இரத்த பாசம்
மாலை நேரம். அழகான இளம்பெண் தங்கம் , தன்னுடைய சின்னஞ்சிறு வீட்டின் கூடத்தில் தரையில் அமர்ந்து உதிரிப் பூக்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள். வாசல் கதவைத் திறந்து கொண்டு அவளுடைய கணவன் கட்டுடல் கொண்ட இளைஞன் மாணிக்கம் உள்ளே வந்தான். பூக்களைத் தொடுத்துக் கொண்டே தங்கம் கணவனிடம் கேட்டாள் –

‘என்ன பேக்ட்டரியிலிருந்து சீக்கிரம் வந்துட்டே… ட்யூட்டி முடிஞ்சிடுச்சா?‘
மாணிக்கம் பதில் சொன்னான்
‘ட்யூட்டி முடிஞ்சிடுச்சு ஆனா , மறுபடியும் போகணும் … இன்னிக்கு எங்க தொழிற்சாலையோட ஆண்டு விழா .. ஸ்கூல்ல பசங்க கிட்ட சொல்லுவாங்க இல்ல பங்க்சனுக்கு கலர் ட்ரெஸ் போட்டுகிட்டு வரலாம்னு அது மாதிரி சொல்லி இருக்காங்க … அதான் வேற ட்ரெஸ் மாத்திக்கலாம்னு வந்தேன் … ‘
‘அங்க ரூம்ல அயர்ன் பண்ணி வெச்சு இருக்கேன் ஒரு செட் கலர் ட்ரெஸ் அதைப் போட்டுக்க..‘
‘விழாவுக்கு சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?‘
நின்று கொண்டே மாணிக்கம் பேசினான் .
‘எனக்கு என்ன தெரியும்?‘
கைவேலையில் ஈடுபட்ட படி தங்கம் பேசினாள் .
‘இந்த வட்டாரத்தின் அரசியல் புள்ளி இமயவரம்பன்… ‘
‘மாமாவா … ‘
‘ஆமா உனக்கு மாமனார்… என்னை பிறக்க வெச்ச எங்க அப்பா.. ‘
வாசல் பக்கத்திலிருந்து ஓடி வந்த சிறுவன் பாபு, தங்கத்தின் முதுகில் சாய்ந்து கொண்டான்.
‘வாடா’ என்று பாபுவை அழைத்தான் மாணிக்கம் . ‘என்கிட்ட வராத படி பிள்ளைய வெச்சிருக்கே…‘ என்றான்.
‘ஆமா மூஞ்சிய சிடுசிடுன்னு வெச்சுகிட்டு இருந்தா பிள்ளை எப்படி ஒட்டும்? அதை விடு. நாம நாமளா கல்யாணம் பண்ணிகிட்டு ஒங்க வீட்டுக்கு போய் நின்னப்ப சண்டை போட்டு வெளியே அனுப்பினாங்க அப்ப நான் என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா… ‘
‘என் வயித்துல பொறக்கற ஒங்க பேரப் பிள்ளைய உச்சி மோந்து கொஞ்சி சந்தோஷப் படுவிங்க பாருங்க.. ன்னு நீ சொன்னே அதெல்லாம் நடக்காது ஒன் பிள்ளைய நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்னு அப்பா சொன்னாரு பாபுவுக்கு ஏழு வயசு ஆயிடுச்சு… அப்பாவும் அம்மாவும் அசைஞ்சு கொடுக்கவே இல்லையே… ஒரே ஊர்ல இருந்துகிட்டு வீம்பா தானா இருக்காங்க..‘
‘நாம குழந்தையை எடுத்துகிட்டுப் போய் காட்டி இருக்கணும் நாமளும் தான் வீம்பா இருந்துட்டோம். சரி.. நானும் வரேன் பங்க்சனுக்கு’ என்று எழுந்தாள் தங்கம். கட்டிய பூமாலையை சாமி படத்திற்கு சாற்றினாள். ‘ நீ போய் ட்ரெஸ் மாத்திகிட்டு வா’
அறைக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு வந்த மாணிக்கம் கேட்டான்.
‘நீ எதுக்கு வரே… ‘
‘எல்லாம் காரணமாத்தான்.. பேச நேரம் இல்ல நிகழ்ச்சி தொடங்கறதுக்கு முன்னாடி போகணும் வா’ என்ற தங்கம், நின்று கொண்டிருந்த மகனிடம் ‘அம்மா சொல்ற படி நீ செய்யணும் சரியா.. ‘ என்றாள். அவளுடைய பிள்ளை தலையை ஆட்டியது.
‘நீ ட்ரெஸ் மாத்தலையா’ என்று கேட்டான். ‘இந்த புடவையில நான் அழகா இருக்கேன்னு காலைல சொல்லிட்டு போன இல்ல நேரம் இல்ல பூட்டை தேடி எடு… ‘ என்ற தங்கம், கண்ணாடியைப் பார்த்து கூந்தலை நேர்த்தியாக்கிக் கொண்டு நெற்றியில் வேறு பொட்டு வைத்துக் கொண்டாள். வீட்டைப் பூட்டிக் கொண்டு , மூவரும் தெருவில் நடந்து சென்ற போது எதிரில் வந்த ஆட்டோவை தங்கம் அழைத்தாள்.
தொழிற்சாலை நுழைவாயிலில் ஆட்டோவில் இருந்து இறங்கிய மூவரும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்குச் சென்றனர். பார்வையாளர்கள் பகுதியில் ஒன்றிரண்டு நபர்களே அமர்ந்து இருந்தனர். நிகழச்சிக்கு சீக்கிரமாக வந்து விட்ட மாணிக்கத்தின் தந்தை இமயவரம்பன், மேடையில் நாற்காலி ஒன்றில் அமர்ந்து மொபைல் போனில் மூழ்கி இருந்தார்.
பார்வையாளர்கள் பகுதியில் மாணிக்கமும் தங்கமும் அமர்ந்தனர். மடியில் அமர்ந்து கொண்ட பாபுவை இறக்கி விட்டாள் தங்கம். பாபு மெதுவாக நடந்து போய் மேடையில் ஏறி, இமயவரம்பனின் பக்கத்தில் நின்று கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்கள் பகுதி நிரம்பத் தொடங்கியது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் முந்திரிக்கொட்டை ஆள் ஒருவன் ‘இங்கு ஒரு சிறுவன் வந்திருக்கிறான். பெற்றோர் அழைத்துச் செல்லவும்’ என்று ஒலி வாங்கியில் கூறினான். அப்போதுதான் இமயவரம்பன், மொபைல் போனிலிருந்து விடுபட்டு சிறுவனைப் பார்த்தார். சிறுவன் நகராமல் அவருடைய இருக்கை அருகில் நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்களில் மீண்டும் அந்த முந்திரிக்கொட்டை இளைஞன் ஒலி வாங்கியின் முன் நின்று அறிவிக்க முற்பட்ட போது, தங்கம் மேடையை நோக்கி பைய நடந்து வந்தாள். இமயவரம்பன் தங்கத்தைப் பார்த்தார். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த மாணிக்கத்தைப் பார்த்தார். இமயவரம்பன் உரைமேசை அருகே வந்து முந்திரிக்கொட்டை இளைஞனின் முதுகைத் தட்டினார். ‘என் பேரன்தாம்பா’ என்ற அவரது குரல் அரங்கம் முழுவதும் ஒலித்தது. அவர் பாபுவை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு உச்சி மோந்து தழுவிக் கொண்டார். தங்கத்தின் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை.
குறிப்பு – சவால் என்பதை அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.