அந்தக் குயிலோசை…
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. கிழிந்து போய்விட்ட மனித நேயமாய் விரிசல் கண்டிருந்த ஓலைக்கூரையின் வழியே வீட்டினுள்ளே மழை நீர் சொட்டுச்சொட்டாய் ஒழுகியது. “டங்… டங்…”தப்பாத தாளலயத்தோடு மழைத்துளி ஒன்றன்பின் ஒன்றாய் வந்து விழுந்து, நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரத்தில், கச்சேரி நடத்திக்கொண்டிருந்தது.
பழசாகிப்போன கயிற்றுக்கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி இருந்த கந்தசாமி மாஸ்டரின் முகத்தில் முதுமை – எழுதிய கவிதை, சுருக்கங்களாகப் படிந்திருந்தன. கண்களைக் கசக்கி விட்டபடி குடிசையை நோட்டமிடுகிறார். குடிசை மூலையில் இருந்த தடுப்புக்கு அப்பாலிலிருந்து எழுந்த புகை எங்கும் நிறைந்திருந்தது. ஈரவிறகோடு போராடிய படி அடுப்புப் பற்றவைக்க முயன்று கொண்டிருக்கும் மகளை அழைக்க மனமின்றி, மெல்ல எழுந்து ஊன்றுகோலின் உத படிக்கத்தைத் தேடியெடுத்தார். புகை வரவழைத்த இருமலோடு வந்த சளியையும் காறியுமிழ்ந்துவிட்டுக் கட்டிலில் அமர்ந்தவரின் தொடையருகில் ஏதோ தட்டுப்பட்டது. ஏதோ என்ன! அது அவருடைய புல்லாங்குழல்தான்.
கீழே தடுக்கி விழுந்துவிட்ட குழந்தையை வாரியணைக்கும் தாயாய் அந்தப் புல்லாங்குழலை நடுங்கும் கரத்தால் வாஞ்சையோடு எடுக்கிறார். மறுகணம் அவரது விரல்கள் அதனை மெதுவாய் வருடிக்கொடுக்கின்றன. தம்மையறியாமலேயே குழல் துவாரம்மீது இதழ் பதிக்கிறார்; இசை பிறக்கிறது; அடிமனதில் அடக்கிவைத்த சோகம் பீறிட்டு எழுந்து… பரந்து… எங்கும் வியாபித்து… சில கணங்களில் நூலறுந்த பட்டமாகின்றது.
“ஏனப்பு நிறுத்திட்டீங்க?”
“……”
“அப்பு!”
“ம்?”
“ஏனப்பு நிறுத்திட்டீங்க?”
“பிடிக்கல்ல புள்ள. பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து… மனசெல்லாம் எரியுறாப்பல… தாங்க முடியல்ல, அதான்!”
தொடர்ந்து அங்கு மொழிகளற்ற மௌனம். ‘டங்… டங்… டங்…’ எனும் ஓசை மட்டும் கேட்கிறது.
தன் மனதைப்போலவே குப்பிலாம்பின் சுடரும் நிலை தடுமாறி நடுங்குவதாக நினைக்கத்தோன்றியது மாஸ்டருக்கு. ‘வெளியே சுடர் விளக்கினைப் போல்…’ பாரதியின் கவிவரி ஞாபகத்தில் தோன்றி மறைந்தது. உயிரின் வேரிலிருந்து உற்பவித்ததான வெப்பம் நிறைந்த நெடுமூச்சு நாசியிலிருந்து கிளம்பியது ‘ஹு…ம்.
கடந்துவந்த காலத்தை நினைக்கிறார்; கண்கள் பனிக்கின்றன. சங்கீத ஆசிரியராய் சொந்த மண்ணில் சேவையாற்றியபோது, வாழ்க்கை எவ்வளவு அமைதியாய்… இன்பமாய்… ஒரு நீரோட்டம்போல் நகர்ந்தது? உள்ளம் நிம்மதியால் நிறைந்திருந்ததால் அல்லவோ, தன்னைச் சுற்றியெழும் சின்னச்சின்ன ஓசையிலும் ஸ்வரம் உணர்ந்து ரசிக்க முடிந்தது; குழலுக்குள் சிறைசெய்ய முடிந்தது?
தினசரி காலையில் படுக்கை விட்டெழும்போதே, கோயில் கண்டாமணியோசை… தொடர்ந்து சுப்புலட்சுமியின் கணீர்க் குரலில் சுப்ரபாதம்… அதனை விழிமூடி உருகியபடி கேட்டுக் கொண்டு கிணற்றுக் கட்டருகே நின்ற பொழுதுகள்…! பக்கத்துவீட்டுப் பார்வதியம்மாள் துலா இழுக்கும் ‘கிறீச்… கிறீச்’ ஒலியில்… காலைநேரப் புட்களின் குதூகலமான இன்னிசையில் மனம் லயித்துப் போன நேரங்கள்…! வசந்தகால மாலைகளில் வீட்டுக்குப் பின்னாலிருக்கும் மாந்தோப்பு ஒற்றைக்குயிலின் சோகமும் தவிப்பும் இழைந்த கூவலில் இதயம் தொலைந்த நாட்கள்…! ஓ! அவை மீண்டும் திரும்பிவரவா போகின்றன?
மனைவி, மகள் கலா, மகன் விசு, அன்னை திலகம் ஆகிய உறவுகளோடு நிறைவான வாழ்க்கை மாஸ்டருக்கு! பாடசாலை விட்டால் தோட்டம், நல்ல நாட்களில் கோயில், குளம், சிநேகிதர் வீடு என்று சலனமின்றி ஓர் ஒழுங்கில் இயங்கியது அவரது பயணம். திடீரென்று ஒருநாள் விசு தலைமறைவாகி விட்டபோதுதான், அவர்களது அழகான குருவிக்கூடு முதன்முதலில் கலவரமடைந்தது.
தன்வாழ்வில் இசையையே சுவாசிக்கும் மென்மையான சுபாவம் கொண்ட கந்தசாமி மாஸ்டரின் வாழ்க்கையும் திசைதப்பிய படகாகிவிட்டது. எல்லாப் பக்கமிருந்தும் குண்டுகளின் இரைச்சல், மனித ஜீவன்களின் அவலமான மரண ஓலங்கள் இடைவிடாது ஒலிக்கலாயின. அவ்வளவு காலமும் ஆத்மார்த்தமாய் நேசித்த சொந்த மண்ணை, வீட்டை, வளவை, தோட்டந்துறவை விட்டுவிட்டு உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கையின் கடைசியை நோக்கி ஓடுவதான பிரமையில் காடென்றும் மேடென்றும் இரவுபகலாய் ஓடியோடிக் களைத்துப்போன அந்தக் கறுப்பு நாட்களின் ரணம், இப்போதும் கூட புதிதாய் வலிக்கிறது – மாஸ்டருக்கு!
இடைவழியில் இறந்துவிட்ட அன்னையின் ஈமக்கடன்களை ஆற்றக்கூட அவகாசமின்றி, குண்டு விழுந்து குழியாகிப்போன ஒரு பள்ளத்தில் தள்ளி, அவசரஅவசரமாய் மண்ணை விரவிவிட்டு ஓடிவந்தபோது, “கந்தப்பு, என் ராசா… உன் கையால கொள்ளி வாங்கிட்டு சாகறதுக்குக்கூட எனக்கு வாய்க்கலையேப்பா!” என்று அம்மாவின் ஆன்மா அழுதுபுலம்புவதான பிரமையில் நெஞ்சு பதறிய வினாடிகளின் நினைவில் தடுமாறிப்போகிறார்.
யுத்தத்தின் கோரத்தாண்டவத்தால் தன் அருமை மகன், அமைதியான வாழ்வு, வாழ்ந்த மண், சொத்து, சுகம், ஈமக்கிரியை நிறைவேற்றப்படாமல் உயிர்நீத்த அன்னை, கண்ணிவெடியால் தன் இடதுகால் என்பவற்றோடு இருட்டான கேள்விக்குறியாய், எதிர்காலத்தையும் சேர்த்தே இழந்துவிட்டு வெறும் நடைப்பிணமாய் பழைய சுகஞாபகங்களின் சுமையால் கனக்கும் இதயத்தைச் சுமந்துகொண்டு கிட்டத்தட்ட மனநோயாளிபோல வெறுமனே இருந்து கொண்டிருப்பது கந்தசாமி மாஸ்டர் மட்டுந்தானா?
தாரைதாரையாக வடித்த விழி நீரைத்துடைக்கவும் தோன்றாது வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த தந்தையை நோக்க கலாவுக்கும் மனதைப் பிசைந்து, கண்கள் கலங்கின. ஆஸ்பத்திரியில் இருக்கும் அம்மா ஞாபகம் போலும்! என்று நினைத்துக்கொள்கிறாள். இரவுணவை வேண்டாவெறுப்பாக உண்டு முடித்துவிட்டு, அவர்கள் உறங்க முயன்றனர். இரவு நீண்டு தோன்றியது.
மறுநாள் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப்போட்டுக் கொண்டு தினசரியைப் பார்த்துக் கொண்டிருந்த மாஸ்டர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். எங்கிருந்தோ அந்த ஓசை ‘கூ… குக்கூ!’ திடீரென்று நிகழ்காலம் மறந்துபோகிறது, மாஸ்டருக்கு வாடிப்போன வதனத்தில் ஒரு மலர்ச்சி! மனதுக்குள் ஏதோ ஈர்ப்பு!! கால்கள் தம்மையறியாமல் பரபரக்கின்றன. ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு கெந்திக்கெந்தி குடிசைக்கு வெளியே வந்துவிட்டார்.
மழை இன்னும் தூறிக்கொண்டுதான் இருந்தது. அதனைப் பொருட்படுத்தும் நிலையில் அவரில்லை. விழிகளால் நாலாபுறமும் துழாவுகிறார். ‘கூ…குக்கூ…’ ஓசை வந்த திக்கைப் பார்த்தவுடன் அவரது முகம் மீண்டும் தொங்கிப் போகிறது; உடல் தளர்கிறது; விழிவடித்த நீரை வான்மழை கழுவிச் செல்கிறது. கடந்துபோன அந்த வசந்த காலம், இனி வரவே வராது என்ற யதார்த்தம் புரிந்து, தன் மனப்பிரமையிலிருந்து மீள முயன்றபடி குடிசை வாசல்வரை வந்துவிட்டார்.
மீண்டும்… ‘கூ… குக்கூ…!’ உண்மை நிலையைத் தெரிந்து கொண்டே சமாதானத்துக்கான போலி வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப்போடும் நமது மக்களைப்போல, உள்ளம் ஓர் அற்ப நப்பாசையில் சலனப்பட்டுவிட, வெகு இயல்பாய் தலையைத் திருப்பிப் பார்க்கிறார். தெருவின் மறு பக்கத்தின் மாடி வீட்டுச் சிறுமியின் குயில்பொம்மை அவரை பார்த்துக் கேலியாகச் சிரிக்கின்றது…
‘கூ… குக்கூ…!
– “ஞானம்” பெப்ரவரி 2002
– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.