இரட்சிப்பு




(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனுக்கு அகோரப் பசி.
தாகம் வேறு.
உடல் களைப்பு, அசதி.
சிவதாசனுடைய சைக்கிள் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
விடலைச் சூரியனின் வெஞ்சினக் கதிர்கள் அவன் உடலைக் காந்திக் கொண்டிருக்கின்றன.
சுந்தர், செல்வன், சிவா மூவரும் அதிகாலையிலேயே யாழ். சென்றிருந்தனர்.
அவர்களுக்கு வெறு வயிறு.
இடம்பெயர்ந்தவர்களின் நிவாரணப் பொருட்களை எடுப்பதற்கு அவர்கள் சென்றிருந்தனர்.
அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்றது.
தொண்டர் நிறுவனங்களும் அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்றன.
இடம்பெயர்ந்தவர்களின் முகாமிற்கருகாமையில் கூட்டு றவுச் சங்கக் கடை.
நாட்டரிசிக்குப் பதிலாக ‘அம்மாப் பச்சை அரிசி’, மா, சீனி கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்குக் கிடைத்து வருகின்றன. இந்த நிவாரணம் மாதம் ஒரு தடவை.
யாழ். நகரில் மூன்று தொண்டர் நிறுவனங்கள். இவை இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குகின்றன. பால் மா,பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், சவர்க்காரம், கருவாடு, மருந்து வகைகள் கொடுக்கின்றன.
மாதம் ஒரு தடவை இப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மூன்று தொண்டர் நிறுவனங்களும் யாழ். நகரின் வெவ்வேறு இடங்களில். சிவாவாக்கள் நிவாரணப் பொருட்களை எடுப்பதற்கு இத்தொண்டர் நிறுவனங்களுக்குச் செல்கின்றனர்.
மதியம் திரும்பிவிட்டது.
ஒரு மணிக்கு மேல்.
தீக்கங்குகளாய் வெய்யில் காய்கின்றது.
பாழுஞ் சூரியன் தானும் எரிந்து மற்றவர்களையும் எரித்துக் கொண்டிருக்கின்றான்.
சிவாவாக்களின் வயிற்றில் பசி காட்டுத்தீயாய் காந்துகின்றது.
உக்கிரமமாய்க் கொளுத்துகின்ற வெய்யிலில் அவர்கள் களைத்து விழுந்து வந்திருக்கின்றனர்.
நிவாரணப்பொருட்கள் முகாம் களஞ்சியப் பொறுப்பாள ரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
சிவா வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றான். பசியில் அவனுக்கு மயக்கம் வருவது போலிருக்கின்றது.
உடலெல்லாம் வியர்த்துக் கொட்டுகின்றது.
வீட்டை அடைகின்றான். சைக்கிளை மாமரத்தடியில் நிறுத்துகின்றான்.
சேட்டை கழற்றியபடியே வியர்வை ஆறுவதற்கு முற்ற த்தில் நிற்கின்ற வேப்பமர நிழலில் உட்கார்ந்திருக்கின்றான்.
வேப்பங்காற்று அவன் உடலில் தவழ்ந்து இதமூட்டுகின்றது.
“ஏன் இன்னும் நேரம் வரேல்லையே?”
மனைவியின் அருட்டல்.
“வேர்வை ஆறேல்லை. கொஞ்சநேரம் இருந்திட்டுக் குளிப்பம்.”
சிவா அமைதிப்படுத்துகின்றான்.
“காலமையும் வெறும் வயித்தோடை போனனீங்கள்.”
மனைவி விடவில்லை.
“எழும்புங்கோ, கெதியாய் குளிச்சிட்டு வாருங்கோ.”
“இதோ வந்திட்டன்.”
குளிர்ந்த நீரை உடலில் ஊற்றுகின்றான்.
உடல் சில்லிடுகின்றது.
நான்காவது வாளி தண்ணீரை ஊற்றிக் கொண்டிருக்கின்றான்.
“மாஸரர்!”
‘யார்? செல்வனின் குரலோ?’
‘செல்வன் இப்ப முகாமிலிருப்பானே’
‘பிரமையோ?’
“மாஸ்ரர்.”
மீண்டும் அதே குரல்.
‘ஆமாம். செல்வம்தான்.’
‘இவனுக்கு என்ன நடந்தது?’
‘ஏன் இப்ப வந்தான்? அப்பிடி என்ன அவ்சரம்?
“இதோ வாறன் செல்வன்.”
தங்கள் ஊரில் பொது சேவையில் ஈடுபடுகின்றவரை ‘மாஸ்ரர்’ என்று கௌரவமாக அன்புடன் அழைப்பார்கள் செல்வனாக்கள்.
அவசர அவசரமாக உடையை மாற்றுகின்றான் சிவா. “என்ன செல்வன்? ஏன் வந்தனி?”
பதற்றத்துடன் கேட்கின்றான்.
“மாஸ்ரர் அந்தப் பாதிரியார் வந்திருக்கிறார்.”
“எந்தப் பாதிரியார்?”
“போன மாதம், நாங்கள் இல்லாத வேளை வந்து முகாம் பிள்ளையளுக்கு பால்மாவும் பிஸ்கட்டும் குடுத்துப் போனாரே. அவர்தான் வந்திருக்கிறார்.”
சென்ற மாதம் நிவாரணப் பொருட்கள் எடுக்க சிவா வாக்கள் யாழ் சென்றிருந்தனர். அவர்கள் இல்லாத வேளை தான் பாதிரியார் முகாமுக்க வந்திருந்தார்.
பாதிரியார் முகாமிலுள்ள பிள்ளைகளுக்கு பால்மாவும், பிஸ்கட்டும் வழங்கிச் சென்றார். அத்துடன், முகாமிலுள்ளவர் கள் பற்றிய சில விபரங்களையும் எடுத்துச் சென்றார்.
“வாற மாதமும் நான் இங்கு வருவன். அப்போ உங்க ளுக்கு பால்மா, பிஸ்கட், ‘ஸ்கூல் யூனிபோர்ம்’ துணி, கொப்பி, பென்சில், போனக்கள் எல்லாம் கொண்டு வருவன்.”
பாதிரியார் கூறிச் சென்றிருந்தார்.
“இனிப் பாதிரியார் வந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கோ.”
சிவா முகாமிலுள்ளவர்களுக்குச் சொல்லி வைத்தான். “பாதிரியார் லொறியிலை ஏராளமான சாமான்கள் கொண்டு வந்திருக்கிறார்.”
“அப்பிடியா!’
சிவாவுக்கு வியப்பு.
“மாஸ்ரர். என்ன காரணமெண்டு தெரியேல்லை. இதுக்கை ஏதோ விஷயமிருக்கு.”
செல்வன் சந்தேகம் கிளப்புகின்றான்.
“அப்படி நாங்கள் நினைக்கக் கூடாது செல்வன். ஒரு விசயத்தை நல்லாய் ஆராய்ந்து பார்க்காமல் நாங்கள் ஒரு முடிவுக்கும் வரக் கூடாது.”
சிந்தனை வயப்பட்டவனாய் சிவா கூறுகின்றான். அவர்கள் முகாமை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
பசியில் அவர்களுடைய சிறு குடல்கள் பெரும் குடல் களை முறுக்கிக் கொண்டிருக்கின்றன.
இது அவர்களுக்குப் பழகிப் போன விஷயமாச்சே.
இந்த முகாமில் முப்பத்து ஏழு குடும்பங்கள். இரண்டு வருடங்களுக்கு முன் இவர்கள் இங்கு வந்தனர்.
இக் குடும்பங்கள் அனைத்தும் வவுனியாவை அண்டியுள்ள ஒரு எல்லைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கிராமத்தில் நீண்ட காலமாகத் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாய் அமைதியாய், அந்நியோன் யமாய் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
தாங்களுண்டு தங்கள் தொழிலுண்டு என்றுதான் வாழ்ந்தனர்.
இவர்களின் பிரதான தொழில் விவசாயம்.
அநேகமாக எல்லாக் குடும்பங்களுக்கும் சொந்த நிலமுண்டு.
மேட்டு நிலத்தில் இவர்களின் குடியிருப்புகள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆடு, மாடுகளுண்டு.
இவர்கள் சிறு சிறு காய்கறி தோட்டங்களையும வைத்திருந்தனர்.
வளவுகளுக்குள் மா, பலா, தென்னை, எலுமிச்சை போன்ற வான் பயிர்கள்.
வருடம் முழுவதும் சாப்பாட்டுக்குப் போதுமான நெல் இவர்களது வயல்களிலிருந்து பெற்றுவந்தனர்.
பால் தயிர், பழவகைகள், காய்கறிகளை இவர்கள் என்றுமே பணம் கொடுத்து வாங்கியதில்லை.
கடல் மீன், தகரத்து மீன் போன்றவற்றை இவர்கள் பாவித்தறியார்கள்.
குளத்து மீன், மான், முயல், காடை, கௌதாரி, இறைச்சி வகைகளையும், மரை வத்தல், பண்றிக்கருக்கல் ஆகிய வற்றையும் வழமையாக உண்டு வந்தார்கள்.
சிறுவர்களுக்குப் பாலைப்பழம் என்றால் கொள்ளை ஆசை.
இம்மக்கள் என்றுமே பிறரிடம் கையேந்தியதில்லை.
என்று இந்த இன அழிப்பு யுத்தம் இவர்களின் பிரதேச த்தை எட்டிப்பார்க்கத் தொடங்கியதோ அன்றிலிருந்தே இம் மக்களின் அமைதி தொலைந்து போயிற்று.
இவர்களுடைய வாழ்க்கை பாக்குவெட்டிக்கு இடையில் அகப்பட்ட கொட்டைப் பாக்கு.
திடீர் திடீரென கட்டாய வேலைக்கு இரவில் ஆண்கள் கூப்பிடப்படுகின்றனர்.
ஆண்களில்லாத வீடுகளுக்குள் ஓநாய்களின் ஆக்கிரமிப்பு! பெண்கள் ஒன்று திரண்டு அவலக் குரல் எழுப்பல். ஓநாய்கள் தலைதெறிக்க ஓட்டம்.
பகலில் புதுமுகங்கள் நடமாட்டம்.
இரவானதும், வெடிச்சத்தம், டிறக் வண்டிகளின் உறுமல்.
நடுநிசியில் இளசுகள் காணாமல் போகும்!
விடிந்ததும் சில வீதிகளில் கிடக்கும்!
சில குளத்தில் மிதக்கும்!
எஞ்சிய சில நிரந்தரமாகவே காணாமல் போகும்!
ஒரு நாள் கிராமத்தின் தொங்கலில் கண்ணிவெடியில் ஒரு டிரக் வண்டி.
பதினான்கு காக்கிகள் பலி!
கண்மூடித்தனமான குண்டுவீச்சு.
தொடர்ச்சியாய் வெறித்தனமான ஷெல்லடி. கிராம மக்களில் சிலர் பலி.
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் இடப்பெயர்வு.
தமிழ் மக்கள் வடக்கு நோக்கிய நகர்வு.
சிங்கள மக்கள் தெற்கு நோக்கிச் சென்றனர்.
கிராமம் மூளி.
காலத்தின் நகர்வு.
“இந்த தடவை ஏராளமான சாமான்கள் கொண்டு வந்திருக்கிறார் பாதிரியார்.”
செல்வன் மீண்டும் கூறுகின்றான்.
அவர்கள் முகாமை நெருங்குகின்றனர்.
“என்ன சாமானகள்?”
“கன காட்போர்ட் பெட்டியளுக்கை கிடைக்கு. என்ன சாமான்களெண்டு தெரியேல்லை.”
முகாமைச் சென்றடைகின்றனர் செல்வனாக்கள்.
வான் முகட்டைத் தாவிப் பிடிப்பதற்கு, ஆரோகணித்து வளர்ந்தோங்கி, அடர்த்தியாய்ப் படர்ந்து, விசாலித்து நிற்கின்றது முகாம் முன்றிலிலுள்ள அரசமரம்.
காற்றின் முனகல்.
அரசிலைகளின் முணுமுணுப்பு.
அரசமர நிழலின் குடைவிரிப்பில் கதிரையில் பாதிரியார். அரச மாளிகையிலுள்ள சகல சுகபோகங்களையும் துறந்து, அரச மரத்தடிக்கு வந்தார் புத்தர் அன்று.
இன்று, அரசமரத்தடியிலுள்ள சிலர் அரச போகங்களை அனுபவிப்பதற்கு, அரச மாளிகைக்குச் செல்லத் தவியாய்த் தவிக்கின்றனர்.
விசனகரமாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கின்றார் பாதிரியார்.
அவரது கழுத்திலிருந்து கெண்டைக்கால் வரை தூய பால் போன்ற வெண்நிற அங்கி. இடுப்பைச் சுற்றி நான்கு அங்குலமளவிலான கறுப்புத் துணிப் பட்டி, இடதுபுறமாக முழங்கால் வரை தொங்கிக் கொண்டிருக்கின்றது. முகம் பார்க்கக் கூடிய பளபளக்கும் கறுப்புச் சப்பாத்து.
வாட்டசாட்டமான கம்பீரமான உடல்வாகு. செல்வச் செழிப்பு ஜொலிக்கும் முகம்.
கருணை ஒளி பிரவகிக்கும் விழிகள்.
“வணக்கம் சுவாமி.”
பௌவியமாகக் கூறுகின்றான் சிவா.
“வணக்கம்.” காக்கவைத்த அலட்சியத் தொனி. ‘தன்னை இவ்வளவு நேரமாய்க் காத்திருக்க வைத்து விட்டார்கள் என்ற ஆதங்கமோ?’
“முன்பின் பழக்கமோ அறிமுகமோ இல்லாத இவர் களுக்கு, நீங்களாகவே உதவி செய்யமுன் வந்திருக்கின்றீர்கள். இது தங்களது பெரும் தன்மையையும் தயாள குணத்தையும் காட்டுகின்றது. தங்களுடைய இந்தப் பரித் தியாக சேவையை எம்மால் பாராட்டமல் இருக்க முடியாது.”
சிவா உணர்ச்சிமயமான ஆதூரத்துடன் கூறுகின்றான். மனப்பூரித்தலுடன், நிதானமாக ஒரு பார்வை.
“முகாமிலுள்ள எல்லார் சார்பாக எங்கடை மனப்பூர்வ மான நன்றியைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”
செல்வன் அன்பு நிறைந்த நன்றியை வெளிப்படுத்துகின்றான்.
பாதிரியாரின் முகத்தில் மலர்ச்சி.
“இது என் செயலல்ல. கர்த்தரின் செயல்.”
பக்தி பரவசமாகக் கூறுகின்றார் பாதிரியார்.
அவர் கண்கள் பனிக்கின்றன.
“கர்த்தரின் கருணையின் பேரில் இங்குள்ள மக்களுக்கு சிறு அன்பளிப்புச் செய்யலாமா?”
வினயமாய் வினவுகின்றார்.
“ஓ தாராளமாய் நீங்கள் வழங்கலாம். எங்களுக்கு எதுவித ஆட்சேபனையுமில்லை.”
ஒப்புதலளிக்கின்றான் சிவா.
“பாவப்பட்ட இம்மக்களை இரட்சிப்பது, அதாவது ஈடேற்றுவது இவர்களது வாழ்க்கையை மேம்படுத்துவது, அதுதான் எங்கடை இலட்சியம். முகாமிலை இருக்கிற எல்லாரையும் முன் மண்டபத் துக்கு ஒருக்கா வரச் சொல்லிக் கூப்பிடுங்கோ.”
“ஏன் சுவாமி?”
“அவர்களுக்குரிய அன்பளிப்புகளை அவர்களுக்கு நேரடியாக தனித்தனிய ஒப்படைக்க வேணும்.
உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெண்டால் அன்ப ளிப்பு செய்ய முன்னம், ஒரு சிறு பிரார்த்தனை நடத்தலாமா?”
“அன்பளிப்புப் பொருட்களை நீங்கள் முகாம் களஞ்சியப் பொறுப்பாளரிடம் ஒப்படையுங்கள். அதுதான் இங்குள்ள நடைமுறை.”
சிவா அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றான். “அப்போ பிரார்த்தனை?”
“நீங்கள் பிரார்த்தனையைத் தாராளமாக நடத்தலாம். ஆனால்…”
“என்ன ஆனால்?’
“இந்த முகாம் அரசாங்க பிரதேச செயலரின் பொறுப்பிலிருக்கு.”
“அப்போ நீங்கள்?”
“நாங்கள் உதவியாளர்கள் மாத்திரம்தான்.”
“அப்படியா?”
“நீங்கள் பிரார்த்தனையை நடத்தலாம். அதுக்கு பிரதேசச செயலரின் ஒரு அனுமதிக் கடிதம் தேவை. அதை எடுத்து வந்து தந்திட்டு நீங்கள் பிரார்த்தனையை நடத்துங்கோ.”
“சரி, பார்க்கிறன்.”
கூறியபடி பாதிரியார் விசுக்கென்று லொறியில் ஏறுகின்றார்.
உறுமிக்கொண்டு லொறி கிளம்புகின்றது. செம்புழுதி காற்றில் பறக்கின்றது.
– 2004
– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.