நல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்

 

ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம் அதன் முதல் வரியிலேயே தெரிந்துவிடும் என்று சொல்லலாம். முள்ளின் கூர்மையும், மலரின் மணமும் முளைக்கும்போதே தெரிந்துவிடும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணமும், புரியாத வார்த்தைகளைப் போட்டு இலக்கியச் சிறுகதை என்ற பெயரில் வாசகர்களை இம்சை செய்வதைவிட ஒரு தடவை படித்தாலே புரியும்படியான வார்த்தைகளைப் போட்டு ஒரு சிறுகதையைப் படைப்பதுதான் உண்மையான இலக்கியம் என்று நினைப்பவன் நான்.

மறைந்த பத்திரிகையுலகப் பிதாமகர் திரு. சாவி அவர்கள் என்னிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.

“ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்கணும்ன்னா மசால் தோசைக்கு ஆர்டர் தர்றோம். தோசை வந்ததும் அதை சாப்பிட வேண்டிய முறையில் சாப்பிட்டால் தான் சுவையாய் இருக்கும். சில பேர் தோசையோட ஓரத்திலிருந்து சாப்பிட ஆரம்பிப்பாங்க, அதுல சுவை இருக்காது. மசால் தோசையோட முழு சுவையும் நமக்குக் கிடைக்கணும்ன்னா தோசையோட மையப் பகுதியில் கையை வெச்சு தோசையையும் மசாலாக் கிழங்கையும் சேர்த்து எடுத்து வாய்க்குள்ளே போட்டாத்தான் அது மசால்தோசை. அதே மாதிரிதான் ஒரு சிறுகதையை எழுதும் போதும் கதையோட மையக்கருத்தைக் கதையின் முதல் பத்தியிலேயே கொண்டு வந்துவிடணும். இதை எந்த எழுத்தாளர் ஃபாலோ பண்றாரோ அவர் எழுத்து பத்திரிகையுலகில் என்றைக்குமே நிற்கும்.

எனக்குத் தெரிந்தவரையில் பெண் எழுத்தாளர்கள் ஒரு காலகட்டம் வரை எழுதிக் கொண்டு இருந்துவிட்டுப் பிறகு திடீரென்று எழுதுவதை நிறுத்திவிட்டுக் குடும்பச் சுமைகளுக்குள் ஆழ்ந்து போகிறார்கள். எழுதுவது என்பது எல்லோர்க்கும் அமைகிற ஒன்று அல்ல. வெகு சிலர்க்கே கிடைக்கக்கூடிய வரப்பிரசாதம். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது எழுத்தாளர்களின் மிகப் பெரிய பொறுப்பாகும்.

– ராஜேஷ்குமார்

4 thoughts on “நல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்

  1. சிறுகதை எழுத்தாளனாக பரிமளிக்கவேண்டும் என்று கருதும் நபர்களுக்கு ராஜேஷ்குமார் சார் அவர்கள் அளித்த உயர்ந்த பாடம் இது.
    பெரியவர் ராஜேஷ்குமார் அய்யா அவர்களுக்கு என் மனப்பூர்வமான வணக்கங்கள். நமஸ்காரங்கள்.
    அவர்களின் ஆசி வேண்டுகிறேன்.
    என்றும் அன்புடன்
    ஜூனியர் தேஜ்

    1. பிரபல எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்கள் சிறுகதையின் இலக்கணம் பற்றி அளித்த விளக்கம் மிகவும் அருமை. புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. ராஜேஸ்குமார் அவர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *