சுமார் சுப்பையா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 163 
 
 

(1965 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மணி என்ன இருக்கும், நீ புறப்பட்டபோது?”

“சுமார் 11 மணி இருக்கும்ங்க…”

“எவ்வளவு தூரம் ஐயா, நீ போன இடம்.”

“இருக்குமுங்களே, மூணு மைல் சுமாருக்கு.”

“இப்ப என்ன மணி?”

“சுமார், 1 மணின்னு நினைக்கிறேனுங்க.”

முதலாளிக்குக் கோபத்தை அதற்குமேல் அடக்கிக் கொள்ள முடியவில்லை. ‘யார்யா சுத்த மண்டூகமா இருக்கறே. எதுக்குக் கேட்டாலும், என்ன கேட்டாலும் சுமார்! சுமார்! இதுதானா பதில். ஒரு திட்டவட்டமான பதில், பட்டு வெட்டின படி, கரக்டான பதில் வருதா உன் வாயிலே இருந்து. தலை நரைச்சுட்டுது. பார்த்தா பரிதாபமாகவும் இருக்குது. ஆனா; உன்னோட போக்கு கொஞ்சம்கூட சரியா, திருப்தியா, தரமா இல்லையே!” “என் வயசாவுதய்யா உனக்கு?”

“சுமார் ஐம்பத்திரண்டுங்க.”

“அதுக்கும் அந்தப் பாழாப்போன சுமார்தானா? பெரிய சனியனாப் போச்சு. எத்தனை கை எத்தனை காலுன்னு கேட் டாக்கூட, சுமார் இரண்டுன்னு சொல்லுவேபோல இருக்குது. உன்னோடே மாரடிக்க முடியல்லையா. நெஜமாத்தான் சொல்றேன், நீ என்னோட பொறுமையை ரொம்பத்தான் சோதிக்கறே. போய்யா, இந்தச் சுமாரு சுமாருன்னு அழுகறதை நிறுத்திக்க. ஆமா! கரெக்டா இருக்கோணும் பதில். தெரியுதா? போ!போ! இந்த மாதிரி கோணமாணலுகளை நான் கட்டி மேய்க்கறதுக்குள்ளே பாதிப் பிராணன் போயிடுது.”

நிலபுலம், தோட்டம் துரவு, துணிக்கடை இவ்வளவுக்கும் மேலாக கோயில் தர்மகர்த்தா வேலை எல்லாம் உருண்டு திரண்டு ஒரு உருவமாகி, வேலாயுதம் பிள்ளை என்ற பெயருடன் அந்த ஊரில் ஒரு பெரிய புள்ளியாக ஒருவர் இருந்து வருவது, விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும் ‘நாய் படாத பாடு’ படுவதாகச் சொல்லிக் கொண்டு, வேலை பார்க்கும் முதியவர்தான், சுமார் சுப்பையா; அப்படி ஒரு சிறப்புப் பட்டமே கட்டி விட்டார்கள் ஊரார். சுப்பையா எதற்கொடுத்தாலும். சுமாராக சுமாராக என்று பேசி வந்த காரணத்தால். அப்படி ஒரு பழக்கம் என்பது அல்ல, அப்படி ஒரு பயிற்சி சுப்பையாவுக்கு. வேலாயுதத்திடம் வேலைக்கு வருவதற்கு முன்பு, சுப்பையா வேலை பார்த்த இடத்திலே ஏற்பட்ட பழக்கம், பயிற்சி. அந்த முதலாளியின் பெயர் முத்துச்சாமி. அவர் ஒருமுறை பசுமாடு வாங்கும் வேலையாக, சுப்பையாவை அனுப்பி வைத்திருந்தார். வேளைக்கு 1/4 சுப்பையா, தன் முதலாளியிடம் கூறியபோது, முதலாளி, ஒரு தடவைக்கு நாலு தடவை கேட்டார். “சரியாச் சொல்லு 14 படி வேளைக்கு? அப்படித்தானே? என்று. ஆமாங்க! வேளைக்கு 1/4 படி கறக்கும்ங்க. நான்தான் சொல்றனே, ‘தெரிஞ்சிதானுங்க சொல்றேன்’ என்று விளக்கம் கொடுத்தார், சுப்பையா. பசு ஒரு நாளைக்கு 1/4 படி கறப்பதே ‘உன்னைப்பிடி என்னைப்பிடி என்று ஆகிவிட்டது. முதலாளிக்குக் கோபம் தாங்கமுடியவில்லை. ‘ஏய்! சுப்பா! இங்கேவா!” என்று மிரட்டும் குரலில் அழைத்து அருகே வந்ததும், காதைத் திருகியபடி, “வேளைக்கு 1/4 படி, 1/4 படி! அளந்து பார்த்தவன் போலச் சொன்னாயே! போய்ப்பாரு. பசுவோட இலட்சணத்தையும் உன் பேச்சோட அர்த்தத்தையும். சுமார் 1 படி கறக்கும்னு கூடச் சொல்லியே! 1 1/4 படி அளந்து பார்த்த ஆசாமி போல அல்லவா சொல்லி என்னை ஏமாத்தினேன.. என்று ஏசினார். அதிலிருந்து சுப்பையா, முதலாளியிடம் பேசும்போது பயந்து, எதற்கும், சுமாராக என்று சேர்த்துப் பேச ஆரம்பித்து, பழக்கமும் பயிற்சியுமாகி விட்டது. அந்த வாழ்க்கை, வேலாயுதத்திடம் வேலைக்கு வந்த பிறகு எப்படிப் போய்விடும்? எதற்கும், சுமார்! சுமார்!’ என்ற இணைப்பு வைத்தே பேசி, முதலாளியின் கோபத்தை அதிகப் படுத்திவிடும் நிலை ஏற்பட்டு விட்டது.

”உனக்குத் திட்டவட்டமா, சரியாத் தெரிஞ்சா சொல்லணும்; இல்லே, சுமாரா இப்படி இருக்கும்னு சொல்லணும் தெரியுதா?” என்று முன்னாள் முதலாளி பாடம் சொல்லிவைத்தார்; அது பழக அதிலே தேர்ச்சி பெற நாளாயிற்று; ஆனால் அதிலே நல்ல தேர்ச்சி பெற்று அப்படிப் பேசுவது இயல்பிலேயே ஒரு பகுதி என்று ஆகிவிட்ட பிறகு, அதை விட்டுத்தொலை. எதையும் திட்டவட்டமாக கரெக்டா சொல்லு? என்கிறார் புதிய முதலாளி – பத்து ரூபாய் சம்பளம் அதிகம்கூடக் கொடுத்திருக்கிறார் உறவினர்கூட. ஆனால் அந்த ‘சுமார்’ என்ற பதத்துடன் சுப்பையா ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு இலேசிலே போக மறுத்தது.

இவ்வளவு சொல்லியும்கூட, அன்று மாலை, முதலாளி சுப்பையாவைக் கூப்பிட்டுத் தன்னோடு பேசிக்கொண்டு இருந்த ஒருவரிடம் காட்டி, “நான் சொன்ன சுப்பைய்யா இவருதான். எனக்குப் பெரியப்பா முறை. சொந்தம்தான். எல்லாம் சோளிங்கபுரத்து வழிதான்.” என்று அவரிடம் கூறிவிட்டு. ”ஏன்யா, பையன், உன் மகள், நல்ல அழகு இல்லையா?” என்று கேட்டார். சுப்பையா, “சுமாரா இருப்பானுங்க” என்றுதானே பதில் சொல்ல முடிந்தது! வந்திருந்தவர் பத்து ஏக்கர் பூமிக்கு உடையவர் அவர் பெண்ணைத் தர ஏற்ற இடம் தேடி வந்திருக்கும் நேரம்; அப்போதும் அந்தப் பாழாய்ப் போன ‘சுமார்!” “போய் வேலையைக் கவனி. . .” என்று முதலாளி, சிறிது பதட்டமாகவே கூறி அனுப்பி விட்டார். அவர், பாவம் சுப்பைய்யா மகனுக்கு, நல்ல இடத்து சம்பந்தம் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டுதான் பேசிக்கொண்டு இருந்தார். ‘சுமார்’ வந்ததே, அவர் திட்டத்தைக் கெடுக்க!!

“சுப்பைய்யாவுக்கு. இந்த ‘சுமார்’ என்ற பதம் பழக்கமாகி விட்டதற்கு வேறோர் காரணமும் உண்டு, உண்மையே பேச வேண்டும். எதையும் சரியாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதிலே, மிகுந்த அக்கறை சுப்பைய்யாவுக்கு. நமக்கென்ன தெரியும் – நமக்கெங்கே தெரியப் போகுது – என்ற எண்ணம் வேறு. அந்தப் பாவி, மாட்டுத்தரகன் 1/4 படி என்று சொன்னான். சரியா என்று பார்க்காமல், அளந்து காட்டு என்று கேட்காமல், எல்லாம் தெரிந்த மேதாவி போல, எஜமானரிடம் உளறியதாலேதானே அவருக்கும் நஷ்டம், நமக்கும் கஷ்டம் என்று நினைத்து நினைத்து எதையும் திட்டவட்டமாகச் சொல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்ததன் விளைவு இந்த ‘சுமார்’.

வந்தவர் போன பிறகு, வேலாயுதம், சுப்பைய் யாவைக் கூப்பிட்டு, “அய்யோவ்! நீ உருப்படமாட்டே,ஆமாம். உன் பிள்ளைக்குப் பெண்தர, பாதிச் சம்மதம் சொன்னான், சோளிங்கபுரத்தான் கெட்டதே; உன்னோட சுமார் வந்து கெடுத்துதே.’ என்று கூறினார். சுப்பைய்யாவுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், மகன் அழகுதான் என்று எப்படிச் சொல்ல முடியும்? நம்முடைய கண்ணுக்கு அவன் அழகாகத்தான் இருக்கிறான்! முதலாளியோட எண்ணம் எப்படியோ? அதைத் தெரிந்து கொள்ளாமல், நாம் எப்படி திட்டவட்டமாக சொல்லச் சொல்லி வைத்தேன்; கோபிக்கிறார். நான் என்ன செய்ய! என்று முணுமுணுத்தபடி வீடு சென்று சோகமாகப் படுத்துவிட்டார். தன்னைவிட வயதிலே குறைந்தவன்தான் குப்புசாமி, துணிக் கடையில் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொள்கிறான். அதையுந்தான் அவர் பார்க்கிறார்; பார்த்து? என்ன முயற்சி செய்தாலும் அடக்கமானவர். இருந்து என்ன? அதோ குப்புசாமியைப் பாருங்கள்.

“ஏம்பா! சாயம் எப்படி?”

“நம்ம கடையிலே வந்து நீங்க இந்தக் கேள்வி கேட்கலாமா?”

அதிர்வேட்டுச் சிரிப்புடன் புடவையைக் காகித உறைக் குள்ளே போட்டு, வந்தவரிடம் கொடுத்துவிட்டு காதின் இடுக்கிலே உள்ள பென்சிலெடுத்து 17-30 என்று பில் போட்டுக் கொடுத்துவிட்டு மற்றவர்களைக் கவனிக்கிறான்.

“ஏம்பா! சாயம் போகுதே உங்க கடை சேலை!”

“எங்க கடை சேலையிலே குத்தம் கிடையாதுங்க, நீங்க வெளுக்கப் போட்ட இடம் அப்படி இருக்குது. நாங்களா பொறுப்பு அதுக்கு?”

“வெளுக்க எங்கேயும் போடலியே, நாங்களே வீட்டிலேயே தான் தோய்த்துப் பார்த்தோம்.”

“என்ன சோப்பு போட்டிங்க?”

“மல்லிமார்க் சோப்புதான்…”

“அப்படிச் சொல்லுங்க. நான் திகைச்சிப் போனேன். கெட்டிச் சாயமாச்சே அது எப்படிப் போகும்னு. அம்மா! புடவை விலை போட்டு வாங்குவது மட்டும் போதாது. சோப்பு தரமானதா இருக்கணும். இருங்க… டேய், பையா! டேய், கிட்டு! அம்மாவுக்கு அல்லிமார்க் சோப் ஒரு பெட்டி வாங்கி வந்து கொடு.மூணு ரூபா கொடுங்கம்மா. இதைப் போட்டுப் பாருங்க, சாயம் கக்குதான்னு.’

வந்தவர்கள் திருப்தியாகப் போகிறார்கள். அல்லி மார்க் சோப்புக்கு குப்புசாமிதான் அந்த ஊர் முழுதுக்கும் ஏஜண்ட்! ஒரே கல்; இரண்டு மாங்காய்!!

இதையெல்லாம் பார்க்கிறார் சுப்பைய்யா, ஆச்சரியத்தால் வாய் பிளந்து நிற்கிறாரே தவிர, எப்படி குப்புசாமி இத்தனை வித்தைகளைக் கற்றுக் கொண்டான் என்பதே புரியவில்லை. தனக்கு அந்த வித்தை வராது என்று எண்ணுகிறார். அது மட்டுமல்ல, அந்த ‘வித்தை’ தனக்கு வேண்டாம், அது பாபம், கேவலம் என்றும் எண்ணுகிறார்.

சுப்பைய்யாவின் சுபாவம், அவருக்கு வாழ்க்கையிலே பல கட்டங்களில் தொல்லை கொடுத்தது. ஆனால் ஒரு முறை அவருக்கு ஆபத்தையே உண்டாக்கிவிட்டது, அந்தச் சுபாவம்.

ஊரிலே பெரிய வம்புக்காரன் சிகப்பன். அவன் ஒருநாள், கடையில் கலகம் செய்து, முதலாளியைத் தாக்கி விட்டான் அங்கு இருந்த கத்திரி கொண்டு குத்தவும் முயற்சித்தான். வழக்கு நடந்தது. சிகப்பனுக்கு வக்கீலாக வந்தவர், சாட்சிகளை மிரட்டித் திணற அடிப்பதில் வல்லவர், எப்போதும் அடிதடி, கத்திக்குத்து, தீ வைத்தல் போன்ற வழக்குகளில் அவர்தான் முன்னால் நிற்பார், குற்றவாளிக்கு வாதாட வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ! வழக்கு மன்றத்திலே, அவருடைய ‘வானவேடிக்கை’யைப் பார்க்கப் பலர் கூடுவார்கள். சிகப்பன் தாக்கியதற்குச் சாட்சி கூற குப்புசாமி மட்டும் போதும். அவன் சமாளிப்பான்; ஆனால் கலகம் நடந்த தினத்தில், குப்புசாமி குல தெய்வத்துக்குக் கும்பாபிஷேகம் என்று கோடியூர் போய் விட்டிருந்தான். அன்று கடையில் இருந்தவர்களில் முக்கியமானவர் சுப்பைய்யா. முதலாளி தன் வக்கீலிடம், இந்த ஆளை மட்டும் சாட்சிக் கூண்டிலே போடாதீங்க. உளறிக் கொட்டி, வழக்கைக் கெடுத்து விடுவான் என்று சொல்லி வைத்திருந்தார். சுப்பைய்யாவுக்குக்கூட நிம்மதியாகவே அந்த ஏற்பாடு தென்பட்டது, ஆனால் வழக்கைப் பதிவு செய்த போலீசார், சுப்பைய்யா கடையில் இருந்ததைக் குறிப்பிட்டு இருந்தார்கள். சிகப்பனுடைய வக்கீல் கழுகாசலம், இதை ‘மோப்பம்’ பிடித்து சுப்பைய்யாவைச் சாட்சிக் கூண்டுக்குக் கொண்டு வந்து விட்டார். நடுக்கம் சுப்பைய்யாவுக்கு.

“உம்மோட பேர், சுப்பைய்யாவா?”

”ஆமாம்”

“எவ்வளவு வருஷமாக வேலை பார்க்கிறீர்?”

“சுமார் ஏழெட்டு ஆகுதுங்க.”

“எஜமானர் நல்லவர் – இல்லையா?”

“தங்கம் – தங்கமானவரு..”

“உரக்கச் சொல்லாதய்யா. இது தங்கக் கட்டுப்பாடு காலம்! நல்லவர்.”

“ஆமாங்க.”

“சம்பளம் போதுமான அளவு கிடைக்குதா”

“சுமாரா…”

”உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது பாவமில்லையா?”

“பாவந்தானுங்களே”

“உப்பிட்டவர்களை உள்ளளவும் நினைக்க வேணுமில்லையா?”

“அதுதானுங்களே நியாயம், தர்மம்”

“ஆகையினாலே நீ உன் எஜமானருக்குத் துரோகம் செய்யமாட்டே”

“மனது வருங்களா. . .”

“எஜமானருடைய நன்மை எதுவோ அதுக்கு அக்கரை காட்டுவே!”

”உள்ளதுதானுங்க…”

”அதனாலேதான். இப்ப, உன்னோட எஜமானர் கொடுக்கிற சம்பளத்துக்காக, அவர் சார்பிலே, பொய் சாட்சி சொல்ல வந்திருக்கிறேன்னு நான் சொல்றேன்.”

“அப்படிச் சொல்லாதிங்க.. நான் பொய் பேச மாட்டேனுங்க.. தெரியாதுங்க… பழக்கமே கிடையாதுங்க. . ”

“தெரியப்போகுது பார் உன்னோட சொரூபம். சரி, கடையிலே கலகம் நடந்ததாச் சொல்றிங்களே, அப்ப மணி என்ன?”

“மணி வந்துங்க.. பனிரெண்டு இருக்கலாம்ங்க..சுமாரா!”

“இதோ பாரய்யா இது கோர்ட். நிஜம்தான் பேசனும். இழுத்துப் பேசறது, மழுப்பறது கூடாது! மணி என்ன?”

“சுமார் பன்னெண்டு.”

“சுமார் பன்னெண்டுன்னு ஒரு கணக்கு இருக்குதா? சரியாச் சொல்லுமய்யா. மணி பன்னிரெண்டு அடிச்சுதா, அடிக்க கால் மணி நேரம் இருந்ததா, அடிச்சி அரை மணி நேரமாச்சா.”

“எப்படிங்க அப்படிச் சொல்ல முடியும். சுமாரா பன்னெண்டு இருக்கும்.”

“கடிகாரத்தைப் பார்த்தீரா?”

“இல்லிங்க..”

“கடியாரத்தைக்கூடப் பார்க்காம மணி தெரியுமா உமக்கு.”

“இலேசா பசி எடுத்ததுங்க; அதிலே இருந்து தாங்கச் சொல்றேன், சுமார் 12 இருக்கும்னு.”

”ஒஹோ! உன் கடிகாரம் வயத்திலே இருக்குதா! இருக்கட்டும். இருக்கட்டும். கடியாரத்தைப் பார்த்து மணி சொல்லலே?”

“ஆமாங்க..”

“ஆகையாலே, கலகம் நடந்த நேரம், மணி, உனக்கு திட்டவட்டமாத் தெரியாது.”

”உனக்குத் திட்டவட்டமாகத் தெரியாத ஒரு விஷயத்தைக் கோர்ட்டிலே சத்தியம் செய்து கொடுத்துவிட்டுப் பேசறியே, பேசலாமா! போகட்டும். அடிதடி நடந்தது. அப்படித்தானே?”

“வந்துங்க, சிகப்பன், சிகப்பன்.”

“கதாகாலட்சேபம் கூடாது; கேள்விக்குப் பதில், அடிதடி நடந்துதா?’

“நடந்ததுங்க.”

”யார், யாரை அடிச்சது?”

“சிகப்பன் எஜமானரைத் தாக்கினாரு”

“இரண்டு கையாலேயா, ஒரே கையாலேயா?”

“அதைக் கவனிக்கலிங்க. பளார், பளார்னு சத்தம் கேட்டுது.”

“போட்டதும், உமக்குப் பயம் ஏற்படலியா?”

“பயந்தாங்க…உடலே நடுங்கிப் போச்சுங்க… கை கால் ஓடலிங்க. கண்ணை கெட்டியா மூடிக்கொண்டேனுங்க!”

“கண்ணை மூடிக் கொண்ட நீ சிகப்பன்தான் எஜமானரை அடிச்சான் என்று எப்படிச் சொல்லலாம்?”

“சத்தம் கேட்டுது.”

“நீ கண்ணாலே பார்த்தயா?”

“இல்லிங்க.”

“சிகப்பன் கத்திரியாலே குத்த வந்தான்னு சொல்றாங்களே!”

“ஆமாங்க. எஜமானரு பதறிக் கூவினாருங்க. ‘கத்திரி’ன்னு!”

”கத்திரி! கத்திரின்னு கூவினாரே தவிர சிகப்பன் என்னைக் கத்திரியாலே குத்த வர்ரான்னு சொன்னாரா?”

“அப்படிச் சொல்லலிங்க.”

“அந்தக் கடையிலே மூட்டை தூக்கிப் போடற பையன் ஒருத்தன் உண்டா?”

“மூணு பேருங்க.”

“அதிலே ஒருத்தன் பேர், கத்திரி. இல்லையா.”

“ஆமாங்க.”

“நான் சொல்றேன். உன் எஜமானரு சிகப்பனை அடிக்க கத்திரி வேலையாளை கூப்பிட்ட குரல்தான் உன் காதிலே கேட்டதுன்னு, என்ன சொல்றே!”

“நான் என்னங்க சொல்ல முடியும். என் காதிலே, எஜமானர் கூவினது கேட்டது.”

“உன் கண் மூடி இருக்குது மணி தெரியாது – காதிலே சத்தம் விழுது – இது போதும்னு நினைச்சு சாட்சி சொல்ல வந்து விட்டயா.”

“நான் மாட்டேன்! மாட்டேன்னு! தலைப்பாடா அடிச்சுக் கிட்டேனுங்க.”

வழக்கு சிகப்பன் பக்கம் வெற்றியாகி விட்டது. சுப்பைய்யாவுக்கு வேலை போய் விட்டது. வீட்டிலே மனைவி மெத்த வருத்தத்துடன், ‘எதையும் தெளிவாய் புரிந்து கொள்ள ணும், திட்டவட்டமாகச் சொல்லணும், இப்படி இருந்தாலொழிய, யாரு உங்களை வேலைக்கு வைத்துக் கொள்ளுவாங்க?’ என்று கூறினாள்.

”உண்மைதான் கண்ணாத்தா! புரியுது; பழக்கமாகனுமே. இனி எதையும் திட்டவட்டமாத் தெரிந்து கொண்டுதான் பேசனும். இனிமேல்பட அதே வேலைதான் எனக்கு, பாரேன்” என்று தைரியம் கூறினார். அன்று முதல் அதே நினபைபு. அந்த முறையைப் பயில ஆரம்பித்தார். ஆறு மாதத்துக்குப் பிறகு கார்மேகம் என்பவரிடம் வேலைக்கு அமர்ந்தார்.

“சுப்பையா! போயி பொன்னியம்மன் கோயில் தெருவிலே இருக்கிற கன்னியப்பன் தரவேண்டிய பாக்கியை வாங்கி கிட்டு, வா.’ என்று கார்மேகம் கூறுவார். உடனே ஒரு சிறு குறிப்புப் புத்தகத்தை எடுப்பார் சுப்பையா! கடிகாரத்தைப் பார்த்து 10-25 என்று குறித்துக் கொள்வார். கடையை விட்டு இறங்குவார்; திரும்ப வருவார். ‘பாக்கி எவ்வளவுங்க!’ என்று கேட்பார். கடைக் கணக்குப்பிள்ளை, “இங்கே, வாய்யா! நீ போன உடனே அவன் கொடுத்துவிடறவன் போல ‘கரெக்டா’ கணக்கு கேட்கறியே! போய்யா! போய் பாக்கி பணம் கொடுன்னு கேள்!” என்பார். சுப்பையா விடமாட்டார். ‘இல்லிங்களே! கரெக்டா கணக்கு தெரியணும் பாருங்க! ஏன்னா, என்ன பணம் சேரணும்னு கேட்டா. நான் சொல்லணும், இல்லே.” என்பார். கணக்கப் பிள்ளை ஏட்டைப் பார்த்து 80 ரூபாய் 60 பைசா என்பார். அதைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொண்டு கிளம்புவார். பாதிவழி போகும்போதே யோசனை வந்துவிடும். ‘பொன்னியம்மன் கோவில் என்று மட்டும்தானே சொன்னார்கள்! வீட்டு எண் கேட்க மறந்துவிட்டோமே’ என்று. பலரை விசாரித்து வீடு கண்டு பிடிப்பார். முதல் வேலையாக குறிப்பு புத்தகத்தை எடுத்து, வீட்டு நம்பர் இன்னது என்று குறித்துக் கொள்வார். உள்ளே உடனே போய் விடமாட்டார். தான் அங்கு வந்ததையும் கன்னியப்பன் வீட்டுக்குள் போனதையும் நாளைக்குத் தேவைப் பட்டால் மெய்ப்பிக்கக் கூடிய முறையில் தனக்குத் தெரிந்தவர் ஒருவர் வந்ததும், அவருடைய பெயரை எழுதிக்கொள் என்று குறித்துக்கொண்டு பிறகுதான் உள்ளே போய் கன்னியப்பனைப் பார்த்துப் பேசுவார்.

“நீ கார்மேகத்தோட கடையா?”

“ஆமாம்.”

“கணக்கப் பிள்ளையா?”

“ஆமாம்.”

“பாக்கி வசூல் பார்க்க வந்தயா?”

“ஆமாம்.”

“நீ கார்மேகம் கடை ஆள்தான் என்று எப்படி எனக்குத் தெரியும்? எழுதியிருக்கா உன் நெத்தியிலே”- இதற்குப் பதில் சொல்ல, குப்புசாமி அல்லவா வேண்டும். சரி, இனி, பாக்கி வசூல் செய்யப் புறப்பட்டால் எஜமானரிடம் இருந்து ஒரு அடையாளச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் வரவேண்டும் என்ற முடிவுடன் தடை திரும்புவார்.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மிக முன்னேற் பாட்டுடன் நடக்க ஆரம்பித்து, அந்தப் பயிற்சி முற்றி அது சுப்பையாவின் சுபாவமாக வளர்ந்துவிட்டது. அதன் பலனாக எந்தக் காரியமும் காலதாமதம் இன்றி நடப்பதில்லை.

“மத்தவன் சிட்டா பறந்துபோய் காரியத்தை முடிக்கறான். நீயும் இருக்கறயே ஒரு மனுஷன், ஆமை மாதிரி. எதுக் கெடுத்தாலும் விவரம் தெரியணும். ஒரு நோட்டுப் புத்தகத்திலே குறிக்கணும். செச்சேச்செ! நீ உருப்பட மாட்டாய்யா! ஆமாம்” என்று கூறி, கார்மேகமும் சுப்பையாவை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

– 14-1-1965, காஞ்சி.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *