கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 4,104 
 
 


அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

கண்ணால் சிரித்து,பேசி காவியம் பாடிய மகள் இறந்து போன பிறகு, வெளியில் எங்கையாவது போய் வந்தால் நல்லது ‘ என தோன்றியது. நோவாகோர்ஸியாவிலிருந்த பூமலர், தில்லையையும், ஜெயந்தியையும் “எங்க வீட்டிற்கு வாருங்களன். துக்கத்திற்கு ஒரு மாற்றமாக இருக்கும்”என அழைத்திருந்தாள்.மகள் பிறந்ததிலிருந்து ஆஸ்பத்திரியும், வீடும், மருத்துவர் …என அதில் ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு… இருபது வருசம் ஓடியதே தெரியவில்லை.”போவோம் “என முடிவெடுக்க…இந்த கொரோனா… குறுக்கிட்டு விட்டது. நாம் ஒன்று நினைக்க வைரஸொன்று நினைக்கிறது.

நடக்க முடியாத அதிசயமாக வர்த்தகம், அரச நிர்வாகக் கதவுகள் எல்லாம் அடைப்பட்டன. ‘ஒன் லைன்’ என்கிற ‘ஈ’ வழித் தொடர்ப்புகளால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். மக்கள்,அனைவரும் கட்டாயம் பழகத் தான் வேண்டும் “என்று தெரிவிக்கப்பட்டது . இந்த இறுக்கம் தளர் நிலைக்கு வந்த போது தெரிந்தவர்கள் சிலரின் மரணங்கள், எம் வீட்டுக் கதவையும் வந்து தட்டி விடலாம் என்ற பயபீதியை ஏற்றியது. புயல் கடக்கவில்லை. ஒருவாறாக கோவிட்டுக்கு வக்சீன் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. ரஸ்யா தான் … முதலில் கண்டு பிடித்தது.ரஸ்யாவுடன் சேர்ந்திருந்தால் வேளைக்கே எமக்கு வக்சீன் கிடைத்திருக்கும். பிறகு,ஒரு மாதிரியாக மாற்றம் மெல்ல படர தொடங்கிது. ஒரு முறை…ஏற்றல் நடந்து. பிறகு இரண்டாவது முறை. பதற்றத்தை வக்சீன் வெகுவாக குறைத்து விட்டது. இருந்த போதிலும்மனிதர் பலியாகிக் கொண்டேயிருந்தனர். ‘ பலி ‘ நிற்கவில்லை.

“உள் நாட்டில் பயணம் செய்யலாம் “என அரசு அனுமதியை வழங்கியது. ஆனால், இரண்டாவதாகஏற்றிய மொடோனா, இருவருக்குமே இதயத்தில் ஒரு படபடப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடவுள் வரம் கொடுத்தாலும்…. ஐயர், விடாது குறுக்கே வந்து நிற்கிறார். மருந்து பரம்பரை அலகுகளில் கை வைத்திருக்கிறது. “ஆஹா ! நாம்ஒருவேளை தேவர்களாக மாறபோறோமா ? “. வாழ்வில், சலிப்பு, சச்சர, சந்தோசமின்மை, விரக்தி… இவற்றைதானே கண்டோம். அதற்கு பலன் கிடைக்கஇருக்கிறதோ ?. ஆனால், தில்லை, உதைத்த எந்தபந்துகோல் இறங்கியது ? . ஜெயந்தியே அதிகமாக பயந்து விட்டாள். சாதாரணம் பயம் மூட்டாது. இவன் இணைய வெளியில் ஒன்றுக்குப் பத்தாக கொட்டுகிற கலவை விமர்சனங்களை செய்திகளை, கட்டுரைகளை வாசித்து..இது வக்சீன் வேலை தான் என்பதை அறிந்திருந்தான். இங்கே, ஒவ்வொருத்தருக்குமே ஒரு மருத்துவர் இருக்கிறார். அவரும் பெட்டிக் கடையைத் திறக்க,ஜெயந்தி மருத்துவ சந்திப்புகளுக்கு போய் வந்து கொண்டிருந்தாள். பக்தி பூர்வமாகவேறு யோகாவிலும் இறங்கினாள். பயணம் பின் போடப் பட்டு விடுமோ? என்ற பயம் தான். தீவை , அதிக ஆவலுடன் பார்க்க விரும்பினவள். “அபாயம்ஒன்றுமில்லை, பயப்படாமல்போய் வாருங்கள் “என மருத்துவர்கூறிவிட்ட பிறகு, நின்று யோசிக்கவே கூடாது.

ஜெயந்தி, வாட்ஸப்பில் “நாம் வருகிறோம்”என பூமலருக்கு செய்தியை அனுப்பினாள்.

புறப்பாடு

“படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், கொம்பேடர் (குளிருக்கு போர்த்தும் போர்வை )…எல்லாவற்றையும் தோய் “ஜெயந்தி சொன்னாள். தில்லைக்கு சரியெனவே பட்டது. தோய்த்து விரித்தான்.பிறகு, வார போது தயாராக இருக்க வேண்டும். அவள்அப்பார்ட்மெண்ட் நிலைத்தை வக்கூம் பிடித்து ( மொப் பேப்பர்களால் ) மொப் பண்ணினாள். இரண்டு, மூன்று நாளில், தூசி விளையத் தொடங்கி விடுகிறது. வரும் போது கூட்டில் அதுஉருள நாம் ஓடிப் பிடித்து விளையாட நேரிடும். நாம் நடமாடா விட்டால்…தூசிகுறைவாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு. ஒரு முன்னேற்பாடு.

பழைய ஆடைகள் சரி வராது என புதிய செட்டீசெட், காலுறை,பெனியன்…தலை தீபாவளிக்கு வாங்கிறது போல வாங்கி விட்டோம். ஜெயந்தி அவற்றை ஒரு பையினுள் போட்டு சூட்கேசிற்குள் ( வைப்பதற்கென ஜீப்புடன் கூடிய பைகள் விற்கின்றன ) வைக்கிறாள். வலுவான தயாரிப்பு. தில்லைக்கு இதெல்லாம் சரி வராது.யூனிபோர்ம் மாதிரி…ஆடைகளை அணிபவன். பச்சைக் கலர் சேர்ட் பிடிக்கும். கசங்கல்…இருக்கு,இல்லை என்றெல்லாம் கவலை கிடையாது. பச்சை ஒதுக்கப் படுகிறது.தெரிந்ததை எடுத்து அயன் பண்ணுகிறாள். வாழ்க்கையில், அயன் பண்ணியதை போடப் போகிறான். குளிர்ப் பெட்டியில் உள்ள உடைக்காத பால்களை உடைத்து சிங்கில் ஊற்றுகிறான்..உணவுப் பொருட்களை பையில் போட்டு கட்டி கீழே கொண்டு…சேதனப் பின்னில் போட்டும் வந்தாயிற்று. பத்து நாட்கள் வீட்டிலே யாரும் இருக்கப் போவதில்லை திரும்பி வருகிற போது எதையாவது மறந்து விட்டுப் போனால் நாறும். அந்த மணத்தை அகற்ற பல நாள் போராட வேண்டியிருக்கும். முந்தி, ஜெயந்தியின் அண்ணர்மார்களின் குடுபங்களோடுகாயத்திரியையும் கூட்டிக் கொண்டுமூன்று நாள்கள் கொட்டேஜ்க்கு ச் சென்று கழித்து விட்டு வந்த போது ஏற்பட்ட பாடம்.

வேலை, கண்ணையும், உள்ளத்தையும் குருடாக்கி விடுகிறது . வேற பிரச்சனைகளை எடுத்து பார்க்க விடாமல் செய்து விடுகின்றது. வருசத்தில் ஒரு சில நாள்கள் … இப்படி போய் வருவது, மெசினை நிறுத்தி எண்ணெய் விட்டுஒய்வு கொடுப்பது போன்றது. மனிதர் கட்டாயம் தூயக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் ; கண் நிறைந்த இயற்கைக் காட்சிகளை பார்த்து ரசிக்க வேண்டும் ;குருவி, பறவைகளின் பேச்சுச் சத்தம்காதில் வந்து விழ வேண்டும் .இயற்கையிலே எல்லாமே நிறைந்த்திருக்கின்றன. நாம் நகரை விட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரியும் . நம் அராலிக்கிராமம் வேறு, வட்டுக்கோட்டை வேறு, சுளிபுரம் வேறையாய் ..இருக்கவில்லையா. ஒவ்வொன்றுமே தனிஉலகம்.

நோவோ கோர்ஸியா ஒரு தீவு மாகாணம், ரொரொன்ரோவியிருந்துஇரண்டாயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கிற உலகம். இரண்டு மணி நேரத்தில் அந்த உலகத்தினுள் புகப் போகிறார்கள்.

வானில் ஒரு உலா

கனடாவின் பறப்புப் பறவையில் ஏறினார்கள். நிலத்தில் ஊர்வதை விட , வானில்..பறப்பது வேற மாதிரியானது. காலம் எவ்வளவு விரைவாக ஓடி விட்டிருக்கின்றது. இலங்கையிருந்து பேயறைந்து வந்திறங்கிய பிறகு, அந்த பறவையிலேஏறவே இல்லையே. பலர், போராட்ட சமயத்திலும் கூடஊருக்குப் போய் விட்டு வந்திருக்கிர்கள். இவர்களுக்கு தான் கொடுப்பினை இல்லை இங்கிருப்பவர்களைக் கேட்டால் “போகவில்லை ” என்று ஏங்கிறார்கள் ; போனவர்களைக் கேட்டால் “நீங்கள் பெரிதாக நட்டப்படவில்லை “என்கிறார்கள். இருந்தாலும் நம்ம ஊர், நம்ம ஊர் தானே. “என்ன இருந்தாலும் நம்ம ஊருக்கு போய் வராமல் இருக்கலாமா ?, எந்தக் காரணத்திற்காகவும் நமது நிலத்தை நாம் இழக்க மாட்டோம் ” என்கிற பாலாஸ்தீனர்கள், “இன்று,இஸ்ரேல் நில அபகரிப்பைச் செய்தாலும்…நாளை வெளியேற வேண்டியவர்கள் “என்றுஅறைந்து பேசவில்லையா !. பிராஜாவுரிமைகளைப் பறித்து, இனப்படுகொலைகள் செய்தவர்கள் . ( இவர்களாக செய்யாது வெளிச் சக்திகளின் தூண்டுதல்களால் செய்திருந்தாலும் கூட ) இரக்கமே அற்றவர்கள் தான். பிரிட்டனின் காலனி அரசே எமது எல்லா நிலைகளுக்கும் காரணம். ..இன்று தொடர்ந்து பேரவலப் பட்டுக் கொண்டிருப்பதற்கும் அதுவே காரணம். அதனாலே, தில்லை, உக்ரேன் போரையும் இரவல் போராக கருதி வெறுக்கிறான். இந்தப் போர் உண்மையில் ஒரு பனிப்போர். ” ஈழத்தமிழர் ” இனப்படுகொலையையே கண்டாயிற்று. ஐ.நா சபையேஒன்றும்செய்யவில்லை . இந்த போரை உறுத்துப் பார்க்கவா போகிறது ?, இவன் இருக்கிற நாட்டுத் தலைவர் அதை “சுதந்திரப் போர் “என்கிறார். நாகேசின் நகைச்சுவை !. ‘ நாடு அதில் ‘ முதல் போட்டிருக்க வேண்டும். இலாபத்தை இழக்க விரும்பவில்லை . நமக்கேன் வம்பு . அவரவர்அரசியல் விரும்புற மாதிரி வாழட்டுமே .

முதல் தடவையில் விமானம் ஏறியதே ஏறத்தாழ மறந்து போய் விடிருக்கிறது. ஜெயந்தி சிறுமியைப் போல உள்ளே பார்க்கிறாள்.

அவனை முடித்துஎன்ன தான் கண்டிருக்கிறாள் ?, சந்தோச வரைபு கீழ்நோக்கிச் சென்றது தான் மிச்சம். இங்கேயும் முற்பது வருசங்கள் குப்பைக் கொட்டி விட்டாயிற்று. ஒரு ஈழத்து புத்திர, புத்திரியின் ஆயுட் கால எல்லை. ஊரிலே சின்ன மெண்டிஸ் இருபத்தைந்து வயதிலேயே இறந்து போய் விட்டான். ஊரில், தொழினுட்பக்கல்லூரியில் அவனுடன் படிக்கிற போதுநண்பன் ஒருத்தன் கூறினான். “சிலர் தம்மைக் கடவுளாக நினைக்க வெளிக்கிட்டதாலே தான் எமக்கு இந்த அவலங்களெல்லாம் “கடவுள் மறுப்பு அவசியம் போலத் தான் தோன்றுகிறது. அவர் எங்களையும் கை விட்டு விட்டாரில்லையா ? சுமார் இருபது வருசங்கள் காயத்திரிக்கு பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவள் கண்ணை மூடி விட்ட பிறகும் கூட உள்ளத்தில் சிரிச்ச முகத்தில் அழகாக முளித்துக் கொண்டு தானிருக்கிறாள். அவள் மேல் கொஞ்சம் அதிகமாகவே கருணையைப் பொழிந்து விட்டார். அவள் மடியில் இருந்து சிரித்துக் கொண்டே இருப்பது போல இடைக்கிடை தோன்றுகிறது. அதிருஸ்டம் இழந்தவளா.. ?, இல்லை அவளோடு சேர்ந்து அரைவாசி உயிரும் போய் விட்ட நாம் யார் ?. பிறந்தால் ஸ்மார்ட்டாக வாழவேண்டும் என்பது ஒரு முறை ?. மாணவப்பருவத்தில் ஓரளவு ஹீரோவா இருந்திருந்தால் சிறிது சொல்லும்படியாக வாழ்ந்திருப்பானோ?. நாட்டின் அரசியல் வேறு கீழ்மையானது. அறிவியலற்ற நம் சமூகத்தினர் வேறு உபத்திரம் கொடுக்கிறார்கள். உலகம், உருண்டை என்று யார் சொல்லியது ?. இவர்களின் எண்ணங்கள் எல்லாமே தட்டையாக இருக்கிற போது…எப்படி உருண்டையாக இருக்கும் . அது தட்டையானது தான். ஒருத்தரின் அனுபவம் ஒருத்தருக்கு உதவுகிறதில்லை. இந்த கோவிட்டால் மனித சுவடே இல்லாமல் அழிந்து போய் விட்டால் என்ன செய்ய போகிறார்கள். வாழ வேண்டியவர்கள் போகிறார்கள். வாழ வேண்டாதவர்கள்….எல்லாரும் இருந்து உபத்திரவம் கொடுக்கிறார்கள் . ஒருவேளை, அறம் செத்து விட்டது தான் அதற்குக் காரணமோ?.

குலுக்கலுடன் விமானம் தரையிலிருந்து மேலேறுகிறது. சிந்தனை கலைகிறது “சுவிங்கம் வேண்டுமா ? “என்று மனைவி கேட்கிறாள். “காது அடைக்கும் அடைப்புகளும் வைப்பது நல்லது. மெல்லுறதும் நல்லது “என்று சித்திரா ஜெயந்திக்கு கூறி இருந்தாள். “வேண்டாம் “என்கிறான். பயணிகள், விமானக் கோதிலுள்ள குட்டி ஜன்னல் மறைப்புகளை ஏற்றி வெளியில் பார்க்கலானார்கள். அவசர வேளையில் திறக்கிறகதவோட ஒட்டி இவர்களுடைய இருக்கைகள் இருந்ததால் இவர்களுக்கு ஜன்னல் இருக்கவில்லை. முன் இருக்கையில் இருந்தவரின்..ஜன்னலுடாக களவாக இவர்களும் வெளியே பார்க்கிறார்கள். அலுத்துப் போனவர்கள் மூடியும் விட்டிருந்தனர். நிலத்திலுள்ளவை சிறுசுகளாக மாறி விட்டிருக்கிறது. இதை எல்லாம் நேரிலே பார்க்கிற போது சிறுவர்களின் மனநிலை பற்றிக் கொள்கிறது. எப்பவும் தரைக்கு மேலே மிதப்பது ஒரு அலாதியான அனுபவம் தான். மேகங்களை ஊடுரூவிப் பறக்கிறது. பக்திச் சொட்டும் திரைப்படங்களில் பார்த்த பஞ்சு மேகங்கள் பல மிதக்கின்றன.இவன் அவற்றை கற்பனக் காட்சிகள் என்றே நினைத்திருந்தான். உண்மையிலே பஞ்சு மேகங்களை பார்க்கவும் முடிகிறது தான். அகதியாய் வந்த போது ஏறிய விமானம் இதை விட 2..,3 மடங்கு பெரியது. கே.எல். எம். அதில் ஜன்னல் இருந்ததே நினைவில் இல்லை.

ஜன்னலுக்கு பக்கத்தில் இருந்தவருக்கு விரைவில் அலுத்து விட்டது. அடைப்பை இழுத்து மூடி விட்டார்.

இந்த விமானத்தில் கழிவறை இவர்களுடைய இருக்கைக்கு அண்மித்து இருக்கிறது . வானில் ஒரு நடை போட வேண்டாமா ? என்ன. கழிவறைக்கு நடந்து சென்றான். எந்த ஒரு ( சிறிய) குட்டி அறையிலும் மனிதனால் ஜீவிக்கவே ( வாழ ) முடியும் என்பதை நீரூப்பிக்கிற மாதிரிகழிவறை கிடந்தது. யப்பானியர் இப்பவே குட்டி ஹோட்டேல்களையே கட்டி குடியேறி விண்வெளியில் வாழ்வதற்கு பயிற்சி எடுக்கிறார்கள். ஆனால், நமக்கும் நிம்மதியாய் வாழ ஒரு ஏக்கர் காணித்துண்டாவது இருக்க வேண்டி இருக்கிறது. தோட்டமும் செய்ய வேண்டுமல்லவா. பாரதக்கதையில் கெளரவர்கள் ஒரு பிடி நிலம் கூட குடுக்க மாட்டோம் என்பது போலவே முரண்டு பிடித்தபடியே நம் அரசு கிடக்கிறது. இந்த ஜென்மங்கள் எந்த காலத்தில் திருந்தப் போகிறார்கள் ? கழிவறை சுத்தமாகவே இருக்கிறது. இருந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும். அதைக் கையாலுவது சட்டென புரியாததால், நின்றபடியே ஆடி…கழிக்கிறான். கைக்கு சோப் போட்டு கழுவவும் குட்டி நீர்த்தொட்டி கிடக்கிறது.கையை துடைக்க, உலர்த்த…தேட வேண்டியிருந்தது. இல்லா விட்டால்…என்ன, காற்சட்டையில் துடைக்கவா தெரியாது. பிறகும் , ஒரு தடவை சென்ற போது தான் கண்டு பிடித்தான். குப்பைத் தொட்டியுடன் பேப்பர்கள் மறைந்து கிடந்தன. வந்து இருக்கையில் அமர தள்ளு வண்டிகளில் பானம், சன்விச், கோப்பி, டீ…கொண்டு வந்தார்கள். ஒருவேளை, பெரிய விமானத்தில் மட்டும் இலவசமாக வழங்குவார்கள் போல இருக்கிறது. பின்னால் வருகிறவர் சிறிய வங்கி மெசினுடன் கார்ட்டுகளைப் பெற்று பணத்தை அறவிட்டுக் கொண்டு வந்தார். சாதாரண விலையை விட இரண்டு மடங்கு விலையில் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பூமலர், ” ஹலிஃபக்ஸ் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் கோப்பிக்கடை ரிம் கொட்டனில் நிற்கிறேன். பரிசோதனை முடிந்த பிறகு தொலைபேசியில் அழை. வருகிறேன் “என ‘வாட்ஸ் அப்’பில் எழுத்தில் செய்தி அனுப்பி இருந்தாள். இருபது நிமிசம் லேட்டாக விமானம் வந்திறங்கியது. அரை மணி நேரத்தில், செக்கப் எல்லாம் முடிந்து சூட்கேட்ஸையும் இழுத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார்கள். ” நான் இங்கே நிற்கிறேன் “என்ற பூமலரின் குரல் செல்பேசியில் கேட்டது. அங்க, இங்க என்று அலங்க, மலங்க கரை வரிசையில் பார்க்க பலரின் கார்களுக்கு முன்னால் நின்று கை அசைப்பது தெரிந்தது. பொதிகளை ஏற்றி விட்டு வாகனத்தில் ஏற கோப்பிக் கப்புகளை எடுத்து தந்தாள். இவளும் ஜெயந்தியைப் போலத் தான் செலுத்தும் வளையத்திற்கு கிட்டவாக இருந்து செலுத்தினாள் . வாகனம் வீதியில் இறங்கியது. கோப்பி குடித்துக் கொண்டிருக்க ” இங்கே பஸ் சேவை வலு குறைவு. ஊபர் சேவை அறவே கிடையாது. நண்பர்களும், குடும்பத்தினரும் தான் வந்து ஏற்றிச் செல்கிறார்கள் “என்றாள். “இப்ப, மாகாண கைவே 103 இல் ஏறி, விரைவிலே மாகாணக் கைவே 101 இற்கு இறங்கி விடுவோம் “என்றாள். ஒன்ரோரியோவிலுள்ள செமி கைவே போல இருந்தது. அவற்றில், சிலவற்றுக்கு ரவிக் லைட் இருக்கும். இதிலே இல்லை. அவ்வளவு தான்.மற்றதில் இறங்கி, வடக்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. இருபுறமும் மரங்களும், விவசாயப்பண்ணைகளும்…மாறி, மாறி வந்து கொண்டிருந்தன. வாகன நெரிசலைக் காணவில்லை. சிலவேளை துப்பரவா கூட இல்லை . புதிய நாட்டுக்குள் வந்தது போல தோன்றுகிறது.

“திரும்பவும் ஓடி வர களைப்பாயில்லையா? “என்று பூமலரிடம் கேட்டான். “இங்கே எல்லா இடமும் தூர தூரமாகவே இருக்கின்றன. ஓடி, ஓடி பழகி விட்டது “என்கிறாள். ஒரு மணி நேர ஓட்டம். அந்த கைவேயிலிருந்து வெளியில் வந்தவுடனேயே வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவளுடைய மரவீடு, நீல நிறத்தில் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தது. ஒன்ராரியோவில் சுற்றுப் புறத்தை செங்கற்களால் கட்ட, இங்கே வைனல்( பிளாஸ்டிக்) பலகைகளால் அடைக்கிறார்கள். மொன்றியல்,கியூபெக் பக்கம் இலங்கையில் தமிழ் தாயகப் பகுதியில் உள்ள மாதிரியே கொங்கிறீட்டில் செய்யப்பட்ட கற்களைக் கொண்டு கட்டுறதாக சொல்லப்படுகிறது. இடத்திற்கு இடம் வித்தியாசங்கள் காவிக்கிடக்கின்றன. சிறுவர் கையில் கலர்ப் பென்சில்களைக் கொடுத்து வர்ணங்கள் பூச விட்டது போல அயலிலும் ஒரே இஸ்மன் ரகம். மஞ்சள்,சிவப்பு, ஊதா…என வீடுகள் கண்ணை அப்படியேகவ்வுகின்றன. நீயூபவுண்லாண்டிலும் இதே ரகம்…என்பதை தொலைகாட்சி திரைகளில் பார்த்திருக்கிறான். இது ஒரு குறிப்பிட்ட ஐரோப்பிய வீட்டு…. முறையாக இருக்க வேண்டும்.

– தொடரும்…

– அக்டோபர் 2022 – ஜனவரி 2023, பதிவுகள்.காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *