கண்ணாடிப் பாதை




(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவானதும் அடுப்படி மாடங்களில் இருந்து சப்தம் வரத் தொடங்கிவிடுகின்றது. தீப்பெட்டி லேபிளில் இருந்து சட்டென ஆந்தைகள் வெளிப்படுகின்றன. ஆந்தைகள் தங்களுக்குள் சிரித்தபடி தெருவில் அலைகின்றன. உறங்கும் குழந்தைகளின் கனவுகளைத் திருடும் ஆந்தைகள் வெகு தூரத்திற்கப்பால் இருந்த இரண்டு மலையின் ஊடே கொண்டு சென்றன. குழந்தைகளின் கனவுகளைத் திருடும் ஆந்தைகள் விடியும் தருவாயில் வேற்று உருக் கொண்டு ஆட்கள் போலாகி வேனில் கிராமம் கிராமமாக அலைந்து திரிந்தன. உறக்கத்தின்போது, வேன் சப்தம் கேட்டு பிள்ளைகள் பயந்து அரற்றினார்கள். குழந்தைகளுக்கு இயல்பான குரல் மறைந்துபோய் சலிப்பேறிய கிழட்டுக் குரல் வந்தது. அவர்கள் தொட்டதற்கெல்லாம் அலுத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் வயதாகிக்கொண்டுபோய் சுருக்கங்கள் வளர்ந்து, தலைமயிர் கொட்டத் தொடங்கியது. குழந்தைகள் வளர்ச்சி கொள்ளவில்லை. உயரம் சுருங்கிக் காய்ந்த பனங்கொட்டைகள் போலானார்கள். அவர்களால் நடக்கவும் சிரமமானது. பல நேரம் அவர்கள் தங்களால் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளை இயல்பாக உபயோகித் தார்கள். இரவில் வீடு திரும்பும் அவர்கள் உடல் நலிந்து நோவு கொண்டார்கள். குச்சிக்கால், குச்சிக்கை, குச்சித்தலை, குச்சிமூக்கு, குச்சிக் காது, குச்சிவிரல். ஆந்தைகள் வீட்டில் உறங்கும் ஆட்களின் ஊடே கால் பாவாமல் நடந்து கனவுகளைத் திருடின. வேண்டாம் வேண்டாம் என விரல் அசைத்த குழந்தைகளின் முகம் பார்த்துச் சிரித்தன. எந்த வார்த்தையாலும், குழந்தைகளின் கதையாலும் மீட்பு பெற முடியாத பழைய உரு நினைத்து அவன் நாளெல்லாம் கரைந்து கொண்டிருந்தான். ஆந்தைகள் திடீரென மறைந்தன. புதிய உருக் கொண்டன.
பறக்கும் பருந்து போலாயின. சில நேரம் அவை மலையை நோக்கிப் பறந்து அலைந்தன. காற்று வீசும் திசையெங்கும் அவன் கனவுகளை மீட்கும் வழியைத் தேடினான். காற்று அவனிடம் ஏசிச் சென்றது. இரவில் அவனிருந்த வீட்டின் கதவின் வழியே எட்டிப் பார்த்துக் ‘கோட்டிக்கார’ மூதி. ‘மூதி’ என்றது. அது காற்று தானா இல்லை ஆந்தைகளின் வேலையா – தெரியவில்லை.
இரவில் அவன் சூ, சூ எனக் கைகளை உயரே தூக்கி வெற்று வெளியில் எதையோ விரட்டி அலைந்தான். தூர ஊர்களுக்கு வேலைக்குப் போய்த் திரும்பும் ஆண்கள் வெகு சீக்கிரம் உறங்கிப் போகிறார்கள். பிள்ளைகள் உறக்கத்தில் எழுப்பப்படுகின்றன. இரவில் புறப்படும் வேனின் உள்ளே சாய்ந்து சாய்ந்து அலைந்தன உறங்கும் குழந்தைகளின் தலைகள். வைக்கோல் பிரியில் மூத்திரம் பெய்தன, உறக்கத்திலே. கருப்புக் கோட்டைக்குள் பிள்ளைகள் மத்தாப்பூ செய்தார்கள். குருவி வெடிக்குத் திரி பொருத்தினார்கள். ரப்பர் கொட்டை உடைத்தார்கள். நிப் அடுக்கினார்கள். பேப்பர் வெட்டினார்கள், பசை காய்ச்சினார்கள். அடுப்பின் முன் தலை கவிழ்ந்து இரும்புக் குழாயில் புகை ஊதினார்கள். உப்பிய கன்னம் சுருங்கி நெளிந்தது. நகரின் மூலை மூலையில் டி.வி. ஆன்டென்னாக்கள் தானாக முளைத்தன. அவை பகல் இரவெல் லாம் பிம்பங்களைப் பெருக்கின. ஓடும் குழந்தைகள் பந்து விளையாடினார்கள். டீ குடித்தார்கள், டீ சர்ட் போட்டார்கள், வயலின் வாசித்தார்கள், சாக்லெட் தின்றார்கள். வாசனை சோப் போட்டார்கள். டூமினிட்ஸ் நூடுல்ஸ் டூமினிட்ஸ் நூடுல்ஸ்.. அம்மா எனக்குத் தா… எனக்குப் பிடிச்சது ரஸ்னா. நான் காம்ப்ளான் பாய் – பிம்பங்களின் உருக்கள் தெருக்களில் அலைந்தன. வீடு திரும்பும் பிள்ளைகள் வேனில் இருந்தபடியே பாதரச விளக்கு எரியும் கடைகளைக் கண்டு வெறித்துப் பார்வை நிலைகுத்தி னார்கள். கிராமத் தெருக்களில் சினிமா போஸ்டர்கள் தானாக எழுந்து நடமாடிக்கொண்டிருந்தன. பெண் உடல்கள் கொண்ட போஸ்டரின் முன் பிள்ளைகள் குழுமி நின்று கத்தினார்கள். கனவுகள் அற்ற அவர்கள் உலகில் சிறு நத்தைக்குக்கூட இட மற்றுப் போனது. வானவெளி பார்த்து சுற்றிய கை விளையாட்டு கள் ஓய்ந்தன. கிட்டக் கிட்ட வந்தா முற்றி முற்றி வைப்பேன்… வானம் சுழற்றி மங்கியது. திரிதிரி பொம்மக்கா… பொம்மக்கா… திரிதிரி.
அவன் கனவுகளைத் திருடும் ஆந்தைகளை விரட்டிப்போனான் ஒரு நாளில். ஏய் ஏய் எனக் குரல் கொடுத்தான். அவை வெகு வேகமாகக் கனவுகளை மணல் துகளாக்கி மறைவிடத்தில் ஒளிந் தன. அவன் இரண்டு மலைகளின் ஊடே இருந்த இடத்தினை அடைந்தான்.ஆந்தைகள் இப்போது வேஷ்டி சரசரக்க அவன் முன் தோன்றின. அவன் தரையைப் பார்த்துப் பேசினான்.
“சுட்டுவிடுங்கள்…. குழந்தைகளின் குரல் இயல்பற்றுப் போய் விட்டது. சலிப்பின் பூதத்தால் அவர்களை அமுக்காதீர்கள்” மண்டியிடுகிறான்.
என்ன நாடகம் இது என்றன ஆந்தைகள். அவனை விட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கின. அவன் போகாதீர்கள் என்று புலம்பினான். ஆந்தைகளில் ஒன்று அவனிடம் திருப்பிக் கேட்டது.
“கனவுகளுக்கு ஈடாக உன் நிழலைத் தருவாயா?”
”தருகிறேன்”
“உன் நிழலை இரண்டு மலையின் ஊடே கட்டித் தொங்க விடுவோம். சிதைப்போம்”
“நடக்கட்டும்”
“விரலை அறுத்து சத்தியம் செய்து நிழலைத் தா”
விரல் நுனியை வெட்டி சத்தியம் செய்தான். அவன் நிழல் அவனை விட்டுப் பிரிந்து எதிரே வந்தது. ஆந்தைகள் அதை இழுத்தன. இரண்டு மலையின் ஊடாக இழுத்துச் செல்லப்படும் தன் நிழலை அவன் பார்த்தபடி நின்றான். ஆந்தைகள் வேகமாக நிழலை இழுத்துக்கொண்டு ஓடின. அவன் உரு எடையற்றுப் போனது போலானது. வெள்ளைச் சோகை போல உடம்பானது. நடக்கச் சிரமப்பட்டான். அவன் நிழல் மறைந்துபோனதும் அவன் ஊர் திரும்பினான். வீடு திரும்பும்போது அவன் புலம்பினான்; நிழல். நிழல். நிழல். நிழல்.
சாம்பலோடையில் அலைந்தபோது மணல்கள் பரிதாபம் கொண்டு அவனை அழைத்தன.
‘நிழலற்றவனே எங்களைக் கனவுகளாக்கி தூவு. நாங்கள் கனவுகள்தான்.’
‘சாம்பல் நிற மணல்களே. குழந்தைகளின் தலைமயிரைப் பொன் னிறமாக்கி இலைக் குரலில் பேசி கனவுகளை உருவாக்குங்கள்.’
அதைக் கேட்டு ஆயிரம் மணல்கள் சிரித்தன. அவனுக்கு மணல்கள் தங்கள் விநோத நுட்பங்களைக் காட்டின. மணல் தொகுதி போலாகிச் சுருண்டு சிறு வீடானது. வீட்டின் உள்ளே விரல் அளவில் அறைகள் தோன்றின. மணல் அறைக்கும் ஜன்னல்கள் இருந்தன. பொட்டு போல நிலா அலைந்தது. அதன் பின்புறத்தே கடல் போல சிறு ஈரம் தெரிந்தது. சிப்பிப் பூச்சிகள் உடலோடு மணலில் எழுந்து தன் வாய் திறந்து அதிசயம் காட்டின. அவன் மணல்களின் விநோத ரூபம் கண்டான். மணல் துகள்களைக் கொண்டுபோய் உறங்கும் குழந்தைகள் உள்ள வீடுகளின் கூரைகளில் தூவினான்.
மழைத் துளியைப் போல கனவு நேராக வழிந்து முகத்தில் பட்டது. கனவுகளின் ஈரம் படர பிள்ளைகளின் முகம் சிலிர்ப்பு கொண்டது.எல்லாக் குழந்தைகளும் ஒரே கனவைக் கண்டன. நூறு குருவிகள் சேர்ந்து இசைத்த இசைப் பாடலைக் கனவில் கேட்டன. வளைந்த பறவையின் மூக்கில் ஏறிப் பிள்ளைகள் பல கடல் கடந்தார்கள். மீன்களின் செதில்களைக் கொஞ்சி வந்தார்கள். கைகளை ஆட்டி விளையாடினார்கள். அவனும் அந்தக் கனவினையே கண்டான்.
விடியும்போது குழந்தைகளின் உடலில் சுருக்கம் கொஞ்சம் மறைந்தன. குரல் மாறிப் பேசின. இருந்தும் பகலில் ஊர் வெறிச்சோடியது. ஆள் எங்கே எனத் தேடி அலைந்தது வெயில். மலையின் ஊடே வேலைக்குப் போன குழந்தைகள் தொங்கும் அவன் நிழலைக் கண்டன. துயருற்ற அந்த நிழல் இருபுறமும் காட்டுக் கொடிகளால் கட்டப்பட்டு நடு ஆகாசத்தில் தொங்கியது. கருத்த அந்த அரூப வடிவம் கண்டு பிள்ளைகள் பயந்தார்கள் முதலில். பின்னும் அந்த முகம் தெரிந்து அதில் இருந்த கண்கள் உள் கிறங்கிப்போய் பாதை பார்த்தன. மலையின் ஊடாக சூரியன் வந்தபோது நிழல் அலைபடத் தொடங்கியது. தலையைத் தொங்கவிட்டது. பிள்ளைகள் நிழல் பொருட்டு பாடிப்போனார்கள். துயரப் பாடலின் வரிகள் மலைகளின் ஊடே சென்று எதிரொலித்தபோது காவல் காத்து மலையிடுக்கில் ஒளிந்த ஆந்தைகள் கோபமுற்றன. நிழல் மீது எரிந்து விழுந்து கொத்தி ரணமாக்கின.
அவன் தன் நிழலைப் பார்க்க வேண்டிய பகலில் நடந்து மலை களுக்கு ஊடே வந்தான். நிழல் அவனைப் பார்க்கவேயில்லை.
அவன் நாள் எல்லாம் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். பாதங்களின் அடியில் இத்தனை நாளும் ஒளிந்து வாழ்ந்த தன் நிழலைப் பற்றி அவன் நினைத்து வேதனை கண்டான். வானைப் பார்த்தபடிக் கழிந்த அவன் பகல் வேளையில் பறவைகள் கூட அவன் நிழலைக் கண்டு கலங்கியே பறந்தன. ஒவ்வொரு இரவும் அவன் மணல் துகள்களால் கனவுகளை உருவாக்கினான். விடியும் போது கனவு மறைந்து குறுமணலானது. நடமாடும் போஸ்டர்கள் பிள்ளைகளை நெருங்கி உறவு கொண்டன. பிம்பங்களைப் போலாக முயன்ற குழந்தைகள். அவன் நிழல் வதையுற்றது. அந்த நிழல் சில நேரம் ஆந்தைகள் பேசிக்கொள்வதைக் கேட்டது. ஆந்தைகள் ஆட்கள் போலத்தான் பேசின.
இப்படி நிழலை விற்று வருபவர்கள் பெருகிப்போனார்கள்’ என்றது ஒரு ஆந்தை.
யார் அவர்கள்?
யார் அவர்கள்? என நிழல் தலையை அசைத்தது.
ஆந்தைகள் பதில் சொல்லின. ‘வேறு நிழல்கள்.’ குழந்தை களுக்கு வேண்டி அலைந்த அம்மாக்கள். அதிசய வார்த்தை களுக்கு ஏங்கிய எழுத்தாளன். பூச்சிகளின் இசையை வேண்டிய இசை நிபுணன். எங்கே தொங்குகின்றன என்றதற்கு அவை எல்லாப் பக்கமும் சுற்றிக் காட்டின. நாள் வளர வளர கடந்து போகும் நிலப்பரப்பெங்கும் நிழல்கள் கட்டுண்டு கிடப்பதையோ, தொங்குவதையோ பிள்ளைகள் கண்டன.
நூறு பெண் நிழல்கள் தொங்கிய மரத்தைக் கடந்தபோது பிள்ளைகள் அரற்றின. அம்மா. அம்மா. அம்மா. வார்த்தைகள் மறந்துபோன நிழல்கள் தன் முகம் காட்டாது முடங்கின.
விந்தையான வார்த்தை தேடியவனின் நிழல் உடை மரத்தின் கிளையில் தொங்கியது. குழந்தைகள் பொருட்டு நிழலை விற்றவன் தன் நிழலைக் கண்டு திரும்பும்போது வார்த்தை நிழலைக் கண்டு கேட்டான்:
‘விந்தையான கதை இருக்கிறதா… குழந்தைகள் கேட்க’ நிழல் சொன்னது:
‘நத்தையிடம் கேள். சொல்லும்’
நத்தையின் சுழன்ற ஓட்டிற்குள் எட்டாயிரம் கதை கொண்ட பிரதி சுருண்டு கிடந்தது. அந்தப் பிரதியின் பக்கங்கள் எல்லா நாளும் எழுதப்பட்டன. நத்தைகள் அதை எச்சில் கொண்டு எழுதின. ஈர வார்த்தைகள் உலர்ந்து ஓடாயின. அவனைக் கண்ட நத்தை தன் கதைப் பிரதியைச் சுருட்டி மரத்தில் ஒண்டியது.
அவன் விண்ணப்பித்தான். உன் கண்களின் தயை வேண்டும். கழற்றிக்கொண்ட உன் பிரதியிலிருந்து இரண்டு வரிகள் போதும். ஓடு அசையாமல் நின்றது. பின் நத்தையின் தொடு கொம்பு வெளிவந்து அவன் முன் தோன்றியது. அவனைக் கண்டு நத்தை சொன்னது: ‘உன் இடத்தின் கதை வேண்டுமா’
‘சொல்’
‘என்னால் அளக்கப்பெற்ற உன் ஊரின் சதுரம் மிகப் பெரியது. என் எட்டு தலைமுறையினர் ஊர்ந்து மடிந்தே உன் ஊரை அளந்தோம். உன் ஊரின் மரங்களின் உச்சியைத் தொட எங்களுக்கு ஏழு வருடம் வேண்டியிருந்தது. ஒரு இலையைக் கடக்க நாலு மணி ஆகிறது. என் கண் கொண்டு சொன்னால் உன் கதை விந்தையாகிவிடும்.’
அவன் விந்தை அறிந்தான். நத்தை தன் பக்கங்களை எச்சிலாக்கிக் கொண்டு சுருண்டது. விந்தையான கதையைச் சொல்ல எவரும் கிடைக்கவில்லை அவனுக்கு. ஆந்தைகள் அவனைக் கண்டு கேலி செய்தன. அவன் நிழல் ஒரு நாளில் சிதைவுற்றது. அவன் அதன்பின் தன் உருவம் மெலிந்து வரக் கண்டான்.
ஊரில் ஆந்தைகளோடு பல பிம்பங்களும் சேர்ந்து அலைந்தன. ஒரு நாளில் மிகப்பெரிய இரும்புத் துண்டுகள் ஊரெங்கும் இறக்கப்பட்டன. அவன் அதிர்ச்சி கொண்டு என்ன என்ன என்றான்.
‘ஒளி-ஒலி’ எனப் பதில் வந்தது.
கோட்டையின் வழியே மாலையில் வந்த பிள்ளைகள் சம்மணமிட்டு அதன் முன் அமர்ந்தன. வார்த்தைகள் அவர்களை உறிஞ்சத் தொடங்கின. பொய்ப் பரவசம் கொண்டு முயங்கிய பிள்ளைகள் மீண்டும் கிழ உரு அடைந்தார்கள்.
தீப்பெட்டிச் சக்கைகளில் பிள்ளைகளின் விரல்கள் இரவு பகலாக அசைந்தன. வற்றிய மண்டைகள் திருகிக்கொண்டன. பத்து வயதுப் பெண் பிள்ளை நிறை ஆவியாக நடந்துபோனாள்.
அவன் உரு அறுபட்டது. காற்றில் மணல் அலைந்தது. பழக்கப்பட்ட பாதையில் கிழ உருக்கள் தள்ளாடிப்போயின. நிழல் பற்றிக் கூடப் பாட்டு கேட்டது நத்தை. தன் காலத்தைச் செலவு செய்து முடிக்க முடியாத அந்த நிலப்பரப்பில் மின்சாரம் பாய்ந்து இறந்துபோனது நத்தை.
வெற்றுக் கூடுகளை ஆட்கள் பொறுக்கி விற்றார்கள். இரவில் மணல் கனவாக மாறி ஆள் இல்லாத தனிமையில் அலைந்தது. செடிகள், மலைகள், பூக்கள், எறும்புகள், பாம்புகள், வெட்டுக் கிளிகள், குருவிகள், மரங்கள் அந்தக் கனவில் இணைந்து கனவு கொண்டன.
மாறாத ஆந்தைகளின் கள்ளத்தனம் முழியில் தத்தளிக்கிறது.
கிழட்டு குரல்கள் நடுங்கிப் பேசுகின்றன. துயரம் பொறுக்காத பறவைகள் நெடுந்தூரம் பறந்து பாறையில் மோதித் துறந்தன உயிரை.
அறுபட்ட சிறகுகள் வீழ்ந்துகொண்டேயிருந்தன. ஆந்தைகள் தீப்பெட்டியில் உள்ள குச்சிகளைப் போல மாற்றி அடைத்தன குழந்தைகளை.
மெழுகுத் தலைக் குச்சிகள் எரிந்தன. சுவர்கள் கருக வெடிப் புற்றது இடம். தொங்கும் நூறு பெண் நிழல்கள் துடிக்கின்றன. எங்கே எங்கே எனப் பறிக்கப்பட்ட நிழல்கள் தொங்கும் மரங்களின் ஊடே விரைகிறது நவீன மின்சார ரயில்.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.