கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: தாய்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 5,550 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பாங்கில வேலை செஞ்சு என்ன பிரயோஜனம்? கிழிசல் நோட்டு கேவலம் இருபது நோட்டு, ரூபா அதை மாத்தத் துப்பில்லை. கேஷியர் வேலை வேற கெட்ட கேட்டுக்கு.”

பையில் துருத்திக் கொண்டிருந்த ‘அந்த’ ரூபாய் நோட்டைப் பார்த்ததும் வனஜா சொன்னது(I) நினைவில் தோன்றியது ரகுராமனுக்கு.

அன்று சந்தை நாள். உள்ளூர் மிராசுக்கள் சிலர் நோட்டுக் கற்றைகளை வாங்கிப் போக ஆளனுப்பும் நாள். ‘பரபர’ வென்று, ஒரு இருபது ரூபாய்க் கட்டில் அந்தக் கிழிசலை அட்ஜஸ்ட் பண்ணி விட்டான் ரகுராமன்.

பகலில் கணக்குகளை முடித்து விட்டு, சாப்பிடத் தயாரான போது, பாங்குக்குள் நுழையலாமா வேண்டாமா என்று தயங்கிய படியே தலையை மட்டும் நீட்டிப் பார்த்தான் ஒருவன்.

“என்னய்யா, என்ன வேணும்?” என்று ரகுராமன் கேட்டதும், பவ்யமாக அவனிடம் அந்த ஆள் நின்று, பைக்குள் கைவிட்டபடியே, கேட்டான்.

“எவனோ இந்த ரூபாயை வாரக்கூலி நோட்டுக் கட்டுல, என் முதலாளிக்குத் தந்திட்டான் போலிருக்கு சாமி! என் முதலாளி ‘நைஸா’ எனக்கு இதைத் தள்ளி விட்டுட்டாரு!” என்று பைக்குள் விட்ட கையை வெளியே எடுத்தான். சேர்ந்து வெளியே வந்தது சந்தேகமே இல்லை அந்த இருபது ரூபாய் நோட்டு.

“வீட்டுல சந்தைக்கு அரிசி வாங்கப் போய் நோட்டை நீட்டினாங்களாம் – அங்க, நோட்டு செல்லாதுன்னுப் புட்டாங்களாம். எவனோ என் வயித்தில அடிச்சிட்டானே சாமி” என்று கண்ணீர்க் கதை சொன்னான் அவன்.

என்ன பண்ணலாம் என்று ரகுராமன் யோசனையிலாழ்ந்த இடைவெளியில் கைக்குழந்தையுடன் அந்த ஆளின் மனைவியும் அங்கே வந்து சேர்ந்தாள். ரகுராமனுக்கு ரொம்பவும் சங்கடமாகப் போய்விட்டது. தன்னுடைய இருபது ரூபாய் ஒரு பாட்டாளியின் வயிற்றில் அடிக்க இயலுமா? நியாயமானதா?… யோசித்தான்.

“சாமி! ஒரு குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்தின புண்ணியம் ஐயா! வேற நோட்டுக் குடுத்தீங்கன்னா எங்க வீட்டுல இன்னிக்கு அடுப்பெரியும். இல்லைன்னா…”

அவன் சொல்ல வேண்டி யிருக்கவில்லை. ரகுராமனுக்கே புரிந்தது.

அவசரமாகக் கை சட்டைப் பையை நோக்கிச் சென்றது.

– தாய் வார இதழ், மார்ச் 1986.

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *