பொய்மையும் வெல்லும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,089 
 
 

“மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே”

“நீ மொதல்ல என்கிட்ட இந்த வழக்கைக் கொண்டு வந்திருந்தா நிலைமையே தலைகீழ் ஆயிருக்கும். உன்னை யாருய்யா என் தொழில் எதிரி ஈஸ்வரன் கிட்ட போகச் சொன்னா?”

“உன் வாதத் திறமையை வெச்சு எங்கள மாதிரி அப்பாவிங்க வயித்துல அடிக்கறியே! நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட”

“ஒருத்தன் நம்மகிட்ட சரணடைஞ்சிட்டா, நம்ம உயிரை மட்டும் கொடுக்காம மத்தது கொடுத்து காப்பாத்திடணும் – இதான் என் தொழில் தர்மம். அடுத்த தடவை என்கிட்ட வா, உன் வழக்கு எதுவானாலும் ஜெயிச்சிடலாம்”

*************

“மாதேஷ்! உங்கள் கட்சிக்காரர் சார்பான வாதங்களை முடியுங்கள்”

“மிக்க நன்றி கனம் கோர்ட்டார் அவர்களே. என் கட்சிக்காரர் பண மோசடி எதுவும் செய்யவில்லை. அவர் நிலம் விற்றபோது ஆவணங்களை சரிபார்க்காதது வாங்கியவரின் குற்றம்”

***************

“வழக்கம்போல தன் வாதத் திறமையால், நம்மிடம் ஒரு கோடி மோசடி செய்த ரமணனை, விடுவிக்க வெச்சிட்டார் வக்கீல் மாதேஷ்”

“அவர் செய்ற பாவங்களுக்கு அவர யாராவது வகையா ஏமாத்துவாங்க பாரு”

***************

“என்ன மாதேஷ்? ரொம்ப நல்லா திட்டம் போட்டு உன் பேர, நீதிபதிக்கான பதவி உயர்வுக்கு காத்திருப்பவர்கள் பட்டியல்ல இருபதாவது எடத்துல இருந்து ரெண்டாவது எடத்துக்கு கொண்டு வந்துட்ட”

“எவ்ளோ நாள் காத்துகிட்டு இருக்கறது-ன்னுதான்”

***************

“வாழ்த்துக்கள் மாதேஷ், நினைத்தபடியே நீதிபதி ஆயிட்ட”

“நன்றி சார். உங்க ஆதரவு இல்லாம இது சாத்தியமேயில்லை”

“அந்த விசுவாசத்தை என் ஆளுங்களுக்கு சாதகமா தீர்ப்பு எழுதறதுல காட்டு”

“கண்டிப்பா சார்”

***************

“ரவி! கருப்புப் பணத்தை வெள்ளையாக்கணும். உன்னை பினாமியா போட்டு நகரத்துக்கு வெளியே ஒரு ஷாப்பிங் மால் வாங்கலாம்”

“சரி மாதேஷ் மாமா. ஆனால் வருமான வரித்துறையினர் கண்டுபிடிச்சா?”

“அங்க நமக்கு வேண்டிய ஆட்கள் நெறைய பேர் இருக்காங்க, அவங்க பார்த்துப்பாங்க”

***************

“மாதேஷ் சார்! அடுத்த மாதம் முதல் ஓய்வு ஆரம்பமா? அப்பறமா என்ன பண்றதுன்னு யோசிச்சீங்களா?”

“எனக்குத் தெரிஞ்ச ஆளுங்க மூலமா இன்னும் ரெண்டு வருஷம் பதவி நீட்டிப்பு கெடைக்கும்”

“குடுத்து வெச்ச ஆளு சார் நீங்க, இதுவரைக்கும் சம்பாதிச்சது போதாதுன்னு இன்னும் வேறயா?”

***************

“நல்ல சாவு சார் மாதேஷுக்கு, தூக்கத்துலயே அமைதியா போயிட்டார்”

(முடிந்தது)

பின் குறிப்பு :- இக்கதையை “கெடுவான் கேடு நினைப்பவன்” அல்லது “தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” போன்ற பழமொழிகளைச் சுட்டிக்காட்டி, அவனோட பினாமியோ வேற யாரோ ஏமாத்தினதா கதைய முடிக்கலாம் – ஆனா, ப்ராக்டிகலா யோசிச்சா, நம்மைச் சுத்தி இந்த மாதிரி நெறைய பேர் மத்தவங்களை ஏமாத்தி வாழ்ந்துட்டுதான் இருக்காங்க. நம்மால் செய்ய முடிஞ்சது – அந்த மாதிரி தப்பு எதுவும் நாம செய்யாம, அந்த மாதிரி தப்பானவங்கள கிட்டயிருந்து ஒதுங்கிப் போறது தான். என்ன நான் சொல்றது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *