கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2023
பார்வையிட்டோர்: 14,216 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

இரவும் பகலும் நட்புடன் கைகோர்க்கும் இனிய மாலை நேரம்!

தூரத்தே தெரிந்த மலைத் தொடர்களி லிருந்து, குளிர்ச்சியை சுமந்து வந்து நரம்பு களின் நலம் விசாரிக்க ஆரம்பித்திருந்தது. தாவியணைத்த தென்றல் காற்று.

யாரும் தொடாத ஒப்பந்தம் முடிந்து, மீதமிருந்த மலர்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து மண் தொட்டன.

முப்பது நாளும் விழித்திருக்க ஆசைப்பட்ட நிலவுப் பெண். வானில் உலாவர நேரம் பார்த்துக் காத்திருந்தாள்.

தேனிக்கு அருகிலிருந்த அந்த கிராமத்தில், சிவன் கோவில் மணியோசை ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்க, தன் மெல்லிய பாதங்களைப் பதித்து, பிரகாரத்தை அப்பிரதட்சணம் செய்து கொண்டிருந்தாள், மிருணாளினி!

பார்வை பூமியில் நிலைத்திருக்க, தன்னுடைய அக்கா மீனலோசனிக்கு நல்லபடியாகப் பிரசவம் நடந்து முடிய வேண்டுமென்ற மானசீக வேண்டுதல், அவள் மனதில்

விழிகள், சற்று தொலைவில் தெரிந்த அந்த வேட்டியணிந்த பாதங்களின் மீது சென்றதும், பதைப்புடன் உயர்ந்தன.

எதிரில், முகிலனும் அவளையே கூர்மையுடன் ஊடுருவிய படி கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவள் விழிகளின் ஸ்பரிசத்தில், மனதிற்குள் மெலிதாய் ஒரு குளிர் பரவ, சட்டென்று விலகி நடக்க ஆரம்பித்தாள் மிருணாளினி.

பெரிய மீசையுடனும், கூர்மையான விழிகளுடனும், தூய கருமை கலந்த மாநிறத்தில், ஆறடி உயரத்தில், கருத்தடர்ந்த வெள்ளை வேட்டி சட்டையணிந்து அவன் கம்பீரமாக நடந்து வந்தால், அந்த கிராமமே பயப்படும்.

அந்த ஊரிலேயே பெரிய பணக்காரரும், ஊர்ப் பெரிய மனிதருமாகிய சுந்தர பாண்டியனின் ஒரே மகன்தான் முகிலன்!

‘எம்.எஸ்ஸி’ விவசாயம் படித்துவிட்டு, வயலையும் தோப்பையும் திராட்சைத் தோட்டங்களையும் தந்தையுடன் சேர்த்து நிர்வகித்து வருபவன்!.

அவள் மிகவும் கண்டிப்பானவன். சிறு தவறு செய்தால் கூடப் பொறுக்க மாட்டான். உடனே தண்டனை கொடுத்து விடுவான் என்பது, ஊர் அறிந்த உண்மை.

அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

பெரிய இடங்களிலிருந்தெல்லாம் நிறைய வரன்கள் வந்தாலும், எதையுமே தன் மனதிற்குப் பிடித்ததாக இல்லை என்று மறுத்துக் கொண்டிருப்பவன்!

நேரில் பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாக இருப்பதால், மிருணாளினிக்கு அவனைக் கண்டாலே ஒருவித பயம் எழும்… மனம் படபடக்கும்!

கோவிலில் அர்ச்சனையையும் வேண்டுதலையும் முடித்து விட்டு, மெதுவாக வீட்டிற்குத் திரும்பி வரும்போதுதான், வழியில் அவள் அந்தப் பைத்தியக்காரப் பெண்ணைப் பார்க்க நேர்ந்தது.

அவளருகே ஓடிவந்து கைநீட்டியபடி அந்தப் பெண் சிரித்ததும், மனதிற்குள் சிறு பயம் வந்தாலும், உடனே வாழைப் பழத்தை எடுத்து நீட்ட – வாங்கிக் கொண்டு ஓடினாள் அவள்.

கந்தல் உடையுடன், அங்குமிங்கும் ஊருக்குள் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் அவளைப் பார்த்தால், மிருணாளினிக்குப் பரிதாபமாக இருக்கும்.

யாரையும் தொந்தரவு செய்யாமல், கொடுப்பதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் பெரும்பாலும் கோவில் சத்திரத்தின் திண்ணையில் முடங்கிக் கிடக்கும் அவளை நினைத்துப் பெருமூச்சொன்று எழுந்தது.

மிருணாளினி வீட்டிற்குள் நுழைந்தபோது, பெரிய வீட்டிலிருந்து கணக்குப் பிள்ளையும், முகிலனின் தூரத்து உறவினரான கணபதியும் வந்திருந்தனர்.

“வாங்க!” என்று பொதுவாக அவர்களை வரவேற்று விட்டுத் திரும்பியவளை “நல்லாருக்கியாம்மா… கோவிலுக்குப் போயிருந்தியா… நல்ல சகுனம்தான்!” என்றார் கணக்குப்பிள்ளை புன்னகையுடன்.

“ஆமாம் மாமா அக்காவுக்காக வேண்டிக்கிட்டு வந்தேன்” எனும்போதே, தேம்பாவனி காபியுடன் வர, பின் அறைக்குச் சென்றாள் அவள்.

நிறைமாத வயிற்றைப் பிடித்தபடி படுத்திருந்த மீனலோசினி, அவளைக் கண்டதும் எழுந்தாள்.

விபூதிப் பிரசாரத்தை அவளிடம் கொடுத்தவள், “என்னக்கா டயர்டா இருக்கா?” என்றபோது, “ஊஹூம் ரொம்ப சந்தோஷமா இருக்கு! உனக்கொரு குட் நியூஸ்… சுந்தர பாண்டி ஐயா வீட்டில் இருந்து, உன் ஜாதகத்தைக் கேட்டு அவங்க ரெண்டு பேரும் வந்திருக்காங்க. அவங்க பையன் முகிலனைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு நியாவது வசதியா சந்தோஷமா இருக்கணும், மிருணா” என்றாள் அவள்.

உடனே அதிர்ந்து போய் அவளருகில் அமர்ந்தாள்.

“கோவில்லே அவரைப் பார்த்தேன்… எனக்கு என்னமோ அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு!” மனம் சிறகாய் படபடக்க, பதைப்புடன் கூறினாள்.

“ஓ பொண்ணும் மாப்பிள்ளையும் கோவில்லே வச்சே பார்த்துக்கிட்டாச்சா? எங்களுக்குத் தெரியாம என்னென்னவோ நடந்திருக்கு, இரு. நான் அப்பாகிட்டே சொல்றேன்” – சிறு கேலியிருந்தது அவள் குரலில்.

“ப்ளீஸ்….அக்கா…வேண்டாமே! நான் மேலே படிக்கனும். வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறேன். அதோட மாப்பிள்ளை, மாமா மாதிரி அமைதியா சாதுவா இருந்தாலாவது பரவாயில்லை! பெரிய மீசையும் முரட்டு உருவமுமா – பாக்கவே பயமா இருக்கு! கனவில் வந்தாக்கூட, தூக்கம் வராது போலிருக்கு!” என்றாள் மிரட்சியுடன்.

“முரட்டுத்தனமா இருந்தா கெட்டவங்கன்னோ, பார்க்க சாதுவாத் தெரிஞ்சா நல்லவங்கன்னோ அர்த்தமில்லை மிருணா! மனுஷங்களோட உருவத்தை வச்சு குணத்தை எடைபோட முடியாது. உனக்குச் சீக்கிரமே ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு நான் வேண்டிட்டிருக்கேன்.” மீனா ஒரு பெருமூச்சுடன் கூறினாள்,

“ஏன்க்கா! மாமாதான் ரொம்ப நல்லவராச்சே. உன் அதிர்ஷ்டம், உனக்கு நல்ல கணவராக் கிடைச்சிருக்காரு” என்றபோது, மீனாவிடமிருந்து சிறு புன்னகையே பதிலாய்!

அப்போது அறைக்குள் வந்தார் தேம்பாவனி

“என்ன.. வந்தவுடனே அவகிட்ட எல்லாம் சொல்லி முடிச்சாச்சா… என்ன சொல்றா உன் தங்கச்சி…?” என்றார் ஆர்வத்துடன்.

“நீங்களே கேளுங்க… அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலையாம். படிக்கணுமாம். இப்பக் கல்யாணம் வேணாம்னு சொல்றா!”

“எந்தப் பொண்ணுதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுவா. நீ கூடத்தான் மாட்டேன்னு அழுதே! இப்ப..” சட்டென்று நிறுத்தினார் அவர்.

கணக்குப் பிள்ளையையும், கணபதியையும் அனுப்பி விட்டு உள்ளே வந்த சொக்கலிங்கம்,

“மிருணா… கணபதி, ஜாதகம் கொடுத்துட்டுப் போனாரு. உன் ஜாதகத்தையும் கொடுத்து அனுப்பி இருக்கேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க நல்ல மனுஷங்க! இந்த இடம் அமைஞ்சதுன்னா, நமக்குப் பெரிய அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்.” ஆர்வத்துடன் கூறினார்.

சொக்கலிங்கம், அந்த ஊரில் போஸ்ட் மாஸ்டராகப் பணி புரிபவர்! சொந்தமாக வீடும், நிலங்களும் இருப்பதால். ஓரளவுக்கு வசதியாகவே, – முதல் பெண்ணின் திருமணத்தை போன வருடம் நடத்தி முடித்திருந்தார்.

யோசனையுடனிருந்த இளைய மகளைப் பார்த்தவர். “என்னம்மா… பதிலே வரலை?” என்று கேட்கவும், “அவளுக்கு மேலே படிக்கணுமாம்!” என்றாள் தேம்பாவனி.

“படிக்கணும், அவ்வளவுதானே? அவங்ககிட்டே சொல்லுவோம்… ஒத்துக்கிட்டாங்கன்னா கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில படிக்கட்டும். வாழ்க்கையில, அதிர்ஷ்டம்கிறது எப்பவாவதுதான் கதவைத் தட்டும் மிருணா. அது வரப்பவே பயன்படுத்திக்கணும்” என்றார் முடிவாக.

ஆனால் அவள் மனம் ஏனோ சமாதானமடைய மறுத்தது.

அவனுடைய பெரிய மீசையும், முரட்டுத்தனமான உருவமும், கூர்மையான விழிகளும் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து, மனதின் உள்ளே ஒருவித விதிர்ப்பை ஏற்படுத்தின.


கல்லூரிக்குச் சென்று திரும்பி வரும்போது நல்ல மழை பொழிய ஆரம்பித்தது.

மேகத்தூரிகை கொண்டு வானம், மழை ஓவியத்தை பூமியில் வரைய ஆரம்பிக்க, மரங்களும், மலர்களும் அதற்கு வண்ணம் சேர்த்தன.

மழை என்றால் மிருணாவுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கையிலிருந்த புத்தகங்களை எல்லாம் ஹேண்ட் பேக்கினுள் வைத்தாள்.

குடையையும் விரிக்காமல் முகத்தில் பன்னீர் சிதறல்களாய் மழைத்துளிகளை ஏந்தி ரசித்தபோதுதான். கார் ஹாரனின் ஒலி அவளை உசுப்பியது.

யாரோ தவத்தைக் கலைத்துவிட்ட ரிஷியைப் போல் கோபத்துடன் திரும்பியவளின் பார்வை, அந்தக் காரிலிருந்து குடையுடன் இறங்கிய முகிலனைக் கண்டதும், ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.

கொடி போன்ற உடலுடன், தந்தச் சிற்பம் போல் உயரமாக, கறுப்பு வைரமாய் ஒளிரும் விழிகளுடன், அழகின் மொத்த உருவமாய் நின்றிருந்தவளை ரசித்தபடி, வேகமாக, அவளருகில் வந்தான்.

“ஏன் இப்படி மழையில நனைஞ்சிட்டு நிக்கறே. காய்ச்சல் வந்தா என்ன செய்யறது?” ஆழ்ந்த குரலில், சிறு கோபத்துடன் கேட்டான்.

‘நீ எதுவும் செய்ய வேண்டாம்…’

உதடு வரை வந்த வார்த்தைகளை மறைத்து, பதிலேதும் கூறாமல் அவன் தந்த குடையையும் மறுத்து, தன்னிடமிருந்த குடையை எடுத்து விரித்தாள் மிருணா.

கண்களில் குறுகுறுப்புடன் அவளையே கூர்ந்தவனின் விழிகளில், சிறு ஆச்சர்ய மின்னல்!

”உனக்கும் மழைன்னா பிடிக்குமா?”

மிருதுவாகக் கேட்டவனை, நம்ப இயலாத வியப்புடன் பார்த்தவள், மெலிதான தலையசைப்புடன் விலகி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு நிமிடம் ரசனையுடன் நின்று அவளையே அளவிட்டவன், பிறகு காரில் ஏறியபோது, முன்பு கல்லூரி நாட்களில் மழை தன்னுடன் நெருங்கிய தோழமை அமைத்திருந்த ஞாபகம்!

உதடுகளில் உறைந்த புன்னகையுடன் வீட்டிற்குச் சென்றவனை, விடாமல் தொடர்ந்தன – வியப்பினால் விரிந்த மிருணாவின் அழகு விழிகள்.


