எழுச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 11, 2025
பார்வையிட்டோர்: 291 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிழக்கு சிவக்கின்றது. 

வானத்தில் மலர்ச்சி. 

நிலம் சிரிக்கின்றது. 

சிரிப்பில் ஒளியின் பிறப்பு. 

ஒளி இருளை விரட்டுகின்றது. 

இருளுக்கு நடுக்கம். 

நடுங்கும் இருள் மேற்கு நோக்கி நகர்கின்றது.

கிழக்கிலிருந்து மேற்கிற்கு ஒளி படர்கின்றது.

இரு காக்கிச் சட்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

அந்த இருவருடைய விழிகளிலும் தூக்கத்தின் மயக்கம்.

அவர்களுடைய சப்பாத்துக்கள் எழுப்பும் ஒலிகள் உதய மௌனத்தைக் கலைக்கின்றன. 

உதயத்தின் செவ்வொளி நிதானமாகப் படர்கின்றது. 

நாற்சந்தி. 

காக்கிச் சட்டைகள் சந்தியை நோக்கிச் செல்கின்றன. சந்திக்கு வந்ததும் அவர்கள் திடீரென்று நிற்கின்றனர். 

நாலா புறமும் அவர்கள் நோட்டம் விடுகின்றனர். 

மதிலில் ஒட்டப்பட்டிருக்கின்ற போஸ்டர்கள் அவர் களுடைய கண்களில் படுகின்றன. 

போஸ்டர்களிலுள்ள சிவப்பு எழுத்துக்கள் செவ் வொளியில் பிரகாசிக்கின்றன. 

பொலிஸ்காரர்களுக்குத் திகைப்பு! 

“இரவெல்லாம் கண்முழிச்சு றோந்து சுத்தினது வீணாய்ப போச்சு.” 

ஒரு பொலிஸ்காரன் விரக்தியுடன் கூறுகின்றான். 

“அந்த நாய்ப்பயல்கள் இதை ஒட்டேக்கை எங்கடை கையிலை அம்பிட்டிருந்தால் அவங்கடை எலும்புகளை நொருக்கியிருப்பம்.” 

கோபத்துடன் மற்றவன் கூறுகின்றான். 

“அந்தக் காண்டாமிருகம் சீறப் போறானே. இப்பென்ன செய்ய?” 

பீதியுடன் ஒருவன் கூறுகின்றான். 

“அவனுக்கென்ன, குடுத்து வைச்சவன். அவன் ஓடரைப் போட்டிட்டுக் குசாலாய் நித்திரை கொள்ளுவான். நாங்கள் தான் நாயளைப் போலை…..” 

மற்றப் பொலிஸ்காரன் சலிப்புடன் கூறுகின்றான். 

“சரி, இப்பென்ன செய்ய?” 

மற்றவன் பதட்டத்துடன் கேட்கின்றான். 

“மெல்லமாய் இதெல்லாத்தையும் உரிப்பம்.” 

போஸ்டர்களுக்குக் கிட்ட அவர்கள் செல்கின்றார்கள். 

நாலாபுறமும் பார்த்துவிட்டு அதை உரிக்கத் தொடங்குகின்றார்கள். 

‘யாராவது பார்த்துவிட்டால்…?’ 

அவர்களுக்கு வெட்கம்; தயக்கம். 

மனமின்றி போஸ்டர்களை உரிக்கத் தொடங்குகின்றார்கள். 

அது துண்டு துண்டாகக் கிழிகின்றது. 

அவர்களால் அதை உரிக்க முடியவில்லை. 

அவர்களுக்கு எரிச்சல். 

நகரம் விழிக்கின்றது. 

விழிப்புற்ற நகரத்தில் உயிர்த் துடிப்பு. 

பொலிஸ்காரர்கள் திரும்புகின்றார்கள். 

திரும்பிய அவர்களுடைய விழிகள் வியப்பில் விரிகின்றன. 

சந்தியின் நடுவே கன்னங்கரிய தார் றோட்டில் எழுதப் பட்டிருந்த பெரிய வெள்ளை எழுத்துக்கள் அவர்களுடைய கண்களைக் குத்துகின்றன. 

பொலிஸ்காரர்களுக்கு ஆத்திரம் பொங்குகின்றது.

“இந்த றாஸ்கல்களுக்கு இண்டைக்குச் சரியான பாடம் படிப்பிக்க வேணும்.” 

இருவரும் ஒரே நேரத்தில் பல்லை நெருடிக்கொண்டு வன்மத்துடன் கூறுகின்றனர். 

பொலிஸ் நிலையத்தை நோக்கி இருவரும் தயக்கத் துடன் செல்கின்றனர். 

பொலிஸ் நிலையத்தில் டெலிபோன் மணி அடிக்கின்றது. 

பொலிஸ் உயரதிகாரி டெலிபோனை எடுக்கின்றான். 

இன்று, பாதுகாப்பு நடவடிக்கைக்காக அவனுக்கு அதிக வேலை. 

அதிகாலையிலேயே அவன் கந்தோருக்கு வந்து விட்டான். 

மேலிடத்துக் கட்டளையை அவன் நிறைவேற்ற வேண்டு மல்லவா? 

அவனுக்கு இன்னும் மதுபோதை கலையவில்லை. 

பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்காகக் கொழும்பிலிருந்து வந்த ஒரு வெளிநாட்டு உதவிப் பிரதிநிதி, சென்ற இரவு ஒரு சிறு ‘பார்ட்டி’ போட்டிருந்தார். அதில் குடித்த மது இன்னும் அவனுக்கு வேலை செய்து கொண்டிருக்கின்றது. 

பேசி முடிந்ததும் அவன் டெலிபோனைப் படாரென வைக்கின்றான். 

அவனுடைய கண்கள் நெருப்பைக் கக்குகின்றன. 

பற்கள் நெருடுகின்றன. 

கோபத்தில் சப்பாத்துக் காலால் நிலத்தில் உதைக்கின்றான். 

பொலிஸ் நிலையத்திலுள்ள எல்லாப் பொலிஸ்காரர் களையும் அவன் தன்னுடைய அறைக்குக் கூப்பிடுகின்றான். 

எல்லோரும் பதட்டத்துடன் வருகின்றனர். 

‘ராத்திரி ஆர் றோந்து சுத்தப் போனவங்கள்?” 

ஆத்திரத்துடன் கேட்டான். 

ஆறு பேர்களுடைய நம்பர்களை உதவிப் பொலிஸ் அதிகாரி தயங்கியபடியே கூறுகின்றான். 

“அந்தப் பண்டியள் எங்கை?” 

“இன்னும் அவர்கள் வரவில்லை.” 

“அந்த நாயள் வரட்டும். இண்டைக்கு நான் அவங் களுக்குச் சரியான பாடம் படிப்பிக்கிறன்.” 

எல்லோரும் பீதியுடன் அதிகாரியைப் பார்த்தபடியே மௌனமாக நிற்கின்றார்கள். 

அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 

“பண்டிக்குப் பிறந்தவங்கள் எல்லா இடத்திலையும் போஸ்டர்கள் ஒட்டினதோடை றோட்டெல்லாம் எழுதிப் போட்டாங்கள். மந்திரி போன் பண்ணியிருக்கிறார். உடனே நடவடிக்கை எடுக்க வேணும்.” 

அங்கு நின்ற எல்லோருடைய முகங்களும் மாறு கின்றன. 

போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது வஞ்சம் தீர்க்க அந்த பொலிஸ்காரர்களுடைய கைகால்கள் துடிக்கின்றன. 

“மத்தியானம் பன்னிரண்டு மணிக்கிடேலை அந்தப் பண்டிப் பயல்களைப் பிடிச்சுவந்து நல்லாய் உதைச்சு நாளைக்கு விடியுமட்டும் லொக்கப்பிலை போட்டாத்தான் சரிவரும். அதோடை நீங்கள் சரியான விழிப்புடனிருக்க வேண்டும். கௌரவ விருந்தினருக்கும் எங்கடை தமிழ் மந்திரிக்கும் பலத்த பாதுகாப்புக் குடுக்க வேணும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதுக்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டிவரும். கவனம், மற்றப் பொலிஸ் ஸ்டேசன் களிலையிருந்தும் நான் ஆக்களை கூப்பிடுறன். இப்பவிருந்தே வேலையைத் துவங்குங்கோ.” 

குட்டிப் பிரசங்கத்துடன் நெடுமூச்சு விட்டான் அதிகாரி. 

எல்லாத் திக்குகளுக்கும் பொலிஸ் வான்களும், ஜீப்பு களும், மோட்டார் சைக்கிள்களும் பறக்கின்றன. 

போஸ்டர் ஒட்டியவர்களின் காரியாலயத்தை நோக்கிப் பொலிஸ் ஜீப்புகள் பறக்கின்றன. 

காரியாலயக் கதவு பூட்டிக் கிடக்கின்றது. 

பொலிசாருக்கு ஏமாற்றம். 

கோபாவேசம் பொங்கிக் குமுறுகின்றது. 

நகரத்திலுள்ள சில குறிப்பிட்ட வீடுகளுக்கு அவர்கள் செல்கின்றார்கள். 

வீடுகளைச் சோதிக்கின்றார்கள். 

அட்டகாசம் செய்கின்றார்கள். 

ஆனால் அவர்களுக்குத் தேவைப்படுகின்றவர்கள் ஒருவர்தானும் அகப்படவில்லை. 

பொலிஸ்காரர்கள் நகரத்தையே ஒரு கலக்குக் கலக்குகின்றனர். 

பலன்? 

ஏமாற்றம். 

நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

“இந்த வேலையைச் செய்தவங்களுக்கு இந்த ஊரிலை நிக்கிறதுக்கு துணிவெங்கை இருக்கப் போகுது? அவங்கள் வேறை இடத்துக்கு ஓடிவிட்டாங்கள். நாலைஞ்சு நாளைக்கு அவங்கள் இந்தப் பக்கம் தலைகாட்ட மாட்டாங்கள்.” 

உதவி பொலிஸ் அதிகாரி கூறுகின்றான். 

இது அவர்களுக்கு ஓரளவு தென்பைக் கொடுக்கின்றது. 

மாலை நாலு மணி. 

பல்வேறு பொலிஸ் நிலையங்களிலிருந்து வந்த பொலிஸ்காரர்கள் நகரத்தின் கேந்திர இடங்களில் உசாராக நிற்கின்றார்கள். 

சி.ஐ.டி.க்கள் பல இடங்களில் ‘வெள்ளுடுப்பில்’ திரிகின்றார்கள். 

சந்தேகத்திற்கிடமானவர்கள் பொலிஸ்காரர்களால் மறித்துச் சோதிக்கப்படுகின்றனர். 

நகரத்தின் தென் மேற்குப் புறத்தில் ஒரு புதிய கலா சார நிலையம். 

அதைச் சுற்றியுள்ள றோட்டுக்கள் பாதுகாப்பின் பொருட்டு மாலை மூன்று மணிக்கே மூடப்பட்டுவிட்டன. 

கலாசார நிலையத்திலிருந்து தெற்குப் பக்கமாக, கல்லெறி தூரத்தில் பொலிஸ் நிலையம். 

கலாசார நிலையத்திற்கு முன்னாலுள்ள றோட்டில் அடிக்கொரு பொலிஸாக அவர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள். 

போவோர் வருவோரை அவர்களுடைய கண்கள் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றன. 

நாலரை மணிக்குக் கலாசார நிலையத்திறப்பு விழா! நாலு மணியிலிருந்தே பெரிய பெரிய மோட்டார்கள் கலாசார நிலையத்தை நோக்கி வரத் தொடங்கிவிட்டன. 

கலாசார நிலையத்தின் முன்னாலுள்ள மைதானம் மோட்டார் மயமாகின்றது. 

‘பெரிய மனிதர்’களும் ‘பிரமுகர்’களும் மோட்டார்களில் வந்து இறங்குகின்றார்கள். 

அவர்களில் அநேகர் மேல்நாட்டு உடையில் இருக்கின்றனர்.  

சிலர் காட்டுமிராண்டி பீட்ல் தலைமுடி ஸ்டைல், மூங்கில் குழாய் லோங்ஸ், கறுப்புக் கண்ணாடிகள்; இடுப்பில் நாலங்குலத் தோல் பெல்டுகள், கொந்தாலி போன்ற கூர்ச் சப்பாத்துக்கள். 

ஆபாச ‘மினி ஸ்கேட்டு’களின் காம விழிகள் அங்கு மிங்கும் அலைந்து ‘இரை’க்கு வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. 

கௌரவ விருந்தாளியையும் கறுவாக்காட்டுத் தமிழ் மந்திரியையும் வரவேற்க வீதியோரத்தில் அவர்கள் கூடி நிற்கின்றனர். 

அவர்கள் மத்தியில் சாதாரண பொதுமக்களும் நிற்கின்றார்கள். 

‘பெரிய மனிதர்’களில் அநேகருக்குக் கலாசார நிலையத திறப்பு விழாவில் அக்கறையில்லை. 

அவர்களில் சிலர் தங்களுடைய உடுப்பை மற்றவர் களுடைய உடுப்புக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தங்களுக்குள் தாமே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

சிலர் ‘தற்காலிக சோடி’யைத் தேடி நோட்டம் விடுகின்றனர். 

வேறு சிலர் இரவு நடக்கப் போகும் விருந்தை பல வகையான மதுக்கள், உணவுகளைப் பற்றி எண்ணி வாயூறிக் கொண்டு நிற்கின்றார்கள். 

கௌரவ விருந்தினர் வந்தவுடன், தாங்கள் அவருடன் கதைத்து அறிமுகமாகவேண்டும், அவருடன் அறிமுகமாகி விட்டால், கொழும்பில் அடிக்கடி அவர் நடத்தும் பார்ட்டி களுக்கும் விருந்துகளுக்கும் தாங்கள் செல்ல முடியும், கிறிஸ்மஸ், புது வருட ‘போத்தல்’களும் பரிசுகளும் தங்க ளுக்குக் கிடைக்கும் என்று சிலர் அங்கலாய்த்துக் கொண்டு நிற்கின்றார்கள்: 

வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் பற்றியும் ‘ஸ்கொலர்ஷிப்’ பற்றியும் சிலர் மனப்பால் குடித்துக் கொண்டு நிற்கின்றனர்.

பொதுமக்களுடைய எண்ணம் வேறு ஏதோ ஒரு தூர தேசத்தின் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

அவர்கள் தங்களைப் பற்றி நினைவின்றியே இலட்சிய வேட்கையுடன் நிற்கின்றார்கள். 

அவர்களுடைய கண்களில் தியாகச் சுடர் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது. 

பொலிஸ் மோட்டாரின் மணி அலறுகின்றது.

நாலரை மணி! 

சகல விழிகளும் தென் திசைக்குத் திரும்புகின்றன.

பொலிஸ் மோட்டாரின் பின் ஒரு பெரிய நீண்ட பென்ஸ் கார். 

அது விமானம் போல அசைந்து வந்து சந்தியால் திரும்பிக் கலாசார நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. 

அதற்குள் கௌரவ விருந்தினர்! 

அவர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருக்கின்றார். 

பார்வையில் தன்னகங்காரம், திமிர். 

பென்ஸ் கார் கலாசார நிலைய வாசலை நெருங்குகின்றது. 

பத்திரிகைப் படப்பிடிப்பாளர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னுக்கு ஓடி வருகின்றார்கள். 

“அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக! 

ஒரு வஜ்ஜிரக்குரல் முழங்குகின்றது.

“அமெரிக்க யுத்த வெறியனே!
வியட்னாமை விட்டு வெளியேறு!’ 

பல குரல்கள் கோஷிக்கின்றன. கோஷங்கள் வானை முட்டிச் சாடுகின்றன. 

சுலோக அட்டைகள் வானத்தில் உயர்கின்றன.

கற்களும் போத்தல்களும் முட்டைகளும் பல திசை களிலிருந்து வந்த பென்ஸ் காரைத் தாக்குகின்றன. 

ஒரு கூழ்முட்டை அமெரிக்க ஏகாதிபத்திய யுத்த வெறியனின் கன்னத்தில் வந்து விழுகின்றது. 

அந்த முட்டை உடைந்து அவனுடைய கன்னத்தில் வழிகின்றது. 

“அமெரிக்கக் கொலை பாதகர்கள் ஒழிக!” சுலோகங்கள் சுழன்று சாடுகின்றன. 

‘வியட்நாமிலுள்ள வியட்கொங்கினர்தான் சாடுகின்றனரோ?’ 

அமெரிக்க யுத்த வெறியன் தினக்கின்றான். 

அவனுடைய முகம் பயபீதியில் விகாரமடைகின்றது. 

பொலிஸ்காரர்களுக்கு அதிர்ச்சி. 

‘பெரிய மனிதர்கள்’ சின்னாபின்னமாய்ச் சிதறத் தலை தெறிக்க ஓடுகின்றனர். 

“அமெரிக்க யுத்த வெறியர்கள் ஒழிக!” 

எல்லாத் திசைகளிலிருந்து கோஷங்கள் எழுந்து வானத்தைப் பிளக்கின்றன 

“இன்று வியட்நாம்! 

நாளை இலங்கை” 

பொலிஸ்காரர்கள் கொந்தளிப்பை அடக்குவதற்கு அங்கு மிங்கும் ‘பெற்றன்களை’ வீசியபடியே ஓடிக்கொண்டிருக்கின்றனர். 

மந்திரியைக் காணவில்லை. 

“டிறைவர் வேகமாய் ஓட்டு காரை.” 

அமெரிக்க யுத்த வெறியன் அலறுகிறான். 

அந்தக் கோழையினுடைய உடல் பயத்தில் நடுங்கு கின்றது. 

அவன் காருக்குள் பதுங்குகின்றான் 

பொதுமக்களும் பொலிஸ்காரர்களும் மோதுகின்றனர்! 

பென்ஸ் கார் தென் கிழக்குத் திசையை நோக்கி வேகமாக ஓடுகின்றது. 

அது ஒரு விடுதிக்குள் விரைவாக நுழைகின்றது. அங்குதான் அந்த யுத்த வெறியன் தங்கியிருக்கின்றான். 

அந்த விடுதியின் முன் ஆர்ப்பாட்டம்! 

விடுதி தாக்கப்படுகின்றது. 

பொலிஸ் விடுதியை நோக்கி விரைகின்றது. 

நகரத்தின் கிழக்குப் புறத்தில் ஒரு பிரபலமான ஹோட்டல்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றொரு யுத்த வெறியனின் மேற்பார்வையில் அந்த ஹோட்டலில் இரவு விருந்திற்காக சுறுசுறுப்பாகத் தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

“அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!” 

அந்த ஹோட்டலின் முன்னிலும் ஆர்ப்பாட்டம். ஹோட்டலும் தாக்கப்படுகின்றது. 

மதுப் போத்தல்கள் நொருக்கப்படுகின்றன. மேசைகள் தலைகீழாகப் புரட்டப்படுகின்றன. 

ஹோட்டலை நோக்கி பொலிஸ் வேகமாகச் செல்கின்றது. அதே நேரத்தில் 

“அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!’ 

நகரத்தின் இதயத்தில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் கெம்பீரமாகச் சென்று கொண்டிருக்கின்றது. 

“அமெரிக்க யுத்த வெறியனே! வியட்நாமை விட்டு வெளியேறு!” 

ஊர்வலத்தினர் ஆக்ரோஷத்துடன் கோஷிக்கின்றனர். 

அந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான வாலிபர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் லட்சிய வேட்கையுடன் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். 

சிலருடைய மண்டைகளிலிருந்து தியாகச் சின்னமான ரத்தம் வழிந்து கொண்டிருக்கின்றது. 

“வியட்நாம் வெற்றி! 
எங்கள் வெற்றி!” 

தியாகத் தீயில் புடமிடப்பட்ட அவர்கள் கோஷிக்கின்றார்கள். 

காக்கிச் சட்டைகள் ஊர்வலத்தை நோக்கிப் பாய்கின்றன.

காக்கிச் சட்டைகளுக்கு எதிராக- 

மக்களின் இரும்பு முஷ்டிகள் உறுதியுடன் உயர்கின்றன!

சூரியன் சிவக்கின்றது. 

மேற்கு செந்நிறமாகிக்கொண்டிருக்கின்றது. 

– 1970

– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *