கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 14, 2019
பார்வையிட்டோர்: 21,273 
 

கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ, தன்னுள் புதைத்துக் கொள்ளவோ முடியாமலே போகிறது. அதற்கும் மேலே போகலாம் என்றாலும் சூன்யம் தாக்குகிறது. மரணபயம் வந்து விடுகிறது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் எல்லையை வைத்தது யார்? எல்லோருக்குமே இப்படித்தானா? இல்லை, என்னை மட்டும்தான் அந்த உச்சநிலைக்கு மேல் மரணம் கவ்விக் கொள்ள முயற்சிக்கிறதா? இருட்டு சூழ்ந்து வரும் சமயம் கண்கள் சுழன்று களைத்துப்போய் விடுபட்டு மூச்சு வாங்கிக் கொள்வதுதான் தொடர்ந்து நடக்கிறது! பின் இதற்கா? இதற்குத்தானா? இந்த அசிங்கத்துக்குத்தானா? என்று கலவியின் மீது வெறுப்புப் போர்வை உடனே போர்த்திக் கொள்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பாக அப்படியான களைப்பில் கணவன் தியோடரின் முகம் பார்த்து மிரண்டு போனாள் பிலோமி டீச்சர். வெறி மிகுந்த கோர மிருகத்தின் முகமாய் அது இருந்தது! கடைசியில் அவள் அவனிடம் அதை சொல்லப்போக, தியோடர் உண்மையாகவே கலவி சமயத்தில் மிருகமாய் மாறிப் போனான். சிகரெட் பற்றவைத்து இவளின் சிவந்த பருத்த தொடையில் சுட்டான். இவளைத் திருப்பிப் போட்டு பின்புற மேடுகளில் சுட்டான். இப்போது நினைக்கும்போது கூட அவனைத் தேடிப் போய் குரவளையைக் கடிக்கும் வெறி வந்தது! தியோடரோடு எண்ணி முன்னூற்றி ஐம்பத்தி ஒரு நாள்தான் இல்லற வாழ்க்கை வாழ்ந்தாள். கோர்ட்டில் நின்று முழுதாய்ப் பிரிந்து வந்து ஒன்பது வருடங்கள், இதோ போன வாரம்தான் முழுவிடுதலை கிடைத்தது போல ஓடிவிட்டது.

பிலோமி டீச்சர் தியோடரிடமிருந்து பெற்ற பூரண விடுதலைக்குப் பிறகு தன் சொந்த அப்பா அம்மாவிடமும் பாரமாய் போய்ச் சேராமல் சேலம் அம்மாபேட்டையில் தனித்தே மகள் எஸ்தருடன் அறையெடுத்துத் தங்கினாள். அப்பா அம்மாவும் அம்மாபேட்டையில் தான் என்றாலும் இரண்டு கிலோ மீட்டர் தள்ளி வந்து விட்டாள். அவர்களாக இவள் வீடேறி வந்து பேத்தியைக் கொஞ்சி எடுத்துப் போவதும் திருப்பிக் கொண்டு வந்து விடுவதுமாக இருந்தது. தியோடர் வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டு சென்னையில் இருப்பதாகக் காற்றில் வந்த சேதியை காற்றிலேயே அனுப்பி விட்டாள். எஸ்தர் இப்போது ஆறாவது வகுப்பில் இருக்கிறாள். கலவியின் நினைப்பு வந்த போதெல்லாம் தியோடர் என்கிற மிருகத்தின் ஞாபகங்கள் வந்து தொலைவது எரிச்சலாகவே இருந்தது பிலோமி டீச்சருக்கு.

தியோடருக்கு விடை கொடுத்து ஆறு வருடங்களுக்குப் பிற்பாடுதான் பிலோமி டீச்சரின் மனதிற்குள் முதல் காதல் பூத்தது! அது காதல்தானா என்பது கூட அவளுக்கு தெரியவில்லை. இவள் வீட்டுக்குப் பக்கத்து வீடு இந்தராணி வீடு. இந்தராணியின் கணவர் ஜீவாவில் டிரைவராகப் போய் வந்து கொண்டிருந்தார். இந்தராணியின் சொந்த ஊர் கோபி. அங்கேயே காலேஜில் படிப்பதை விட்டு விட்டு இந்தராணியின் தம்பி ஜான்சன் சேலம் வந்து பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி எடுத்து அக்கா வீட்டில் தங்கினான். வந்தவன் முழுதாகப் படிப்பையும் முடிக்காமல் இரண்டாவது வருடத்தில் டிஸ்கண்டினியூ செய்துவிட்டு கோபிக்கே ஓடிப்போனான்.

முதலில் சாதாரணமாகத்தான் எஸ்தரைக் தூக்கிக் கொண்டு செல்லம் கொஞ்சினான். எஸ்தரும் மாமா மாமா என்று எளிதாக ஒட்டிக் கொண்டாள். எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பிலோமியிடம், ‘அப்படி இல்லைங்க டீச்சர், இப்படிங்க டீச்சர்’ என்றுதான் குறைவாய் பழகினான். அவனிடம் எந்த தப்பான எண்ணமும், பார்வையும் ஒரு முறை கூட இவள் பார்த்ததே இல்லை. இன்று வரை கூட! எஸ்தரை சர்ச்சுக்குக் கூட்டிப் போவது அவன்தான். பிலோமி தனக்கு நேர்ந்த துர்சம்பவங்களின் பாதிப்பால் சர்ச் போவதையே விட்டிருந்தாள். ஜான்சன் மாமா அது வாங்கிக் குடுத்தது, இது வாங்கிக் குடுத்தது என்று தின்பண்டங்களையும், பொம்மைகளையும் எஸ்தர் காட்டிய சமயம் அவளை இவள் திட்டவேயில்லை. ‘எதற்கு இப்படி?’ என்று ஒருமுறை பிலோமி வினவிய சமயம் ஜான்சன் பதில் ஏதும் பேசவில்லை. அவன் வாங்கித்தருவது அவன் சம்பாதித்த பணத்தில் கூட அல்ல என்பது பிலோமிக்குத் தெரியும். என்ன எதிர்பார்த்து இவன் இப்படி நடந்து கொள்கிறான். இவளுக்குள் ஆசிரியத்தனம் உள்நுழைந்து அவனை மேலும் ஏதாவது கேட்கலாம் என்று நினைத்துப் பார்க்கையில் அவன் முகம் கூம்பிப்போய் பெரிய தவறிழைத்தவன் போல தலைகுனிந்து இருப்பது கண்டு தொய்ந்து போனாள். பின் எப்போதும் அப்படி அவனிடம் தான் நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் உணர்ந்து கொண்டாள். பின் இரண்டு நாட்கள் ஜான்சன் இவள் வீட்டுப் பக்கம் வருவதைத் தவிர்த்தான். எஸ்தரோ ‘மாமாவைக் காணோமே!’ என்றாள். இந்தராணி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். மாமா இல்லை என்று திரும்பி வந்தாள். மூன்றாம் நாள் காய்ச்சலில் விழுந்த எஸ்தரைக் காண வந்தவன் பதைபதைத்து ஆட்டோ ஏற்பாடு செய்து தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டோடினான். நகரில் இருந்த குழந்தைகளுக்கான மருத்துவ-மனையில் சேர்த்து இரண்டு நாள் தூங்காமல் அருகிலேயே இருந்தவனைக் கண்டபோது தான் அது பிலோமியின் மனதில் முதலாக வேர் விட்டிருக்க வேண்டும்.

எதுவுமே இங்கு திட்டம் போட்டு நடப்பதில்லைதான். யாருக்கும் யார்மீதும் பிரியம் தோன்றலாம். அதற்காகப் பெரிய சாதனைகள் நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஜான்சனின் தூய ஆத்மாவை பிலோமி டீச்சர் ஒரு புள்ளியில் உணர்ந்து சிலிர்த்துப் போனாள். யாரும் தேடி வந்து அவளிடம் அன்பைத் திருப்பிச் செலுத்து என்று கூறவில்லை. அவன் அருகாமையில் இருப்பது திடீரென காதுகளை அடைத்தது! பெருமூச்சு வாங்கியது. இதயத் துடிப்பு அதிகமானது. ஒரே பதற்றமாக இருந்தது. டம்ளரில் சரியாகத் தண்ணீர் ஊற்ற முடியவில்லை. கீழே சிதறியது! ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு அவன் அருகாமையைத் தவிர்த்து வெளியே ஓடிவிட மனம் தூண்டிற்று! புயல்காற்று பயங்கரமாக வீசியது! காகிதக் குப்பைகள் பறந்தன! ஒரு சிறு தூசு படாமல் எப்போதும் போல் சாதாரணமாக நின்றாள் பிலோமி டீச்சர். திடீரென பூகம்பம் நிகழ்ந்தது! கட்டிடங்கள் சரிந்தன! இவள் மீது ஒரு சிறு துண்டு கூட விழவில்லை. பெண்மை என்றாலே சரணாகதி என்றுதான் பொருள். தூறா மேகமாய் பிலோமி டீச்சர். மகிழ்வோடு தனக்குள் வேர் விட்ட அன்பை ஏற்றுக் கொண்டாள். ஜான்சன் எஸ்தருக்கு டீயில் பன்னை நனைத்து அவள் வாயில் ஊட்டிக் கொண்டிருப்பதை பிலோமி டீச்சர் மகிழ்வோடு பார்த்தாள். காய்ச்சல் விட்டபிறகு எஸ்தர் முகத்தில் களைப்பு இருந்தது! இருந்தும் நிம்மதியாய் இருந்தது! மகிழ்ச்சியோ நிம்மதியோ இரண்டுமே எளிமையான நிகழ்வுகள்தான். அவற்றுக்கு எதுவுமே வேண்டியதில்லை. சும்மா இருந்தாலே போதும். அதை உணர்ந்திருந்தாள் பிலோமி டீச்சர்.

பின் வந்த நாட்களில் எல்லாமே, எப்போதும் போல் சகஜமாகவே நடக்கத் துவங்கின. இரவு வேளையில் சப்பாத்தியோ, பூரியோ போட்ட நாட்களில் எல்லாம் பிலோமி ஜான்சனையும் தன் வீட்டிலேயே சாப்பிட வைத்தாள். நான்கோடு கை அலம்ப முயற்சிப்பவனை மெலிதாய் அதட்டல் காட்டி மேலும் இரண்டை உண்ண வைத்தாள். எத்தனையோ நாட்களுக்குப் பிற்பாடு அவனுக்குப் பரிமாறுவதில் திருப்தியை உணர்ந்தாள். காதலில் இருளின் தன்மை இருப்பதைக் கண்டுணர்ந்தாள். பிலோமிக்குக் காதல் பயமாக இருந்தது! ஆனாலும் பயத்தை மீறி தவிப்பாய் இருந்தது! அவன் அருகாமை திகிலாய் இருந்தது! கூடவே கூச்சமாகவும் இருந்தது! ஜான்சன் தன் வீட்டினுள் எப்போது நுழைவான் என்ற தாகமும் தினசரி கூடிக்கொண்டது! தன்னை அவன் வரும் சமயமெல்லாம் அழகாய் வைத்திருக்க முயற்சித்தாள். கண்ணாடி முன் நின்று அலங்கரிப்பதில் தீவிரமானாள். உடல் மீது அதிக அக்கறை விழுந்தது! தனக்கிருந்த இலேசான தொந்தியைத் தடவித் துன்புற்றாள். ஜான்சனுக்கு சத்தியமாய் என்னைப் பிடிக்காது என்று தன் மீதே கோபப்பட்டாள். வயிற்றில் இருந்த தையல் அழுகையைத் தூண்டியது!

காதல் என்பதே பாதி வாழ்வு, பாதி சாவுதான். பிலோமி டீச்சர் வாழவும், சாகவும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். ஒருசிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி. சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும்கருப்பு நிறம்தான். இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான்.

எப்போது ஜான்சன் வீட்டினுள் நுழைந்தாலும் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் புத்தகங்களோடு போராடிக் கொண்டிருக்கும் எஸ்தரோடு போய் அமர்ந்து கொள்வது புதிராய் இருந்தது! அவனுடன் ஏதாவது பேச்சுக் குடுக்கலாம் என்றாலும் வார்த்தைகள் கோர்வையாய் வருவதில்லை. பதற்றம் கூடிக் கொள்கிறது. இத்தனை வயது கடந்த பிறகும் இப்படி வலைக்குள் வீழ்வது புதிராக இருந்தது. “பெண்தோழிகள் உண்டா ஜான்சன்? உன்னைப் போன்ற பையன்கள் பெண் தோழிகளோடு சினிமா தியேட்டர், டேம், பூங்கா என்று சுற்றுகிறார்களே!” சுவரைப் பார்த்து பிலோமி கேள்வியைக் கேட்டாள். “இல்லங்க டீச்சர், அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.” அவன்தான் சொன்னானா? இல்லை, நாம்தான் நிஜமாகவே அந்தக் கேள்வியைக் கேட்டோமா? என்று வேறு சந்தேகமாய் இருந்தது இவளுக்கு. ஜான்சனைத் திருப்பி வெடுக்கெனப் பார்த்தாள். மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் அமர்ந்திருந்தான். அவன் நாணத்தில் இருக்கிறானா என்பதை இவளால் கண்டறிய முடியவில்லை. “உன் படிப்பெல்லாம் எப்படிப் போகிறது?” என்றாள். “எதுவுமே புரிவதில்லை. இந்தப் படிப்பு பிடிக்கவுமில்லை, கெமிஸ்ட்ரி லேபில் பொம்மை மாதிரி சென்று சல்பியூரிக் ஏசிட்டுகளை வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறேன். கூடிய சீக்கிரம் இதை ஒதுக்கிவிட்டு கோபி சென்று விடுவேன்” என்றவனிடம் “கோபியில் உனக்குக் காதல் உண்டா?” என்றாள். “இந்த மூஞ்சியை எந்த பேக்கும் காதலிக்காது!” என்றான்.

காதல் என்றதும் பொறாமை, சினம், வெறுப்பு, ஆக்ரமிப்பு, பாசம் என்று எல்லாமும் தன்னுள் குடிகொண்டு தன்னை ஆட்டுவிக்கத் துவங்கிவிட்டதாய் சந்தோஷித்தாள் பிலோமி டீச்சர். இந்த முகத்தை எந்த பேக்கும் காதலிக்காதாமே! முட்டாள், உன் பக்கத்திலேயே ஒரு பேக்கு நிற்கிறது தெரியவில்லை. நொடியில் தனக்குள்ளிருந்து ஈரம் கசிவதையும் உணர்ந்தாள். பாம்பு சீறுவது போல மூச்சு வாங்குவதை நிறுத்த மனமில்லாமல் அனுபவித்தாள். சிறு பிள்ளையாய் ஓடிச்சென்று அவன் மடியில் தலை வைத்துப் படுக்கவேண்டும். அவன் மூக்கைத் திருக வேண்டும். அவன் முடிக்கற்றைகளைக் கோதி விட வேண்டும் என்றெல்லாம் பிலோமி நினைத்துக் கொண்டாள். ஜான்சனுக்கு எடுத்துக் கொள்ளச் சொல்லி தன்னையே தர வேண்டும் என பிடிவாதம் கொண்டாள்.

பிரியத்தின் முதல் அத்தியாயமே காதல் வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்காமல் கொடுப்பதுதான். அவனுக்கே அவனுக்கென்று எல்லாமும் தர தயாராயிருந்தாள். இவன் மீது காதல் என்ற உணர்வு தோன்றியதுமே இவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளம் பூரிப்பதும், விரிந்து மணம் வீசும் மலராய் மாறுவதும் கூட ஒரு போதாமையை இவளுக்குள் நிரப்பியது. ஜான்சனுக்குள் காதல் என்ற செடி வளராத போதிலும் தான் அவனை நேசிக்கக் கிடைக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடப் போவதில்லை என தீர்மானித்தாள் பிலோமி டீச்சர்.

ஒரு ஆறு மாதங்கள் பிலோமி டீச்சருக்குத் தவிப்பாய் ஓடியிருக்கும். ஜான்சன் இவளின் தவிப்பை தாகமாய் மாற்றிவிட்டு விடைபெற்றுப் போய் விட்டான். அருகில் இருக்கும் வரை தனக்கானதுதான் என்ற நம்பிக்கையில் தனக்குள்ளே மட்டும் வளர்ந்து வந்த செடி அவன் தள்ளிப் போனதும் தள்ளாட்டம் போட ஆரம்பித்து விட்டது! அடிக்கடி தலை வலி ஆரம்பமாயிற்று. உடல் மீது வைத்திருந்த நேசிப்பும் மறந்து போனது. வேறேதோ மீள முடியாத பள்ளத்தாக்கில் வீழ்ந்து போனதை உணர்ந்தாள். எஸ்தர், மாமா எந்த ஊருக்குப் போயிட்டார்? எப்போ வருவார்? என துளைத்தாள். எஸ்தர்தான் ஜான்சனை விரட்டி விட்டாள் என்று நினைத்து அவள் மீதும் கடிந்து கொண்டாள். நான்கு மாதம் போன பிறகு ஜான்சன் ஒரு முறை வந்தான். எஸ்தரை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றான். உள்ளே வந்தவனை “வா” என்று ஒற்றை வார்த்தை கூப்பிட்டதோடு சரி. அவன் மீது எதற்காகத் தனக்கு இத்தனை கோபம் வரவேண்டும்! அத்தனை கோபத்திலும் அவனுக்காய் ஹார்லிக்ஸ் போட சமையல்கட்டு நுழைந்தாள். அவனோ, ‘நாங்க கடைவீதி போய் வர்றோம் டீச்சர்’ என்று எஸ்தரோடு போய் விட்டான்.

அவன் திரும்பி வருவதற்குள் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆசை ஏதும் இன்றி சோபாவில் அமர்ந்தாள். தலைவலியும், குழப்பமும் ஒன்று சேர்ந்து கொண்டது. தனக்குள் அவன் மீது காமம் இருக்கிறதா என யோசித்தாள். ‘உறுதியாக’ என்றொரு குரல் தலைக்குள் எதிரொலித்தது. அவன் எப்படியும் எஸ்தரோடு வருவான். வந்தவனின் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘ஏன்டா நாயி, திடீர்னு போனே?’ என்று சண்டையிடலாம். இல்லை, உள் நுழைந்ததும் அவனைக் கட்டிக் கொண்டு முத்தங்களிட்டு அழலாம் என்று பலவாறு யோசித்து தலையைப் பிய்த்துக் கொண்டாள். ஜான்சன் எஸ்தரோடு வீட்டினுள் நுழைய பின் ஒரு மணி நேரமாயிற்று. பிலோமி யோசித்திருந்தனவற்றையெல்லாம் அவனிடம் செய்யவில்லை. ‘இது மாமா வாங்கிக் கொடுத்துச்சு. இத பாரும்மா. ரிமோட்ல இந்த பொம்மை நடக்கும். பாரும்மா’ என்று இவள் முகம் தூக்கி எஸ்தர் குழந்தை பொம்மை காட்டினாள். திடீரென குழந்தையாக உருவெடுக்க முடியுமானால் எவ்வளவோ நல்லது என யோசித்தாள். ‘பிலோமி செல்லத்துக்கு என்ன வேணும்? ஏன் பிலோமி செல்லம் உம்முன்னு இருக்கு?’ என்றாவது ஜான்சன் தன்னைத் தூக்கிக் கொள்வான் என்று நினைத்தாள்.

“உடம்பு சரியில்லையா டீச்சர்? ஏன் என்னவோ போல இருக்கீங்க?” என்றான் ஜான்சன். அவன் குழந்தை பொம்மைக்கருகில் தரையில் அமர்ந்திருந்தான். “வொயிட் பேண்ட் போட்டுட்டு இப்படி தரையில உட்கார்ந்திருக்கே? அழுக்காயிடும். இப்படி சோபாவுல உட்காரு ஜான்சன்” என்றாள். குரல் பாதாளத்திலிருந்து ஒலிப்பது போல இவளுக்கே கேட்டது. “அதை விடுங்க டீச்சர். இன்னைக்கே ஈவினிங் நான் போறது தானே. ஆனா ஏனோ நீங்க ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க!” என்றவனுக்கு “லேசா தலைவலி” என்றாள்.

‘ஏதாவது தலைவலி நிவாரண மாத்திரை போட்டுக் கொண்டீர்களா? இல்லை, நான் போய் வாங்கி வரவா?’ என்று சொல்வானோ, கேட்பானோ என எதிர்பார்த்திருக்க அவன் பொம்மை மீது கவனம் செலுத்தவே முகம் வாடினாள். “படிப்பை விட்டுட்டு கோபில போய் என்ன பண்ணுறே?” என்றாள் பிலோமி. எலக்ட்ரிகல் ஹார்டுவேர் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்ட விசயம் சொன்னான். அது கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு செல்லும் பாதையில் முன்னாலே இருக்கிறது என்றான். “கடை பேர் சொன்னா என்ன நாங்க வந்து உன்னைக் கடிச்சு தின்னுடுவமா?” என்றாள். குரலில் கோபம் இருந்ததை பின்னர் தான் உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள். அவனோ ‘கனி’ என்றான். “ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதுதான் அக்காவைப் பார்த்துவிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றான். ஏன் என்னையும், எஸ்தரையும் பார்க்க வரவில்லையா? என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டாள். அது ஒரு ஆழமான பிச்சை எடுப்பாக அவளுக்குத் தோன்றிற்று. யாரையாவது காதலிக்கிறாயா? என்றும் கேட்கத் தோன்றிற்று! காதல் ஒரு பேராசையாகப் போய்விட்டதை பிலோமி உணர்ந்தாள். மறுகணம் தனக்கு மட்டுமே அவன் உடமையாக வேண்டும் என நினைத்தாள். எனக்கொரு பெண் தோழி இருக்கிறாள் என்றவன் கூறுகையில் தூக்குக் கயிறொன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றுவதாக நினைத்தாள். திடீரென கயிற்றை வீசிவிட்டு என்னை ஒரு செல்லப் பிராணியாகவாவது வைத்துக் கொள் என்று கேட்பது போல் நினைத்தாள். இது பிச்சையெடுப்பேதான்.

ஆணின் மனம் எந்த விதத்தில் யோசித்து செயல்படுகிறது என்பது பெண்ணிற்குத் தெரிவதில்லை. அதே போல்தான் ஆணிற்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி விரும்பினாலும் ஒருவரை ஒருவர் வெறுக்கவே செய்கிறார்கள். ஒருவரை மற்றவர் தொல்லைபடுத்திக் கொண்டேதான் பயணம் செய்கிறார்கள். சண்டை பிடிப்பதுதான் பெண்ணின் இயல்பு. கை நீட்டுவது ஆணின் இயல்பு. ஒருவரை ஒருவர் அடக்கி ஆள்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். யாராவது ஒருவர் சண்டையிட்டுக் கோபித்துக் கொண்டிருப்பது நல்லதுதான். குறைந்த அளவு கவனிப்பாவது அங்கு கிடைக்கும்.

யாரையாவது காதலிக்கத் துவங்கும்போதே இந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்காதோ என்று நினைக்கத் தூண்டும் அளவுக்குக் காதல் மிக மென்மையானது. ஆனால் தொடர்ந்து காதல் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆண்தான் தோற்றுப் பின்வாங்குகிறான். பெண் எப்போதும் தோற்பதே இல்லை. அப்படி அவள் தோற்றுப் போகிறாள் என்றால் கொஞ்சமேனும் அவளிடம் ஆண்மை இருக்க வேண்டும். ஒரு ஆண் காதலில் ஜெயிக்கிறான் என்றால் கொஞ்சமேனும் அவனுள் பெண்மை இருக்க வேண்டும். மென்மையானது எங்குமே ஜெயிக்கிறது. கடினமானது எங்கும் தோற்றுத்தான் போகிறது.

‘சொன்னா சொன்ன நேரத்துக்கு வர்றியாடி நீ? பார், வாங்கி வச்ச பூ கூட வாடிப்போச்சு!’ என்று ஒருவன் தன் காதலியை அடிக்கலாம். அங்கேயும் கூட அந்தக் காதலிதான் ஜெயிக்கிறாள். அவள் அவனைக் காதலிக்கிறாள் என்றால் நிச்சயம் அவள்தான் ஜெயிப்பாள். அவள் எப்போதும் சண்டை இடுவதில்லை. அவளும் சண்டையிட ஆரம்பித்தால் தோற்றுத்தான் போவாள். மென்மையை இழந்த பெண்மை தோற்றுத்தான் போகும். ஆனால் இப்படித்தான் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன. தப்பிச்சேன்டா சாமி, விட்டு விடுதலையானேன் என்று சொல்லும் பெண்ணிடம் எந்த மென்மையும் இல்லை. அவள் ஆண்களின் வழிகளைக் கையாள ஆரம்பித்து விட்டாள். அதனால் தோற்பதும் நிச்சயமாகிவிட்டது.

ஜான்சன் தன்னிடமும், எஸ்தரிடமும் விடைபெற்றுப் போனது கூட நினைவில் இல்லாமல் பிலோமி டீச்சர் சுவரையே வெறித்து அமர்ந்திருந்தாள். எஸ்தர் தட்டிய போதுதான் சுயநினைவுக்கு வந்தாள். ஏனோ அவளைத் தூக்கி மடியில் அமரவைத்துக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள் பிலோமி. ஜான்சன் வந்து போனது கூட தனக்கு ஒரு விதத்தில் நிம்மதியைத் தருவதாகவும் திருப்திப்பட்டாள். அந்த திருப்தி மறுபடி மூன்று நான்கு மாதங்களுக்குத்தான். எஸ்தரை சாக்காட்டிக் கொண்டு கோபி சென்று பார்த்து வரும் எண்ணம் துளிர்விட்டது. அந்த எண்ணத்தைக் கூட செயல்படுத்த மேலும் மூன்று மாத காலமாகி விட்டது பிலோமிக்கு. தன்மானம் தடுத்து தடுத்துக் கேள்விகள் கேட்கத் துவங்கவே, பிலோமி பதில் சொல்லித் தீர்ப்பதற்கு அத்தனை மாதங்கள் எடுத்துக் கொண்டாள்.

கனி ஹார்டுவேர் கடைமுன்பாக இவளும், எஸ்தரும் நின்றது ஒரு சனிக்கிழமை காலை பத்தரை மணி. ஜான்சன் வெளியே டெலிவரி குடுக்கப் போயிருப்பதாகவும் வந்து விடுவானென்றும் அவன் எண்ணிற்கு வேண்டுமானால் பேசிப்பாருங்கள் என்று அவன் செல்போன் எண்ணைக் கொடுத்தார்கள். வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள். இவள் மகளைக் கூட்டிக்கொண்டு ஜூஸ் கடை சென்று இருவரும் ஜூஸ் சாப்பிட்டு விட்டு சாலைக்கு இறங்குகையில் எஸ்தர்தான் அவனைக் கண்டு மாமா என்று ஓடிப்போய் கட்டிக் கொண்டாள். ஜான்சன் அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். பிலோமி தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள். “வீட்டுக்கு வந்து நல்லா பழகிடறது! அவகிட்ட நல்லா செல்லம் கொஞ்சிப் பழகிடறது. படிப்பு வேணாம்னு ஓடிவந்து கடையில சேர்ந்துக்கறது. மாமா எங்கன்னு கேட்கிறவளுக்கு என்ன பதில் சொல்றது? அதான் கூட்டி வந்தேன்’’, என்றாள் பிலோமி. அவனோ இவள் பேசுவதைக் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. ‘எக்ஸாம் எழுதிட்டியா? பாஸ் ஆயிடுவியா?’ என்று எஸ்தருடனே பேசிக் கொண்டிருப்பது எரிச்சலாய் இருந்தது! என்கிட்டவும் சித்த பேசேன்டா!

மதியம் உணவு விடுதியில் சாப்பிடும் போது தான் இவளின் சிரமத்தை உணர்ந்தவனாக, “பாப்பா என்னைப் பார்க்கணுங்கறதுக்காக இவ்ளோ சிரமம் எடுத்துக் கூட்டி வந்தீங்களா டீச்சர். ஏனோ கஸ்டமா இருக்கு” என்றான். “எனக்கும்தான் உன்னைப் பார்க்கணும்னு இருந்துச்சு” என்று சொன்ன பிலோமி அவன் முகம் பார்த்தாள். அவன் முகத்தில் முதலாய்த் தெரிந்த மாற்றத்தைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தாள். குறிப்பால் விருப்பத்தை உணர்த்துவதில் சாமர்த்தியசாலி என்று தன்னையே மெச்சிக் கொண்டாள். பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதப் போகும் மாணவி போலவும் மிரண்டாள் திடீரென. பிலோமியின் கண்களில் தெரிந்த படபடப்பை ஜான்சனும் முதலாக உணர்ந்து, தான் என்ன சொல்லவேண்டும் இதற்கு? என்று பேசத் தெரியாமல் குழம்பினான். “இன்னும் செல்போன் வாங்கினதை என்கிட்ட சொல்லவே இல்ல பார்த்தியா!” என்றாள்.

ஜான்சன் குழம்பிப் போனான். இது சேலத்தில் வீட்டில் இருக்கும் டீச்சரே அல்ல என்பது டீச்சரின் குரலில் இருந்தே தெரிந்துபோனது. இத்தனை நாள் உற்றுப் பார்க்காத டீச்சரின் முகத்தை உற்றுப் பார்த்தான். உருண்டிருந்த அவள் கன்னங்களின் வளவளப்பைப் பார்த்தான். தன் பாக்கெட்டிலிருந்த நோக்கியா செட்டை எடுத்து டீச்சரிடம் நீட்டினான். அவள் வாங்கிப் பார்த்து “எவ்ளோ?” என்றாள். ஜான்சன் உணவை வாயில் திணித்துக் கொண்டு இடது கையின் ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டினான். “வாங்கி எவ்ளோ நாள் ஆச்சு ஜான்சன்?” என்றாள். “இரண்டு மாசம் டீச்சர்” என்றான். செல்போனைத் தன் ஜாக்கெட்டினுள் திணித்துக் கொண்டவள், “சாப்பிடு சாமி” என்று எஸ்தரிடம் சொன்னாள்.

சாப்பிட்டு வெளிவந்ததும், “அப்பா, அம்மா என் தங்கச்சியப் பார்க்கறீங்களா டீச்சர். ஒரு டவுன்பஸ் ஏறணும். அவ்ளோதான்’’ என்றவனிடம் மீண்டும், “உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்” என்று கோபமாய் சொன்னாள் பிலோமி. ஜான்சன் எஸ்தரைத் தன் தோளுக்கு தூக்கிக் கொண்டான். “ஆசையக் காத்துல தூது விட்டு” பிலோமியின் ஜாக்கெட்டினுள் செல்போன் பாடியது. ஜான்சன் பிலோமியைப் பார்த்தான். பிலோமி தன் ஜாக்கெட்டினுள் கைவிட்டு செல்போன் எடுத்து அவனிடம் நீட்டினாள். வாங்கியவன் ‘ஹலோ’ என்றான் அழுத்தி காதுக்குக் கொடுத்து! பின் முகம் மாறி கட் செய்து போனைத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதா இல்லை, பிலோமியிடம் தருவதா என குழம்பி நின்றான். “உன் தோழியா? நான் இருக்கேன்னு தான் பேசலியா? நான் வேணா அதோ நிழற்குடையில போய் நின்னுக்கறேன். பேசிட்டு வா. கோபிச்சுக்கப் போறா!” என்றாள். “இல்லங்க டீச்சர். பாட்டு வச்சுக்கோ மாசம் முப்பது ரூபான்னு. கட் பண்ணிட்டேன்” என்றான்.

ஜான்சன் தன் பாக்கெட்டுக்கு செல்போனைக் கொண்டு சென்றபோது, போன் என்றாள் பிலோமி. இதென்ன விளையாட்டு எனப்புரியாமல் அவளிடம் நீட்டினான். வாங்கியவள் மறுபடியும் தன் ஜாக்கெட்டினுள் வைத்துக் கொண்டாள். “அப்ப உனக்குப் பெண் தோழி இருக்கா. இப்ப கூப்பிடலை. ஒருவேளை ஈவனிங் கூப்பிடுவா இல்லையா?’’ என்றாள். “அப்படியெல்லாம் எனக்கு யாரும் இல்லங்க டீச்சர்!” குரல் இழுத்துச் சொன்னான் வேண்டுமென்றே! அவள் விளையாட்டினுள் கலந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குள்ளும் வந்துவிட்டது. ‘பொய்தானே சொல்றே!’ என்று பிலோமி டீச்சர் கேட்டால், ‘ஆமாம் இருக்கா’ என்று சொல்லி விளையாடும் ஆர்வமான சமயம் அவளோ, ‘நம்புறேன்’ என்றதும் பொசுக்கென்றாகிவிட்டது ஜான்சனுக்கு. “நான் உனக்குப் பெண்தோழியா இருக்கவா?” என்றாள். “சரிங்க டீச்சர்” என்றான். “ஸ்கூல்லதான் நான் டீச்சர். என்னை ஏன் டீச்சர் டீச்சர்னு கூப்பிட்டு மானத்தை வாங்குறே? இப்போத்தானே என்னை உன் தோழியா ஏத்துக்கிட்டே! உனக்குத் தோழியா இருக்கணும்னா சின்னப் பொண்ணுகளாத்தான் இருக்கணுமா?” என்றவளுக்குத் தன் பேச்சே ஆச்சரியமாயிருந்தது! கடைசிக்கு தன்னை தோழியாகவாவது ஏற்றுக் கொண்டானென்றால் மெதுவாய் காய் நகர்த்திக் கொள்ளலாமென்ற நம்பிக்கையும் வந்தது. அவனோ “சரிங்க பிலோமி” என்று சொல்லி இவளை அருவியில் நனைத்தான். அருவியின் குளிர்ச்சியில் சிலிர்த்தாள். இந்த நாளை இனிய நாளாய் அமைத்துக் கொடுத்த கர்த்தருக்கு நன்றி சொன்னாள். இந்த நொடியிலிருந்து தானும், எஸ்தரும், ஜான்சனும் மட்டுமே உள்ள உலகமாக இது மாறிவிட வேண்டுமென குழந்தையாய் பிரார்த்தித்தாள். எஸ்தரை இறக்கிவிடச் சொல்லிவிட்டு தன்னையும் ஒரு ஐந்து நிமிடம் அவனைத் தூக்கிக் கொள்ளச் சொல்ல ஆசையாய் இருந்தது! நான் உன் தோழிதானேடா! என்னையும் சித்த தூக்கிக் கட்டிக்கோடா.

“எனக்கு ஒரு செல்போன் வாங்கணும் இப்போ. நீ செலக்சன் பண்ணி வாங்கிக்குடு” என்றாள் பிலோமி. ஜான்சன் தன் நண்பனின் கடைக்கே கூட்டிப் போனான். நோக்கியாவின் தனக்கெடுத்த கிளாசிக் செட்டையே பிலோமிக்கும் எடுத்தான். பில்லுக்கு பிலோமி பணம் கொடுத்தாள். அங்கேயே சிம்கார்டு தன் பெயரில் எடுத்துக் கொடுத்தான். பிலோமியும் எஸ்தரும் ஜான்சனிடம் விடைபெறும்போது மதியம் ஒன்றரை ஆகிவிட்டிருந்தது. “எங்களைப் பார்க்கணும்னு செலவு பண்ணிட்டு சேலம் வந்துடாதே தோழா! நாங்களே வர்றோம்” என்றாள். எஸ்தருக்கு விடைகொடுக்கும் நிமித்தமாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ஜான்சன். “உன் புதுத்தோழிக்கு இல்லையாடா முத்தம்?” சிரித்தபடி சொல்லிவிட்டு பேருந்து ஏறினாள். பேருந்து புறப்பட்டதும் அவள் முகம் தெரியும் தூரம் வரை கையை அசைத்து விடைபெற்றாள்.

பின்னர்தான் இரு மாதத்திற்கு ஒரு முறை ஜான்சனை வந்து சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள் பிலோமி டீச்சர். கோபியில் இறங்கியதும் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி விடிகாலையில் கிளம்பிப் போவதும் பழக்கமாயிற்று. ஜான்சனைப் பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த வருடத்தில்தான் நான்கைந்து முறை எடுத்துக் கொண்டாள். எப்போது வந்தாலும் திரும்பிப் போகையில் அவன் பாக்கெட்டில் செலவுக்கு என்று பணம் திணித்துவிட்டுப் போவதையும் வழக்கமாக்கிக் கொண்டாள். ஜான்சன் அதற்காய் பலமுறை தடுத்தும் இருக்கிறான். “ஜாலியா இருப்பா, நான் இருக்க முடியுமா? சுடிதார் போடணும்னு ஆசைப்படறேன். முடியுமா? நான் குண்டுடா. நானும், எஸ்தரும்தான். நாங்க என்னடா செலவு பண்றோம். நீதான்பா எனக்கு ஜாலி. நீ ஜாலியா இருந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன். நான் தப்பான பொம்பளையா ஜான்சன்? நீ சொல்லு! நீ சொல்லு! என்னை என்ன பண்ணச் சொல்றே? எனக்கு முப்பத்தி நாலு வயசு. என்ன பண்ண, எனக்கு உன் மேல எதுக்குத்தான் இந்தப் பேய்த்தனமான காதல் வந்துச்சு! நான் லவ் பண்ணக்கூடாதாப்பா? எனக்கு ஆசை வரக்கூடாதாப்பா? உனக்கு என் மேல லவ் இல்லாட்டி போச்சாது. என்னைக் கட்டிக்கோப்பா. நான் உன் மேல விழுந்து அமுக்குறேனே, உனக்கு வெய்ட்டா சிரமம் குடுக்கறேனா? ஒண்ணுமே சொல்ல மாட்டிங்றேப்பா நீ! இந்த குண்டி கூட ஏன்டா பழகுனோம்னு தோணுதா? எங்கே என் கண்ணைப் பார்த்துச் சொல்லு. என்னைப் பிடிச்சிருக்கா! பிடிக்கலன்னாலும் எனக்காகப் பொய்யாச்சும் சொல்லுப்பா… ப்ளீஸ்!’’ என்று பிலோமி கீச்சுக் குரலில் கேட்கும்போது “ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று தழுவிக் கொள்வான். அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு, ‘‘எனக்குப் போதும். நான் செத்துடறேன் இன்னிக்கு” என்பாள். அவனோ தலையில் குட்டுவான். திடீரென “ஸ்ஸ்” என தலை தூக்கி, “நான் நிஜமாலுமே செத்துட்டா என்னப்பா பண்ணுவே? அழுவியா?” என்பவளைப் பேச விடாமல் உதடு கடித்து சப்புவான். கலவிக்குப் பிறகு ஜான்சனின் முகம் சாந்தமாய் இருப்பது கண்டு பயமேதும் இல்லாமல் அவன் நெற்றியில் முத்தம் வைப்பாள் பிலோமி டீச்சர்.

காமத்தின் சக்திதான் அன்பாக மலருகிறது. ஆனால் காமத்திற்கு எதிராக எல்லோருமே விரோதம் பாராட்டுகிறார்கள். காமத்தால்தான் எல்லோருமே பிறந்திருக்கிறார்கள். காமம்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக கடவுளே ஏற்படுத்தியது. கடவுளே பாவமாகக் கருதாத ஒரு செயலைப் பாவச்செயல் என்று எல்லோருமே சொல்கிறார்கள். சீ, அசிங்கம் என்று ஒதுங்குபவர்களே கூட அதே சீ அசிங்கத்தில் தான் முக்குளிக்கிறார்கள்.

ஒரு பெண் உண்மையாக ஒருவனை விரும்பினால் அவளிடம் எந்த ரகசியமும் இருக்காது. எல்லாவற்றையும் அவனோடு பகிர்ந்திருப்பாள். அப்போது அவளது இதயம் சுத்தமாகத் திறந்திருக்கும். அவள் உடலும் அவனுக்காக எந்த நேரமும் தயாராக இருக்கும். அவன் எங்கு கூப்பிட்டாலும் உடன் செல்லத் தயாராய் இருப்பாள்.

பிலோமி அறைக்குள் கட்டிலில் கிடந்தாள். பேருந்து பயண அலுப்பு அவளைத் தூக்கத்திற்கு இழுத்து விடும் போல் இருந்தது. ஜான்சன் இவளை அழைத்துப் பேசி ஒரு மணிநேரத்திற்கும் மேலாகி இருந்தது. அவன் கூப்பிடுகையில் கொளப்பலூர் அருகே இவள் வந்த பேருந்து பின்வீல் காற்றுக் குறைந்து போனதால் நின்று போயிருந்தது. இவளும் வேறு பேருந்து ஏறிவிட்டதாகவும் பத்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் காத்திருக்கும்படியும் சொன்னாள். இவள் வந்தபோது கோபி நிறுத்தத்தில் நுழைந்து நின்றபோது இறங்கி அவனைத் தேடியவள் வழக்கமான இடத்தில் அவன் இல்லாதது கண்டு வேதனையானாள். இருந்தும் அவனது எண்ணிற்கு அழைக்கையில் அது சுவிட்ச் ஆஃப் என்றது. ‘விளையாடுகிறானா? அப்படி ஆளும் இல்லையே அவன்.’ அதிகம் குழப்பிக் கொள்ளாமல் வழக்கமான லாட்ஜில் அறை எடுத்து ரூமிற்குள் வந்ததும் குளியல் ஒன்றைப் போட்டு, கொண்டு வந்திருந்த நைட்டியை அணிந்து கொண்டாள் மீண்டும் அவன் எண்ணிற்கு முயற்சித்து சோர்ந்து கட்டிலில் விழுந்தாள். இந்த ஞாயிறு தனக்கு சரியில்லாத ஞாயிறோ? வந்த பேருந்து பாதியில் நிற்கிறது. அழைத்தவன் செல் அணைந்து கிடக்கிறது. பிலோமி அரைத்தூக்கத்தில் இருந்தபோது அவளது செல்போன் அழைத்தது. “உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” ஜான்சன்தான். “தடியா, சுவிட்ச் ஆப் பண்ணிட்டு விளையாடறியா? உன்னைக் கொன்னுடுவேன்” என்றாள். “பிலோமி, ரூம் நெம்பர் சொல்லு” என்றான். ஐந்து நிமிடத்தில் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டதும் அதிர்ந்தாள்.

“ஏண்டா? எப்படிடா ஆச்சு? ஐயோ யேசுவே” உதடு பிதுங்க எழுந்தோடிப் போய் அவன் வலது கையில் தென்பட்ட காயக் கட்டை நடுங்கும் விரல்களால் பிடித்து வீறிட்டாள். தலையில் இருந்த கட்டையும் பார்த்தவள், “எப்படிடா? ஏன்டா சுவிட்ச் ஆப் பண்ணே?” கட்டிக் கொண்டு அழுதாள். ஜான்சன் அவளின் அழுகையையும், அன்பையும் கண்டு பயந்தான். இடதுகையால் விலக்கிவிட முயன்று தோற்றான்.

“சின்ன ஏக்ஸிடெண்ட்தான். காயம் பெரிசில்ல பிலோமி. டாக்டர்தான் மருந்து வெச்சு வெள்ளைத் துணி சுத்தி பெரிய காயம் மாதிரி பண்ணிட்டாரு” என்றான். “அப்படி என்ன அவசரம் உனக்கு? எங்க போய் விழுந்தே?” பிடியை விட்டவள் பட்டு பட்டென இவன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து மீண்டும் கட்டிக் கொண்டாள். “நாய், பைக் ஏறிட்டா பேய் மாதிரி ஓட்டாதேடா ஓட்டாதேடான்னு சொன்னல்ல! பெருசா ஆயிருந்தா? நெனச்சுப் பார்டா! நீ என்னெ சாவடிக்கிறீடா!” அழுதாள்.

பிலோமியின் அழுகையில் இருந்த தூய காதலை தரிசித்தவன் வெட்கித்தான். தன் மீதே வெறுப்படைந்தான். தான் மனிதனே அல்ல என்றும் யோசித்தான். இளமை வேகத்துக்கு வந்து கிட்டிய தங்க முட்டையிடும் வாத்து என்றுதான் இதுவரை ஜான்சன் அவளோடு பழக்கமாயிருந்தான். இது வேறு என்று இந்த அழுகை அவனுக்கு உணர்த்திற்று. வண்டி ஒன்று எடுக்கணும் என்று சொன்னபோதே கையில் இருபதாயிரம் கொடுத்து டியூ கட்டிக்கலாம் என்று பிலோமி சொன்னபோது கூட அவளின் ஆழமான பிரியம் அவனுக்குத் தெரியவில்லை. ‘அப்படி என்ன அதிசயம் பிலோமி நான்? நான் ஒன்றுமேயில்லை. எல்லோரையும் போலத்தான் பசிக்கும்போது சாப்பிடுகிறேன், தூக்கம் வருகையில் தூங்குகிறேன். பிலோமி பிலோமி, ப்ளீஸ்! இத்தனை அன்பை என் மீது கொட்டவேண்டாம்.’

பிலோமி அமைதியான பிறகு இவனைக் கூட்டிப் போய் படுக்கையில் அமர வைத்தாள். இவனோடு ஒட்டி அமர்ந்து, “நீயும் அழுதியாப்பா. சாரி, உன்னை அடிச்சுட்டேன். உனக்கு எதாச்சும் ஒன்னுன்னா நான் என்ன ஆவேன்? பயந்துட்டேன். சாரி, என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு” என்றாள். இவன் ‘பிலோமி’ என்று முனகினான். “என்னப்பா முனகுறே? வலியா இருக்கா?” என்றாள். ‘இல்லை’ என தலையாட்டினான். “பின்ன என்னவாம் பிலோமிக்கு?” என்றாள். “இத்தனை பிரியம் என் மேல வேண்டாம் பிலோமி. என்னால தாங்க முடியல. அழுகை வருது” என்றான். “ச்சி லூசு. அதுக்கெல்லாம் என்ன அளவு வச்சுட்டா இருப்பாங்க!” என்றவள் உள்ளாடை அணியாத தன் மார்புகள் மீது அவன் முகத்தை இழுத்து வைத்து அழுத்திக் கொண்டாள். அவன் மெலிதாக விசும்பினான்.

காதல் என்பது பாசம் வைப்பதல்ல. அது உணர்ச்சிவசப்படுதலும் அல்ல. உங்கள் தோழி ஏதோ ஒரு விதத்தில் உங்களை முழுமையடையச் செய்தாள் என்ற ஆழமான புரிதலே காதல்! சற்று நேரத்திற்கெல்லாம் பிலோமி கூடலுக்கான வாசத்தை தன் உடலில் இருந்து பரப்ப ஆரம்பித்தாள். ஜான்சன் அந்த நறுமணத்தை நன்கு உணர்வான். அந்த வாசம் அவனைக் கிளர்ச்சியுறச் செய்யும். தன் கை பிலோமியின் உடலில் எந்த இடத்தில் பட்டாலும் முனகுவாள். அவள் முனகல் இவனை வா சீக்கிரம் வா! என்றே அழைக்கும். இருவரும் வெட்கங்களைத் துறப்பார்கள். உலகை மறந்து வேறொரு உலகினுள் பிரவேசிப்பார்கள். அப்படித்தான் புதிய உலகினுள் நுழைந்து பார்த்துவிட்டுத் திரும்பவும் களைப்பாய் கிடந்தார்கள். “சிரமமா இருந்துச்சா?” என்றாள். அவன் உதடு பிதுக்கினான். “வலி போயிடுச்சா? இருந்துச்சா?” என்றாள். பிரிந்து எழுந்தவள் அவன் செல்போனைக் கையில் எடுத்துக் கொண்டாள். “நல்ல நல்ல பாட்டு வச்சிருப்பியே. ப்ளூடூத் ஆன் பண்ணி இன்னைக்கு என் செட்டுல இருபது பாட்டாச்சும் ஏத்தி விடறே!’’ என்றவள் தன் ஹெட்போனை எடுத்து காதுக்கு வைத்து செட்டில் பின்னை குத்திக் கொண்டாள். மை மியூசிக் சென்று பாடல் ஆன் செய்தாள். தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தேவனே. ‘‘சூப்பர் பாட்டுப்பா’’ என்றாள் பிலோமி. இவளின் கால்களுக்கருகில் அமர்ந்து கால் விரல்களில் நெட்டை உருவிக் கொண்டிருந்தவன் ‘என்ன பாட்டு?’ என்று சைகையால் கேட்டான். சப்தமாய் காது கேட்காதவனுக்குச் சொல்வது போல ‘‘தேவனின் கோவில் மூடிய நேரம்’’ என்னோட செட்லயும் இந்த பாட்டு வேணும், என்றாள். ஒரு சந்தனக்காட்டுக்குள்ளே முழுச்சந்திரன் சாயயிலே இதும் வேணும் என்றாள். அவனோ இவள் தொடையில் இருக்கும் கருப்பு வடுக்களைத் தொட்டுக் காட்டி ‘என்ன?’ என்று சைகையால் கேட்டான் “உன் தலை!’’ என்றவள் அருகில் கிடந்த நைட்டியை எடுத்து இடுப்பில் இருந்து தொடை வரை போர்த்திக் கொண்டாள். அவன் முகம் வாடிப் போவதைக் கண்டவள், ‘எடுத்துக்கோ’ என்று அவனைப் போலவே சைகை செய்தாள். ‘மகிழும் பூவே எந்தன் மணிமுத்தே’ பாடலுடன் கூடவே முனகிக் கொண்டே அவள் வந்தபோது ரிங் வந்தது. ‘தன்னந்தனி காட்டுக்குள்ளே. . . ஜோடி நாம வீட்டுக்குள்ளே’ பீட்டர் என்று பெயர் வந்தது! அவனிடம் கொடுக்கலாமா என்று நினைத்தவள் அவன் தன் வயிற்றின் மீது முகம் வைத்து சுகமாய் கட்டிப் படுத்திருப்பது கண்டு அழைப்பை எடுத்தாள்.

“டேய் வக்காலோலி ஜான்சா . . . . இன்னுமாடா அந்த குண்டியப் போட்டு குத்தீட்டு கெடக்கே? நானும் கனகராஜனும் பஸ் ஸ்டாண்ட் டாஸ்மாக்குல நின்னுட்டு இருக்கோம். சீக்கிரம் வந்து எங்களுக்கு ஒரு ஆஃப் நெப்போலியன் வாங்கிக் குடுத்துட்டு நீ மகராசனாப் போயி குத்தீட்டு கெட அந்தக் குண்டிய. . . அவ பணங் குடுத்தாள்னா நைட்டு நீ மட்டும் தனியா உட்கார்ந்து ஏத்தீட்டுப் போயிடாதே. . . என்னடா பேச்சவே காணம்” என்றபோது இவளாகத் துண்டித்தாள்.

தலை சுக்கு நூறாக வெடித்தது போல இருந்தது பிலோமிக்கு! இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது! நடுச்சாலையில் தன்னை அம்மணமாக்கி ஜான்சன் எல்லோரும் பார்க்க முடுக்குவது போல இருந்தது! ஓடிய நதி திடீரென உறைந்து போய் நின்றது. குணப்படுத்த முடியாத காயம் ஒன்று தனக்கு நொடியில் ஏற்பட்டுப் போனதை உணர்ந்து அவனைத் தள்ளி விட்டு எழுந்தாள். அவளுக்கு அங்கிருப்பது தீயின் மீது நின்று கொண்டிருப்பது போலிருந்தது! தன் பாவாடை, ஜாக்கெட்டை எடுத்து அணிந்துகொண்டாள். இந்த தீப்பிடித்த பகுதியில் இருந்து தப்பிப் போகும் அவசரத்தில் சேலை அணிந்து கொண்டாள். தன் பேக்கினுள் நைட்டியை சுருட்டித் திணித்தாள். ‘‘என்ன அவசரம் பிலோமி’’ என்றெழுந்தவன் தன் செல்போனை பெட்டில் இருந்து எடுத்து பாக்கெட்டில் செருகிக் கொண்டான். ‘‘ஏதோ பயந்துபோன மாதிரி இருக்கே பிலோமி நீ” என்றான். “ஒண்ணுமில்லேடா நான் போறேன்” என்றாள். “நான் கொண்டு வந்து விடறேன். என்னாச்சு உனக்கு? லூசு மாதிரி பண்றே பிலோமி நீ. . .” அவன் பேசப் பேச அறைக்கதவை நீக்கி வெளியேறினாள் பிலோமி டீச்சர்.

‘ப்ளூடூத் வழியாக நல்ல பாடல்களை ஏற்றி விடடா’ என்றவள் இப்படி பேய் அடித்துவிட்டது போல ஓடுவானேன். ‘கிறுக்குப் புடிச்ச குண்டி’ என்று நினைத்தவன் நிதானமாய் அறையை விட்டு வெளியேறிப் படிகளில் இறங்கினான். ஒரு வேளை தன் பைக் நிற்குமிடத்தில் வருவேன் என்று நின்றிருக்கிறாளோ என்று வராந்தா தாண்டி வெளிவந்து பார்த்தான். பிலோமி இல்லை. இவன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். பஸ் ஸ்டாண்டினுள் நுழைந்தவன் பேக்கரி முன் வழக்கம் போல வண்டியை சைடு லாக் போட்டு நிறுத்தி விட்டு பிலோமியைத் தேடி ஜனக் கூட்டத்தில் நுழைந்தான். ஈரோடு செல்லும் ராணா பேருந்தின் படிகளில் பிலோமி ஏறுவது தெரிந்தது இவனுக்கு. ஜான்சன் அவசரமாய் ராணாவை நெருங்கினான். ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த பிலோமி முன்நெற்றியில் விழுந்த முடியைக் காதினோரம் விரல்களால் இழுத்து செருவிக் கொண்டு ஜன்னலோரம் நிற்கும் ஜான்சனைப் பார்த்தாள், “ப்ளீஸ் பிலோமி. அடுத்த பஸ்ல போய்க்கலாம் இறங்குடா… என்ன கோபம் உனக்கு” என்றான். “கோபமெல்லாம் இல்லடா. எனக்கு என் மேலதான் கோபம்” என்றாள்.

சமயம் பார்த்து ஜான்சனின் செல்போன் அலறியது. எடுத்து காதுக்குக் கொடுத்து ‘ஹலோ’ என்றான். “வந்துட்டியா இல்லியாடா? எவ்ளோ நேரம் டாஸ்மாக் கடை முன்னாடி நீ வருவே வருவேன்னு பார்த்திட்டு இருக்கிறது! அப்பலையா தான் வர்றேன், வரலைன்னு ஒரு வார்த்தை சொல்லாம கட் பண்ணிட்டே. இன்னுமாடா செஞ்சுட்டே இருக்கே அந்தக் குண்டிய?’’ என்றான் பீட்டர் போனில். “அப்பலையா ஒருக்கா பண்ணுனியா போன்?” என்றான் ஜான்சன். “ஆமாண்டா, பத்து நிமிசம் இருக்கும். . .” என்றான் பீட்டர். அதற்குள் பஸ் கிளம்புவது தெரிந்து போனை கட்செய்தான் ஜான்சன். பிலோமி இவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. ராணா பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறியது. பிலோமி தன் செல்போனை எடுத்து ஆஃப் செய்து பின் மூடியைக் கழற்றினாள். சிம் கார்டை வெளியெடுத்து ஜன்னல் வழி வெளியே வீசி எறிந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *