சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
“இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. இந்த உலகத்திலே பணம் தான் முக்கியம். மற்றது எல்லாம் அப்புறம் தான். பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்டு நாம் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அது அது வாழ்க்கையை அது அது தான் சமாளிக்கணும். பறவைகளைப் பார். நம்மைப் போல கடைசி வரை பிள்ளைகளைப் பற்றிக் கவலைப் படுகிறதா?”
மிராசு செல்வரங்கம் கூறியதைக் கேட்ட சுந்தரம் “நீ என்ன தான் சொல்லு செல்வரங்கம், தனக்குன்னு வரும்பொழுதுதான் தெரியும் அதன் அர்த்தம். பிறருக்குப் போதனை செய்வது சுலபம்” என்றான்.
மேலே இருவரும் பேச முடியாதபடி டெலிபோன் கூப்பிட்டது.
அவசரமாக எழுந்து செல்வரங்கம் போனை எடுத்தார். மாப்பிள்ளை ஸ்ரீதரன் தான் தஞ்சையிலிருந்து பேசினான்.
“மாமா. நான் பிஸினஸ் விஷயமாக அவசரமாகக் கோயமுத்துhருக்குப் போக வேண்டியிருக்கு. சியாமளா தனியாக இருக்கப் பயப்படுவாள். ஆகையால் இரண்டு நாளைக்கு உங்க பெண்ணுக்குத் துணையா நீங்க வந்து இருந்தால் நல்லது. என்ன சொல்லுகிறீர்கள்?”
“இல்லே, மாப்பிள்ளை, என்னால் இன்னைக்கு வர முடியாது. நான் சொந்த பிஸினஸ் விஷயமாக இன்னைக்கு போகலைன்னா ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்டம் ஆகிவிடும். எனக்குப் பணம்தான் முக்கியம்.”
மேற் கொண்டு பேச இயலாத ஸ்ரீதரன் போனைக் கைகளால் மூடிக்கொண்டு விவரத்தை சியாமளாவிடம் சொன்னதும், கோபமுற்ற சியாமளா போனைத் தன் கையில் வாங்கி கொண்டு, “அப்பா, உங்களுக்குப் பெண்ணைவிடப் பணம்தான் பெரிது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் என் கணவருக்கு, உங்கள் மாப்பிள்ளைக்கு உங்களைப் பற்றித் தெரியாததனால் போன் பண்ணிவிட்டார். நீங்கள் உங்கள் பிஸினஸைப் பாருங்கள். பணம்தான் முக்கியம், பாசமல்ல,” என்று வெடு வெடுன்று பேசினாள். மகளின் கோபக் குரல் கேட்டு, செல்வரங்கத்துக்கு மனம் கசிந்தது.
“சரிம்மா, நான் இன்னைக்கே மாலை வரேன். ஒரு நிமிடம் போனை மாப்பிள்ளை கையில் கொடு” உத்தரவிட்டார் செல்வரங்கம்.
“மாப்பிள்ளை நீங்க கேட்ட போது பணம்தான் முக்கியமாகத் தெரிந்தது. ஏன்னா நீங்களும் வியாபாரி நானும் வியாபாரி இருவருமே தப்பா எடுத்துக்க மாட்டோம். ஆனால் சியாமளா பெண். பெண் கேட்டதும் பாசம் தான் என்னை வென்றது. என்னை மன்னிச்சிடுங்க. நான் இன்னைக்கே வரேன்.” போனை கீழே வைத்தார்.
சுந்தரம் அர்த்தத்தோடு புன்னகைத்தார்.
– 27-10-1983