முருகா!
கதையாசிரியர்: கடல்புத்திரன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 1,472

‘மயிலியப்புலக்குளம் பற்றிய நினைப்பு’ மனதில் வட்ட அலைகளை ஏற்படுத்த, ஏக்க மூச்சுக்கள் புகையாய் எழ அந்த செந்தாமரைக் கிராமம்…சித்திரமாக விரிகிறது. அவ்விடத்து வெற்றிக்கழகம், சட்ட கோப்புகளை வைத்துக் கொண்டு பல விசயங்களை சாதித்து வருகிறது, கோவில் வளவுக்குள் கலை நிகழ்ச்சிக்கான மேடை ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக உப அரசாங்க முறையிலான சிரமதானம் நடைபெற்றது, அந்த குளத்தில் சிறிதளவு கனமண்ணை வெட்டிய போது, செவ்வேலும் வேல்முருகு, பரமானந்தம்… அவன் என வகுப்பு தோழர்கள் பலருடன் கூடையில் மண்ணை ஒருத்தர்,மாறி ஒருத்தரிடம் கொடுத்து குளத்து அணையில் கொட்டியது நினைவுக்கு வந்தது. அலுவலகர்கள் வந்து வெட்டியதை பார்வையிட்டு அதற்கான தேனீர்ச்செலவை கொடுப்பர், அவ்வலுவலகத்தில் வேலை பார்க்கிற கிராமத்தைச் சேர்ந்த தவபாலண்ணரின் புத்தியில் உதித்த புத்திசாலித்தனம். தேனீர், வடை…போன்றவற்றை ஊர்க்காரர்களே வீடுகளிலிருந்து கொண்டு வந்து வழங்கினர். கிடைக்கிற பணத்துடன் வெளிநாட்டிலிருக்கிறவர்களும் அதற்கு நிதியளிக்க சம்மதித்திருந்தார்கள். கூட்டு முயற்சி இல்லாமல் இப்படியான திட்டங்கள் வெற்றி பெற முடியாது . கிராமத்தின் தலையாய கால்பந்துக்குழுவும் அவர்களுடையது தான்.
வந்ததிலிருந்து, இவன், அடிக்கடி இப்படியே கிராம நினைப்புகளில் கரைந்து போய் விடுகிறவன். ஈழவரசுக்கு எங்கேயிருந்து தான் ‘மதம் பிடித்தது போன்ற அந்த உன்மந்தம் பிடித்ததோ?’…, தமிழரின் வாழ்வைச் சிதைத்து சீரழித்துக் கொண்டே செல்கிறது. ‘பக்கத்திலிருக்கிறவன் வாழ்ந்தால் தானும் வாழ்வான்’ என்ற செவ்விந்தியரின் சிந்தனை எல்லாம் கிடையாது. ‘இனப்பகை’ என்பது பஞ்சம் பசியில் வீழ்ந்தாலும் போகாத வியாதி, மாறுவதற்குப் பதில் பெருகிக் கொண்டே போகிற ஒன்றாக. காந்தியின் அகிம்ஷை, புத்தரின் ஞானம், யேசுவின் நேசம், இந்துக்களின் ஆன்மீகம் எதிலுமே நம்பிக்கைகளை துடைத்து விடுகிற அறுந்த இவர்களின் அரசியலில் அகப்பட்டுக் கொண்டு விட்டோம். பாலஸ்தீனர்களை அழிக்கும் இஸ்ரேல் போல், கிரீக் இளைஞர்களைப் பெருமளவில் கொன்ற கிரீக் அரசைப் போல, ஈழத்திலும் கொன்ற…ஒரு மாற்றப்பட வேண்டிய அரசியலாகக் கிடக்கிறது.
உலகத்தில் கிரிக்கெட் மாட்ச் போல நாடுகளிலும் இனப்படுகொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. வெளிக்கு..இப்படி தெரிந்தாலும் பின்னணியில் சில பெரிய சக்திகள் இருப்பதும் தெரியாததல்ல. சோரம் போன கிழட்டு நாடு இது, இஸ்ரேல் போன்று…நிறுத்தப்படும் போல தோன்றவில்லை. தொடர்கதையாய் வேதனையை விதைக்கிறது. நடத்தியவர்களை வரும் ஆட்சியாளர் கெளரவம் குலைந்து விடும் போல பகிரங்கப்படுத்தாமல், தீர்வுகளை முன் வைத்தது,சீரமைப்பு செய்யாமல், அவர்தம் மேல் தூசி கூட படிய விடாது…கடந்து விடுகிறது. பழைய பெருஞ்சாலிகளின் சிலைகள் நகரமெங்கும். படையினர் அவற்றை வடக்கு, கிழக்கிலும் நிறுவி விட, இருக்கிற அழகான இடங்களுக்கும் தமிழ்ப்பெயர்களுக்கு சிங்களப்பெயர்களையும் இட்டு உளவியல் ரீதியிலும் சித்திரவதை புரிகிறது. புதிய ஆட்சியினர் சில நல்லாட்சி நிலவ விரும்புகிறது. ஒப்புக் கொள்கிறோம். ஆனால், பழையதைக் கிளறுவதால் செய்யக் கூடிய நல்லதையும் செய்ய முடியாமல் போய் விடுகிறது…என மாறுகண் கொள்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தவிர்க்க முடியாமல் சந்தேகங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. மாகாண (வரசு) ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தான் சிறந்த வழி. ஆனால், உள்ளூராட்சி தேர்த்தலின் போதே மாகாணவரசு தேர்த்தலையும் நடத்தி விடுவது செலவை அரைவாசியாக்கி விடும். ஆனால், நடத்த பணமில்லை என கையை விரிப்பது கடந்த ஆட்சியாளரைப் போலவே…கடத்தி விடுற உத்தி. நீதிமன்றத்தை மதியாது எழுந்த விகாரைக்கு, மடத்திற்கு….பேசித் தீர்க்கச் சொல்வது….எல்லாம் பள்ளமும், குழியுமாக கிடக்கிற வழமையானபாதையையே காட்டுகிறது. பேச்சு மட்டும் போதாது, செயலிலும் நடை போட வேண்டும். உணர்வார்களா?. இவர்களின் இந்திய எதிர்ப்புக் கொள்கை மறுதலையாக மலையக மக்களையே வருத்தி வருகிறது. தற்போதைய தலைவர், மலையக மக்களைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.’அவர் இதயபூர்வமாக பேசுகிறார்’ தெரிகிறது. ஆனால் கட்சி???
பல்கணியில் இருந்து கட்டடக்காடு…இல்லை கட்டடகூடுகளைப்பார்த்துக் கொண்டு இப்படி எதையோ நினைத்துக்கொண்டு நின்ற போது ”செவ்வேல், தெரியுமா செய்தி, உன்னுடன் படித்தவனாக இருக்க வேண்டும், வேல்முருகு இன்று காலை இறந்து விட்டான்…முகநூலில் பார்த்தேன்” என்று தம்பைய்யா அலைபேசியில் தெரிவித்தான். அதிர்ச்சியாய் இருந்தது. அவனும் முகநூலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறான். ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ‘வாட் அப்’ உடன் நிறுத்திக் கொண்டிருக்கிறான். அதனூடாக நண்பர் சிலர் முகநூல் விபரங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அகதியானவனின் வாழ்வில் தான் எத்தனை மிகுதியான குழப்பங்கள். பெல்கணியிலிருந்து வீதியை, கட்டடங்களை, மனிதர்களை, நாய்க்குட்டிகள் இழுத்துச் செல்லுபவர்களைப் பார்க்கிறான். மழைத் தூரல்களை யாருமே லட்சியம் செய்யவில்லை. இருண்டு பெருமழை வரும் அறிகுறியில்லை. தீடீரென வருமா, வராதா என்பதற்கு அவ்வளவு தான் மரியாதை. தூரத்தே இடி முழங்கி அடங்கிறது. இதயம் விம்மி அடங்கிறது. உள்ளே கிடக்கிறதை கை எழுதத் துடிக்கிறது. அழுகையை இறக்கி வைக்க வேற வழி இல்லையே . வாழ்க்கை இவ்வளவு தானா?.
‘முருகு பற்றி வட்ட, வட்ட நினைவுகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. உள்ளே சென்றவன் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொள்கிறான்.
சட்டம்பியார் கதிரேசுப்பிள்ளை தம் பெடியள்களுக்கெல்லாம் கதிர்முருகு, செம்முருகு, வேல்முருகு…என முருகுவில் காதல் கொண்டு பெயரை வைக்க, பெடிச்சிகளுக்கு கமலமணி, சிவமணி என… மனைவியின் சுந்தரமணி இல் மணியையும் சேர்த்து வைத்திருக்கிறார். குடும்பம் ஒரு கதம்பம். வீட்டிலே மூன்றாவது பையன் வேல்முருகு, செவ்வேலும் வீட்டில் மூன்றாவது பிள்ளை தான்.
செவ்வேல், வகுப்பிலே புதிதாய் நுழைந்த போது, ”வந்தான் வரத்தான்” என்று முதலில் வேல்முருகுவே முகமன் கூறி வரவேற்றான். பகிடியானவன். கண்ணில் ஒரு சிரிப்பு. ”இதற்கு என்ன அர்த்தம்?” என்று செவ்வேல் கேட்க ”இந்த கிராமத்தை அடியாகக் கொள்ளாதவர்களை சொல்லுறது” என்றான். இப்ப, வடக்கு, கிழக்குக்கு சிங்களவர்ளும்’வந்தான் வரத்தான்கள்’. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிற கதையாய் என்ன ஆட்டம் போடுறார்கள். ஆனால், அன்று இவர்களுக்கு கலவரம் நடைபெற்றிருப்பதையே தெரியாத, தொடர்ந்தும் நடைபெற இருப்பதை புரியாத பாலர்பருவம். அந்நேரம் 12 – 13 வயதுடையவர்களை வேற எப்படிச் சொல்வது?. செவ்வேலின் அம்மாவிற்கு ஆசிரியப் பணியில் மாற்றம் கிடைத்து கிராமத்துக்கு வருகிறார். கூடவே வருகிற அவர்களில் அவனும் தங்கைமாருமே அதே பள்ளிக்கூடத்திற்கு படிக்க வருகிறார்கள் .
செந்தாமரைக் கிராமபள்ளிக்கூடத்தின் முகப்பு கதவைத் திறந்தவுடன் விளையாட்டு மைதானம் பிறகே கட்டடங்கள். இரண்டு கட்டடங்கள் நேர்கோட்டில், நெசவுடன் கூடியது…கொஞ்சம் முன் தள்ளி, நெசவுக்குப் பின்னால் மேடை அமைத்து கலைவிழா நடத்தக் கூடிய நிலம். வேலியோரம் ஆண், பெண் பிரிவு கழிப்பிடம். வீதியோடு அண்மித்திருந்த முதலாவது நாற்சாரமுடையது. ஒரு நீளத்தில் அதிபரின் அறை, இரசாயன ஆய்வுகூடம், நூலகவறை ( பாவிப்பில் இருக்கவில்லை) என இருக்க, அடுத்த மூன்று பக்கங்கள் அரைச்சுவர்களுடன்….6 – 10…வரையிலான வகுப்புகள் பிரிப்புப் பலகையுடன் காணப்பட்டன. ஒவ்வொன்றும் 20 – 25 பேர்களை கொண்டவை. எல்லாத்திலும் அரைக்கரைவாசி பேர்கள் பெண்கள் . நடுவிலிருந்த மண்தரையில் ஒரிரண்டு செவ்வந்திச் செடிகள் சிலிர்த்து பூத்திருந்தன.
இக்கட்டத்திற்குப் பக்கத்தில் கிணறுடன் கூடிய சிறிய தோட்ட நிலம்.அடுத்ததாக மற்றைய கட்டடம் ஒரு பெரிய மடம் போல சுற்றிவர அரைச்சுவருடன் உள்ளே பிரிப்புகளுடன்..வகுப்புகள், ஒரு பக்கம் சிறிய மேடைக்கட்டமைப்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் அங்கே மாணவர் எல்லாரும் கூடி தேவாரம் திருவாசகம் பாடுறது, ஆசிரியர் எவரின் பேச்சுகளும் நிகழ்தேறுற அசெம்பிளி மடமாகவும் இருந்தது. அச்சமயல் பலகை தடுப்புகளை அகற்றி விடுவர். சரஸ்வதி பூஜை எல்லாம் அங்கேயே நடைபெற்றன. நாடகம், சங்கீதம் கலந்த பக்திப்பாடல்கள், நடனம் எல்லாம் கூட பூஜை காலத்தில் நடைபெறும். அடுத்தது முழுதுமாக யன்னல்களுடன் அடைத்த தாக முன் தள்ளி இருக்கிற கட்டடம்.அதில் நெசவுசாலை, பிறிம்பாக நீட்டிக்கட்டப்பட்ட சங்கீத வகுப்புறையையும் கொண்டது. பக்கத்தில் பெரிய அகண்ட நிழல் பரப்பும் பெரிய மரம், பழமரமில்லை…. ஒன்று நின்றது. அதன் கீழே வகுப்பு விடுற போது பெட்டைகள் விளையாடுறது எல்லாம்…கீசு மாச்சூ என ஒரே சத்தமாக இருக்கும். சிலவேளை ஆண்களும் கிளித்தட்டு அங்கே விளையாடுவார்கள். பின்னாடி பூண்டு பத்திப்போன கணிசமான வளவு. அத்துண்டை யாரோ ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு அன்பளிப்பு செய்ததாக சொல்லப்படுகிறது.
முருகுவிற்கு சுருளான முடி. அவன் வீட்டிலேயும் சிலருக்கு அப்படி சுருள் முடி. ஆசிரியர்கள் பெருந்தன்மையினராக இருந்தனர். எப்பவுமே முருகு கண்களில் சிரிப்பு தெரிய”தமிழா, தமிழா !, திமிழா,திமிழா…” என பாடுவான்.” டேய் !, நீ, நான் எல்லாம் ஒரு சாதியடா, ஆசிரியர் சாதியடா” என்பான் இடையிடையே. செவ்வேல் சாதி பற்றியே கேள்வி படாதவன். இங்கே வந்து தான் கேள்வி படுறான். அவனுக்கு விளங்கவில்லை தான். அவனுக்கு எல்லாரும் நண்பர்களே.
முருகுவின் தந்தையார் அவர்களுக்கு பாடம் எடுக்கவில்லை, தவிர அவனோட வாரப்பாடாகவே கதைப்பார். அங்கே நிகழ்கிற நாடகம், கலைகளை எல்லாம் அவரே தயாரித்து மாணவர்களைக் கொண்டு மேடை ஏற்றி விடுவார் . பாராளமன்ற உறுப்பினர்களும் வந்து பேச்சுக்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள். விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. ஒருமுறை மேடை அமைத்து வெளியாரும் பங்குபற்றிய பெரியளவிலான கலைவிழாவும் நடை பெற்றது. திரைப்படமாக வந்த ஞானஒளியை அவர்கள் நாடகமாக திறம்பட நடித்திருந்தனர். அப்ப தான் அங்கே இன்பமண்ணை தலைமையில் இலக்கியத்தில் ஈடுபாடுள்ள பெரிய செட் ஒன்றும் இருக்கிறது தெரிந்தது. அச்சமயம் மேல் வகுப்பினர் நடித்த’ குமணவள்ளல், சிபிச்சக்கரவர்த்தி’நாடகங்களும் மேடை ஏறின. அசத்தி இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கலைஞராக பக்கத்திலிருந்த பாரதி வாசிகசாலையிலும் கிளியண்ணையும் இருந்தார். பிறகு, அவர் வெகு விமர்சிகையாக பாரதிவிழாவை அங்கே நடத்தி இருக்கிறார். அவர் தமிழரசுக்கட்சியின் தொண்டரும் கூட. செந்தாமரையிலுள்ள பல குறிச்சிகளிலும் தொண்டர்கள் பலர் தம் தம்பகுதியில் எல்லாம் ஒளிவீசச் செய்து கொண்டிருந்தார்கள். விருப்பமான, ஆசிரியைகள் என….கதம்பமாகவே காலம் கரைந்தது. ஒரு ஆசிரியைக்கு கல்யாணம் நடந்தது. வகுப்பே அள்ளுப்பட்டு போயிருந்தது.
அப்படி பள்ளியும், அயலும், வீடு என மட்டுமே கிடந்த….வேறெதுமே தெரியாத பறவையாயே இருந்தான் . அவன் குறிச்சியிலிருந்த பிள்ளையார் கோவில் வளவிலிருந்த புளியம் மரத்தில் ஏறி விளையாடுறது, அவ்விடத்துப் பெடியளுடன் அவ்வளவில் விளையாடுவது என்று காலம் ஓடியது. அவ்விடத்தவருக்கு பெடியள் எல்லோருமே செல்லப்பிள்ளைகள். சைக்கிள் கடை வைத்திருப்பவர் ஒருவர் அம்மா,’ அண்ணருக்கு சைக்கிள் வாங்கிறது கஷ்டமாக இருக்கிறது’ என கூறியதை அறிந்து, சைக்கிள் ஒன்றை பொறுத்தி வந்து” டீச்சர், மாசம் மாசம் கொஞ்சம்,கொஞ்சமாக கொடுங்கள்” எனச் சொல்லி ஹீரோ சைக்கிள் ஒன்றைக் கொடுத்திருந்தார். வேலைக்காசை வாங்கவில்லை, தவிர அவருக்கு கிடைக்கும் கழிவு விலையில் வாங்கிய…பணத்தைமட்டுமே பெற்றுக் கொண்டார். அந்த செட்டியார் மடத்தை…மறக்க முடியாது.
பிறகு, அந்த சைக்கிளை, அண்ணர் பொதுசன நூலகத்தில், ஆமாம் !, சிங்களக்குண்டர்கள் எரித்த அதே நூலத்தில் தான் களவு கொடுத்தது ஒரு சோகக்கதை. அச்சமயம் சுதாராஜ் என்ற எழுத்தாளரும் பத்திரிகையில்’சைக்கிள்’ என்ற சிறுகதை ஒன்றை, அவருடைய சைக்கிள் களவு போனதை வைத்து சோகத்துடன் எழுதியிருந்தார். செவ்வேல், சைக்கிள் ஒன்றையும் பறி கொடுக்கவில்லை. தவிர, இப்பவும் கூட கனவில், அவனுடைய சைக்கிள் களவு போறது போன்ற நிகழ்வு… வந்து போய் கொண்டே இருக்கிறது. அன்றையிலிருந்து அவர் அவனுக்கும் பிடித்த எழுத்தாளராகியும் விட்டார். இனம் இனத்தோடு சேர்கிறது. ஒரு வருசத்திற்குப் பிறகே., அங்கே அடியாகக் கொண்டிருக்கிற சிலரும் அவர்களுக்கு தூரத்து உறவினர் என இருப்பது தெரிய வருகிறது. அதே போல இங்கிருப்பவர்களை மணமுடித்து வந்த சிங்களவர்களை, அவர்தம் சந்ததியினரை இவ்விடத்தைச் சேர்ந்தவரே என துணிந்து கூறலாம். வலோத்காரமாக வந்தவர்கள்,குடியேற்றப்பட்டவர்கள்… இல்லை.
ஒரு வருசம் போக. அதே கிராமத்தில் இன்னொரு பகுதியிலிருந்த பாலாமடத்தடிக்கு குடியிருப்பு மாறிய பிறகு அங்கே அடியாகக் கொண்டிருக்கிற சிலரும் மணம் முடித்தலின் மூலம் படரும் விதத்தில் அவர்களுக்கு தூரத்து உறவினராக இருப்பது தெரிய வருகிறது. அதே போல இங்கிருப்பவர்களை மணமுடித்து வந்த சிங்களவர்களையும், அவர்தம் சந்ததியினரையும் இவ்விடத்தைச் சேர்ந்தவர் என துணிந்து கூறலாம் போல தோன்றுகிறது.ஆனால், தமிழர் கிடைக்க வேண்டிய நியமனங்களுக்கு பதிலாக வலோத்காரமாக நியமிக்கப்பட்டு வந்தவர்களை, குடியேற்றப்பட்டவர்களை… அப்படி கூற முடியாது.
உயர்வகுப்பிற்கு படிக்க செல்வதற்கு முதல் ஒரு கால இடைவெளி ஏற்பட்டது. அச்சமயத்தில் தான் முருகு மழைக்காலத்தில் வயல்க்கேணிகளில், கிணறு போல நீள அகலத்தில் கூடிய நீர்த்தேக்கங்கள் எல்லாம் கட்டப்படிருக்கின்றன, நீச்சல் அடிக்கப் போறது… இருக்கிறது என்பதை அறிமுகப்படுத்தினான். செவ்வேல்’ தத்து நீச்சல்காரன்’, அது அவனுக்கே தெரியாது. தலையை மேலே எடுக்காது நீந்துவான் . முன்னர் இருந்த இடத்தில் குளங்களில் மற்றவர்களைப் பார்த்து நீந்த ஆசைப்பட்டு தண்ணீரை துளாவியதில் ஏற்பட்டிருந்தது. வேல்முருகு”மிதக்கிறது சுலபமடா” என்று கூட்டிச் சென்றான். கடலுக்கு போற நடைமுறை வேற அங்கிருப்பதை இருப்பது தெரிந்திருந்ததாலே நீச்சலைப் பழக அவசரப்பட்டான். கடலுக்கு நீச்சல் தெரியாதவர்களை கூட்டிச் செல்ல மாட்டார்கள். முருகுவுக்கு..நீச்சல் பழக்கத் தெரியாது. ஆனால், தெரிந்த ஒருவரை ஏற்பாடு செய்து உதவினான். அவர் அவனுக்கு அண்ணர் முறை. அவர் தான்’அரைநீச்சல்’வருகிறது என்பதை தெரியப்படுத்தியவர். கீழே அமுக்கி கொண்டு போய், மேலே வரவைத்து என…பல தடவைகள் நீரைக் குடிக்க வைத்து திக்கு முக்காட வைத்தார். பிறகு தலை மேலே தானாக மேலே எழ நீச்சல்…சுலபமாக வந்தது. பிறகு, முருகுவோடு நிறைய தடவைகள் நீந்தி இருக்கிறான். அவனைப் போல பின்புறமாக கரணம் அடிக்க.. மட்டும் வரவேயில்லை. கண் இமை மடலையும் மடித்து வேறு விசித்திரம் காட்டுவான். இவன் முன்புறமாக ஒரு கரணம் அடிப்பான். கிராமத்தில் இரண்டு, மூன்று அடிப்பவர்கள் இருக்கிறார்கள்.
முந்தின வகுப்பில் அமைதியாக இருந்த ஒரு தோழர் அவனுடைய கடலாசையையும் நிறைவேற்றி வைத்தார். எவரையுமே குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். ராகவனிடம் இருந்து கிடைத்த அந்த எதிர்பாராத உதவி உங்களுக்கும் கூட எவரிடமிருந்தும் கிடைக்கலாம். அதற்கும் நேரம் வர வேண்டும். அவன் கிராமத்தின் தெற்குப்பகுதியிலிருந்து…வாரவன். சனி,ஞாயிறுகளில் தகப்பனுடன் சேர்ந்து சிலவேளை கடற்டொழிலுக்கும் செல்கிறவன்.”ஒரு இறாத்தல் பாணும், கொஞ்சம் பச்சை மிளகாய் வெங்காயம் கொண்டு வா. மிச்சத்தை நாம் பார்த்துக் கொள்கிறோம்” என்றான். சொன்ன இடத்தில், அவனோடு ஜெயந்தனும் நின்றான். அவனுடைய மச்சான். அவனும் அதே வகுப்பு தான். வள்ளத்தை அவிழ்த்து வந்தான். மூவருமாக களங்கண்ணி ஒன்றுக்கு போனார்கள். தடியை ஊன்றி கயிறை கட்டி வள்ளத்தை நிறுத்தினான். ராகவனும், செவ்வேலும் வலைக்குள்ளே இறங்கினார்கள். ஆளை தாழ்க்கும் கடல் . ஆழத்திற்குச் செல்ல எப்படி மீன். நண்டைப் பிடிக்கிறதென காட்டினான். ஜெயந்தன் அவற்றை ராகவனிடம் வாங்கி வள்ளத்திற்குள் போட்டான். களங்கண்ணிக்கு வெளியே வந்து கொஞ்ச நேரம் நீந்திகளித்தார்கள். கரையிலிருந்த கூடாரம் போன்ற வாடிக்குச் சென்று, மீன் பிடிக்க வாரவர்களின் தங்கிமடம். அடுப்பு, விறகு, சுள்ளி…எல்லாம் கிடந்தன. பானை சட்டி, சாப்பிடுற கோப்பை மேசை போன்ற மரச்சட்டத்தில் கவிழ்த்திருந்தன. கூரையில் தடவி தீப்பெட்டியை எடுத்து வந்தான். கொண்டு வந்ததை சுட்டு, உப்புச்சொதி வைத்து உறைப்புடன் உப்பால் காய்ந்த வாயில் சாப்பிட வெகு சுவையாக இருந்தது.”இந்த கிராமத்துக் கடன்களை எல்லாம் செவ்வேல் எப்ப தீர்க்கப்போறானோ?”.
வசதியும் தொழில் வாய்ப்புமில்லாது கரையும் வாழ்வைக் குறித்து கழிவிரக்கப்படுறான். மற்றவர்கள் கிராமத்தை விட்டு சிதறல்களாகி யாழ் இந்துக்கல்லூரி,மத்தியக்கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி என படித்துக் கொண்டிருந்தாலும் அன்று எல்லோரும் கிராமத்திலே தான் இருந்தார்கள். அதனால்,தொடர்புகள் முற்றாக அறுபட்டு போயிருக்கவில்லை.
செவ்வேல் சிறு வயதிலிருந்தே வெளிவாரியாகவும் புத்தகங்களை வாசிக்கிறவன். 18வயசில் ஒரு வேலையும் (பகுதி) கிடைத்து படிக்கிறதும் இருந்தால் நல்லம் என யோசிப்பவன். அப்படியான ஒரு கனவுவாழ்க்கை, 1ம் மண்டலம், 2ம் மண்டலம், 3ம் மண்டல நாடுகள்…மண்ணாங்கட்டி, எங்கையும் கிடைக்கக் கூடிய ஒன்று தான். இன, மத…கண்றாவி ஊழல்கள் மட்டும் இல்லாது ஜனநாயகம்… மேலோங்கி இருக்குமென்றால் எட்டக் கூடிய தூரம் . முதலாவது அப்பன் நல்லாய் இருக்க வேண்டும்., அது மத்திய அரசு. மூளை போன்று புத்திசாலியாக இயங்கி வழி காட்ட வேண்டியது. பிள்ளைகளின் உரிமைகளில் (மாகாணங்களில் ) அதிகம் மூக்கை நுழைக்காத இங்கிதம் நிலவ வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர் சேர்ந்தாலே சக்தி ஒன்று பிறக்கிறது. குழு அமைப்பான படைக்கட்டமைப்புகள் நிறைய, அவற்றில் பிரமாண்டமான சக்தி கிடக்கிறது. அதன் கொள்கைகளில் இன, மத வெறிகள் சேர்ந்து விட்டால்…கெட்டசக்தியாகி விடுகிறது. மக்களுக்கு அது வெளிபடுற, வாய்ப்பளிக்கிற தன்மைகளால் ’எங்களுடைய புஜங்கள்’ என்ற பெருமிதத்தை ஏற்படுத்தாது விட்டால்’ஒரு அன்னியசக்தி’தான். மற்றும் வெளிநாட்டுடன் நன்மை பயக்கும் தொடர்புகளை பேணுவது அதன் முதன்மையான வேலை. அந்த நாட்டு உடலில்’மாகாணவரசு’ இதயம் போன்ற பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. சுயதிறனுடன் இயங்க விடவே வேண்டும். அடுத்தே உள்ளூராட்சி சபைகள். உடலில் கிடக்கிற கால், கை போன்றவை. ஆனால், ஈழமோ, இஸ்ரேலைப் போல (அரசியல்) ஊழல் களஞ்சியமாகி மெண்டலாகவே இருக்கிறது.
பிரீட்டீஸ் கல்வி முறையிலே ஏதோ, ஏதோ பிழைகள் கிடக்கிறது என்று அவனுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது . கிராமம், நகரம் என்ற வேறுபாட்டில் நகரம் விளையாட்டில் அட்வான்ஸாகவே இருந்தது. அவனுடைய கிராம வாழ்வில் அதன் அவசியம் தெரியாது அவன் துப்பரவாக ஈடுபட்டதே இல்லை என்ற நிலமை. நகரப்பள்ளியில், வகுப்பில் கூட படித்த பகிர், புதிசாய்ரோல் மொடலாக தெரிந்தான். கலா”மரதன் போட்டியிலே பங்கு பற்றன்” என்று கூறினான். சிவக்குமார்”என்னோடு மைதானத்திற்கு வந்து சேர்ந்து ஓடு.எல்லாம் வெல்லலாம் !” என்றான். அப்படி .இரண்டொரு தடவைகள் வட்டமடித்தான்.’ஏன்?, நகரத்திலிருக்கிற ஆச்சி வீட்டிற்கு கிராமத்திலிருந்து ஓடி வரக் கூடாது?’என்ற எண்ணம் தோன்றியது. அங்கே வந்து தான் அருகிலிருக்கிற பள்ளிக்கூடம் போறவன் . ஒருநாள், ஆச்சி வீட்டிலே புத்தகப்பையை வைத்து விட்டு..செயல்படுத்தினான். காலையிலே, அப்பர் வீதியில் நடை போறவர். அவர் எதிர்பட” என்ன உயர் வகுப்பிலே வந்து விளையாடுறே”என திட்டி இழுத்து வீட்டிற்கே கூட்டி வந்தார். அன்று மட்டம்.
இரண்டொரு மாசத்தில் அப்பர் இறந்து விட்டார். இப்ப, முழு சுதந்திரப்பிறவி.அவன் வீட்டிலிருந்து ஓடவில்லை.பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு ஓடிவந்தான். கடல்வெளி வீதியில் அப்படி ஓடி வருகிறது வெளியுலகை சிறிது பார்க்க வைத்தது. கால் போன போக்கிலே ஓடலாமா?…!.
அன்றைய பள்ளி விளையாட்டுப் போட்டியில் புத்துயிர்ப்புடன் மரதன் ஓடிய போது வழக்கமாக முதலாவதாக வருகிற அவனுடைய ரோல்மொடலுக்கு கால் தசைப் பிடிப்புக்குள்ளாகி இடையில் நின்று விட்டான். கிராமத்திலும் படித்த, அதே வகுப்பிலும் படித்த கதிர் ( குறுந்தூர வெகுவிரைவு ஓட்டக்காரன்) இடையில் சக்க்கிளிலே ஏறி அவனை” ஓடு, ஓடு” என விரட்டி கலாயித்தான். சிவம்” எப்படியும் ஓடி முடிக்க வேண்டும். அது முக்கியம்” என்று கூறியதை மனதில் வைத்து 6..வதாக வந்தான். பரீட்சையில் ஏற்பட்ட சறுக்கல் பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை. அம்மாவும் பழைய ஓட்டைச் சைக்கிளை வாங்க காசு தந்தார். சைக்கிள் ஓடும் தானே, அது போதும். பள்ளியை விட வெளிவாரியாக சனசமூகங்கள் வைக்கிற மரதன்களில் எல்லாம் ஈழநாடு பேப்பரில் பார்த்து,பார்த்து சுமார் 25, 30… வரையிலான மரதன்களையே ஓடி முடித்திருக்கிறான். ஒரு பெரிய திக்விஜயமே செய்திருக்கிறான். பலவற்றில் ஐந்து வரையில் பரிசோ பத்திரமோ வழங்கிவார்கள். அப்படி’ போன்விட்டா ரின், டோர்ச் லைட்..நிறைய பத்திரங்கள்’ என கிடைத்திருக்கின்றன. அதனாலே புன்னாலைக்கட்டுவன், மானிப்பாய், குருநகர், பாசையூர், அரியாலை, பருத்தித்துறை… என யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் தெரிய வந்தன. இல்லா விட்டால் வவுனியாவில் இருந்தும் வவுனியா அவ்வளவு தெரியாதது போல யாழ்ப்பாணமும் தெரியாமலே இருந்திருப்பான். நகரப்பெடியள் பலருக்கு கிராமமே தெரியாது.
மரதன், சைக்கிள் ஓட்டப்போட்டிகள் .நடத்துபவர்கள் ஊக்குவிக்கும் மனதினராக இருந்தனர். ஓடி முடிக்கிற அனைவருக்குமே ஜூஸ்கள் வழங்கினார் . ஓடாத போதிலும் கூட இவன் தெரியாத இடங்களுக்கும் சைக்கிளை விட்டு தெரிந்து கொள்ளத் தொடங்கினான். கீரிமலைக்கு கன தடவைகள் சென்றிருக்கிறான். ஒருமுறை கிராமத்து நண்பன் அவனின் அப்பாவும் இறந்ததால் சேர்ந்து வந்து,அவனையும் தர்ப்பை போட வைத்தான். இன்னொரு நண்பன் நல்லூரில் நேர்த்தி வைத்து உள்வீதியில் பிரதிட்டை எடுக்கிற போது இவனையும் எடுக்க வைத்தான். அவன் சோனகர் தெருப்பக்கமும் அடிக்கடி சைக்கிளை விட்டு திரிவான். அங்கே தபால் கட்டட தூண் போல..இருந்த பழஞ்சின்னங்கள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன. ஆச்சரியப்படுத்தியிருக்கிறன. இப்படியும் சில அனுபவங்கள்.79, 80 களில் ஆமிக்காம்கள் முளைக்கிற வரையில் மரதன் ஓட்டங்கள் எந்தவித தடையுமில்லாது நடந்தன. அரசபயங்கரவாதம் ( சட்டமும் அமுலாகி ) தலையெடுக்க…எல்லாமே நின்று போயின. யாழ்ப்பாணமும் களையிழந்து போனது.
காலனிக்கு முதல் தமிழ், சிங்கள அரசுகள் அடிபட்டுக் கொண்டிருந்தாலும் சுயத்தில் (கல்வி, வாழ்வியலில்) மேம்பட்டவர்களாக இருந்தார்கள். பிராமணர் போல புத்தபிக்குகள் ஆசிரியர்களாக விளங்கினர். காலனின் போது அவையெல்லாமே குழம்பிப் போயின . நல்வாழ்வு அமைய படிப்பு அவசியமானது எனக் கூறினாலும் அது இலகுவானதாகவும் இருக்க வேண்டும். ஒரு சீர் நகர்வு உடையதாக வேண்டும். தற்போதைய இனவெறி பிடித்த அரசியல்…படித்தவர்களையும் பையித்தியமாக்கி விட சிக்கலான சட்டங்களை ஏற்படுத்தி வைத்திருந்தன. காலனியரின் ஆட்சியை பிரதி எடுத்ததின் பலன், படித்தவர்களின் நிலமை மிக மிக மோசம். படித்துக் கொண்டேயிருப்பதும் வெறும் விரயக்காலமானது. நடிகர் ரஜனிகாந் கூறியபடி எட்டு, எட்டாக காலத்தை பிரிக்க முடியாது ஈழநிலமை குழம்புறது. இராமாயாணம், மகாபாரத்திலும் கூட பதினாறு வருசங்கள் தண்டனையை அனுபவிக்கனும் என்று இந்த எட்டு,எட்டு காலத்தையையே குழப்பி தள்ளியிருக்கிறார்கள். அங்கே வயசு எல்லையைக் கூட்டி கதை சொல்லி முடிக்கப்படுகிறது . நிஜத்தில் கடந்து போனது போனவையே.திரும்பி வராது. அதற்காக வேணுமென்றே நாடுகளில் முதலில் பயங்கரவாதச் சட்டமே அமுலாக்கப்படுகிறது. இங்கேயிருந்தே வதைமுகாம், கொலைகள், பயமுறுத்தல்கள் என அச்சப் பிராந்தியை அருந்த வைத்து…புதைகுழிகளை ஏற்படுத்தி இனவெறி ஆட்சி பட்டையைக் கிளப்புகிறது. பதிலடி கொடுக்க இவற்றின் அடிப்படைகளை தெரிந்து புரிந்து கைவைக்க வேண்டும். வல்லரசு சக்திகளை பரந்த நோக்கிலே சென்று வேறு சேதப்படுத்த வேண்டும். யானைக்கும் அடி சறுக்குவது போல, பாதிக்கப்பட்டவரிற்கு புல்லும் ஆயுதமாகவும் அமைந்தும் விடுகிறதை காலமும் சொல்லியே வருகிறது. அரசியலே வேணாம் என்றாலும் கூட இழுத்துக் கொண்டு போய் கொல்லும் நவீன ஆயுதங்களும் ஆட்சிகளும் முடிவுக்கு வர வேண்டும். நாடுகளுக்கு காலனி ஆட்சியிலிருந்து கிடைத்த அரைகுறை சுதந்திரம் போதாது.முழுமையாக சுதந்திரம் பெற வேண்டும். பாகிஸ்தானைப் போல ஈழத்தையும் ஐரோப்பியசக்திகள்கள் நலமடித்து தம் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றது. அகதியாய் செல்லும் மக்கள் அந்நாடுகளில் கம்யூனிச அரசியல் கட்சியை ஏற்படுத்தி அங்குள்ள நல்லவர்களையும் சேர்த்துக் கொண்டியங்கினால் மட்டுமே மாற்றங்கள் ஏற்படலாம் போலத் தோன்றுகிறது.
ஈழத்தில் தான், அரசியலில் எத்தனை அழுக்கென அழுக்கு?. சிங்களப் புரட்சிவாதிகளை மன்னித்து விடுவார்கள். தமிழ்ப் புரட்சிவாதிகளை மன்னிக்க மாட்டார்கள். ஜனநாயகத்தை துப்பரவாக கழுவி விட்டார்கள். தமிழ் இளைஞர்களுக்கு’ஏதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்தாலாவது உரிமைகளை வென்றெடுக்கலாம்’ என்ற மேலோட்ட எண்ணங்கள் அடிக்கடி வந்து மறையும் . விடுதலையில் ஒரு அட்சரமும் தெரியாத நிலைமை வேறு கால்களைக் கொளுவ வைக்கும். வேல்முருகு, செவ்வேல் நிலமையும் அதே தான்.
76 இலிருந்து 79 வரையில் உயர்வகுப்பு. இவர்களுடைய காலத்தில் பயங்கரவாதச்சட்டம் அமுலாக்கப்பட்டு பெரும்பாலும் தமிழருக்கெதிராகவே கைவரிசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்நேரம் இதைப்பற்றி எந்த விபரமும் தெரியாது. பிறகு, இவர்களுக்கு ‘எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விட வேண்டும்’ என்பதே இலக்கு. கல்வியில் ஊழல் நிலவியதால் வடபகுதியில் டியூசன் வகுப்புகள் கொள்ளை கணக்கில் பெருகிக் கிடந்திருந்தன. பிரபல டியூசன் வாத்தியார்’ பிறகு அவர்கள் பெறுகிற பணத்திற்கும் வரி கட்ட வேண்டும்’ என்ற ஒருசட்டத்தை அரசு கொண்டு வந்திருந்தது’ என்கிறார். பரீட்சைகள் மேல் ஒர் அலட்சியம் விழுந்தது . செவ்வேல் டியூசன் வகுப்பிற்கு போய் படிக்க விரும்பவில்லை. போகவும் இல்லை. பணம் கட்டக் கூடிய நிலையில் பலர் இருக்கவில்லை. அவன் நண்பர்களில் ஒருசிலர் சென்றிருந்தார்கள் . ஆனால், தேர்ச்சி எய்யவில்லை. அட்டமத்தில் சனி இருந்து வேலை காட்டி விடுகிறது. வேலை தேடல். அச்சமய நண்பன் குகா, அவனோட சேர்ந்து ஒரு வேலையிலாவது கொளுவி விடுவோமா? என தபால் ஓபிசில் கெசட்டைப் பார்ப்பதும் விண்ணப்பிப்பத்தலில் வாழ்க்கை வெறுத்துப் போனது. அலுவலகர்”தம்பிகளா, தொழில் கல்லூரியில் எதையாவது படிக்கப்பாருங்கள்” என்று ஆலோசனை கூறுவார். திரும்பவும் படிப்பதென்பது எவருக்குமே வெறுக்க வைப்பது. படிக்கிற படிப்பில் தொடர்ச்சி வேறு கிடையவே கிடையாது . செவ்வேல், விண்ணப்பித்து தொழிக்கல்லூரியிற்கு படிக்க சென்றான். குகா, வேல்முருகு போன்றோர் செல்லவில்லை.’வேலைக்கு ஒரு தகுதிப்பத்திரம் வேண்டுமே. குறுக்கு மறுக்காவே சிந்தனை அவனை கவ்வும். சக தோழர்கள் வெளிநாட்டுப் பரீட்சைகளை எடுக்க முயன்ற போது, இவன்’ டேய் பாருங்கடா, இங்கத்தைய படிப்பிலே வேலை எடுத்து நல்லாய் இருப்பேனடா’என்ற ஒரு குரல் அவனிடம் இருந்தது. அறியாமை இருள், மட்டுமல்ல நோய்ப்பிரச்சனைகளிலும் விலத்தி நிற்கும் வீருநிலை இருக்க வேண்டும். சமூகம் ஆங்கிலகல்வியில் சலவைக்குள்ளாகி சுயத்தை, அதன் பெறுமதியை அறியாதிருந்தது. ஈழவரசின் முட்டாள் தனமாக இனப்போக்கும் அதற்கு நெய் வார்த்தது. காலனியாட்சியை அப்படியே பிரதி எடுத்து புதிய எஜமானராக வல்லபம் காட்டியது. அனைத்து அடக்குமுறைகளையும் காலனிப்பிரிவே பின்னின்று…இனப்படுகொலை நிறைவேற்ற காய்களை நகர்த்தி வந்தது.வருகிறது. இவர்களிடமிருக்கிற விசக்கொடுக்குகளை பிடுங்கி எறியாதவரைக்கும் தமிழருக்கு விடிவில்லை. ஆனால், இதையெல்லாம் தெரியாத அறியாமையில் ஈழச்சமூகம் கிடக்கிறது.
‘சென்று, தொழில்கல்லூரியில் படிப்பில் தேர்ச்சி பெற்றும், தொழில்ப்பத்திரம் கிடைத்தும் வேலை கிடைக்கவில்லை. அது அவனை வருத்தியது. பொலிஸார், பயங்கரவாதச்சட்டத்தைப் பயன்படுத்தி, சந்தேகத்தின் பேரில்…என பலரைப் பிடித்து வதைப்படுத்தி குற்றப்பத்திரிகைகளை பொய்யாகத் தயாரித்து குற்றமாக ஒப்பேற்றி வைத்திருக்கிறார்கள். வரும் ஆட்சியாளர்கள்’நீதிமன்றத்தின் மூலம் குற்றம் நிரூப்பிக்கப்பட்டிருப்பதால் மன்னிபளித்து விடுதலை செய்ய முடியாது’ என கையை விரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள், தமிழர் இனமாக இருந்திருந்தால் இந்நேரம் விடுதலை செய்திருப்பார்கள். காலத்திற்கு காலம் இனவாதமே மேலோங்கியபடி வருக்கிறது. இதற்கிடையில்’வசந்தம், ஊழலற்ற ஆட்சி’ என்ற வெளிச்சங்கள். சிஸ்டம் படு பிழை. எண்ணெய் போடுங்களப்பா.
அரசியல் வெகு அலட்சியமாகவே நிலவி வருகிறது. எல்லாத்திற்குமே (வேலைகளுக்கும் )கொழும்பையே கையேந்தி எதிர்பார்க்க வேண்டியிருந்தது.அதைப்பயன் படுத்தி சிங்கள அலுவலளர்கள் ஊழல் மூலமாக கணிசமாக உழைத்துக் கொண்டிருந்தார்கள் . அரசே திட்டமிட்டு ஊழலை நிலவ வைத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் நிலவவில்லை என்றால், மாகாணவரசு தேர்த்தலை நடத்தாதிருந்தால்…இந்நிலமை தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகிறது. நிலத்தில் மட்டுமில்லை, எல்லாக் கோதாரிகளையும் தம்மவர்க்கே என தமிழரிடமிருந்து பறித்து கொடுக்கவே…கங்கணம் கட்டி நிற்கிற ஓர் இனவாத செவிட்டு அரசிடம் என்னத்தை கேட்பதாம்?.”தனிநாடு கேட்பவர்களை எல்லாம் பயங்கரவாதிகள் அவர்களுக்கு விடுதலை கிடையாது” என்று சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிற தொடர் ஆட்சியாளர்கள். அடியைப் போல…ஒன்றுமே உதவாது.’ ஒரு பலமான அடி’ வலிக்கிற போது மாற்றங்கள் ஏற்படும்’என சில இளைஞர்கள் குமுறிக் கொண்டேயிருக்கிறார்கள். அதனால் ஒரு செயற்கையான எரிமலைத்தேசமாக ஈழம் கிடக்கிறது. இயற்கையையே ஆராதிக்க தெரியா ஜென்மங்களிடம் அறத்தை எதிர்பார்க்க முடியாது. இதெல்லாம் அன்று அவனுக்கு மங்கலாகவே புலப்பட்டுக் கொண்டிருந்தது.
வேலை எடுக்க அலைந்தது வீண் விரயம் . குகா, செவ்வேல், முருகு வேலைவங்கியில் பதிந்தாலும் ஆசிரிய குடும்பத்தாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குகாவும், முருகுவும் மேற்க்கொண்டு படிக்க முயலவில்லை. கடைசியில், குகாவை, அவன் அக்கா’ வெளிநாட்டுக்கு அனுப்பினார். வேல்முருகு அப்பரின் ஏச்சுக்கணைகளால் வெகுவாக துவண்டு போய் இருந்தான். முருகுவும் அவனும் வெளியில் போன குகா- அக்காவின் கல்யாண வீட்டில் சந்தித்தார்கள். முடிந்த பிறகு, இருவரும் வீட்ட போக மனமில்லாது நீண்ட நேரம் பலதையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அலட்டிக் கொண்டேயிருந்தார்கள். அடுத்த கிழமை போல…முருகு வள்ளத்தில் மிதக்கிறான்.
எப்படி பார்த்தாலும்,’பயங்கரவாதச்சட்டம்’ இனப்பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டே எழுகிறது . அதை அகற்றாது தொடர்ந்து கொண்டு ஊழலற்ற ஆட்சி என்கிற எந்த ஆட்சியும் கறை படிந்ததாகவே இருக்கும்.
பொதுவாகவே, ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் போராட்டதிற்கும் வெகு தூரம். தவிர வீட்டிலே பலசகோதரங்கள் இருப்பர். மேலே, கீழே இருப்பவர் மாறி தேர்ச்சி பெறுகிற போது. பெற்றோரின் திட்டல்களும் அதிகரித்து விடும். அதனால், வீட்டை விட்டு பிள்ளைகள் ஓடுறதும் நடை பெறுகின்றன. அச்சமயம் புதிய சந்தை கட்டடத்தில் பகல் முழுதையும் திரிந்தே கழிக்க வந்திருக்கிற கணிசமான பெடியள் செட் அவ்வாறு வீட்டில் இருக்க முடியாது…வந்திருந்தவர்களே. அப்படி இருந்த சிலர்” நீயும் கடைசியில் வந்து விட்டாயா?” என்று இயக்கத்தில் சிரித்துக் கொண்டு முதலில் வரவேற்றார்கள். அவனுக்கு தெரிந்த பல முகங்கள் . இயக்கங்கள் பிரபலமாகிக் கொண்டிருந்தன. வேலை இல்லை.
வேல்முருகு சென்றது செவ்வேலை வெகுவாக குழப்பி விட்டது. அவனையும் வீட்டை விட்டு துரத்தியது எனலாம். அதே இயக்கத்தில் வள்ளம் ஏறும் எண்ணத்தில் சுழிபுரம் சென்றான் . இவர்களுக்கு கல்வியில் நிலவும் ஊழல்,வேலை வாய்ப்பில் நிலவும் ஊழல் பற்றியும் விபரமாகத் தெரியாது. சில்லு சிக்கலில்லாமல் அமைய வேண்டிய வாழ்வு இன அரக்கனால் கழுத்தை நெரிக்கும் நிலமை, அது இயல்பான வாழ்வோட்டத்தில் பாதிக்கும் பிரச்சனைகளில் கணிசமானவற்றை சமூகத்தாலும் ஓரளவு சமாளிக்க முடியும் தான், ஆனால், காலனியாட்சியிலாலும் சலவை செய்யப்பட்ட சிந்தனைகளும் அதை ஒட்டிய எதிர்பார்ப்புகளும் தடம் புறழ வைக்கிற போது விதியும், தன் வழியிலும் இழுத்துச் செல்கிறது. ஆமாம் காலனிகாலத்திலேயே…, அவன் அம்மா பிறந்தது….ஈழம் விடுதலை பெற்றது அவர்கள் அந்த கோதாரி பிடித்தவர்களின் ஆட்சியையும் நேரில் கண்டவர்கள், கிராமங்களில் இருக்கிற இவர்கள்காலத்தில் வெள்ளையர்களை கண்டிருக்கவில்லை என்றே கூறலாம்.இவர்களுக்கு தெரிந்ததெல்லாம்’கலவரம், கலவரம்’என இனவெறி பிடித்த அரசின் முகங்கள் தான். ஆனால். படிப்பு, வேலை..என கிடந்தவர்க்கு அரசியலும் தெரியாது. தமிழ் அரசியல் கட்சிகள் நடத்துற ஆர்ப்பார்ட்டங்களில் பங்கு பெற வேண்டுமா?என்று கூடத் தெரியாது. உயர்வகுப்பில் கால் வைத்தவர்களுக்கு கல்வி சறுக்கவே வேலை ஏதாவது எடுக்கிறதிலே கவனம் குவிந்திருந்தது. கடன் கொப்பியில் ஓடும் ஆசிரியச் ஜீவியம் அம்மாவிற்கு. முருகுவிற்கு ஆசிரியராக அப்பர் இருந்தாலும் நிலம் சிறிதளவு இருந்தது. இவர்களுக்கு துடுப்பில்லா வள்ளம். அவர்களுக்கு துடுப்பிருந்தது.ஆனால்,நிலமிருந்தால் என்ன?, வேலையில் இல்லை என்றால்…பிள்ளைகளிற்கு வாழ்வே மாயப் பிரச்சனை தான். அதிருஷ்டம் சிலர்க்கு வேலை செய்ய தப்பி விடுகிறார்கள். முருகு, செவ்வேலுக்கு அப்படி ஒன்று மருந்துக்கும் இல்லை.
எனவே தான் ராஜூ”நீயும் வருகிறாயா?” எனக்கேட்ட போது முறுகாமல் சம்மதித்திருக்கிறான், அவனோட நின்ற வவுனியாப்பக்கமிருந்து வந்திருந்த செல்வன்(தம்பி முறை) கலவர அதிர்வுகளை சமீபத்தில் கண்டிருந்தவன்”அண்ணே நானும் வரவா”என்று கேட்க இருவருக்குமே அதிர்ச்சி.”டேய், மாமிட முகத்திலே உயிருள்ள வரையில் முளிக்க முடியாதடா. உனக்கு வயசும் கூட போதாதே”என எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். கடைசியில் அவனும் சேர சென்றது கிராமத்திற்கு முதல் அதிர்ச்சி . அக்குடும்பங்களிற்கு பேரதிர்ச்சி. நட்பு காரணமாக இவனிலும் அதிர்வுகள் . இது நடந்தது தொடக்க வள்ள ஏற்றத்தின் போதல்ல. கடைசிக்கட்ட காலத்தில். செவேலும், அதே கிழமை,அதே இயக்கத்திற்கு…. வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.”இனிமேல் வீட்ட போக விரும்பேலே தோழரே” என்று கூறிய போது அவர்களும் வள்ளத்தில் ஏற்ற ஏழுமான முறையில் முயன்றும், அதிருஷ்டமும் இல்லையோ….தடைபட்டு, தடைப்பட்டே வந்தது. கனேடிய பழங்குடிகள்” இந்த பிரபஞ்சம் கனவுகளால் நிறைந்திருக்கிறது. மனிதர்கள் தெரிவதில்லை அவை தாம் தாம் பற்றிக் கொள்கிறது” என்கிறார்கள். அதுவும் ஒரு விதத்தில் அதிருஷ்டம் என்பது தெரியாது. அப்படி ஒரு மாசம் வரையில் சுழிபுரத்தில் வாழ்ந்தான். சுழிபுரத்தை இரவிலும், பகலிலும் பார்த்தான், அறிந்தான். இளவாளையும் அப்படிப் பார்த்தான். ஒரு காலத்தில் அங்கேயுள்ள கொன்வெண்டில் அவனுடைய பாட்டி படித்தவராம். முன்னோர் கால் பட்ட இடத்தையும் பார்த்து விட்டான். அவனுக்கு வள்ளம் தலை சாய்க்கவில்லை….கடைசியில் வள்ள ஏற்றமும் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில், கால் வைக்கணும் என்று’ உள்ளே அடித்துக் கொண்டு கிடந்த ஆசை’ நிறைவேறவில்லை. இப்படி போகா விட்டால், தமிழ் நாட்டிற்கு போகும் விதி, வாய்ப்பு வரப் போவதே இல்லை.”கடைசி வரையிற்கும், உனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை துளி கூட இருக்க மாட்டாது” என்று நெல்சன் மண்டேலா கூறுகிறார். இதை நினைத்து அழுவதா? . அந்நாளில்’அவனுக்கு எல்லாமே மறுக்கப்பட்டு வருகிறது’ என்ற உணர்வே மேலோங்கி இருந்தது. ஏதாவது நிறைவேறி இருந்தால் இவ்விரு கிராமங்களை… அறிந்திருக்கவே மாட்டான். இதே போல ஒரு நாள் விடுதலை அவர்களுக்கும் கிடைக்க இருக்கிறது. அன்று கெட்டு, அழுகிப்போன சக்திகள் எல்லாம் அவமானத்துடன் தலை கவிழ்த்து நிற்கவே போகிறது. உண்மை, சத்தியம், தர்மங்களை அடக்கி வைக்கவே முடியாது.
பின்னாட்களில், தொல்புர கோவிலில் பழைய சரித்திரக்கால மிச்சங்களை (எச்சங்களை) கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறான். திருவடி நிலை, பெரியபுலம்…எல்லாம் சைக்கிள் ஓடித் திரிந்திருக்கிறது. பிறகு தீவுப்பகுதியைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைத்தது எல்லாமே…வள்ளம் ஏறாததாலே கிடைத்த அனுபவங்கள். மரதனும், இயக்கமும் அவனை யாழ்ப்பாணம் முழுதையும்…குச்சுக்களையும், பட்டி, தொட்டிகளையும் பார்க்க வைத்திருக்கிறது . இவையெல்லாம் பெரியகொடுப்பனை இல்லையா !.” நீ…இங்கே இருப்பது தான் பெறுமதியானது என்பதை…புரிந்து கொள்வாய்” என்று அன்று தோழர் பொன்னம்பி கூறியது தான் எவ்வளவு உண்மை.
ரஸ்ய நாவல்களை வாசித்ததில் விடுதலைப் போராளிகளை நேரிலே சந்திக்க இயக்கத்தில் சேர்வது அவசியம் என்பதை மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தான். … இழுபட்டுக் கொண்டேயிருந்த’சேரல்’ வேல்முருகால்’ சாத்தியமாகியது. கிராமத்திலிருந்து இயக்கத்திற்குச் சென்றவர் என்றால் உயர்வகுப்பில் கால் வைத்த மூவர் வேல்முருகு, மற்றொருவர், அவன்…மட்டுமே தான். மற்றவர் எல்லாமே…கீழே இருந்தவர்களே. கிராமப்பொறுப்பாளராக சின்னண்ணை அவனை பிரேரிக்க பொறுப்பாளராகி விட்டருக்கிறான். அவன் கிராமப்பொறுப்பாளரான போது முதலில் உணர்ந்தது தலைமைக்கும் கிராமத்திற்குமிடையில் ஒரு தபால்காரனாக இருக்கிறதே அவனுடைய முதல்வேலை என்பதை.
தமிழ்நாட்டு உறவு தொப்புள் கொடி உறவு. ஈழவரசின் உறவு திரைந்து போன உறவு. எனவே தான் பிறகு நிகழ்ந்தேறிய காலக்கட்டதில், ஈழவரசு நிகழ்த்திய பலியெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்தியனாமியால் விளைந்த நாசம் ..தசம ஸ்தானத்து….பலியெடுப்பாக இருந்த போதிலும், அவை ஏற்படுத்தி விட்ட அதிர்வலையிலிருந்து விடுபட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.’ இனத்துவேஷம்’ அதிக திரையல் . பாதிப்பு கூடியது. இந்தியனாமியுடையது பிழைகள், திரையாதது ! குறைந்த பாதிப்பு. குறைந்ததை செப்பனிட்டுக் கொள்ள முடியும். குறையாததை…?? தொடர விடக்கூடாது. இந்தியா வளர்ந்து வரும் ஒரு வல்லரசாக இருக்கிற போது, தமிழ்நாட்டின் உணர்வுகளை கட்டாயம்…கவனத்தில் எடுத்திருக்கவே வேண்டும். ஐரோப்பிய நாடுகள் இன்னமும் கூட காலனிப்போக்கிலிருந்து விடுபடாத அரைக்காலனி நாடுகள் . ஆயுதங்களைக் கொடுத்து, அவற்றைக் கொட்டி எந்த மக்கள் அழிவதைப்பற்றியும் கவலைப் படாதவை. சிவப்பு ஓநாய்கள்…இவை தாம் பெரும் பிரச்சனை. நாடுகள், நகரங்களை முட்டாள்தனமாக அழிபட விடவேக் கூடாது.. குறிப்பாக அரசியல் நலன்கள் உறவுகளை சொந்த மக்களை காயப்படுத்துறதாக இருக்கக் கூடாது. தேர்த்தல்களில் தோற்கிற அரசியல் கட்சிகள் சக்திகள் தாம். அவற்றின் பலவீனங்களை எந்த புத்தர் வந்து திருத்தப் போறோரோ? .
இயக்கத்திற்கு இன்னொரு பெயரும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். வேல்முருகு, புனைபெயராக செவ்வேலின் பெயரை சுருக்கி’சேவல்’ என வைத்துக் கொள்கிறான். கிராமத்து தோழன்’ சலீம்’ என பெயர் வைத்திருக்கிறான். எனவே இவன்’ யேக்கப்’ என வைத்துக் கொள்கிறான். சைவப்பெயர் அயலவருக்கு எளிதாக ஞாபகத்தில் இருக்கும். ஆனால் சேவேலுக்கு தான் அரசியல் பற்றி சுத்தமாகத் தெரியாததே. விடுதலைப்போராட்டம் புத்தம் புதிசு. ரஸ்ய நாவல்கள் மூலமாக அறிந்ததோ எப்பன்… கீரைக் கணக்கு அறிவு. அவை ரஸ்ய நாட்டின் வரலாற்றையே கூறுகிறது. இங்கத்தைய… கிடையாது . ஈழ அரசு எல்லாத்துறைகளிலும் கை வைப்பதும் திணிப்புகள் செய்வதுமாக இருந்து வருகிறது. எது நிஜம் எதுபொய் எனத் தெரியாது மூழ்கி போய்க் கொண்டிருக்கிறோம் . தமிழர் உரிமையெல்லாமே அவர்களுக்கு பயங்கரவாதமாகத் தெரிகிறது. மறுதலையாக இவர்களுக்கு முழு ஆட்சியுமே பயங்கரவாதமாக பிடறியில் அறைகிறது. அவர்களிடம் ”பண்ணிப் பாருங்கள் பன்றிப் பயல்களே!” என்ற மாதிரியான தில்லான பேச்சுகள். அதிகாரம் சண்டித்தனம் புரிகிறது. ஒன்றைப் பார்த்தீர்கள சாதி உட்பட எல்லாமே எழுதப்பட்ட, எழுதப்படாத சட்ட விதிகளையே கொண்டிருக்கின்றன.’பேசுற போது” நான் திறம் நீ பிழை” என்ற மாதிரியே பினாத்துகிறது. வெளிப்பார்வையில் அதிகாரத்தில் இருப்பவரே உத்தமராகத் தெரிகிறார் .
மொழி மண்ணாங்கட்டி. அது இந்தியைப் போல ஆங்கிலத்தை போல திணிக்க வாய்ப்பு பார்த்துக் கொண்டிருக்கிறது. அம்மொழியில் பேசாமல் இந்த ஜென்மங்களால் தொடர்பு கொள்ளவே முடியாதா?.
எங்கே எத்தனை மொழி இருக்கின்றது என்பது முக்கியமில்லை. வரலாறை எங்கே இருந்து தொடங்குவது?பேச்சு, எழுத்துச்சுதந்திரம் இரண்டையும் பயங்கரவாதமாக தடை செய்தே இவை அரங்கேறுகின்றன. அதிகமான பத்திரிக்கையாளர்களை கொல்கிற நாடு இது. ஒளியில்லாது இருட்டுக்கடலில் கிளித்தட்டு கணக்கில் ஓடி தப்பி வருகிற தோணிகளிலே கடிதங்கள் வருகின்றன. பிரச்சனைகளில் சிக்குறவற்றில்…கடிதம் கடலில் எறியப்பட்டு விடுகிறது. செந்தாமரைக்கு வருபவை இவனிடமே வந்து சேரும். எந்த நேரத்தில் என்றாலும் உடனேயே கொண்டு சென்று சேர்த்து விடுவான். தடை எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்குமே தெரியாது. கடிதமே தோழர் உயிருடன் இருப்பதை நிறுபிக்கும் .பலவித குழப்ப நிலமைகள் கடந்து போயின. அச்சமயம் தான் பூஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அமைதி ஒப்பந்தம் எழுதப்படா விட்டால் இவர்களும் சாவைத் தழுவி இருப்பார்கள். விடுவிக்கப்பட்ட குட்டியன் இவன் தங்கி இருந்த லொட்ஜூக்கு தோழர்களைச் சந்திக்க வந்திருந்தான். அவர் முன்னாள் சங்கானைத் தலைவர். சுழிபுர சுற்றிவளைப்பில்….சென்றவர்.” எனக்கும் குட்டிமணி போல அவலச்சாவே, என நினைத்திருந்தேன்’ என்றார். இதுவெல்லாம் வெளியாருக்கு சொன்னாலும் புரியாது.
இந்தியனாமி இருந்த போதிலும் சகோதரக் கொலைகள் நடந்து கொண்டேயிருந்தன. பெரும்பாலும் கொழும்பில், யாழுக்கு வெளிப்பகுதியிலே தேவையில்லாச் சாவுகள். யார் கேட்பது?. பலி தீர்க்கும் முகமாய் இந்தியன் ஆமி நடத்தியவை ஒருபுறம், எந்த படையுமே தியாக சேவைப்புரிவதில்லை என்பதை தெரிய வைத்தது. அந்நேரத்திலே, கதிரேசுப்பிள்ளையின் உடல்நிலை மோசமான போது வேல்முருகு கிராமத்திற்கு வந்திருக்கிறான். கொள்ளி வைத்த கையோடு திரும்பி விட்டான். தங்கச்சியும் அம்மாவும் கிராமத்தை விட்டு விலகி யாழில்…இருந்தார்கள். செவ்வேல் கொழும்பில் இருந்தான், செவ்வேல்,சுமார் … இரண்டு வருடம் இருந்திருக்கிறான். கொழும்பே தெரியாதவன்…அவ்விடத்தையும் பார்த்து விட்டான். யாழில் கழுகின் அட்டகாசம். இங்கே சிங்களக் கிளர்ச்சி அமைப்பின் அட்டகாசம் நிலவின. பட்லந்த முகாம் கொடுமைகள் எல்லாம் நிறைவேறிய காலம். யாழ் அவலங்களுக்கு ஒருவர் இருந்தது போல இதற்கும் ஒருவர் இருந்தார். இவ்விரு அமைப்புகளுக்கும் தொடர்பு ஏற்பட்டு கழுகு இந்த ஒருவரை கொன்றிருக்கலாம் என அவனுக்கு தோன்றுகிறது. மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும் சிங்கள கிளர்ச்சி அமைப்பு தான் நம்மவர்களுக்கு துரோரணராக இருந்தது. இவ்விரு அமைப்புகளிற்கிடையிலும் அநுதாப அலைகளும் இருந்தன.’ கலவரங்களில் பங்கு பற்றாத சிங்கள இளைஞர்கள் இவ்வணியினர்’ என இவர்களை தமிழ்த்தரப்பு நம்புகிறது. ஒரு அரசாங்கம் தன் இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொல்கிறது. பிள்ளைகளுக்கிடையில் நேசம் எழுவது இயல்பு தானே!
பிறகு, புலப்பெயர்வு.’ வேல்முருகை சந்திப்பான் என்று நம்பவில்லை. அவனுக்கும் அயல் நாடு ஒன்றில் அகதியாக தங்க லொத்தரில் அனுமதி கிடைத்திருந்தது. இந்த நாட்டுக்கு அயல் நாடு தான். தொடக்கத்தில், ஒருமுறை வேல்முருகு இந்த புல நாட்டிற்கு, சமறியில் இருந்த சயந்தனிடம் வந்த போது……நீண்ட, நீண்ட வருசத்திற்குப் பிறகு சந்தித்தான். துண்டுபட்ட நட்பு பெரிதாக ஒட்டவில்லை. இருந்தால் என்ன,’ நட்பை விட பெரியது தோழன்’ என்ற புதிய பந்தம், நினைப்பு இருவர் மனதிலும் கிடக்கிறதே.’அகதி’ என்ற நிலை பலவித பாதிப்புக்களைக் கொண்டது. எதுவுமே நம்நாட்டை, கிராமத்தைப் போல வராது. இரண்டு நாடாக பிரியா விட்டாலும், குறிந்தபட்சம் சுயாட்சி மிக்க மாகாணங்களாகவாவது பிரிந்து நம் கால்களில் தங்கி நிற்கும் சக்தி மிக்கநிலை பிறக்காதா?. ஜனநாயகம் தான் சுதந்திர தாகம். இங்கே,’ஜனநாயகம் கிடைக்க மாட்டாது என்பது தான் நிதர்சனம்.’மதம்’ பிடித்த இனப்பிரிவுவாதம் ஒழியப் போவது என்று?.
தென்னாபிரிக்காவை விடுவித்த நெல்சன் மண்டேலாவின் பாதை தான் நமக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது. அவர் ஆங்கிலக்கல்விக் (பிரீட்டீஸ்) கொள்கையையும் எதிர்த்தார். இலங்கையிலும் தமிழ்க்கல்வி தமிழரிடமே கொடுக்கப் படவில்லை. ”இனவாதத்தை வெறுக்கிறேன். எங்கே இருந்து தோன்றினாலும் இனவாதம் காட்டுமிராண்டித்தனமானது” என்று முழங்கினார். அடக்குமுறையாளருக்கும், அடக்கப் படுறவர்களுக்கு மிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த உண்மையும், நல்லிணக்கப்பாடான ஆணைக்குழு (Truth and Reconciliation commission) அமைத்து பழிவாங்கலை தவிர்த்து அறிந்து மன்னித்து வாழ்வதே சிறந்த முறை” என வழியையும் கூறியிருக்கிறார்.
தற்போது அவனின் சா செய்தி வர, தமிழ்வின் தளத்தில் …அவனுடைய அறிவித்தலைப் பார்த்தான். அவனின் சிரிப்பு மாறவில்லை, அப்படியே இருக்கிறான். கடந்தவையை அப்படியே அவன் மீது வாரி இறைத்து விட்டிருக்கிறது. அவன் மீளவும் கனவுகளில் வாழ்ந்து விட்டு வந்திருக்கிறான்.
அகதியாய் உதிர்ந்து கொண்டிருப்பவர்களின் வேதனைகளை யார் தான் அறிவாரோ?தர்மம் மறுபடியும் வெல்லும்..
– மே 2025.