உங்களுக்காக ஒரு மரணம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 15, 2025
பார்வையிட்டோர்: 5,400 
 
 

மரணத்தைப் பற்றி என்னிடம் முதலில் சொன்னது கார்த்து என்ற மருத்துவச்சி. சுருக்கங்கள் விழுந்த முகமும் தொங்கிய முலைகளும் கொண்ட கார்த்து என்ற மருத்துவச்சி.

இருபது வருடங்களுக்கு முன்னால் மழை பெய்து ஈரமான ஒரு இரவில் அம்மாவுடன் ஓட்டிப் படுத்துக்கொண்டிருந்தேன் நான். என்னைச் சுற்றிலும் பிறவியின் வாசனையாக இருந்தது. பிரசவத்தின் தளர்ச்சியில் நினைவற்றுப் படுத்திருந்த தாயின் கட்டிலுக்குக் கீழே கார்த்து என்ற கிழவி வெற்றிலை மென்றுகொண்டிருந்தாள். தலை ஆடும்போது அவளுடைய நீண்ட காதுகளும் அவற்றிலிருந்த தோடுகளும் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு துண்டு மட்டும் போர்த்தியிருந்த மார்பில் தோல் வற்றிச் சுருங்கியிருந்தது.

நாழிகைகள் கழிந்து அம்மா கண்ணைத் திறந்தபோது, கார்த்து, துணியில் பொதிந்திருந்த என்னைத் தூக்கிக் காட்டினாள். “ஆண் குழந்தையாக்கும் கல்யாணியம்மா…” என்று கூறிவிட்டு அவள் அசுத்தமான உதடுகளை என் உச்சியில் அழுத்தி முணு முணுத்தாள்: “சாகப் பொறந்த தங்க மகன்.”

அம்மா அதைக் கேட்கவில்லை. முதல் பிரசவத்தின் சூடும் சில்லிப்பும் சுருட்ட அவள் மீண்டும் மயக்கத்தில் விழுந்தாள்.

“மகனுக்குச் சாக இஷ்டமா?” கார்த்து என் காதில் கேட்டாள்.நான் தலையாட்டினேன். “அப்போ ஏன் பிறந்தே?”

என்னிடம் அதற்கு பதில் இல்லை. “நீங்க என்னைப் பிடிச்சு இழுத்து எடுத்ததினால…” என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். ஆனால், எனக்குப் பேசத் தெரிந்திருக்கவில்லை. அ-ஆ-வும், ஏ-பி-யும் படித்தது பிற்பாடு வருடங்களுக்குப் பிறகுதான். அதுவரை சிந்தனைகளுக்கு வரி வடிவம் தோன்றியிருக்கவில்லை. அவற்றிற்குச் சீட்டுச் சித்திரங்களின் உருவமிருந்தது. பல உருவங்களிலும் உங்களிலுமாக அப் படங்கள் எனது தளிர்த்தலையில் கிடந்து புரண்டுகொண்டிருந்தன.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு மரமேறப் படித்த காலத்தில் ஒரு அந்தி நேரத்தில் நான் கார்த்துவின் மரணத்தைக் கண்டேன்.

நான் சாவேன் என்று சொன்ன‌ கார்த்து செத்தாள். என‌க்கு அதில் குரூர‌மான‌ ம‌கிழ்ச்சி உண்டாயிற்று. இற‌ப்ப‌த‌ற்குச் ச‌ற்று முன்பு, ம‌ர‌ண‌ம் அந்த வாயிற்படிக்கு அப்புறத்தில் ஒளிந்துநிற்கிறது என்பதைத் தெரிந்துகொண்டுதான் நான் அந்தக் குடிசைக்குள் சென்றேன்.

சாணம் மெழுகிய தரையில், கம்பளி விரித்த பாயில், கார்த்து என்ற மருத்துவச்சி சோர்ந்து கிடந்தாள். தலைக்கு நேரே ஒரு அணையா விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. கிழவியின் மூன்று பிள்ளைகள் வெளியே வராந்தாவில‌மர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்தார்கள். தெற்கே எங்கேயோ இருந்த ப‌வானி என்ற மகளை அழைக்க ஆள் போயிருந்தது. முற்றத்தின் ஒரு மூலையில் சாண வறட்டிகளும் கொட்டாங்கச்சிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மரணத்திற்குப் பின் கர்மங்கள் நடத்துவத‌ற்காக ரிஸ்ட்வாட்ச் கட்டிய சிரிப்பாணி ராமன் நாயர் காத்துக் கொண்டிருந்தான். அவன் இடையிடையே மணிக்கட்டில் நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். தென்பக்கம் சிதை கூட்டத் தயார் செய்து கொண்டிருந்தனர் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த சில இளைஞர்கள்.

எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு பயம் உண்டாயிற்று. ம‌ரணம் ஒரு கருப்புக் கழுகாக அவ் வீட்டின் மேலே சிறகு விரித்துக்கொண்டு நிற்கிற‌து. ஒரு காட்டெருமையாக வெளியில் நின்று உறுமுகிறது. கட்டும் கயிறாகத் தோட்டத்தில் எங்கோ சுருண்டு கிடக்கிறது. சுற்றுப்புறம் முழுவதும் மரணத்தின் மணம். அவ் வீட்டிலுள்ளவர்களெல்லாம் பார்வைக்குட்பட்டவர்கள். மர‌ணத்தின் பார்வை மாறிவிழுந்தால் ஆள் வேறாகும். கார்த்துக்கிழ‌வி த‌ப்புவாள். ப‌திலாக‌ வேறு யாராவ‌து…..

இங்கே என் சிந்தை ப‌த‌றிய‌து. என‌க்கு அங்கிருந்து ஓடித் த‌ப்ப‌ வேண்டுமென‌த் தோன்றிய‌து.

இட‌றிய‌ தொனியில் நான் கூப்பிட்டேன்.

“கார்த்துப்பாட்டி….”

என் குர‌ல் கேட்டு மூலையில் க‌ளைத்த‌ம‌ர்ந்திருந்த‌ இர‌ண்டு கிழ‌விக‌ள் த‌லையை உய‌ர்த்திப் பார்த்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் கேட்டார்க‌ள்:

“ஏன் ம‌க‌னே, இந்த‌ச் ச‌ந்தியா வேளைல‌ இங்கே வ‌ந்து நிக்க‌றே? அம்மாக்குத் தெரிஞ்சா திட்ட‌மாட்டாளா?”

“மாட்டா, மாட்டா” நான் உறுதியாக‌ச் சொன்னேன். நான் கார்த்துப்பாட்டியின் ம‌ர‌ண‌த்தைக் காண‌ வ‌ந்து நின்றிருக்கிறேன். நான் சாவேன் என்று சொன்ன‌து அவ‌ள்தான். அத‌னால் அவ‌ளுடைய‌ ம‌ர‌ண‌த்தை என‌க்குப் பார்க்க‌ வேண்டும், பிற‌கு மூர்க்க‌த்த‌னத்துட‌ன் கேட்க வேண்டும், “நீங்க‌தானே பாட்டி இப்ப‌ச் சாக‌ப் போறீங்க‌?”

“எப்ப‌ பாட்டி செத்துப்போவா?” நான் விசாரித்தேன். கிழ‌விக‌ளில் ஒருத்தி மூக்கைச் சிந்தினாள்.

“அப்ப‌டியொண்ணும் சொல்ல‌க்கூடாது ம‌க‌னே. இக‌லோக‌ம் விடுவ‌து அத்த‌னை சுல‌ப‌ம‌ல்ல‌. மாயையின் க‌ட்டு அப்ப‌டி முறுகி முறுகிக் கிட‌க்கும். அவுத்தாலும் அவுறாது. வெட்டினாலும் முறியாது.”

நான் கிழ‌வியின்ப‌க்க‌த்தில் குத்தியிட்ட‌ம‌ர்ந்து மெல்ல‌ அழைத்தேன். “கார்த்துப்பாட்டி.”

ப‌ல‌முறைக‌ள் கூப்பிட்ட‌தும் அவ‌ள் கண்ணைத் திற‌ந்தாள்.

“நீங்க‌ எப்போ சாவீங்க‌?” நான் கேட்டேன்.

“ப‌க‌வான் கூப்பிட‌ற‌போது ம‌க‌னே..” அவ‌ள் முணுமுணுத்தாள்.

“சாக‌ இஷ்ட‌மா?”

“இல்லை ம‌க‌னே, ப‌வானியோட‌ பொண்ணு க‌ல்யாண‌மும் பார்க்காம‌ எப்ப‌டி….?”

“பின்னே நான் சாவேன்னு சொன்ன‌து?”

“நீயும் சாவே. ரொம்ப‌த் தாம‌தியாது. ம‌க‌ன் என்கூட‌ வ‌ருவே. நான் கொண்டுபோவேன்.”

கார்த்துப் பாட்டியின் க‌ண்க‌ள் கூர்த்துப் ப‌ள‌பளத்த‌ன‌ அவ‌ற்றில் மிக‌ப் பெரிய‌ ஒரு ச‌க்தி இருந்த‌து. அது என்னை‌ ந‌டுக்கிய‌து. கிழ‌வி மீண்டும் எனது ம‌ர‌ண‌த்தை வ‌ருவ‌துரைக்கிறாள். என‌க்கு அங்கேயிருந்து ஓடித் த‌ப்ப‌வேண்டுமென்று தோன்றிய‌து. பிற‌ந்த‌போது இற‌க்க‌ ப‌ய‌ மில்லையென்று கூறிய‌ என‌க்கு இப்போது ப‌ய‌முண்டாகிற‌து. என‌க்குப் பாட்டியிட‌ம் என்ன‌வெல்லாமோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டு மென்றிருந்த‌து.

நான் என்று இற‌ப்பேன்? எப்ப‌டி இற‌ப்பேன்?

அப்போது கார்த்துவின் உட‌ல் ச‌ற்று விறைத்த‌து. த‌லை ச‌ரிந்த‌து. வாய் பிள‌ந்த‌து.

அதோடு வெளியே ஒரு கால‌ன்கோழி நீட்டிக்கூவிய‌து. நான் ந‌டுங்கினேன். ம‌ற்ற‌க் கால‌ன்கோழிக‌ள் அதைத் தொட‌ர்ந்து கூவின‌.

அத்தோட்ட‌ம் முழுவ‌தும் கால‌னின் ச‌ங்கு அழைப்புக்க‌ள் முழ‌ங்கின‌. பாட்டியின் க‌ண்க‌ள் பாதி திற‌ந்து கிட‌க்கின்ற‌ன‌. கிழ‌விக‌ள் எழுந்து நின்று க‌ண்க‌ளைத் துடைத்துக்கொண்டார்க‌ள். அட‌க்கிய‌ குர‌லில் தேம்பினார்க‌ள். வ‌ர‌ந்தாவில‌ம‌ர்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்த‌ பிள்ளைக‌ள் ஓடிவ‌ந்தார்க‌ள்.

சிரிப்பாணி ராம‌ன் நாய‌ர் வாட்சைப் பார்த்து நிம்ம‌தியோடு பெருமூச்செறிந்தான்.

ஒரு ப‌ய‌க் க‌ன‌வு க‌ண்டு விழித்தாற்போல‌ என‌து உட‌ம்பு த‌ள‌ர்ந்திருந்த‌து. நான் சாவேனென்று சொன்ன‌ கார்த்து என்ற‌ ம‌ருத்துவ‌ச்சி செத்திருக்கிறாள். அதோடு அந்த‌ இர‌க‌சிய‌மும் செத்திருக்கிற‌து.

இனிமேல் எனக்கு அதைப்பற்றி யாரிடமும் கேட்க முடியாது. யாராலும் எனக்கு அதைத் தெரிவிக்க முடியாது.

நான் நடந்தேன் நினைவுகளின் அந்திநேரம் நோக்கி…

பத்தாம் பிறந்த நாளில்…

மழை பெய்து குளிர்ந்திருந்த ஒரு மாலைப்பொழுதில் ஸ்கூல் விட்டு வரும்போது கோட்டைக் குன்றின் சரிவில் என்னை யாரோ அழைத்தார்கள்.

“அப்புக்குட்டா…”

நான் சுற்றிலும் நோக்கினேன். ஆளில்லை. அசைவுமில்லை. இரவு கட்டவிழ்ந்து விழப்போகிறது. கோவில் பந்தலின் கீழே குழந்தைகள் விளையாடுமிடம் காலியாகக் கிடக்கிறது. முந்திரி மரத்திலிருந்து இப் போதும் நீர்த்துளிகள் தெறித்து விழுகின்றன. கொஞ்சம் பயம் உண்டாயிற்று. மழை பெய்து இருண்ட அந்தி வேளை. வேகமாக நடக்க வில்லையென்றால் இருட்டின் இந்தச் சேற்றுக்குழியில் புதைந்து போவேன். அப்படி அவசரம் கூடி நடக்கும்போது,

மீண்டும் அந்த ஒலி…

“அப்புக்குட்டா…”

இம் முறை கண்டுபிடித்துவிட்டேன். முந்திரி மரத்தின் கிளையில் ஒரு கருப்புப் பறவை உதடுகள் மலர்த்தி அழைக்கிறது. நான் சட்டென்று திரும்பி நின்று கேட்டேன்.

“என்ன வேணும்?”

“என்னை நினைவிருக்கா?”

“இல்லை.”

“இல்லையா? இன்னும் கொஞ்சம் யோசிச்சுப்பாரு.”

“கொஞ்சம்கூட நினைவில்லை”

பறவை அலகை விரித்து உரக்க கோரம் மிளிரச் சிரித்தது. அதே சமயத்தில் முந்திரித்தோப்பில் மழை சொரிந்தது. கூட்டமாகக் குருவிகள் கூவிக்கொண்டு பறந்துபோயின. மழைத்துளிகளின் அடிபட்டு இலைகள் உதிர்ந்து விழுந்தன. மேலிருந்து சீறிவந்த காற்றில் இலைகள் பறந்து நடந்தன. நான் முழுக்க நினைந்துவிட்டேன். குளிர்ந்து விறைத்தது. பற்கள் கிட்டித்தன.

“என்னை நினைவில்லை. இல்லியா… ஹ…ஹ…ஹ… உனக்குப் பிறவி கொடுத்தது நானல்லவா? அதை மறந்து போனாயா?”

பயந்து மிரண்டு குரலெழுப்ப இயலாமல் நான் நின்றேன். மழையிலிருந்து, கோட்டைக்குன்றின் காற்றிலிருந்து, கருப்புப் பறவையிடமிருந்து தப்புவதற்காக ஒரு மரத்தடியில் புகலிடம் தேடும்போது நான் அந்தக் குரலை இன்னொரு முறை கேட்டேன்.

“அப்புக்குட்டா… இன்னொரு தடவை பாரு…”

நான் பார்த்தேன்.

பறவையின் நீண்ட காதுகளில் தோடுகள் ஆடுகின்றன. வெற்றிலைச் சிவப்பேறிய உதடுகளுக்குமேல் சுருக்கங்கள் விழுந்து மடங்கின தோல்.

எனது நினைவுகள் மீண்டும் என்னைச் சிறைப்படுத்திப் பணியவைத்தன.

“அப்புக்குட்டா, வா. உன்னை நான் கொண்டு போகிறேன்.”

“வேண்டாம், …. வேண்டாம்.” நான் ஓடினேன். திரும்பிப் பார்க்காமல் ஓடினேன். அப்போதும் பின்னால் கோரமான அந்தச் சிரிப்புக் கேட்டுக்கொண்டிருந்தது.

“தப்பிக்கப் பார்க்க வேண்டாம். நான் இன்னும் வருவேன்…”

வீட்டை யடைந்தபோது எனது வாயிலிருந்து நுரை தள்ளியிருந்தது. நான் சோர்ந்து விழுந்தேன். அந்தக் கிடப்பில் மூன்று நாள் கிடந்தேன். சுட்டுப் பொரிக்கும் ஜுரம். பயக்கோளாரென்று அம்மா சொன்னால். அவள் விம்மியழுதாள்.

அவ்வாறாக கோபால ஜோஸ்யன் வந்தான். கோணக்கண் கோபால ஜோஸ்யன். அவன் ராசி பார்த்தான். சோழி பரப்பினான். எனது கிரகங்களின் இயக்கங்கள் அவன் சொல்படியாயின. அவை அவனது மனதில் களங்கள் சமைத்தன. அவன் அக் களங்களை நிலத்திற்கு மாற்றினான். இறந்து போனவர்களையும் கருப்புப் பறவைகளையும் வேட்டையாடினான். சந்தோஷப்படுத்தினான். பயமுறுத்தினான்.

கடைசியில் எனக்குத் தெரிந்தது.

“ஆயுள் நல்லா இல்லை. கடைசின்னு கூடச் சொல்லலாம். இன்றைக்கு இல்லாவிட்டால் நாளை”

அம்மா விசித்து அழுதாள். நோன்பிருந்து வயிற்றில் முளைத்த குருத்துக்கு இவ் வுலக வாழ்க்கை எவ்வளவென்று திட்டமில்லை. அவன் விடைபெற்றுக்கொள்ள விருக்கிறான். இன்றில்லாவிட்டால் நாளை ஒரு அகால மரணம்.

கார்த்து என்ற மருத்துவச்சி சொன்னது சரிதான்.

முந்திரித்தோப்பில் கறுப்புப் பறவை சொன்னது சரிதான்.

இன்றில்லாவிட்டால் நாளை… அதிகம் தாமதமாகாது.

நான் என் நிமிடங்களை எண்ணினேன். என் நிமிடங்கள் ஈசல்களைப் போல வெடித்து முளைத்தன. பறந்து திரிந்து உதிர்ந்து விழுந்தன.

தரையில்தான் ஆபத்து உண்டாகும். கோபால ஜோஸ்யன் உறுதி யாகச் சொன்னான். நீரில் நிலைமை பத்ரமே.

அது முதல் நான் சிறைப்பட்டேன். காவல்கார்கள் உண்டானார்கள். ஸ்கூலுக்குப் போகும்போது பக்கத்து வீடுகளிலிருந்து இரு பிள்ளைகள் இருபுற‌மும் காவ‌ல். விடும‌றை நாட்க‌ளில் காரிய‌ஸ்த‌ன் ச‌ங்குணி நாய‌ரின் சிவ‌ந்த‌ க‌ண்க‌ள் என்னைச் சுற்றிலும். ம‌ர‌மேற‌ச் ச‌ற்றும் அனும‌தியில்லை. ப‌லாவிலும், மாவிலும், கொய்யாவிலும் ஆப‌த்துப் ப‌துங்கிக் கிட‌க்கிற‌து. நீரில் சுத‌ந்திர‌ம். குளிக்க‌லாம். நீந்த‌லாம். குதிக்க‌லாம்.

அப்ப‌டியே நான் மீண்டும் சுற்றினேன். பிள்ளைப‌ருவ‌த்தின் முடிவை நோக்கி, நினைவுக‌ளின் அந்தியை நோக்கி….

ப‌தினைந்தாம் பிற‌ந்த‌ நாள‌ன்று…….

அன்றொரு பிச்சைக்கார‌ன் என்னைத் தேடிவ‌ந்தான். அழைக்காத‌ விருந்தாளியாக் வ‌ந்து சேர்ந்தான். முன் முற்ற‌துத் த‌ரையில் க‌ளைத் த‌ம‌ர்ந்தான். மூட்டையை இற‌க்கி வைத்தான். அவ்ன் நெற்றி முழுவ‌தும் விபூதி பூசியிருந்தான். ந‌டுவில் ஒரு பெரிய‌ குங்கும‌ப்பொட்டு இட்டிருந்தான். அவ‌னுக்குச் சிவ‌ப்புக் க‌டுக்க‌னும் சிவ‌ந்த‌ முக‌மும் சிவ‌ந்த‌ உத‌டுக‌ளுமிருந்த‌ன‌.

“நினைவிருக்கா?” என் முக‌த்தைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு ஒரு விஷ‌ம‌ச் சிரிப்புட‌ன் அவ‌ன் கேட்டான்.”

“இல்லை.”

“ஞாப‌க‌ப்ப‌டுத்திப் பாரு…”

“இல்லை, கொஞ்ச‌ங்கூட இல்லை.”

“ஹ‌….ஹ‌…ஹ‌..”

அவ‌ன் தனது பையிலிருந்து ஒரு சிட்டிகை விபூதியெடுத்து என் முக‌த்தில் ஊதினான். என் க‌ண்க‌ள் ப‌த‌றின‌. முக‌ம் போராடிய‌து. என் நினைவுக‌ள் வ‌ருட‌ங்க‌ளின் வாழைப் பாளைக‌ளைக் கிழித்துப் பிள‌ந்து கொண்டு வெளியேறின‌.

அப்போது அம் முக‌த்தில் நான் கார்த்து என்ற‌ ம‌ருத்துவ‌ச்சியைக் க‌ண்டேன். வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு அந்த‌ச் சிறு குடிசையில் பாயில் க‌ண்ட அதே முக‌ம். விபூதி பூசிய‌ முக‌ம். பாதி மூடின‌ க‌ண்க‌ள்…. அவ‌ன் என் முக‌த்தை ஊடுருவி நோக்கினான். என் க‌ண்க‌ளை அவ‌னுடைய‌ க‌ண்க‌ளில் கோர்த்தான். அவ‌ற்றின் காந்த‌ ச‌க்தியில் நான் ம‌ய‌ங்கினேன்.

“இப்போ நினைவிருக்கா?”

“ம்.”

“என்றைக்கு, எங்கே?”

வ‌ருஷ‌ங்க‌ளாச்சு.. ஜ‌ன்ம‌ங்களாயிடுச்சு.”

எங்க‌ள் க‌ண்க‌ள் இர‌க‌சிய‌மான‌ ஓர் ச‌ம்பாஷணையில் ஈடுப‌ட்ட‌ன‌. கார்த்துப் பாட்டியின் கிணுகிணுவென்ற‌ குர‌லை நான் மீண்டும் கேட்டேன். என‌க்கு இன்னுமொருமுறை நினைவுப‌டுத்த‌ அவ‌ள் வ‌ந்திருக்கிறாள். கிழ‌வியின் க‌ரிநாக்கு ஒரு சாப‌த்தின் ச‌ங்கிலியாக‌ என் பின்னால் நீண்டு வ‌ருகிற‌து.

பிற‌ந்த‌வுட‌னே என் ம‌ர‌ண‌த்தைக் குறித்து அவ‌ள் சொன்னாள். இற‌க்கும் முன்பு இன்னொரு மு‌றை நினைவுப‌டுத்தினாள்.

இதோ இப்போது இன்னொரு நினவுபடுத்த‌ல்.

கார்த்து என்ற‌ ம‌ருத்துவ‌ச்சியின் நிழ‌ல் என் வாழ்க்கையில் ப‌டிந்து கிட‌க்கிற‌து. என் வாழ்க்கையின் நீள‌த்தை நிச்ச‌யிக்க‌ அவ‌ளுக்கு உரிமையுண்டு. அவ‌ள்தான் என‌க்கு வாழ்வு த‌ந்தாள். அவ‌ள் உத‌வி செய்யாம‌ லிருந்தால் அம்மா ஒருபோதும் என்னைப் பிர‌ச‌வித்திருக்க‌மாட்டாள். அம்மாவின் பெரிய‌ வ‌யிற்றில் மூச்சு முட்ட‌க் கிட‌ந்து, வீங்கி, சுருங்கிச் சுருங்கி நான் ஒரு கெட்ட‌ விதையாக‌ ந‌சித்துப்போயிருப்பேன்.

பிச்சைக்கார‌ன் ப‌ரிகாச‌த்தொனியில் சிரித்தான். அவ‌ன் கையைச் சொட‌க்கிக் கூப்பிட்டான்.

“என்னோட‌ வ‌ரியா?”

“இல்லையில்லை.”

“பின்னே, எப்போ?”

“ப‌த்தாம் கிளாஸ் ரிஸ‌‌ல்ட் தெரிய‌ட்டும்.”

“உம்…நான் அப்போ வ‌ருவேன். நினைவிருக்க‌ட்டும்.”

வேண்டாம். வேண்டாம். இனியொருபோதும் நீங்க‌ள் இங்கே வ‌ர‌ வேண்டாம். என‌க்கு உங்க‌ளுடைய‌ அசிங்க‌மான‌ முக‌த்தைப் பார்க்க வேண்டாம். கார்த்துக் கிழ‌வியான‌ நீங்க‌ள் ஒருமுறை ஒரு க‌ருப்புப் ப‌ற‌வையாகி முந்திரித் தோப்பில் வ‌ந்த‌ம‌ர்ந்தீர்க‌ள். இதோ இப்போது ஒரு பிச்சைக்கார‌னாக‌ உருவ‌ம் மாறியிருக்கிறீர்க‌ள். இந்த‌ப் ப‌டியில் இனிமேல் ஏறாதீர்க‌ள். நான் அழுது க‌லாட்டா ப‌ண்ணுவேன். ஆட்க‌ள் சேர்ந்து உங்க‌ளை உதைத்துக் கொன்றுவிடுவார்க‌ள்.

“ஹ‌…ஹ‌..ஹ‌..” அவ‌னுடைய‌ உர‌த்த‌ சிரிப்பு அந்த‌த் தோட்ட‌ம் முழுவ‌தும் கிட‌ந்து முழ‌ங்கிய‌து. ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு அந்‌த‌ச் சிறிய‌ குடிசையில் கேட்ட‌ அதே கிணுகிணுவென்ற‌ ச‌ப்த‌ம். வெளியே கால‌ன்கோழிக‌ள் தொட‌ர்ந்து ஒலித்த‌ன‌. கால‌னின் ச‌ங்குக்கூவ‌ல். எருமையின் அழைப்பு.

நான் உர‌க்க‌ ஓல‌மிட்டேன்.

அம்மா ஓடி வ‌ந்தாள். அக்காமார்க‌ள் ஓடி வ‌ந்த‌ன‌ர்.

“என்ன‌ அப்புக்குட்டா?”

“பிச்சைக்கார‌ன்… பிச்சைக்கார‌ன்” நான் வாச‌ற்ப‌டியைச் சுட்டிக் காட்டினேன்.

“எங்கே பிச்சைக்கார‌ன்?”

கேட் திற‌ந்து கிட‌ந்தது. அவ‌ன் போய்விட்டிருந்தான்.

“எதையாவ‌து பார்த்து ப‌ய‌ந்திருப்பான். இப்ப‌டியொரு ப‌ய‌ந்தாங் கொள்ளியை நான் பார்த்த‌தில்லை. நான் உடல் முழுக்க நடுங்கிக்கொண்டிருந்தேன். நினைவுகள் எனக் கொரு சாபமாயின.

நான் மீண்டும் நடந்தேன் நினைவுகளின் அந்திநேரம் நோக்கி.. எனது நிமிடங்கள் உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கின்றன. வாடிய பூக்களைப் போல, பழுத்த இலைகளைப்போல, புழுத்துளைகளேற்ற நினைவுகளுடன் பிள்ளைப்பருவத்தின் அந்திகளில் நான் அலைந்து நடந்தேன்.

ஸ்கூலிலிருந்து காலேஜில் சேர்ந்தேன். நிக்கர் மாறி வேஷ்டி வந்தது. முகத்தில் பளபளப்புண்டாயிற்று. மூக்கின் கீழே மயிர் அரும்பியது.

அதோடு சற்றுக் கருக்கவும் தொடங்கின. மரணமாம் மரணம். வரட்டும் ஒரு கை பார்க்கலாம்.

இதற்கிடையில் அம்மா ஒரு புதிய ஜோஸ்யனைப் பார்த்தாள். ஒரு புதிய செய்தி கிடைத்தது. தரையிலல்ல. தண்ணீரில்தான் ஆபத்து உண்டாகும். அதனால் நீரில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எவ்வளவு பெரியவனாக ஆனாலும் தண்ணீரில் தனியாக விடாதீர்கள். நீர்ப்பிசாசின் மோக வலையில் சிக்கினால் ஆற்றில் முழங்கால் தண்ணீர் கூடப் போதும். அவள் பிடித்திழுத்து உள்ளுக்குள் கொண்டுபோய் விடுவாள்.

நான் ஆற்றில் குளிப்பதை நிறுத்தினேன். ஆனால் மரமேற அனுமதி கிட்டிய‌து.

இருபதாம் பிறந்த நாளன்று…

அன்றுதான் நான் சாமியாடியின் மகள் ராதை என்ற பெண்ணோடு அறிமுகமானேன். அவளுக்குக் கருமையான முகமும், அதில் முகப்பருக்களும், பொங்கும் இளமையும் இருந்தன. வீட்டுத் தோட்டத்தைத் தாண்டி, காளித் தோப்பைத் தாண்டி, உடைந்த கல் தரைகளுக்குப் பின்னால், நதிக்கரையில் நாங்கள் தினமும் அந்தி நேரத்தில் சந்தித்தோம். அப்போதுதான் ராதை குளிக்க வருவாள். ஆள் நடமாட்டமில்லாத நதியோரம். வாளிப்பான உடலமைந்த ராதை. இடுப்புவரை நீரில் மார்க்கச்சையுடன் நின்று அவள் குளிப்பாள். நான் கரையில் காத்திருப்பேன். எனக்கு நீரிலிறங்க அனுமதியில்லை. என் மரணம் தண்ணீரில்தான். எனக்கும் ராதைக்கும் நடுவில் ஒரு வரம்பு இருந்தது. நீரின் தெளிந்த ஓர் ரேகை. அதைத் தாண்டினால் மரணம்.

கள்ளச்சிரிப்புடன், நனைந்து ஒட்டிய ஆடைகளுடன் அவள் தண்ணீரிலிருந்து என்னைச் சைகை காட்டி அழைப்பாள். அவளுடைய கண்வீச்சில் இளகிப்போய்விடாமலிருப்பதற்காக நான் கரையில் பற்றிப்பிடித் தமர்ந்திருப்பேன். குளித்து முடித்து என் பக்கம் திரும்பிப் பார்க்காமலேயே அவள் ஓடிப்போவாள். அவளுக்கு நீரில்தான் நான் தேவை. கரையில் நான் வேண்டாம்.

ஒரு மாலையில் முதன்முதலாக அவள் மார்க்கச்சையை அவிழ்த்த போது நான் வரம்புக்கோட்டைக் கடந்தேன்.

ஆற்றங்கரையில் மணல்பரப்பில் ராதை மூச்சுத்திணற மல்லாந்து கிடந்தாள். நாங்கள் கட்டியணைத்துப் படுத்து உருண்டோம். என் உடலின் வெப்பத்தில். அவள் திளைத்துக்கொண்டிருந்தாள். எங்கள் அன்பின் ஊற்றுக்கள் வெடித்துக் கலங்கின. ஒரு தண்ணீர்ப் பிசாசைப் போல அவள் தண்ணீரை நோக்கி உருண்டு உருண்டு போனாள். பின்னாலேயே நானும்.

முதல் புணர்ச்சியின் லாகிரியில் அவள் தண்ணீரை நெருங்கித் தாவினாள். அங்கே கிடந்து வெறியுண்டாள். நீர்ப் பூக்குற்றி மத்தாப்புக்களாகச் சிதறின. அவளுடைய முகத்தை எனக்குப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவளது கிளர்ச்சியுற்ற மூச்சிறைப்பும் சிரிப்பும் எனக்குக் கேட்டன. அந்திநேரத்தின் கடைசி வெளிச்சமும் நீரில் கரைந்து போய் விட்டிருந்தது. மங்கிய இருளில் கரிய நீர்மட்டும் சிதறித் தெறித்துக்கொண்டிருந்தது. திருப்தியடையாத நான் வரம்பைக் கடந்து நீருக்குள் போனேன். கைகளைச் சுழற்றி அவளுக்காகத் துழாவிக்கொண்டு இழைந்தேன்.

இருட்டில் என் கண்கள் மங்கின.

“அப்புக்குட்டா, நினைவிருக்கா?” நீர்ப்பிளவுகளினிடையோடு அந்தக் குரலை நான் கேட்டேன்.

நான் நடுங்கினேன். இதோ என் நிமிடம். எனக்காக வேட்டை யாடியிருந்த நிமிடம்.

தண்ணீரின் கரிய பூக்குற்றிகள் கண்முன்னால் சிதறின. முகத்தில் கூர்மையான துளிகள் வந்து விழுந்தன.

“அப்புக்குட்டா வரியா?” ஸ்திரீயின் கிணுகிணுத்த குரல்.

“ஹ…..ஹ….ஹ…..”

நான் அடிமுடி நடுங்கினேன். தலை பெருத்தது. கைகளில் பிசாசின் சக்தி சுரந்து குறுகுறுத்தது. இல்லை, இனிமேல் அதைத் திருப்பிச் செய்யக்கூடாது. கார்த்து என்ற மருத்துவச்சியாக, கருப்புப் பறவையாக, பிச்சைக்காரனாக, ராதை என்னும் தண்ணீர்ப் பிசாசாக…..

இல்லை.

இல்லை.

இல்லை.

சித்தமிழந்த வெறியோடு நான் முன்னால் குதித்தேன். தண்ணீரின் வாழைமடல்களைப் பிளந்து போனேன். கருப்புப் பறவையின் கழுத்து நெரிந்தது. ஒரு அழுகை பாதியிலேயே உடைந்தது. பெருத்த தலையுடன் ஓடிக் கரையில் ஏறியபோது நான் முழுதும் விறைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் எனக்கு நிம்மதி உண்டாயிற்று. நான் மரணத்தின் வேரறுத்துக் களைத்திருக்கிறேன். என்னைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த நிழலைப் பிளந்து எறிந்திருக்கிறேன்…

அப்படி நிம்மதியாக இருக்கையில் நேற்று எனது வக்கீல் வந்தார். கம்பிகளுக்கு அந்தப்பக்கம் நின்று இரு தத்துவச் சிந்தையின் பகுதிபோல அவர் சொன்னார் : மரணத்திலிருந்து தப்புவது இயலாதென்று. கடைசி மனுவும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது.

நேற்றிரவு கார்த்து என்ற மருத்துவச்சியின் கிணுகிணுவென்ற குரலை நான் மீண்டும் கேட்டேன். கம்பிகளுக்கு வெளியேயிருந்து சுவர்களுக்கு அந்தப்புறத்திலிருந்து அது என்னைத் தேடி வந்தது.

“அப்புக்குட்டா, என்னோட வரியா?”

“ஆமாம்..ஆமாம்” நான் உரக்கச் சொன்னேன்.

– சேது

– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: https://www.projectmadurai.org

சேது

எம். சேது மாதவன். பிறப்பு 1942-ல். பி.எஸ்ஸி., பாஸான பிறகு ஆறு வருடம் வட இந்தியாவில் பலவிடங்களிலும் வேலை பார்த்தார். இப்போது ஸ்டே்ட பாங்க் ஆஃப் ட்ராவன்கூர், பறவூர் கிளையின் மனேஜர். புதிய தலைமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க காதாசிரியர்.

நூல்கள் – ஒளியின் ஊற்று, பாம்பும் ஏணியும் (கதைத் தொகுப்புக்கள்), அஸ்தமனம் (நாடகம்), நாங்கள் அடிமைகள், நனைந்த மண், அறியாத வழிகள் (நாவல்கள்).

முகவரி – மானேஜர், ஸ்டே்ட் பாங்க் ஆஃப் ட்ராவன்கூர், நார்த்பறவூர், கேரளா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *