அலா’ரம்’






காலை 11.35 மணிக்கு மேல் இருக்கும்,
தையல் மிசின் சப்தம் , இடையூறாக இருக்க , சட்டென்று கண்களை திறந்தான் வெங்கடேஷ்.
மனைவி கலா, தையல் மிசினில் துணிகளை தைத்து கொண்டு இருந்தாள்.
கண்களை மெதுவாக திறந்தான். தன் அருகில் இருக்கும் அலாரம் வைத்த கடிகாரத்தை பார்த்தான். கடிகாரம் ஓடாமல் நேரம் 11.10ல் நின்று இருந்தது.
பதட்டமானான். சட்டென்று சுவற்றில் உள்ள கடிகாரத்தை பார்த்தான்.
11.40 நெருங்கிவிட்டது. அவன் 11.15க்கு அலாரம் வைத்து இருந்தான்.
பதட்டமாக வெங்கடேஷ் எழுந்தான்.
“என்னடி, மணிஆச்சு உசுப்பல?. அலாரம் நின்னு போயிருக்கு , நான் தினமும் எத்தனை மணிக்கு எந்திரிப்பேன்னு உனக்கு தெரியாதா?” என்று மனைவி கலாவை நோக்கி கோபமாக கூறினான்.
அதற்க்கு அவனை கண்டு கொள்ளதவளாய் கலா தன் தையல் வேலையை பார்த்து கொண்டு இருந்தாள்.
வெங்கடேஷ் எழுந்து , முகத்தை கழுவி , அரைகுறையாக பல் விளக்கி , தலையை சீவி , அடுத்த ஐந்து நிமிடத்தில் தயார் ஆனான்.
வேகமாக தன் சட்டையில் உள்ள பையில் கைவிட்டு பார்த்தான். இருநூறு ரூபாய் இருந்தது.
“என் செல்ல பொண்டாட்டி , “ என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“சரி நான் போய்ட்டு வாறன்” என்று கிளம்பினான் வெங்கடேஷ்.
அப்போதும் அவனை கண்டு கொள்ளாமல் கல் நெஞ்சகாரியா இருந்தாள் கலா.
அவன் கிளம்பியதை ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ளவில்லை கலா.
“இன்றைய பொழுது நல்ல பொழுதாக இருக்கட்டும்” என்று தன் முன் இருந்த கடவுளை வணங்கினாள் கலா.
சைக்கிளின் வேகம் அதிகமாக இருந்தது வெங்கடேஷ்க்கு. அவன் முகத்தில் ஆர்வம் இருந்தது , அதை விட தான் தாமதமாக எழுந்து விட்டதால் , அதனால் ஏற்பட்ட படபடப்பு, அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.
கையில் கட்டி இருந்த கை கடிகாரத்தை பார்த்தான். நேரம் 11.53 காட்டியது.
சைக்கிளின் வேகம் அதிகரித்தது. சிக்னல். வெறுத்து போனான்.
“என்னா பொழப்பு? ச்சே ! ஒருத்தன் ஒரு அவசர வேலையா போனா, குறுக்கக மறுக்க ஆளுக, வண்டி, பத்தாதிற்கு ரோடு நல்லா இல்லை, பள்ளம் குழி, இதுல இந்த சிக்னல் வேற?” என்ற புலம்பல் வெங்கடேஷ்க்கு.
சிக்னலை கடந்து வேகம் கொண்டான் வெங்கடேஷ்.
வெங்கடேஷின் முகத்தில் மகிழ்ச்சி. கடை இன்னும் திறக்கவில்லை.
கை கடிகாரம் காட்டிய நேரம் 11.58.
அரசு பார் முன் சைக்கிளை பார்க் செய்தான். பையில் இருந்த இருநூறு ரூபாய் நோட்டை ஒரு தடவை எடுத்து உறுதி படுத்தி கொண்டான் வெங்கடேஷ்.
கடை திறப்புக்கு ஆவலாக இருந்தான் வெங்கடேஷ்.
நேரம் 12.01 ,
“என்னப்பா, நைட்டு மட்டும் சரியா 10 மணிக்கு கடைய மூடிறிங்க. திறக்கிறது மட்டும் மூணு நிமிஷம் , ஐந்து நிமிஷம் லேட்டா திறக்கிறது எந்த ஊரு நியாயம்?” என்று புலம்பிய படி , தனக்கு வேண்டிய சரக்கின் பெயரை கூறி, அந்த பாட்டிலை கையில் வாங்கியதும் மட்டற்ற மகிழ்ச்சி வெங்கடேஷ்க்கு.
பிறந்த குழந்தையை கையில் தாங்கிய , மன நிலையில் வெங்கடேஷ்.
வழக்கம் போல பாட்டிலை அந்த மரத்தின் ஓரத்தில் நின்று ராவாக குடித்து , முடித்தான் வெங்கடேஷ்.
அன்றைய பொழுது அப்போது தான் திருப்தியாக இருந்ததை உணர்ந்தான் வெங்கடேஷ்.
குடிப்பதற்கு அலாரம் வைத்து, தன் குடும்பத்தினர் என்ன செய்கிறார்கள்? என்று நினைக்காமல் குடியை முக்கியமாக நினைக்கும் குடிமகன் வெங்கடேஷ்.
காலையில் எழுந்து , சாப்பாடு செய்து பிள்ளைகளுக்கு கொடுத்து , பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு, பிறகு வந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு, தையல் வேலை பார்த்து , அதில் வரும் வருமானம் கொண்டு குடும்பத்தை நகர்த்தி கொண்டு இருக்கிறாள் மனைவி கலா(கல் நெஞ்சகாரி என்றது தவறு என்று இப்போது தான் புரிந்தது).
கணவன் வெங்கடேஷ் வேலைக்கு, சரிவர போவது இல்லை.
காசு கிடைத்தாலும், அதில் குடித்து பணத்தை வீணாக்கி விடுவான் வெங்கடேஷ்.
குடிக்கு தரும் முக்கியத்துவத்தை, தன் குடும்பத்திற்கு கொஞ்சமாவது கொடுத்தால் நன்றாக இருக்கும் நம் குடும்பமும்.
# குடி குடியை கெடுக்கும்.
![]() |
என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க... |
REALY SUPER STORY ALA’RUM’ . TRUE STORY ON MANY FAMILYS. DRINK IS DANGEROUS TO FAMILY.. THANKS WRITER MANIRAM KARTHIK . CASUAL STORY FOR YOUR WRITING