அவள் வேகமாய்ச் சென்று வீட்டினுள் நுழைந்தபோது அப்பா மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பது தெரிந்தது. “மிருணா. ஏன் இப்படி நனைஞ்சிருக்கே. குடை எடுத்துப் போகலை?” வாஞ்சையுடன் கேட்டபடி அருகில் வந்தவர், உள்புறம் திரும்பினார்.

“ஒரு துண்டு எடுத்துட்டு வார்” என்று குரல் கொடுத்தார்.

அம்மா அவனைத் திட்டிக்கொண்டே தலை துவட்டிவிட “சும்மா இரு. கல்யாணமாகி நம்ம வீட்டை விட்டு இன்னும் கொஞ்ச நாளிலே புகுந்த வீட்டுக்குப் போகப் போறா…. அவளை ஒண்ணும் சொல்லாதே!” என்று அதட்டினார் லிங்கம்.

மனதிற்குள் சட்டென்று ஒருவித கலக்கம் வந்து மையம் கொள்ள, மிருணாவின் விழிகள் கேள்வியாய் உயர்ந்தன.

“அப்பா..” – அவள் மெதுவாக ஆரம்பிப்பதற்குள் “இன்னிக்கு நல்ல நாளா இருக்கேன்னு, ரெண்டு பேருமே ஜாதகப் பொருத்தம் பார்த்துட்டோம்மா. ரொம்ப அம்சமா பொருந்தி இருக்குன்னு. இப்பத்தான் கணபதி வந்து சொல்லிட்டுப் போறாரு! நீ படிக்கணும்னு சொன்னதை, நான் அவர்கிட்ட சொல்லிட்டேன். பெரியவர்கிட்ட சொல்லிடறேன் னாரு!” என்றார்.

தன்னைச் சுற்றிலும் நடக்கின்ற காரியங்கள் எல்லாம், காற்றின் வேகத்தில் செல்வதை அறிந்த மிருணா, மௌனமானாள். அப்பாவை எதிர்க்கவும், தைரியமில்லை. அம்மாவிடம் சொல்லவும் பயம்! தன் மன உணர்வுகளை, மீனாவிடம் – மட்டுமே பகிர்ந்து கொண்டாள்.

ஆனால் அவள், “அப்பா அம்மா உனக்கு நல்லதுதான் செய்வாங்க மிருணா! அதோட இந்தக் கல்யாண ஏற்பாடு உன் வாழ்க்கைக்கு எவ்வளவு பாதுகாப்பு தெரியுமா? பெரியவங்க பாத்துச் செய்யற எல்லாமே தப்பாயிடறதில்லை. நல்லதாவும் அமையும்!” – என்றாள் அழுத்தமான குரலில்.

“எப்படி? உன்னோட வாழ்க்கை மாதிரியா? மாமா அளவுக்கு யாரும் வர முடியாதுக்கா… அவர் ரொம்ப நல்லவர்!”

“ஆமாமாம்… உங்க மாமா மாதிரி, அந்த முகிலனால நிச்சயம் இருக்க முடியாதுதான்!”

அவள் வார்த்தைகளில் சிறு விரக்தி இழையோடியது.

‘”சரி! நீங்க ரெண்டு பேரும் குழந்தைக்கு என்ன பெயர் செலக்ட் பண்ணி இருக்கீங்க?”

அவள் ஆவலுடன் கேட்க, “உன் மாமாவுக்கு அதுக்கெல்லாம் ஏது நேரம்?” சிறு அலுப்புடன் கூறினாள் மீனா.

“ஏன்க்கா… வர வர ரொம்ப விரக்தியாய் பேசறே? மாமாவுக்கும் உனக்கும் நடுவில ஏதாவது பிரச்னையா?”

”சேச்சே… அதெல்லாம் இல்லை! குழந்தைக்கு நீயே பெயர் செலக்ட் பண்ணிச் சொல்லேன்.”

“ம்… நான் முன்னாடியே யோசிச்சி வச்சிட்டேன் ஆண் குழந்தையா இருந்தா ‘ஹர்ஷவர்தன்” பெண்ணா இருந்தா ‘ஹம்சத்வனி!’ ஓகேயா…? சிரிக்கா!” மிருணா புன்னகையுடன் கேட்க மீனா நிறைவுடன் தலையசைத்தான்.

‘புன்னகை’ மிகப் பெரிய சமாதானத் தூதுவன்!

பலரையும், அவர்களை அறியாமலே சாய்த்து விடுகின்ற வல்லமை படைத்த அந்த பலமான ஆயுதம், இப்போது, சுலபமாக மீனாவையும் வசப்படுத்திக் கொண்டது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *