எண்ணித் துணிக கருமம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 55

பகற் பொழுதில் இப்படியும் அப்படியும் ஓடிக் கொண்டிருந்த குள்ள நரி ஒன்று , காட்டின் நடுவே இருந்த பெரிய கிணறு ஒன்றில் விழுந்து விட்டது. கிணற்றில் இருந்து மேலே நிலப் பகுதிக்கு வர முடியாமல் குள்ள நரி தவித்தது. மூழ்கி விடக் கூடாது என்பதற்காக கிணற்று நீரில் இங்கும் அங்கும் நீந்தியபடியே இருந்தது அந்தக் குள்ள நரி. சற்று நேரத்தில் அங்கு ஒரு வெள்ளாடு வந்து நின்றது. குள்ள நரியிடம் ‘கிணற்றுக்குள் என்ன செய்கிறீர்கள் நரியாரே’ என்று கேட்டது அந்த வெள்ளாடு. ‘இதுதான் சுகமான வாழ்க்கை . மகிழ்ச்சியில் இருக்கிறேன்’ என்றது குள்ள நரி.
வெள்ளாடு ‘ என்ன சொல்கிறீர்கள் நரியாரே ‘ என்று கேட்டது . குள்ள நரி பதில் கூறியது – ‘கிணற்று நீர் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா? குளிர்ச்சியாக இருக்கிறது தெரியுமா ? மேலே வெய்யில் தாங்க முடியாது அல்லவா?‘
வெள்ளாடு ‘ஆமாம் வெய்யில் வறுத்தெடுக்கிறது என்ன செய்வது?‘ என்றது.
‘நீயும் இங்கு வந்து பார் . சூட்டின் சுவடே தெரியாமல் இங்கு இருக்கலாம்’ என்றது குள்ள நரி .
வெள்ளாடு சற்றும் எதுவும் எண்ணிப் பார்க்காமல் தந்திரமான குள்ள நரியின் பேச்சைக் கேட்டு உடனடியாக கிணற்றில் குதி்த்தது.
வெள்ளாட்டின் மீது ஏறி குள்ள நரி உடனடியாக கிணற்றிலிருந்து மேல் பகுதிக்கு வந்து விட்டது.
வெள்ளாடு ‘என்ன இது’ என்று கேட்டது. எட்டிப் பார்த்த குள்ள நரி குளுமையில் மகிழ்ச்சியாக இரு என்று கூறி விட்டு ஓடி விட்டது.
நீதி – எந்த செயலையும் சிந்தித்து ஆராய்ந்து செய்ய வேண்டும். அவசரத்தில் எதையும் செய்யக் கூடாது.
(ஈசாப் கதைகளிலிருந்து)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
