சிறைகளில் இருந்து




(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிலவு முளைத்தது.
தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் விழிகளைச் சுழலவிட்டான். மங்கிய இருளில் ஆங்காங்கே சிலர் படுத்திருந்தனர். சிறு துவாரத்தின்வழி வருகின்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகங்கள் சரியாகத் தெரியவில்லை.
இவன் நிமலன்… அவன் பார்த்திபன்… அந்த மூலையில் கிடப்பவன் திலகன். வந்த சில நாட்களுக்குள் பெயர்களை மட்டும் தெரிந்துவைத்திருக் கிறான். அவர்கள் உண்மையிலேயே குற்றம் செய்தவர்களா? சந்தேகத்தின் பேரில் கைதாகி இங்கு கொண்டுவரப்பட்டவர்கள்தானா?
விசாரிக்கும் துணிச்சல் இன்னும் வரவில்லை. பொலிஸ்காரர்களைப்பற் றிய பயம் அதிகரித்திருந்தது.
“எங்கட காலத்தில் ‘செகண்ட் ஷோ’ பார்த்திட்டு வரேக்க லைட் இல்லாட்டி, டபிள் வந்தால்… பிடிக்கிற பொலிசாரிட்ட ஐந்து ரூபாவை இழக்கிவிட்டால் போதும். சிலவேளை கோர்ட்டிலிருந்து ‘சமன்ஸ்’ வந்தாலும் ஏய்ப்புக்காட்டலாம்… இப்ப முடியாது. அப்பா யாரிடமோ சொல்லிக்கொண்டி ருந்தது ஞாபகம் வந்தது.
உண்மைதான். முற்றத்தில் சாய்மனைக்கதிரையில் சாய்ந்தபடி சுருட்டுக் குடிக்கிற தைரியம் அப்பாவுக்கு இல்லவே இல்லை. திறந்திருந்த தலை வாசலையும் மூடி அறையாக்கிவிட்டார்கள். வெளிவிறாந்தையில் சீலைத்த லைப்பை விரித்துத் தூங்கும் அம்மாவும் தங்கைகளுடன் அறைக்குள்ளேயே பாயை விரித்துப் படுக்கிறாள்.
நாய் குரைத்தால் கள்ளர் பயம் அல்லது ஆமி போகுது என விளக்கை அணைத்துவிடும் கொடூரம்… நோயாகவே மாறியிருந்தது.
கிராமத்து மக்கள் வீரம்மிக்கவர்கள் என்கிற நாட்கள் மலையேறிவிட்டது. பெருமூச்சு விட்டபடி எழுந்து அங்கும் இங்கும் நடந்தான்.
நேரம் என்ன இருக்கும்? கைதிகளாகிப்போனவர்களின் நேரம் சரியில்லா ததினால்தானே இங்கு அடைபட்டு இருக்கிறோம்.
மணிக்கூடு கட்டாத காலங்களில் ‘அண்ணை நேரம் என்ன? என்று சைக்கிளில் போபவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பதில் சொல்லாமல் போபவரின் சைக்கிளுக்குச் சந்தையில் வைத்து காற்றைத் திறந்துவிடலாம்.
குறும்புகளின் காலம் செத்துவிட்டது.
உடம்பு வலி எடுத்தது. ஊரில் என்றால் அம்மா நோ எண்ணெய் போட்டுவிடுவாள். பந்தடிக்கப்போய் விழுந்தெழும்பிக் காயப்பட்டு வந்தபோது வேப்பெண்ணெயைக் காய்ச்சி உடம்பெல்லாம் தடவிவிட்டாளே அம்மா. அக்கா திட்டுவாள்… ‘அண்ணையை பேசாதே’ என்று அக்காவை அதட்டும் தங்கை. பாசம் பொழிந்த நாட்கள்…
‘கண்டிப்புக்கு அப்பாதான்.’தங்கைகள் தவறு செய்தாலும் தண்டனை தனக்குத்தான் எதிர்பார்க்கலாம்.
“பொடியனுக்கு அடிச்சால் பொடிச்சிகள் தானாய் திருந்தும்.” அப்பாவின் வாதம். மறந்தும் அம்மாவிற்கு கை நீட்டியது கிடையாது. கண்டிப்புக்குக் குறைவில்லை. அவரின் ஒரு உறுமல் போதும்!
மூலையில் கிடந்தவன் புரண்டுகொண்டிருந்தான். அவனுக்கும் தூக்கம் வரவில்லையோ? அவனுக்கும் உடம்பு வலி கண்டிருக்குமோ? பசி வாட் டுமோ?? வீட்டு ஞாபகம் வந்து அரித்திருக்குமோ???
அவர்கள் செய்த தவறுதான் என்ன?
அரச பாஷையில் தமிழர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்… புலிகள்… தமிழர்கள் மனிதர்கள் அல்ல என்றுதானோ?
இன்றுடன் அவன் வந்து பதினான்கு நாட்கள் ஓடிவிட்டன. பசித்தது. ‘அம்மா இடியப்பமும் சொதியும் தருவா… இண்டைக்கு வியாழக்கிழமை. அம்மா அப்பம் சுடுவா? நாளைக்கு விரதம்… வாழை இலையில நாலைந்து கறிகளோட சாப்பிடலாம்.’ நினைக்க மூச்சு முட்டியது.
காய்ந்த பாண் புழுப்பிடித்திருக்கும்… புளித்து மணக்கிற பருப்புக்கறி… வயித்தைக் குமட்டும். மூத்திர நெடி… ஆஸ்மா நோயாளியான திலகன் காறித் துப்பும்… சுகாதார வாரம் நாட்டில் கொண்டாடப்படும் நாட்களில்கூட இங்கு சுகாதாரம் பேணப்படுவதில்லை.
இங்கு வந்தவர்களின் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. ஒன்றில் சுகாதார வசதியீனங்களினால் அல்லது அடித்தே கொன்றுவிடுவர். வெலிக் கடைச் சிறைத் தாக்குதலுக்குப் பிறகு… இங்கும் அந்தப் பயம் அதிகரித் துள்ளது. அந்த முறுக்கு மீசைக்காரன் சிறைக்காவலன் என்ற பேரில் நின்றான்.பார்ப்பதற்கு ரவுடிமாதிரித் தோற்றம் தந்தான். இவர்களிடம் அன்பை எதிர்பார்க்கமுடியுமா?
நாலு நாட்களுக்கு முன்னரும் பக்கத்து அறையில் ரவுடிகளினால் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்… பயம் மேலும் அதிகரித்தது. நாலைந்து ரவுடிகள்… சிவந்த விழிகளுடன்… கைகளில் இரும்புச் சங்கிலி, சுருள்வாள் தடிகளுடன் வந்து தாக்குவதாகக் கனவு வருகிறது. பகல் கனவு பலிக்காதாம்… இரவிலும் வருகிறதே.
கொழும்புக்கு வந்து ஏஜன்ஸியிடம் பாஸ்போட்டையும் பணத்தையும் கொடுத்துவிட்டு லொட்ஜில் வந்து தங்கினான். “அடுத்த கிழமை சிங்கப்பூர் போய் அங்கயிருந்து பிரான்ஸிற்கு போகலாம்.” ஏஜன்ஸி சொல்லியிருந்தான். பொலிஸ் பதிவுடன்தான் அங்கிருந்து எங்கும் உலாவ முடியும். முந்தியும் பொலிஸ் கைது செய்தபோது இருபத்தையாயிரம் கொடுத்துத்தான் வெளி யில் எடுத்தது ஞாபகம் வர நெஞ்சில் வாள் கொண்டு ஏதோ அறுபடுவது மாதிரி இருந்தது. தங்கச்சிக்கு எண்டு வைத்திருந்த காணியை அறாவி லைக்கு விற்று, வந்து பாஸ் எடுத்து, வவுனியாவில் தமிழ்க் குழுக்களிடமி ருந்து தப்பிக் கொழும்புக்கு வந்தால் தமிழ் பேசினால், தமிழன் என்றால்… வதைபடவேண்டிவரும் என்பது தெரிந்தது.
“அண்ணை இஞ்ச இருந்தால் எங்களையும் பிடிச்சுப்போவாங்கள்.” தங்கை கண்ணீருடன் நின்றாள்.
வயலுக்குள்ள உழுதுகொண்டிருந்த கணவனை ஆமி சுட்டுப் பிணமாகக் கொண்டு வந்து தலைவாசலுக்குள் கிடத்தி… அழுதுகுழறிக் கிரியைகள் முடித்து… “அக்காவிட்டை தாலியைக் கழற்றி வையுங்கோ… இந்த வெள்ளைப் பிடவையைக் கட்டிக்கொண்டு வாங்கோ” என்று ஐயர் சொல்ல, அக்காவுடன் நாம் அழுத அழுகை… செம்மணியில் எரித்துவிட்டு வருகை யில்… ஆமி வெருட்டியதுதான்… அந்தியட்டிக்கு முதல் அக்காவும் “தம்பி போடா…” என்று கலைத்தாள்.
அக்காவின் அழுகை நிரந்தரமானதா? அம்மா மட்டும் அழாமல் இருந் தாளா? ஒவ்வொரு சந்தியிலும் இருக்கிற ஆமி காம்ப்படியால தன் மகள் தப்பி, தப்பி வரவேணுமே… கிருஷாந்தி மாதிரி…. மடியில் நெருப்பைச் சுமந்து வாழுவதாக நினைத்தான்.
அன்றும் அப்படித்தான். இரவு ஒரு மணிக்கு வந்து கதவைத் தட்டி னார்கள். ஐ.டியுடன் கீழே வரட்டாம். பொலிஸ் வந்திருக்குது. ரூம் பையன் வந்து சொன்னான். உடல் பதறியது. இண்டைக்குச் சரி… உயிர் உடலிலிருந்து தப்பி ஓடி பதுங்கிக் கொள்ளப்பார்க்கிறதோ? உடல் குளிர்ந் தது பயத்தினால்.
பியசேன என்கிற பொலிஸ் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந்தார். ஆங் காங்கு மூலைக்கொருவராய் பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் நின்றிருந்தனர்.
கண்கள் இருட்டிவந்தது. “இண்டைக்குத் தொலைந்தோம். மனம் அடித் துக் கொண்டது. லொட்ஜின் மனேஜர் பவ்யமாகக் கைகட்டியபடி நின்றதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
வரிசையாக அந்த நடுச்சாமத்தில் நடத்தியே அருகிலிருந்த பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மறுநாள் வரை வயிற்றுக்கு ஒன்றமில்லை. வயிறு பிறாண்டியது. நா வறண்டது.
நாக்கினால் உதட்டை ஈரப்படுத்தியபடி இருந்தான். யாரோ கம்பிக் கதவூடே சோடாவைக் கொடுத்ததை உள்ளிருந்த ஒருவன் ‘ஸ்ரோ’வினால் உறிஞ்சினான். இவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்திருக்கவேண்டும்.
‘வேணுமே!’ அறையின் மூத்திர மணம் மூக்கைத் துளைத்து… குமட்டியது.
‘ம்’ என்று அருகே சென்று ஸ்ரோ மூலம் உறிஞ்சிக் குடித்தான். அவன் விழிகள் நன்றியுடன் நோக்கின.
கொன்ஸ்டபிள் மூலம் ஒரு லட்சம் தந்தால் விட்டுவிடுவதாகவும் இல்லை எனில் புலி என களுத்துறைக்கு அனுப்பிவிடப்போவதாக கெஞ்சல் மிரட்டலாக வந்தது.
கை வெறுமையெனக் கடித்தது.
ஐந்தாம் நாள் யாவரும் லட்சம் கொடுத்து வெளியேற இவன் மட்டும் புலி என குற்றம் சாட்டப்பட்டான்.
இடுப்பு வலிக்க, எழுந்து உட்கார்ந்தான். வெளியிலிருந்து ‘ஐயோ அம்மா’ என்று கூக்குரல் எழுந்து மடிந்தது… பல குரல்கள் ஆவேசத்துடன் பேசியதும் கேட்டது. சிங்களத்தில் பேசியதால் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை. யாரோ வதைபடுகிறார்கள் என்று புரிந்தது.
அப்பா சொல்லித்தந்ததிலிருந்து ‘தெமிலு பல்லா’ தெரிந்தது.
“கரியா, வேசிக்கே புத்தா… கொட்டியாதமாய்…” என்று கொழும்பில் நின்றபோது பிடிபட்டது தெரிந்தது. அவ்வளவுதான்.
சாப்பாட்டுத் தட்டை ஒருவன் எறிந்துவிட்டுப்போனான்.
“எங்கட வீட்டு நாய்க்குக்கூட பால் வார்ப்போம். அப்பா அடிக்கடி அதன் சட்டியை கழுவிவைப்பார்… பாவம் வாயில்லா ஜீவன் என்று செல்ல மாக வளர்த்தார். அம்மா சோறு வைப்பாள். நானும் என் பங்குக்கு திண்ட மிச்சச் சோற்றை வைப்பதுண்டு.’
இப்போது -வயிற்றைக் குமட்டியது. வெளியே எழுந்து மடிந்த குரல் மனதை உலுக்கியது. இறந்திருப்பானோ?.
அறையைத் துளாவினான்.
நேற்றிரவு இழுத்துப்போன ஆஸ்மா நோயாளியானவன் இன்னும் வர வில்லை. என்ன நடந்ததோ? மனது பதைபதைத்தது.
வெளி வெளிச்சம் உள்புகாதபடி அந்த அறை கட்டப்பட்டிருந்தது. அதனால் நேரமும் பிடிபடவில்லை. வெளியே இரவா நிலா என்பதும் தெரிய வாய்ப்பில்லை.
பத்து மணி இருக்குமோ? ஒவ்வொரு இடங்களிலிருந்தும் கைதாகிற தமிழர்கள் இப்படிச் சிறையில் வதைபடுவது தொடர்கிறது. பணம் உள் ளவர்கள் தப்பிக் கொள்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது. அதிர்ஷ்டமும் இருக்கவேண்டுமே.
வீட்டில் அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? அக்கா சந்தையில் மீன் வாங்கி வந்திருப்பாளா? தங்கச்சி டியூஷனுக்கு போயிருப்பாள். விபரம் புரியாத அக்காவின் சின்ன மகன் ஊமல்கொட்டை எறிந்து அல்லது இலுப்பைக்கொட்டை பொறுக்கி விளையாடுவான். மாமா அருகில் இல்லாதது மறந்திருப்பானோ?
யன்னல்களைத் திறந்துவிட்டால் காற்று வரும்தான். பக்கத்து வீட்டிலிருந்து காதுக்கினிய பாடல்கள் இசையுடன் தவழ்ந்து வரும். மரவள்ளித் தோட்டத்திற்கு இறைக்கும் மிஷின் சத்தமும்… கூடவே மரங்க ளுடனாக பக்கத்து வீட்டு ஆடுகள் தன் வளவுக்குள் வந்துவிட்ட கோபத்தில் தூஷணத்தில் பேசும் கனகுவின் குரலும், சீட்டுக்காசைத் தரவில்லை என்று கேற்றில் நின்று சத்தமிடும் பத்மாவதியின் குரலும்… அழுந்தி தேய்ந்து மறைகிறது.
நேற்று அழைத்துப் போனவனை இழுத்துவந்து எறிந்துவிட்டுப்போகிற பூட்ஸ் கால்கள் மீதான எரிச்சல் மெதுமெதுவாக அதிகரிக்கிறது. விழுந் தவனின் குரல் முனகலில் முடிகிறது. வதைபட்டு, வதைபட்டு சத்தமே வெளிவரவில்லை. ‘சத்தம் போடக்கூடாது’ என்று வெருட்டி இருப்பார்களோ? பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சுட்டிருப்பார்களோ? மண் அடைத்து இறுக் கிய எஸ்லோன் பைப்பால் காயம் வெளித் தெரியாமல் அடித்திருக்கலாம். சுருண்டு படுத்து உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“எனி என்ன வேணும்?’ இதுக்குத்தான் எங்கட அறைக்கு கைவைக்க முன்னமே ‘விசாரணை செய் அல்லது விடுதலை செய்’ எண்டு சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருப்போம் எண்டு கேட்டனான். ஏதோ என்ர சுயநலத்திற்காகக் கேட்ட மாதிரி ஒத்துழைப்புத் தரேல்லை. இப்ப எங்களிட்ட வந்திட்டான்…”
எல்லோரும் மௌனமாக நின்றிருந்தனர். “நீங்களோ நானோ புலிகளல்ல… தமிழர்கள்… ஒருவேளை நீங்கள் எந்த தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தவர் களாயுமிருக்கலாம். ஆனால் வதை வலி எல்லாம் ஒன்றுதானே! எங்களை நம்பியிருக்கிற அம்மா, அப்பா, தங்கை, அக்கா, உறவுகள்… ஊர்… உலகம்… குட்டிமணிக்கு…, இது போன்ற எத்தனை தமிழர்களுக்கு, பெயர் தெரியாத உறவுகளுக்கு கொடுமை சிறையில நடந்திருக்கும். வெளியிலை தெரியாது. எங்களுக்கு நல்ல படிப்பினை இது… வெளியிலை தெரியாது மௌனம் கலையவில்லை. சிந்தித்து சிந்தித்து மூளைதான் பிசகும். எதிராளியின்ர பலம் இறுகும்… நாங்கள் அடிபட்டு, உதைபட்டு, இரத்தம் கக்கி இறந்துபோகலாம்… பிறகும் இந்த அறை அப்பாவித் தமிழர்களை உள்வாங்கிக்கொண்டிருக்கும்… விமோசனம் கிடையாது.
“மறு கன்னத்தை காட்டு என்பதற்கு நாம் யேசுநாதர் இல்லை… மகாத் மாக்களுமல்ல… நாங்கள் எங்கள் குடும்பம் உறவு பிள்ளைகள் எண்டு இருக்கிறவர்கள். பட்டினி என்பதே தெரியாதவர்கள். பசித்தால் மரவள்ளிக் கிழங்காவது அவிச்சு சம்பலுடன் சாப்பிடலாம். வளவில் இருக்கிற பழங்களைச் சாப்பிடலாம்… மாறாக… இவங்கட பாணை, கறியை நினைத் தால் அருவருப்பாய்த்தான் வரும்.
வாய்க்கால் தண்ணியில், மழை வெள்ளத்தில் நனைஞ்சாலே சுகம்தான். பாருங்கோ குளிச்சு எத்தனை நாள்? கதிரையை மட்டும்தான் அரசியல்வாதி நம்புவான். மீட்பவர்களும் தலைமைப் பதவிக்குப் போட்டி… எங்கட சாவு எதையும் சாதிக்காது.”
பேசியவனின் குரல் கம்மியது. தாயை நினைத்திருக்கலாம். தன் கிராமத்து அவலங்களை நினைத்திருக்கலாம்.
“நீ யாழ்ப்பாணத்தான்… மட்டக்களப்பான்… நீ உயர்ந்த ஜாதி… நான் ஏழை… நீ தோட்டக்காட்டான்… எல்லாம் போய் அப்பாவித் தமிழ்க்கைதிகள் என்று வதைபடும் நிலைக்கு வந்துவிட்டதின் சோகம் இழையோடியிருக்கலாம்.
வெளியில் பூட்ஸ் கால்களின் சத்தம் அதிகரிக்கக் கேட்டது. யாரோ தலைவர் சிறைச்சாலையை பார்க்க வருகிறாராம்… காற்று கிசுகிசுத்தது.
நேற்று இவன்… இன்று நீ, நாளை நான்… இப்படி அடிபட்டு சிதைந்து செத்துப் போய்க்கொண்டிருப்போம்.’ காலம் மாறிக்கொண்டிருந்தது. வாள் என்பது மாறி துப்பாக்கி, ஏ.கே.47 என வந்து நிற்கிறது. மனிதரில்தான் மாற்றம் இல்லை.
சாப்பாட்டு மணி அடித்தது…
பசி வந்தால் பத்தும் மறந்துபோம். மணி அடித்தால் பசிக்கு சாவு மணியா? என்பது இங்குள்ள கேள்வி.
வதை முகாமில் வாழ்வதுதான் தலைவிதியா? நேரம் தெரியாது. காலம் புரியாது. பூட்ஸ் கால்களின் உதை… சிவக்கக் காய்ச்சிய இரும்பின் சூடு… தலைகீழாகத் தொங்கவிட்டு கீழே தீமூட்டி.. எரிகின்ற வெக்கையின் தகிப்பு…
விடுதலை என்பதே இல்லை எனில்… மரணம் என்பதுதான் இறுதி விடுதலையா?
கண்களில் கண்ணீர் உருண்டது. நேற்று அவன் இன்று நீ… நாளை நான்… மாறாக இன்று நான் எனில்… நினைக்கும்போதே நெஞ்சு வலித்தது. மரணம் அருகில் வந்து கதவைத் தட்டும். மீட்பார்கள் வந்து மீட்கமாட் டார்களா? ஏக்கமும் இருந்தது.
பட்டினி கிடக்காமல்… எந்த வலியும் புரியாமல், உங்கள் நிலம்… எங் கள் வீடு… எங்கள் உறவு… எங்கள் சுற்றாடல்… திருமணவிழா… இழவு வீடு… கலைவிழா… பத்திரிகைகள்… மக்களுடன் ஒன்றிய வாழ்வு… எல்லாம் போய்… இதுவே நிரந்தரமாகின்றதா? கைது செய்வதை நிறுத்து! விசாரணை செய்!! எதுவும் நினைத்தது நடப்பதில்லை.
‘ஒரு நேரமே பசி பொறுக்கமாட்டன்… எப்படி? அம்மா கவலைப்படுவாள். எப்படி உண்ணாவிரதம் இருப்பது? முடியுமா?”
மரணத்தை வலிந்து வரவேற்பதா? ஆயிரம் வினாக்கள் அவனுள்… உயிர் போவதற்கு வழிகளா இல்லை… அவர்கள் அடிக்கும்போது உயிர் பிரிந்தால்…?
தீர்மானித்துவிட்டான்… நிமிர்ந்து பார்த்தான்… இவனின் சம்மதத்திற்கு காத்திருந்தவனின் முகத்திலும் பூரிப்பு… தாடியைக் தடவிக்கொண்டான். “புலிகளல்ல நாம்… தமிழர்கள்…” விடுதலை கிடைக்குமோ தெரியாது. எனினும் எதிர்கால போராட்டத்திற்கு… ஒற்றுமைக்கு சிறு ஒத்துழைப்பு என நினைப்போமே.”
அனைவரின் முகத்திலும் சந்தோஷம் நிழலாடியது. கைகளை ஊன்றி எழுந்து கொண்டனர். சாப்பாட்டு மணி அடித்துக்கொண்டிருந்தது. இவர்களின் மௌனத்தால்… ஒருகணம் சிறைச்சாலை சிலிர்த்தது.
– கண்ணில் தெரியுது வானம், முதற் பதிப்பு: டிசம்பர் 2001, விடியல் பதிப்பகம், கோயம்பத்தூர்.
![]() |
எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின்…மேலும் படிக்க... |