கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 13, 2025
பார்வையிட்டோர்: 908 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாலுமணி; அதிகாலை. 

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த கிராமத்தின் காதுக்குள்ளே குடைக் கம்பியை விட்டுத் திறுகியதைப்போல நாராசமான “ஹாரன்” பிளிரல்; வடக்குத் தெருவில் ஒன்றும் தெற்குத் தெருவில் ஒன்றுமாக. 

முன்னாலெல்லாம் அதிகாலை வேளைகளில் பட்சிகளின் இனிய ஒலிகளைக் கேட்டுத்தான் கிராமம் விழித்தெழும். கோழி கூப்பிடும் குரல்கூட இப்பொழுது மறந்துபோய்விட்டது! 

பரத்வாஜம் என்கிற கரீச்சான். ஆக்காட்டிக்குருவி, அக்காக் குருவி என்றெல்லாம் பெயர் சொல்லி அழைத்த பறவைகளின் ஒலி களெல்லாம் இப்போதும் ஒலிக்கத்தான் செய்கிறது. என்றாலும் அதை யெல்லாம் மறந்து ரொம்ப நாளாச்சு. 

நாலு மணி ஆகவேண்டியது; பயிராவதற்குக் கத்துமே எருமை; அதுபோல் தீப்பெட்டி ஆபீஸ் பஸ்கள் வந்து கத்தத் தொடங்கிவிடும். 

சுருண்டு படுத்துத் துடைகள் இடுக்கில் கைகளை செருகிக் கொண்டு கோடுவாய்வழிய அசந்து தூங்கிக் கிடக்கும் பெண் குழந்தைகள் சூட்டுக்கோலால் ஈரலில் சூடுபோட்டதுபோலப் பதறி எழுந்திருந்து, கொஞ்சநேரத்துக்கெல்லாம் ஒரு கையில் எவர்சில்வர் தூக்குச்சட்டியும் மறுகையில் ஒரு சிறிய டப்பாவுமாகப் புற்றுக்குள் எறும்புகள் நுழைவதுபோல வரிசையாக பஸ்ஸுக்குள் போய் அடைவார்கள். 

தீப்பெட்டிக்குள்ளே குச்சிகளை அடுக்குகிறதைப்போல அந்தப் பிள்ளைகளைத் தனக்குள்ளே அடுக்கிக்கொண்டு, வயிறு புடைக்கத் தின்று முடித்த ஒரு ராட்சசன் விடும் ஏப்பம்போல ஹாரன் ஒலியை எழுப்பிக்கொண்டே நகரத்துக்குப் போகும் அந்தப் பஸ்கள். 


அடுத்த காட்சி 

வீடுகளிலிருந்து எருமைகளைப் பால் பண்ணைக்கு ஓட்டிக் கொண்டு போகும் சத்தங்கள். எழுதமுடியாத – எழுத்தில் வராத – சொல்லத்தான் முடிகிற சப்தங்கள் அவர்கள் வாயிலிருந்து வருகின்றன. சக மனிதர்களை நோக்கி வைவதைப்போலவே அவர்கள் மாடுகளை யும் வைகிறார்கள். இளம்பால் மாடுகளுக்குக் கன்றுகள் இருக்கின்றன. முதிர் பால் மாடுகளுக்கு மனுசக் கைகள்தாம் கன்றுக் குட்டிகள்! கூட்டுறவுப் பால் பண்ணை டெப்போவும் தனியார்ப் பால் பண்ணையைச் சேர்ந்தவர்களும் பால் மாடுகளில் ஓடி ஓடிக் கறக்கிறார்கள். இங்கே உள்ள பாலையெல்லாம் டவுனில் கொண்டு போய்ச் சேர்ப்பதில் அவர்களுக்குள் அப்படி ஒரு போட்டி. 

இப்போது வேகமாக விடியல் ஒளி பரவிக்கொண்டு வருகிறது. கிராமத்தின் பரம்பரைத் ‘தொள்ளாளி’களான தச்சாசாரிகளும், கொல்லாசாரிகளும் தூக்குச்சட்டிகளில் சோற்றை எடுத்துக்கொண்டு டவுன் பஸ்ஸைப் பிடிக்கத் தயாராகிறார்கள். அவர்களோடு விறகு வெட்டுகிறவர்கள், கொத்தனார்கள், சித்தாள்கள் இதுபோக மற்றக் கூலி வேலை செய்கிறவர்களும் நகரத்தில் போய்த் தினப்படி வேலை பார்த்து வர டவுன் பஸ்ஸுக்காக காத்திருக்கிறார்கள். நகரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் கூலித்தொகை கிராமத்தில் கிடைக்காது கொடுக்கக் கட்டாது – ஆகவே அவர்கள் கிராமத்தில் வசித்தாலும் கிராமத்தைக் கைவிட்டு அநேக வருஷங்கள் ஆகின்றன. 


காலையில் எழுந்ததும் தெருவில் ‘வெளிக்கு’ இருக்கும் சிறு குழந்தைகளைத் தவிர, இப்பொழுது தெருவே காலியாகிவிட்டது. தெருக்களில் பாண்டி விளையாடக்கூட ஒரு பெண் பிள்ளையைக் காணோம். 

வயசுக்கு வந்த பெண்கள் மட்டுமே வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு உடம்பை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டே வேகமாகத் தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள்மீது வெயில் பட்டுப் பல வருஷங்கள் ஆகின்றன. அரங்கு வீட்டின் இருட்டில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிப் பயிர்கள்போல வெளுத்துக் காணப்படுகிறார்கள். 

காலையிலிருந்து, மாலையும் கடந்து, இருட்டுகிறவரை உள்ளே உட்கார்ந்து ஒட்டுகிற இவர்கள், வெளிச்சத்துக்காகத் தெருவிளக்கடிக்கு வந்து உட்கார்ந்து ஒட்டும்போது மட்டும் அவர்கள்மீது கொஞ்சம் வெளிக்காற்று படும். 

அந்தக் கிராமத்தில், மீதி இருக்கும் இளைஞர்கள்… அதாவது வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் போனவர்கள் போக — மற்ற இளைஞர்களின் கால்கள் இந்த மண்ணின்மீதுதான் இருந்தாலும் மனசு ‘வெளியே’தான் இருக்கிறது. 

அவர்களுடைய கனவுகளும் கற்பனைகளும் துபாய், குவைத் முதலிய அரபு நாடுகளில்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. அந்த அராபிய மோகினி தூக்கத்தில்கூட வந்து அவர்களை வா வா என்று கண்சிமிட்டி அழைத்துக்கொண்டே இருக்கிறாள். 

அவர்கள் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் பாஸ்போர்ட்டு கள் தயாராக இருக்கினற்ன. ஒரு விஸாவுக்காக மட்டுமே காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நிலத்தின் பக்கம் போய் அநேக நாட்களாகிவிட்டன. ஆனாலும், இன்னும் சில பைத்தியக்கார விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒன்றிரண்டு பேர்! விடிந்ததும் ‘களையெடுக்க ஆட்கள் கிடைக்கமாட்டார்களா, பருத்தி எடுக்க ஆள் கிடைக்கமாட்டார்களா?” என்று ஊருக்குள் தட்டுத் தட்டாய் ஆட்களைத் தேடி அலைகிறார்கள். இவர்களுக்கு என்ன பைத்தியமா? வெயிலில் போய்ச் சாக இங்கே யாருக்காவது கோட்டியா பிடித்திருக்கிறது! நிலங்களெல்லாம் உறங்க ஆரம்பித்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. சும்மா ஒண்ணு ரெண்டு கிழடுகெட்டைகள் தாம் மனசு பிடிக்காமல் லபோ லபோ என்று அலைந்து கொண்டிருக்கின்றன. 

இன்னும் சில வருஷங்களில் இந்தக் கரிசல் காடு பூராவும் நிஜமாகவே ஒரு வனம்போல் ஆகிவிடும். ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் எப்படி இருந்ததோ அப்படி ஆகிவிடும். பழையபடி ஓநாய்கள், கரடி, புலி என்று உண்டானாலும் உண்டாகலாம். 

பருத்தி விளையும் காடுகளெல்லாம் வனங்கள் ஆகிக்கொண்டு வருவதால் வித்தியாசமான ஒரு வனமகோத்ஸ்வம் கொண்டாடலாம். வனப்பெருக்கினால் மாதம் மும்மாரி கட்டாயம் மழை பெய்யும். இப்படி மும்மாரியாகவும் பெருவாரியாகவும் தொடர்ந்து மழை கொட்டிக்கொண்டே இருந்தால்…. தீப்பெட்டி ஆபீஸ் வேலை பாதிக்கப்படுமே; ‘அப்போ என்ன செய்கிறது?’ என்று ஒரு கேள்வி. “அதை அப்பொ பாத்துக்கிடலாம்; அதெப்பத்தி என்ன இப்போ?” என்பது அதுக்குப் பதில். 

அந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப்போகிற குழந்தைகளின் எண்ணிக்கை ரொம்பவும் குறைந்துவிட்டது; அதிலும் முக்கியமாகப் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ரொம்பக் குறைந்து விட்டது. 

“படிச்சி என்ன செய்ய; மணடகப்படி கணக்கு எழுதப்போறா களா?”முன்னெல்லாம் இப்படியே கேட்டுக்கொண்டிருந்தார்கள். 

பிறகு, 

“படிச்சி என்ன செய்ய; கலைக்டர் வேலைக்கா போகப் போறாங்க?” என்று கேட்டார்கள். 

இப்போ, “என்ன படிச்சி என்ன செய்ய; எவன் வேலை கொடுக்கான்?” என்று பைசல் செய்துவிட்டார்கள். 

சிறு விவசாயிகள், மிகச் சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டங்கள் என்றெல்லாம் வந்திருக்கின்றன. 

பெயருக்குக் கொஞ்சம் நிலம் இருந்தால் போதும். 

நிலம் கிடைக்கிறதும் இப்போ ஒன்றும் கஷ்டமில்லை; சாகுபடி நிலங்களெல்லாம் தரிசு விழுந்துகொண்டு வருகிற இப்போது நிலம் பெறுகிறதா கஷ்டம்? 

இந்தத் திட்டங்களின்கீழ் பால் மாடுகளும், ஆடுகளும் வந்து கிராமத்தில் லாரி லாரியாக இறங்கிக்கொண்டிருக்கின்றன. 

ஒரு காலத்தில் மனிதன், கலப்பையைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் ஆடுகளையும், மாடுகளையும் மேய்த்துக்கொண்டுதான் திரிந்தானாம். அந்தக் காலம் திரும்பிவிட்டது. விவசாயம் நின்றுபோய் விட்டது. அல்லது வேகமாய்க் குறைந்துகொண்டே வருகிறது. 

மேழியைப் பிடித்த கைகள். எருமைமாடு மேய்க்கிற கம்பைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. 

விளைநிலங்களெல்லாம் தரிசுநிலங்களாகவும் மேய்ச்சல் நிலங் 

களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. 

அந்தக் கிராமத்தின் மாலைநேரக் காட்சிகளை நாம் இப்போது பார்க்கிறோம். 

முன்பெல்லாம் இந்த மாலை நேரத்தில் தெருக்களிலும் அம்மன் கோவில் மைதானத்திலும் குழந்தைகள் ஓடி ஆடும் விளையாட்டுக் கூச்சல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். எத்தனை வகைவகையான கிராமிய விளையாட்டுகள்! கற்பனைச் சம்பாஷணைகளோடு கூடிய விளையாட்டுகள், பாடிக்கொண்டே விளையாடும் விளையாட்டுகள். இப்படி அவர்கள் பரம்பரை பரம்பரையாக விளையாடிக்கொண்டு வந்தார்கள். 


அந்தக் குழந்தைகளெல்லாம் இப்போது என்ன ஆனார்கள் ? தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்காக டவுனுக்குப் பஸ்ஸில் 

பஸ்ஸில் போன குழந்தைகளைத் தவிர இங்கேயும் கொஞ்சம் பாக்கிக் குழந்தைகள் இருக்கத்தான் செய்தார்கள். 

குழந்தைகள் இருக்குமிடங்களில் ஒரு கலகலப்பு இருக்குமே, அது இல்லாததால் நமக்கு இந்தச் சந்தேகம் வந்தது. 

இதோ அவர்கள் ! 

உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டோ மடக்கிக்கொண்டோ, உடம்பை முன்னும்பின்னும் ஆட்டிக்கொண்டோ தீப்பெட்டியை ஒட்டி ஒட்டி எறிந்துகொண்டே இருக்கிறார்கள். சதா உட்கார்ந்தே இருப்பதாலும் பெருங்கால் பிடித்துக் கொள்வதாலும் அவசரத்துக்கு அவர்களால் எழுந்திருக்கமுடியாது ! இதுமட்டும் இல்லை; அவர்களால் பேசமுடியாது; சிரிக்கமுடியாது; கதைகள் சொல்லி மகிழமுடியாது. மனம் திறந்து பாடமுடியாது. 

அவர்கள் எல்லாரையும் தீப்பெட்டி ஆபீஸ்காரன் பைசாவினால் தரையோடு தரையாக அறைந்து வைத்துவிட்டான்! 

அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் பிசுபிசுக்கும் கஞ்சிப் பசையை விரல்களால் தடவித்தடவித் தீப்பெட்டிகளை ஒட்டுவதும், டிரான்சிஸ்டரில் அதிகபட்சம் எவ்வளவு சத்தம் வருமோ அவ்வளவுக்கு இரைச்சலாகச் சிலோன் ரேடியோவில் ஞானமில்லாத சினிமாப் பாட்டுகளைக் கேட்டுக்கொண்டே இருப்பதுந்தான். 


பொழுது நன்றாக இருட்டிவிட்டது இப்பொழுது. 

வீட்டுக்குள் தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருந்த பெரியவர்களும் குழந்தைகளும் ஒரு மின்னல் வேகத்தில் உடம்பையும் வயிற்றையும் கழுவிக்கொண்டு தெருவிலுள்ள டியூப்லைட் வெளிச்சத்தை நோக்கி வந்து உட்காருகிறார்கள், மீண்டும் தீப்பெட்டி போட, 

அதிகாலை நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டுப்போன தீப்பெட்டி ஆபீஸ் பஸ்கள் ஒவ்வொன்றாய்த் திரும்பி வருகிறது. களைப்போடு வந்து நிற்கிறது. 

கரும்புத் துண்டை மென்று, சாறை விழுங்கிவிட்டு, சக்கையைத் துப்புவதுபோல அந்த பஸ்கள் வெளியே தள்ளுகின்றன குழந்தைகளை. சில குழந்தைகள் சந்தோஷமாகச் சிரித்துக்கொண்டே கையிலுள்ள காலித் தூக்குச்சட்டிகளை வீசிக்கொண்டே பஸ்ஸிலிருந்து குதிக்கிறார்கள். இன்னும் அவர்களிடம் பால்யமும் சந்தோஷமும் மிச்சமிருக்கின்றன. இப்போது அவர்களெல்லாம் சீக்கிரம் குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கவேண்டும். அவர்களுடைய ஒவ்வோர் அசைவிலும் அவசரம், வேகம் தெரிகிறது. கிராமத்தின் மொத்த முகமும் இப்போது தீவிர மௌனமாகிவிட்டது. 

நேரம் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. போர்க்களத்துச் சவங்கள்போல விழுந்தது விழுந்தபடி, கிடந்தது கிடந்தபடி அலங்கோலமாக அப்படி அப்படியே கிடக்கிறார்கள். மூச்சுப்பரிதல் ஒன்றே அவர்களை வித்தியாசப்படுத்துகிறது பிரேதத்திலிருந்து. ஆயிற்று, இதோ ஆயிற்று. எந்த நிமிஷத்திலும் எந்த விநாடியிலும் அந்தத் தீப்பெட்டி ஆபீஸ் பஸ்கள் வந்து உரத்த ஒலியில் இவர்களை உலுக்கி எழுப்பலாம். 

பாவம்; கொஞ்ச நேரமாவது அவர்கள் அயர்ந்து தூங்கட்டும். 

– அமுதசுரபி, தீபாவளி மலர், நவம்பர் 1982.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *