ஒரு புதிய யுகத்தை நோக்கி





(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருத்தன் இருந்தான். (கந்தசாமி என்றால் எத்தனை கிளார்க்குகள்? கிளார்க் என்றால் எத்தனை கந்தசாமிகள்?) அவன் ஒருத்தனாகவே இருந்தான். இருந்தும் அவனுக்குக் கல்யாண மாகி இரண்டு குழந்தைகள் வேறு. சராசரி மனிதன் என்று கணிக்கப்படுகிறவனாகவும் கூட அவன் இல்லை. அதற்கும் கீழேயே இருந்தான்.
அவன் மனிதனா? அதைத்தான் அவனுடைய மனைவி கேட்டாள்; கேட்கிறாள். தினமும் காரியாலயத்துக்குப் போவான். திரும்பி வருவான். சாப்பிடுவான். நித்திரை கொள்ளுவான்.
மனைவி பேசுவாள். அவன் உசும்பினது கிடையாது. பிள்ளைகள் – மனைவியின் பிள்ளைகள் – பேசும்.
அவன் பேசாமல் இருக்கிறானாம்.
அவனால் பேசவும் முடியாது. பேசவும் ஒன்றுமில்லை . இடர்ப்பாடுகள் வருகிறபோதும் அதிகம் பேசமாட்டான். அவனால் அந்த இடர்ப்பாடுகள் பற்றி ஒன்றும் செய்ய முடிவ தில்லை . இதனாலும், அவனுடைய முந்திய சரித்திரத்தாலும்
அவன் ஒருத்தனாகவே இருந்தான்.
முந்திய சரித்திரம் என்ன?
சுகாதார வசதிகள் பெருகத் தொடங்கிய காலத்துக்கும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை வேசிகளல்லாதவரும் பாவிப்பதில் ஒன்றுமில்லை என்று மனதில் பதிகிற காலத் திற்கும் இடைப்பட்ட காலத்தில், அவனுடைய தாய் தகப்பன் குடும்பம் நடத்தியது அவனுடைய சரித்திரமாய்ப் போயிற்று. தம்பிகள், தங்கைகள் என்று பலதும் பத்தும். தம்பிகள் படித்துத் தங்கைகள் கரைசேர, அவன் ஒருத்தனாய்ப் போனான்.
எது எப்படி இருந்தாலும், அவனைச் சுற்றியிருந்த நெருக் கமும் புழக்கமும் தாமசமும் ஒழிவதாக இல்லை . வீட்டில், பஸ்சில், தெருவில், காரியாலயத்தில் எல்லா இடத்திலும் உலகம் இவைகளாலேயே ஆக்கப்பட்டிருப்பதைப் போலிருந் தது. இது இப்போ அவனுக்குத் தெரிவதில்லை . இதனாலும் அவன் ஒருத்தனாய்ப் போனான்.
இந்தக் கால ஓட்டத்தின் நடுவில்….
ஒருத்தி அவனுடைய காரியாலயத்துக்கு ரைப்பிஸ்டாக வந்து சேர்ந்தாள். அவள் வந்து சேர்ந்தது மற்றக் கிளார்க்கு களுக்கு வாய்க்கு அவலாகிப்போன நேரத்தில் தான், இந்த ஒருத்தனுக்கு இவளொருத்தியின் பிரசன்னம் நிதர்சனமாயிற்று. வேலை சம்பந்தமாக இவனோடு அவள் பேசினாள். சிரித்தாள்; அநேகமாகத் தினமும்.
அவனுடைய உறக்கம் கலையத் தொடங்கியது.
“உம்முடைய ஸ்பீட் என்ன தெரியுமா?” என்று கேட்டான் ஒருமுறை. அவள் திரும்பிப் பார்த்தாள்.
“நிமிஷத்திற்கு நூறு பிழைகள்” என்றான்.
சிரிப்பு. முன்னால், பின்னால், எல்லா இடத்திலும். இவள் வெட்டி முறிப்பதைப் போல் இவனைப் பார்த்தாள். இவனும் பார்த்தான்.
எருமைமாடு உயிர்த்துவிட்டது என்று காரியாலயத்தில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதை அவனுக்கு ஒரு மாதிரியாகவும், அவளுக்கு ஒரு மாதிரியாகவும் காதில் போட்டார்கள்.
அவனுக்குள்ளே உஷ்ணம் பரவத் தொடங்கியது. அவன் ஒருத்தனானபடியால், அதையும் உணர்ந்தான். அன்று அவன் வீட்டுக்குப் போனபோது ஓர் அதிசயம் நடந்தது.
அவன் மனைவி வழக்கம் போல் அவனுடைய குடும்பம் எப்படி அவளுடைய கெட்டிக்காரத்தனத்தால் மட்டுமே ஓடு கிறது என்பதைப் பற்றி விஸ்தாரமாக ஆலாபனை செய்தாள். பல்லவி ஒவ்வொருமுறை ஒவ்வொரு விதமாக வந்தாலும், ஈற்றடி எப்போதும் ஒன்றுதான்.
“….இல்லை.”
“சும்மாயிரு. ஏன் வீணாய்ச் சத்தம் போடுகிறாய்?” அவன் அவளைவிடப் பெருங்குரலெடுத்துச் சொன்னான். திகைத்துப் போனாள் அவள். பிள்ளைகளும் வாயை மூடிக்கொண்டன. இது அவனுக்கு வெற்றியாகப் பட்டது. இது முதன் முதலில்.
பிறகு, அவனுடைய பழைய பலவீனத்தைப் பற்றிய தன் கணக்கு மன மேல்மட்டத்திற்கு வந்தவுடன், மனைவி பல்லவிக்குப் புது அடி சேர்த்துக் கொண்டாள்.
“… இப்போ என்னடா என்றால் சத்தம் வேறு போடுகிறீர்கள்.”
அவன் இதற்கும் மறுமொழி சொன்னான். வீடு புறமாகவும், காரியாலயம் அகமாகவும் மாறின.
ரைப்பிஸ்ட் ஒரு வெள்ளரிக்காய். குறை சொல்ல முடி யாத வாளிப்பு. எனவே, அழகி என்றுதான் காரியாலயத்தில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அவளும் நினைத்துக் கொண்டாள்.
ரைப்பிஸ்டின் தாக்கம் இரண்டு ரீதிகளில் அவளுடைய முக்கியத்துவம் காரியாலயத்தில் நிலைத்துப் போன பிறகு தன்னை அவளோடு இணைப்பதில் எழுகின்ற முக்கியத்துவம் – அவனுடைய ‘நானின்’ மிகுந்த பிரகடனம் ஒன்று. மற்றது, உயிர்ப்பின் நித்தியமான துடிப்பு ; மொத்தத்தில் ஒருத்தன் நிலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.
ரைப்பிஸ்டைப் பார்க்கப்பார்க்க அவனுக்குள்ளே ஏதோ ஒன்று எரிந்தது. எரிந்ததன் தணல் சிலவேளைகளில் அவன் மனதைச் சுட்டது. ரைப்பிஸ்ட் இவனோடும் பேசுவாள். எவனோடும் பேசுவாள். இருந்தாலும் காரியாலயத்துக்கு வந்த புதிதில் ஐம்பது கண்கள் தன் மேனியை மேயும் போது, இரண்டே இரண்டு பைல்கட்டை மேய்வது அவளுக்கொரு தோல்வியாகவும், அதே நேரத்தில் ஒரு பாதுகாப்பாகவும் இருந்தது. அவனைத்தான் ஒரு மூலையிலிருந்து வந்து கேட்டாள்.
“இது என்னது? எழுத்து விளங்கவில்லை.”
ஒரு கணத்தில் அவளைப் பார்த்து, பார்த்ததன் தாக்கம் அவன் மனதில் உள்ளே சுவடேறாமலேயே மறுமொழி சொன் னான். பிறகு தினமும் எதையாவது கேட்டுக்கொண்டு வருவாள். இவன் அவளோடு நன்றாகப் பேசத் தொடங்க, அவனும் ஒரு சாதாரண மனிதன்தான் என்று அவளுக்குப் புரிந்தது. அவளுடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.
பிறகு அவள் மற்றவர்களுடனும் பேசத் தொடங்கினாள்.
இந்தத் தோல்வியும் வெற்றியும் அவளுடைய மனக் குப்பைக் கூடையின் மூலையில் சென்று பதுங்கினதன் பிறகு ஒரு யுகம் கழித்து, ஒருநாள் தன்னுடைய கல்யாணப் பத்திரிகையை எல்லோருக்கும் நீட்டினாள். இவனைப் பார்த்து,
“நீங்களும் மிசிசும் கட்டாயம் வரவேணும்” என்றாள்.
அவன் சிரிக்க முயன்றான். மோவாயைத் தடவினான்.
“பார்ப்போம்.” பத்திரிகையைப் பார்த்தான்.
“இதென்னது பார்ப்போம்? கட்டாயம் வரவேணும்.” சிணுங்கினாள் அவள்.
“ஓ வருகிறோம். அவளைப் பார்க்க முடியாமல் பார்த்தான். அவள் சிரிப்போடு அப்பால் போய்விட்டாள்.
அவன் தன்னுடைய எதிர்பார்ப்பு வாழ்க்கை நிலையை அதன் ஆரம்பகால நாட்களிலிருந்து எண்ணிப் பார்த்தான். கணத்துக்குக்கணம், நாளுக்குநாள், வருஷத்துக்கு வருஷம் இதுவே அவனுடைய வாழ்க்கையின் ஆதார சுருதியாக அமைந்து போனது பற்றி மனதுள் புழுங்கினான்.
‘பரீட்சைகள் பாஸ் பண்ணுவேன்’ என்று எதிர்பார்த்தான்.
‘நல்ல வேலை வரும்’ என்று எதிர்பார்த்தான்.
‘உயர்ந்த சம்பந்தம் கிட்டும்’ என்று எதிர்பார்த்தான்.
‘சம்பள உயர்வு வரும்’ என்று எதிர்பார்த்தான்.
… …
இப்போ ரைப்பிஸ்ட்.
“இந்த ரைப்பிஸ்ட் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்வாள்?” உச்ச ஸ்தாயியில் மனதின் ஒரு கூறு ராகம் பாடியது. வீட்டுக்குப் போனான்.
மனைவி ஏதோ வேலையாக இருந்தாள். ஷேர்ட்டைக் கழட்டி, முகத்தைக் கழுவி ரீயைக் குடித்து, சாய்வு நாற்காலி யில் அமர்ந்து, சிகரெட்டைப் பற்றவைத்துத் தனது ஒருத்தனத் தில் மூழ்க எத்தனிக்கும் போது மற்றக் கூறு மேலோங்கியது.
“ஏய்… இங்கே வா…”
மனைவிக்கு இது கேட்பதில்லை.
“டேய் அம்மாவை வரச்சொல்.” பையன் உள்ளே போனான்.
கடலலை இருந்தாற்போல் எதையாவது ஒதுக்குகிற மாதிரி, “என்ன வேணும்” என்று வந்தவள் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு வாசற்படியில் நின்றாள்.
“அடுத்த கிழமை ஒரு கல்யாணத்திற்குப் போகவேணும். குழந்தைகளை இங்கே விட்டுவிட்டுப் போய் வருவோம்.” சிகரெட்டைக் கையிலெடுத்துக்கொண்டு வாசற்படியருகே போனான்.
“யாருக்குக் கல்யாணம்?” சந்தேகம் நிறைந்து, எல்லாவற்றிற் கும் மேலாய் புதிதாய் சாந்தம் நிறைந்து காணப்பட்ட இந்தக் கேள்வியைக் கேட்ட அவளைப் புதிதாய்ப் பார்த்தான்.
…இந்த ரைப்பிஸ்ட் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்வாள்? கையைப் பிடித்துத் தன்னருகே அவளை இழுத்தான். அவளுடைய சாந்தம் ஓங்க ஓங்க அவளுடைய அழகு கூடிக்கூடி அவனை ஆகர்ஷித்தது. இந்த ஆகர்ஷம் தந்த மயக்கம் அவன் வார்த்தைகளில் பொங்கியது.
“காரியாலயத்தில் ரைப்பிஸ்டுக்கு ” வார்த்தைகளில் தெரிந்த மயக்கத்தின் மறுதாக்கம் அவள் வார்த்தைகளிலும் இருந்தது.
“எப்போ?”
“அடுத்த திங்கள்”
“ஒரு புடவையுமில்லை. வழக்கமான வெடிப்புமில்லை. புகைப்புமில்லை. ரைப்பிஸ்ட் மெல்லமெல்லக் கரைந்தாள். ஒரு பனிப்புகைப் படலத்தில் இவள் உயிர்த்தாள்.
“பெஸ்ரிவல் அட்வான்ஸ் இந்தா வந்திடும். ஒன்றை வாங்கேன். இல்லையென்றாலும் மனப்பாரம், வருவதென் றாலும் மனப்பாரம். இறுதியில் பெண்மை வென்றது. ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
“சரி, வாங்குவோம்”
“அம்மா” உள்ளேயிருந்து புத்திரபாக்கியமொன்றின் அலறல் அறைகூவல். வேகத்துடன் திரும்பி ஓடினாள்.
ஒரு புதிய யுகம் தோன்றுகிறதா?
மாலையில் அவளுடைய இயக்கங்களில் ஒரு புது வேகத்தை அவன் பார்த்தான்; புரிந்துகொண்டான். அவனுக்குள் திரும்பவும் உஷ்ணம் பரவத் தொடங்கியது. மாலையின் தாமதத்தை அவனால் பொறுக்கமுடியவில்லை. அவளோ சமையலறையில் சுழன்றாள்.
வெளியே உலாவிவிட்டு உஷ்ணத்தைக் கூட்டிக்கொண்டு திரும்பினான். அவன் திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த் திருந்தவள் சுழன்று இயங்கினாள். அவனுக்கோ சாப்பாட்டின் தாமசத்தைப் பொறுக்கமுடியவில்லை. எதிர்பார்ப்பு வாழ்க்கை யின் ஆவி அவனை மெல்லத் திரும்பவும் சூழும் போலிருந்தது. அவளுடைய கையைப் பற்றினான்.
“…பொறுங்கோ ….” அவளுடைய புதிய பொறுமை அவள் உடல், முகம் வழியே பாய்ந்து அவளைப் புதியவளாக்கி அவனுடைய ஆவியை விரட்டியது. அவன் தனது மௌனத் தியான ஸ்தானமான சாய்வு நாற்காலியில் குந்தாமல், அடுக்க ளையில் நின்றவாறே நிலை கொள்ளாமல் ஓடியாடித் தவிப் பவளைப் பார்த்து ரசித்தான்.
“ஏன் நிற்கிறீர்கள்?” நிமிர்ந்தும் நிமிராமலும் அவனைப் பார்த்தாள்.
“மம்” வெளியே மெல்லப் போய்விட்டான். போனவன் பொறுமையில்லாமல் சாய்வு நாற்காலியில் வேகமாகப் புதைந் தான். அவள் பாத்திரங்களை உருட்டிப் பிள்ளைகள் நித்திரை யாகிப் போனதை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து சேர்ந்தாள்.
அவள் வருமட்டும் அவளைப் பற்றியே சிகரெட்டின் புகையில் தன்னை இழந்து யாசித்தான். உள்ளிழுப்பிலும் வெளியூதலிலும் அவளே வந்து போனாள்.
அவள் வந்து விளக்கை அணைக்க, தீர்க்கமான அவசரத்துடன் சிகரெட்டைத் தீய்த்து எறிந்தான்.
அவன் இப்போ ‘ஒருத்தன்’ இல்லை.
– கணையாழி, 1979