பெண் வாசகியின் இ மெயில்
கதையாசிரியர்: தாரமங்கலம் வளவன்
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 30,157
ரிடையர் ஆகப் போகிற மற்றவர்கள் எப்படியோ, ஆனால் அண்ணாமலை அதைப் பற்றி உண்மையிலேயே கவலைப் பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு ரிடையர் ஆக, இன்னும் மூன்று மாதம் இருக்கின்றது. இப்போதே அவர் மனைவி பூரணி சொல்லிவிட்டாள்,
“ இங்க பாருங்க…இது வரைக்கும் சமையல் வேல பூரா நான் தான் பார்த்துகிட்டு இருக்கேன்… நீங்க ரிடையர் ஆனதுக்கு அப்புறம், நீங்க பாதி, நான் பாதின்னு வேலையை பிரிச்சுப்போம்.. அதாவது பிப்டி.. பிப்டி.. இப்போ இருந்தே சமையல் வேலையை கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பிச்சுடுங்க.. என்ன புரியுதா..” என்று அதட்டினாள்.
இப்படி பூரணி சொன்னவுடன், அண்ணாமலைக்கு மனதில் பயம் வந்து விட்டது. என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் கல்யாணப் பரிசு படத்தில் தங்கவேலு உபயோகித்த பைரவன் எழுத்தாளர் பாத்திரம் ஞாபகம் வந்தது. உடனே பூரணியைக் கூப்பிட்டு,
“ ரிடையர் ஆனதுக்கு பின்னாடி, எப்படி உபயோகமா பொழுதை கழிக்கலாம்னு யோசிச்சேன்.. எழுத்தாளர் ஆயிடலாம்னு யோசனை வந்தது. உனக்கு தெரியாமல் நாலைந்து சிறுகதை எழுதி அனுப்பி இருக்கேன்… வரும்னு நெனக்கிறேன்..” என்றார்.
என்னடா இது… பாதி சமையல் வேலையை அவரு கிட்ட இருந்து வாங்கிடலாம்னு நெனச்சதுக்கு குந்தகம் வந்திடிச்சேன்னு முதலில் முகம் சுளித்தாள் பூரணி. பிறகு தன் கணவன் எழுத்தாளர் என்று எல்லோரிடமும் சொல்லி பெருமை பட்டுக் கொள்ளலாமே என்று விட்டு விட்டாள்.
தன்னை எழுத்தாளர் என்று தன் மனைவி பூரணியிடம் சொல்லி விட்ட அண்ணாமலை, அவளை எப்படி இதை நம்ப வைப்பது என்று யோசிக்கும் போதுதான் அவர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். ஒரு தினசரியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஒரு நபர் தொடர்ந்து சிறுகதை எழுதுவதைப் பார்த்தார். பெயர் சுப கல்யாண ராமன் என்று போட்டு இருந்தது. அந்த வார இதழில் எழுத்தாளரின் போட்டோ பிரசுரிப்பது இல்லை என்பதையும் கண்டு பிடித்தார். உடனே அந்த வாரம் வந்திருந்த ஒரு சிறுகதையை காண்பித்து ‘இந்த சுப கல்யாணராமன் நான் தான்..’ என்றார் பூரணியிடம்.
சந்தோசப்பட்ட அவளுக்கு, கூடவே சந்தேகமும் ஏற்பட்டது. கல்யாணமான புதிதில், ஆபிஸ் வேலையாக அண்ணாமலை வெளியூருக்கு போனால், அவளுக்கு இன்லாண்ட் லட்டரில் கடிதம் எழுதுவார். அதில் எக்கச் சக்கமாய் எழுத்துப் பிழைகள் இருக்கும். வார்த்தைகளும் ஒழுங்காக இருக்காது. அப்படிப் பட்டவர், எழுத்தாளர் ஆக முடியுமா..
உடனே அந்த எழுத்தாளரைப் பற்றிய விபரங்களை இண்டர்நெட்டில் தேட ஆரம்பித்தாள். ஒரு கூகுள் தேடலில் அந்த எழுத்தாளரின் ஈ மெயில் விலாசம் கிடைக்க, அவரைப் பாராட்டி ஒரு ஈ மெயில் அனுப்பினாள்.
பெண் வாசகி என்றவுடன் (ஐம்பத்து ஐந்து வயது என்று தெரியாமல்), ஜொள்ளு விட்டுக் கொண்டு, அந்த எழுத்தாளர் உடனே பதில் அனுப்ப, அண்ணாமலையின் குட்டு உடைந்து விட்டது.
அப்புறம் என்ன..
முதலில் பிப்டி பிப்டி என்று சொன்ன பூரணி, ‘ இப்போ முழு சமையல் வேலையும் நீங்க தான் செய்யணும்.. நோ பிப்டி பிப்டி..’ என்று அண்ணாமலையிடம் கண்டிப்பாய் சொல்லி விட்டாள்.
– ஏப்ரல் 26, 2015
![]() |
தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் காவியா பதிப்பகம் 2019 இல் வெளியிட்டு உள்ளார்கள். இந்த இரு தொகுப்பிப்பிலும் இடம் பெற்ற பல படைப்புகள் சிறுகதைகள்.காமில் பதிவிடப் பட்டு இருக்கிறது. இவ்விரண்டு தொகுப்புகளும்,…மேலும் படிக்க... |
