உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 4,649 
 
 

(கதைப்பாடல்)

குதிரை ஒன்றில் ஏறியே
தந்தை அவரின் மகனுமே
அதிவிரைவில் சாலையில்
சந்தை சென்று திரும்பினர்!

குதிரை மிகவும் மெலியது
குட்டி வடிவில் சிறியது
அதிலமர்ந்த இருவரை
சுமக்கச் சிரமப் பட்டது!

சாலைப் பாலம் வழியிலே
சவாரி செய்து போகையில்
ஆளுகொருவராகவே
அரட்டையடித்துக் கொண்டனர்

‘பாவமய்யா குதிரையும்,
இருவரையும் சுமக்குமோ?
ஒருவர் இறங்கி போதலே
இரக்கம்!’ என்று பேசினர்.

தந்தை மகனை குதிரைமேல்
குந்தி இருக்கச் சொல்லியே
தான்நடந்து சென்றிட,
ஆளுகொன்றாய்ப் பேசினர்.

‘வயது முதிர்ந்த பெரியவர்
வருந்தி நடத்தல் நியாயமோ?
இளைஞன் நடந்து போவதே
எவர்க்கும் நல்ல தென்றனர்!’.

தந்தை தன்னை இறுத்தியே
தனையன் நடந்து போகையில்
விந்தை இந்த முதியவர்
குந்தி அமர்ந்து செல்வது

குதிரை தன்னைத் தூக்கியே
கொண்டு போதல் அல்லவோ
குதிரை மீது அன்பினைக்
காட்டும் செயல் என்றதும்

குதிரை தன்னைத் தூக்கியே
தோளில் வைத்து நடக்கையில்
உந்தி அந்தக் குதிரையும்
உயரக் குதித்து பாலத்தில்

ஓடும் நீரில் விழுந்தது
உயிரை மாய்த்து விட்டது!

ஊருக்கென்ன ஆயிரம்
ஒன்று ஒன்றாய்ச் சொல்லிடும்
நமக்கு நல்லது எதுவென
நாமே தெளிதல் அல்லவோ…

உண்மையான் ஞானமாம்!
உணர்ந்து வாழ்தல் மேன்மையாம்!
அன்பு காட்டல் தேவைதான்
அதில் அழிதல் நியாமோ!?

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *