கனவுகள் மெய்ப்படும்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 133

சிவகங்கை சீமையின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருந்தான் கதிர். அவனது கையில் இருந்ததோ ஒரு பழைய மடிக்கணினி மட்டுமே. மனதில் இருந்ததோ ‘செயற்கை நுண்ணறிவு’ மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்கிற மிகப்பெரிய கனவு.
அடுக்குமாடி அலுவலகங்கள் அவனுக்குப் புதிது. பல நிறுவனங்களில் ஏறி இறங்கினான்.
“உன் ஐடியா நல்லா இருக்கு, ஆனா இதெல்லாம் கிராமத்துல வேலை செய்யுமா? பேசாம ஏதாவது ஐடி கம்பெனியில வேலைக்குப் போ” என்ற ஏளனப் பேச்சுகளே அவனுக்குப் பதிலாகக் கிடைத்தன.
மாலை நேரத்தில், மெரினா கடற்கரை மணலில் விரக்தியுடன் அமர்ந்திருந்தான்.
சுண்டல் விற்கும் பையன், அண்ணா… அண்ணா… சுண்டல் வாங்கிக்கோங்க அண்ணா என்று கெஞ்சினான். மனம் தாங்காமல், கதிர் பத்து ரூபாய்க்கு சுண்டல் வாங்கினான் . சுண்டலை சாப்பிட்டு முடித்து, அந்தப் பேப்பரை தூக்கி எரியும் முன், பிரித்துப் பார்த்தான். அதில் மகாகவி பாரதியாரின் வரிகள் அவன் கண்ணில் பட்டன:
”எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சங் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும்.”
வரிகள் அவனுக்குள் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தன. “நமது கனவை உலகம் நம்ப வேண்டும் என்றால், முதலில் அதைச் செயல்படுத்தி நிரூபிக்க வேண்டும்” என்று முடிவு செய்தான்.
தனது கிராமத்திற்குத் திரும்பினான். தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டான். மண்ணின் ஈரப்பதம், பூச்சிகளின் வருகை, நீர்ப்பாசனத் தேவை ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிடும் ஒரு செயலியை உருவாக்கினான். இரவு பகலாக உழைத்தான். சில நேரங்களில் தோல்விகள் வந்தன; மின்சாரம் இருக்காது, இணையம் கிடைக்காது. ஆனால், அவன் தளரவில்லை.
ஒரு வருடம் கழிந்தது. கதிரின் முயற்சியால் அந்த கிராமத்து விவசாயிகளின் விளைச்சல் 40% அதிகரித்தது. செய்தி ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டின. அன்று அவனை நிராகரித்த அதே நிறுவனங்கள், இன்று அவனது தொழில்நுட்பத்தை வாங்க வரிசையில் நின்றன.
பெரிய ஆளுமைகள் நிறைந்த ஒரு மேடையில் “சிறந்த இளம் கண்டுபிடிப்பாளர்” விருதைப் பெற்றுக்கொண்டு கதிர் பேசினான்:
”நண்பர்களே, கனவு காண்பது என்பது தூக்கத்தில் வருவதல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வது. உங்கள் இலட்சியத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த உலகமே ஒருநாள் உங்கள் பின்னால் வரும். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுங்கள். விடாமுயற்சி இருந்தால் நிச்சயம் உங்கள் கனவுகள் மெய்ப்படும்”.
கூட்டத்தில் பலத்த கரகோஷம்.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
