அம்மாவின் காதல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 20, 2025
பார்வையிட்டோர்: 12,989 
 
 

அப்பாவைக் குறைபாட அம்மாவுக்கு விஷயங்கள் எப்படியாவது கிடைத்து விடுகின்றன. அப்படி இல்லாவிட்டாலும் எதிலிருந்தாவது துவங்கி அப்பாவைக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவாள். சுவரில் மூட்டைப் பூச்சி ஊர்வதற்கும், வாயிற்படியில் போட்டிருந்த செருப்பை நாய் தூக்கிப் போவதற்கும், கண்ணாடி ஸ்டான்டில் சீப்பைக் காணாததற்கும் அப்பாவே காரணமாவார் அவளுக்கு.

இன்றைக்கு அவளது குறைபாடலுக்குத் தகுந்தவாறு ஒரு விஷயம் கிடைத்துவிட்டது. கணுவாயிலிருந்து பெரியம்மா மகன் அழைப்பிதழ் அனுப்பி இருந்தான். புது வீடு கிரகப் பிரவேசம்.

ராஜேஸ் அண்ணன் வீடு கட்ட ஆரம்பித்தது முதலே அம்மா, அப்பாவைச் சொல்வதுதான். அவ்வப்போது தவணை முறையில் அது பற்றிச் சொன்னவற்றை இன்று தொகுத்து வழங்கினாள்.

“அவன் பாத்தீங்களா, குடும்பத்துக்கு வேணுங்கறத ஒவ்வொண்ணயும் எப்படி செய்யறான். அவங்கப்பா செத்ததிலர்ந்து அந்தக் குடும்பத்துல எல்லாக் காரியத்தயும் அவன்தான செஞ்சான். ராஜேஸ்க்கு பதினேழு வயசு, அவங்கப்பா சாகும்போது. உங்கள மாதிரித்தான் அவரும், எதுவும் சேத்து வெக்கல. ராஜேஸ்தான் வேலைக்குப் போயி, குடும்பத்தக் காப்பாத்தி, மூணு பொண்ணுகளுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சது. முப்பத்தோரு வயசுல அவனும் கல்யாணத்தப் பண்ணினான். அடுத்தாப்ல தம்பிக்கும் முடிஞ்சுது. இப்பப் பாருங்க, நாலு வருசத்துல புது வீடும் கட்டியாச்சு. நாம…? இன்னும் அதே வீடுதான், பதினெட்டு வருசமா…!”

“அதுக்கு என்னங்கற இப்போ? இந்த வீடு பத்தாதா நமக்கு?’

“ஓ… போதுமே…! தாராளமாப் போதும். வீடு இருக்கற லட்சணம் இப்ப என்ன தெரியும்? மழை பேயட்டும். அப்பல்ல இருக்குது. ஒவ்வொரு வீட்டுல மழை சமயத்துல ஒழுகும். நம்ம வீட்டுல ஒழுகாது; மழையே பேயும். அத சரி பண்ணச் சொல்லிட்டே இருக்கறன் நானும். சொல்றவ சொல்லீட்டே இருக்க வேண்டியதுதான். மேவறத்து செவுரும் இடிஞ்சு கெடக்குது. மேசனக் கூட்டிட்டு வந்து சரி பண்ணுங்கன்னா அதயும் கேக்கறதில்ல. கேக்கறீங்களே, இந்த வீடு பத்தாதான்னு? என்னமோ நீங்களே சம்பாதிச்சுக் கட்டுனாப்புல! உங்கப்பா கட்டி வெச்சதுனால ஆச்சு. இல்லீன்னா நம்ம கதி? நீங்க அவன மாதிரி சுயமா சம்பாதிச்சுக் கட்டியிருக்கப் போறீங்களா? மூணு வருசம், நாலு வருசத்துக்கு ஒருக்கா வாடகைக்கு வீடு மாறி, சட்டி பானையத் தூக்கிட்டு அலஞ்சுட்டே இருந்திருக்க வேண்டியதுதான்.”

பேச ஆரம்பித்துவிட்டால் அம்மா அவ்வளவு சுலபத்தில் நிறுத்த மாட்டாள். அவள் பேச்சை நீட்டிக்கிறாளா, பேச்சு அவளைத் தன் போக்கில் இழுத்துச் சென்றுவிடுகிறதா என்று சந்தேகம் வரும். மேலும், அவள் இத்தனையையும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க. மாட்டாள். வேறு

வேலைகளைச் செய்துகொண்டே பேசுவாள். பேச்சும் அந்த வேலையில் சம்பந்தப்பட்டது போல.

இன்று சாயந்திரம் ஐந்தரை மணிக்குக் காஃபி கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தது, விட்டுவிட்டுத் தொடர்ந்தது. ஏரு. மணிக்கும் சமையலறையிலிருந்து குழம்பு வேகிற மணத்துடன் வந்துகொண்டே இருந்தது.

மணியாசு அண்ணன் டேப் ரெக்கார்டரில் ஏதோ ரிப்பேரைச் சரி செய்துகொண்டிருந்தான். சௌதாமினி இந்த சத்தத்திலும் எஸ்ஸே படித்துக் கொண்டிருந்தாள். புத்தகத்தைப் பார்த்துப் படிப்பதும். பிறகு விரல் வைத்துப் புத்தகத்தை மூடி அதைச் சொல்லிப் பார்ப்பதுமாக. மனனம் செய்ததைச் சொல்லும்போது இடையிடையே ‘இல்ல’ என்று தலையை ஆட்டிவிட்டு, யோசித்து திருத்திச் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அவளது இன்னொரு மேனரிஸத்தையும் அவ்வப்போது செய்யாமல் இல்லை. வலது ஆட்காட்டி விரலை வளைத்து, கொத்துவது போல தலையில் தட்டிக் கொள்வது. யோசிக்கிறாளாம். படித்த வரிகள் மறந்துபோகும்போது அப்படி.

இந்த ஒன்றரை மணி நேரத்தில் அம்மாவின் பேச்சு எங்கெங்கோ மாறிவிட்டது. குழம்புக்கு அரியும்போது கத்திரிக்காய் வாடிவிட்டது பற்றியும், ஸ்டவ்வில் பானர் சரியாக எரியாததற்கும். சௌதாமினி தனக்கு உதவி செய்யவில்லை என்பதற்கும் பேசினாள். இந்த விஷயங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாவே காரணமாக அம்மாவால் சொல்லப்பட்டது.

காய்கறி இங்கே தள்ளுவண்டியில் வரும்போது அவள்தான் வாங்குவாள்.

(“டௌன்லருந்து வரும்போது அப்படியே கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வரலாமில்ல. அங்கேன்னா நல்லதாக் கெடைக்கும். செய்யணுமே நீங்க!”)

பர்னரைக் சுழற்றி சுத்தப்படுத்துவதை அவளே செய்ய முடியும்

(“இத்த வீட்டுவ ஒவ்வொண்ணயும் நானே செய்ய வேண்டியிருக்குது. இந்த பர்னர க்ளீன் பண்ணித் தாங்கன்னு போன வாரமே சொன்னேன். ராத்திரி வந்து செஞ்சு தர்றேன்னதுதான். ராத்திரி வருது, வருது, இன்னியும் இங்க வந்து சேர மாட்டேங்குது.”)

சௌதாமினியை அவள் அழைத்து செய்யச் சொன்னால் செய்து கொடுப்பாள்.

(பொட்டப் புள்ளைக்கு இவ்வளவு செல்லம் குடுத்து வெச்சிருக்கறீங்க. தானா செய்ய வேண்டாமா இதையெல்லாம்? எப்படி செய்யும்ங்கறேன், அப்பாவோட பயம் இல்லீன்னா?”)

சௌதாமினியோ அப்பாவோ அம்மாவின் தவறைச் கட்டிக் காட்டவில்லை. ஆனால் அம்மா விடுவாளா? அதற்கும் பிடித்துக்கொண்டாள்.

“நாம் பாட்டுக்குக் கத்தீட்டே இருக்கறன்; ரெண்டு பேரும் ஏன்னு கேக்கறீங்களா, ஒரு வார்த்தையாவது?”

அப்பா மட்டும் தனது ‘பிரமிட் உலக அதிசயம்’ புத்தகத்திலிருந்து நிமிர்ந்தார். புத்தகம் விரிந்தபடியே மடியில் இருந்தது. கண்ணாடியைக் கழற்றி வேட்டி நுனியில் துடைத்தபடியே வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தார். சௌதாமினியின் யோசனை, விரலால் தலை தட்டுவது; அப்பாவின் யோசனை, வாசலையோ கவரையோ வெறிப்பது. அப்பா இப்போது அம்மா சொன்ன ‘ஏன் என்கிற ஒரு வார்த்தை பற்றி யோசிக்கிறாரா, பிரமிடுகளுக்குள் மூழ்கிவிட்டாரா தெரியவில்லை.

வீட்டிலிருக்கிற நேரங்களில் அப்பா புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். ஜோதிடம். சித்தமருத்துவம். ஆன்மிகம் என்று புத்தகங்கள் இரண்டு அலமாரிகளில் நிறைந்திருக்கும். இது தவிர இவை பற்றிய பத்திரிகைகளும் வாங்குவார். ஞான சிந்தாமணிக்கும் ஓம் சக்திக்கும் அப்பா ஆயுள் சந்தாதாரர்.

“எந்த நேரமும் இப்படிப் படிப்புதான், படிப்புதான். என்னத்தப் படிச்சுக் கிழிக்கறீங்களோ தெரியல. காசுக்குப் புடிச்ச கேடா வாங்கி அடுக்கியிருக்குது. மொதல்ல எல்லாத்தயும் தூக்கிப் பழைய புஸ்தகம் வாங்கறவங்கிட்டப் போடணும். ரெண்டு பாத்தரமாவது வாங்கலாம்.” அம்மா சொல்வாள்.

அப்பா இதை மறுத்துப் பேசுவது கிடையாது எப்படி இவ்வளவு பொறுமையாகவும் சகிப்போடும் இருக்கிறார்? அம்மாவின் இந்தக் குறை சொல்லல்களில் உள்ள அவளுக்கான நியாயமா? தனது இயலாமையில் வருகிற குற்ற உணர்வா? எது அப்பாவைக் கட்டிப் போடுகிறது?

“தெரிஞ்சு தெரிஞ்சு இப்படி ஒரு ஆளுக்குக் குடுத்தாங்களே எங்க வீட்ல; அவுங்களச் சொல்லணும்.” மிகவும் அரிதாக அம்மா சொல்வது இது.

“அவுங்கதான் கட்டிக்கன்னு சொன்னாங்களா?” அப்பா கேட்பார்.

அம்மா ஒரு கணம் தடுமாறி நிற்பாள். ஒரு புன்னகை அவளது உதட்டில் வெளிப்படத் தயாராவதையும் அதை மறைக்க அவன் பிரயாசைப்படுவதும் தெரியும் “க்க்-கும்” என்று தாடையைத் தோளில் இடித்து உதட்டைச் சுளித்துவிட்டுப் போவாள். பதில் வந்திருக்காது.

அப்பாவின் இந்தக் கேள்வி சிறு வயதில் புரியவில்லை. இதில் ஏதோ இருக்கிறது என்று மட்டும் புரிந்தது. சமீப வருடங்களில் எப்போதோ மணியரக அண்ணனோடு போய் கேட்டதற்கு அம்மா சொன்னாள்.

“மொதல்லயே உங்கப்பா சொந்தம்தான். மாமா பையன் எனக்கு.”

“சரீ,…”

“எதுக்கு இப்போ சரீன்னு நீட்டற? கதையா கேக்கறீங்க இங்க? போங்கடா!” விரட்டிவிட்டாள்.

அப்பாவிடம் கேட்பதற்குக் தயக்கம். அம்மாவிடம் போல அவரிடம் நெருக்கமாக முடியாதது காரணம். மேலும் அவர் சகஜமாகப் பேசுவதே அரிது. அவரிடம் போய் எப்படிக் கேட்பது?

பின்னாளில் அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடிய பிறகு விபரம் கிடைத்தது. சிங்காநல்லூரில் தாத்தா வீட்டுக்கு இங்கிருந்து அப்பா சமயங்களில் போய் வருவது உண்டாம். அம்மா அப்போதெல்லாம் அப்பாவுடன் சரியாகப் பேசக் கூட மாட்டாளாம்.

“கப்ஸா” என்றாள், சௌதாமினி.

“ஏய், சும்மாயிருடீ!” அம்மா அவளை ஒரு தட்டுத் தட்டினான்.

இங்கிருந்து அப்பர் போவாரே ஒழிய அம்மா இங்கே வருவதில்லை. சின்ன வயதில் வந்ததுதாளாம் பிறகு அம்மாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார்களாம்.

“அப்புறம்…?”

“அப்புறம் என்ன? உங்கப்பாதான் என்னைக் கட்டிட்டாரு.”

“அதுதான் இப்ப எங்களுக்கே தெரியுதேம்மா! அப்பா சொன்ன விஷயத்துக்கே நீ வரல.”

“ச்சீ,… போங்கடா பேசாம. அம்மாகிட்டப் பேசற பேச்சா ‘இது?” அம்மா எழுந்து போய்விட்டாள்.

அதன் பிறகு அவள் இந்த விஷயம் பற்றிப் பேச வாய் திறக்கவே இல்லை.

அப்பாவுக்கு நிறைய சம்பாதிப்பதற்குத் தெரியாது. நாலு பேரை மாதிரி நாமும் வசதியாக இருக்கணும் என்ற எண்ணம் கிடையாது. குடும்பத்தின் மேல் அக்கறை இல்லை. இதுவே அம்மாவின் கருத்து,

மற்றவர்களைப் பொறுத்தவரை அப்பா நல்லவர். பரம சாது. வஞ்சனை, ஏய்ப்பு, பொய், பித்தலாட்டம் கிடையாது. பீடி, சிகரெட், மது, வெற்றிலை, சீட்டாட்டம் எதுவும் இல்லை. சளித் தொல்லை மிகுந்தால் மட்டும் மூக்குப் பொடி போடுவார்.

அம்மாவுக்குத் தெரியாமலில்லை. ஆனால் அவன் ஏனோ அப்பாவைப் பற்றிக் குறை சொல்லிக்கொண்டேதான் இருந்தாள். அப்பாவும் இப்படியே. புத்தகத்தில் கண்ணும் மனமும் ஒன்றி லயித்துவிடுவார். அவ்வப்போது புத்தகத்திலிருந்து நிமிர்ந்து வாசலைப் பார்ப்பார் அல்லது ஒரு வார தாடியைச் சொறிந்துகொண்டே சுவரைப் பார்ப்பார். மீண்டும் புத்தகத்தில் ஐக்கியமாகிவிடுவார்.

இப்போதும் அப்படி வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தவர் ரொம்ப நேரத்துக்குப் பிறகே திரும்பினார். அவரது முகம் தெளிவாக இருந்தது. எதிர்பாராத விதமாகப் பேச ஆரம்பித்தார்.

“கணுவாய்க்குத்தால் நானும் உங்கம்மாவும் மொதல் தடவையாத் தனியாப் போனோம். நீலவேணி கல்யாணத்துக்குப் பத்திரிக்கை குடுக்கப் போளபோது.”

மூவரில் யாரிடம் என்றில்லாமல் பொதுவாகச் சொன்னார். நீலவேணி அத்தை, அப்பாவின் மூத்த சகோதரி. அப்பாவின் உடன்பிறப்புகளில் முதல் திருமணம் அவருடையதே.

“அத்தை கல்யாணத்துக்கு நீங்க ரெண்டு பேரும் எப்படி பத்திரிக்கை குடுக்கப் போனீங்க அங்க?”

“நான் இங்கிருந்து நேரா சிங்காநல்லூருக்குத்தான் போனேன் அங்க பத்திரிக்கை குடுத்ததுக்கப்புறம் கணுவாய் போகணும். ராஜேஸ் வீடு இருந்த எடம் அப்ப அவ்வளவா டெவலப்பாகாத ஏரியா. எனக்கு அவங்க வீடும் தெரியாது. அட்ரஸ் வாங்கிட்டுப் போகலாம்னா, அட்ரஸ் வெச்சுக் கண்டுபுடிக்கறது சிரமம்னாங்க. அதனால உங்கம்மாவ எங்கூட அனுப்பிச்சு வெச்சாங்க. அப்ப உங்கம்மா ஹைஸ்கூல்ல படிச்சிட்டிருந்தா…”

அப்பாவில் முகத்தில் மலர்ச்சி. மடியில் விரித்தபடி இருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வாசலைப் பார்த்தவாறு திரும்பிக்கொண்டார் அவர். அம்மாவுடனான முதல் பயணம் அது என்பதைச் சொல்வதற்காக மட்டும் அவர் அதை நினைவுபடுத்திக்கொள்ளவில்லை என்று தோன்றியது.

அம்மாவின் பேச்சு சத்தம் சமையலறையில் ஓய்ந்திருந்தது. வேண்டுமென்றே நிறுத்தியிருப்பானோ?

– கணையாழி, செப்டம்பர் 1997.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *