கொன்றால் பாவம் தின்றால் போகும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 5,284 
 
 

ஒரு நாள் சேரா என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாட போனான். அப்போது அங்குள்ள முள்புதரில் அழகான வெள்ளை முயல் ஒன்று தவித்துக் கொண்டிருப்பதை அந்த வேடன் பார்த்தான்.

முள்புதர் அருகே சென்ற சேரா முட்களையெல்லாம் விலக்கிவிட்டு அந்த முயல் குட்டியை பத்திரமாக மீட்டெடுத்தான்.

‘ஏனோ சேராவுக்கு அந்த முயல்குட்டியின் மீது பரிதாபம் உண்டானது.’

மலையடிவாரத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு முயலை வேடன் கொண்டு போனான். வேட்டைக்கு சென்ற கணவன் கையில் முயலோடு வருவதைக் கண்ட வேடனின் மனைவி குழலிக்கு மனம் குதூகலித்தது. நீண்ட நாட்களாக தான் முயல்கறி சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு, அந்த ஆசை இன்று நிறைவேற போகிறது என்று எண்ணி அவள் சந்தோஷப்பட்டாள்.

வேகமாக ஓடிப்போய் கணவனின் கையிலிருந்த முயலை வாங்கியவள், ‘ஆஹா நல்ல கொழுத்த முயல்” இதை கொன்று சமைத்தாள் இரண்டு நாளைக்கு வரும் என்று சொன்ன மனைவியை சேரா வழிமறைத்தான்.

‘குழலி இந்த முயலை கொன்று சாப்பிடுவதற்காக நான் கொண்டு வரவில்லை. கொஞ்சம் இந்த முயல்குட்டியை பார் வெள்ளை வெளேர்யென்று எவ்வளவு அழகாக இருக்கு!இதை எப்படி கொன்று சாப்பிட மனசு வரும்?  உனக்கு சாப்பிட கிழங்கும், வேர்க்கடலையும் கொண்டு வந்திருக்கிறேன், இன்று இதை சாப்பிடு. நாளை கட்டாயமாக உனக்கு வேறு  ஏதாவது ஒரு மாமிசத்தை கொண்டு வருகிறேன்’ என்றவன், அந்த முயல்குட்டியை பஞ்சார கூடையை போட்டு மூடிவைத்தான்.

குழலியின் ஆசை நிராசையானது. கிழங்கும், வேர்க்கடலையும் குழலியின் தொண்டைக்குள் இறங்கவே இல்லை. அவள் கண்கள் பஞ்சார கூடைக்குள் இருந்த முயல்குட்டியின் மீதே இருந்தது.

பொழுது விடிந்ததும் வழக்கம் போல சேரா காட்டிற்கு வேட்டைக்கு சென்றுவிட்டான். கணவன் வெளியில் சென்றதை உறுதி செய்துக்கொண்டவள், பஞ்சாரக் கூடைக்குள் இருந்த முயலை கையில் எடுத்தாள்.  சிறிது நேரத்தில் அந்த முயல்குட்டி குழம்பு சட்டிக்குள் கொதித்தது.

மெய் மறந்து போய் குழலி முயல்கறியை ருசித்து, ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சேரா வீட்டிற்கு வந்துவிட்டான். தன் மனைவி மாமிசம் சாப்பிட்டுக்கொண்டிருப்பதையும், பஞ்சாரக் கூடையையும் பார்த்தவனுக்கு புரிந்துப்போனது. அந்த அழகான முயல்குட்டி தன் மனைவியின் வயிற்றுக்கு இரையாகிவிட்டதென்று. மனைவியிடம் கோபித்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே சென்றவன் மீண்டும் மாலையில் தன் வீட்டிற்கே திரும்பி வந்தான்.

கோபமாக இருக்கும் தன் கணவனை குழலி சமாதானம் செய்தாள்.

‘இதோ பாருங்க வேட்டையாடுவது நம் குலத்தொழில். இன்னைக்கு முயல்குட்டி மேல இரக்கப்பட்ட நீங்க நாளைக்கு ஒரு அழகான புள்ளிமானை பார்த்து ‘அடடா இந்த புள்ளிமான் எவ்வளவு அழகாக இருக்குது! இதைக் கொன்று நாம் சாப்பிடவேண்டுமா?’ என்று உங்க மனசு நெனைக்கும். இப்படி ஒவ்வொரு விலங்கின் மீதும் உங்களுடைய இரக்க குணம் நீண்டுக்கொண்டே போனால் பிறகு நாம் பட்டினியாகதான் இருக்க வேண்டும். இந்த உலக்தில் ஒரு உயிரைக் கொன்று சாப்பிட்டுத்தான் இன்னொரு ஜீவன் உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது’ என்றால் குழலி.

தன் மனைவியின் வார்த்தையில் உள்ள அர்த்தம் வேடன் சேராவுக்கு புரிந்தது.

பிறகு கோபம் களைந்து மனசு மாறியவன் மனைவி ஆசையாக சமைத்த முயல்கறியை ருசிப்பார்ததான்.

‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற பழமொழி வேடன் சேராவின் விசயத்தில் உண்மையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *