந்தத் திசையை நோக்கினாலும் இப்படி மனித சமுதாயமே ஆள் பவர், அழுந்தப் பெற்றோர் என்று இரண்டுபட்டுக் கிடக்குமோ? 

“சுசய்ட்டிய ஏன் தாத்தா பிரிக்கணும்” 

“ஏன் பிரிக்கணும்? நாம ‘சேர்’ கட்டி சங்கம் சேந்து சாமான் வாங்கிப் போட்டு பொட்டி முடஞ்சு வித்து லாவம் காணுவமின்னா, தனி முதலாளிய வியாபாரம் எப்படியாவும்? நாலாளுக்குக் காசு அதிகம் குடுத்துத் தன் வசம் இழுத்துக் கிட்டான். சங்கம் பிரிஞ்சு போச்சு தம்பி, நீ பெரியவங்க கிட்டல்லாம் பேசுறவ தொடர்பிருக்கின்னு சொல்லிக்கிறா. இந்தத் தொழில் எங்க வயித்துக்கு அரைக்கஞ்சி வார்க்கும் தொழில் பனஓலை, நாரு, மூங்கில் எல்லாம் நியாய விலைக்கு எங்களுக்குக் கிடைக்கிறாப்பல பண்ணினீன்னா கையெடுத்துக் கும்பிடுவம், ஓட்டுக்கேக்க எப்பமோ கச்சி கச்சியா கொடி போட்டிட்டு வாராவ. ஓட்டப் போடுங்க. ஒங்கக்கு எல் லாஞ் சேஞ்சு தாரமின்னுதாவ. எதும் சரிவாரதில்லை. எங்க ஒழப்ப, அரை வெலய்க்கிப் போடுதோம் பசிக் கொடுமையில்…” 

இங்கெல்லாம் ராமசாமி தொழிற்சங்கக் காசு பிரிக்க வந்ததுண்டு. அந்த தொழிற்சங்கக் காசு -கட்டிட வாடகை இரண்டொரு பேப்பர் வாங்கும் செலவு இவற்றுக்குக் கட்டி வருவது கூட கஷ்டம். தொழிற்சங்கத்துச் செயலாளன் பேச்சிமுத்து இங்குதான் இருந்தான். அவன் இந்தத் தொழிலையே விட்டுச் சென்று எங்கோ வியாபாரம் செய் கிறானாம்… 

“என்ன தம்பி…பேசாம இருக்கியே? எங்க தொழில்ல பாஞ்சாலி கஷ்டப்படுது. அரைக்கஞ்சிக்கு முடியாம், பிள்ளியள உப்பு அறைவைக்கு அனுப்புறம். மாசி பங்குனிக் காலத்துல எங்க பொம்பிளக பண்பாட்டு வேலைக்குப்போயி ரெண்டு மூணு கொண்டாருவா, இப்ப அதுவுமில்ல…” 

ராமசாமியைக் கிழவர் எல்லாச் சக்திகளையும் உள்ளடக்கிக் கொண்ட தூணாகக் கருதி முறையிடுகிறார். அவனோ எரிச்சலை விழுங்கிக் கொள்கிறான். 

“தாத்தா, உங்களுக்குள் ஒத்துமை இல்லாம கூட்டுறவு சங்கத்தையே உடய்க்கிறீங்க. பொறவு வெளியாளைக் கூப்பிடுறிய. ஒரு தொழிலாளி சங்கம்னா அந்தத் தொழிலாளி தாந் தலையா நிக்கணும். வெளியே இருக்கறவனைக் கூப்பிட்டா, அவன் ஒங்க தலையை முதிச்சிட்டு ஏணி ஏறுவா. பொறவு அவனும் மொதலாளிமாரும் ஒண்ணு.” 

“அது சரித்தா? ஆனா இந்தக் கூறுகெட்ட தொழிலாளி யளுக்கு அதிகாரத்துல இருக்கிறவன்கிட்ட பேசி என்ன வக்கிருக்கு? அவனுக்கு எழுத்தா படிப்பா, என்ன எளவு புரியிது? அதுக்கு ஒரு வெளியாளத்தானே நம்ப வேண்டி யிருக்கு? அவன்னா போறா வாரா, எழுத்தெழுத பேச கொள்ள…” 

அதுவும் நியாயம். 

படிப்பு இருக்கிறதா? இருந்தாலும் அறிவுக். கண்கள் னைத்தையும் உப்பு உறிஞ்சிப் பீளை படரச் செய்து விடு கிறது. 

அப்போது அவனை இனம்கண்டு கொண்டு ஏழெட்டு இளைஞர்கள் வந்து சூழ்கின்றனர். “வணக்கம் அண்ணாச்சி. பணம் பிரிக்க வந்திருக்கம். அம்மன் கொடை, தாராளமாப் போடணும்…” முகமே தெரியவில்லை. குரல்கள்தாம் இசக்கிமுத்து, பரிமளம், கிருட்டினன் என்று அறிவிக்கின்றன. 

“வயிறு கூழுக்கழுகிறது. அம்மனாவது, கொடையா வது?” என்று எரிச்சலுடன் ராமசாமி கேட்கையில் கிழவன் ‘தப்பு தப்பு’ என்று அபராதம் வேண்டுகிறான். “வெடலப் புள்ளய இப்படியெல்லாம் சொல்லப் போவதா. அரிசி படி அஞ்சு ரூவான்னு விக்கி, ஏதோ இன்னக்கி அரைக் கஞ்சினாலும் குடிக்கிறது. ஆத்தா கருணைதான?” ராமசாமிக்கு எரிச்சல் இன்னும் கிளர்ந்து மண்டுகிறது. 

அரைக்கஞ்சி அவள் கருணை ; பட்டினி அவள் கருணை அறியாமை, மௌட்டீகம் அவள் கருணை. அடுத்தவனை நம்பி, அவன் அமுக்கிட்டு மேலேறுறதும் நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டுச் சாவுறதும்கூட அவ கருணைதா, சேய்…! 

அவன் சைக்கிளைத் தள்ளி ஏறி மிதித்துக் கொண்டு போகிறான், 

அத்தியாயம்-14 

ஆடி மாசத்திலே ஆண்டுக்கொருமுறையே வரும் அம்மன் விழா. கண்கள் கரிக்க உருக்கி எடுக்கும் வெம்மைச் சீட்டில் சில்லென்று பன்னீர்த்துளிகள் போல் அவர்கள் அனுபவிக்கும் ‘கொடை’ நாட்கள். ‘பனஞ்சோலை அளத்தில் இந்தக் கொடை நாளில் வேலை கிடையாது ‘கண்ட்ராக்ட்’ தவிர்த்த அளக்கூலிகளுக்குப் பதினைந்து ரூபாய் ‘போனஸ்’ எனப்படும் சம்பளம் உண்டு. 

பொன்னாச்சிக்கு வேலைக்குச் சேருகையில் செங்கமலத் தாச்சி ‘போனஸ்’ என்ற சொல்லை உதிர்த்ததும் தான் ஆவலோடு அதை நினைத்து மகிழ்ந்ததும் நினைவிருக்கிறது. ஆனால் அவள் ‘கண்டிராக்ட்’ கூலியாதலால் அந்தச் சலுகை கிடையாது என்று கூறிவிட்டார்கள். 

மருதாம்பாளின் அளத்தில் விடுப்பும் கிடையாது; உபரிப் பணமும் கிடையாது அவள் வழக்கம்போல் வேலைக்குப் போய்விட்டாள். 

அறைவைக் கொட்டடிச் சிறுவர்களுக்கு ஐந்தைந்து ரூபாய் கொடுத்திருக்கின்றனர். பச்சைக்கு மிகவும் மகிழ்ச்சி. 

அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள தொழிலாளர் தெருவிலுள்ள முத்தலாலம்மன் கொடை அந்தப் பக்கத்தில் பிரசித்தம். அந்தக் குடியிருப்பின் வீடுகள், பொருளாதார நிலையில் அடிமட்டத்திலுள்ள மக்கள் உப்பு மணற்காட்டில் வாழுவதற்கான நிழலிடங்கள் என்பதைச் சொல்லாமல் விள்ளும் திறனுடையவை. ஆனால் வேப்பமரத்தினடியில் சதுரக்கட்டிடமாக விளங்கும் முத்தா லம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கும் செய் நேர்த்திகள் நடந்தேறும். இந்த ஆண்டும் கோயிலின் சுவர் களில் பச்சை வண்ணமும், சிவப்பு வண்ணமும், மஞ்சள், நீல வண்ணங்களும் கொண்டு பிச்சைக்கனி தன் கை வண்ணத்தைச் சித்திரம் தீட்டிக் காட்டியிருக்கிறான். அம்மன் கொடைக்கு, எப்படியேனும் காசு பிரித்து விடுவார்கள். தொழிலாளிகள் அதை மட்டும் கொடுக்கத் தவற -மாட்டார்கள். 

இந்த நாட்களில் பெண்கள் சீவிச்சிங்காரித்துக் கொண்டு மஞ்சளும் பசுமையுமாக மணலில் பாடிக்களிப்பார்கள், பொரி கடலை, சிறுதீனிகள் காணும் மகிழ்ச்சியில் பிள்ளைகள் கொண்டாட்டமாக மகிழ்வார்கள். 

பெட்ரோமாக்ஸ், மைக்செட்டு என்று சுற்றுப்புறம் விழாக்கோலத்தில் முழுகிப்போகும். தோரணங்கள் கட்டப் பெற்ற பந்தலின் பக்கங்களில் பொங்கல் அடுப்புக்களில் மஞ்சளும் குங்குமமுமாகப் பானை ஏறும். கிடாவெட்டு, கோழிக்காவு என்று சக்திக்கேற்ற பிரார்த்தனைகளை நிறை வேற்ற அந்த எளிய மக்கள் கூடுவார்கள். சந்தனமும் மல்லிகையும் அரளியும் அம்மன் சந்நிதியில் கலகலக்கும். வேலையும் கூலியும் உண்டு என்றாலும் இந்தக் கொடை நா ளில் அளத்துக்குச் செல்லாமல் ‘விழா மகிழ்ச்சிக்கு வரும் ஆண்கள் அதிகமானவர் உண்டு. ஏனெனில் இந்த நாட்களில் ‘தாகந் தீர்த்துக்’ கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம். அதுவே விழா. 

பொன்னாச்சியின் அப்பன் முதல்நாள் மாலையே பச்சையைக் கூட்டிச் சென்றுவிட்டான். டீக்கடைக்காரருக்கு நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதில் அவனுக்குக் கையில் துட்டுக் கிடைக்குமாம். சின்னம்மா அன்று காலை யில் வேலைக்குச் செல்லுமுன் அவள், ஏமாற்றமும் நிராசைமாக, ‘மொதல்ல சொன்னா போனசு உண்டுன்னு. இப்ப ஒண்ணில்ல … எனக்கும் ஒங்கபக்கமே சோலி என்று இருந்தாப் பாரும்…” கூறவந்தவள் நாவைக் கடித்துக் கொண்டாள். 

‘அட்வான்ஸ்? பெற்ற தொகை, துருப்பிடித்த ஆணியாகக் கூர்முனையைப் பதித்து வைத்திருக்கிறதே? அதை உருவித் தள்ளினாலல்லவோ சிக்கல் விடும்? 

ராமசாமியை அவள் ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. ஆனால் சோலை எப்போதும்; போல குடித்துவிட்டுத் திரி கிறான். நாச்சப்பனோ சிறிதும் அச்சமின்றிச் சொற்களைக் கொட்டுகிறான். அழகு மட்டும் சாடையாக முதல் நாள் தான் அவன் வேலையை விட்டு நின்றுவிட்டதாகக் கூறினாள். போல் ஓய்ந்து அவளுக்கு ஆதாரமே போய்விட்டாற் போனாள். எப்போதேனும் வாயைப் பிடுங்கும் பேரியர்ச்சி ‘கூட முத்துக் கொறிக்கவில்லை. 

அவனில்லாமல், அந்த அளத்தின் ஈரமற்ற தனிமையில் எவ்வாறு. மடை தாண்டப் போகிறாள்? அவள் சந்தையில் வைத்து ‘அதைச்’ சொல்லிவிட்ட பிறகே அவன் பழைய ஆளாக இல்லை. அவளே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாளோ? அவனது முக மலர்ச்சிச் சூரியனில் அவள் ஊசியைக் குத்தி இருளச் செய்து விட்டாள்… 

உள்ளம் தன்னைத் தானே பிடுங்கிக் கொண்டு ரணகளரி யாகிறது. இந்த ஆடி மாசத்தில் எல்லா ஊர்களிலும் அம்மன் கொடை வரும். அவர்கள் ‘ஊரில் கூடக் ‘கொடை’ சித்திரையில் அமர்க்களப்படும், ”ஊர்க்காரனுவளுக்குத் தண்ணி போட்டு ஆடுறதுக்குக் கொடை!” என்பார் மாமா.  சாமி பேரைச் சொல்லிக் கடனை உடனை வாங்கிக் குடிச்சித் தொலைக்கறானுவ” என்பார். 

பாஞ்சாலி, சரசி எல்லோரும் பிற்பகலே விழாவுக்குப் போய்விட்டார்கள். சின்னம்மாவும் இல்லை. சொக்குவும் வேறெங்கோ கடை போட போய் விட்டாள். வளைவே அமைதி படிந்து மௌனத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. பொன்னாச்சி சேலைக் கிழிசல் ஒன்றைத் தைத்துக் கொண்டிருக்கிறாள். 

நைந்த குரல் ஒன்று ஆதாரமற்ற மெல்லிழையாய் அலைந்து கொண்டு அவள் செவிகளில் விழுகிறது. 

“தும்பப்பூ வேட்டியுடுத்து…” என்ற குரல் ஒப்பாரி. செங்கமலத்தாச்சியின் குரல்தான். 

பொன்னாச்சி திடுக்கிட்டாற் போல் கூர்ந்து செவிமடுக் கிறாள். அவள் மிடுக்காகப் பேசியே இதுவரை கேட்டிருக் கிறாள். யாரும், எதுவும் பொருட்டில்லை என்ற அலட்சியப் பொன்னாச்சு பாவத்தையே அவள் முகத்தில், பேச்சில், கண்டிருக்கிறாள். வந்த புதிதில் அவள் மிகவும் இளகிய மனம் கொண்டவள் என்று பொன்னாச்சி மதித்திருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அது மெய்யில்லை என்று தூக்கி யெறிந்து பேசுவதை அறிந்து கருத்தை மாற்றிக் கொண் டிருக்கிறாள். அவள் ஒரு கருவக்காரி-ஆணவம் கொண் டவள் – ‘பவுர்’ உள்ளவள். மகன் செத்தது கூடத் தெய்வம் தந்த கூலி என்ற பொருள்பட, சொக்குவும் மற்றவர்களும் கருத்துரைத்து அவள் மறைவாகக் கேட்டிருக்கிறாள். ஆனால் முகத்துக்கு முன் எல்லோரும் அந்த ராணிக்குக் குழைவார்கள். 

அவள் நீட்டி நீட்டி ஒப்பாரி வைக்கிறாள்? அவளுக்குச் சொந்த பந்தம் என்று யாரேனும் இறந்து போய்ச் செய்தி வந்திருக்கிறதா என்ன? 

ஊசி நூலை வைத்துவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டு பொன்னாச்சி முற்றத்துக்கு வருகிறாள். சன்னல் வழியாக. அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள். 

செங்கமலத்தாச்சி சிவப்பு, அல்லது கறுப்புச் சேலை தான் முக்காலும் உடுத்தி அவள் பார்த்திருக்கிறாள். அன்று கறுப்புச் சேலை உடுத்தியிருக்கிறாள். பாம்படக்காது தொங்க, அள்ளி முடிந்த கூந்தலின் பிசிறுகள் தொங்க, ஆச்சி சோகக் குடம் உடையப் புலம்புகிறாள். 

“பறக்கும் பறவைகளே…பாதை போகும் மானுடரே…! 
இறப்போர்க்கு உயிர் கொடுக்கும் எம்மவனைக் கண்டதுண்டோ…? 
ஓ…ஓ…ஓ.. 
பாவி பயல் பாம்பனாறு பாவோட்டம் இல்லையா
பாய் போட்டா மல்லாந்தா படுத்தாப்பல ஒறங்கிட்டா…!” 

கடைசியில் அடிவயிற்றை அள்ளிக் கொண்டு வரும் சோகம் ஆதாரமற்ற பெருவெளியின் இழையாக உயர்ந்து அலைந்து பாய்கிறது. பொன்னாச்சியை அந்தச் சோக் அலைகள் தொட்டசைத்து நெஞ்சுருகச் செய்கின்றன. 

“சிவத்தாச்சி” என்று ஊரும் உலகமும் குறிப்பிடும் இந்தப் பெண் பிள்ளைக்கு மற்றவர்களோடு என்ன தொடர்பு? இங்கே வந்து குந்தி வெற்றிலை போடும் முத் திருளாண்டி, பிச்சைக்கனி ஆகியோருக்கும் இவளுக்கும் என்ன உறவு? ஆச்சி ஊர்க்காரர் செம்பையும் பித்தளையையும் வைத்துக் கொண்டு வட்டி வாங்கி யாருக்காகத் தொழில் செய்கிறாள்? வாங்கி யாருக்காகப் பெட்டி முடை கிறாள். 

“பாய் போட்டா மல்லாந்தா….படுத்தாப்பல ஒறங்கிட்டா…படுத்தாப்பல ஒறங்கிட்டானே…!” 

ஆச்சி புலம்பிப் புலம்பிக் கைகளை விரித்து விரித்து அந்தப் படத்தைப் பார்த்துக் கண்ணீர் பெருக ஓவென்று அழுகிறாள். பொன்னாச்சிக்கு நெஞ்சு குழைய, நா ஒட்டிக் கொள்கிறது. அவள் வாயில் வழியே உள்ளே செல்கிறாள். 

“போயிட்டானே… போயிட்டா…” 

நெஞ்சம் துடிக்க, சோக அலைகள் புகைந்து புகைந்து எழும்புகின்றன. பொன்னாச்சி அவள் கவனத்தைக் கவரும் வண்ணம் முன்னே போய் நிற்கிறாள். அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

“வாணாச்சி…அழுவாதிய…வாணா…” 

“இன்னைக்கித்தா அவெபோனா. நாலு வருசமாச்சி அம்மன் கொடை. மைக்கு செட்டுக் கொண்டாரணுமின்னு போனா…வாரவேயில்ல…” 

“ஆசைக்கிளி வளர்த்தே…அக்கரயா நாய் வளர்த்தே..” உள்ளம் குலுங்கக் குரல் சோகச் சுவர்களை உடைத்துக் கொண்டு முடிவில்லாமல் பரவுகிறது. 

பொன்னாச்சிக்கு நா எழவில்லை. மேலே படம் இருக்கிறது. பால் வடியும் குழந்தை முகம். வளைத்து வாரிய கிராப்பு. பட்டுக் குஞ்ச மாலையணிந்து பார்க்க வருபவர் களை எல்லாம் பார்க்கும் முகம். 

”பாவம்… ஒடம்பு சொகமில்லாம இருந்துதா ஆச்சி?” “ஒண்ணில,பூமலந்தாப்பல என்னய்யா கெடந்தா. தேரி மண்ணில. காத்துக் கருப்பு எப்பிடி அடிச்சிச்சோ. என்னய்யா, சயக்கூட நசுக்கமாட்டா…” 

கண்ணீர் முத்துக்கள் கன்னங்களை, சதையின் பற்று விட்டுச் சுருங்கிய தோலில் இறங்கிக் கீழே சிதறுகின்றன. 

அங்குள்ள கடிகாரம், அவன் கல்லூரி வாழ்வின் படங் கள், அவன் புத்தக ‘ஷெல்ஃப்’ மேசை விளக்கு, இப்போது ‘ரிப்பேராகி’ விட்ட அந்த ‘டிரான்சிஸ்டர்’ எல்லாமே அந்தச் சோகத்தின் மௌனக் கூட்டாளிகளாக விளங்குகின்றன. அந்த மௌனப் போர்வையை விலக்க மனமில்லாமலே அவள் நிற்கிறாள். எத்தனை நேரமாயிற்றென்று தெரியவில்லை. சிறையை விட்டு வெளி வரவும் இயலாமல் உள்ளிருக்கவும் இயலாமல் அவள் குழம்பித் தவிக்கையில் வாயிலில் நிழல் தட்டுகிறது. அடியோசை கேட்கிறது. 

“யாரு?” 

அவள் வெளியே எட்டிப் பார்க்கிறாள். 

நெஞ்சம் குபீரெனப் பால் சொரியப் பூரிக்கிறது. 

“நீங்க இங்கத்தா இருக்கிறியளா?” 

“ஆமா…” என்ற பொன்னாச்சி அவனை நோக்கும் விழி களில் மத்தாப்பு ஒளி சிந்து நிற்கிறாள். பிறகு சட்டென் று தன்னுணர்வுக்கிறங்கி, உள்ளே திரும்பி, ஆச்சி, ஆரோ வந்திருக்காவ!” என்று அறிவிக்கிறாள். 

ஆக்சியும் கட்டிலிலிருந்து திரும்பி வாயிற்படியில் அவன். நிற்பதைப் பார்க்கிறாள். 

“யாருல…? வா….வந்து உட்காரு? யாரத் தேடி வந் தேல…?” என்ற சொற்களால் அவனை வரவேற்பவள் அவனை விழிகளைச் சுருக்கிக் கொண்டு கூர்ந்து நோக்குகிறாள். 

அவன் புன்னகையுடன் மீண்டும், “நீங்க இங்கத்தா இருக்கியளா?” என்று கேட்டுக் கொண்டு சிவத்தாச்சி காட்டிய பெஞ்சியில் அமர்ந்து கொள்கிறான். 

“யாரு? என்னியா கேக்கே? நா எம்புட்டு நாளாவோ இங்கத்தா இருக்கே. நீ எந்தப் பக்கம்…?” 

“செவந்தியாபுரம்… சாத்தப்பன்னு இருந்தாவளே தொழில் சங்கக்காரரு, கேள்விப்பட்டிருக்கியளா? அவரு மகன்… ராமசாமி…” 

மந்திரச் சொல்லால் கட்டுண்டாற் போல் செங்கமலம் அசையாமல் அமர்ந்திருக்கிறாள். மௌனம் மீண்டும் தன் கனத்த திரையைப் போட்டுவிடுகிறது. 

பொன்னாச்சியோ கரை கட்டிய மேடெல்லாம் கரையத் தத்தளிக்கிறாள். இவர் எதற்கு வந்திருக்கிறார்…?அவளைத் தேடித்தான் வந்திருக்கிறார். கோபமில்லை கோபமேயில்லை… 

அவள் வீட்டுக்குத் திரும்பப் பரபரத்து முயலுகையில் ஆச்சியின் குரல் அவளை இழுக்கிறது. 

“ஏட்டி? எங்கே ஓடுத? ந்தா, மூலக்கடயில போயி பத்து காசி பாக்கு வெத்தில, பொவயில, ரெண்டு வாளப்பளம் வாங்கிட்டு வா!” என்று இடுப்பில் எந்நேரமும் செருகியிருக்கும் பையை எடுத்து, ஒரு ரூபாய்த்தாளை அவளிடம் கொடுக்கிறாள். 

அது அவளை விரட்டுவதற்காகச் செய்யும் தந்திரமா, அல்லது மீண்டும் வரவழைப்பதற்கான சாக்கா என்று புரிய வில்லை, 

பொன்னாச்சி உளம் துளும்பத் தெருவிலிறங்கி நடக்கிறாள். 

“சாத்தப்ப மவனா நீயி? பனஞ்சோல அளத்துல மாசச் சம்பளக்காரனா?” 

“தெரிஞ்சு வச்சிருக்கீங்களே?” என்று அவன் சிரிக் கிறான். அந்தச் சிரிப்பு மாறாமலே, “ஆனா இப்ப இல்ல. சீட்டக் கிளிச்சிட்டாங்க!” என்று நிறுத்துகிறான். 

அவள் திடுக்கிடவில்லை. அதை அவள் செவிகளில் ஏற்றதாகவே தெரியவில்லை. 

“ஒன்னாத்தா சவுரியமாயிருக்கா?” 

“இருக்கு, வீட்டக்காலி பண்ணிப் போடுன்னாவ முன்னயே. இப்ப வேலயுமில்ல, இனி வேற எந்தத் தாவ லன்னாலும் சோலி பாக்கணும். வீடும் இங்க எங்கனாலும் கிடக்கிமான்னும் வந்தே…” 

“பனஞ்சோல அளத்துல மாசச் சம்பளம் வாங்கினேன்னே, என்ன தவராறு? அன்னன்னு கூலின்னாதா தவராறு வரும்…” 

“நீங்க நெனைக்கிறாப்பல இல்ல ஆச்சி. இந்த உப்பளத் தொழிலாளிய, தங்க நிலைமை சீராகணும், மின்னே றணும்னுற விழிப்பு உணர்ச்சியே இல்லாம இருக்காவ அதுவும், பொண்டுவள…” 

அவன் குரல் கம்மிப்போகிறது. 

“இப்பதா ‘முதலாளி சீமைக்கெல்லாம் போயிவந்து தொழிலை விருத்திக்குக் கொண்டு வந்திருக்கா, நாகரிகமா நடக்கா’ன்னல்லாம் சொல்லிக்கிறாவ. பனஞ்சோல அளத்துல ரோடு கொட்டடி போட்டு கோயில் எல்லாம் கட்டி யிருக்காவன்னு சொன்னா…நாம் பாத்தனா கொண்டனா?” கேள்விதா…” 

அவளுடைய கண்கள் சூனியத்தில் நிலைக்கின்றன. 

“அதென்னமோ நெசந்தா. மொதலாளிய ரொம்ப விருத்திக்கு வந்திட்டாவ. மிசின் எல்லாஞ் செயிது.. ஆனா தொழிலாளி மிசினுக்குப் போட்டியா உப்பு வாருறா…அது இருக்கட்டும். கணக்கபிள்ள, கங்காணினு இருக்கிறவ ஆருதா பொம்பிளய கவுரமா நடத்தறா? இவனுவ வாயில செறுக்கிவுள்ளன்னுதா வரும். அம்மன் கொடையின்னுறா; ஆதிபராசத்தின்றா அளத்துக்குவர பொண்டுவள அக்கா தங்கச்சி, ஆத்தா போல நெனக்கணும்னு அறிவு இல்ல. வயித்துக் கொடூமை, பொஞ்சாதி புருசனும் வேல செஞ்சாக் கூட அவன் கண்ணுமுன்ன இவனுவ நாக்கில நரம்பில்லாம் பேசுதா, எனக்கு ஏன் வேல போச்சி? இந்த அக்கிரமத்தைக் கேட்டேன். சீட்டைக் கிளிச்சிட்டாங்க. முதலாளிய ஆயிரம் பேராயில்ல. ஆனா, உப்பளத் தொழிலாளிய ஆயிரமாயிரமா இருக்கம். முதலாளிகளுக்கு சக்திய நாம் தான் கொடுக்கிறம். இது புரியலியே யாருக்கும்? நாம் எதுனாலும் போய்ச் சொன்னா ‘போலே’ இந்த அரவயித்துக் கஞ்சியும் கிடைக்காம போயிரும். ஏதும் சொல்லிக் குலைக் காதே’ன்னு அஞ்சிச் சாவுறா..” 

“மெய்தா. கங்காணி கணக்கப்பிள்ளையாவணும்னு நினைக்கா. கணக்கப்பிள்ளை முதலாளிக்கு ஏஜண்டு துட்டுக் குடுத்தா சொந்த பந்தத்தையே கொலை செய்யத் துணியிறா. முள்ளுக்குள்ள சிக்கட்டா வெளியே வார முடியறதில்ல. முள்ளுக் கிழிஞ்சாலும், ரத்தம் வந்தாலும் பூவுண்ணு நினைச்சிட்டிருக்கணும்…” 

பொன்னாச்சி வெற்றிலை பழங்களுடன் வருகிறாள். 

கட்டிலுக்கடியில ஓரத்தில் ஒரு பனையோலைத் தட்டு, மாங்காய்த் தட்டு இருக்கிறது. அதை எடுத்து அதில் வெற்றிலை பாக்கு பழத்தை அவள் வைக்கிறாள். 

“ஏட்டி, உள்ளாற போயி அடுப்பில ரெண்டு செத்த. போட்டு காபித் தண்ணி வையி. தாவரத்தில் காபித் தூளி ருக்கி, பானையில கருப்பட்டி இருக்கி, கிளாசில இறுத்துக் கொண்டா!” என்று ஏவுகிறாள். 

“பழம் எடுத்துக்கலே…” என்று ஆச்சி தட்டை அவனுக்கு நகர்த்துகிறாள். 

பொன்னாச்சி ஆகாயத்தில் பறக்கிறாள். .இவர் இவ ளுக்குச் சொந்தமா? சிநேகமா? செவத்தாச்சி முட்களின் தடுவேயுள்ள இனிப்புக் கனியோ? இந்த ஆச்சியும் சின்னம் மாவைப்போல்… அவளைப் போல்… ராமசாமியைக் கண் டதும் உள்ளம் ஏன் இப்படிக் குதிக்கிறது? தேவதேவியர் பூச்சொரிவது போல் ஒரு குளிர்மை; அப்பனும் குழந்தைகளும் விழாவுக்குச் சென்ற பிறகு, சின்னம்மா வேலையை விட்டு இன்னும் வராமலிருக்கும் இந்த நேரம்… 

“இந்த வுள்ள ஒங்க உறமுறையா?” 

பழத்தை உரித்துத் தின்று கொண்டு அவன் கேட்கிறான். 

“இல்ல…ஆமா. எல்லா ஒற முறதா. எல்லா ஒறமுற இல்லாத. இந்த வளவில இருக்கா. ஆத்தா செத்துப் போயிட்டா. அப்பன் அவ இருக்கறப்பவே இன்னொருத் பொம் தியத் தொடிசி வச்சிட்டா. அவதா சின்னாத்தா. பிளக்கு ஒருமுறை எது, எது ஒருமுற இல்ல? அம்மயப்பன் அண்ணந் தம்பி பெறந்த எடம் எதும் ஒருமுற இல்லாம போயிடுது. கலியாணமுன்னு ஒருத்தன் வந்திட்டா பெறந்த இடம் நீ யாரோ நானாரோ! இந்தப் பாத்திக் காட்டு வேக் காட்டில் பொம்பிளக்கி மனிச ஒறவு ஏது? எங்கியோ வாரா, யாருக்கோ பெத்து யாருக்கோ கொடுக்கா…ம், அது கெடக் கட்டும்லே, ஒனக்குக் கலியாணம் காச்சி ஆயிருக்கா?” 

அவன் பிரமித்துப் போனாற் போல் உட்கார்ந்திருக்கிறான். 

“ஏன்ல…? கலியாணம் கட்டியிருக்கியா?” 

“இல்ல…” 

“ஏ? ஒரு தங்கச்சி இருந்து அதும் செத்திட்டுன்னு சொன்னாவ. பொறவு ஓ ஆத்தாக்குத்தா ஆரிருக்கா! காலத்துல ஒரு கலியாணம் கெட்டண்டாமா?” 

அப்போது பொன்னாச்சி வட்டக் கொப்பியில் கருப்பட்டிக் காபி எடுத்து வருகிறாள். 

செங்கமலம் அதை வாங்கி அவன் முன் வைக்கிறாள்.

“குடிச்சிக்கவே…” 

அவன் அதைப் பருகுகையில் பொன்னாச்சி வாயிற்படிக் கருகில் நின்று அவனைப் பார்க்கிறாள். மாலை குறுகும் அந்த நேரத்தில் அவளை மின்னற்கொடியே தழுவியிருப்பது போல் தோன்றுகிறது. 

“வெத்தில போடுவியால?” 

“போடுறதில்ல…” 

“உங்கய்யா வெத்தில இல்லாம ஒரு நேரம் இருக்க மாட்டா…” அவள் காம்பைக் கிழித்துச் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டு உதிர்க்கும் அந்தச் சொற்களில்… போகிற போக்கில் மருமங்கள் பற்களைத் திறந்து உட்புறம் காட்டி னாற்போல் அவன் குலுங்கிக் கொள்கிறான். அவன் ஏதும் வாய் திறக்குமுன் பேச்சு மாறி விடுகிறது. 

“இப்ப வூட்டுக்குத்தாம் போறியா? கொடைக்கிப் போவலியா?” 

“நம்ம கொட இப்ப பெரிசாயிருக்கு. மூணாந்தெருவில எதோ வூடிருக்குன்னாவ. வித்துமூடைத் தரகனார் வெள்ளச் சாமியிருக்காரில்ல? அவெ சொன்னா. இப்படீ வாரப்ப, இந்தத் தெருவளவுல இந்தப்புள்ள இருக்கறதாச் சொன்ன நெனப்பு வந்தது. நொழஞ்ச..”

“ஒங்கக்கு ரொம்ப சிநேவம் போலிருக்கு…” 

அவன் மனம் மலர்ந்து சிரிப்பு பொங்குகிறது. 

“அப்படியெல்லாம் இல்லாச்சி. அவ என்னியோன்னு நினச்சிப் போடாதிய ஆச்சி? நாச்சப்ப கண்ட்ராக்டு கிட்ட செருப்புக்காலத் தூக்கி உதச்ச ஒரே பொம்பிள! இம்பட்டும் தெரிஞ்ச பெறகு ஒங்ககிட்ட சொல்றதுக் கென்ன? இவளுக்காவத்தா நா சண்ட போட்ட அவங்கூட. மொதலாளி எதிரில் மோதிட்ட…” 

“அப்ப, இவளுக்காவ மொதலாளிகிட்ட மோதிட் டேன்னா, சிநேகம் ரொம்பத்தா? கெட்டிச்சிப் போடு. அவக்கும் யாருமில்ல. அப்பன் சுகமில்ல. கண்ணுவெளங் கல். சம்பாதனை இல்ல, ஆனா நப்பாசை போகல. பொட்டக்கண்ண வச்சிட்டு இப்ப கொடைபாக்கவா போயிருக்கா? குடிக்கத்தா போயிருக்கா. அவபொம்பிள, ஆறுமணிக்கு மேல அரவமில்லுல சோலி எடுத்தா ரெட் டிப்புக் கூலி வருமேன்னு போயிருக்கா. பத்துக்கோ பதினொண்ணுக்கோ செத்துச் சுண்ணாம்பா வருவா. கலியாணத்தை முடிச்சி வய்க்கலாம்ல…” 

பொன்னாச்சிக்கு அன்றிரவு அப்பன் குடிபோதையுடன் வந்ததோ, சின்னம்மா வந்து கத்தியதோ நடந்ததாகவே நினைவில்லை. அவள் மேக மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கிறாள். 

அத்தியாயம்-15 

பொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக்கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல்தான் உலுக்கி விடுகிறது. 

“கொடைக்குப் போறாறாம் கொடை! எந்திரிச்சி,புள்ள எந்தப் போலீசு கொட்டில கெடந்து அடிபடுறான்னு போய் யாரும்! எந்திரிம்…” 

பொன்னாச்சிக்குக் கருக்கரிவாள் பாய்ந்தாற்போல் தூக்கி வாரிப் போடுகிறது. 

ஐயோ… பச்சை… பச்சையா? பச்சை வரல…? அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள். பாஞ்சாலி, சரசு, நல்லகண்ணு, மருது எல்லோரும் இருக்கின்றனர். பச்சைதானில்லை. 

“பச்சை எங்க சின்னம்மா?….” 

“எங்கயா? அது குந்தியிருக்காளே, அப்பங்கிட்டக் கேளு! பாதி நா அளத்துக்குப் போகண்டாமின்னு இந்த அப்பன் அந்தப் பச்சப் புள்ளயக் கெடுத்திருக்கா! தண்ணி கொண்டாரானாம் டீக்கடய்க்கு! பொட்டக்கண்ண வச்சிட் டுத் தடவுறிய. சாமி கூலி குடுத்தது பத்தாது? அந்தப் பய கையில காசு வச்சிருக்கா. ஏது காசு நாயித்துக் கௌம் அப்பனும் மவனும் எங்க போயிட்டு வாரான்னு நா அப்பமே நெனச்சே. நேத்து நா பாலத்தண்டயில வாரப்ப வெந்தனி வந்து சொல்றா, பயல போலீசு சரக்கோட புடிச்சிற்றுப் போயிட்டான்னு. வந்தா இவ மூக்கு முட்டக் குடிச்சிட்டு உருளறா!… போலீசு இவனல்ல கொண்டிட்டுப் போயிருக்கணும்?… 

உரலில் அரைத்துக் கொண்டிருக்கும் சொக்குவுக்கும் கை ஓட்டம் நின்று போகிறது. அவள் புருசன் எழுந்து நின் இந்தச் சண்டையை ரசிக்கிறான். 

பாஞ்சாலி வாளியும் கயிறுமாகத் தண்ணீருக்குப் போகிறாள். 

நேத்துக் காலம அப்பன் செல்வதற்கு முன்பே பச்சை ஓடிவிட்டான். அவனைப் போலீசில் கொண்டு போனதால் தான் அவன் வரவில்லை. இப்படியும் ஒரு அப்பன் பழக்குவானா? 

“சின்னம்மா. ஒங்கக்ரு இப்படிச் சந்தேகம் வந்தப்பவே ஏன் சொல்லாம இருந்திட்டிய? அவன அடிச்சி அப்பமே ஊருக்கு வெரட்டியிருக்கலாமே?…” என்று ஆற்றாமையுடன் பொன்னாச்சி வருந்துகிறாள். 

“பொறவு சின்னாச்சி அடிச்சித் தெரத்திட்டான்னு ஊர் ஏசும். நாங்கண்டனா இவெக்குப் பட்டும் புத்தி வரலன்னு?”‘ 

“அவன் போலீசுக்கொண்ணும் போயிருக்கமாட்டா, டீக்கடைச் சம்முகம் நல்ல தண்ணி கொண்டாரச் சொன்னா. நீ ஏன் சொம்மா எதயானும் நினச்சிட்டுக் கூப்பாடு போடு த?”” 

சின்னம்மா அவன் முகத்தில் இடிக்கிறாள். 

“நீரு பேசாதீம்…! எனக்கு அக்கினிக் காளவாயாட்டு இருக்கு. இப்ப போயி அந்தச் சம்முகத்தக் கேப்பீரோ மம்முவத்தைக் கேப்பீரோ! பிள்ள போலீசில அடிபடுறா னான்னு பாத்து ஒம்ம தலைய அடவுவச்சானும் கூட்டிட்டு வாரும்! இல்லாட்டி இங்ஙன கொலவுழுகும்!” என்று அனல் கக்குகிறாள். 

அந்தக் கடை, உப்பளத்துத் தொழிலாளர் குடியிருப்புக் களோடு ஒட்டாமல், ஆனால் பாலைவனத்திடையே ஓர் அருநீர்ச்சுனை போல் பாத்திக் காடுகளிலிருந்து வருபவர் விரும்பினால் நா நனைத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்ததைப் பொன்னாச்சி அறிவாள். முன்பு ஒருநாள் ராமசாமி அங்குதான் தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவர் களுக்கு. அங்கு இந்தத் ‘தண்ணி’யும் கிடைக்குமோ? 

இவர்கள் குடியிருப்பின் பின் பக்கம் முட்செடிக் காடு களின் வழியாகச் சென்றால் குறுக்காகச் சாலையை அடைய லாமென்று பாஞ்சாலி. சொல்வாள். ஆனால் அவர்கள் யாரும் அந்தப் பக்கம் சென்றதில்லை. அப்பன் கழி ஊன்றிக் கொண்டு அங்குதான் இயற்கைக்கடன் கழிக்கச் செல்வான். 

இப்போது அந்தக் கழியை எடுத்துக் கொடுத்து சின்னம்மா அப்பனை விரட்டுகிறாள். 

பொன்னாச்சிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 

சென்ற ற வருஷங்களில் போலீசின் கொடுமைகளை எல்லாம் பற்றிப் பேப்பரில் எழுதியிருந்துதென்று பேசிக் கொண்டார்கள். போலீசில் அடித்துக் கொன்றே இழுத்து விடுவார்களாம். மாமி அதனால் தான் கல்லூரியில் போலீ சென்றதும் மாமாவிடம் எப்படியேனும் கடன்பட்டுப் போய்ப் பிள்ளையைக் கூட்டிவரச் சொன்னாள். தம்பியைப் போலீசு அடிப்பார்களோ? ‘நகக்கண்களில் ஊசியேற்றல், முதுகின் மேலேறித் துவைத்தல்…’ 

இதெல்லாம் நினைவுக்கு வருகையில் இரத்தம் ஆவியாகிப் போனாற் போல அவள் தொய்ந்து போகிறாள். 

சின்னம்மா அப்பனை விரட்டிய பிறகு அவளிடம், “நீ இன்னிக்கி வேலய்க்கிப் போகண்டா. பிள்ளையல்லாம் பதனமாப் பாத்துக்க. நான் துட்டுத் கந்திட்டுப் போற; சாங்காலாமா நல்லக்கண்ணுவக் கூட்டிட்டுப் போயி வெறவு வாங்கி வந்து வையி. 

இப்ப ரெண்டு சுள்ளி கெடக்கு. இருக்கிற அரிசியப் பொங்கி அதுங்களுக்குப் போடு” என்று கூறி விட்டுப் போகிறாள். 

பொன்னாச்சிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓட வில்லை. முன் வீட்டில் கதவு திறக்கவில்லை. 

சின்னம்மா அலுமினியம் தூக்குடன் வேலைக்குச் செல் வதைப் பார்த்துக் கொண்டே அவள் வாயிலில் நிற்கிறாள்…. பாவம், இரவு பகலாகக் கூலிக்கு உடல் வஞ்சனையின்றி உழைக்கிறாள். இந்தக் குடிகார அப்பனுக்கு இவ்வளவு உண்மையாக உழைத்துத் தேய்ந்து போகிறாள். அழுக்குப் பனியனும் கிழிந்த கால்சராயுமாகத் தெருவில் காணும் உருவங்களில் அவள் கண்கள் பதிந்து மீள்கின்றன. யார் யாரோ தொழிலாளர் வேலைக்குச் செல்கின்றனர். சாக்கடை யோரம் நாய்கள், பன்றிகள், கோழிகள் எல்லாம் வயிற்றுப் பாட்டுக்காகவே அலைகின்றன. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெள்ளை வேட்டியும், சட்டையும், துண்டும் திருநீறும் குங்குமப் பொட்டுமாக வெள்ளைச்சாமித் தரகனார் போகிறார். அவர் வீடு இன்னோர் முனையில் இருக்கிறது. கோபியடித்த பெரிய வீடு. மாமனுக்குக் கூட அவரைத் தெரியும். அவருக்கு ஊரில் ஒரு துண்டு நிலம் இருக்கிறது. சொஸைட்டிக்குத் தீர்வை கொடுக்க அழுகிறாள். என்று மாமா ஏசுவார். அவரிடம் போய்ச் சொல்லலாமா? என்ன சொல்வது? 

சைகிள் விர்ரென்று போய் விட்டது. 

“ஏட்டி, காலம் வாசல்ல வந்து நிக்கே? சோலி யொண்ணுமில்ல?” என்று செங்கமலத்தாச்சி கட்டிச் சாம்பலும் கையுமாகப் பல் விளக்க வந்து நிற்கிறாள். 

“இல்லாச்சி. தம்பிய… தம்பியப் போலீசில புடிச்சிட்டுப் போயிட்டான்னு சொல்றாவ. அவ நேத்து காலம் போனவ….” 

“அதுக்கென்ன…டீ?” 

இந்தக் கேள்வி அவளைச் சுருட்டிப் போடுகிறது. “இதென்ன புதுக் கதையா? இந்தப் பிள்ளைய கையல் பீப்பா, தவரம், சைக்கிள் குழான்னு கொடுத்து எடத்துக்கு எடம் அனுப்புவானுவ. போலீசுக்காரனும் உள்கையிதா, எப்பனாலும் உள்ள தள்ளிட்டுப் போவா. அவனுவளுக்குப் பணம் பறிக்க இதொருவழி, நீ ஏட்டி வாசல்ல வந்து நிக்கே அதுக்கு?” 

“நா ஏந்தா ஊரவிட்டு வந்தனோன்னு இருக்கு, ஆச்சி, தம்பிக்கு ஒண்ணுந் தெரியாது…” 

“வந்தாச்சி; இப்ப பொலம்பி என்ன பிரேசனம்?” 

கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழுகின்றன பொன் னாச்சியின் கன்னங்களில். 

“நா யாரிட்டப் போயிச் சொல்லுவ? சின்னம்மா அப்பச்சிய ஏசி, குச்சியக்குடுத்து வெரட்டிட்டு அளத்துக்குப் போயிட்டா!” 

“பொறவு நீ ஏ அழுது மாயுறே? அப்பனும் புள்ளயும் போலீசில மோதிக்கட்டும்! நீ உள்ள போயி சோலியப் பாருடீ!”, என்று ஆச்சி அதட்டுகிறாள். 

மனிதர்கள் நிறைந்த காட்டில் இருந்தாலும் பாலை வனத்தில் நிற்பதுபோல் இருக்கிறது. அந்தத் தம்பி ஒரு  நேரம் சோறில்லை என்றாலும் சவங்கிக் குழைந்து போவான் நினைவு தெரிந்த நாளிலிருந்து நோஞ்சானாக அவனை அவள் இடுப்பில்கூடச் சுமந்திருக்கிறாள். மாமி ஏசி அடித்து விரட்டி னாலும் மாமிக்குத் தெரியாமல் குளக்கரைக்குச் சென்று அழும் அவனை ‘அழுவாத தம்பி’ என்று தேற்றியிருக்கிறாள். முனிசீஃப் வீட்டில் எந்தத் தின்பண்டம் கொடுத்தாலும் மறக்காமல் தம்பிக்கு இலையில் சுற்றிக் கொண்டு வந்து மாமி யறி பாமல் கொடுப்பாள். 

அவனைப் போலீஸ் அடிக்கையில் அக்கா, அக்கா என்று கத்துவானோ?… 

வாசலை விட்டுக் கொல்லைப்புறம் சென்று நிற்கிறாள். பாஞ்சாலி ஆச்சி வீட்டுப் பானையைக் கழுவுகிறாள். பாலை யில் பிசாசுகள் போல் நிற்கும் தலைவிரிச்சிச் செடிகளிடையே அப்பனின் உருவம் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அவனைக் காணவில்லை. வெயில் ஏறுகிறது. மருது அவள் சேலையைப் பிடித்திழுத்துப் “பசிக்கிதக்கா” என்று ராகம் வைக்கிறான். நல்லகண்ணு சந்தடி சாக்கில் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவான். 

பானையில் சிறிது நீர்ச்சோறு இருக்கிறது. உப்பைப் போட்டு அதைக் கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக் கிறாள். 

முதல் நாள் விழாவில் வாங்கிய ஊதலைப் பிசிறடிக்க ஊதிக்கொண்டு மருது வாசலுக்குப் போகிறது. நல்ல கண்ணுவைப் புத்தகம் பலகை தேடிக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்புகிறாள். 

சரசி பின்னலை அவிழ்த்துக் கொண்டு வாங்கியிருக்கும் புதிய ய பட்டுப்பூவை அணிந்து கொள்ள, “அக்கா சடை போடுறியா?” என்று கேட்கிறது. 

“நீ வேலக்கிப் போவலியாக்கா?…எனக்கு ரெட்ட சடை போடறியா?” என்று பானையைக் கழுவிக்கொண்டு பாஞ்சாலி கேட்கிறது. 

சரசியின் கூந்தலை வாரிப் பின்னல் போடுகையில் வாஞ்சாலி நாடாவுடன் வந்து உட்கார்ந்திருக்கிறது. 

“பச்சை ஒங்ககூட வரலிரா டீ…?” 

“ஊஹும், அண்ணனக் காங்கலக்கா அப்பச்சிகூட எங்களைப் பந்தல்ல குந்து வச்சிட்டுத் தேடிட்டுப் போனா. தாங்க கூத்துப் பாத்திட்டிருந்தம். இவங்கல்லாம் அங்கியே தூங்கிப் போயிட்டாவு. செவந்தனி மாமா மாமி வந்து “ஒங்காத்தா வந்திட்டா. வாங்க போவலான்னு” எளுப்பிட்டு வந்தா, அப்பதா அப்பச்சியப் பாத்த அம்மா ஏசுனா.’ போலீசு வந்து ‘சரக்கு’க் கொண்டு வந்தவுகளப் புடிச்சிட்டுப் போயிட்டா. முன்னகூட, அந்தா மாரியம்மா – பெரியாச்சி வீட்டுக்கு வருமே, அவ பய்யன் சுப்பிரமணியக்கூட போலீசல புடிச்சிட்டுப் போயிட்டாவ. பொறவு, அவ இருநூறு ரூவா இத ஆச்சிட்டதா தவலையும் போவணியும் கொண்டு வச்சிட்டு வாங்கிட்டுப் போனா. மூக்கவேயில்ல. இப்ப சுப்பிரமணி இங்கல்ல. ஆர்பர்ல வேல செய்யப் போயிட்டா?” என்று அவளுக்கு தெரிந்த விவரத்த எடுத்துரைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு இருட்டுகையில் ஒளிக்கதிர் ஊசிகள் போல் ஏதேதோ யோசனைகள் தோன்றுகின்றன. 

இருநூறு ரூபாய் யார், எங்கே எப்படிக் கொடுப்பார்கள்! அவள் யாரைப் போய்ப் பார்ப்பாள்? கையில் விறகுக்காகச் சின்னம்மா தந்த இரண்டு ரூபாய் இருக்கிறது. 

அத்துடன் ஓடிப்போய் பஸ் ஏறி, மாமனிடம் சென்று. கூறி அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாமனுக்குப் பெரிய கைகளைத் தெரியும். முனிசீஃப் ஐயா நல்லவர். 

இங்கே அப்பச்சியின் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை. சின்னம்மா பாவம். அவள் என்ன செய்வாள். 

பிறகு… பாத்திக்காட்டு வேலைக்கு, அவளுடைய ஒரே ஆதரவான ஆளும் இல்லை யென்றான பின் எப்படிப் போவாள்? 

எனவே மாமன் வூட்டுக்குத் திரும்புவதுதான் சரி… அங்கே…அங்கே நான் இருக்க வேண்டும். 

பொன்னாச்சி மாமனிடம் சென்று கூறிவிடுவதென் நிச்சயம் செய்து கொள்கிறாள். 

ஆனால் அதைச் சின்னம்மாவிடமோ, பெரியாச்சியிடமோ வெளியிடத் துணிவு இல்லை. 

நிழல் குறுக வானவன் உச்சிக்கு வந்து ஆளுகை செய்கிறான். 

அப்பன் வரவில்லை பொன்னாச்சி வேலைகளை முடித்து விட்டு முற்றத்துக்கு வருகிறாள். சொக்கு வீட்டில் புருசன் மட்டும் படுத்திருக்கிறான். வேறு அரவமில்லை. பாஞ்சாலி இரட்டைச்சடை குலுங்க, சரசியுடன் புளிய விதை கெந்தி ஆடிக் கொண்டிருக்கிறது. 

“பாஞ்சாலி, வீட்டைப் பூட்டிட்டுப் போற. துறக்குச்சி வச்சுக்க, சின்னாச்சி வெறவு வாங்கியாரச் சொல்லிச்சி, பதனமாப் பாத்துக்க? மருது ஆடிட்டிருக்கா தெருவில் பாத்துக்கறியா?” 

அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவள் விடுவிடென்று ஓட்டமும் நடையுமாக வருகிறாள். தெருக் கடந்து திரும்பி, இன்னும் வீதிகளைக் கடக்கிறாள். கடைகளும் வியாபாரச் சந்தடிகளும் நெருங்கும் இடங்கள் வருகின்றன. 

புரும்புரும் என்று தெருவை அடைத்துக்கொண்டு திரும்ப முனகும் லாரிகள், மணியடித்துச் செல்லும் ரிக்ஷாக்கள் சாக்கடை ஓரத்துத் தேநீர்கடைகளில் கறுத்த பனியனும் பளபளக்கும் கிராப்புமாகத் தென்படும் சுறுசுறுப்பான ஊழியர்கள், வடையைக் கடித்துக் கொண்டு கிளாசில் தேநீரைச் சுழற்றி ஆற்றிக்கொண்டு உதட்டில் வைத்து அருந்தும் தொழிலாளர் லாரியாட்கள், சிவந்த கண்கள் கொடுவாள் மீசைகள், கைலிகள், அழுக்குப் பனியன்கள் என்று அவளது பார்வை துழாவுகிறது தம்பி இங்கெல்லாம் இல்லை. 

அவன் இந்நேரம் வீடு திரும்பாமல் இருப்பானா?’ அவன் போலீசுக் கொட்டடியில் அடிபடுகிறான். இருநூறு ரூபாய் செலவு செய்தால் அவனை விடுவித்து வந்து விடலாம். 

மாமனைத் தேடிச் சென்று அங்கே அல்லிக்குளம் – பசுமை… மாமி ஏசினாலும் உறைக்காது… இருநூறு ரூபாய்…அம்மா…! 

“ஏத்தா? எதிரே லாரி தெரியாம ஓடுற?” 

அவளை அந்த முடுக்குச்சந்தில் ஒருவன் கையைப் பற்றி இழுக்கிறான். அவள் கையை உதறிக் கொண்டு ஒதுங்குகிறாள். 

சாக்கடை ஓரமாக, மூடப்பெற்றதோர் கடைப்படிகளில் ஒரு கூட்டம் இருக்கிறது. சில பெண்கள், சில ஆண்கள்- குந்திக் கொண்டும் நின்று கொண்டுமிருக்கின்றனர். அவர் களில் ஒருவன் கையில் கடியாரமும் சற்று மிடுக்குமாக விளங்குகிறான். 

ஒரு பெண் அவனிடம் அழுது முறையிட்டுக் கெஞ்சுகிறாள். முடியை அள்ளிச் செருகிக் கொண்டு, தேய்ந்த கன்னங்களும் குச்சிக் கைகளுமாகக் காட்சி அளிக்கிறாள். 

“ஆசுபத்திரில் புருசங் கெடக்கா, புள்ளய அஞ்சும் நாலுமா – நா மூணு நாளாச்சி அவியளுக்குச் சோறு போட்டு, ராவும் பவலுமா ஓடி வந்த. நாலு ரூவாக் கூலி குறைச் சிருக்கிய. நா என்ன சேவ… இது நாயமா கங்காணி?…” அவள் முறையீட்டை அவன் கேட்க விரும்பவில்லை மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கிறான். வேறு ஆண் பிள்ளைகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. குந்தியிருக்கும் பெண்களில் மூதாட்டி இருக்கிறாள்; சிறு வயசுக்காரியும் இருக்கிறாள்.. 

“ராவும் பவலுமா ஓடிவந்த. மூணுநாளாச்சி புள்ளயளக் கவனிச்சி சோறுவச்சி…” 

இவர்கள் ‘வித்து மூடை’க்காரர்கள் என்று பொன் னாச்சி புரிந்து கொள்கிறாள். உப்பு அம்பாரங்களை மூட்டை களில் நிரப்பிக் கரைக்கும் தொழிலாளிகள், பக்கத்து வீட்டிலிருக்கும் பவுனுவைப் போன்ற தொழிலாளிகள். கங்காணி அவள் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது “லாரி வந்திருக்கு!” என்று குரல் கொடுத்தால் அப்படியே விட்டுவிட்டு ஓடவேண்டும். 

இவளும் அப்படித்தான் ஓடிவந்திருக்கிறாள். ஆனாலும் கூலி குறைப்புச் செய்திருக்கிறான். இவளுக்கு மட்டும் தானா? ஏன் குறைத்தான்? அவள்… 

அவளுடைய ஓலம் அந்தச் சந்திப் பேரிரைச்சலின் இடையே பொன்னாச்சிக்குத் தெளிவாகக் காதில் விளுகிறது. ஆனால் அந்தக் கங்காணி செவியில் போட்டுக் கொள்ள வில்லை. லாரி திரும்பியதும் படியை விட்டிறங்கி அவன் நடந்து போகிறான். அவளும் ஓலமிட்டுக் கொண்டு சில அடிகள் தொடருகிறாள். மற்றவர்கள் தங்கள் தங்கள் கூலி களைப் பார்த்தவண்ணம் அவர்கள் போக்கில் செல்கின்றனர். 

டீக்கடை இயக்கம், போக்குவரத்துச் சந்தடிகள் ஏதும் குறையவில்லை. அவள், அந்தப் பெண், நான்கு ரூபாய், குறைக்கப்பட்டுவிட்டதை எண்ணி விம்மி வெடிக்க அழுது கொண்டே சிறிதுநேரம் நிற்கிறாள். 

அன்றொருநாள் தான் நின்ற நினைவு பொன்னாச்சிக்கு வருகிறது. இப்படி எத்தனையோ பெண்கள் – தொழிற் களத்தில் தேய்ந்து, குடும்பத்துக்கும் ஈடுகொடுக்கும் பெண்கள் – மஞ்சளையும் கிரசினையும் குழைத்துப் புண்ணில் எரிய எரியத் தடவிக் கொண்டு அந்த எரிச்சலிலேயே உறங்கி மீண்டும் புண் வலுக்கப் பணி யெடுக்க வரும் பெண்கள் அங்கிருந்த ஆண்கள் யாரும் கங்காணியை எதிர்க்கவில்லை. பொன்னாச்சி அங்கு வந்த வழி மறந்து போனாற்போல் நிற்கிறாள். மாமன் வீட்டுக்குப் போவது ‘து ரோகச் செயல்” என்று தோன்றுகிறது. அவள் போகவில்லை. வீடு திரும்பும் போது அவள் ஒரு சுமை விறகு தூக்கிச் செல்கிறாள். 

– தொடரும்…

– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *