கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 2,838 
 
 

ஒரு சிறு முன்குறிப்பு

மகாபாரதக் கதையென்றதும் குருஷேத்திரப் போர் தான் நினைவுக்கு வரும். தீமைகளை விதைக்கும் தீயவர்களால் வழிநடாத்தப்படும் தர்மத்துக்கு மாறான அக்கொடிய யுத்தம் அது விட்டுச் சென்ற காலடித்தடங்கள் இன்றைய சாதாரண நடைமுறை வாழ்விலும் பிரதிபலிப்பதைக் கண்கூடாகவே காணநேர்ந்த துர்பலனாகவே இக் கதையின் கரு எனக்குள் கண்திறந்து கொண்டது. இருண்ட அடுப்பினுள்ளேயே புதைந்து போகும் கண்ணீர் சுவடுகள் தெறித்த ஆணாதிக்க சமூகத்தின் காலடியிலேயே புழுவாகவே வாழ்ந்து மடிந்து போகும் அபலைப் பெண்களின் சோக வரலாறுகளின் கறைபடிந்த செல்லரித்த வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கவே இந்தக்கதை ஒரு சான்று முகம். இதற்கு ஒரு விமோசனம் தேடுகிற மாதிரியே, இக் கதையின் விடியல் முகமும் இதைச் சரிவர வாசிப்பவர் புரிந்து கொள்ள வேண்டு மென்பதே என் விருப்பமும் கூட.

அங்கம் 1 | அங்கம் 2

வாழ்க்கை பற்றி அறிவுபூர்வமான பிரக்ஞை ஏதுமின்றி விழிப்புநிலை பெறாத மழழைப்பருவத்துக் குழந்தையினது போன்ற நிர்மலமான வெள்ளை உள்ளம் கொண்ட சாராதா அப்போது கிணற்றடிக்கு வந்து தனிமையில் நின்று கொண்டிருந்தாள்.

முகையவிழாத பன்னிரண்டு வயதுப் பிராயத்தில் தான் சாமத்தியப்பட்டு விட்டதாக அம்மா வாய்ப்பிரகடனமாக அறிவித்த செய்தியை உள்ளார்ந்த சிலிர்ப்புடன் கிரகித்து ஏற்றுக்கொள்ள இயலாதவளாய் அவள் மனம் பேதலித்துப் பலவீனப்பட்டுப் போயிருந்தாள்.

சராசரிப் பெண்களைப் பொறுத்தவரை அந்தச் சாமத்திய நிகழ்வும் அதையொட்டிய சடங்குகளும் இயல்பாக அவர்களைப் புல்லரிக்க வைத்துத் தேரிலேற்றி விடுகின்ற ஓர் உன்னத வாழ்க்கை வரம் போலப்பட்டாலும் அவளுக்கென்னவோ வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளப் போகின்ற ஒட்டு மொத்தச் சவால்களின் மூலக்கூறாகவே அது அவளை மிகவும் எரிச்சல் கொள்ள வைத்தது. ஓர் ஆணின் கையில் இரையாக வந்து விழக்கூடிய தயார்படுத்தலின் உச்சகட்ட விளைவாகவே அதைக்கருத நேர்ந்ததால் அவளுக்குண்டான பின்னடைவு குறித்து யாருமே அவ்விடத்தில் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவளுக்கு முன்னதாகவே இரண்டு அக்காமார் கல்யாணக்கனவுகளோடு காத்திருக்கும் கனவு முகங்கள் அவர்களுக்கு இப்போது இவளும் தங்கள் வழிக்கு வந்து விட்டதாக ஒரு குதூகலிப்புச் சந்தோசம் அவர்களுக்கெல்லாம் அவளைச் சூழ நின்று வேடிக்கை பார்க்கவும் அவர்கள் தவறவில்லை. சாராதவுக்கு அவர்களை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருந்தது. அவர்கள் அறியப் பிரகடனமாகி இருக்கிற தன்னுடைய இந்த இழப்பின் நிமித்தம் முகத்தில் அறைந்து கொண்டு ஓவென்று கதறியழவேண்டும் போல் அவளுக்கு நெஞ்சு பிளந்து ரணமாகிவிட்டிருந்தது. அம்மாவைத் தான் காணோம். அவள் மாமிக்கு அழைப்பு விடுpப்பதற்காகப் போனவள்தான் இன்னும் வந்து சேரவில்லை அவள் ;கண்டு இதைப் பற்றிச் சொல்லியிருக்காவிட்டால் சாரதா அதை ஒருகெட்டகனவாக மறந்து மூடி மறைக்கவே முயற்சித்திருப்பாள்.

