கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2024
பார்வையிட்டோர்: 1,152 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கம்போல் பானுவின் தள்ளு வண்டி ‘பார்க்’ நோக்கிப் புறப்பட்டது. பானுவின் சின்னஞ் சிறு வாயிலிருந்து சிதறிக்கொண்டேயிருக்கும் மழலை மொழிகட்குப் பதில் பேசியவாறு வண்டியைத் தள்ளிக்கொண்டு போனாள் பார்வதி. பானுவுக்கு வயது ஆறுகூட ஆகவில்லை. வீட்டில் துரு துரு, என்று சும்மாயிருப்பதில்லை. முக்கியமாக அப்பா அம்மாவைப் பேச விடுவதில்லையென்றால் பாருங்களேன்! காலையிலிருந்து கிராமக்கணக்கு வழக்கு, குத்தகைதார் பணம் பட்டுவாடா, கிசான் தொல்லை; வியாபாரப் பிரச்சினை இவ்வளவையும் கவனித்துவிட்டு ஆறுமணிக்கு மேல்தான் நல்லகண்ணுப் பிள்ளைக்கு ஓய்வு. அந்த நேரத்தில் ஒரு விநாடிகூட வீணாகப் போய்விடக்கூடாது என்பது பிள்ளையின் நோக்கம். ஆறு மணி வரும் என்று எதிர்பார்த்திருக்கும் கருணாம்பாள் – ஆமாம் அவரது மனைவி அந்த அம்மையாரும் அந்த ஓயா உல்லாசத்தைத் தான் விரும்பினார்கள். அவர்களின் இனிய பொழுதை – அந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளை தொடர்ச்சி கெடும்படி நடுநடுவே அறுத்துவிடும். என்னதான் புத்திர பாசமிருந்தாலும் சற்றுநேரம் யாருடைய தொந்திரவுமின்றி இருக்கத்தான் கருணாம்பாளின் மனம் விரும்பியது. அதுவுமென்ன ? அந்தத் தம்பதி ஏழைகளா, இன்பம் என்ன நிறம் என்று கேட்க ? குடிசை மன்னர்களுக்கும் ராணிகளுக்கும் தான் தங்கள் வறுமை ராஜ்யத்தில் இன்பத்துக்காக ஒருசில நிமிடங்கள் கூட ஒதுக்க முடியவில்லை. கடன்காரர் படையெடுப்பு; தயிர்க்காரி முற்றுகை; இவ்வளவையும் சமாளித்துவிட்டு, இரவு கருணை கூர்ந்து தருகிற சில மணி நேரங்களில் கர்ம வினையை நினைத்துப் புலம்பவும் கடவுளை எண்ணி அழவும் போனது போக, மிச்ச நேரத்தை எப்போதாவது பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் ஏழை சாம்ராஜ்யத்தில் பிரஜைகள் அதிகம். ஏழெட்டுக் குழந்தைகளுக்குக் குறையாது. ஏழாவது குழந்தை, முதல் குழந்தையைவிட ஆறுவயதுதான் இளையதாயிருக்கும். கருணாம்பாளைப் போலக் காசைத் தூசாக மதித்துக் கர்ப்பப்பையை மாற்றிப் போட வசதியா படைத்திருக்கிறார்கள் அந்தப் பரிதாப ஜந்துக்கள் ? 

இளமை தேயாதவன் எழில் குறையாதவன் – இப்பேர்ப்பட்டவனைத்தான் பார்வதி கணவனாகப் பெற்றிருந்தாள். அவன் ‘மில்’ வேலை முடிந்து ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திருப்பான். அவனை வரவேற்று உபசரிக்க அவளுக்கு வேலை ஒழியவில்லை. எஜமானுக்கும் எஜமானிக்கும் தேவையான ஓய்வுக்காக – அந்த ஏழையின் இளம் மனைவி பார்வதி தன் பருவ உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு பானுவைப் ‘பார்க்கு’க்கு அழைத்துச் சென்றாள். ஒரு நாள் மட்டுமா ? இல்லை. நாள்தோறும். அவள் பெண்ணல்ல, இந்த உலகத்தில் ஒரு மாடு பகல் முழுதும் எலும்பு முறிய உழைப்பது போல வீட்டு வேலைகள். அவளுக்கு எஜமான் மாளிகைதானே வீடு ? மாலையில் சூரியனுக்குக்கூட வேலை முடிகிறது. ஆனால் பார்வதிக்கு ? இதை அவளால் நினைக்கத்தான் முடியவில்லை. நெஞ்சைத் தான் படைத்தானே அந்த நேர்மையற்றவன், வயிற்றையும் ஏன் படைத்தான் ? 

யார் . . . யாரைக் கேட்பது? 

பூஞ்செடிகளின் அசைவைப் பூங்கொத்துகளின் அழகைப் பானுவுக்கு காட்டித் தானும் ரசித்துக் கொண்டிருக்கையில் … வானம் கறுத்துக்கொண்டு வருவதைக் கண்டாள். மாதம் முடிந்து சம்பளம் கேட்கும்போது, அதைவிட அதிகமான கறுப்பை எஜமானின் முகத்தில் பார்வதி அடிக்கடி பார்த்திருக்கிறாள். பழகிப்போனபடியால் வானத்தின் மாற்றத்தை லட்சியம் செய்யாமலே வீடுநோக்கி நடந்தாள். அவள் மன அலைகள் எல்லாம் அன்று … அத்தான் . . . மூக்குத்தி . முத்தப் போட்டி . . இவற்றிலே மோதிக் கொண்டிருந்தன. இன்பக்கனவு இல்லாவிட்டால் அவள் உலர்ந்த உதடுகளில் புன்னகை தலை நீட்டியிருக்காதல்லவா ? சுவையான கனவு என்பதால் தான் கண்கள் அப்படி மின்னிக் கொண்டிருக்க வேண்டும். அத்தான் முத்தம் தருவது போன்ற கனவோ – அல்லது முதல்நாள் தந்த நினைவோ – அவள் கன்னங்கூடக் குப்பென்று சிவந்து விட்டது. 

ஒன்றுமில்லை; மூக்குத்தி வாங்கி வருகிறான் அத்தான். பல நாளாகச் சேர்த்த காசு மூக்குத்தியாக உருவெடுக்கிறது. துடைப்பக் குச்சியை எடுத்து தூர எறிந்துவிட்டுப் பார்வதியின் மூக்கில் அவனே அந்த ஆபரணத்தை அணிவிக்கிறான். கறுத்த மேனியில் அந்த வெள்ளை மூக்குத்தி பளிச்சிடுவது, நீலவானத்தில் நிலா கிளம்புவதை நினைவூட்டுகிறது. “பார்வதி எங்கே?” என்று அத்தான் தன் உதடுகளை மொக்காக ஆக்குகிறான். பார்வதியின் இதழ்களும் குவிகின்றன. மொட்டுகள் மோதி மலர்ந்து விடுகின்றன. ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ – ஒரு முக்கியபகுதி நடந்தேறுகிறது. 

கனவு மங்களம் பாடுகிறது. பார்வதி சுய நினைவு பெறுகிறாள். வண்டியில் பானு “மழை வருது மழை வருது” என்று பாட ஆரம்பித்து விடுகிறது. இரண்டு கனமான மழைத்துளிகள் பார்வதியின் முகத்தில் விழுந்து சிதறின. 

உலகை அதிரச் செய்யும் இடிகள் – வான மனிதனின் அகோரச் சிரிப்பு. பயங்கர மின்வீச்சு – கடலைக் கவிழ்த்து விட்டதுபோல மழை இமயம் உருண்டு விந்தியத்தில் மோதிடுவது போன்ற அதிர்ச்சி. 

பார்வதிக்கு பானு நனைந்துவிடுவாளே என்ற பயந்தான். பாவம்- அந்த ஏழைக்கு எஜமான் வீட்டில் – இல்லை இல்லை குழந்தையின் மேல்’ அவ்வளவு பாசம்! மனிதவர்க்கம் என்பது ஏழைக் கும்பல்தானே! பணக்கார மனிதர், மிருகக் கூட்டம். அதில் மனிதர்களும் தவறிப் பிறப்பதுண்டு. ஏழை மனிதர் குழுவில் துன்பம் தாங்கமாட்டாமல் மிருக வளர்ச்சியடைவோருமுண்டு. அந்த வளர்ச்சி இன்னும் பார்வதியைப் பீடிக்கவில்லை. இதெல்லாம் கேட்டு ரஷ்யப் பேச்சு என்பார் நல்ல கண்ணுப் பிள்ளை. ரஷ்யா என்றால் அவருக்கு விஷம் சாப்பிடுகிற மாதிரி. 

பார்வதி நன்றாக நனைந்துவிட்டாள். குழந்தைக்கு ஒரே பயம்; அலற ஆரம்பித்துவிட்டது. மரத்தடியில் நின்றுவிட்டாள் பார்வதி. அவ்வளவு கஷ்டத்திலும், பயங்கரத்திலும் வரப்போகிற அந்த இன்ப வரவு அவள் முகத்தில் தனித் தெளிவை அதிகப்படுத்தியபடி இருந்தது. 

திடீரென்று அந்த மரத்தின் ஒரு பெரிய கிளை முறிந்து விழுந்தது. மழை நின்றுவிட்டது; புயல் ஓய்ந்துவிட்டது. 

நல்லகண்ணுப் பிள்ளையின் மோட்டார் வெகு வேகமாகச் சாலையில் பறந்து வந்தது. 

முறிந்து கிடக்கும் அந்த மரத்தடியில் … ‘பானு’ என்று சப்தம் போட்டபடி இறங்கினார் பிள்ளை. பானு மயக்கமாய்க் கிடந்தது. தூக்கி மூர்ச்சை தெளிவித்தார். ‘அப்பா’ என்று கண் விழித்தது குழந்தை. காரில் குழந்தையோடு ஏறி உட்கார்ந்தார். கார் புறப்பட்டுவிட்டது – டாக்டர் வீட்டை நோக்கி! 

மரத்தடியில் கிடந்த இன்னோர் உருவம் கண் விழித்தது. ‘அத்தான், அய்யோ .” நீண்ட பெருமூச்சு. கண்கள் மூடிக்கொண்டன. யார் அது “ஏழை!” 

– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *