இசை – ஒரு பக்க கதை





குளித்து விட்டு வரும் போது, அந்த ராப் சங்கீதம் வேகமாக காதுகளில் அறைந்தது.
சாருமதி வேகமாக மகனிடம் போனாள். ‘என்னடா ராகுல் இது,
காட்டுக் கத்தலாக இருக்கு? வால்யூமை குறைச்சு வைடா. காதே வெடிச்சுடும் போலிருக்கு’ என்று பட படத்தாள்.
போம்மா… ஆப்ரிகன் டிரைப் ராப் தெரியுமா? ஜேம்ஸ் ஈஸ்டுவுட்…ஜஸ்ட் ராக்கிங்…’ என்று பெயருக்கு ஒலியைக் குறைத்து விட்டு ராகுல் ஆடினான்.
ம்… என்று பெருமூச்சுடன் அறைக்கதவை இழுத்து மூடிவிட்டு தன் அறைக்கு வந்தாள்.
டி வி டி-யில் இசை குறுந்தகட்டைப் பொருத்தி, கண்ணாடியில் முகம் பார்த்தபோது, இனிய பாடல் ஒலித்தது.
‘மாலைப பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி….
பி.சுசீலா என்ன குரல்..! எவ்வளவு தேன்! எத்தனை தெளிவு! எத்தனை இன்பம்!
சாரு …கொஞ்சம் இங்கே வாயேன், என்று மாமியாரின் குரல் கேட்டது.
என்னம்மா என்று போனாள்.
என்ன பாட்டு போட்டிருக்கே சாரு? ‘காற்றினிலே வரும் கீதம்’ வைக்கக்கூடாதா?, ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ போடக்கூடாதா? என்றாள் முதியவள் முணு முணுப்பாக…
அவள் புன்னகைத்துக் கொண்டாள்…!
– உஷாபாரதி(12-4-10)