மாலையில் பள்ளிவிட்டு வந்ததும் அவள் உடல் அசதியோடு புத்தகப்பையை மேசைமீது இறக்கி வைத்து விட்டு ஒன்றுக்கு நிற்பதற்காகக் கோடிப்பக்கமாகப் படியேறிப் போன போது எப்படியோ அம்மாவின் கண்களில் அது பட்டுவிட்டது. அவளுடைய உள்பாவாடையின் பின்புறமாக இரத்தக்கறை பரவியிருப்பதைப் பார்த்து அவள் சமீபமாக நெருங்கி வந்து கேட்டாள்

‘அதென்னடி பாவடையிலை?’

‘தெரியலையே’

‘நீ சாமத்தியப்பட்டு விட்டாய்’

‘அப்படியென்றால் என்ன?’சாமர்த்தியம் தான் சாமத்தியமாக மாறியதோ? எதற்குச் சாமர்த்தியம் வேண்டும்? ஒரு புருஷன் காலில் விழுந்து அடிமை விலங்கைப் பூட்டிக்கொண்டு வாழ்க்கையைக் கழுவாய் சுமக்கவா இந்த அசாதாரண சாமர்த்திய நடைமுறைக் கோலம். அப்பப்பா! என்னவொரு பெரிய கொடுமை. பெண் என்பவள் இப்படி அடிமைப்பட்டுச் சிலுவையில் தொங்கவா அவளுக்கு இந்த வாழ்ககை வரம்.

சாரதாவுக்கு நெஞ்சு குலுங்கி, அழுகை முட்டியது. அவள் சோகம் கவிந்த கண்களோடு வெறுமனே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வழிவிட்ட வானம் இன்னும் அவளை வா என்று அழைக்கிறது. அதற்குக் கீழே கண்களுக்குள் களைகட்டி நிற்கும் உயிர்வார்ப்பான அவளுடைய அந்தச் சின்னஞ்சிறு கிராமம். இன்றுவரை அதுதான் அவளுடைய உலகம். அங்கெல்லாம் கால்போனபடி சுயாதீனமாகச் சுற்றி திரிந்தவள் தான் அவள் அப்போது கூட இந்தச் சமூகம், கொள்ளிக்கண் மனிதர்கள் அவளை விட்டு வைக்கவி;லiயே. குறிப்பாக மாமிதான் அவள் மீது எறிகணை எறிபவள். பனைவடலி ஒற்றையடிப்பாதையூடாகஅவள்அம்பலவாணர் வீட்டிற்கு ஆனந்த விகடன் படிக்கப் போகும் போது ஜன்னல்வழி பார்த்து மாமி வக்கணையாகப் பேசும் குரல் காற்றில் அலை பாய்ந்து அவளைத் துரத்திக் கொண்டு வரும் சமயம் அதை ஜீரணிக்கத் திராணியற்று அவள் நிலையழிந்து நின்று கொண்டிருப்பாள்.

‘ ஏய் சாரு உங்கை எங்கே போறாய்? வீட்டிலை இருந்து வேலை பழக வேண்டாமே நீ நீ பொம்பிளைப் பிள்ளையல்லே!

‘நான் ஆணாக இருந்திருந்தால் மாமி ஏன் இவ்வாறெல்லாம் கேட்கப் போகிறாள்? ஆணாகப் பிறக்காமல் விட்டது நான் செய்த பாவம். பெண்ணகப் பிறந்து தொலைத்தது அதைவிடப் பெரிய பாவம். சீ நான் பிறந்திருக்கக் கூடாது.’

வேலிக்கு வெளியே மாமி புடைசூழ அம்மா ஆரவாரமாக வந்து கெண்டிருந்நதாள். அவள் கையில் ஏதோ ஏந்தியபடி வந்தாள். என்னவாக இருக்கும்? சாரதா அரையில் கட்டக் கட்டாடி கொண்டுவந்த புடைவைதான் அது.

இனியாவது இலட்சனமாக இரு என்றாள் மாமி. இதுவரை நான் எப்படி இருந்தேன் என்று கேட்கத்தோன்றியது சாரதாவுக்கு. காற்றில் பறந்த என் இறக்கைகள் பொய்யா என்று கேட்க நினைத்தாள். அப்படியென்றாள் எதெல்லாம் மெய்? இவர்கள் என்ன சரித்திரம் சொல்கிறார்கள் கற்பைப் பற்றி வேறு கதையாய் அளக்கிறார்களே. அவள் ஒரு ரிஷி பத்தினி போல இருக்க வேண்டுமா? கற்பு என்னும் கிரிppடம் அவள் தலையில் சுமக்க வேண்டுமா? நல்ல கதை. புருஷர்களுக்கோ ஒன்றுமே வேண்டாம். அரச பீடம் உயர்ந்த சிம்மாசனம் அதில் ஏறி ஆளப்பிறந்தவர்களின் காலடி மண்ணைத் ;தின்னும் புழுக்களைப் போலப் பாவம் இந்தப் பெண்கள். சாரதாவுக்கு எல்லாம் வெறுத்துப் போய் கண் முன்னே உலகம் மீதான உணர்வு.எதுவும் பிடிக்கவில்லை. நிழலும் கரித்தது.

அம்மா இதில் எந்த மனக்குறையும் இல்லாமல் சாரதாவுக்கான சடங்குகளை கூட்டுச் சேர்ந்து செய்யத் தயாராகிக் கொண்டிருந்தாள். குப்பை மீது அவளை இருத்தி தோய வார்த்தார்கள். இது முதலாவது தண்ணிpர் வார்ப்பு. இரண்டாவதாக ஒரு சடங்கு இருக்கிறது. அன்றைக்குச் சாரதாவுக்குப் பட்டுப் புடைவை எல்லாம் கட்டித் தலை சீவிச் சிங்காரித்து நகைகள் போட்டு அலங்காரங்கள் கண்ணைப் பறிக்கும். அதற்கும் அம்மாவுக்கு வக்கில்லை. சித்தியின் இரவல் பட்டுப்புடைவைகளும் நகைகளும் தான் அம்மாவிடம் இப்போதைக்கு வெறும் தாலி மாத்திரம் தான் இருக்கிறது. சாரதாவின் அப்பா ஏழை உபாத்தியாராக இருப்பதால் அண்ணனின் படிப்புச் செலவுக்காக அம்மாவின் நகைகள் கரைந்து போயின. அக்காமாரின் சடங்குகளும் இந்த வழியில்தான் நடந்தேறின. மூன்றாவதாக அவர்களுக்குப் பின்னால் சாரதாவும் வயதுக்கு வந்து வாழ்க்கைக்காகத் தயாராகிவிட்ட நிலை.

சாரதாவுக்கு அந்த வாழ்க்கை வேண்டாம் என்றிருந்தது. அப்படி ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விட்டில் பூச்சிகளாகச் செத்து மடிந்த அவலைப் பெண்களின் கதைகள்; அவள் அறியாதது அல்ல. அதிலிருந்து மீட்சி பெற்றுத் தான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அவள் விரும்பினாள். கல்யாணமானால் அது வெறும் பகற்கனவு தான். அம்மா தலைதுவட்டி உச்சி வகிட்டில் பவுடர் தேய்த்து சலவை செய்த சாதாரண நூற்புடைவையை இடுப்பில் கட்டிய போது இந்த அறையை விட்டு ஓடிவிடலமா எனத் தோன்றியது. அவளுள் சோகம் கலந்த மௌனம் கனத்தது.

மாமி இன்னும் போகவில்லை வெளிவராந்தலில் அமர்ந்து அப்பாவுக்கு ஏதோ மந்திரம் ஓதிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பிள்ளைகள் கிடையாது. கணவன் ஆசிரியராக இருக்கிறார். அவர் போன பிறகு மதியம் வரை அவள் பொழுது சாரதா வீட்டிலேயே கழியும். வேத பிரகடனமாக வாழ்க்கையின் நடைமுறை பிசகாத சித்தாந்தங்கள் குறித்து உரத்த குரலில் வாய் ஓயாமல் பேசிக்கொண்டேயிருப்பாள். அம்மாவுக்கு வழிகாட்டுகிற ஒரு மந்திரி போல அவள். அவளுக்குக் கனத்த தொண்டை.

சாரதா அவள் குரல் வராதவாறு அறை ஜன்னலையும்,கதவையும் இழுத்து மூடிவிட்டுப் படுக்கப் போனபோது அம்மா கையில் குவளையுடன் அவளை அழைத்த குரல் கேட்டது.

‘என்னம்மா…?’

‘இந்தா கத்தரிதிக்காய் சாறும், நல்லெண்ணையும் கலந்து கொண்டு வந்திருக்கிறன் குடிச்சிட்டுப் பிறகு சாப்பிடலாம்’

‘எதுக்கம்மா இதெல்லாம்’

‘அப்பதான் வயிறு பலக்கும். சுகமாகப் பிள்ளை பெற முடியும்’

சாரதாவுக்கு இப்பொழுதே வயிற்றைக் குமட்டியது. பெண்ணாகப் பிறந்து விட்டால் எவ்வளவு சோதனைகள். அம்மாவே அதற்கு உதாரணம். அவள் நிம்மதியாக மூச்சுவிட்டு அவள் பார்த்ததில்லை. யந்திர கதியான ஒரு வாழ்க்கை அப்பாவுக்கு அடிமைப்பட்டு அவள் என்ன சுகத்தைக் கண்டாள்.மாமி வேறு எந்நேரமும் கரித்துக் கொட்டியபடி அம்மா ஒரு வாயில்லாப் பூச்சி. கத்தரிக்காய் சாறை எப்படியோ மென்று விழுங்கிவிட்டுச் சாரதா கேட்டாள்.

‘என்னம்மா யோசிக்கிறியள்’?

‘நாளைக்கு அண்ணை வாறதாகத்தந்தி வந்திருக்கு’.

‘நான் கூட்டிவர ஸ்ரேஷன் வரை போகட்டே?’

‘சீ: நீ இனி அங்கெல்லாம் போகக்கூடாது’

‘ஏனம்மா?..’

‘ஒரு முறை சொன்னால் விளங்க வேணும் நீ இப்ப குழந்தையில்லை’

அதைக்கேட்டவாறே சாரதா மௌனமாக இருந்தாள். அவளுடைய உலகம் அந்த இருண்ட கூட்டிற்குள்ளேயே சுருங்கிவிட்டதாய் உணர்ந்தாள். உச்சி குளிர்ந்த புல்லரித்துப் போன சந்தோஷநாட்களைக் கொண்ட அவளுடைய அந்த பால்ய வயது சகாப்தம் இனித்திரும்பி வராதென்பதை அவள் பெரும் மனக்கவலையுடன் நினைவு கூர்ந்தாள்.

முன்பெல்லாம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அண்ணன் வரும்போதெல்லாம் அவனைக்கூட்டிவர அவள் ஸ்டேசனுக்கே போய்விடுவாள். அப்பவெல்லாம் ரயில் இருந்தது. செந்தூரன் அண்ணனென்றால் அவளுக்கு உயிர். ஒரே ஒரு அண்ணன் தான். அவனுக்குக் கீழே மூன்று பெண்கள். அவர்களைச் சுமக்கின்ற பெரும் பொறுப்பு அவனுக்கு. மூத்த அக்கா பவானி. கல்யாண வயதில் இருக்கின்றாள். செந்தூரன் படிப்பு முடிந்தால் தான் அவளுடைய கல்யாணத்தை நிறைவேற்றலாமென்று அப்பா சொல்லிக்கொண்டிருக்கிறார். அடுத்தவள் சுபாஷினி. அவளுக்குக் கீழே தான் இந்தச் சாரதா. அவள் அக்கினித் குண்டத்திலே பிரகாசிக்கும் நெருப்பு மாதிரி. அவளுடைய வாழ்க்கைச் சத்தியம் அத்துணை புனிதமானது.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *